Saturday, July 5, 2014

நோன்புக்குத் தடை இங்கல்ல, சீனாவில்



சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள பள்ளி, அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ரமலான் புனித மாதம் என்று நோன்பு மேற்கோள்வதைத் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவு வலைத்தளத்தின்மூலம்  பள்ளிகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. மக்களுக்கான நிர்வாகப் பணியாளர்கள், மாணவர்கள் நோன்பு இருக்கவோ, மதரீதியிலான செயல்களில் ஈடுபடவோ முடியாது என்று டர்ஃபன் நகர் வணிகவியல் விவகாரத் துறை அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக சிங்ஜியாங் அரசு தன்னுடைய அரசுப் பணியாளர்களை நோன்பு இருப்பதால் அவர்களின் உடல் நலத்துக்குக் கெடுதல் ஏற்படும் என்று கூறியுள்ளது.

ரமலான் நோன்பு இருப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று அனைவருக்கும் நினைவூட்டி வருகிறோம் என்று அரசின் சார்பில் இயங்கும் போஷவ் வானொலி மற்றும் பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சியின் வலைத்தளத்தில் கூறியுள்ளது. கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ரமலான் நோன்பு மேற்கொள்வதற்கானத் தடையை கட்டாயமாக நடைமுறைப்படுத்துவோம் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, சிங்ஜியாங் அரசு பெரும் அளவில் கூடுவது , பிரார்த்தனைக்கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை பிரிவினைவாத அச்சத்தால் தடுத்து வருகிறது.

உலக உய்குர் காங்கிரஸ் பேச்சாளர் தில்க்சாட் ரக்சிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறும்போது,   சீனா இதுபோன்ற அதிகார, அளவீடுகள்மூலம்  ஊழியர்களின் நம்பிக்கையை முடக்குகிறது. மத சுதந்திரத்தை உறுதிப் படுத்துமாறும், ரமலான்மீது அரசியல் அழுத்தங்களை நிறுத்துமாறும் சீனாவைக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 

-டைம்ஸ் ஆப் இந்தியா, 3-.7.-2014

பழகிய யானையாகவே இருங்கள்!

ஒரு கொள்கையை பரப்புதற்கோ அல்லது நமது கருத்துக்கு மாறானவர்களை, அவர்கள் வழி தவறானது என்று உணர்த்தி, சரியான வழிக்குக் கொணரு தல்மூலம் வெற்றியடைய வேண்டுமாயின் என்ன செய்யவேண்டும் என்ற விவாதம் கடந்த சூழியம் கலந்துரையாடலில் (30.6.2014) எழுந்தபோது, பேராசிரியரும் பெரும் பகுத்தறிவுப் புலவருமான டாக்டர் மா.நன்னன் அவர்கள் பழகியவர்களை வைத்து, பழகாதவர்களையும் பழக மறுப்பவர்களையும், நம் வயப்படுத்திட முயலவேண்டும் என்ற சிறந்த கருத்துரையைச் சொன்னார்கள்.

யானைகளைப் பிடித்தல், பழக்குதலில் கும்கி யானையை வைத்து மற்ற யானைகளைப் பிடிப்பது போலவா என்று ஒருவர் கேட்க,

உடனே பேராசிரியர் மா.நன்னன் அவர்கள், இதற்கேற்ப, இதே கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை உடனடியாக, கணினியைத் தட்டியதும் கிடைக்கும் விடை போல எடுத்துரைத்தார்கள்!

எத்தனையோ ஆண்டு வகுப்பு களைச் சுவையுடன் எடுத்த இலக்கியப் பேராசிரியர் அல்லவா அவர்; எனவே, இது அருவிபோல் வந்து விழுந்ததில் வியப்பே இல்லை அல்லவா?

இணைந்த செயலையும், இணைத்துக் கொண்டால் விளையும் பயனும் அதிகம் என்பதே இக்குறள்!

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று  (குறள் 678)

இதன் பொருள்: ஒரு வினையைச் செய்யும்போதே, அதனோடு ஒத்து வரக்கூடிய மற்றொரு வினையையும் சேர்த்து செய்து முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வது வெறிநீர் ஒழுகக்கூடிய கன்னத்தையுடைய ஒரு யானையை, மற்றொரு யானையைக் கொண்டு பிடிப்பது போன்றதாகும்!
இதன் அடிப்படைத் தத்துவம் பழகியவர்களைக் கொண்டு பழகாதவர் களைப் பக்குவப்படுத்துங்கள்.

முரட்டுத்தனமோ, வன்முறை வழியோ தீர்வினைத் தராது என்பதும்,

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதும்கூட இதில் தொக்கி நிற்கிறது என்பது நமது கருத்து.

எப்படியெனில், வினையால் வினை ஆக்கிக் கோடல், ஒரு செயலே மற் றொரு செயலுக்கு முன்னோடி - அச் சாரம் என்பதும் சிந்தித்தால் புலப்படும்.
பல நேரங்களில் நல்ல பயன் விளை யக்கூடிய செயல்கள்கூட, செய்யக் கூடாத முறையில் செய்யத் துவங்கு வதால், வெற்றியைத் தர முடியாம லேயே, தோல்வியில் முடிந்துவிடுவது உண்டு அல்லவா?

எப்போது நிறுவனங்களிலோ, வாழ் விணையரிடமோ அல்லது தலைவர் களிடமோ அல்லது மேலாண்மையாளர் களிடமோ அவர்கள் கருத்துக்களைக் கூறும்போது, எடுத்த எடுப்பிலேயே அதனை, பட்டென்று ((Blunt ஆக) முடியாதுங்க, எப்படி முடியுங்க என்பது போன்று எடுத்தேன், கவிழ்த் தேன் பதில்களை விட்டெறியாமல், இணக்கமாக அவர்கள் வழியிலே சிறிது நேரம் உரையாடி, பிறகு மெல்ல மெல்ல அதனுள் உள்ள தொல்லைகள், அதனால் ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்கள்பற்றியெல்லாம் மென்மையான வகையில் - அதேநேரத்தில் கருத்தில் சமரசமின்றி செய்தால், வெற்றி நிச்சயம்!

எடுத்தவுடன் மறுப்போர்கூட, சிறிது நேரத்தில், நாம் சொன்ன முறையினால் ஈர்க்கப்பட்டு, சிந்தித்து, கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ள முயலுவார்கள் என்பது திண்ணம். பழகிய யானையாக இருப்பது நல்லது - பக்குவமான அணுகுமுறையும் அவசியம் ஆகும்.

- கி.வீரமணி

குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை கொள்கைப் பயிர்களை உருவாக்கிய விதைப் பண்ணை

குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை
கொள்கைப் பயிர்களை உருவாக்கிய விதைப் பண்ணை

தமிழர் தலைவர் சூட்டும் புகழாரம்

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இல்லையாம்!

கடந்த மாதம் ஜூன் 26 முதல் 29 முடிய குற்றாலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப் பெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் சிறப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  கடந்த ஜூன் 26,27,28,29 ஆகிய நான்கு நாள்களிலும் குற்றாலத்தில் வீசிய கொள்கைச் சாரலும், அருவி போல் கொட்டிய தந்தை பெரியார் தம் தத்துவக் கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களும் மிகச் சிறப்பானதாகவும், இதமானதாகவும். இணையற்ற முறையிலும் அமைந்திருந்தது.

கொள்கைப் பயிரை உருவாக்கும் விதைப் பண்ணை

38ஆம் ஆண்டு தொடர்ந்து (ஆண்டு தோறும் பெரியாரியல் பயிற்சி முகாம்) நடைபெறும் இக்கொள்கைப் பயிற்சிப் பட்டறை இளைய தலைமுறையிடம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியதாகும். பலரும் தேர்ந்த பேச்சாளர்களாகவும், கருத்தாளர்களாகவும் ஆகி, புகழ் மலர்களைப் பெற்று மகிழ்கின்றனர்.

நல்லொழுக்கம் - கட்டுப்பாடு - பகுத்தறிவுச் சிந்தனை என்ற பயனுறு வாழ்வியல் கூறுகளை அங்கே கூடும் இளைஞர்கள்  குறுகிய காலத்தில் கற்றுத் துறைபோக ஆயத்தமாகி விடுகின்றனர்!

கொள்கைப் பயிர்களை உருவாக்கும் விதைப் பண்ணையாகவும், நாற்றங்கால் ஆகவும் இப்பயிற்சிப் பட்டறை அமைகிறது என்பதைத் தொடர்ந்து கவனித்து வருபவர் களுக்குப் புரியும்.

அடுத்த பட்டறை புதுச்சேரியில்..

தமிழ்நாட்டில் மட்டுமல்ல; புதுச்சேரி மாநிலத் திலும்கூட இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் மூலம் பெரியார் இயல் பிரச்சாரத்தினை நடத்திட புதுவை மாநிலத் தோழர்களும் தலைமைக் கழகத்தினைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்!

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வள்ளல் வீகேயென் கண்ணப்பன்

முன்பெல்லாம் இடந்தேடி அலையும் நிலையும், அலைக்கழிக்கப்படும் அவலமும் இருந்தது. ஆனால், ஒப்பாரும் மிக்காருமில்லாத நம் உறவான வள்ளல் வீகேயென் கண்ணப் பனார் அவர்கள்; ஒரு பெரும் மாளிகையை அமைத்து, ஆண்டுதோறும் அவர்களே விருந்தோம்பல் நடத்துவதில் - நாம் எவ்வளவு அவர்களுக்குத் தொல்லை - செலவு இருக்கக் கூடாது என்பதற்காக குறைந்தபட்சம் சமையலை யாவது நாங்களே செய்து கொள்கிறோம் என்று  மன்றாடியும்கூட, அவர்கள் பிடிவாதமாக, இல்லை நான்தான் உபசரிப்பாளராக இருப்பேன்; அதில் யாம் பெறும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையேது என்று உறுதிபட மறுத்துவிட்டார்.

அவரின் வற்றாத பெரு உள்ள அன்பின் ஊற்றுதான் என்னே!

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களோ - எவ்வாண்டும் இல்லாத அளவு 51 பட்டதாரிகள் - மொத்தம் புடைத்து சலித்து எடுத்து அனுமதிக்கப்பட்டவர்கள், எண்பது இருபால் இளைஞர்கள்.

பொறியாளர்கள், மேற்பட்டப் படிப்பாளிகள், பட்டதாரிகள் முதல் பலரும் உண்டு. ஈர்ப்புடனே பெரியார் இயலைச் சுவாசித்தினர்.

அவர்களுக்கு 4 நாள்களும் தங்கி வகுப் பெடுத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, தலைமைக் கழக பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ், பிரச்சாரப் பொறுப்புப் பொதுச் செயலாளர் டாக்டர்  துரை. சந்திரசேகரன்,  டாக்டர் கவுத மன், பேராசிரியர் காளிமுத்து, கோ. கருணாநிதி, டாக்டர் அன்பழகன் ஆகியோர் பாராட்டுக் குரியோர் ஆவர். நாள்தோறும் காலையில் யோகா பயிற்சி தஞ்சை யோகராசா என்னும் இராசமாணிக்கம் அவர்களால் அளிக்கப்பட்டது.

இளைஞரணி பொறுப்பாளர் பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாணவரணி செயலாளர் பிரின்சு  என்னாரெசு பெரியார், இளைஞரணி மாநிலச் செயலாளர் இராசபாளையம் திருப்பதி ஆகியோர் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக மேற்பார்வையிட்டு நடத்திய தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் மதுரை வே. செல்வம், நெல்லை மண்டலச் செயலாளர் பால். இராசேந்திரம், நெல்லை மண்டலத் தலைவர் பொறியாளர் மனோகரன், மாவட்டத் தலைவர் டேவிட் செல்லதுரை அனைவரது ஒத்துழைப்பும், வீகேயென் ஊழியத் தோழர்கள் திரு. பாண்டியன் தலைமையில் பம்பரமாய் சுழன்ற பாங்கு மறக்கற்பாலதோ!

நான்கு நாட்களும் பார்வையாளராக இருந்து பயிற்சி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகை யில் ரூ.5000 மதிப்புள்ள இயக்க நூல்களைப் பரிசாக அளித்த ஈரோடு தோழர் சம்பத்குமார் அவர்களின் செயல் ஓர் எடுத்துக்காட்டானது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை  
 
3.7.2014

Thursday, July 3, 2014

கச்சத்தீவு வழக்கு மத்திய அரசு கொடுத்த தகவல் தவறானது மீனவர் சங்க நிர்வாகி கண்டனம்



ராமேசுவரம், ஜூலை 3_ கச்சத்தீவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர் பாதுகாப்பு பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை. வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் மட்டுமே அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய _இலங்கை மீனவர் பேச்சு வார்த்தையின்போது தமிழகம் சார்பில் பங்கேற்ற தேவதாஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கச்சத்தீவு பிரச்சினையில் நரேந்திரமோடி அரசு, முந்தைய காங்கிரஸ் அரசு பின்பற்றிய கொள்கையை தான் பின்பற்றுகிறது. ஜனவரி மாதம் பாம்பனில் நடைபெற்ற போராட்டத் தில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக் கும் உரிமையை பெற்றுத் தருவதாக கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்ளேயே பா.ஜ.க. அரசு அதற்கு மாறான நிலைபாட்டை எடுத்துள்ளது.

மத்திய அரசு உயர்நீதி மன்றத்தில் கூறிய தகவல் தவறானது. வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் உரிமை உள்ளபோது மீன்பிடிக்க உரிமை இல்லை என்று கூறுவது ஏற்க முடியாது.

மீன்பிடிக்க உரிமை இல்லையெனில், அங்கு வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் என்ன தேவை இருக்கிறது. கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா கொடுத்த ஒப்பந் தத்தில் மீன்பிடிக்க முழு உரிமை உண்டு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது.

தேவைபட்டால் எங்களது உரிமையை நிலை நாட்டு வதற்கு மீனவர்கள் அனை வரும் படகுகளில் சென்று கச்சத்தீவை முற்றுகை யிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

வாஸ்து பூமி பூஜையை இனியும் நம்பலாமா?

11 மாடிக் கட்டடம் - இறந்தவர்களுக்கு இரங்கல்!

வாஸ்து பூமி பூஜையை இனியும் நம்பலாமா?

தமிழர் தலைவர் கேள்வி



சென்னை போரூர் - மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, சுமார் 59 உயிர்கள் பலி யானதாக இதுவரை வந்த தகவல்கள் கூறுகின்றன; இடிபாடுகளில் சிக்கி புதைந்துள்ள சடலங்கள்பற்றி, பணி முடிவுற்ற பிறகே முழுத் தகவல்கள் வெளி வரக் கூடும்.

நெஞ்சம் பதைபதைக்கும் இந்த வேதனையும் துயரம் மிக்க பேரிடருக்கு யார் மூல காரணம்? எதனால் இப்படி ஒரு பெரும் விபத்து ஏற்பட்டது? நீதி விசாரணை தேவை.

ஆய்வுகள் சரியாக செய்யப்பட்டனவா?

சதுப்பு நிலம், போரூர் ஏரித் தண்ணீர் போன பாதை ஒரு காலத்தில் - காலப் போக்கில் அது தூர்ந்துள்ள நிலையில் அப்படியே வெட்ட வெளியாகி மண் மூடிப் போன இடத்தை வாங்கி, கட்டடம் கட்டுமுன்  சரியான மண் வாகுபற்றிய பரிசோதனை (Soil Testing) செய்தனரா?

அனுமதி அளித்தவர்கள் அரசு ஆணை மூலம் சரியான ஆய்வு செய்தனரா? அப்படி அனுமதி கொடுத்தவர்கள் - அதி காரிகளா? வேறு யார்? எதனால் இப்படி சலுகை காட்டினர்? இது மட்டுமன்று; தமிழ்நாட்டில் பலர் ஏரி குளங்களையெல்லாம் வளைத்து  வீட்டு மனை வியாபாரத் தொழில் செய்வோரின் பேராசையால்  (Real Estate) இப்படிப்பட்ட அவலங்கள் நிகழ் கின்றனவா?

இதனைக் கண்டு பரிதாபப்பட்டால் மட்டும் போதுமா?  இறந்தவர்களுக்காக உதவுவது போன்ற உதவிகள் விரும்பத்தக்கதாயினும் - போதாது.

குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுவது போல் இப்போது வீராவேச விமர்சனங்கள் அந்தந்த நேரத்தில் எழுந்தால் மட்டும் போதாது.

ஆக்கபூர்வ நிரந்தர பாதுகாப்பு தடுப்பு முறை ஏற்பாட்டு அமைப்பு தேவை.

பேரிடர் மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் பலன் இது தானா?

மற்றொரு முக்கிய செய்தி.

வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்துக் கட்டப்பட்டுள்ளது தான் இந்த இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடம். பூமி பூஜை பலமாகப் போடப்பட்ட பிறகே, நாள் நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து அடிக்கல் நாட்டப் பட்டது; பின் ஏன் இந்த அவலம் நடந்தது?

இதிலிருந்து வாஸ்து, பூமி பூஜை என்ற மூட நம்பிக்கைகள் மனிதர்களைக் காப்பாற்றாது. புரோகிதர் பிழைக்க, ஜோசியர்கள் பிழைக்க வழிதான் அவை என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டாமா?

இறந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் எந்த மாநிலத்தவர் என்பது முக்கியமல்ல; அவர்கள் மனிதர்கள் என்பதால் மனிதநேயத்துடன் அவர்தம் குடும்பங்களுக்கு - பாட்டாளிகளின் சொந்தங்களுக்கு நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி   
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
3.7.2014

சுகவாசி

திருப்பதி ஏழுமலை யானைத் தரிசிக்க தன் மனைவியுடன் சென்றார் சென்னையைச் சேர்ந்த பக்தர் முத்து கிருஷ்ணன்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் முன்பதிவு செய்து கொண்டு தன் பயணத்தைத் தொடங்கி னார். திரும்பும்போது ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்து சொகுசாக இல்லை. இந்த நிலையில் நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சுவாமி தரிசனத்துக் காகத் தானே சென் றீர்கள்? - அப்படி இருக்கும்போது சொகுசு பேருந்து தேவையா? என்று மாநில நுகர்வோர் தீர்ப்பாய நீதிபதி வழக் குத் தொடுத்தவரைப் பார்த்து கேள்வி ஒன் றைத்  தூக்கிப் போட்டார்.

இந்தச் சேதி இன்று வெளிவந்த அதே தின மலர் ஏட்டின்  (பக்கம் 7) இரண்டாம் பக்கத்தில் இன்னொரு தகவலும் வெளி வந்துள்ளது . தலைப்பு: காசிக்கு ஏசி என்பதாகும். உள்ளே சேதி என்ன தெரியுமா? ஆடி அமாவாசை தினத் தன்று வடக்கே காசி விசு வநாதன் கோயிலுக்குச் சென்று  தரிசித்தால் புண்ணியமாம்.
அதற்காக இரயில்வே துறை ஒரு ஏற்பாட் டினைச் செய்துள்ளது. வரும் 23ஆம் தேதி பெங்களூருவிலிருந்து காசிக்கு முழுக்க குளிர் சாதன வசதி (ஏ.சி.) செய்யப்பட்ட சிறப்பு சொகுசு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவாமிதரிசனம் செல்லுபவர்கள் சொகுசு களைத் தேடி அலைய லாமா என்று மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் கேட்கும் கேள்வி, காசிக்கு ஏசி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கும் பொருந்துமா? பொருந்தாதா?

இன்னொரு கேள்வியையும் பக்தர்கள் நீதிபதியைப் பார்த்துக் கேட்கலாமே! திருப்பதி ஏழுமலையானே இப் பொழுது குளுகுளு வசதி (ஏசி) செய்யப்பட்டுள்ள இடத்தில்தான் இருக் கிறார். கர்ப்பக்கிரகம் முழுவதும் அந்தவசதி செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் சிலைக்கு வியர்க்குமா? புழுக்கம் இருக்குமா? எதற்கு ஏசி என்று அதிகப் பிரசங்கித்தன மாக யாரும் கேள்வி கேட்கக் கூடாது; கார ணம் இது பகவான்  சம் பந்தப்பட்ட சமாச்சார மாயிற்றே!

ஆனால் , இதற்கு உள் நோக்கம் ஒன்று உண்டு கோயில் கர்ப்பக் கிரகத்தில் பக்தியின் பெயரால் தீவிர சுரண் டல் தொழிலில் ஈடுபட் டுக் கொண்டிருக்கும் அர்ச்சகர்ப் பார்ப்பனர் களுக்குக் குளு குளு ஏசி வசதி தேவைப்படுகிறதே - அது புரியாமல் சாமிக்கு வியர்க்குமா? புழுங்குமா என்ற கேள்விகளைக் கேட்கலாமா?

கொசுறு: கால்நடை யாக (நடந்து) செல்ல வேண்டிய சங்கராச்சாரி களே ஏசி கார்களிலும் விமானத்திலும் அல்லவா பறக்கிறார்கள்! 

- மயிலாடன்

Wednesday, July 2, 2014

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இல்லையாம்!கிளர்ச்சி வெடிக்கும்!!

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இல்லையாம்!

காங்கிரசை அசலாகப் பின்பற்றும் மத்திய பி.ஜே.பி. நீதிமன்றத்தில் பதில் மனு

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் கிளர்ச்சிகள் வெடிக்கும்


தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளைக் கூறிய நிலையிலும்  எதையும் செயல்படுத்தாததுதான் கருநாடக அரசு

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கிடையாது என்று மத்திய பி.ஜே.பி. அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்லுவதும், சிறைப் பிடிப்பதும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. எனவே, கச்சத்தீவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நல அமைப்பின் தலைவர் திரு.பீட்டர் ராயன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் பதில் மனு

மத்திய அரசின் வெளியுறவுத் துறைத் துணைச் செய லாளர் திரு.விஸ்வேஷ் நீகி நீதிமன்றத்திற்கு அளித்த பதில் மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே காலம் காலமாக பயன்படுத்தப்பட்ட கடல் பகுதி எல்லைகள் வரையறுக்கப்பட்டு கடந்த 1974ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் இந்திய - இலங்கை மீனவர்கள் அவர்களின் பாரம்பரிய உரிமை களைப் பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1974 ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 6-ன்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிப்பதற்கு உரிமையில்லை. கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்த மானது.

கச்சத்தீவை பார்வையிடுவதற்கும், கச்சத்தீவில் உள்ள செயின்ட் ஆண்டனி கிறித்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவிழாவில் பங்கேற்பதற்கும் மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, இலங்கையிடம் பயணம் தொடர்பாக அனுமதி பெற வேண்டியதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேலும், இரு நாடுகளின் வெளியுறவுத் துறைக்கு இடையேயான 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி, இரு நாட்டு கடல் எல்லைப் பகுதிக்குள் எதிர் நாட்டு மீனவர் களின் படகு மற்றும் மீனவர்கள் செல்லக் கூடாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு, கடல் எல்லைப் பகுதியில் 416 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 404 பேர் காயமடைந்துள்ளனர். 109 மீனவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒப்பந்தத்தில் உள்ள உரிமைகள் குறித்து தான் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசினார். எனவே, மனுவில் கூறப்பட்ட தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தெரிய வருவது என்ன? கடந்தகால காங்கிரஸ் ஆட்சி தமிழக மீனவர் பிரச்சினையில் எந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோ, அதில் அட்சரம் பிறழாமல் இன்றைய பி.ஜே.பி. ஆட்சியும் ஏறுநடைப் போடுகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது (கிட்டத்தட்ட எல்லாப் பிரச்சினைகளிலும் இந்த நிலைதான்).

மனப்பால் குடித்தவர்கள் தலையைத் தொங்கப்போடும் பரிதாப நிலை!

காங்கிரஸ் ஆட்சி அகன்று பி.ஜே.பி. ஆட்சி வந்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் என்று மனப்பால் குடித் தவர்கள் தலையைத் தொங்கப்போடும் பரிதாப நிலைதானே இன்று?

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்ததற்குப் பிறகு இதுவரை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 229 பேர் - அய்ந்து முறை இது நடந்திருக்கிறது.

பி.ஜே.பி. ஆட்சியில் இது ஒன்றும் புதிதல்ல.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் வாஜ்பேயி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் (28.11.2000) தமிழக மீனவர்கள் மீதான படுகொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிரதமர் ஏ.பி.வாஜ்பேயி பதிலும் எழுதினார் (22.12.2000). இனி தமிழக மீனவர்கள் மீதான படுகொலை நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே தமிழக மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் (29.1.2001).

வெளியுறவுத் துறை அமைச்சர் சுவராண்சிங் வாக்குறுதி என்னவாயிற்று?

பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பேற்ற விழாவுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு, தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழக மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படப் போகிறது என்றெல்லாம் அது குறித்துச் செய்திகள் வெளிவந்தன. ஆனால், நடந்தது என்ன? ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற பாணியிலே அல்லவா அன்றாடம் தமிழக மீனவர்கள் தாக் கப்படுவது தொடர்கிறது! சிறையிலிருந்து விடுவிக்கப்பட் டாலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பிக் கொடுப்பதில்லை. இது கடந்தகால காங்கிரஸ் ஆட்சியில் கூட நடைபெறாத ஒன்று.

20.6.1974 அன்று பிரதமர் இந்திரா காந்தி கையொப்ப மிட்ட ஒப்பந்தம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டது. நாடாளுமன்றத்தில் தி.மு.க., பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்து, அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பும் செய்தனர்.

அன்றைய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுவரண்சிங், சர்வதேசக் கடல் எல்லையை நிர்ணயிக்கவேண்டிய அவசியத்தின் காரண மாக, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்படவேண்டிய சூழல் ஏற்பட்டாலும், இரு நாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்ற மீன் பிடிக்கும் உரிமையும், கோவில் களுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் உரிமை யும் எதிர்காலத்திலும் முழுமையாகக் காப்பாற்றப்படும் என்று உறுதியளித்தாரே! அது இப்பொழுது என்னாயிற்று!

இந்திய மீனவர் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது முறையற்றதுதான்.

ஆனாலும், கடலுக்குப் புறப்படும் எந்த மீனவரும், மீன் வளம் எங்கிருக்கிறதோ, அங்கேதான் போவர்! எனவே, இந்திய - இலங்கை எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? அப்படி அவர்கள் சென்றால், அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என இலங்கை அரசிடம் கூறியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது.

- இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியவைதான் இவை (31.5.2007).
அதுவும் காற்றோடு காற்றாகத்தான் போயிற்றா?

நாடுகளுக்கான எல்லைக் கோடுகள்
நாடுகளுக்கான எல்லைக் கோடுபற்றிய உண்மை என்ன?

கரையிலிருந்து 22 கி.மீட்டர் தூரம்தான் உள்நாட்டு எல்லை; 44 கி.மீ.தூரம் வரை சுங்கவரி வசூலிக்கும் எல்லை; 320 கி.மீ. தூரம் பொருளாதார எல்லை; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேவிப்பட்டினத் திலிருந்து தமிழக மீனவர்கள் 34 கடல் மைல்கள் சென்று மீன் பிடிக்க முடியும். ஆனால், தனுஷ்கோடி மீனவர்கள் 6 மைல் தூரம் சென்றாலே இலங்கை எல்லை வந்துவிடும்.

கோடியக்கரை மீனவர்கள் இந்த வகையில் 13 மைல்கள் தான் மீன் பிடிக்கச் செல்ல முடியும் என்று கடைபிடிக்க வேண்டும் என்பது அனைத்துலகக் கோட்பாடு என்றாலும், இதனையும் தாண்டி மீன்பிடிப்பது என்பது பல நாடுகளிலும் நடைமுறையாக உள்ளது.

ஜப்பானும், கொரியாவும் தமக்கிடையேயுள்ள கடலில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க ஏற்பாடு செய்துள்ளன.

நார்வே, சுவீடன், பின்லாந்து, ருசியா ஆகிய நாடுகள் நமக்குப் பொதுவான கடலில் தத்தம் நாட்டு மீனவர்கள் அனைவரும் கடல் எல்லைகளைத் தாண்டி மீன்பிடிக்கும் உரிமங்களை வழங்கியுள்ளன.

இரு கேரள மீனவர்களை இத்தாலி கப்பற்படையினர் சுட்டுக்கொன்றனர் என்பதற்காக இந்திய அரசு அவர் களைக் கைது செய்யவில்லையா? சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையா? 850 தமிழக மீனவர்களை இதுவரை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளதே, இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக் கைகள் என்ன?

தமிழன் என்றால் அவன் உயிர் மலிவுப் பொருளா? கேட்பாரற்ற இனமா தமிழினம்?
கிரிமினல் குற்றமல்ல!

 அப்படியே எல்லை தாண்டிச் சென்றாலும்கூட அய்.நா. சட்டத்தின்படி அது சிவில் குற்றமாகக் கருதப்பட வேண்டுமே தவிர, கிரிமினல் குற்றமாகக் கருதப்பட முடியாது.

ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்சினையில் எந்த சர்வதேச சட்டமும் பின்பற்றப்படுவதில்லை. இந்திய ஆட்சி யாளர்களும் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை.

பிரேசிலில் ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற ரியோ பிளஸ் 20 அய்.நா. மாநாட்டில் உரையாற்றிய சுண்டைக்காய் நாடான இலங்கைத் தீவின் அதிபர் ராஜபக்சே,

தமிழ்நாட்டு மீனவர்கள் பாக். நீரிணையில் மீன் பிடித்தால் அவர்களை 20 ஆண்டுகள் சிறைப் பிடிப்பேன் என்று இந்தியப் பிரதமரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசினார் என்றால், மிகப்பெரிய நாடான இந்தியாவைத் துச்சமாக மதிக்கிறார் என்றுதானே பொருள்!

தொடக்கமே கோளாறு. சட்டத்தையும், விதிமுறை களையும் தூக்கி எறிந்து தானடித்த மூப்பாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அது சட்டப்படியே தவறானது.
தொடக்கமே கோளாறு. சட்டத்தையும், விதிமுறை களையும் தூக்கி எறிந்து தானடித்த மூப்பாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அது சட்டப்படியே தவறானது.

நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட்டதா?

பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து போர்ப்பாணி யூனியனையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்குவது தொடர்பான இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் மற்ற நாட்டிடம் வழங்க அரசமைப்புச் சட்டத்தின் 368 ஆம் பிரிவின்கீழ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு!

26.7.1997 அன்று இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்புரிமை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்று கூறி ரிட் மனுவைத் தாக்கல் செய்தோம் (29.7.1997) அது நிலுவையில் உள்ளது.

கிளர்ச்சி வெடிக்கும்

தி.மு.க. சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், இன்றைய முதலமைச்சர் தாக்கல் செய்த வழக்கும் நிலுவையில் உள்ளன.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பி.ஜே.பி. ஆட்சிக்கும், காங்கிரஸ் ஆட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லாத நிலையில், கச்சத்தீவை மீட்பது ஒன்றே நிரந்தரப் பரிகாரமாக இருக்க முடியும் என்றாலும், இதற்கிடையில் தமிழக மீனவர்கள் அன்றாடம் சிறைபிடிக்கப்படும் கொடுமைக்கு மத்திய அரசு முடிவு கட்டவில்லையானால், தமிழகம் ஒட்டுமொத்தமாகக் கிளர்ந்து எழவேண்டிய தருணம் இதுவே! கட்சிகளை மறந்து தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் - திராவிடர் கழகம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்! ஈடுபடும்!!


கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்
சென்னை
2.7.2014

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...