Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

Monday, March 28, 2016

வைகோவுக்கு வைகோதான் பதில் சொல்ல வேண்டும்!


மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றல் வாய்ந்த பொதுச் செயலாளர் அருமை வைகோ அவர்களைப் பற்றிய ஒரு பொது மதிப்பீடு என்ன தெரியுமா?
தேர்தல் வரும்பொழுதெல்லாம் தவறான முடிவுகளை மிகச் சரியாக எடுப்பார் என்பதுதான் அந்தப் பொது மதிப்பீடு.
2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்; இரண்டே இடங்கள் பிரச்சினைக்காக -  போயஸ் தோட்டத்தின் கதவைத் தட்டிய நிலை ஏற்பட்டதிலிருந்து அவர் மீதிருந்த  மதிப்பும் தலை  குப்புறக் கவிழ்ந்து விடவில்லையா?
வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி என்று கட்சிக்கு அப்பாற்பட்டு கணித்தவர்கள் கூட.. முகம் சுளிக்கும் அளவிற்கு தனக்குத்தானே பல விலங்குகளை ஆபரணம் என்று கருதிப்பூட்டிக் கொண்டு விட்டாரே!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட (2014) பிஜேபி யோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் மோடி அலை வீசுகிறது என்று புயல் வேகப் பிரச்சாரம் செய்ததோடு மட்டுமல்ல.
தி.மு.க. - அதிமுக வுக்கு மாற்றாக பா.ஜ.க அலை வீசுகிறது (தி.இந்து - 17.12.2014) என்ற அளவுக்குக் கூட சகோதரர் வைகோ சென்றதுண்டு.
இவ்வளவுக்கும் 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவை என்னென்ன என்பது தெரியுமா?
அயோத்தியில் ராமன் கோயில், அரசியல் நிர்ணய சட்டத்தில் 370ஆம் பிரிவு நீக்கம், யுனி ஃபார்ம் சட்டம் இயற்றப்படும், பசு பாதுகாப்பு பேணப்படும் என்ற ஹிந்துத்துவா அஜண்டா இடம் பெற்றிருந்தது.
அந்தத் தேர்தல் அறிக்கையை தயார் செய்த முரளி மனோகர் ஜோஷி என்ன சொன்னார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸின் அறிவுரையைக் கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தேன் என்றாரே! (தினமலர் 1342014)
இந்தக் கொள்கையை உடைய பிஜேபி தான் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி என்று மார்புப்புடைத்து மனங்கனிந்து பேசினார் புரட்சிப் புயல் வைகோ அவர்கள்
1996ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலின்போது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியோடு (மார்க்சிஸ்ட்) கூட்டணி வைத்திருந்த தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்னிறுத்தக் கூடாது என்ற சி.பி.எம். வைத்த நிபந்தனைக்கு கட்டுபட்டவர்தான் நமது வைகோ அவர்கள்.
இதற்குப்பிறகும் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது எம் உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் உயிர் நாடியாகத் துடிப்பது என்று பேசுவதெல்லாம் வசனமாகத்தானே கருதப்படும்.
இன்றைக்கு திமுக - அதிமுக வை எதிர்ப்போம் - படுதோல்வி அடையச் செய்வோம் என்று முழங்குபவர்கள் சொல்வது என்ன?
1967லிருந்து திராவிட இயக்க ஆட்சி நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டது - நாட்டை திராவிட இயக்க ஆட்சியிலிருந்து மீட்போம் என்று தானே சொல்லுகிறார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் வில்லுக்கு அம்பா கிறோமே என்று ஒரு கணம் சிந்திக்க வைகோ கடமைப்பட வில்லையா?
திராவிட இயக்க ஆட்சி என்கிற போது  அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்ததும் அடங்கும் தானே! அதற்குப் பிறகு வைகோ திமுகவில் இருந்த காலகட்டமும் அடங்கும்தானே! அவையெல்லாம் யோசிக்கப்பட வேண் டாமா?
தான் ஒரு திராவிட இயக்கத்தை சேர்ந்தவன். தான் நடத்துவதும் திராவிட இயக்கம் தான் என்ற அழுத்தமான எண்ணம் அவர் உள்ளத்தில் உருக்கொண்டிருந்தால்,  எதிரிகளின் வியூகங்களை சல்லடைக் கண்களாக நொறுக்கித் தள்ள தோள் தூக்கி இருக்க வேண்டாமா?.
சில மாதங்களுக்கு முன் வரை வைகோ அவர்கள் தமது கட்சியின் உயர்மட்டக்கூட்டங்களிலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சொல்லி வந்த, அழுத்தமாக வலியுறுத்திய கருத்து என்ன?
வரும் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என்று கூறிடவில்லையா?
இதனைச் சொல்லுபவர்கள் யார்? கட்சியின் பொருளாளர் என்ற மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அல்லவா இதற்கு சாட்சியாக இருப் பவர்கள்.
இந்த நிலையிலிருந்த வைகோ அவர்கள் திமிறிக் கொண்டு தலைகீழ் முடிவை எடுத்தது ஏன்? இதன் பின்னணி என்ன? இடையில் என்ன நடந்தது? என்ற சந்தேகம் எழத்தானே செய்யும். அந்த சந்தேகம் கட்சிக்குள்ளேயே முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களிடத்திலேயே வெடித்து கிளம்பி விட்டதே! எதிர்கட்சிக்காரர்கள் சொன்னால் அதற்கு உள் நோக்கம் கற்பிக்கலாம், சந்தேகத்தை கிளப்பியவர்கள் சொந்த கட்சியினராக அல்லவா இருக்கிறார்கள்!
வைகோ அவர்கள் தேர்தல் நேரங்களில் திடீர் திடீர் என்று தலைகீழ் முடிவுகளை எடுத்து வருவதால் தானே கட்சியின் தொடக்கத்தில் இருந்த முக்கியமானவர்கள் எல்லாம் வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது திமுகவின் சதி என்று சொல்வதெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். இப்படி சொல்வது கூட கட்சியை நடத்திச் செல்பவர்களின் பலகீனத்தைத் தான் பறைசாற்றும்.
நால்வர் கூட்டணி என்று மற்றவர்கள் சொன்னாலும் மக்கள் நலக்கூட்டணி என்ற வசீகரமான பெயர் சூட்டப்பட்டது. ஒரு பொதுத் திட்டமும் உருவாக்கப்பட்டது. கொள்கை முகம் என்றெல்லாம் போற்றப்பட்டது. அதையாவது காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா?
திடீர் என்று கேப்டன் விஜயகாந்த் அணி என்று அறிவிக்கப்பட்டது எப்படி? இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு போன்றவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறி விட்டனரே! என்ன செய்யப் போகிறார்கள்?
மக்கள் நலக் கூட்டணி முன்வைத்த திட்டங்களை ஏற்றுக் கொண்டுதான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த அணியை தலைமை தாங்கி வழிநடத்த போகிறாரா இந்த  முக்கிய பிரச்சினைகள் குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? தனியே விஜயகாந்த் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்டார் என்பதுதான் தற்போதைய செய்தி. (LATEST) இதில் எதை எடுத்துக் கொள்வது?
மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் திட்டத்தையா? விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையா? அட குழப்பமே! பெருங்குழப்பமே!
தேர்தலில் போட்டியிடுவோர்களிலேயே எங்களிடம் தான் பொதுத்திட்டம் உண்டு என்று தோள் புடைக்கச் சொன்னது கூட இப்பொழுது புஷ்வாணமாகி விட்டதே.
தேமுதிக என்ற கட்சி இதுவரை எந்த  கொள்கையைத்தான் முன் வைத்து வந்திருக்கிறது? யாருக்காவது தெரிந்து சொன்னாலும் அந்த ‘கொலம்பசுகளுக்கு’ப் பரிசுகள் கூட வழங்கலாம்.
குழப்புவது தான் என் வேலை என்று  சொல்பவர்தான் கூட்டணியின் தலைவரா?
தேசிய முன்னணி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி, மக்கள் நலக்கூட்டணி என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒருவரின் தனிப்பட்ட பெயரை முன்னிறுத்தி அவர் பெயரால் கூட்டணி என்று சொல்லுவது எவ்வளவுப் பெரிய தடுமாற்றம் - தலை குப்புற விழுந்த பரிதாபம். கையறு நிலை!
அந்தப் பெயருக்குரியவர்தான் பெரிய லட்சியவாதியா? நாட்டுக்காக உழைத்தவரா? தியாகத் தீயில் குளித்து எழுந்தவரா? குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியையாவது தக்க வைத்துக் கொண்டவரா?
கொள்கை போய் தனி நபர் தலைமை என்னும் தடுமாற்றக்குழியில் இவ்வளவு சீக்கிரம் விழுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தாம்.
வைகோ அவர்களுக்கு அப்படி என்ன திமுக மீது அளப்பரிய கோபம்? அந்தக்கட்சி தானே அவரை உருவாக்கி அடைகாத்து அடையாளம் கொடுத்தது. ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்பது அவருக்குத் தெரியாதா? உணர்ச்சி வயப்படுவது, குலுங்கி அழுவது என்பதெல்லாம், லட்சியவாதி களுக்கான அணிகலன்கள் அல்லவே.
இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பக்குவம் இது என்று ஆனந்தவிகடன் இதழுக்கு வைகோ அவர்கள் கொடுத்த பேட்டியில் சொன்னாரே, என்னவாயிற்று?
பக்குவம் அடைந்த பிறகும் ஒருவர் தடுமாறுவது நல்லதல்ல என்று பக்குவமாக எடுத்துக் கூறுவது தாய் கழகத்தின் கடமையாகும்.
விஜயகாந்தைக் கூட்டணியில் சேர்க்க திமுக, பா.ஜ.க. நடத்திய பேரம் என்ன என்று கேட்கப்போய், திமுக தலைவர் கலைஞர், வைகோ அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதில்கூட புத்திசாலித்தனம் இல்லையே. கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடியவரை ‘தர்ம சங்கடத்தில்’ ஆழ்த்தக் கூடியது என்பது கூட அறியாத குழந்தையா சகோதரர் வைகோ?
அம்மையார் பிரேமலதாவே சூடாகப் பதில் கொடுத்து விட்டாரே - பேரம் நடந்ததாக வைகோ கூறுகிறாரே என்ற கேள்வியை அம்மையார் பிரேமலதா அவர்கள் இந்த கேள்விக்கு அவரிடமே (வைகோவிடமே) போய்க் கேளுங்கள் என்று சீறியிருக்கிறாரே - மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாரே-என்ன செய்யப்போகிறார் சகோதரர் வைகோ?
மக்கள் மறந்து விடுவார்கள், மக்களின் மறதி தானே அரசியல்வாதிகளின் மூலதனம் என்று ஒரு காலத்தில் நினைத்திருக்கலாம். இப்பொழுது மக்களுக்கும் விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதே - மாஜி மக்கள் நலக்கூட்டணி கொஞ்சம் சிந்திக்கட்டும்!
------------------
அன்று சொன்னதும் அந்த வைகோதான்
பல்லடம், செப்.16- மதிமுக மாநில மாநாடு, அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 15, செப்டம்பர் 2015  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய வைகோ, மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தித் திணிப்பு செயலில் ஈடுபடுகிறது. அய்.நா. சபையில் இந்தியை அலுவல் மொழியாக்க முயற்சிக்கிறது. அய்.நா. சபையில் அலுவல் மொழியாக்க தகுதியுடைய ஒரே மொழி தமிழ் மட்டுமே. இதுதவிர, கல்வித்துறையில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இன்றைய சூழலில் இந்தி யாவில் கல்வித்துறை காவித்துறையாக மாறிக் கொண்டி ருக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு சுதந்திர தமிழ் ஈழம் மட்டுமே. அங்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் மதிமுக கூட்டணி வைக்காது. இரண்டு கட்சிகளுமே ஊழலில் திளைத்துப் போயுள்ளன. இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ள மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் எங்களது கூட்டணி இருக்கும். மக்கள் நலக் கூட்டியக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி சேர வேண்டும். எங்களது கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தல் வெற்றிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றார்.
- நக்கீரன் இணையம், 16.9. 2015
கிருஷ்ணகிரி, சனவரி08, 2016, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வைகோ மறைமுகமாக விருப்பம் தெரிவித் துள்ளதால் அக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது என்று செய்தி வெளியானது. இதனிடையே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண் டல ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் கிருஷ்ணகிரியில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, மக்கள் நலக் கூட்டணியில் யாரும் முதல்அமைச்சர் வேட்பாளர் கிடையாது. தேர்தல் முடிந்த பிறகு முதல்அமைச்சர் யார்? என்பதை எம்.எல்.ஏக்கள் கூடி தேர்வு செய்வோம். எனக்கு முதல் அமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நிற்க எனக்கு விருப்பம் கிடையாது. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் நான் நிற்கவேண்டும் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.”என்று தெரிவித்தார்.
-ஜன்னல் மீடியா, இணையம், 8.1.2016
----------------
இன்று சொல்வதும் அதே வைகோதான்!
மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக அணி இனி விஜயகாந்த் அணி என அழைக்கப்படும். இக்கணம் முதல் நாங்கள் தேர்தல் களம் கண்டுள்ளோம். இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜயகாந்த் கிங்காவார். முதல்வராவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சியே அமையும். மக்கள் எதிர்பார்த்த கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி, மகத்தான கூட்டணி, மாபெரும் வெற்றிக் கூட்டணி கேப்டன் விஜயகாந்த் அணி. இந்தக் கூட்டணி உருவாக வித்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என வைகோ தெரிவித்தார்.
----------------
ஆறுவது சினமே - வைகோ அவர்களே!
பாலிமர் தொலைக்காட்சியினர் வைகோ அவர்களுடன் நேர்காணல் நடத்தி கொண்டிருந்தனர். அ.இ.அ.தி.மு.கவின் ‘பி’ டீமாக இருப்பதற்காக விஜய்காந்த் தலைமையில் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அதிமுகவிடமிருந்து 1500 கோடிரூபாய் தங்களுக்கு அளிக்கப்பட்டதாக.... என்று நெறியாளர் திரு.கண்ணன் அவர்கள் கூறி வாக்கியத்தை முடிக்கும் முன்னரே வைகோ அவர்கள் திடீர் என்று எழுந்து, தன் சட்டைப் பொத்தானில் மாட்டியிருந்த ஒலி வாங்கியைக் கழற்றி எறிந்து விட்டு வேக வேகமாக இடத்தைக் காலி செய்த காட்சியைப் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துப் பரிதாபப்பட்டுள்ளனர்;
பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இருக்க வேண்டிய சகிப்புத் தன்மை பொறுமை என்ற அணிகலன்களையல்லவா கழற்றி எறிந்து வெளியேறி இருக்கிறார்! பொது வாழ்க்கையில் தந்தை பெரியார் எதிர்நோக்காத கேள்வியா?
பொதுவுடைமைபற்றிப் பேசிய தந்தை பெரியாரிடம் உங்கள் மனைவி நாகம்மையாரைப் பொதுவுடைமை ஆக்குவீர்களா என்று பார்ப்பனர் ஒருவர் கேட்டபொழுது கூட, சற்றும் சங்கடப்படாமல் அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?
நாகம்மையாரிடமே கேளுங்கள் என்று சொன்ன தலைவரைப் பெருமையாகப் போற்றும் வைகோ அவர்கள், என்ன சொல்லியிருக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அபவாதத்தை மறுத்துச்  சொல்லுவதற்குக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாகவே கருதுகிறேன். - என்று கூறி மட்டையை இரண்டு கீற்றாக கிழித்து எறிந்திருந்தால், இவரல்லாவோ தலைவர் என்ற உச்சாணிக் கொம்பில் , வைகோ அவர்களை மக்கள் போற்றும் ஓர் அரிய வாய்ப்பை - அவருக்கே உரித்தான முன் கோபத்தால் காலில் போட்டு மிதித்து விட்டாரே!
தன்னைப் பற்றிய ஒரு கேள்விக்காக இவ்வளவு ஆத்திரப்படும் வைகோ அவர்கள் விஜயகாந்திடம் 500 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது தி.முக.. என்று பேசி இருக்கிறாரே - அதற்கு என்ன பதில்?
கேள்வி கேட்பதெல்லாம் தமக்கே உரித்தான பிதிரார்ஜித உரிமை - சொத்து என்று ஒருக்கால் தமக்குத்தாமே வரித்துக் கொண்டு விட்டாரோ - என்னவோ!

Saturday, March 9, 2013

வைகோ- ஓர் அலசல்! - (2)


முன்னவர் பிராமணாள் பின்னவர் சூத்திராள்!
- கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் -
இனப் படுகொலையாளன் ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும்.
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி சர்வதேசப் பிரதிநிதிகள் அடங்கிய சுயேச்சையான குழு விசாரணை நடத்த வேண்டும்; தனியீழமே தீர்வு என்கிற கோரிக் கைகளில் எந்த ஒன்றிலும் டெசோ யாருக்கும் குறைந்ததல்ல.
ஆனால், இவையனைத்தும் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று சொல்லுவ தெல்லாம், எதிர்பார்ப்பதெல்லாம் எப்படி சரியாகும்?
அதேநேரத்தில் நாம் அழுத்தம் கொடுத் துக்கொண்டே இருப்போம்!
ஈழத் தமிழர் பிரச்சினை உறைபனியாக இருந்த நேரத்தில் கடந்த ஆண்டு ஜெனிவா வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் அந்தக் கெட்டித் தன்மையை உடைத் தெறிந்துவிட்டது. அதன் காரணமாக உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பது உண்மைதானே!
அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு செயல்பட வில்லை என்பதால்தான் அதே அமெரிக்கா இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறது - வரவேற்கப்படவேண்டியதுதானே!
முதலாளித்துவ அமெரிக்காவாவது இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந் துள்ளது. ஆனால், இடதுசாரி நாடுகளான கம்யூனிச நாடுகளான சீனா, ருசியா, கியூபா நாடுகள் எப்படி நடந்துகொண்டு வருகின் றன?
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி லெனின் சொல்லாத கருத்துக்களா? அதைப்பற்றி இவர்கள் எவரும் ஏன் பேசுவ தில்லை?
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியோ, இந் தியக் கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியோ தனியீழத்துக்கு எதிர்ப்பானவைகள்தானே - இது குறித்து என்றாவது வைகோ அவர்கள் குறைந்தபட்சம் ஒரு விமர்சனத்தை வைத்த துண்டா? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா?
இலங்கையில் உள்ளது ஜெ.வி.பி. என்ற கம்யூனிஸ்டுக் கட்சி (ஜனதா விமுக்த பெர முனா) இனவெறியில் ராஜபக்சே இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும். இந்தக் கட்சியின் பிரதிநிதிகள் இந்தியாவில் நடக்கும் கம்யூ னிஸ்டுக் கட்சி மாநாடுகளுக்கு சிறப்பு அழைப் பாளர்களாக அழைக்கப்பட்டு உச்சிமோந்து புரட்சியின் அடையாளமாக சிகப்பு வண்ண சால்வை போர்த்துகிறார்களே, இதைப்பற்றி மூச்சுவிட்டதுண்டா?
ராஜீவ் ஜெயவர்த்தனே உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஈழத்தில் வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்ததே இந்த ஜெ.வி.பி.தான்.
ராஜபக்சேவின் ஆதரவோடு அந்த வழக்கில் வெற்றியும் பெறப்பட்டது என்பது சாதாரணமானதுதானா?
ஒரு கொடுமை என்ன தெரியுமா?
கேள்வி: நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். அதை கைவிட வேண்டும் என்று மார்க்சிய கம்யூனிஸ்டு நிபந்தனை விதித்துள்ளதே?
வைகோ பதில்: குறைந்தபட்ச திட்டங்கள் எவை என்ற உடன்பாடு அடிப்படையில் கூட்டு மந்திரி சபை அறிவிப்பு இல்லை. உடன்பட முடியாத கருத்துகளை பிரச்சினையாக்க யாரும் முன்வரமாட்டோம். எந்தத் தரப்பிலும் ஒருவர் கருத்தை இன்னொருவர்மீது திணிக்க முன்வர மாட்டோம்.
வைகோ பேட்டி (தினகரன், 18.2.1996)
பதவியைப் பிடிப்பதற்காக ஈழத் தமிழர்ப் பிரச்சினை என்பது எங்கள் உயிர்ப் பிரச்சினை என்று மார்தட்டு பவர்கள் தேர்தலில் அதனை முன்வைக்க மாட்டோம் என்று இன்னொரு கட்சி வைக்கும் நிபந்தனைக்கு ஆட்படுபவர்கள் எல்லாரும் சவடால் விடுவது சரியான நகைச்சுவையே!
காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது - ஆட்சியிலும் பங்கு கொண்டுள்ளது - அதனால் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் செயல்பாடு குற்றமுடையது என்றுகூட இவர்கள் சொல்வதுண்டு.
(காங்கிரசோடு மோத வேண்டிய பிரச்சினையில் மோதாமலும் இல்லை).
பி.ஜே.பி.யோடு ம.தி.மு.க. கூட்டணி வைத்ததுண்டு. பொடா சட்டத்தைக் கொண்டு வந்தது பி.ஜே.பி. ஆட்சியில்தான். அந்தப் பொடா சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது சாட்சாத் இதே வைகோதான்!
அதே பொடா சட்டத்தின்கீழ்தான் வைகோவும், அவரின் அருமைத் தோழர்களும் வைகோ அடிக்கடி குறிப்பிடுவாரே புரட்சித்தலைவி என்று - அந்த அம்மையார் ஆட்சியில்தான் வேலூர், மதுரை, திருச்சி, சேலம், கடலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
கூட்டணி தர்மத்துக்காக பொடாவை ஆதரித்தவரை அந்தப் பொடாவே பதம் பார்த்துவிட்டது என்பதுதான் வேடிக்கை!
கூட்டணி தர்மத்துக்காகக் கொள்கையைக் கைகழுவ எப்பொழுதும் தயார் ஆனவர்தான் நம் அன்புக்குரிய வைகோ அவர்கள்.
பிகாரில் ராப்ரிதேவி தலைமையிலான அரசைக் கலைக்க 356 விதியை வாஜ்பேயியின் பி.ஜே.பி. ஆட்சி பயன்படுத்தியபோது அதற்கு ஆதரவாக வாக்களித்தவர் வைகோ.
கம்யூனிஸ்டுகள் கேட்கக்கூடும். பிகார் பிரச்சி னையில் என்னவென்று? வாஜ்பேயி சர்க்கார் தோற்கடிக்கப்படக் கூடாது என்பதற்காக நான் ஒத்துக்கொண்டேன்.
(சங்கொலி, 23.7.1999)
என்று வைகோ அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லையா?
இப்படிப்பட்டவர்தான் காங்கிரசுடன் தி.மு.க. இருக்கும் கூட்டணிபற்றி கூக்குரலிடுவது!
வாடகை ஒலிப்பெருக்கியா?
கூட்டணி தர்மத்துக்காக வாடகை ஒலிப் பெருக்கியான கதை மிகவும் சுவாரஸ்யமானது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அத்வானி பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன் றத்தில் ஒன்பதாவது நாள் விவாதம் நடைபெற்றுக் கொண் டிருந்தது. அப்போது நான் டில்லியில் வீட்டிலிருந்தேன். காலை 9 மணிக்கு பிரதமர் வாஜ்பேயியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. 10 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள் என்று பிரதமர் அழைத்தார்.
எதிர்க்கட்சிகள் பேசிய பிறகு அரசின் சார்பில் அருண்ஜெட்லி பதி லளிப்பார். அதற்கடுத்து நீங்கள் பதிலளித்துப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிரிகளின் வியூகத்தை எளிதில் உடைக்கக் கூடியவன் இந்த வைகோ என்ற நம்பிக்கையில் என்னிடம் அந்தப் பொறுப்பு ஒப் படைக்கப்பட்டது என்று பெருமைப் பொங்கப் பேசினாரே!
இதன் பொருள் என்ன?
கொள்கையாவது புடலங்காயாவது - பெரிய பதவியில் உள்ள பிரதமர் அழைத்தார் என்றவுடன் வாடகை ஒலிப் பெருக்கியாகி விட்டாரா - இல்லையா?
இப்படிப் பேசிய திரு. வைகோ அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது என்னவெல்லாம் பேசினார்?
இதோ:
பாபர் மசூதியை இடித்து, தகர்த்து தரை மட்டமாக்கிய செயல் இந்தியாவின் மதச்சார் பின்மைமீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்கு தலாகும். பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் சங் பரிவார் எனும் மத வெறிக் கூடாரத் தின் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடிய குற்றவாளி கள் என்று எல்.கே. அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷியையும் குற் றம் சாட்டுகிறேன். பாபர் மசூதியின் மூன்று விதானங் களும் உடைக்கப் பட்டபோது எழுந்த சத்தம், காந்தியடி களின் மெலிந்த தேகத்தில் பாய்ந்த மூன்று தோட்டாக் களின் ஓசையை நினைவூட்டியது.
(தினகரன், 25.12.1992)
எல்.கே. அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷியை யும் குற்றம் சாட்டுகிறேன். பாபர் மசூதியின் மூன்று விதானங்களும் உடைக்கப்பட்டபோது எழுந்த சத்தம் காந்தியடிகளின் மெலிந்த தேகத்தில் பாய்ந்த மூன்று தோட்டாக்களின் ஓசையை நினைவூட்டியது என்று குற்றப் பத்திரிகை படித்த அதே வைகோ, இந்தப் பிரச்சினைக் காக பதவி விலகக் கூடாது என்று வக்காலத்துப் போட்டும் பேசும் வக்கீலாக மாறிய கொடுமையை என்னவென்று சொல்லுவது!
பெரியார், அண்ணாவின் பெயரை உச்சரித்துக் கொண்டு இன்னொரு பக்கத்தில் ராமன் பஜனையா?
எதிலும் நிலையான கொள்கை இல்லை. எல்லாம் சந்தர்ப்பவாதந்தானே - ஈழத் தமிழர் பிரச்சினையில்கூட  -விடுதலைப்புலிகள் பிரச்சினையில்கூட அடித்திருக்கிற பல்டிகள் கொஞ்சமா நஞ்சமா?
வைகோ அவர்கள் பெருமதிப்பு வைத்துள்ள செல்வி ஜெயலலிதா அவர்களின் அதிகாரப்பூர்வ கட்சி ஏடான நமது எம்.ஜி.ஆரில் (24.5.1999) வெளிவந்த பெட்டிச் செய்தி இதோ:
பொய் கட்சி வை.கோ., தற்போது யார் பக்கம்?
மனிதன் எத்தனை நிறம் மாறுகிறான் பார்த் தீர்களா? எத்தனை வர்ணம் பூசிக் கொள்கிறான் பார்த்தீர்களா? எப்படியெல்லாம் மனிதர்கள் தடு மாறு கிறார்கள் பார்த்தீர்களா? எதற்காக? பதவிக்காக மாத்திரமல்ல, பதவி வருமோ, வாராதோ - இடையிலே வருகிற பணத்திற்காகவும்கூட பல பேர் இன்றைக்குப் பச்சோந்திகளாக மாறுகிற காட்சியை தமிழ்நாட்டிலே பார்க்கிறோம்.
- மு. கருணாநிதி, முரசொலி, 10.2.1998)
கருணாநிதி அன்று யாரைக் குறிப்பிட்டாரோ, அவரே இன்று கோபாலபுரத்தின் படியேறிவிட்டார். இதில் யார் பச்சோந்தி என்று கருணாநிதி விளக்குவாரா?
பூந்தமல்லி நீதிமன்றத்தில் இன்னொருவரைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. பொய் சாட்சி என்று. அப்படிக்கூட அல்ல பல்டி அடிக்கின்ற சாட்சி அது என்றே கூறப்பட்டிருக்கின்றது. பிரபாகரனை தன்னுடைய தலைவர் என்று பேசினார். அது வீடியோ படம் எடுக்கப்பட்டது. அப்படிப் பேசினீர்களா? என்று கேட்டபோது, பேசவில்லை என்று சொன்னார். உடனே வீடியோ படத்தை எடுத்துக் காட்டியபோது, உருவம் நான்தான். ஆனால் பேச்சு என்னு டையது அல்ல. வேறு ஏதோ குரல் என்று சொன்னார்.
உடனே நீதிமன்றம் அந்தக் குரல் யாருடையது என்பதுபற்றி ஆராய்ச்சி செய்து பார்த்தது. அந்த ஆராய்ச்சியில், அது அவருடைய குரல் என்று மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே, அவருடைய சாட்சி பொய் சாட்சி. பல்டி அடிக்கிற சாட்சி என்று சொன்னார்கள். யார் என்று கேட்கிறீர்களா? போர்வாள்! நான் வளர்த்தேனே அந்தப் போர்வாள்! (பலத்த சிரிப்பு). அந்தக் கொலைக்காக பொய்ச் சாட்சி சொல்லியிருக் கிறார். அன்றைக்கு அப்படி பொய் சொன்னவர் எங்கள் பக்கமா இருக்கிறார், இல்லை.
(மு.கருணாநிதி, முரசொலி, 11.2.1998)
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும், வைகோ வைப்பற்றி கருணாநிதி பேசியது. தற்போது வைகோ, யார் பக்கம் இருக்கிறார் என்பதை கருணாநிதி விளக்குவாரா?
(நமது எம்.ஜி.ஆர்., 25.5.1999)
கலைஞர் அவர்களும், ஜெயலலிதாவும் குற்றம் சொன்னாலும் சரி, சொல்லப்பட்டுள்ள தகவல்களோ, விடுதலைப்புலிகள் பிரச்சினையில்கூட, தம்பி பிரபாகரன் பிரச்சினையில்கூட வைகோ உண்மையாக இல்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதே!
நான் ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்; விடு தலைப்புலிகளை அல்ல என்று சட்டத்திலிருந்து தப்பிக்க வாக்குமூலம் கொடுத்ததும் நினைவுப்படுத்தத்தக்கதே! (ஆதாரம்: தினமணி, 14.10.1993)
இதோ ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட பல வண்ணத் துண்டறிக்கைகளில் இருந்து சில பகுதிகள்:
வைகோ - கழக முன்னணியினர் சிறையில் அடைப்பு -
செய்த குற்றம் என்ன?
நாட்டோரே, நல்லோரே தீர்ப்புக் கூறுங்கள்!
தமிழ்ப் பெருமக்களே வணக்கம்!
ஜூலைத் திங்கள் 11 ஆம் நாள் (2002) சென்னை விமான நிலையத்தில் வைகோ அவர்களும், ஜூலைத் திங்கள் 9 ஆம் நாள் மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஈரோடு அ.கணேசமூர்த்தி, சிவகங்கை செ.செவந்தியப்பன், மதுரை புறநகர் வீர.இளவரசன், மதுரை மாநகர் மு.பூமிநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.மணியம், வழக்கறிஞர் அழகுசுந்தரம், திருமங்கலம் நாகராஜன், மதுரை கணேசன் ஆகியோரும் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர், மதுரை, திருச்சி, சேலம், கடலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பொடா சட்டம் ஏன்?
இந்தியாவில் வெளிநாட்டின் தீவிரவாத இயக்கங் களின் சதி வேலைகளைத் தடுத்து நிறுத்தி அடியோடு ஒழிப்பதற்காகத்தான் பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது.
இவர்கள் செய்த குற்றம் என்ன?
ஜூன் திங்கள் 29 ஆம் நாள் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நாட்டின் பல்வேறு பிரச்சினைகளைக் கூறி வருகிறபோது, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதையே மக்கள் மன்றத்திலும் வைகோ பேசினார். மற்ற எட்டு கழக முன்னணியினரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியது குற்றமா?
கடந்த அரை நூற்றாண்டு காலமாக கண்ணீரில் பரிதவித்து வரும் ஈழத் தமிழர்களின் துன்பம் நீங்கிட, அவர்களின் வாழ்வில் விடியல் பிறந்திட, அறிஞர் அண்ணா அவர்கள் ஊட்டி வளர்த்த சகோதர பாச உணர்வினைக் கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருவது நாடறிந்த உண்மையாகும். இது எப்படி குற்றமாகும்?
அண்ணாவின் அறவழிதான் மறுமலர்ச்சி தி.மு.க. வின் வழி
இப்போக்கைக் கண்டித்து ஓரிரு கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள், நாட்டின் நலம் நாடுவோர் தமது கண் டனங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். நாளேடுகள், வார இதழ்கள் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடும் கண்டனங்களை வெளியிட்டிருக் கின்றன.
வைகோ மற்றும் கழக முன்னணியினரைக் கைது செய்ததைக் கண்டித்து அறப்போர் மறியல் செய்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் சிறை சென்றனர். இப்போராட்டத்தை சிறிதும் வன்முறையின்றி அறவழியில் மக்கள் பாராட்டும் வண்ணம் கழகத்தினர் நடத்தியுள் ளனர். மறுமலர்ச்சி தி.மு.க. தொடங்கி கடந்த 9 ஆண்டு களில் வன்முறையைத் தூண்டுதல், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்தல், அரசு சொத்துகளுக்குச் சேதம் விளை வித்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற எந்த ஒரு போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து அறிஞர் அண்ணா வழியில் இயங்கி வரும் இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.
தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த போது பேருந்துகள் கொளுத்தப்பட்டன; கடைகள் சூறையாடப்பட்டன; மூன்று கல்லூரி மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்; பொதுமக்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது; ஆளுங்கட்சியின் இத்தகைய அராஜகச் செயல்களைத் தமிழக மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
நாட்டை நல்வழிப்படுத்திட அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை; இலட்சியத்தில் உறுதி கொண்டு உழைத்துவரும் வைகோ அவர்களையும், தோழர்களையும்  ஜெயலலிதாவின் மக்கள் விரோத பாசிச அரசு கைது செய்தது நியாயமா?
பிற தேசிய இனங்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் குரல் எழுப்புகிறபோது சொந்த தேசிய இனத்தானின் துன்பங்கண்டு ஆதரவுக் குரல் எழுப்பக்கூடாதா?
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் எங்களால் இருக்க முடியவில்லை.
இது தீவிரவாத சதியா?
நாட்டின் இறையாண்மைக்குப் பங்கமா?
நாட்டோரே! நல்லோரே! சிந்தியுங்கள்.
அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!!
- தலைமைக் கழகம், மறுமலர்ச்சி தி.மு.க.
இந்தத் துண்டறிக்கைக்கு விளக்கம் தேவையா? அன்று வெளியிட்ட அந்தத் துண்டறிக்கை உண்மைதான் என்றால், இன்று வைகோ எடுத்துள்ள நிலைப்பாடு பொய்யாய், புனை சுருட்டாய் சுருண்டுவிடும்.
இப்பொழுது எடுத்த நிலைப்பாடுதான் நிதர்சனம் என்று சாதிக்க முன்வருவாரேயானால், அன்று ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை தூக்கு மாட்டித்தான் தொங்கவேண்டும்.
விடுதலைப்புலிகளின் தலைமைக்குத் தவறாக வழிகாட்டியவர் இந்த வைகோ என்ற குற்றச்சாற்று ஒரு காலகட்டத்தில் வெடித்துக் கிளம்பியது.
ஏதோ கே.பி. சொன்னார் என்பதோடு அது நிற்க வில்லை. நார்வே அரசே அந்தக் குற்றச்சாற்றை வைத்ததுண்டு.
போரின் இறுதிக் கட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தொடர்புகொண்டு ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த அறிக் கையை ஏற்று, ஆயுதங்களைக் கீழே போடு மாறு ஆலோசனை வழங்கினார். அதைத் தெரிந்துகொண்ட வைகோ புலிகளிடம் இது காங்கிரஸ் சதி இதற்கு உடன்பட வேண்டாம். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும். அவர்கள் புலிகளுக்கு உதவி செய்வார்கள் என்று சொன்னார் என்று நார்வே அரசின் அறிக்கை கூறியது.
திருப்பத்தூரில் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்தில் வைகோவும், அதற்குப் பொருத்த மாகவே பேசவும் செய்தார்.
தேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனியீழம் அமைத்துக் கொடுப்போம்.
(தினமணி, 1.5.2009)
என்று திருப்பத்தூரில் நாடாளுமன்றத் தேர்தலின் போது பேசியவர்தான் வைகோ.
இவற்றையெல்லாம் வெளிப்படுத்தவேண்டும் என்பது நமது விருப்பமல்ல. அவர் ஒருவர்தான் கொள்கைவாதி - இலட்சிய வேங்கை - ஈழத்துக்காக இன்னுயிர் தரச் சித்தமானவர்; மற்றவர்கள் எல்லாம் போலிகள் என்ற இறுமாப்போடு பேசுவதற்கு ஒரு பாடம் தேவைப்படுவ தால்தான் இந்தக் கட்டுரை.
இவ்வளவும் நடந்ததற்குப் பிறகு, விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதற்கு நானே காரணம் என்று செல்வி ஜெயலலிதா தம்பட்டம் அடித்த பிறகு, விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார் என்பதற்காக வைகோ வையும், அந்த மேடையில் இருந்தார்கள் என்பதற்காக ம.தி.மு.க. பொறுப்பாளர்களையும் பொடாவின்கீழ் சிறைக் கொட்டடியில் தள்ளியதற்குப் பிறகு - பிணையில் வெளிவந்த பிறகும் அவர்களுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்ட பிறகு, திரு. பழ.நெடுமாறன் அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சியைத் தடை செய்த பிறகு, ம.தி.மு.க.வையும் தடை செய்யவிருப்பதாக சொன்னதற்குப் பிறகு, ஈழத்தில் யுத்தத்தை நிறுத்தவேண்டும் என்று கூறுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்காக என்று கறாராக அம்மையார் சொன்ன பிறகு, ஜெயலலிதாவை - ஈழத் தமிழர்களின் பாதுகாவலர் என்று ஒருவர் நினைக்கிறார் - நம்புகிறார் என்றால், இதன் உள்ளீடு என்ன? ஏதோ சுயநலம் அப்படித்தானே! இல்லை இலட்சியப் பிடிப்பின்மை என்று கருதலாமா?
ஈழத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததும், அதனை வைகோ அவர்கள் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்ததும் யாரை ஏமாற்ற? அத்தோடு விட்டாரா? அப்போது என்ன பேசினார்?
உலகத்தின் பல்வேறு நாடுகளை வேதனைத் தீயில் பொங்கி தவிக்கிற கோடிக்கணக்கான தமிழர்கள் தங்கள் கவனத்தை புரட்சித்தலைவியின் பக்கம் இன்றைக்குத் திருப்பி இருக்கின்றனர். ஈழத்தின் நம்பிக்கை வெளிச்சமாக தனது நிலையை புரட்சித்தலைவி உண்ணாவிரதம் அறப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 10.3.2009)
இப்படி எல்லாம் ஒருவரால் எப்படிப் பேச முடிகிறது?
உண்மைக்கு ஒரு துளி விஷம் கொடுத்து, மனச்சான்றுக்கும் மரண வோலை எழுதி வைத்துவிட்டு, கொள்கைக் கும்  ஆழ குழிவெட்டி வைத்துப் புதைத்து விட்ட பிறகுதானே இப்படியெல்லாம் பேச முடியும் - எழுதவும் முடியும்? இவர்தான் மற்றவர்களைப் பார்த்து நாடகமாடு கிறார்கள் என்று நாகோணாமல் விமர்சனம் செய்கிறார்.
சரி, இந்த அளவோடு முடிந்ததா இந்த நாடகம்? இன்னும் டர்னிங் சீன்கள் எல்லாம் உண்டே - இரசிக்க வேண்டாமா?
அவருடைய (ஜெயலலிதாவினுடைய) போக்கிலும், அணுகுமுறையிலும் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அகந்தையும், ஆணவமும், தன்னிச்சையான அணுகு முறையும் திட்டவட்டமாகப் புலப்பட்டதற்குப் பிறகு, அவரது தலைமையிலான கூட்டணியில் இனி தொடர்ந்து நீடிப்பதும், வாக்காளர்களைச் சந்திப்பதும் எவ்விதத்திலும் ஏற்பு உடையது அல்ல.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப்போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க.வுக்கு இல்லை.
தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மான இயக்கத் தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டத்தில் (19.3.2011) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - சங்கொலி, 1.4.2011).
2009 மார்ச்சில் ஈழத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் ஜெயலலிதா 2011 மார்ச்சில் வேறு விதமாகத் தெரிவது எப்படி?
சட்டமன்றத் தேர்தலில் எத்தனை இடம் என்ற பேரத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் இப்படி ஒரு விமர்சனம். சுயமரியாதை - தன்மானம் என்ற தடபுடல்! அங்கே பெரியார் வந்து விடுகிறார் - அண்ணாவும்வந்து குதித்து விடுகிறார். எல்லாம் சூ மந்திரக்காளி வித்தை தான். சினிமாவில் விட்டாலாச்சாரியா செய்யும் வினோதக் காட்சிகள்தான்.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. 22 இடங்களைத் தந்தது; அதனை ஏற்காமல் 35 இடங்கள் தந்த அ.தி.மு.க. கூட்டணிக்குத் தாவினார். (இதில் என்ன கொள்கை இருக்கிறதோ!) 2011 தேர்தலிலோ அதே ஜெயலலிதா வெறும் ஏழு இடங்கள் அளிப்பதாகக் கூறி அவமானப்படுத்தினார். இந்தச் சீட்டு எண்ணிக்கை அரசியலில் சிக்கி கூடுவிட்டுக் கூடு பாயும் வைகோ அவர்கள் சில சமயங்களில் கொள்கை ஆவேசப் புயலாகச் சுழன்று வீசுவதுதான் வேடிக்கையின் உச்சம்!
இப்பொழுது மறுபடியும் ஜெயலலிதாவுடன் நெருக்கம் - கடந்த வார ஆனந்தவிகடனே சாட்சி (6.3.2013):
நடைபயணம் சென்றார் வைகோ. எதிரில் வந்த முதலமைச்சர் காரிலிருந்து இறங்கிக் குசலம் விசாரித் தார். ஆகா, எப்படி மாறிவிட்டார் முதலமைச்சர் ஜெய லலிதா என்று வைகோ பாராட்டு! வெறும் சந்திப்பிலேயே சரணாகதியா?
நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி நாடகம் எல்லாம் இவரிடம் பிச்சை வாங்கவேண்டும்.
இன்றைய மார்க்கெட் நிலவரம் என்று சொல்வார்களே - அதுதான் நமது வைகோவைப் பொருத்தவரை -
2011-க்கும் 2013-க்கும் இடையே என்ன அப்படி நடந்துவிட்டது?
2011 வைகோ என்ன சொல்கிறார்?
அதையும் கேளுங்கள்! கேளுங்கள்!!
அ.தி.மு.க. தலைமையின் உள்மனதுக்குள் ஓர் ரகசியமான அஜெண்டா இருந்தது. நானோ அல்லது என்னைச் சார்ந்தவர்களோ - தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் நுழைந்துவிடக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். இப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகியது நல்லதாப் போச்சு என்றுதான் நினைக்கிறேன். முதல்வரின் செயல் பாடுகள் அப்படித்தானே இருக்கின்றன?
எனக்கு வாக்களித்தால் தனியீழம் வாங்கித் தருவேன் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முழங்கியவர் இன்றைய முதலமைச்சர் - ராஜபக் சேவின் போர்க் குற்றங்கள் குறித்து அறிக்கையும் விட்டார். ஆனால், இன்று அதுபற்றிப் பேசுவதே இல்லை. போர்க் குற்றத்துக்குத் துணை போன காங்கிரஸ் அரசாங்கத்தையும் கண்டிப்பது இல்லை. இது வெளிநாட்டுப் பிரச்சினை என்று கருணாநிதி எதைச் சொல்லித் தப்பிப்பாரோ - அதையே இப்போது இவரும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்.
மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்களுக்கு மன நிறைவைத் தர ஜெயலலிதா முயற்சிக்கவில்லை என்பதே இப்போதைய நிலவரம்.
*(வைகோவின் ஆனந்தவிகடன் பேட்டி, 15.6.2011)
இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த பேட்டிதான்.
முன்னுக்குப் பின் முரணாக, இதற்குமேல் அந்தர்பல்டி அடிக்க முடியாது என்கிற அளவுக்குச் சந்தர்ப்பவாத சங்கீதப் புலிகள் புள்ளிகளை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். அதனைப் படிப்பவர்கள், கேட்பவர்கள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்களேயானால் அது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஏற்பாடே!
இன்றைக்குக் கலைஞரைப்பற்றி நாக்கில் நரம்பின்றித் திட்டும் விமர்சிக்கும் புரட்சிப் புயல் பொடா சிறையிலி ருந்து வெளியே வருவதற்கு யார் காரணம்? அதையும் வைகோ வாயால் கேட்டால்தானே சூடும் - உறைப்பும்!
கேள்வி: எண்பது வயதிலும் இரண்டு முறை உங்களை வேலூர் சிறைக்கு கலைஞர் நேரில் வந்து பார்த்தாரே!
வைகோ பதில்: என் வாழ்நாளில் நான் தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் கலைஞர்தான். அவரால்தான் நான் வார்க்கப்பட்டேன்; வளர்க்கப்பட்டேன். காலம் எங்களைக் காயப்படுத் தியது. அதே காலம் எங்கள் காயங்களுக்கும் களிம்பு தடவியது. சிறையிலிருந்த என்னைப் பார்க்க அன்பு மேலோங்க வந்தார் தலைவர் கலைஞர். அவர் என்னை வந்து பார்த்ததால் என் மனச்சுமை குறைந்துபோனது. அரசியலில் எதுவும் நேரலாம். ஆனால், இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்கமாட்டேன். காலம் எனக்குக் கற்றுக்கொடுத்த பக்குவம் இது.
(ஆனந்தவிகடன், 28.9.1993, பக்கம் 140)
ஆனந்தவிகடனின் பேட்டி என்பதாலோ என்னவோ வைகோவைப் பொருத்தவரை எல்லாம் விகடக் கச்சேரியாகவே இருக்கிறது.
வைகோ அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக முன்னணியினர் எட்டுப் பேரையும் பொடா சட்டத்தில் சிறையில் அடைத்த தமிழக அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை அநீதியானது என்று எங்களின் ஆழ்ந்த வேதனையையும், கண்டனத் தையும் தெரிவிக்கிறோம் என்ற அச்சிட்ட படிவத்தில் ம.தி.மு.க.வால் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதில் முதல் கையொப்பம் யாரிடம் பெறப்பட்டது? இன்றைக்கு வைகோவால் வசைப் பாடப்படும் கலைஞர்தானே முதல் கையொப்பம் போட்டவர்.
பொடாவில் அடைத்தவர், கட்சியைத் தடை செய்ய நினைத்தவர் நல்லவராகப் போய்விட்டார். பொடாவி லிருந்து வெளியே கொண்டு வரவேண்டும் என்று துடித்தவர் பொல்லாதவராகப் போய்விட்டார்.
முன்னவர் பிராமணாள், பின்னவர் சூத்திராள் ஆயிற்றே! அந்த அடிமைப்புத்தி அவ்வளவு சுலபத்தில் போய்விடுமா என்ன?
ம.தி.மு.க. தடை செய்யப்படுமா?

கேள்வி: ம.தி.மு.க.வைத் தடை செய்யும் திட்டம் தமிழக அரசிடம் உள்ளதா?
முதல்வர் ஜெயலலிதா: உங்கள் கேள்வியே தவறான கேள்வி. திட்டம் தமிழக அரசிடம் உள்ளதா என்றால், யாரையும் தடை செய்யவேண்டுமென்று நாங்கள் திட்டமிடவில்லை. திட்டமிடவேண்டிய அவ சியமும் இல்லை. ம.தி.மு.க. தடை செய்யப்பட வேண் டிய ஒரு இயக்கம் என்று நாங்கள் கருதுகிறோம்.
அண்மையில் ம.தி.மு.க. நடத்திய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் அவர்கள் நிறைவேற்றிய முக்கியமான தீர்மானத்தில் என்ன கூறியிருக்கிறார்கள் என்றால், ம.தி.மு.க. செயல்படுவதன் நோக்கமே, மேலும் மத்திய அமைச்சரவையில் ம.தி.மு.க. பங்குபெறுவதன் நோக்கமே ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவதற்கு மேலும் தங்களுக்கு வலிமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்ற பொருள்பட தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.
மேலும் தொடர்ந்து விடுதலைப்புலிகளை - எல்.டி.டி.ஈ.யை ஆதரிக்கப் போவதாக அவர்கள் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார்கள். ஆக, இந்திய நாட்டிற்காக எதுவும் செய்யும் திட்டம் ம.தி.மு.க.விடம் இல்லை. இந்தியாவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்காக எதுவும் செய்யும் திட்டம் ம.தி.மு.க.விடம் இல்லை. இந்தியா விற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்காக எதையும் செய்யும் எண்ணம் அவர்களுக்கு இல்லை.
தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்காக அவர்கள் குரல் கொடுக்க வில்லை. அவர்கள் இந்தியாவில் இயக்கம் நடத்திக் கொண்டிருந்தாலும், இந்தியாவிற்காகவோ, தமிழ் நாட்டிற்காகவோ எதுவும் செய்ய விரும்பவில்லை. ஈழத் தமிழர்களுக்காகத்தான் செயல்படுவோம் என்கிறார்கள்.
மேலும் தொடர்ந்து என்ன வந்தாலும் சரி, விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று கூறுகிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். Unlawful Prevention Activities-ன் கீழ் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது பொடா சட்டத்தின்கீழும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, இத்தகைய ஒரு பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்று ஒரு இயக்கம் கூறுகிறது என்று சொன்னால், அது நிச்சயமாக அபாயகரமான விஷயம். நாட்டுக்கு நல்லதல்ல. அது தடை செய்யப்படவேண்டிய ஒரு இயக்கம் என்று இந்த அரசு கருதுகிறது. அதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்குவோம்.
கேள்வி: தங்களை இலங்கைப் பிரதமர் சந்தித்தபோது அமைதிப் பேச்சுவார்த்தையில் உங்கள் ஒத்துழைப்பை நாடினாரா?
முதல்வர் ஜெயலலிதா: இலங்கையில் மேற் கொண்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எனது ஒத்துழைப்பை அவர் கோரவில்லை. இலங்கைப் பிரதமர் ஒரு அரசு விருந்தினராக இங்கு வந்து என்னைச் சந்திக்க விரும்பினார். என்னைச் சந்தித்தார். அவர் இலங்கையில் எடுத்துவரும் நட வடிக்கைகளை என்னிடம் விளக்கிக் கூற விரும்பி னார். அதை என்னிடம் எடுத்துக் கூறினார். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே எனக்கு நல்ல நண்பர் என்ற முறையிலும், விடுதலைப்புலிகளின் நம்பிக்கை துரோகம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என்றும், அது நம்பத்தகுந்த இயக்கமல்ல என்றும், அதனால், எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தினேன்.
(டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., 13.7.2002, பக்கம் 8)
இப்படிப்பட்ட ஜெயலலிதாதான் ஈழத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாம்! நம்பத்தான் வேண்டும் - சொல்பவர் புரட்சிப்புயல் ஆயிற்றே!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...