Saturday, September 23, 2017

சென்னையைச் சிறைப்பிடித்த விடுதலைச் சிறுத்தைகள் செழுமையான தீர்மானங்கள் நிறைவேற்றம் மாநில சுயாட்சித் திசையில் ஒரு மைல் கல்!




சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களி லிருந்தும் தோழர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு மேல் தலைநகரமான சென்னையின் போக்குவரத்து நிலை குலைந்தது.

ஒய்.எம்.சி.ஏ. திடலில் கூடிய மக்கள் வெள்ளத்துக்கு இணையாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநாட்டுக்காக வந்தவர்கள் தேங்கி நின்றனர். வாகனங்கள் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது.

கேரள மாநில முதல் அமைச்சர் பினராய்விஜயன்

மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய கேரள மாநில முதல் அமைச்சர் பினராய்விஜயன் அவர்கள் தன் உரையில் வெளியிட்ட கருத்து முத்துக்கள்.

கூட்டாட்சித் தத்துவம் பற்றியெல்லாம் பெரிதாகப் பேசப்பட்டாலும் நடைமுறையில் ஒற்றை ஆட்சி முறையே நிலவுகிறது என்று முத்தாய்ப்பாகக் குற்றம் சாட்டினார்.

இந்திய அரசியலில் 1957ஆம் ஆண்டில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சி கலைக்கப்பட்டதை நினைவூட்டினார். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் ஜனநாயகப் படுகொலை அது என்று 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கறுப்பு அத்தியாயத்தை நினைவூட்டினார்.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான கொள்கை உடையது ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பிஜேபி. இவர்களிடமிருந்து கூட்டாட்சியை எதிர்ப்பார்க்க முடியாது என்று மிகச் சரியாகவே சொன்னார். (அதிபர் முறை ஆட்சிதானே அவர்கள் கொள்கை).

இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஒற்றை இலக்கினை நோக்கிப் பயணிப்பதுதான் இவர்களின் நோக்கும், போக்கும் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கேரள மாநில முதல் அமைச்சர்.

மத்தியிலும், மாநிலங்களிலும் பெரும்பாலும் ஒரு கட்சி ஆட்சி  அமைந்திருந்ததால் மாநில சுயாட்சிபற்றி அதிகமாகப் பேசப்படவில்லை. இப்பொழுது அந்த நிலை மாறி வரும் சூழலில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் இந்த மாநில சுயாட்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவர் திருமாவளவனையும் பாராட்டுகிறேன். மாநாட்டின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார் கேரள முதல் அமைச்சர்.

உரத்த குரலில் பேராசிரியர் ஜவாஹிருல்லா!

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தொடக்க முதல் கடைசி வரை உரத்தக் குரலில் முழங்கினார்.

எடுத்த எடுப்பிலேயே மதவாத சக்திகளை வீழ்த்தும் மிகப் பெரிய மாநாடு என்று கூறியபோது மிகப் பெரிய கரஒலி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றால், அது ஏதோ தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக மட்டும் பாடுபடும் கட்சி என்று குறுகலாகப் பார்க்கக் கூடாது. அதையும் கடந்து மக்கள் பிரச்சினையில் அதற்கு அக்கறை உண்டு என்பதற்கு அடையாளம் தான் இந்த மாநாடு என்றும் குறிப்பிட்டார். முஸ்லிம் அமைப்புகளும், சிறுபான்மையினர் உரிமைகளையும் தாண்டி நாட்டின் ஒட்டு மொத்தமான பிரச்சினைகளில் அக்கறை கொண்டு பாடுபட்டு வருகின்றன என்றும் கூறினார்.

2007 ஆகஸ்டு 15ஆம் நாள் 'இந்து' ஏட்டில் திமுக தலைவர் கலைஞர் எழுதிய கட்டுரையை எடுத்துக் காட்டிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அக்கட்டுரையில் ஒற்றை ஆட்சி முறை  வரப் பார்க்கிறது என்று எச்சரித்திருந்ததை சரியாக நினைவூட்டினார்.

இரா. முத்தரசன் எழுச்சியுரை

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் வழக்கம்போல எளிமையாக கருத்துகளை எடுத்து வைத்தார்.
மாநிலங்கள் இப்பொழுது பெற்றுள்ள சிறிய உரிமைகள்கூட போராடிப் பெற்றவைதான். இனிப் பெற வேண்டியவைதான் அதிகம் - அந்த வகையில் சரியான கால கட்டத்தில் இந்த மாநாட்டைக் கூட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அதன் தலைவர் திருமாவள வனுக்கும் தன் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

நிதி ஆயோக் என்ற ஒன்றைக் கொண்டு வந்துள்ளனர் - அதை நிதி அயோக்(கியத்தனம்) என்று கூற வேண்டும். பள்ளிகள் தனியார் மயம், மருத்துவம் தனியார்மயம்; இந்த இரண்டு முக்கிய அம்சங்களில்கூட மக்கள் தனியாரிடம் கையேந்த வேண்டிய நிலைதான்!

மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயைக்கூட தரவில்லை. அதைக் கேட்கும் திராணியும் தமிழக அரசுக்கும் இல்லை என்று குற்றஞ் சாட்டினார் தோழர் முத்தரசன்.

இங்கு அனைவரும் கைகோத்து நின்றோம் - இது இன்றைய தேவை - மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசை வீழ்த்த இந்த ஒற்றுமை இக்கால கட்டத்தில் தேவை என்று முத்தாய்ப்பாக முழங்கினார் தோழர் இரா. முத்தரசன்.

பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன்

இந்திய யூனியன் முசுலிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்கள் மிகவும் சுருக்கமாக நேரம் கருதி முடித்துக் கொண்டார்.

மாநில சுயாட்சி என்ற உணர்வு தமிழ்நாட்டுத் தடாகத்தில் பூத்தமலர் என்று இலக்கிய நயமாகத் தன் உரையைத் தொடங்கினார் தேசிய தலைவர். இம்மாநாடு ஒரு திருப்பு முனையாக  அமையப் போகிறது என்பதை வெகு அழுத்தமாகவே பதிவு செய்தார்.

தோழர் ஜி. இராமகிருஷ்ணன்


இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு) தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தன் உரையில் முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார்.

மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்ததாகவே அவர் பேச்சு அமைந்திருந்தது. ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்  என்ற தீர்மானம் இக்கால கட்டத்தில் அவசியமானது என்று அழுத்தமாகவே கூறினார்.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர் பொறுப்பு ஆளுநர் - அவரை சென்னையில் பார்க்க முடியாது. ஆனால் ஓ.பி.எஸ்.  - இ.பி.எஸ். அணிகள் ஒன்று சேர்கின்றன என்றால் ஓடோடி வந்து விடுவார்.

அதிகாரப் பகிர்வு என்பது மாநில அளவோடு நின்று விடாமல் அது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வரை கொண்டு வரப்பட வேண்டும். அந்த வகையிலும் ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் தேவை என்றார் தோழர் ஜி.ஆர். (அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு உடனடியாக மாநாட்டின் தீர்மானங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்)
நிருவாக அதிகாரம், சட்டம் இயற்றும் அதிகாரம், நிதி உரிமைகளில் மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம் தேவை என்ற மூன்று நிலைப்பாடுகளையும் அவர் முத்திரையாகப் பதித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி


மாநாட்டுக்கு முன்னிலை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரத்தின் நெருக்கடியைக் கருதி வேகவேகமாகத் தம் கருத்தினை முத்திரையாகப் பதித்தார்.

சரியான நேரத்தில் சரியானவர்களின் முயற்சியில் சரியான முடிவுகளைத் தீர்மானமாக நிறைவேற்றிய சரியான மாநாடு இது என்று தொடங்கினார் தன் உரையை (பலத்த கரஒலி!).

பாய்ச்சலுக்கு என்றும் தயங்காத சிறுத்தைகள் நடத்தும் மாநாடு அல்லவா - என்று சொன்ன போது மிகப் பெரிய ஆரவாரம்.

எப்பொழுதும் தென்னாடுதான் வடநாட்டுக்கும் வழிகாட்டும். இடஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்படுவதற்குக் காரணமே தமிழ்நாடு தானே! (தந்தை பெரியார் முயற்சியால் போராட்டத்தால் 1951இல் நடைபெற்ற முதல் திருத்தம்).

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ராமராஜ்ஜியத்தை உருவாக்க இருப்பதாகக் குறிப்பிட்டு வருகிறது. ராமராஜ்ஜியம் என்பது என்ன?

சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்பதற்காக ராமன் வாளால் வெட்டிக் கொன்றான் அல்லவா! வருணாசிரமத்துக்கு விரோதமாக சூத்திரன் தவம் இருந்த காரணத்தால் பார்ப்பனக்  குழந்தை செத்து விட்டது என்றும், அந்தச் சூத்திரனை ராமன் வெட்டிக் கொன்ற வுடனேயே செத்துப் போன அந்தப் பார்ப்பனக் குழந் தைக்கு உயிர் வந்து விட்டது என்பதன் தத்துவம் என்ன?

சூத்திரன் கற்றால் பார்ப்பானுக்கு ஆபத்து என்பது தானே அதன் தத்துவம். அன்றைக்கு 14 ஆண்டுகள் ராமன் காட்டுக்குச் சென்றான். அந்த ராமன் பெயரால் நடக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட இம்மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகப் பொருத்திக் காட்டினார் தமிழர் தலைவர்.

எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பதைக்கூட முடிவு செய்வது ஓர் அரசின் வேலையல்ல. உழைப்பாளி மாட்டுக் கறி சாப்பிடுகிறான். உழைப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் இதுபற்றிப் பேசலாமா?

மாநில சுயாட்சி பற்றி மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா பேசிதையும் பொருத்தமாக நினைவூட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்.

குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர, மற்றவற்றிற்கு எதற்காக மத்தியில் அமைச்சர்கள்? கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு எல்லாம் மத்திய அமைச்சர்கள் தேவையா என்று அண்ணா அவர்கள் பேசியதை எடுத்துக் காட்டினார்.

1969இல் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டிய மாநில சுயாட்சி மாநாட்டை நினை வூட்டிய தமிழர் தலைவர் அவர்கள் அம்மாநாட்டில் தந்தை பெரியார் கூறிய கருத்தையும் ஞாபகப்படுத்தினார்.

கணவன் - மனைவி என்றால் இயல்பாக அன்பாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பழக வேண்டும், வாழ வேண்டுமே தவிர  'என்னிடம் ஆசையாக இரு, ஆசை யாக இரு' என்று அடித்துத் துன்புறுத்தினால் ஆசையாக மனைவியால் இருக்க முடியுமா? என்று மத்திய - மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்குத் தந்தை பெரியார் கூறிய கருத்தை எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் காட்டினார் தமிழர் தலைவர்.

கடல் வற்றி மீன் கருவாடாகிக் கொத்தித் தின்ன குடல் வற்றிக் காத்திருந்ததாம் கொக்கு என்பதுபோல தமிழ்நாட்டிலே கால் ஊன்ற மதவாத சக்திகள் துடிக்கின்றன. கருப்புடை தரித்தோர் உண்டு, நறுக்கியே திரும்பும் வாட்கள் என்ற மானமிகு கலைஞர் அவர்களின் கவிதை வரியைச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.

சு. திருநாவுக்கரசர் கருத்து

தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக் கரசர் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிடத்தாவது:

அதிகாரப் பரவலாக்கப்படாமல் ஓரிடத்திலேயே குவிக்கப்பட்டால், அங்கு சர்வாதிகாரமும், பாசிசமும் தான் தலை தூக்கும் என்று கூறிய தமிழகக் காங்கிரஸ் தலைவர் இம்மாநாட்டைக் கூட்டிய திருமாவளவனும் - வளர்ந்து வரும் சிறந்த தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

புதுவை முதல் அமைச்சர் வி. நாராயணசாமி


இந்த மாநாடு ஒரு பொருத்தமான நேரத்தில் நடைபெறுவதற்காக தன் பாராட்டைப் பதிவு செய்த புதுவை முதல் அமைச்சர் - புதுச்சேரியில் ஒரு துணை நிலை ஆளுநருடன் அன்றாடம் போராட வேண்டிய நிலை இருப்பதை நிதர்சனமாகக் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் தேர்தல் நடந்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னதாக திடீரென்று துணை ஆளுநர் மாற்றப்பட்டு புதியவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் - தாழ்த்தப்பட்டோருக்கு தொழிற் கல்லூரி வரை இலவசக் கல்வி, ஏழை, எளிய மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி என்ற மூன்று திட்டங்களையும் செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்த நிலையில், இந்த மூன்றுக்கும் முட்டுக் கட்டை போடும் துணை ஆளுநரின் தான் தோன்றித்தனத்தை அம்பலப்படுத்தினார் புதுச்சேரி முதல் அமைச்சர்.

மாநாட்டில் 7ஆம் தீர்மானமான - ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இரங்கல் தீர்மானத்துக்கு அடுத்து இரண்டாவது தீர்மானமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

(அதன்படியே இரண்டாவது தீர்மானமாக அறிவித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்).

மத்திய அரசு சி.பி.அய்., ரா என்று எதை  அனுப்பி அச்சுறுத்தினாலும் நாங்கள் தன்மானத்தோடு கொள்கை வழி உறுதியாக நின்று பணி ஆற்றுவதில் பின் வாங்க மாட்டோம் என்று வீர உரை நிகழ்த்தினார் புதுவை முதல்வர்.

(தொடக்கத்தில் மாநாட்டில் பங்கேற்ற - மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்தார் புதுச்சேரி முதல் அமைச்சர் மாண்புமிகு வி. நாராயணசாமி அவர்கள்).

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தன் உரையில் முக்கியமாக கூறியதாவது:

மாநில  சுயாட்சிக் குரலை முதன் முதலாக விடுதலைச் சிறுத்தைகள் தான் கொடுக்கிறது என்று நான் சொல்ல முன் வரவில்லை. அந்தக் குரலைக் கொடுத்தது திமுக - அறிஞர் அண்ணா, கலைஞர் அவர்கள் தான் என்றார்.

இங்கே பல்வேறு கட்சிகளின் தலைவர்களைப் பங்கேற்க அழைத்துள்ளோம். இது தேர்தல் கூட்டணியா என்று சிலர் கேட்கிறார்கள். இது தேர்தல் கூட்டணியல்ல - மக்கள்மீது அக்கறை உணர்வோடு கூட்டப்பட்ட மாநாடு.

இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என்றால் மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். அவர்கள் டிஜிட்டல் இந்தியா தேவை என்கிறார்கள்; நாமோ ஃபெடரல் இந்தியா வேண்டும் என்கிறோம்.

அவர்கள் இந்தி மொழிதான் ஆட்சி மொழியாக வர வேண்டும் என்கிறார்கள். நாங்கள் தமிழ் உட்பட மாநில  மொழிகள் அந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்கிறோம்.

கேந்திர வித்யாலயாக்களையும், நவோதயாக்களையும் கொண்டு வருவது இந்தியைக் கொல்லைப் புறமாகத் திணிக்கத்தான் என்று தீர்க்கமாகச் சொன்னார் தொல்.திருமாவளவன்..

இப்பொழுது நம் முன் இரு முக்கியப் பிரச்சினைகள் - ஒன்று நீட், இன்னொன்று ஜி.எஸ்.டி. இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியவையாகும்.
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருப்பது பொலிட்டிக்கல் மெஜாரிட்டியல்ல. மாறாக கம்யூனல் மெஜாரிட்டி என்று கூறிய அவர் தமிழ்நாட்டில் மதவாத காவி சக்திகள் கால் ஊன்றக் கூடாது -

காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகம் இல்லாத தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல வகையிலும் சமத்துவ உணர்வு மேலோங்கி இருப்பதற்கே காரணம் திராவிடர் இயக்கம்தான். திராவிடர் கழகமும், திமுகவும் தான்! இதனை நன்றி உணர்ச்சியோடு தெரிவிக்கிறேன். (பலத்த கரஒலி)

தேர்தலில் ஈடுபட்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் வேட்கை யல்ல. வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தளத்திலே நிற்போம். வாய்ப்புக் கிட்டவில்லையென்றால் அதற்காக முடங்கிவிட மாட்டோம். எங்கள் பணி மகிழ்ச்சியோடு தொடரத்தான் செய்யும் என்று .. கருத்துகளை வாரி வழங்கினார் எழுச்சித் தமிழர்.

தளபதி மு.க.ஸ்டாலின்


திமுக செயல் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநாட்டு நிறை வுரையை நிகழ்த்தினார்.

திமுகவின் கொள்கை முழக்கத்தை முக்கிய மாக எடுத்துக் கூறினார்.

1) அண்ணா வழியில் அயராதுழைப்போம்.
2) இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
3) ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்.
4) மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி.

அண்ணல் அம்பேத்கர் நெடு நேரம் கண் விழித்துக் கொண்டு செயல்படுபவர். செய்தியாளர்கள் அவரை ஒரு முறை கேட்டனர். மற்ற மற்ற தலைவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் மட்டும் வெகு நேரம் ஆகியும் விழித்துக் கொண்டு இருப்பது ஏன் என்று கேட்டபோது -

"அவர்களின் மக்கள் எல்லாம் விழிப்போடு இருக்கிறார்கள். நான் யாருக்காகப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோனோ, அந்த மக்களோ விழிப்புடன் இல்லாமல் தூங்கிக் கொண்டுள்ளனர். அவர்களை விழிப்படையச் செய்யத் தான் நான் நள்ளிரவு நேரமானாலும் விழித்துக் கொண்டுள்ளேன்" என்றாராம்.

அம்பேத்கர் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் இப்பொழுது என்ன சொல்லுவார்? திருமாவளவன் இருக்கிறார், நான் தூங்கப் போகிறேன் என்பார் என்று தளபதி கூறியபோது கரஒலியும், ஆரவாரமும் அடங்க வெகு நேரமாயிற்று.

மத்திய அரசு என்பது அதிகாரக் குவியலின் மய்யமாகவே இருந்து வருகிறது. 1957இல் கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்; திமுக ஆட்சியை இரு முறை கவிழ்த்தார்கள்.

அந்த வகையில் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில முதல் அமைச்சரும், திமுக.வின் சார்பில் நானும் இம்மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமே!

இன்று மத்தியில் உள்ள பிஜேபி அரசைப் பொறுத்தவரை - தேர்தலில் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாடாளுமன்றத்தில் நுழையும்போது அதன் படிகளைத் தொட்டுக் கும்பிட்டே உள்ளே சென்றார். அதனால் என்ன நல்ல பலன் நடந்து விட்டது? மத்திய அமைச்சர்களைக்கூட மதிப்பதில்லை. மாநில அரசுகளை -  ஏன் பிஜேபி ஆளும் மாநில அரசுகளைக்கூட மதிப்பதில்லை பிரதமர் நரேந்திர மோடி.

மத்தியில் உள்ள ஆட்சியும், மாநிலத்தில் உள்ள ஆட்சியும் அகற்றப்பட வேண்டியவைகளே!

ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல - இந்த அணி! நாட்டு மக்களுக்காகவே, நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சி என்பது எங்களுக்கு ஒரு கருவி அவ்வளவே!

இது ஒரு தொடக்கம் தான் - இதனை இந்தியா முழுமையும் சமூக நீதியாளர்களை ஒன்றிணைத்துச் செயல்படுவோம். அதனை திமுக முன்னின்று செயல் படுத்தும் என்றார் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.

தொடக்கத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்புரை   (இணைப்புரையும்) ஆற்றினார். நோக்கவுரையைக் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆற்றினார். மாநாட்டின் இறுதியில் கட்சியின் பொருளாளர் முகம்மது யூசுப் நன்றி கூற இரவு 12 மணிக்கு மாநாடு சிறப்புடன் நிறைவுற்றது.

புராணங்களைப் போதிக்க வேண்டுமா?

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இந்திய பொறியாளர் கவுன்சில் இணைந்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான விசுவகர்மா விருது வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மனிதவளத் துறை இணை அமைச்சர் சத்யபால் சிங், ‘‘இந்தியாவில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் புராணங்களைப்பற்றியும், அதிலுள்ள பல அறிவியல் நுட்பங்கள் பற்றியும் கற்பிக்கவேண்டும்; புராணத்தில் கூறப்படும் தொழில் நுட்பங்களுக்கு ஈடாக எந்த வெளிநாட்டுக் கண்டுபிடிப்பும் இல்லை. ராமாயணத்தில் புஷ்பக விமானத்தைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானத்தைக் கண்டுபிடித்து அதில் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளனர். இதை குறிப்பாகக் கொண்டுதான் மகாராட்டிராவில் ஷிவாகர் தால்படே என்பவர் விமானத்தைத் தயாரித்தார். ரைட் சகோ தரர்கள் விமானத்தைக் கண்டறியும் முன்பே தால்படே விமானத்தைக் கண்டுபிடித்து அதை மும்பை கடற்கரைப் பகுதியில் பறக்கவும் விட்டார். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் ஷிவாகர் தால்படே பற்றியும், அவரது விமான தொழில்நுட்பம் பற்றியும் சொல்லிக் கொடுப்பதில்லை. அதற்கு மாறாக ரைட் சகோதரர்கள் பற்றியே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம், மகாபாரதத்தில் வரும் ஆயுதங்கள் குறித்து நாம் படிக்கவேண்டும். அதுகுறித்த ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். இந்திய அய்.அய்.டி.க்களில் இது குறித்து தனிப்பிரிவு தொடங்கி, அதன்மூலம் பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

தற்போது இந்தியா ஆராய்ச்சிகளிலும், புதுக் கண்டு பிடிப்புகளிலும் பின் தங்கி உள்ளது.  நமது மூதாதையர் பற்றியும், அவர்களுடைய கண்டுபிடிப்புகள்பற்றியும் பாடத் திட்டத்தில் சேர்ப்பதன்மூலம் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு மேம்படும்‘’ எனக் கூறி உள்ளார்.
சமீபத்தில் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் சேர்ந்த சத்யபால் சிங், வேதியல் துறையில் பட்டதாரியாவார். இவர் அய்.பி.எஸ். முடித்து மும்பை நகர காவல்துறை ஆணையராக சில காலம் பதவியில் இருந்தார். இவர் மும்பை நகர காவல்துறை ஆணையராக இருந்தபோது, விநாயகர் சதுர்த்தியின் போது 10 நாள்கள் பிள்ளையார் சிலைகளை வைக்கும் மண்டல்களுக்கு சிறப்பு காவல்பிரிவை உருவாக்கி பாதுகாப்பு வழங்கியவர் ஆவார்.
பாஜக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததில் இருந்தே அதன் அனைத்து மட்டத் தலைவர்களும் அறிவியலுக்கு ஒவ்வாத குப்பைகளை வாரித் தலையில் கொட்டிக்கொண்டு உளறி வருகின்றனர்.  மும்பையில் அம்பானி மருத்துவமனையில் நடந்த ஒரு விழாவில் பேசிய மோடி, ‘‘பிள்ளையாருக்கு நடந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி’’ என்று பேசியிருந்தார். அதேபோல் ராஜ்நாத்சிங்கும் ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம் குறித்து ஆய்வு செய்யவேண்டும் என்று பேசியிருந்தார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜவர்தன் ராத்தோட், அரியானா மாநிலம் பானிபட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, ‘‘பீமன் தான் மிகச்சிறந்த வீரன், விளையாட்டு வீரர்கள் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கவேண்டும்‘’ என்று கூறியிருந்தார். மேலும் விளையாட்டு வீரர்கள் ராமரின் பெயரைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும் என்றும், ஆழ்மனதில் ராம நாமத்தை ஜெபித்தால் உள்ளத்தில் உறுதி பெற்று விளையாட்டில் வெற்றிபெறுவது உறுதி’’ என்றும் கூறியிருந்தார்.
இராமன் எத்தகைய வீரன் என்று தெரியாதா? மரத்தின் பின்னால் மறைந்திருந்துதானே வாலிமீது அம்பெய்தினான்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ-எச்) கூறுகிறது. ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்துகிறது.
இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்ட அமைச்சர்கள் சட்டத்திற்குப் புறம்பாக, மூடநம்பிக்கையின் மொத்த குத்தகைத்தாரர்களாகப் பேசுவது - செயல்படுவது பச்சையான சட்ட விரோதமாகும். பூமியைப் பாயாக சுருட்டிக்கொண்டு இரண்யாட்சதன் கடலில் விழுந்தான் என்கிறது புராணம். இதனை ஏற்றுக்கொள்கிறார்களா பி.ஜே.பி. அமைச்சர்கள்?
மூடநம்பிக்கையில் இலயித்துப்போனவர்கள் ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தால், நாடு எப்படி முன்னேறும் - வளர்ச்சிப் பாதையில் செல்லும்? வெட்கக்கேடு!

அன்று ராமனை காட்டுக்கு அனுப்பினார்கள் - இன்று ராமராஜ்ஜியம் அமைக்க விரும்புவோரை வீட்டுக்கு அனுப்புவோம்!

கூட்டாட்சித் தத்துவத்திற்குத் தேவை மாநில சுயாட்சி!

விடுதலைச் சிறுத்தைகள்  நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை

சென்னை, செப்.22-  கூட்டாட்சித் தத்துவம் என்றால் அங்கு மாநில சுயாட்சிக்கு முக்கிய இடம் இருக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
21.9.2017 அன்று  மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டிற்கு முன்னிலை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
சரியான நேரத்தில், சரியானவர்களை அழைத்து, சரியான முடிவுகளை எடுத்து...
சரியான நேரத்தில், நேரம் தாண்டிக் கொண்டிருந்தாலும்கூட, மாநாடு நடத்துகின்ற காலத்தைச் சொல்கின்றேன். சரியான நேரத்தில், சரியானவர்களை அழைத்து, சரியான முடிவுகளை எடுத்து, சரியான லட்சியத்தை அறிவுறுத்தி வழிநடத்தவேண்டிய - வள்ளுவருடைய குறளை நினைவூட்டக்கூடிய வகையில்,

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து

என்ற அந்த வகையில், இந்த சிறப்பான மாநாட்டை அருமையாக ஏற்பாடு செய்து, இரவானாலும் நாங்கள் கலைய மாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உறுதியோடு இருக்கக்கூடிய - பாய்ச்சலுக்கு எப்பொழுதுமே பயப்படாத  சிறுத்தைகளைக் கொண்ட அருமை சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
நிறைவுரை - நிறைவான உரை
இந்த சிறப்பான மாநாட்டில் கலந்துகொண்டு, இறுதியில் நிறைவுரை - நிறைவான உரையை அளிக்கவிருக்கக்கூடிய, அடுத்து நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே மருந்து, பதில் தரக்கூடிய ஆற்றல்மிகுந்த தளபதி ஸ்டாலின் அவர்களே,
இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், நாளைய முதல்வர் - இதுதான் ஜனநாயகத்தினுடைய தத்துவம். உலகமெங்கும் ஜனநாயகத்தினுடைய தத்துவம் இதுதான்.
அதைவிட இன்றைக்கு அவர்கள் ஆளுங்கட்சியினுடைய வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார், பல நேரங்களில் - எதிர்க்கட்சியாகவும் நடந்துகொண்டிருக்கிற பெருமைக்குரிய தளபதி அவர்களே,
முதுகெலும்புள்ள முதலமைச்சர்கள்
இந்நிகழ்ச்சியில் பெருமையோடு நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று இங்கே வந்து, சிறப்பான உரையாற்றி சென் றிருக்கக்கூடிய கேரளத்தினுடைய முதுகெலும்புள்ள முதலமைச்சர் திரு.பினராயி அவர்களே,
அதேபோல், மற்றொரு முதுகெலும்புள்ள முதலமைச்சர் பக்கத்தில் இருக்கக்கூடிய புதுச்சேரியைச் சார்ந்த அருமை மாண்புமிகு மானமிகு அய்யா திரு.நாராயணசாமி அவர்களே,
நம்முடைய தோழர் முத்தரசன் அவர்கள் சொல்லும்பொழுது, அவர் துணை நிலை ஆளுநரோடு புதுச்சேரியில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். இல்லை, ஒரு சிறிய திருத்தம்; புதுச்சேரி துணை நிலை ஆளுநர், இவரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார், எனவேதான், இவருக்குப் பக்கத்தில் மக்கள் இருக்கிறார்கள். அதுதான் மிகச் சிறப்பானது. அப்பேர்ப்பட்ட ஒரு அற்புத மானவர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து கருத்துகளைக் கூறவிருக்கிற புதுச்சேரி முதலமைச்சர் அவர்களே,
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் அன்புச் சகோதரர் திருநாவுக்கரசர் அவர் களே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் அவர்களே,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் அய்யா காதர் மொய்தீன் அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,
நம் அனைவரையும் வரவேற்று, தொடக் கவுரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்களே,
அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், நம்முடைய பாசறையிலிருந்து தயாரானவருமான சிந்த னைச் செல்வன் அவர்களே,
முழுக்க முழுக்க இந்த மாநாட்டின் நிறைவில் நன்றியுரை கூறவிருக்கின்ற விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகம்மது யூசுப் அவர்களே,
இவ்வளவு சிறந்த ஒரு எழுச்சித் தமிழ ரைச் சுமந்து பெற்ற புறநானூற்றுத் தாய் பெரியம்மா அவர்களே,
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அருமைத் தாய்மார்களே, பெரி யோர்களே, நண்பர்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
தென்னாடுதான், வடநாட்டிற்கு வழிகாட்டக் கூடியது
நீண்ட நேரம் உரையாற்றத் தேவை யில்லை; இப்பொழுது. மற்றவர்கள் உரை யாற்ற காத்திருக்கும் வேளையில், என்னு டைய உரை மிகவும் சுருக்கமாகத்தான் இருக்கும்.
நாம் எல்லோரும் சேரவேண்டிய நேரத் தில், சேர்ந்திருக்கிறோம், இது தொடர வேண்டும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது. எப் பொழுதுமே தென்னாடுதான், வட நாட்டிற்கு வழிகாட்டக் கூடியது.

ஏன் இந்திய அரசியல் சட்டத்தினுடைய முதல் சட்டத் திருத்தமே தந்தை பெரியா ரால்தான் நடைபெற்று, இந்தியா முழுவதுமே கிடைத்தது. இன்றைக்கு சமூகநீதிக் கொடி இந்தியா முழுவதும், அம்பேத்கர் உள்பட பாடுபட்டதின் விளைவாகத்தான் பறந்து கொண்டிருக்கிறது.
பெரியாரும் - பாபா சாகேப் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
அம்பேத்கர் அவர்களுடைய பெய ராலே, அவர் பிறந்த மண்ணில், பாபா சாகேப் அவர்களுடைய பெயராலே ஒரு கல்லூரி தொடங்கிய நேரத்தில், எதிர்ப்பு வந்தது. இங்கே அதற்கு முன்பே கல்லூரியைத் தொடங்கியது திராவிட இயக்கம் - நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில்.
காரணம் என்ன? பெரியாரும் - பாபா சாகேப் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஆகவேதான், இந்த மாநாடு - பல தீர்வுகளைக் கொண்டிருக்கிறது.
மத்தியில் நடப்பது ராமராஜ்ஜிய ஆட்சி!
14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன - அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்துவதையும் சேர்த்து - இப்பொழுது நடந்துகொண்டிருக்கிற மத்திய ஆட்சி - ராம ராஜ்ஜிய ஆட்சி.
ராம ராஜ்ஜியம் என்றால் என்ன? சூத்திர சம்பூகன் கடவுளைக் காணுவதற்காக தவம் செய்தபோது, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டான் என்று ஒரு போலி காரணம் சொல்லி, புகார் செய்த நேரத்தில், வால்மீகி ராமாயணத்தில் உள்ள உத்திரகாண்டம் பகுதியில் இருப்பதைத்தான் நான் இங்கே சொல்லுகிறேன். நம்முடைய கற்பனையல்ல -
‘‘முரசொலி’’யிலோ, ‘‘விடுதலை’’யிலோ அச்சடிக்கப்பட்டதல்ல - அல்லது தொல்.திருமாவளன் அவர்கள் உருவாக்கியதோ, இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்கள் உருவாக்கியதோ அல்ல -
அந்த ராமராஜ்ஜியத்தில் விசாரணையே கிடையாது - தவம் செய்த சம்பூகனின் தலையை ராமன் வெட்டுகிறான்; உடனே செத்துப்போன பார்ப்பன சிறுவன் எழுந்து நிற்கிறான். இதுதான் மனுதர்ம ராமராஜ்ஜியம்.
அந்த ராமாயணக் கதைப்படி, நடந்ததா இல்லையா என்பது வேறு - தத்துவங்கள் மிக முக்கியம். ராமனைக் காட்டுக்கு அனுப்பி னார்கள். எவ்வளவு ஆண்டுகாலம் தெரி யுமா? 14 ஆண்டுகாலம்.
ராமனை, காட்டுக்கல்ல - வீட்டுக்கு அனுப்பவேண்டிய தீர்மானங்கள்
எனவே, இங்கே நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களும் இப்போது இருக்கிற ராமனை, காட்டுக்கல்ல - வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தீர்மானங்களாகும்.
எனவே, ராமராஜ்ஜியமோ, மனுதர்ம ராஜ்ஜியமோ தேவையில்லை. அனை வருக்கும் அனைத்தும். எல்லாருக்கும் எல் லாமும் கிடைத்திடவேண்டும் என்பதுதான் மிக முக்கியம். அந்த வகையில் நண்பர்களே, இந்த மாநில சுயாட்சி என்பது இருக்கிறதே, இதில் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டி யாக இருப்பது இந்தத் தமிழ் மண்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அதேபோன்று இந்த நாட்டில், தேசிய தலைவராக இருந்தாலும்கூட பெருந்தலை வர் காமராசர் அவர்கள், இந்தக் கருத்தை ஏற்றார்கள். இந்தத் தகவல் பல பேருக்குத் தெரியாது.
இந்தியைத் திணித்த நேரத்தில், காமராசர் முழங்கினார் - ‘‘இந்த நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லையா?’’ என்று கேட்டார்.
தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் மிகத் தீவிரமாகப் போராடிய நேரத்தில், மிரட்டினார்கள், மறை முகமாகப் புகுத்திய நேரத்தில், பெரியார் எப்பொழுதுமே ஒரு கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுப்பார். தேசிய கொடியை எரிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன், அவர்கள் ஆத்திரப்பட் டார்கள், வேதனைப்பட்டார்கள்.
உடனே பிரதமர் நேரு அவர்கள், காம ராசர் அவர்களைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார். அப்பொழுது காம ராசர் அவர்கள் முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு.
ராமசாமி நாயக்கர் பெரியார் உங்கள் நண்பர்தானே - நீங்கள் சொல்லித் தடுக்கக் கூடாதா? என்று காமராசரிடம் நேரு கேட் டார்.
காமராசர் அதற்குப் பதில் சொன்னார். அவர் முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் - தன்மானமுள்ள முதலமைச்சர்கள்தான் இந்தத் தமிழ்நாட்டில், அண்மைக்காலம் தவிர, இருந்திருக்கிறார்கள்.
பெரியார் எனக்கு நண்பர்;
இந்திக்கு நண்பர் இல்லையே!
அப்போது, தொலைபேசியில் பிரதமர் நேரு கேட்கிறார், முதலமைச்சர் காமராசரிடம், ‘‘பெரியார் உங்களுக்கு நண்பர்; உங்களை ஆதரிக்கிறவர். அவர் ஏன் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார்; அதனை நீங்கள் தடுத்து நிறுத்த முடியாதா?’’ என்று கேட்கிறார்.
காமராசர் மிக அழகாக, மென்மையாக பதில் சொல்கிறார். ‘‘பெரியார் எனக்கு நண்பர்; இந்திக்கு நண்பர் இல்லையே, என்ன செய் வது?’’ என்று.
ஒரு மொழித் திணிப்பு, அல்லது ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் இவைகளையெல்லாம் திணிக்கவேண்டும் என்று நினைப்பதற்குப் பதில்தான், இந்த மாநில சுயாட்சி மாநாடு.
பூட்டாட்சியை ஒழிக்கத்தான், கூட்டாட்சித் தேவை என்பதற்கு மாநில சுயாட்சி மாநாடு
இந்த மாநில சுயாட்சி மாநாடு என்பது ஏதோ அரசியல் சட்டத்தில் இருக்கிற 10 விதிகளை மாற்றுவதற்காக அல்ல. இங்கே அமர்ந்திருக்கின்ற லட்சக்கணக்கான மக்கள், வெளியில் நின்று கொண்டு காத்திருக்கின்ற மக்களுடைய உரிமைகள், உண்ணும் உரிமை - நான் மாட்டுக்கறி சாப்பிட்டால், உனக்கேன் புரையேறுகிறது - முட்டுகிறது.
உழைக்கின்ற மக்களின் உணவு மாட் டுக்கறி - உனக்கும், உழைப்பிற்கும் சம்பந்த மில்லை. நீங்கள் மனுதர்மக் கூட்டம். நாங்கள் உழைக்கின்ற மக்கள் - எங்களின் எளிமை யான மாட்டுக்கறிதானய்யா! அதை முடிவு செய்ய நீ யார்? அதைச் சாப்பிடாதே! இதைச் சாப்பிடாதே என்று சொல்வதற்கு.
உண்ணுகின்ற உணவு - உடுத்துகின்ற உடை - சிந்திக்கின்ற உணர்வு - இவற்றுக் கெல்லாம் நீ பூட்டுப் போட நினைக்கிறாய் - உரிமைகளுக்குப் பூட்டுப் போடுகிறாய். பூட்டாட்சியை ஒழிக்கத்தான், கூட்டாட்சித் தேவை என்பதற்கு மாநில சுயாட்சி மாநாடு.
இதற்கு ஒரு வரலாறு உண்டு தோழர் களே! இப்போது நீங்கள் முகநூல் இளை ஞர்கள்; டுவிட்டர் இளைஞர்கள்; வாட்ஸ்அப் இளைஞர்கள் - உங்களுக்கு வரலாற்றைச் சொல்லவேண்டும் என்பதற்காக சுருக்கமாகச் சொல்கிறேன்.

முதல் முறையாக, காங்கிரசு நண்பர் களுக்கு சங்கடங்கள் இங்கே அவசியமில்லை. திராவிட இயக்கத்திற்குப் புகழ் சேர்ப்பதற்காக, இவர் தேசியத்தை மறந்துவிட்டார் என்று உங்களை யாரும் விமர்சனம் செய்துவிட முடியாது.
காரணம் என்ன தெரியுமா? இந்திய அரசியல் நிர்ணய சபை இருந்தபோது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கூடாது என்று சொன்னவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் எல்.கிருஷ்ணசாமி பாரதி - சோமசுந்தர பாரதியாருடைய மருமகன். பழுத்த காங்கிரசுக்காரர். லட்சுமிகாந்தன் பாரதியாருடைய தந்தை. அதுபோலவே, கே.சந்தானம்.
கன்கரண்ட் லிஸ்ட் என்று சொன் னார்களே, இந்தக் கன்கரண்ட் லிஸ்டே கூடாது என்பது சந்தானத்தினுடைய பதிவு. அரசியல் சட்டத்தில் இருக்கிற ஆதாரத்தோடு சொல்கிறோம். யாரும் மறுக்கமுடியாத ஆதாரத்தைச் சொல்கிறோம்.

அதேபோலத்தான் பிரமுகர் எம்.ஜி.ரங்கா, சோசலிஸ்ட்டில் இருந்து காங்கிரசுக்கு வந்த வர். பிறகு விவசாய அமைப்புக்குப் போனவர்.
அவர்கள் எல்லாம் திராவிடர் இயக்கத் தைச் சார்ந்தவர்களா? அம்பேத்கர் அவர் களின் துணைகொண்டுதான், ஓரளவிற்கு அவர்கள் சமாளித்தார்கள். அது முதல் கட்டம்.
மாநிலங்களவையில் அண்ணாவின் உரை!
இரண்டாவது கட்டம், மாநிலங்கள வையில் அண்ணா பேசினார்.
ஏன் ஆங்கிலத்தை நாங்கள் விரும்புகி றோம் என்று சொன்னால், அதற்குக் காரணம், என்னுடைய தாய்மொழியின்மீது பற்றுதல் என்பதல்ல - இருமொழிக் கொள்கையை நாங்கள் ஏன் சொல்கிறோம் என்று சொன் னால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான்.
இந்தியா முழுவதும் பல மொழிகள் இருக்கிற இடத்தில்,
பிரதிகூலங்கள், அனுகூலங்கள் என்று வருகின்றபொழுது, எல்லோருக்கும் சேர்ந் தது; ஒருவருக்கு அனுகூலம், இன்னொரு வருக்குப் பிரதிகூலம் என்று இருக்கக் கூடாது Disadvantage என்பது பொதுவாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில்தான் ஆங்கிலம் தேவைப்படுகிறது என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
அதுமட்டுமல்ல  நண்பர்களே, அண்ணா அவர்களுடைய ஆட்சியில், இந்தக் கருத் துகளை எடுத்துச் சொல்லி, மிகத் தெளிவாக ஒன்றை சொன்னார்.
பாகிஸ்தானிடமிருந்து நம்மைப் பாது காக்கவேண்டும் என்று சொல்கிறாய்; ஒப்புக் கொள்கிறோம். மனமார அதனைக் கேட் டுக்கொள்கிறோம். பாதுகாப்புத் துறை உங்களிடம் தாராளமாக இருக்கட்டும்; நாங்கள் பிரிவினையை கைவிட்டோமே தவிர, பிரிவினைக்கான காரணங்கள் இன்ன மும் அப்படியே இருக்கிறது, அதைப்பற்றி யோசித்தீர்களா? யோசிக்க வேண்டாமா? என்று சொல்லிவிட்டுச் சொன்னார்,
பாதுகாப்புத் துறை சரி - சுகாதாரத் துறை உங்களிடத்தில் ஏன் இருக்கவேண்டும்? இந்தக் கேள்வியை கேட்டார் அண்ணா அவர்கள். தெளிவாக அது பதிவாகியிருக் கிறது மாநிலங்களவையில்.
அதுபோல நண்பர்களே, மாநில சுயாட்சி என்பதை அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அண்ணா அவர்கள் ஆட்சி முடிந்த நிலையில், கெட்ட வாய்ப்பாக அண்ணா அவர்கள் நம்மிடையே நீண்ட காலம் இல்லாத சூழ்நிலையிலே, சரியான இடத்தில், என்னுடைய கடமையை முடிப்பார் என்று அடையாளங் காட்டப்பட்டவர்  நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தவுடன், இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களை அழைத்து மாநில சுயாட்சி மாநாட்டினை நடத்தினார்கள். 1968-1969 ஆம் ஆண்டு நடந்தது. மேற்கு வங்கத்தில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் கலந்துகொண்டார்கள். அந்த மாநாட்டிற்கு தந்தை பெரியார் அவர்களையும் அழைத் தார்கள்.
மாநில சுயாட்சி மாநாட்டில் தந்தை பெரியாரின் உரை
அய்யா அங்கு பேசியது, இன்னமும் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக் கிறது.
அய்யா சொன்னார், ‘‘என்ன பெரிய ஆட்சி - மத்திய ஆட்சி, மாநில ஆட்சி என்று ஏதேதோ சொல்லிக் கொண்டிருக் கிறீர்கள். இரண்டு பேரும் கணவன் - மனைவி போன்றவர்கள்தானே. ஒரு கண வன் எஜமானன் போன்று இருந்து, மனை வியை தினமும் அடித்து, என்னிடம் ஆசை யாக இரு, ஆசையாக இரு என்று சொன் னால், எந்த மனைவி இருப்பாள்’’ என்று பெரியார் கேட்டார்.
இதுதான் மாநில சுயாட்சியினுடைய அடிப்படைத் தத்துவம். கேட்பதினுடைய நோக்கமே அதுதான்.
நம்முடைய நாட்டில் பழமொழி என்ன? உருது மொழி பேசக்கூடாதா? சாதாரண மக்களுக்குத் தெரியுமே!
தாயும், பிள்ளையும் ஒன்று என்று சொன் னாலும், வாயும், வயிறும் வேறு. அதுபோல, என்னதான் ஒருமைப்பாடு பேசினாலும், அவரவர்களுடைய உரிமைகள், அவரவர் களுக்கு இருக்கவேண்டாமா?
என்னுடைய மொழி உரிமை - என்னு டைய பண்பாட்டு உரிமை - என்னுடைய கல்வி உரிமை - இந்த உரிமைகளையெல்லாம் நீங்கள் பறித்த காரணத்தினால்தானே அனி தாக்கள் பலியிடப்பட்டு இருக்கிறார்கள். இதுதானய்யா, மாநில சுயாட்சி நமக்குத் தேவை.
நாங்கள் எல்லோரும் மதவெறித் தீயை அணைக்கக் கிளம்பியிருக்கிறவர்கள்
எனவே, நண்பர்களே, இந்த மாநாடு ஒரு தீயணைப்பு நிலையம் போன்றது. இங்கே இருக்கின்ற அத்துணைப் பேரும் தீயணைப் புக்காரர்கள். இங்கே யார் என்ன சட்டைப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; யார் என்ன கொடியைத் தாங் கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கிய மல்ல. நாங்கள் எல்லோரும் மதவெறித் தீயை அணைக்கக் கிளம்பியிருக்கிறவர்கள். ஜாதி வெறித் தீயை அணைக்கக் கிளம்பியிருக் கிறவர்கள். பதவி வெறித் தீயை அணைக்கக் கிளம்பியிருக்கிறவர்கள்.
அண்ணா பெயரை சொல்வதற்கு உங்களுக்குத் தகுதி உண்டா?
இன்றைக்குத் தமிழ்நாட்டில் என்ன சூழல்? ஒரு பக்கம் காவி; இன்னொரு பக்கம் ஆவி. விளைவுகள் ‘பாவி’. அதனுடைய விளைவுதான், தண்ணீரே இல்லாத ஆற்றில் தண்ணீரை விட்டு, அந்தத் தண்ணீர் கருப் பாக, அழுக்கு அழுக்காக வருவதை தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக் கலாம். அந்தத் தண்ணீரைத் தலையிலே தெளித்துக்கொள்கிறார்கள்.
82 பிறழ் சாட்சியங்களால் தப்பித்து வந்த சங்கராச்சாரியிடம் நீங்கள் ஆசீர்வாதம் வாங் குகிறீர்களே, அண்ணா பெயரை சொல்வ தற்கு உங்களுக்குத் தகுதி உண்டா? நினைத்துப் பார்க்கவேண்டாமா?

எரிவதை இழுத்தால், கொதிப்பது தானே அடங்கும்
எனவேதான் நண்பர்களே, எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து - சர்வரோக நிவாரணி என்று ஒரு வார்த்தை சொல்வார் கள். அந்த சர்வரோக நிவாரணிதான் இந்த மாநில  சுயாட்சி உரிமை மாநாடு மட்டுமல்ல - மத்தியில் இருக்கின்ற ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான் - மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுதான். அதனை அகில இந்தியா முழுவதும் ஒரே குடையின்கீழ், ஒரே அணியின்கீழ் சொல்வதுதான். அதனை செய்தாலே, இங்கே இருக்கிற பினாமி ஆட்சிகளைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். எரிவதை இழுத்தால், கொதிப்பது தானே அடங்கும் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.
எனவே, அதற்குத் தயாராவோம்! தயா ராவோம்!! தயாராவோம்!!! இந்த மாநாடு ஒரு பொது முழக்கத்தை முழங்கச் செய்யும்!
நான் முதலிலேயே சொன்னேன், கொக்கொக்க கூம்பும் பருவத்து என்று,
ஆனால், ஏதேதோ வித்தைகள் செய்து, மேலே இருக்கிறவர்கள் வித்தைகள் செய்து, நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று நினைக்கிறீர்களே, அவர்களுக்குச் சொல்கி றோம், காவிகளுக்குச் சொல்கிறோம்.
கடல் வற்றி, மீன் கருவாடாகும் என்று உடல்வற்றி செத்த கொக்குகளாக நீங்கள் ஆவீர்கள்.
எனவேதான், இறுதிவரையில் கொக்கு களைப் பார்க்கிறோம்; சரியான தருணத்தைப் பார்க்க கொக்கும் இங்கே இருக்கிறது; உடல்வற்றி சாகக்கூடிய கொக்கும் இங்கே இருக்கிறது. எக்காரணம் கொண்டும், எந்தக் கொக்கு எப்படி ஆகும் என்பதை விரைவில் பார்க்கத்தான் போகிறோம்.
மாநில சுயாட்சி மாநாடு வரலாற்றை உருவாக்கும்
இந்த மாநில சுயாட்சி மாநாடு; அந்த வரலாற்றை உருவாக்கும். அதில் எல்லாக் கட்சிகளிலும் உள்ள இளைஞர்கள் ஒன்று திரளுகிறார்கள். கிரிக்கெட் மைதானத்திற்குள் கருப்புச் சட்டையே நுழையக்கூடாது என் கிறார்கள். கருப்புச் சட்டையைக் கண்டால் பயப்படுகிறீர்கள். கருப்புச் சட்டையைக் கண்டால், அய்யோ, கருப்புச் சட்டையா? என்று கேட்கிறான்.
ஒரு காலத்தில் நாங்கள் மட்டும்தான் கருப்புச் சட்டை  அணிந்திருப்போம். இன் றைக்குப் போராட்டம் நடத்துகின்ற அத் துணை கட்சிக்காரர்களும் கருப்புச் சட் டையை தைத்துக் வைத்துக்கொண்டிருக் கிறார்கள். இதை இல்லை என்று யாராவது மறுக்கமுடியுமா?
ஆகவே நண்பர்களே, கருப்புடைத் தரித்தோர் உண்டு
நறுக்கியே திரும்பும் வாள்கள் - என்ற கலைஞரின் கவிதை வரிகளை நினைவில் கொள்ளுங்கள்!
நாம் வேடிக்கைக்காக கூடவில்லை - விடுதலை பெறுவதற்காகவும் கூட்டப்பட்டி ருக்கிறோம்
மாநில சுயாட்சி முழக்கம் என்பது இருக்கிறதே, ஒரு திருப்பம் - ஒரு காலகட்டம் - ஒரு மாற்றம் - அந்த மாற்றத்தைக் கொண்டு வருவோம் - இளைஞர்களே, ஆயத்தமாகுங் கள்! நாம் வேடிக்கைக்காக கூடவில்லை - விடுதலை பெறுவதற்காகவும் கூட்டப்பட்டி ருக்கிறோம் என்கிற உணர்வோடு வீடு திரும்புங்கள்! நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்! வளர்க போராட்ட உணர்வு!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
------------------------------------------------------------------------------------------------------------------------



இந்நாள்...இந்நாள்...
1916 - கவிஞர் விந்தன் பிறப்பு
1985 - ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப்   

Saturday, September 9, 2017

‘நீட்’ தேர்வு சவப்பெட்டிக்கும் ஆணி அடிப்போம்! திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்

* ‘நீட்’: சட்டத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது
* மாநில அரசின் கருத்தைக் கேட்டும் கொண்டுவரப்படவில்லை
* கேள்வித்தாள்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு - அப்படி என்றால்
அது எப்படி பொதுப் போட்டி?
அனிதாக்களின் சவப்பெட்டிக்கு மட்டுமல்ல -


திருச்சி, செப்.9- ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாக்களின் சவப்பெட்டிக்கு மட்டுமல்ல, ‘நீட்’டின் சவப்பெட்டிக்கும் ஆணி அடிப்போம் என்று முழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
8.9.2017 அன்று திருச்சி தென்னூர் உழவர் சந்தைத் திடலில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
படுகொலைக்குக் கண்டனம்
இங்கே நாம் ஒரு அருமையான செல்வத்தை இழந்து வீரவணக்கம் செலுத்தக் கூடிய அளவிற்கு இந்த மேடை - தற்கொலை என்ற பெயராலே - நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கக்கூடிய அளவிற்கு நடத்தப் படுகிற இந்த மாநாடு போன்ற பொதுக்கூட்டத்தில் என்ன நாங்கள் பேசப் போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? இந்தக் கருத்துகள் இங்கே வெள்ளம்போல் திரண்டிருக்கின்றார்களே - இவர்கள் எல்லாம் ஓரணியாய் திரண்டி ருக் கிறார்கள்.
நம்முடைய எதிர்காலம் என்னாகும்? நம் முடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகும்?
இந்தத் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே தந்தை பெரியாரால் முதன் முறையாக அரசியல மைப்புச் சட்டத்தைத் திருத்தி, சமூகநீதிக்கு வித்திட்ட மாநிலம்.
9 ஆவது அட்டவணையைப் பெற்றிருக்கின்ற ஒரே மாநிலம்
இந்தத் தமிழ்நாடு 69 சதவிகித இட ஒதுக்கீடு என்பதை வேறு எந்த மாநிலமும் பெறாத நிலையில், 9 ஆவது அட்டவணையைப் பெற்றிருக்கின்ற ஒரே மாநிலம்.
இந்தியாவிற்கே சமூகநீதியை சொல்லிக் கொடுக் கின்ற மாநிலம் தமிழ்நாடு. இந்த மாநிலத்தில்தான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டினார்கள் - வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, திராவிட ஆட்சிகள் இருந்த காரணத்தினால், மிகப்பெரிய அளவிற்கு கலைஞர் அவர்கள் காலத்தில், காமராசர் அவர்களுடைய ஆட்சிக் காலம் தொடர்ந்து, மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்று சொல்லி, 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
அதுமட்டுமல்ல, அறிவார்ந்த மக்களுக்குத் தெரியவேண்டும்; சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லக்கூடிய மேல் பட்டப்படிப்புக்கும் மேலே - அதில் ஏராளமான இருக்கக்கூடிய இடங்கள் - பலமுறை போராடி - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சிறப்பாக உற்பத்தி செய்து - இன்று ஏராளமான மாணவர்கள், எங்களுடைய சகோ தரர்கள் படித்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் செய்த சூழ்ச்சிதான்

நீட் தேர்வு!
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று உளறுகிறவர் களுக்குச் சொல்லியிருக்கிறோம் - ஒரு நூறாண்டு களுக்கு முன்பு - திராவிடர் ஆட்சி - நீதிக்கட்சி ஆட்சி வருவதற்கு முன்பு - சமஸ்கிருதம் படித்தால்தான், மருத்துவக் கல்லூரிக்கே மனு போட முடியும் என்கிற நிலை இருந்தது - அதையெல்லாம் மாற்றி இன்றைக்கு குப்பன் மகன் சுப்பன், முத்தன் மகன் முனியன் என்பவர்கள் எல்லாம் படிக்கக் கூடிய வாய்ப்பைப் பார்த்து, வயிற்றெரிச்சல்காரர்கள் தகுதி - திறமை என்று சொல்லிக்கொண்டு, அவர் கள் எப்படியாவது இதனை ஒழித்துவிட வேண்டும் என்பதற்காக - அவர்கள் செய்த சூழ்ச்சிதான் நண்பர்களே நீட் தேர்வு என்பது.
எங்களை கைது செய்திருந்தால், நாங்கள் வரவேற்போம்!
இந்த நீட் தேர்வை எதிர்த்துப் பேசக்கூடாது என்றெல்லாம் சிலர் நினைக்கிறார்கள். அப்படியல்ல - உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்று சில ஊடகங்கள் செய்திகளைப் போட்டுக் குழப்பி - அதனை அரைகுறையாகப் புரிந்துகொண்டு - அவசர அவசரமாக காவல்துறையினர் - அவர்கள் பாவம் அவர்களை நாங்கள் குறைசொல்ல மாட்டோம் - யாரோ ஒருவர் - இங்கே இருக்கக்கூடிய அந்தக் கட்சிக்கு ஆளில்லாமல், மிஸ்டு காலில் கட்சியை நடத்தக்கூடிய ஒரு கட்சியை சார்ந்தவர் - ஆகா, திருச்சியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது - அதனை அனுமதிக்கலாமா? என்று கேட்டவுடனே, இந்தக் கூட்டத்திற்குத் தடை என்று காவல்துறையினர் சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறீர்களே - தடை என்று சொல்லி நீங்கள் எங்களை கைது செய்திருந்தால், நாங்கள் வரவேற்போம் - இதைவிட அதிகமான அளவிற்கு மகிழ்ச்சியடைவோம்.
எங்களோடு லட்சோப லட்சம் மக்களாக இருக்கக்கூடிய இந்த மக்கள் சிறைச்சாலைக்கு வருவதற்கு இடமிருக்கிறதா என்பதை அருள் கூர்ந்து நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
இந்தப் போராட்டம் இன்றைக்குத் தொடக்கம் - இதனை நீங்கள் நன்றாகத் தொடங்கி வைத்தி ருக்கிறீர்கள். நாங்கள் இங்கே வரும்பொழுதுகூட, வீட்டிற்குத் திரும்பிப் போவோம் என்கிற எண்ணத்தோடு வரவில்லை. ரயிலில் சாப்பாடா? ஜெயிலில் சாப்பாடா? எங்கேயிருந்தாலும், ஜெயில் சாப்பாடு என்றால் எங்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்று - இங்கே இருக்கும் அத்துணைப் பேருக்கும் - இது ஒன்றும் புதுமையல்ல.
மிரட்டலைக் கண்டு

அஞ்சிடுவோமா நாங்கள்?
ஜெயிலுக்குப் போகாதவர்கள் யார் இங்கே? மிரட்டலைக் கண்டு அஞ்சிடுவோமா நாங்கள்? நீதிபதிகளே ஜெயிலில் இருக்கிறார்கள் - அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழல். அப்படிப்பட்ட சூழலில், இந்தக் கூட்டம் நடைபெறக்கூடாது என்று அவசர அவசரமாக தடை உத்தரவு என்றெல்லாம் ஏன் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் எல்லாம் வழக்குரைஞர்கள் அல்லவா - நாங்கள் சட்டம் படித்தவர்கள் அல்லவா!
அதுமட்டுமல்ல, ஒரு தீர்ப்பை சரியாகப் புரிந்துகொண்டு ஒரு அரசு செயல்படவேண்டாமா? அந்தத் தீர்ப்பு, அந்த சட்டம் - நம்முடைய தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர் களும் வழக்குரைஞர்தான் - இன்னுங்கேட்டால், எங்களு டைய ஊர்க்காரரும்கூட; நாங்கள் எல்லாம் அங்கே பயிற்சி பெற்ற பிறகு, பின்னால் பயிற்சி பெற்றவர் - நான் அவருக்கு முன் பயிற்சி பெற்றவன். நீதிமன்றத்தில் வாதாடுவதைவிட, மக்கள் மன்றத்தில் வாதாடலாம் என்பதற்காக வந்து விட்டவர்கள்.

அறப்போராட்டத்திற்குத் தடை இருக்கிறதா? பொதுக்கூட்டத்திற்குத் தடை இருக்கிறதா?
அந்தத் தீர்ப்பில், எங்கேயாவது அறப்போராட்டத்திற்குத் தடை இருக்கிறதா? பொதுக்கூட்டத்திற்குத் தடை இருக் கிறதா? எங்கேயும் அதுபோன்று இல்லையே! பிறகு ஏன் இந்த அவசர கதியில், அவசரக் கோலம், அள்ளித் தெளித்த அரைக்கோலம் என்பதை அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள்!

அறவழியில் போராட்டம் நடத்துவதற்கு, கருத்துரி மையை எடுத்துச் சொல்வதற்கு - எழுத்துரிமையைப் பதிவு செய்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படை உரிமைகள் என்பது இருக்கிறதே - அது யாராலும் பறிக்க முடியாத அளவிற்கு - அதை ஒரு பாதுகாப்பாக வைக்கக்கூடிய ஒன்று.

அனிதாவை வைத்த சவப் பெட்டிக்குள்  நீட் தேர்வை வைத்து ஆழமாக ஆணி அடிக்கின்ற வரையில்...

எனவேதான், நாங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், இந்தக் கூட்டம் தொடக்கமே தவிர, இது முடிவல்ல. பல கட்டங்களாக மாறி மாறி நடைபெறவேண்டிய அவசிய மிருக்கிறது.
எந்த அனிதாவை நீங்கள் சவப் பெட்டிக்குள் அனுப் பினீர்களோ, அனுப்ப காரணமாக இருந்தீர்களோ அதே அனிதாவை வைத்த சவப் பெட்டிக்குள் நீட் தேர்வை வைத்து ஆழமாக ஆணி அடிக்கின்ற வரையில் எங் களுக்கு ஓய்வு கிடையாது.

ஒவ்வொருவரும் எங்களுடைய வாய்ப்புக்கு சவப் பெட்டியினுடைய ஆணியை அடிப்போம். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம்! ஏன் எங்கள் உயிரை வேண்டுமானாலும் கொடுப்போம்!

எங்கள் செல்வங்கள் - நாங்கள் கொஞ்சம் வயதான வர்கள் - வாழ்ந்து பார்த்துவிட்டவர்கள் - இதோ அந்த செல்வம் - இதோ எங்கள் அன்புச் செல்வி - ஒரு சாதாரண மூட்டைத் தூக்கக்கூடிய ஒரு தொழிலாளியாக - இதே காந்தி மார்க்கெட்டில் அவர் சேர்த்து  படிக்க வைத்தார் என்று நினைக்கின்றபொழுது, உள்ளமெலாம் நொந்து போகிறது - நெஞ்சத்தில் ரத்தக் கண்ணீராக வடிகிறது. டீ குடித்தால்கூட காசு செலவாகிவிடும் என்று சொல்லி, தண்ணீரை மட்டும் குடித்தார் என்று எழுதியிருக்கிறார்களே, இதனைப் பார்க்கும்பொழுது மனம் உருகாதா?

சமூகநீதியைப் பிணமாக்கியிருக்கிறார்கள்

அப்படிப்பட்ட அந்த மாணவி அனிதாவின் நிலை என்ன? அவர் ஏன் உயிரைத் துறந்திருக்கவேண்டும்? அது ஒரு சாதாரண மரணமா? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

சமூகநீதியைப் பிணமாக்கியிருக்கிறார்கள் - அனிதா வினுடைய மரணம் என்பது இருக்கிறதே - சமூகநீதிக்கு சாவோலை!

‘ஆனந்த விகனிடல்...’

இது எங்களுடைய விடுதலையல்ல, முரசொலி அல்ல, தீக்கதிர் அல்ல, ஜனசக்தி அல்ல, மணிச்சுடர் அல்ல - இந்த வார ஆனந்தவிகடன் பத்திரிகை. எங்கள் கருத்துகளுக்கு மாறுபட்டவர்கள் அவர்கள். இங்கே இருக்கிற பல பேரு டைய கருத்துகளை ஏற்காத கொள்கை உடைய ஏடு - ஆனால், நியாயத் தராசை சரியாகப் பிடித்த காரணத்தால், சமூகநீதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அருமை நண்பர்களே இதோ பாருங்கள் - இந்த வாரம் ‘ஆனந்த விகடனில்’ வந்ததே திராவிடர் கழகம் அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறது.

தந்தை பெரியார் - அம்பேத்கர் - காமராசர்!

அனிதாவின் உடலுக்கு அருகில் நிற்பவர் யார்? நம் முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர் கள். நமக்கெல்லாம் முதுகெலும்பு தந்து, சமூகநீதியைப் போதித்த அந்த சமூகநீதிக் களத்தைச் சார்ந்தவர்.

அதுபோலவே, இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக் குக் குரல் கொடுத்த பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அதுபோலவே, ஏழை, எளிய மக்களுக்கெல்லாம் கல்வி கொடுத்த நம்முடைய பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் அவர்கள்.

இம்மூவரும் அனிதாவைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால், அனிதா என்பது உருவமல்ல - அனிதா என்பது நம்முடைய சமூகநீதியினுடைய மூச்சுக்காற்று. ஆகவே, அதை செய்கிறார்கள்.

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததைப்போல...

ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய பிள்ளைகள் அனிதாக்கள் போல கனவு கண்டிருக்கிறார்கள். அப்படி கனவு கண்ட பிள்ளைகள் - அவர்களுடைய எதிர்காலம் - இத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகளை கலைஞர் அவர்கள் உருவாக்கினால், கரையான் புற்றெடுக்க கரு நாகம் குடிபுகுந்ததைப்போல, வடநாட்டுக்காரர்களையும், வெளிநாட்டுக்காரர்களையும் கொண்டு வந்து வியாபாரம் செய்வதற்கு நீங்கள் திட்டம் தீட்டியிருக்கிறீர்களே, உங்களுடைய ஆதிக்க சிந்தனையை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவதுதான் எங்களுடைய மிக முக்கியமான முதல் வேலை.

ஊடக நண்பர்கள் எதை எதையோ போடுகிறார்கள் -இதனை வெளியிடவேண்டும், அதுதான் மிக முக்கியம்.

இந்த நீட் தேர்வுக்கு- தமிழ்நாட்டில் இருந்த சட்டத்தைவிட்டு, மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்று மாற்றியிருக்கிறார்களே, அதில் என்ன இருக்கிறது? என்று யாராவது பார்த்திருக்கிறார்களா? அதனை ஆத ரித்துப் பேசுகிறார்களே, அவர்களைப் பார்த்து சில கேள்விகளை கேட்கிறேன், அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும். பிறகு எங்களிடத்தில் வரட்டும்.

எங்கள் பிள்ளைகளுக்கும், கிராமப்புற பிள்ளைகளுக்கும் பட்டை நாமத்தைச் சாத்தி...

இந்த நீட் தேர்வு இந்தியாவில் - இறையாண்மை உள்ள ஒரு நாட்டில் - யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் போன்று அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.ஆர்.எஸ். அய்.எப்.எஸ். தேர்வு நடத்துகிறார்களே, அந்த சர்வீஸ் கமிசன் பொதுத் தேர்வுதானே - அதில் வெளிநாட்டுக்காரர்கள் தேர்வு எழுத முடியுமா? நீட் தேர்வை - பொதுத் தேர்வாக நடத்தப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறீர்களே - அந்தப் பொதுத் தேர்வு என்று சொல்லுவது - உலகத்தில் உள்ள எல்லா நாட்டுக்காரர்களும் எழுதுவதற்காக கதவு திறந்துவிடலாமா?  நாங்கள் வரிப் பணம் கொடுத்து, எங்கள் பிள்ளைகளுக்கும், கிராமப்புற பிள்ளைகளுக்கும் பட்டை நாமத்தைச் சாற்றி - அவர்கள் அனிதாக்களாக தூக்கு மாட்டிக்கொண்டு இறப்பதற்குத்தான் எங்களுடைய வரிப் பணத்தில் எங்கள் தலைவர்கள் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்களா என்று எண்ணிப் பார்க்கவேண்டாமா? சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

அதிக மதிப்பெண் பெற்ற

மாணவர்களுக்குக் கிடையாது

பல பேருக்குத் தெரியாது - குளோபல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் - உலக நாடுகளுக்கு விற்கிறார்கள். நாம் இங்கே மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினால், அந்த இடங்கள் அனிதாக்களுக்குக் கிடையாது - அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கிடையாது - ரிக்ஷா தொழிலாளியினுடைய பிள்ளைகளுக்குக் கிடையாது.  தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அடித்தளத்தில் இருக்கின்ற பிள்ளைகளுக்குக் கிடையாது.

யாருக்கு விற்கிறான்? என்.ஆர்.அய். என்றுதான் இருந்தது அதற்கு முன்பு - இப்பொழுது வெளிநாட்டுக் காரர்களுக்கு 1000 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அரசு ஆணை போடப்பட்டிருக்கிறது. எத்த னைப் பேருக்கு இந்தத் தகவல் தெரியும்? அருமை நண்பர்களே, உண்மைகள் களபலி ஆக்கப்பட்டிருக்கின்றன.

பெரியார்  மண் மட்டுமல்ல - திராவிட இயக்கம் மண்!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், தமிழர் களைத் தவிர மற்ற எல்லோரும் இருப்பார்கள். அண்மை யில், கேரளத்தில் இருந்து எத்தனைப் பேர் பித்தலாட்டம் செய்து மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு இடம் பெற்றிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தனவே - அதற்கு விதிகள் உண்டா? அதற்குப் பொறுப்பேற்று அமைச்சர்கள் பதவி விலகியிருக்கவேண்டாமா? அதற்கு மாறாக, யார் குரல் கொடுக்கிறார்கள்? அவர்களுடைய குரல் வளையை நெரிக்கலாம் என்று அவர்களுடைய ஆதிக்க சக்தியை பயன்படுத்த நினைத்தால், ஒருபோதும் நடக்காது - இது தமிழ்நாடு - இது பெரியார் மண்! இது பெரியார்  மண் மட்டுமல்ல - திராவிட இயக்கம் மண் - காமராசர் ஆண்ட மண் - அண்ணா மண் - கலைஞர் ஆண்ட மண் - மீண்டும் ஆளப் போகிற மண் - அவருக்கு அடுத்தபடியாக, அடுத்த தலைமுறை தளபதி ஸ்டாலின் போன்றவர்களுடைய தலைமையில் ஆட்சி அமையக்கூடிய மண் இந்த மண்.
உங்களால் முடிந்தால் செய்து பாருங்கள் - நாங்கள் எங்கு வேண்டுமானாலும் வருகிறோம் - என்ன செய்ய முடியும் உங்களால்? எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது.

எப்பொழுதும் களபலியாவதற்குத் தயாராக இருக்கிற முதல் ஆள்!

இந்த நேரத்தில் ஒரு கருத்தை நான் சொல்ல விரும்புகிறேன் - நீதிமன்றத்தைப் பற்றி பேசுகின்ற கருத்து - முழுக்க முழுக்க என்னைச் சார்ந்தது - இந்தக் கூட்டத்தில் இருக்கின்ற தலைவர்கள் யாரையும் சார்ந்தது அல்ல - நான் அதனை முதலிலேயே சொல்கிறேன் - ஏனென்றால், எப்பொழுதும் களபலியாவதற்குத் தயாராக இருக்கிற முதல் ஆள் என்பதற்காக!
நீதிமன்றங்கள் - நியாயமன்றங்கள் - என்றால், கோர்ட் ஆஃப் லா என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்கள். சட்டக் கோர்ட் என்றுதான் கோர்ட்டுக்குப் பெயர் இருக்கிறதே தவிர - கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் என்று அல்ல.

நீதிமன்றத்துக்கு நீட் தேர்வு சம்பந்தமாக பல நிறைய வழக்குகள் சென்றன. மதுரை உயர்நீதிமன்றம் நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இயைப் பார்த்து பதில் சொல்லுங்கள் என்று ஆறு கேள்விகளைக் கேட்டது.

நீதிபதி கேட்ட ஆறு கேள்விகள்!

1. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில், நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

2. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாதன் காரணம் என்ன?

3. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?

4. கல்வித் தரம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

5. கிராமங்கள் மற்றும் நகரங்கள் இடையில் கல்வித்தரம் வேறுபடும்போது, அனைவரும் சிபிஎஸ்இ தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்?

6.  மாநில மொழிகளில் உள்ள வினாத் தாள்களுக்கும், இந்தி, ஆங்கில மொழிகளில் உள்ள வினாத் தாள்களுக்கும் வேறுபாடு எப்படி வந்தது? என்று நீதிபதிகள் வினா எழுப் பினார்கள்.
இதற்குப் பதிலே சொல்லவில்லை. உச்சநீதிமன்றத்துக்குப் போனார்கள்.

அடுத்தபடியாக, நிறைவேறாது என்று நினைக்காதீர்கள் - அதே சட்டத்தில் நாங்கள் வாதாடி, எவ்வளவு தூரம் அதில் உள்ளே ஓட்டை இருக்கிறது என்று காட்டுவோம்.
பல்கலைக் கழகத்திற்குத் தேர்வு நடத்துகின்ற உரிமை பல்கலைக் கழகத்திற்கு மட்டுமேதானே தவிர, கேத்தன் தேசாய் போன்ற ஊழல்வாதிகள் நிறைந்திருக்கின்ற மெடிக்கல் கவுன்சில்களுக்குக் கிடையாது.

மாநிலப் பட்டியலில் இருந்ததை மத்திய பட்டியலுக்குக் கொண்டு போனார்கள் நெருக்கடி காலத்தில்!

நீதிமன்றங்கள், சட்டத்தையே பார்க்காமல், புரிந்து கொண்டிருக்கிறார்கள் - நம்மில் பலரும் உறங்கிக் கொண் டிருக்கிறோம் - அதனுடைய விளைவுதான் இது.

மாநிலப் பட்டியலில் இருந்ததை மத்திய பட்டியலுக்குக் கொண்டு போனார்கள் நெருக்கடி காலத்தில். எங்களைப் போன்றவர்கள், தளபதி போன்றவர்கள் சிறைச்சாலையில் இருந்த காலகட்டம் அது.

கன்கரண்ட் லிஸ்ட் என்றால் என்ன?

வெளியில் அது விவாதிக்கப்படவே இல்லை, நாடாளு மன்றத்திலும் விவாதிக்கப்படவில்லை. 1. மத்திய பட்டியல் 2. பொதுப்பட்டியல் என்று இன்றைக்கு மொழி பெயர்க் கப்பட்டு இருக்கிறது - அது சரியான மொழி பெயர்ப்பு அல்ல -  கன்கரண்ட் லிஸ்ட் என்றால், மாநில அரசுக்கும் இடம் உண்டு. மாநில அரசின் கருத்துக் கேட்கப்பட்டதா?

எனவே, மாநில பட்டியல், மத்தியப் பட்டியல். இடையில் ஒப்புக்கொண்டு இயற்றப்படவேண்டிய ஒரு பட்டியல். அந்தப் பட்டியலின்படி சட்டம் இயற்றவேண்டுமானால், மாநிலங்களுடைய ஒப்புதலைப் பெறவேண்டும். இதிலே தானே நீட் தேர்வை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். அப்படி யென்றால், மாநிலங்களுக்கு உள்ள உரிமை அதில் இல் லையா?

நாடாளுமன்ற நிலைக் குழுவின்  பரிந்துரை!

நாடாளுமன்ற நிலைக் குழு போட்ட தீர்மானத்தை இங்கே எல்லோரும் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதில், சிறப்பாக ஒரு பகுதி - காங்கிரசு ஆட்சிக்காலம் முடிய போகிற காலகட்டம்.

நாடாளுமன்ற நிலைக்குழுப் பரிந்துரையில்,
எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்பவில்லையோ, அந்த மாநிலம் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற முழு உரிமை உண்டு.

அடப் பாதகர்களே, இந்த அரசியல் சட்டத்தை நீங்கள் சரியாகப் படித்தீர்களா? சரியாக செயல்பட்டீர்களா? சட்டத் தின்மீது பிரமாணம் செய்துகொண்டிருக்கின்ற நீதிபதிகள் உள்பட அவர்கள் பதில் சொல்லவேண்டாமா?

ஏதோ இது அவர்களுடைய அப்பன் வீட்டு சொத்து போன்று, ஆகா, நாங்கள் முடிவு செய்துவிட்டோம் - நீங்கள் யார் கேள்வி கேட்பது என்று என்ன கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறீர்கள்?

ஒவ்வொரு மாநிலத்திற்கும்

வெவ்வேறு கேள்வித்தாள்கள்!

ஒரே பாடத் திட்டம் என்று சொல்லி, குஜராத்திற்கு ஒரு கேள்வித்தாள் - மேற்கு வங்கத்திற்கும், கேரளத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வேறொரு கேள்வித்தாள்.
தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள் - இங்கே ஆசிரியர்கள் இருக்கிறீர்கள், தாய்மார்கள் இங்கே இருக் கிறீர்கள் - உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப் பவர்கள் இங்கே இருக்கிறீர்கள்.

ஹிஸ்ட்ரி பாடப் பிரிவில் படிக்கும் ஒரு மாணவனிடம், கெமிஸ்ட்ரி பாடப் பிரிவில் கேள்வி கேட்டால், அவனால் பதில் சொல்ல முடியுமா? என்பதை தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

மோசடி - மோடியின் மோசடி

சிங்கப்பூருக்குச் சென்றால், சீன உணவு சாப்பிடவேண் டும் என்று பல பேருக்கு ஆசை இருக்கலாம்.  அங்கே சென்றால், சீன உணவைக் கொண்டு வந்து வைப்பார்கள். அதனை எடுத்துச் சாப்பிடுவதற்கு, கரண்டியை வைத்தால் தான் நம்மால் சாப்பிட முடியும். ஆனால், இரண்டு குச்சியை வைப்பார்கள். குழந்தையில் இருந்து குச்சியால் சாப்பிட்டு அவர்களுக்குப் பழக்கம். அவர்கள் கடகடவென சாப்பிடு வார்கள். அந்த உணவைக் கொண்டு வந்து நம்முடைய குழந்தைகளிடம் கொடுத்து, உங்களுக்குப் போட்டி வைக்கிறோம் - நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொன்னால், இதைவிட மோசடி - மோடியின் மோசடி வேறு என்ன இருக்க முடியும்? எனவே, இது ஒரு ஏமாற்று வேலை.  நம்முடைய உரிமைகளைப் பறிக்கின்ற அந்த வேலையை திட்டமிட்டுச் செய்திருக்கின்றார்கள்.

தமிழகத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள்!

நாம் அரசியல் சட்டப்படி உரிமை கேட்டோம். தளபதி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் - அவருடைய கட மையை மிகச் சிறப்பாகச் செய்தார். இந்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., பன்னீர், தண்ணீர், வெந்நீர் என்றெல்லாம் இருக்கிறார்களே, இவர்கள் எல்லோரும் பன்னீராகவும், வெந்நீராகவும், தண்ணீராகவும் இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில்தான், பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபொழுது, எதிர்க்கட்சித் தலைவரான தளபதி மு.க.ஸ்டாலின், காங்கிரசு, முஸ்லிம் லீக் அவர்கள் எல்லோரும் சேர்ந்து,

‘‘நீங்கள் கொண்டு வந்த இரண்டு மசோதாக்களை ஒருமனதாக ஆதரிக்கிறோம்’’ என்று சொன்னார்கள்.

என்னாயிற்று அந்த இரண்டு மசோதாக்கள்? மசோ தாக்கள் - ‘ம’நாவை தள்ளிவிடவேண்டியதுதான், மிகத் தெளிவாக.

இதுபோல ஒரு கொத்தடிமை ஆட்சியை இந்திய வரலாற்றில் பார்த்ததே கிடையாது
இதுபோல ஒரு கொத்தடிமை ஆட்சியை இந்திய வரலாற்றில் பார்த்ததே கிடையாது. அந்த மசோதாக்கள் என்னாயிற்று என்று கேட்டிருக்கவேண்டாமா?

மத்திய அரசு போடுவது பிச்சையா? சலுகையா? அரசியல் சட்டத்தில் மாநிலங்களுக்கு இருக்கிற உரிமை! உரிமை!! உரிமை!!! அந்த உரிமையைப் பறிப்பதற்கு  யாருக் கும் அதிகாரம் கிடையாது. அதனை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கவேண்டாமா?

அந்த இரண்டு மசோதாக்கள் என்னாயிற்று என்று தெரியவில்லை.
இன்றைக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கிறார். அவருக்கு அந்த மசோதாக்கள் எங்கே இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், அவர் இங்கே தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு அவசர சட்டம் கொண்டு வாருங் கள், ஓராண்டிற்கு விலக்கு தருகிறோம் என்று சொன்னார்.
எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்த அனிதாக்களை நீங்கள் ‘கொன்றிருக்கிறீர்கள்!’

எவ்வளவு பெரிய மோசடித்தனம் - நம்ப வைத்து கழுத்தறுப்பது என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி நம்ப வைத்து கழுத்தறுத்த நிலைதானே - இந்த நீட் தேர்வில் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்த அனிதாக்களை நீங்கள் கொன்றிருக்கிறீர்கள் - சிந்திக்கவேண்டாமா?

ஓராண்டு விதிவிலக்கு என்று சொன்னார்கள் - ஏற்கெனவே விதிவிலக்கு நீங்கள் கொடுக்கவில்லையா? விதிவிலக்கே கொடுக்க முடியாது என்று நீதிபதிகளோ மற்றவர்களோ சொல்வதற்கு உரிமை உண்டா?

சட்டப்படி யாருக்கும் உரிமை உண்டு

தீர்ப்புகள் தவறு என்று சொல்வதற்கு சட்டப்படி யாருக்கும் உரிமை உண்டு.  அந்தத் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பித்தால்தான் நீங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர - விமர்சிக்கக் கூடாது என்பதல்ல!

அந்த இரண்டு மசோதாக்கள் என்னாயிற்று? பிறகு அவசர சட்டம் - உடனே எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள் - ஒரு அமைச்சர் சொல்கிறார், நல்ல செய்தி வரும் என்று - குடுகுடுப்புக்காரர் வேலையா?

இதையெல்லாம் நம்பித்தானே அனிதாக்கள் இருந்தார் கள். அவர்களுடைய கழுத்தில் வைக்கப்பட்ட கத்தி உங்களுடைய மோசடியான நீட் தேர்வு என்ற நிலை.
நீதிபதிகளேகூட எத்தனை முறை அந்த வாய்ப்புகளை மாற்றி மாற்றி சொல்லியிருக்கிறார்கள் உச்சநீதிமன்றத்தில்.

நீதிபதிகளே,என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்!

நான் ஒரு உண்மையான குடிமகன் - நான் சட்டத்தைப் படித்தவன் - அரசியல் சட்டத்தினுடைய மாணவன் - அரசியல் சட்டத்தினுடைய மரியாதையைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறவன்.

நான் கேட்கிறேன், நீதிபதிகளே நீங்கள் சொல்லுங்கள்!

இந்த ஒரு வார காலத்தில் அவசர சட்டம் வராதபோது, அவசரம் சட்டத்தைப்பற்றி நீதிமன்றம் பேசலாமா? சட் டப்படி பேசுவதற்கு உரிமை உண்டா? அது என்ன கச் சேரியா? நீதிமன்றமா? தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டாமா?

அதற்கு அடுத்தபடியாக இன்னொரு கட்டத்தில், நாங்கள் 85 சதவிகிதம் கொடுப்போம் என்று சொன்னார்கள்.
அப்படியானால், நீட் தேர்வு எழுதியவர்களுக்குப் பாதிப்பில்லை என்று வழக்குரைஞர் வாதாடுகிறார்.

உடனே இரண்டு பட்டியலைத் தருகிறார்கள் -
ஒன்று சி.பி.எஸ்.இ. பாடப் பிரிவில் படித்தவர்களுக்கு ஒரு பட்டியல்;
இன்னொன்று மாநிலப் பாடப் பிரிவில் படித்தவர்களுக்கு,
உடனே தயாரிக்கிறோம் - இடங்களை அதிகப்படுத்து கிறோம் என்று ஓடிவருகிறார்கள்.
அடுத்தபடியாக, அட்டர்னி ஜெனரல் - இந்த அவசர சட்டம் சரியாக இருக்கிறது என்று சொல்கிறார். இது என்ன நாளுக்கொரு கூத்து.

இவ்வளவு தொல்லைகள் - இவ்வளவு மோசடிகள் - இப்படி நடந்தால் இந்தப் பிள்ளைகள் தாங்குமா? இளம் பிஞ்சு உள்ளம் - எதிர்பார்த்த உள்ளம் தாங்குமா? என்று நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள்!

நீதிமன்றம் - அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய நீதிமன்றம் - எனவேதான், அவசர சட்டமும் வரவில்லை - ஒப்புக்கொண்டபடியும் வரவில்லை - பிறகு மாற்றி, மாற்றி சொன்னார்கள்.

தனியார் கல்லூரிகளின் கொள்ளையைத் தடுக்க  வருமான வரித்துறை இல்லையா?
இங்கே பல தனியார் கல்லூரிகள் இருக்கின்றன - அவர் கள் மருத்துவ இடங்களைக் கொடுப்பதில் கொள்ளையடிக் கிறார்கள் - அதனைத் தடுப்பதற்காகத்தான் இந்த நீட் தேர்வை கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களே, உங்களுக்குத் தனியார் கல்லூரிகளின் கொள்ளையைத் தடுக்க  வருமான வரித்துறை இல்லையா? அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை இல்லையா? அதற்காக எங்களுடைய பிள்ளைகள் பலியாகவேண்டுமா?

கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்ட அடிப்படையில்...

இன்னும் சிலர் உளறுகிறார்கள் - தமிழ்நாடு பாடத் திட்டம் மோசம் என்று சொல்கிறார்கள். நான் இங்கே சவால் விட்டுச் சொல்கிறேன் - யாராவது வாதிடத் தயாராக இருந் தால் - கலைஞர் அவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்ட அடிப்படையில், இன்னுங்கேட்டால், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களைவிட, மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கின்ற மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள்.

வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பேசி னால் போதுமா? அருள்கூர்ந்து நினைத்துப் பார்க்கவேண்டும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்
இந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது - அதனை யாரும் எதிர்க்கக்கூடாது என்ற சொல்கிறீர்களே - அதே உச்சநீதிமன்றம், அல்தாமஸ் கபீர் அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபொழுது, 2013 ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் அமர்வில்,
தேர்வு நடத்துவது மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் வேலையல்ல என்று சொல்லி, தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்ததா? இல்லையா?
பிறகு, மறு சீராய்வு என்கிற ஒரு சூழ்ச்சித் திட்டத்தை உருவாக்கினார்கள்.

அந்த மூன்று நீதிபதிகள் அமர்வில், இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புக்கு மாறாக தீர்ப்பு கொடுத்த மூன்றாவது நீதிபதி அனில் தவே என்ற குஜராத் பார்ப்பனர். அவரே அடுத்த அமர்வுக்குத் தலைமை வகிக்கிறார். தீர்ப்பு எப்படி இருக்கும்?

எப்படி குலக்கல்வித் திட்டத்தை விரட்டினோமோ அதேபோல,
நீட் தேர்வை விரட்டவேண்டும்

அடிப்படையில் பார்க்கும்பொழுது நண்பர்களே, இப்பொழுது நீதிமன்றங்களையும் எதிர்த்து வாதாடவேண்டிய கட்டம் இருக்கிறது. அதேபோல, மிகப்பெரிய அளவிற்கு எல்லோரும் ஒன்று திரண்டு, எப்படி குலக்கல்வித் திட்டத்தை விரட்டினோமோ அதேபோல, இந்த நீட் தேர்வையும் விரட்டவேண்டும்.

தமிழ்நாடு மட்டும் ஏன் கேட்கவேண்டும்? தமிழ்நாடு மட்டும் கேட்பது என்ன குற்றமா? அது அரசியலமைப்புச் சட்டத்தில் எங்களுக்கு இருக்கின்ற உரிமையல்லவா? தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய சமூகநீதி மாநிலம் என்பதால், நாங்கள்தான் வெளிச்சத்தைத் தேடுவோம். மண்டல் கமிசன் பரிந்துரைகள் எங்களால், எங்கள் போராட்டங்களால் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது என்கிற வரலாறு நீதிபதிகள் சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம் - ஆனால், சொல்லவேண்டியவர்களுக்குச் சொல்லவேண்டாமா?

நாம் பிச்சை கேட்கவில்லை -

சலுகை கேட்கவில்லை!

ஆகவே நண்பர்களே! இந்தக் கூட்டம் என்பது இருக்கிறதே, இது உங்களுக்கு அறிவுறுத்துவதற்காக - தெளிவாக - நாம் பிச்சை கேட்கவில்லை - சலுகை கேட்கவில்லை - நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்கிறோம்.

தமிழ்நாட்டில் எங்களுக்கு உள்ள உரிமை - எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கின்ற வாய்ப்பு - நம்முடைய கிராமத்துப் பிள்ளைகள், அடித்தளத்தில் இருக்கின்ற அனிதாக்கள் மேலே வரவேண்டாமா?

பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவீர்களா? கைது செய்து விடுவார்களா?
இங்கே அனைத்துக் கட்சி நண்பர்களும் இருக்கிறார்கள். இன்று மாலை திருத்துறைப்பூண்டியில் ஒரு திருமணத்தை நடத்திவிட்டு வந்தேன். அங்கே பல பேர் என்னிடம் கேட்டார்கள், இப்பொழுது நீங்கள் பொதுக்கூட்டத்திற்குப் போகிறீர்களே, அங்கே பேசுவீர்களா? அல்லது அதற்கு முன்பாகவே கைது செய்துவிடுவார்களா? என்று கேட்டார்கள்.
பேசினால் லாபம்; கைது செய்தால், அதிக லாபம் என்று சொன்னேன்.

ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரத் திட்டம்

இந்தப் போராட்டம் ஓயாது - இந்தப் போராட்டம் கடைசி மூச்சு இருக்கும்வரையில் நடத்தியாகவேண்டும். ஏனென்றால், நம்முடைய பிள்ளைகளுக்கு எதிர்காலமே கிடையாது. எப்படி நீதிக்கட்சி வருவதற்கு முன்னால், சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவப் படிப்பு என்று சொன்னார்களோ, அதேபோன்றுதான், சி.பி.எஸ்.இ. என்ற பாடத் திட்டத்தை - இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்கள் நிலை - ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆகவே, நண்பர்களே! மிகத் தெளிவாக ஒவ்வொருவரும் நீங்கள் பத்து பேருக்குச் சொல்லவேண்டும். எங்கே பார்த்தாலும் வீதிப் பிரச்சாரம் செய்யவேண்டும் - பொதுப் பிரச்சாரத்தை நீங்கள் செய்யவேண்டும்.

எல்லாவற்றிற்கும் ஒரே சுலபமான வழி என்னவென்றால், ஆட்சி மாற்றம்!

இது தொடக்கம் - இந்தத் தொடக்கம் வேகமாக தொடரும். நம்முடைய தளபதியின் தலைமையில் ஒரு மாற்றம் காணவேண்டும். இது எல்லாவற்றிற்கும் ஒரே சுலபமான வழி என்னவென்றால், ஆட்சி மாற்றம் - அதுதான் மிக முக்கியமானது. அந்த ஆட்சி மாற்றம் வந்தால், நிச்சயமாக இந்தத் துணிச்சல் மத்தியில் ஆளுவோருக்கு வராது.

அந்த வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் - எனவே, மீண்டும் ஏமாறாதீர்கள் தமிழர்களே! பேஸ்புக் இளைஞர்களே, டுவிட்டர் இளைஞர்களே, வாட்ஸ் அப் இளைஞர்களே, கொஞ்சம் பழைய வரலாற்றைப் பாருங்கள் - நம் எதிரில் இருக்கின்ற ஆபத்தை உணர்ந்து பாருங்கள்.
சவப்பெட்டி ஒரு அனிதாவுக்கு மட்டுமல்ல - எதிர்காலத்தில் நீட் தேர்வுக்கும்தான்!
எனவேதான், ஒரே குரலில் எதிர்ப்போம்! எதிர்ப்போம்!! வெல்லுவோம்!

சவப்பெட்டி ஒரு அனிதாவுக்கு மட்டுமல்ல - எதிர்காலத்தில் நீட் தேர்வுக்கும் என்கிற உணர்வோடு நாம் செயல்படுவோம்!

அந்தப் பணியினுடைய தொடக்கம்தான் இது என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வணக்கம்! நன்றி!!

வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

மஹா புஷ்கரம் எனும் மெகா புளுகு!


நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் துலாக்கடம் என்று சொல்லப்படுகிற காவிரிக்கரையில் அரசு ஏற் பாட்டில் 'மஹா புஷ்கர விழா' நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் கடந்த மூன்று மாதங்களாகவே வெகுஜோராக நடைபெற்று வருகின்றன.
வரும் செப்டம்பர் 12 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த விழாவில் தமிழக முதல மைச்சர் மற்றும் சங்கராச்சாரிகள் முதல் சவுண்டிகள் வரை கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரும், மந்திரிமார்களும் தொடர்ந்து பலமுறை புஷ்கர விழா ஏற்பாட்டுப் பணிகளை ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என தாராளமாய் பணம் செலவிடப்படுவதாகத் தெரிகிறது.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம், புதிய பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட தலைமை மருத்துவ மனை, சுற்றுவட்டப் பாதை என பல கோரிக்கைகள் பல்லாண்டுகளாய் கோரிக்கையற்று கிடக்கும் மயிலாடு துறையில் விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் என்பது போல் வரிந்து கட்டிகொண்டு ஆட்சியாளர்கள் புஷ்கர விழாவிற்கு வேலைசெய்வதை பார்க்கின்ற எவராலும் இத்தகைய செயலை விமர்சிக்காமல் இருக்க முடியாது.
இந்த விழா நடந்துவிட்டால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்கிற ரேஞ்சுக்கு "தினமலர், தினமணி, இந்து" போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகள் கட்டுரைகளை பிரசுரித்த வண்ணம் இருக்கின்றன.
மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியானவராம் பிரம்மன். அதில் கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, தர்மபத்ரா, சிந்து, பிராணஹிதா ஆகிய பன்னிரண்டு நதிகள் மட்டும் ஒவ்வொரு ராசியை சேர்ந்தவையாம். குருபகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்த ராசிக்குரிய நதிக்கரையில் இந்த புஷ்கர விழா நடத்தப்படுகிறதாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த விழா காவிரி துலாம் ராசியில் இருப்பதால் இப்போது காவிரிக்கு கொண்டாடப்படுகிறதாம்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது மஹா புஷ்கர விழா என்று அழைக்கப்படுகிறதாம். இந்த புஷ்கரம் நடக்கும் காலத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், மகரிஷிகள் எல்லோரும் வாசம் செய்வதால் இந்த நேரத்தில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தங் களில் ஸ்னானம் செய்த பலனும் புண்ணியமும் கிட்டுமாம். இக் காவிரியில் புனித நீராடிவிட்டால் நமது ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்கள் உடனே அகன்று விடும் என தர்மசாஸ்திரம் சொல்கிறதாம். இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்துகொண்டே செல்கிறது அந்த பார்ப்பன பத்திரிக்கைகள்.
நட்சத்திரங்களையும், துணைக்கோள்களையும் கிரகமாக கணக்கிட்டு நவக்கிரஹம் என்று சொல்லி அதன் அடிப்படையில் மனிதர்களுக்கு ராசிகளை உருவாக்கிய புரோகிதக் கூட்டம் நதிகளுக்கும் ராசி சொல்கிறது! சூரியனும், சந்திரனும் கிரகங்களா? நீங்கள் சொல்லும் நவகிரகங்களில் யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ போன்ற பிந்தைய கண்டுபிடிப்புகள் உங்கள் ஜாதகத்தில் உண்டா? என பகுத்தறிவாளர்கள் காலாகாலமாய் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை எவராலும் பதில் சொல்ல முடியவில்லையே!.
மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியானவராம் பிரம்மன். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல் லுங்கப்பா என்கிற வழக்குசொல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. மூன்றரை கோடி தீர்த்தங்களாமே? எவை எவை என பட்டியலிட முடியுமா? இக் காவிரியில் புனித நீராடிவிட்டால் நமது ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்கள் உடனே அகன்று விடும் என தர்மசாஸ்திரம் சொல்கிறதாமே? பின் காவல்துறையும், நீதிமன்றங்களும், சிறைச்சாலைகளும் எதற்கு? சங்கராச்சாரிகள் இதுவரை செய்த பாவங்கள் போதாதென்று இனி செய்யத்திட்ட மிட்டிருக்கும் பாவங்களையும் சேர்த்துப் போக்கத்தான் இங்கு வருகிறார்களோ?
கவேரன் என்கிற ராஜரிஷி புத்திரப்பேறு வேண்டி பிரம்மாவை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தானாம். இதைக்கண்ட பிரம்மன் காவிரியை பெண்ணாக்கிட அவளை அகஸ்தியரிஷி மணந்து தனது கமண்டலத்தில் வைத்துகொண்டானாம். கமண்டலத்திலிருந்த காவிரியை கணபதி காக்கை உருவில் வந்து உருட்டிவிட அது கவே ரன் ரிஷியின் மகளாக  பாய்ந்ததாம். இப்படி பல ரிஷி களின் தொடர்போடு உருவாகியதாம் காவிரி.
காவிரி வறண்டு பல காலம் ஆகிவிட்டது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தினம் ஒரு அவதாரம் எடுத்து டில்லி தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. புஷ்கர காலத்தில் வாசம் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் சிவன் வகைய றாக்களுக்கு இவை யெல்லாம் தெரியாதா? குறைந்தபட்சம் புஷ்கரவிழாவின் பொழு தாவது காவிரி கரைபுரளாதா? புண்ணியங்களைப் போக்குவது இருக் கட்டும். புனித நீராடுவதற்கான தண் ணீரைக் கூட கடவுள் அருள்பாலிக்க மாட்டாரா?  அப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கை கூட விழா ஏற்பாட்டாளர் களுக்கோ, பக்தகோடிகளுக்கோ வராமல் போனதால்தான் புஷ்கரவிழாவை யொட்டி மயிலாடு துறை காவிரிக்கரை துலாக்கடப் பகுதியில் நீர்த்தேக்க தொட்டிகளை கட்டி பம்பு செட்டுகளை வைத்து தண்ணீர் நிரப்பும் முயற்சி களில் ஈடுபட்டிருக் கிறார்களோ?
கன்மமகரிஷியை கருமை நிறம் கொண்ட மூன்று பெண்கள் சந்தித்தார்களாம். அவர்கள் தங்களை கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் என்று அறிமுகப்படுத்திகொண்டு, 'மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களை எங்களிடம் வந்து கரைத்துச் செல்வதால் கருமை அடைந்து விட்டோம்! இதற்கு ஒரு தீர்வு வேண்டும்!'என முறையிட்டனராம். "தென் மண்டலத்தில் மாயூரம் காவிரி துலாக்கடத்தில் புனித நீராடினால் நலம் பெறுவீர்கள்" என்று ஆசி கூறினாராம் கன்மமகரிஷி!. இந்த கதையை இந்து தமிழ்நாளேடு வெளியிட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இதை வெளியிட்டு மோடிக்கும் சொல்லி அனுப்பியிருந்தால் புனித கங்கை எனும் பெயரில் பல கோடிகளை பாழடித்துவரும் மோடி அரசு புஷ்கர விழாவில் கலந்துகொள்ள இருக்கும் சங்கராச்சாரிகளிடம் கங்கை, யமுனை, சரஸ்வதிகளை தங்களோடு கூட்டிச் செல்லுமாறு வேண்டுகோளாவது விடுத் திருக்கும். சங்கராச்சாரிகளும் சந்தோஷ மாக புனித நீராடியிருப்பார்கள்!

- கி.தளபதிராஜ்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அ.தி.மு.க. அரசு புத்திசாலித்தனமாக என்ன செய்ய வேண்டும்?

‘நீட்’ தேர்வு திணிப்பை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டன. பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி இருபால் மாணவர்களும் புயம் தூக்கிப் புயல் எனப் புறப்பட்டு விட்டனர்.

1928முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த இடஒதுக்கீட்டு ஆணை ‘சுதந்திர’ இந்தியாவில் காவு கொடுக்கப்பட்டது. தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரசில் இருந்தபோதே பகிரங்கமாகவே அறிவித்தாரே - ‘பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினைக்கு வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும்போதே முடிவு கட்டப்பட வேண்டும்; இல்லையேல் ‘சுதந்திர’ இந்தியாவில் ஜனநாயகம் (DEMOCRACY) இருக்காது - மாறாக பார்ப்பனர் ஆதிபத்தியம்தான் (BRAHMINOCRACY) இருக்கும்' என்றாரே! அந்தத் தொலைநோக்கு  பிறர்க்கு சிந்தனைக்கு அசல் எடுத்துக்காட்டுத்தான் - இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் முதல் பலியாக தமிழ்நாட்டில் நடப்பில் இருந்த இடஒதுக்கீடு பலி கொடுக்கப்பட்டதாகும்.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிய அந்தக்காலக்கட்டத்தில் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே எரிமலையாகச் சிலிர்த்து எழுந்தது.
மாணவர்கள் எல்லாம் கல்விக் கூடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடினர் - நாடே முற்றிலுமாக முடங்கிப் போனது.
தமிழ்நாட்டின் உணர்வினை அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி அவசர அவசரமாக இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டத் (15(4) திருத்தத்தைக் கொண்டு வந்தார். அப்பொழுது சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அதற்குப் பேராதரவாகவும், ஊன்றுகோலாகவும் இருந்தார்.
இன்றைக்கும் இதே நிலைதான் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் சொல்லி வைத்தாற்போல போராட்டங்கள் பல வடிவங்களிலும் கனன்று விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
ஆசிரியர் ஒருவர் சமூக நீதிக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பின், வெறுப்பின் அடையாளமாகத் தனது ஆசிரியர் பணியையே கால் கடுதாசியில் எழுதித் தூக்கி எறிந்து விட்டு வெளியேறியிருக்கிறார்.
உலகப் புகழ்ப் பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையையே புறக்கணித்து அறிவித்தும் விட்டது.
யாரும் யாரையும் தூண்டி தமிழ் மண்ணில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கவில்லை. தன்னெழுச்சியாக தாண்டவமாடுகிறது.
தமிழ்நாடு அரசுக்கு ‘நீட்’ ஒழிப்பில் உண்மையாகவே கவலையும், அக்கறையும் இருக்குமேயானால் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டின் இந்தக் கொதி நிலையை எடுத்துக்காட்டி ‘நீட்’ டிலிருந்து நிரந்தரமாகத் தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்வதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகவும் இருக்க முடியும்.
அதை விட்டு விட்டு,  போராட்டக் களத்தில் குதித்திருக்கும் மாணவர்களைக் கைது செய்து, குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் வாகனங்களில் தூக்கி எறிவது - சுவரொட்டி அச்சிடும் அச்சகங்களை  அச்சுறுத்துவது, கைது செய்வது என்பதெல்லாம் தேவையானதுதானா? நெருப்பை அணைப்பதாகக் கூறி, பெட்ரோலை ஊற்றுவது புத்திசாலித்தனம் தானா? இது எதிர்வினையை உண்டாக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
அண்ணாவின் பெயரை சுமந்து நிற்கும் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ் மண்ணுக்கே உரித்தான சமூக நீதிப்  பிரச்சினையில் - மண்ணின் மனப்பான்மைக்கு (ஷிளிமிலி றிஷிசீசிபிளிலிளிநிசீ) மாறாக போராட்டங்களை ஒடுக்க முயன்றால், பொதுமக்கள் மத்தியில், மேலும் மேலும்  மிகப்பெரிய  அளவில் அ.இ.அ.தி.மு.க. அரசின் மீது வெறுப்பு நெருப்பைத்தானே உமிழச்செய்யும்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் முக்கிய கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து, இந்தப் பிரச்சினையில் அடுத்தடுத்துப்  பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இன்று திருச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ‘நீட்’டை எதிர்த்துப் போர் முழக்கம் செய்கிறார்கள். இக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் அடுத்தக்கட்ட போராட்ட அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசு இந்த சூழலைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டு கரை ஏற வேண்டும்.

மத்திய பா.ஜ.க ஆட்சி என்ற அசல் பார்ப்பன மனுதர்ம ஆட்சி என்ன செய்யப் போகிறது? கழகம் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம் என்று உளறுபவர்கள் எல்லாம் ஊறுகாய் ஜாடியில் ஒளிய வேண்டிய நிலைதான் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொண்டால் சரி! 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

“மாநிலக்கல்வி திட்டத்திலேயே தேர்வு தேவை - தேவை!” “நீட்’ வேண்டவே வேண்டாம்!”



அகமதாபாத் செப். 8 ‘நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம், மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ்தான் தேர்வு வேண்டும் என்று கூறி பிஜேபி ஆளும் - குஜராத்தில் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர்.
அரியலூரில் அனிதா என்னும் ஏழை மாணவி மருத்துவம் படிக்க முழுத்தகுதி இருந்தும் நீட் தேர்வால் தனது கனவு சிதைந்து போனதை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு தமிழகம் எங்கும் மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தற்போது குஜராத்திலும் ஆரம்பித்துள்ளது.  நீட் தேர்வில் ஆங்கில வழிக்கும் குஜராத்தி வழிக்கும் தனித்தனி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.   இதில் ஆங்கில வழியில் கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமாகவும், குஜராத்தி வழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாகவும் இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்களால் சொல்லப் படுகிறது.
நுழைவுத் தேர்வு என்பது எந்த மொழி வழியில் படித்தாலும் ஒரே கேள்வியாக இருக்க வேண்டும் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.  அனிதாவைப் போன்றே பல மாணவர்கள் 12ஆம் வகுப்பில் 90% க்கு மேல் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு மதிப்பெண்கள் குறைந்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.
குஜராத்தின் அரோல்லி பகுதியைச்  சேர்ந்த 17 வயது மாணவர் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.  மருத்துவக் கல்லூரியில் சேரும் ஆசையுடன் இரவும் பகலும் படித்து 92% மதிப்பெண் 12ஆம் வகுப்பில் வாங்கிய அவரால் நீட் தேர்வில் 292/700 மதிப்பெண் தான் வாங்க முடிந்தது.
அவருடைய தகுதி (ரேங்க்) 3881 ஆனதால் அவர் மருத்துவக் கனவு நிராசை ஆனது.   அவருக்கு புஜ் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ரூ. 17 லட்சங்கள் கொடுத்தால் இடம் தர நிர்வாகம் தயாராக இருந்தது.  ஒரு ஏழை விவசாயியின் மகனால் அவ்வளவுப் பணம் புரட்ட முடியாததால் அந்த இடமும் பறி போனது.
குஜராத்தி வழியில் தனியாகவும், ஆங்கில வழியில் தனியாகவும் தகுதிப் பட்டியல் போடும்படி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.   அவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் ஒரே தர வரிசைப் பட்டியலை அரசு வெளியிட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
இவரைப் போல வேறு பல மாணவர்களும் உள்ளனர்.  கிராமப்புற மாணவர்களான அவர்கள் அகமதாபாத் நகருக்குச் சென்று நீட் தனிப்பயிற்சி நிறுவனங்களில் படிக்கப் போவதாக சொல்கிறார்கள்.  அதே நேரத்தில், நீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்த ஹனி படேல் என்னும் மாணவி, "குஜராத் அரசுப் பள்ளியில் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.  கிராமப் புற குஜராத்தி வழி மாணவர்களுக்கு தனிப் பயிற்சியகங்களில் படிக்கச் செலவு செய்ய வேண்டியுள்ளது.  தவிர தரமான தனிப் பயிற்சியகங்கள் என்பதும் இந்த மாநிலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.  தனி தரவரிசை பட்டியல் போடாமல்  அரசு எங்களை ஏமாற்றி விட்டது.  நான் இப்போது என் டாக்டர் கனவுக்காக ஹோமியோபதி கல்லூரியில் சேர்ந்துள்ளேன்" எனக் கூறினார்.
மேலும் பல மாணவர்களும், குஜராத்தி வழி தனி தேர்வுத்தாள் தந்ததற்குத் தங்கள் கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.   பலர் சரியான பயிற்சியகங்கள் இல்லாததால் ஒரு வருடம் காத்திருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்னும் எண்ணத்தில் உள்ளனர்.  அவர்களின் ஒட்டு மொத்த கருத்து, மருத்துவக் கல்லூரிக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும்.  நீட் தேர்வே வேண்டாம் என்பதே!.

குஜராத் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங், "இந்த அரசு நீட் தேர்வுக்கும், அரசு தேர்வுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதைக் களைய முயன்று வருகிறது.   குஜராத் மாநிலக் கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பாடப் புத்தகங்களை அரசே அளிக்கும்.   நீட் தேர்வுக்கு தயார் செய்யும் வகையிலேயே இனி அரசுத் தேர்வுகளும் அமையும்.   வரும் 2018 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் சி பி எஸ் சி பாடத் திட்டத்தில் கல்வி மாற்றப்படும்" என தெரிவித்துள்ளார். அதாவது "குல்லாய்க்காக தலையை வெட்ட வேண்டும்" என்கிறார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...