Showing posts with label மூளை. Show all posts
Showing posts with label மூளை. Show all posts

Thursday, March 3, 2016

மூளையைப் பாதுகாக்க தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் (2)




5. சதா தூங்கிக் கொண்டே இருக்கும் ‘தூங்கு மூஞ்சிகள்’ பலரை நாம் பார்த்துள்ளோம்; ஓய்வுதானே - விடுமுறைதானே என்று சமாதானம் கூறி, படுக்கையையே இருப்பாகக் கொண்டு தூங்கிடும் நபர்களும் இந்த மூளை பாதிப்புக்கு ஆளாகக் கூடும்!
பலர் ஓய்வு - “இளைப்பாறுதல்” (Relaxation) என்பதை சதா தூங்குவது என்று தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
‘நல்ல பொழுதையெல்லாம் நாளும் தூங்கிக் கழித்த சோம்பேறிகளைப்’ பற்றிதான் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாண சுந்தரம் பாடி எச்சரித்தாரே அது நினைவிற்கு வருகிறதா?
6. சாப்பிடும்போது, தொலைக் காட்சியில் படம் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, கணினியில்  வேலை செய்து கொண்டே சாப்பிடுவது என்பது மிகப் பெரிய கேடு. இது கட்டாயம் தவிர்க்கப்பட்டாக வேண்டும்!
உணவை நாம் உட்கொள்வது அடிப்படை உடல் நலப் பாதுகாப்பு - இன்றியாமையாக் கடமை. மற்ற வேலைகளை உணவினை முடித்து விட்டு செய்தால் என்ன குடியா மூழ்கிப் போகும்! எனவே இந்தத் தவறை செய்வதை நாம் அனைவருமே தவிர்த்தல் அவசியம்! அவசியம்!!
7. தூங்கும்போது தலைக்குல்லாயுடன் தூங்குவது, காலில் (உறை) சாக்ஸ் Socks) அணிந்து கொண்டே தூங்குவதும் மூளையின் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இயங்கும் சக்தியையும் பாதிக்கும் என்பது மற்றொரு முக்கிய எச்சரிக்கையாகும்.
8. எட்டாவது எச்சரிக்கை - கவனத்தில் கொள்ள வேண்டியது. (மூளையின் ரத்த ஒட்ட பாதிப்பைத் தடுக்க)
பல்வேறு காரணங்களால் நாம் உடல் நலக் குறைவுடன் உள்ளபோது, (படுக்கையில் இருந்து கொண்டே) மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் பணிகளில் ஈடுபடுதல் கூடாது. இழுக்க முடியாத சுமையை என்ஜினுக்கு அளிப்பதுபோல.
9.  அதிகம் - சதா பேசிக்  கொண்டே இருப்பது , சிலர்  சளசளவென்று சதா - Non Stop  எஞ்ஜின் மாதிரி பேசிக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களைப் பேசவிடாமலும், மற்றவர்கள் நாம் பேசுவதை விரும்புகிறார்களா? கேட்கிறார்களா? கவனிக்கிறார்களா? முகச் சுளிப்பை மிக நாசூக்காக வெளிப்படுத்துகின்றனரா? என்பது பற்றியெல்லாம்கூட சிறிதும் கவலைப்படாமல் பொத்தானை அழுத்திய டேப்ரிக்கார்டரைப்போல் பேசிக் கொண்டே இருப்பது மூளைக்குக் கேடு செய்வதாகும்! (அதற்காக எல்லோரும் மவுன சாமியாராக மாறி விட வேண்டும் என்பது பொருளல்ல - அளவுக்கு அதிகமாகப் பேசுவோர் தேவைக்கு அதிகமாகப் பேசும் ‘தொணதொணப்பை’ நிறுத்துவது நல்லது. சிலர் தொலைபேசியையே இப்படிப்பட்ட பேச்சுகள் மூலம் ‘தொல்லைப் பேசியாகவும்’  ஆக்கி விடுகிறார்கள். அது தவிர்க்கப்படல் நன்று.
10. ‘சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும்போது, அதனை தவிர்த்தலோ, தள்ளிப் போடுதலோ கூடாது’
சில நேரங்களில், சில சூழ்நிலைகளில் இது பலருக்கும் ஏற்படும் அனுபவம் தான் மறுப்பதிற்கில்லை. அதிலும் வயதானவர்கள் சர்க்கரை நோயாளிகள் மூத்திரத்தை அடக்கக் கூடாது; அது விரும்பத்தக்கதல்ல. பலரால் அடக்க முடியாது அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்படுவது உண்டு. இது சிறுநீரகத்தில் கற்களை (Stones) உருவாக்கக்கூடும், இதற்குக் காரணம் இப்படி மூத்திரத்தை அடக்குவது என்றுதான் பலரும் - மருத்துவர்கள்கூட - கூறக் கேட்டதுண்டு.
ஆனால், இப்போது மூளைப் பாதுகாப்பு சம்பந்தமாக வந்துள்ள எச்சரிக்கைகளில், இப்படி அடக்கி வைப்பது, தள்ளிப் போடுவது மற்ற உறுப்புகளைவிட மூளையை  - அதன் சக்தியளித்தலை - அதன் பணிகளை வெகுவாகப் பாதிக்கும் என்றும் பத்தாவது கட்டளையாகக் கூறப்பட்டுள்ளது!
சாதாரண நமது வெகு மக்கள் எளிய பழமொழியைக் கூறுவார்களே, “ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்கக் கூடாது’ என்று அது எவ்வளவு நூற்றுக்கு நூறு பெரிய மருத்துவ உண்மை அடங்கியுள்ள அனுபவக் கருத்து பார்த்தீர்களா?
எனவே, நாம் அனைவரும் கவனத்துடன் இந்த 10 தவறுகளையும் தவிர்த்து நல்வாழ்வு வாழ முயலுவோமாக!
- கி.வீரமணி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, March 2, 2016

மூளையை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் (1)


நமது மூளையின் சக்தியும், உழைப்பும் மிக மிக முக்கியமானதல்லவா?
மூளையின் இரத்த ஓட்டம் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகள், நோய்கள்கூட நம்மை எளிதில் அண்டாது விரட்டி விடலாம்!
அது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் வண்ணம் பார்த்துக் கொள்வது, நமது உடல் நலத்திற்கு மிகவும் உதவிடும் அரண் ஆகும்!
எந்த ஆபத்து நம் உடலின் எப்பகுதிக்கு வருவதாக இருப்பினும் முதலில் அபாய மணி ஒலியை அடித்து நம்மை எச்சரிக்கை செய்வது அதுதானே!
அது மட்டுமா பாலியல் உணர்வுக்கும் அங்கிருந்துதான் ஆணையும், ஆயத் தமும் பிறக்கிறது என்பதை பல பாலியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையைச் சரிவர இயங்க விடா மல் பாதிக்கச் செய்யக் கூடிய - நாம் கவனமாக, தவிர்க்க வேண்டிய 10 செய்திகளை, இணையத்தின் வழி, நமது அருமை மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் அனுப்பியுள்ளார்.
(இதுபோன்ற பல்வேறு பயனுள்ள சுவையுள்ள செய்திகளை நம்மைப் போன்ற நண்பர்கள் வட்டத்திற்கு தவறாது அனுப்பி மகிழ்பவர் அவர்!)
அந்த 10 செய்திகள் இதோ: படிப்ப தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். நடை முறைப்படுத்தி, நலம் காப்பதில் தனி கவனம் செலுத்துங்கள் நண்பர்களே.
1. முதலாவது தவறு
காலைச் சிற்றுண்டியைப் புறக்கணிப்பது அல்லது தவிர்ப்பது.
நமது வீட்டிலுள்ள பல வயது வந்த மாணவர்கள் - பிள்ளைகள்கூட இதில் - தவிர்ப் பதில் குறியாய் இருக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி செல்ல நேரமாகி விட்டது என்று அவசர அவசரமாக “அரக்கப் பறக்க” ஓடுவதினால், காலைச் சிற்றுண்டியை அலட்சியப்படுத்தி, பட்டினியோடு வகுப்பிற்கு அல்லது வேலைக்குச் செல்லுவது, மூளையை கெடச் செய்யும், (ரத்த  ஓட்டத்தைக் குறைத்து சோர்வைப் பெருக்கச் செய்யும் - அதனால் கவனக் குறைவும், குறிப்பாக கவனக் குவிப்பைச் (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtமீ) செய்ய இயலாமல் போய் விடும்.
ஆங்கிலத்தில் ‘ஙிக்ஷீமீணீளீ திணீst’ என்பது சரியான காரணப் பெயர் ஆகும். இரவு உணவு முடித்து பட்டினியாக இருந்தால், வயிற்றின் செரிமான உறுப்புக்கள் உணவுக்காக ஏங்கும் நிலையும் திரவம் சுரக்கும் தன்மையும் வயிற்றின் பல பாகங்களில் நாளா வட்டத்தில் புண்கள் - ‘அல்சர்’கள் ஏற்படவும், சோர்வு ஏற்படவும் வழி வரும்.
மேலை நாட்டவர் கணக்குப்படி, காலைச் சிற்றுண்டி போதிய அளவில் எடுத்துக் கொள்வது பல வகையிலும் சக்தியைக் கொடுக்கக் கூடியதாகும்.
2. அதற்காக உணவை எப்போதும் அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் கூடாது கூடவே கூடாது!
எவ்வளவு பெரிய விருந்து, சுவையுள்ள உணவு வகைகள் என்றாலும்  ஒரு 25 விழுக்காடு - இல்லை 10 முதல் 15 விழுக் காடு இடத்தையாவது காலி வைத்து சாப்பாட்டை முடிப்பது மிக நல்ல வாழ் வுக்கு உதவக் கூடியதாகும்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு இருக்கும்போதே, கட்டாயமாக திணிக்காமல் உடனே - சபலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு - எழுந்துவிடுதல் மிக அருமையான முறையாகும்!
‘மீதூண் விரும்பேல்’ என்ற மூதுரைதான் எவ்வளவு அருமையான ஒன்று. அதிகம் சாப்பிடுவது உடலை மட்டும் கெடுக்காமல், மூளையையும் கெடுக்கும் என்பது இதன் மூலம் பெறப் படும் மற்றொரு எச்சரிக்கையாகும்.
3. இரவில் நேரங் கடந்து தூங்குவது மிகப் பெரிய கேடு ஆகும்!
உடலுக்கு உணவு எவ்வளவு முக்கி யமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும் ஆகும்! உரிய நேரத்தில் தூங்கும் பழக்கம், உரிய நேரத்தில் விழிக்கும் பழக்கம், நம் ஆயுளை வளர்க்கும் வழி முறைகளில் ஒன்று!
உணவு, தூக்கம், போதிய ஓய்வு, (தூக்கம் என்பதன் மூலம் ஓய்வு கிடைக்கிறது). வெகு நேரங் கழித்து படுக்கைக்குச் செல்லுவது விரும்பத்தக்கதல்ல. இளமையில் இது ஒரு பழக்கமாகி விட்டால், முதுமையில் அதுவே வழக்கமாகி விடக் கூடும். எனவே இதிலும் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம்.
4. நம் உடலுக்கு சர்க்கரை தேவைதான். எதுவும் அளவோடு இருத்தல் எல்லா விதிகளிலும் தலையாய விதியாகும்.
பலருக்கு ‘மீதூண் விரும்பல்’ காரண மாகவும், இனிப்புத் தின்பண்டங்கள், நொறுக்குத் தீனியை கண்ட கண்ட நேரத்தில் எல்லாம் சாப்பிடுவது, போன்ற பலவும் - எல்லா மாவுச் சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்ஸ் (Carbohydrates)
சர்க்கரையாக மாறி நமது உடலில் சேரு கின்றன. ஆகவே இதில் எச்சரிக்கை தேவை.
நிறைய சர்க்கரையை உருவாக்கிடும் உணவுகள் எவையாயினும் (இனிப்பு மட்டுமே என்று எண்ணாதீர்!) அது நமது கணையத்தை மட்டும் பாதிப்பதில்லை; மூளையின் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது எச்சரிக்கை, என்று இதன் மூலம் மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
- கி.வீரமணி
(தொடரும்)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...