Saturday, December 2, 2017

சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்!

நம் வாழ்வில் அவதூறுகள் நம் எதிரிகளால் எளிதில் பரப்பப்படுவது இயல்பு.

அதுவும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது, ஆதாரமற்ற செய்திகளை அள்ளி விடுதல் - இவைகளை வாடிக்கையாகவே கொண்டு வயிறு நிரப்பும் வம்பர்களுக்கு நமது நாட்டில் குறைவே இல்லை.

அதுவும் பெண்கள்பற்றியோ, சொல்லவேண்டி யதே இல்லை!

பயமுறுத்தி காசு பறிக்கும் கயமைக்கு இது ஒரு வழிமுறைபோல் சிலருக்குப் பயன்படும்.

எதையும் எதிர்கொண்டு பழக்கமில்லாதவர்கள், இல்லாத ‘பேய்’க்கு எப்படி மனிதர்களில் சிலர் அஞ்சி அஞ்சி நடுங்குகிறார்களோ, அதுபோலவே இந்த அவதூறு சேறு கண்டும் மிகவும் பலர் அஞ்சுவர்.

பொதுவாழ்க்கை என்ற முள்படுக்கைமீது உள்ள வர்கள் பதில் கூறவேண்டிய - அதாவது - பொருட் படுத்தவேண்டிய அவதூறுகளுக்குத் தக்க பதில் கூறவேண்டும்; இல்லாத பொல்லாப்பு, பொய் மூட்டைகளைப் புறந்தள்ளியே வாழப் பழகிட வேண்டும்.

சிலர் இதன்மூலம் ‘பிரபலம்‘ ஆவதற்கே இந்த அவதூறு பரப்புதலை ஒரு அன்றாடத் தொழி லாகவே செய்வதுண்டு.

எனது  பொதுவாழ்வில் இரண்டு அவதூறு வழக் குகளை நானே போட்டு, இரண்டிலும் உண்மையை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று மகிழ்ந்தேன். மற்ற நண்பர்களையும், கழகக் கொள்கைக் குடும் பத்தவரையும் மகிழச் செய்தேன். மனநிறைவடைந் தேன். இளையவர்கள் தகவலுக்காக இது.

அ.தி.மு.க.வின் நாளேடாக நண்பர் ஜேப்பியார் நடத்திய ஒரு ஏடு, நண்பர் கே.ஏ.கிருஷ்ணசாமி நடத்திய ஏடுகளில், ‘நான்’ கலைஞரை அரசியல் ரீதியாக ஆதரித்ததினால், எரிச்சலுற்று, என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று, ‘சுத்தப்படுத்தாத கூவத்தில்’ தங்கள் பேனாக்களை நனைத்து எழுதி னார்கள். நான் பொருட்படுத்தவில்லை, அலட்சியப் படுத்தினேன்!

பிறகு, ‘மக்கள் குரல்’ நாளேட்டில் டி.ஆர்.ராமசாமி அய்யங்கார் (T.R.R.)    வேறு புனைபெயரில் இதே குற்றச்சாட்டை எழுதினார். பிரபல்யப்படுத்தி னார் - ‘கூவம் காண்ட்ராக்ட் புகழ்’ என்று பெயர் போட்டே எழுதியதை எதிர்த்து நான் ‘மக்கள் குரல்’ நாளேட்டின்மீது அவதூறு வழக்குப் போட்டு (Defamation I.P.C. கீழ்) சென்னை நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

தன்னிடம் உள்ள நாளேடான ‘மக்கள் குரலில்’ கொட்டை எழுத்துகளில், குறுக்கு விசாரணையில், என்னிடம் அவர்களது வழக்குரைஞர்கள் கேட்ட அதீத கேள்விகளை பெரிதாகவும், நான் கூறிய பதில்களை சிறிதாகவும் வெளியிட்டு மக்களைக் குழப்பிட தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.

அந்த டி.ஆர்.ஆர்., முதலமைச்சராக அன்று இருந்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கம். ஈ.வெ.கி. சம்பத் அவர்களது மகன் பொறியாளர் கவுதமன் திருமணம் பெரியார் திடலில், அவரது தலைமையில், திருமதி சுலோச்சனா சம்பத் அவர்கள் நடத்தினார். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தார். பெரியார் திடலுக்கு முதன்முதலாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வருவதால், வரவேற்பது நமது கடமை என்பதால், நான் வரவேற்றேன்.

மேடையில் என்னை அழைத்து அமர்த்தி, அவர் என்னிடம், ‘‘நீங்கள் திராவிட இயக்கத்திற்கே பொதுச்செயலாளர்; எங்களுக்கு வழிகாட்டிடும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள்மீது இப்படி அவதூறு புகார் கூறியுள்ளதைப்பற்றி நீங்கள் வழக்குப் போட்டுள்ளதால் பரவுகிறதே’’ என்றார்.  ‘‘நீங்கள் ஏன் அவதூறு வழக்குப் போட்டீர்கள்’’ என்று அவர் கேட்ட தொனி, ‘‘வழக்கை வாபஸ் வாங்குங்கள்’’ என்று சொல்லாமற் சொன்னதாகும்!

காதோடு காதாக மேடையில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் - மற்ற அனைவரும் கவனிக்கின்றனர்.

நான் அவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் முதல மைச்சர்; பொதுப் பணித்துறையின் கோப்புகளை வாங்கி, கூவம் சுத்தப்படுத்துவதுபற்றிய கோப்பில் -  நீங்களே உங்கள் செயலாளர்களை விட்டு ஆராய்ந்து பாருங்கள்; அப்படி என் பெயராலோ, என் தம்பி பெயராலோ ஏதாவது உள்ளதா என்று? எனக்குத் தம்பியே கிடையாது’’ என்றேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிரித்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியதும் அக்கோப்புகளை வரவழைத்துப் பார்த்து ஆய்வும் செய்துள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது!

வழக்கு பல வாய்தாக்கள் நடந்தது! எனக்குப் பல வங்கிகளில் கணக்கு இருக்கிறது; அவற்றை எல்லாம் ஆராயவேண்டும் என்று ‘மக்கள் குரல்’ சார்பில் எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நான் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து, பட்டியல் தந்தேன். பிறகு ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 20 ரூபாய்தான் இருப்பு இருந்தன. அதனைப் பார்த்த நீதிபதி, ‘‘அதென்ன இப்படி’’ என்று அதிர்ச்சி அடைந்து கேட்டபோது,

‘‘பெரியார் சிலைகளை ஆங்காங்கு நிறுவிட, D.D. -க்களை (டிராப்ட்) என் பெயருக்கு கழகப் பொறுப்பாளர்கள் அனுப்புவதை டிராப்ட் களானபடியால், பற்பல வங்கிகளில் என் பெயரில் S/B
சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறந்து போடப் பட்ட D.D. தொகையை எடுத்து அவர்களுக்குக் கொடுத்ததுபோக, குறைந்தபட்ச தொகைகளே இருப்புகள்’’ என்றேன்.

இதைக் கேட்டு நீதிபதி எதிர்மனுதாரர்களைப் பார்த்துச் சிரித்தார்! எதிரணி வக்கீலுக்கும் அதிர்ச்சி! வெட்கம்! தனியே என்னிடம் தனது வருத்தத்தை அப்போதே சொன்னார்.

கூவம் சம்பந்தமாக எந்த ஆதாரத்தையும் துளிகூட காட்ட முடியவில்லை; வழக்கு வழக்கம் போல 2 ஆண்டுகள் நடந்து முடிந்து, ‘மக்கள் குரல்’ ஆசிரியர் சண்முகவேல் அவர்களுக்கு சென்னைப் பெருநகர நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு தண்டனை அளித்தது! பத்திரிகையாளர் தண்டிக்கப் பட்டது அதுவே இங்கே முதல் முறை. அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், எழுதியவர் வேறு ஒருவர் - தண்டனை வாங்கி உள்ளே போனவர் வேறு ஒருவர். அதுவும் தமிழர்! எனவே, மேல்முறையீட்டில்கூட உயர்நீதிமன்றத்தில் மிகவும் வற்புறுத்திடவில்லை.

அதன் பிறகு என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று எழுதுவதையே பல ஏடுகளும், மேடைகளில் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வந்தவர்களும் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டனர்!

அவதூறுகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். பிரபல ‘இந்து’ ஆங்கில நாளேட்டின்மீது திராவிடர் கழகம் சார்பில் 1971 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை பொதுச்செயலாளர் என்ற முறையில் நானே நேரில் சென்று  (Party in person) வாதாடி வென்றோம்.

நாளை அதுபற்றி அறிந்துகொள்வீர்!

தமிழர் தலைவர் வாழியவே!

திராவிடர் கழகத் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் டிசம்பர் 2.

இந்த 85 ஆண்டில், இவர்தம் பொதுவாழ்வின் அகவை 75. இந்த விகிதாசாரம் இவரேயன்றி, தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் வாய்த்திராத ஒன்றே - தனித்தன்மையே!

பத்து வயதில் தந்தை பெரியாரைப் பார்த்த அந்தத் தருணம் முதல் அவர் வைத்த கண் - வரித்த கொள்கையில் எவ்விதப் பிசிறுக்கும் இடமேயில்லை - மேலும் மேலும் உறுதிப்பாடும், உத்வேகமும், உற்சாகமும் மேலிட்டே வந்திருக்கிறது.

வெறும் பேச்சாளராக, எழுத்தாளராக, நிர்வாகியாக மட்டும் அமைந்திடாமல், சிறுவயதில் அவர் மேற்கொண்ட களப்பணி இயக்கம் மற்றும் பொது வாழ்வில் உரமேற கால்கோலாக அமைந்தது என்றே கூறவேண்டும்.

அவருக்கு அமைந்த சூழல் மிகமிக அருமையானது. பள்ளிப் பருவத்தில் ஊன்றப்படும் விதை என்பது விருட்சமாக ஓங்கி வளரக்கூடியது என்பதற்கு அவரே உதாரணம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அதனை மிக அழகாக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

‘‘இளமை வளமையை விரும்பும் என்பர்

இளமை எளிமையை விரும்பிய புதுமையை

வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!

பாடிக் கைவீசிப் பலருடன் உலவி

வேடிக்கை பேசும் வாடிக்கைதன்னை அவன் பாற்

காண்கிலேன் அன்றும் இன்றும்

உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்

நற்றவம் என்பர்; தொண்டென நவில்வர்!

தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்

கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!’’

- எத்தகைய சரியான படப்பிடிப்பு இது!

திராவிட மாணவர் கழகத்தில் ஏராளமானவர்கள் இருந்த னர் - பல்கலைக் கழகங்களில் பயிலவும் செய்தனர். அந்தப் பட்டியலில் இவருக்கு உள்ள தனிச் சிறப்பு கல்வியில் பட்டொளிவீசிப் பறந்ததாகும். இதில் இவருக்கு நிகர் இவரே!

பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக தங்கப் பதக்கத் துக்குரிய தங்கமாக ஒளிவீசினார் - மாணவராக இருந்தபோதே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் சென்ற வர். விடுமுறை நாள்களில் கடலூர் வீரமணியாகப் பட்டிதொட் டியெல்லாம் சுழன்று பிரச்சாரப் பேரிகை கொட்டியவர்.

தந்தை பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை பெற்றதிலும் முதல்வராக இருந்தவரும் இவரே! இதனைத் தந்தை பெரியார் அவர்கள் எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ததன்மூலம் நன்கு அறிய முடியும்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை நடத்திய பாங்கு, இயக்க அமைப்பு முறைகளில் கொண்டு வந்த மாற்றங்கள், பிரச்சார யுக்திகள், ஏடுகளை, இதழ்களை எழிலார்ந்த முறையில் நவீனத்துவத்துடன் மேம்படுத்திய நேர்த்தி, இயக்க நூல்களை எண்ணற்ற முறையில் வெளியிட்டு கடைகோடி மனிதனுக்கும் கழகக் கருத்துகள் போய்ச் சேருவதற்கான வழிமுறைகள் - வெளிநாடுகளிலும் இணைய தளத்தின்மூலம் முதன்முதலாகக் கொண்டு சென்ற சாதனை, பன்னாடுகளிலும் தந்தை பெரியாரைக் கொண்டு சென்ற வெற்றி என்பதெல்லாம் எமது ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களையே சாரும்.

இடை இடையே அரசுகளின் இடையூறுகள், இயக்கத்தில் சிறுசிறு பிளவுகள், தூற்றல் படலங்கள், தமிழக அரசியலில் தலைதூக்கும் விபீடணர்களின் திசை திருப்பும் பிரச்சாரங்கள், பார்ப்பனர்களின் ஊடக விஷமங்கள், இருட்டடிப்புகள் இன்னோரன்ன இடையூறுகள், தடைகளையெல்லாம் தாண்டி இயக்கத்தை மட்டுமல்ல - இனத்தின் உரிமை மீட்பில் தளகர்த் தராக இருந்து வெற்றி அறுவடைகளைக் குவித்தது சாதாரண மானதல்ல.

சமூகநீதி என்னும் தாயின் செல்வமான திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியிலே இருந்தபோதே இட ஒதுக்கீட் டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து குழப்பத் தைத் திணிக்கவில்லையா? வேறு யார்? எம்.ஜி.ஆர்.தான்.

அதனைப் புறம்கண்டு, தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத எம்.ஜி.ஆருக்கே தண்ணீர் காட்டினாரே தமிழர் தலைவர்.

69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வில்லங்கம் வந்தபோது, பார்ப்பன முதலமைச்சரையே பயன்படுத்தி, அதனைக் கட்டிக்காக்க தனி சட்டத்தையே எழுதிக் கொடுத்து நிறைவேற்ற செய்தது சாதாரணமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் தந்தை பெரியாரால் வந்தது என்றால், 76 ஆம் சட்டத் திருத்தம் வந்தது தந்தை பெரியாரின் மாணாக்கர் ஆசிரியர் வீரமணி அவர்களால் அன்றோ!

மத்திய அரசில் இல்லாதிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக் கான இட ஒதுக்கீட்டை மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்த வைத்ததன்மூலம் சாதித்துக் காட்டினாரே!

அதன் பலன் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற் றில் பாலை வார்த்தாரே!

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் களத்தில் அனேகமாக வெற்றியின் முனையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவை அரற்றும் இந்துத்துவா மதவாத அரசியலுக்கு - அதிகாரத்துக்கு முடிவு கட்டுவதிலும், அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் தளபதியாக, தலைவராக இன்றைய தினம் விளங்கிக் கொண்டிருப்பவர் மானமிகு வீரமணி அவர்களே!

85 வயதை எட்டும் ஆசிரியர் எண்ணற்ற ஆண்டுகள் மேலும் வாழ்ந்து தந்தை பெரியார் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி முகட்டில் பறந்திடப் பாடுபடுவாராக! அப்பணிக்கு அர்ப்பணிப்போடு துணை நிற்போமாக!

வாழ்க பெரியார்! வெல்க அவர்தம் சித்தாந்தம்!

தமிழர் தலைவரின் பிறந்த நாள் அறிக்கை

மதவெறி ஒழிந்த மனிதநேய உலகுபடைப்போம்!

பதவிகளுக்கு முடிவு உண்டு - தொண்டோ தொடர் பயணம்!



எனக்கு 2.12.2017 இல் 85 ஆம் ஆண்டு பிறக்கிறது.

இதைவிட எனக்கு மகிழ்ச்சி அளிப்பது - அந்த 85 ஆண்டில்  புதைந்திருப்பது 75 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கை.

அதுவும் எப்படிப்பட்ட பொதுவாழ்க்கை?

எமது அறிவு ஆசான் தந்தை பெரியார் கூறினார்:

‘‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதைத் தவிர வேறு பற்று எனக்கு ஒன்றும் இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்!’’ (6.9.1972 இல் தந்தை பெரியார் எழுதியது)

சமுதாயத் தொண்டு என்ற ஒரு பற்றைத் தவிர, ‘வேறு பற்றற்ற அவரைப்பற்றிக் கொள்ள’ எனக்குப் பயிற்சி தந்த  எனது ஆசிரியர் மானமிகு ஆ.திராவிடமணி அவர்களை என்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

பெற்ற பல்கலைக் கழகப் பட்ட அறிவைவிட, சுய சிந்தனையாளரான நம் அறிவு ஆசானின் பகுத்தறிவுப் பாடங்களும், வழிகாட்டிய நெறியும், அந்நெறி ஊட்டிய ஒளியும் எம்மை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசா உண்மைத் தொண்டனாக ஆக்கி, பெரியாரின் பெரும்பணியின் ஒரு பகுதியை ஆற்றிட எனக்கு வாய்ப்பளித்தது - யான் பெற்ற பேறு; ஈடு இணையற்ற இன்பம்!

பெரியார் என்ற பேராசானை வாசித்த கட்டம் மாறி, சுவாசித்த கட்டம் வந்ததாலும், அவரும் அவர் நம்பிக்கை வைத்து தொலைநோக்கோடு செய்த ஏற்பாட்டினாலும், தொடர்ந்த தொண்டு மேலும் தொடர உழைத்த எம் அன்னையும் - இருவரும் எம்மீது சுமத்திய பொறுப்பில் பளிச்சென்று தெரிந்த நம்பிக்கைச் சுடரும், இருட்டில் தடுமாறாது கடமையாற்றிட எம்மை வழிநடத்தியது அய்யா - அம்மாவுக்குப் பிறகு,

இலக்கை மட்டுமே குறி வைத்த பார்வை; பதவியோ, பெருமையோ வராதா என்ற சபலம் ஏற்படாது காத்து அரண் செய்த கரணியாக அமைந்தது!

தனி வாழ்வில் இடறிவிழ வாய்ப்பே இன்றி, இயக்கப் பொறுப்பு எம்மை என்றும் ஈரோட்டுப் பாதையிலேயே பயணிக்க வைத்தது.

மானம் பாராத பணி

நன்றி பாராத பணி,

புகழ்வேட்டை ஆடாத பணி

தன்முனைப்பில்லா தனித்தன்மைப் பணி

தன்னடக்க தகைமைப் பணி

என்ற இலக்கணம் வகுத்து எம்மை நடத்தியது - வழி நடத்துகிறது!

‘பெரியார் தந்த புத்தி’ என்ற பெருவழிகாட்டி, இதைவிட எமது தொடர் பணிக்குத் தூண்டுதல் வேறு என்ன தேவை?

இந்த அளவுக்கு ஒரு முக்கால் நூற்றாண்டு பொதுவாழ்க்கைதான் எல்லையற்ற மன நிறைவையும், மகிழ்வையும் தந்துகொண்டே இருக்கிறது!

நம் இன எதிரிகளின் எதிர்ப்புகள் ஒருபுறம் உரமேற்றுகிறது. இயக்கத் தோழர்களின் அணைப்புகள் மறுபுறம் உற்சாகமூட்டுகின்றன.

‘ரத்தம், தண்ணீரைவிடக் கெட்டியானது; ஆனால், கொள்கைக் குடும்ப உறவும், உணர்வும், ரத்த பாசத்தைவிடக் கெட்டியானது! குன்றாதது!!

இது என்னைப் பொறுத்தவரை கூடுதல் (போனஸ்) வாழ்க்கை; மருத்துவ அறுவை சிகிச்சைகள், பலமுறை கொலை முயற்சிகள் எல்லாம் தாண்டிய நிலையில், பெரியார்தம் பெரும் பணி முடிக்கும் சமூகப் போர்க்களத்தில் முறுக்கோடு நிற்கும் துணிவை அளித்துள்ளது.

இப்படி, சலிப்பின்றி உழைக்க, பலரது சரியான ஒத்துழைப்பே முக்கிய காரணம். அவர்கள் அனைவரும் எமது வற்றாத நன்றிக்குரியவர்கள்.

1. எனது வாழ்விணையர் திருமதி. மோகனா

2. எனது இயக்கக் குடும்பத்தவரான கருஞ்சட்டைகளின் பாசப் பொழிவுகள், கருஞ்சட்டை அணியாத கண்ணுக்குத் தெரியாத பற்றாளர்கள் அன்புப் பிணைப்புகள்

3. என் வாழ்நாளை நீட்டும் மருத்துவ மாமணிகள்

4. எனக்குத் துளியும் கவலையையோ, அவப்பெயரையோ ஏற்படுத்திடாத எனது குருதிக் குடும்ப உறவுகள்

5. பயணத்தில் என்னைப் பாதுகாக்கும் காரோட்டிகள் உள்பட பற்பலத் தோழர்கள்

6. குறிப்பறிந்து என்னுடன் பணியில் பங்கேற்று, எனது ‘வேகத் தாக்குதல்களையும்‘ சமாளிக்கும் தோழர்கள்.

7. தேவைப்படும்போதும், நாடும்போதும் மதியுரை அளிக்கும் நல்லெண்ண நண்பர்களாம் மூத்தோர்.

- இப்படிப் பலரது கூட்டு - என் பணிகளை எளிதாக்கி, ஊக்கமூட்டும் மாமருந்துகளாகும்!

‘இளமையில் கல்’ என்பது என்னைப் பொறுத்தவரை, ‘ஈரோட்டில் கல்’ என்றாகியதால், எவ்வித கேடோ, குறையோ இன்றி, எளிதில்  முடியாத பணியை ஏற்றமுடன் என்றும் புத்துணர்ச்சியுடன் செய்வதில்தான் புத்தாக்கம் பெறுகிறேன்.

இவ்வாண்டும் பெரும் பணி முடிக்கவேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம் தலைமீது சுமத்தப்பட்டுள்ளது.

1. ஜாதி - தீண்டாமை  ஒழிப்பு என்பதை அடிப்படையாகக் கொண்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தின் அமலாக்கம்! இப்பணியே முன்னுரிமை பெற்ற முதன்மைப் பணி இப்போது.

2. சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள அறைகூவல்களுடன் தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கான விரிவான வேலைத் திட்டம்!

3. மகளிர் மாண்பும், உரிமையும், அவர்களுக்கெதிரான வன்கொடுமைகளை எதிர்த்துப் போராட்ட வடிவங்கள்.

4. சாமியார்கள் என்ற போர்வையில் சமூக விரோத காவிக் காலிகளின் அட்டகாசத்தை அறவே வீழ்த்தி எறிய, ‘ஜாதியற்ற சமூகம், சாமியார்கள் இல்லா நாடு’ நம் குறிக்கோள்.

5. மனிதன் தானாகவும் பிறக்கவில்லை - தனக்காகவும் பிறக்கவில்லை என்பதால், தரணிக்கு உழைப்பது தன்னேரில்லாத இன்பம் என்று உணரச் செய்த பெரியார் தத்துவங்களை உலகளாவிய அளவில் பரப்பும் பணியில் மேலும் முன்னேற்றம்.

- இந்த இலக்குகளை நோக்கிய எம் பயணத்தில் இணைந்து கொள்ள வாருங்கள் இளைஞர்களே, தோழர்களே!

சராசரி மனிதனுக்கு 85 வயது - முதுமையின் அடையாளம்!

சறுக்காத பொதுத் தொண்டனுக்கு ‘‘சடுதியில் பணி முடி’’ என்ற கட்டளையின் ஒலி முழக்கம் அது!

இல்லையா தோழர்களே?

எனவே, இணைந்து பணி முடிப்போம்!

மதவெறி ஒழிந்த மனிதநேய உலகுபடைப்போம்!

பதவிகளுக்கு முடிவு உண்டு - தொண்டோ தொடர் பயணம் - மறவாதீர்!

அனைவரின் நம்பிக்கையை ஒருபோதும் பொய்யாக்காமலிருக்க முடிந்த அளவு - முடிவு வரை உழைப்பேன் என்ற உறுதிமூலம் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.

களம் காண கைகுலுக்கி  வரவேற்கிறேன் விரைந்து வாரீர் தோழர்களே!

பெரியார் பணி முடிப்போம்!

வெற்றியைக் குவிப்போம்!



தலைவர்,         திராவிடர் கழகம்

சென்னை
1.12.2017

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...