Thursday, September 20, 2018

தந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா? எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார்

 தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு
வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை!



தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தந்தை பெரியார் அவர்களது 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை அகிலமே கொண்டாடி, அவர்தம் சிலைகளுக்கு மட்டுமல்ல, அவர் தந்த சுயமரியாதை - பகுத்தறிவு என்ற சீலத்திற்கும் - கொள்கை லட்சியங் களுக்கும் மாலை போட்டு வரவேற்று, பெரியார் ஓர் மாமருந்து என்பதை உணர்ந்து கொண்டாடுகிறார்கள்!

தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன! அவர் வாழும்போது சந்தித்த காட்டுமிராண்டிகளின் எதிர்ப்பு- இன்னமும் தொடர்கிறது என்பதற்குச் சரியான அடையாளமாக அவரது சிலை மீது செருப்பு வீசுவதுபோன்ற கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காவிகள் இந்த கயமைச் செயல்களில் ஈடுபட்டு ஓடி ஒளிகின்றன.

செருப்புத் தோரண வரவேற்புகள்

தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே செருப்புத் தோரணங்களின் ‘‘வரவேற்பை''ச் சந்தித்து வந்தார்! (சிவகங்கையில்).

கடலூரில் இன்று கம்பீரமாக நிற்கும் சிலை எழுப்பப் பட்ட இடம்- அவர்மீது 1944 இல் செருப்பு வீசப்பட்ட அதே இடம்!

எந்த எதிர்ப்பையும், எதிரிகளின், அநாகரிக காட்டு மிராண்டித்தன எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்தித்த அவர், நமது கொள்கை வயலில் பயிர் வளர போடப்படும் ‘உரங்கள்' என்று சொல்லி எதிர் கொண்டவர்!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இராமனைக் கும்பிடுவோர், அவர்களின் இராமாயணத்தில் 14 ஆண்டுகள் சிம்மா சனத்தில் இருந்து ஆண்ட இராமனின் ஒரு ஜோடி (இரண்டு) செருப்புகளுக்கு ‘‘செருப்புக் காதலர்களாகி'' - ‘‘திராவிட'' நெருப்புடன் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத் தலைவர்கள் கண்டனம்

செருப்பு வீசியவர்களை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்புள்ள கட்சித் தலைவர்கள், தி.மு.க. தலைவர் தளபதி சகோதரர் மு.க.ஸ்டாலின், காங் கிரசு கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர், மேனாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சகோதரர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், தமிழ் மாநில காங்கிரசு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் போன்ற பல தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, காவல் துறை - இத்தகைய கயவர்கள்மீது கடுந் தண்டனை தரும் சட்டங்கள் பாய்ந்து, தமிழ்நாடு கலவர பூமியாகிவிடாமல் தடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

‘‘எய்தவனிருக்க அம்பை நோவது சரிதானா?'' என்ற பழமொழிக்கொப்ப இந்த முயற்சிகளை தொடங்கி வைத்தவர், ஒரு காலிப் பயல்கூடப் பயன்படுத்த அஞ்சும் பண்பற்ற கொச்சை சொற்களை தந்தை பெரியார் மீதும் (அன்று), நேற்று உயர்நீதிமன்றத்தின்மீதும், காவல்துறை மீதும் (இன்று) வீசியுள்ள நபர் இன்னமும் போலீஸ் பாதுகாப்புடன் மேடைகளில் ஏறி, புஸ்வாணம் விட்டுள்ளார்.

இது வடநாடு அல்ல- பெரியார் மண்!

தூத்துக்குடி மாணவியின்மீது உடனடியாகப் பாய்ந்த தமிழக காவல்துறையின் நடவடிக்கை, இத்தகைய காவி, காலி இராஜாக்கள்மீதும், நடவடிக்கை எடுத்து பாயத் தயாராகவில்லையே, ஏன்? இந்த இரட்டை அளவுகோல் ஏன்? மனு ஆட்சியா? ஜனநாயகமா? என்ன இங்கே நடைபெறுகிறது?

விஷமக்கார வீணர்களே, கலவரங்களைத் தூண்டி  இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருமுனைப்படுத்திடும் தேர்தல் செப்படி வித்தைகளுக்கு இது ஒன்றும் வடநாடு அல்ல!

பெரியார் மண்! திராவிட பூமி! இங்கு மக்களின் எதிர்வினைகள் அரசியல் ரீதியாக, ஜனநாயக வழிமுறைகளையொட்டியே வருமே தவிர, கலவரங்கள்மூலம் ஏற்படும் என்று கனவு கண்டு தூண்டிலைத் தூக்க நினையாதீர்!

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் புத்தி கெட்ட புல்லர்கள் நீங்கள் என்பதை விரைவில் உணர்வீர்கள்!

‘‘மத்தியில் எங்கள் ஆட்சி, மாநிலத்தில் எங்களுக்கு - தோப்புக்கரணம் போடும் ஒரு முதுகெலும்பற்றவர்கள் ஆட்சி'' என்பதால்தானே, இந்த வாய்க் கொழுப்பு, வக்கணை, வன்செயல், தரங்கெட்ட தறுதலைத்தனம்! எவ்வளவு காலம் இந்தக் கோலம் - பார்ப்போம்!

தூண்டியவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை!

அந்த ஆணவத்திற்கு வரும் தேர்தல்கள் மூலமும், மற்ற ஜனநாயக வழியில், அறப்போர்களின்மூலமும் விரைவில் இதன் தாக்கத்தை உணர்வீர்கள். இறுதியில் சிரிப்பவர்களே வெற்றி பெற்றவர்கள்!

அணையப் போகும் விளக்கு சற்று வெளிச்சம் காட்டுவது வழமைதானே!

தூண்டியவர்களை விட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்துப் பயனில்லை!








தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...