Saturday, October 28, 2017

பி.ஜே.பி.யின் அதிகார வட்டத்துக்குள் தேர்தல் ஆணையமா?

குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அவசர அவசரமாக

11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!

 காந்திநகர், அக்.27 இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நவம்பர் 9 இல் தேர்தல் என்று தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்துள்ளது. காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் செயலைக் கடுமையாக விமர்சித்து வந்துள்ளன.

ஆனால், குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு  எதையுமே பொருட்படுத்தாமல், 12.10.2017 முதல் 15 நாள்களுக்குள்ளாக 24 திட்டங்கள், சலுகைகளுக்கான நிதி ஒதுக் கீட்டை ரூ.11ஆயிரம் கோடி மதிப்பில்  அவசர கதியில் ஒதுக்கியுள்ளது.

தேர்தல் ஆணையம் தேதி அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்த நிலையில், குஜராத் மாநில பாஜக அரசு குஜராத் மாநிலத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில் 11 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடுசெய்துள்ளது.இதுபாஜகவின் அதிகார, பதவிப் பசி, வாக்கு வேட் டைக்கான திட்டமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் துணை முதல்வர் நிதின் பட்டேல் அம்மாநிலத்திற்கான சலுகைகள், திட்டங்களை அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பில், தனிப்பட்ட வகைகளில் அவரவர் தொகுதிகளுக்கும், பாஜகவின் வளர்ச்சியை முன் னிட்டு, பல்வேறு சலுகைகள், திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

43ஆயிரம் ஆஷா சுகாதாரப் பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 50 விழுக்காடு ஊக்கத் தொகை, ஒப்பந்த பணியாளர்களுக்கு பயன்கள், சொட்டு நீர்ப்பாசன விவசாயிகளுக்கு சலுகைகள், அகமதாபாத் முதல் காந்திநகர் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6,700 கோடி உள்ளிட்ட 24 துறைகளில் பல்வேறு திட்டங்களுக்காக குஜராத் மாநில அரசு ரூ11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்குவட்டியில்லாகடன், வரி விலக்கு, ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு ஊதிய உயர்வு, நான்காம் நிலை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ், படேல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட படேல் வகுப்பினர் 326பேர்மீதான வழக்குகள் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு, கடந்த ஆறு மாத காலமாக ஊதிய விகிதத்தை உயர்த்தக்கோரி போராடிவந்த சுகாதார செவிலியர்கள் 43ஆயிரம்பேருக்கு ஊதிய ஊக்கத்தொகை மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு இலவசமாக சேலைகள், உடைகள் அளிப்பதாக துணை முதல்வர் நிதின் படேல் அறிவித்தார்.

துணைமுதல்வர் அறிவிப்பின்அடுத்த கட்டமாக அதேநாள் மாலையில், அகமதா பாத், காந்திநகர் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப்பணிகளுக்கு ரூ.6,700 கோடி நிதி ஒதுக்கீடு, சொட்டு நீர்ப் பாசனத்துக்கான கருவி வாங்கும் விவசாயிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி 18 விழுக்காடு திரும்ப விவசாயிகளுக்கு அளிப்பதற்கு ரூ.77.64 கோடி நிதி ஒதுக்கீடு, பல்வேறு அரசுப் பணிகளில் நிரந்தரமான ஊதியத்துடன் 11 மாதங்களில் பணியாற்றிய  ஒப்பந்த பணி யாளர்களுக்கு சாதாரண விடுப்பில் கூடுதலாக 11 நாள்கள், ஓராண்டுபணிநிறைவுபெற்றஒப் பந்த பணியாளர்களில் இரண்டு குழந்தைகள் பெறும்வரை பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு அதிகபட்சமாக 90 நாள்கள், அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய விகிதத்துக்கு ஏற்ப, பயணப்படி இதர படிகள் ரூ.250 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் பணியின்போது உயிரிழந்தால், அவருடைய வாரிசுகளுக்கு கருணைத் தொகையாக ரூ.2 லட்சம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை குஜராத் மாநில அரசு அறிவித்தது.

இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த நிலையிலேயே, தூங்கிக் கொண்டிருந்த அரசு, திடீரென விழிப்பைப் பெற்றதைப்போல், தேர்தல் வரும்போது மக்களை சந்திக்கவேண்டிய கட்டாயத்தில், வாக்கு பெறவேண்டிய நிலையில், தேர்தலை முன்னிறுத்தியே ஆளும் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் அலட்சி யம் காட்டி, தற்போது தேர்தல் வருகிறதே என்று தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாக மாநில பாஜக அரசு சலுகை மழை, அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளது.

இந்நிலையில்தான், காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங் களுக்கிடையே  குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் தேதியாக டிசம்பர் 9, டிசம்பர் 14 என இரண்டு நாள்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மிகவும் தாமதமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதாராம் யெச்சூரி

‘‘குஜராத் விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிப்பதாக வெற்று அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு இப்படித்தான் அங்கு நடக்கும் என்று நாம் எச்சரித்திருந்தோம். பாரதீய ஜனதாக கட்சியிடமிருந்து நியாயமான எதையும் நாம் எதிர்பாக்க முடியாது. அதனால்தான் இதில் தலையிடவேண்டிய அதிகாரம் கொண்ட அமைப்புகளான தேர்தல் ஆணையமும், இந்திய ரிசர்வ் வங்கியும் முறையாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை.''

இவ்வாறு சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...