Thursday, December 19, 2013

தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரி களால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்கமுடியாது.

ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலா மினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும்.

ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம்.

ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து,

அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது.

இப்படிச் சொல்லு வதானது, ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.

ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927


ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும்  வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று அய்ரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார்.

நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள் ஆகவே, அவர் அவ்வளவு தூரம் அய்ரோப்பிய அரசாங்கத்திற்கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர் களுக்கும்  பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகிறது.

இப்படி அய்ரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும், வரவேற்றுக் கொண்டாடத்தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு, இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான அய்ரோப்பியரல்லாத பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் அல்லவா?
- குடிஅரசு - கட்டுரை - 30.10.1927


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-/71287-2013-11-30-11-36-55.html#ixzz2nzRerrrF

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர்போராட்டத்தில்ஈடுபடுவோம்!

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர்போராட்டத்தில்ஈடுபடுவோம்! செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் அறிவிப்பு


தஞ்சாவூர், டிச.15- தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது தொடர் கதையாக உள்ளது. இதற்கொரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லையானால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சாவூர் - வல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது (14.12.2013).

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். இது ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. கண்ணீரும் கம்பலை யுமாக அம்மக்கள் பேட்டி கொடுப்பதை  பார்க்கும் பொழுது ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.

மாநில அரசு பிரதமருக்கு எழுதுவது - மத்திய அரசு ஏதோ சமாதானம் கூறுவது - கவலையளிக் கிறது என்று கூறுவது எல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது. இதற்கு நிரந்தரமான தீர்வை மத்திய அரசு எடுக்காவிட்டால் தொடர் போராட் டத்தை நடத்துவோம் டெசோ தலைவரின் கருத்தினையும் அறிந்து அத்தகைப் போராட்டத்தை மேற்கொள்வோம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. என்பதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதக் கலவரத் தடுப்பு சட்டம்

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மதக் கல வரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கது.

தேவைப்படும் தருணத்தில் மாநில அரசுகளைக் கலந்து கொண்டு, அவற்றின் ஒப்புதலோடு மத்திய அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மதக் கலவரங்களைத் தடுக்க முனைவது அவசியமே!

இதனைக் கூடாது என்று கூறுபவர்கள் கூக்குரல் போடுபவர்கள் யார்? நாடெங்கும் மதக் கலவ ரத்தைத் தூண்டுபவர்கள்; மோடியைத் தூக்கி நிறுத்துபவர்கள்தான்; அவர்கள் மடியில் கனம் இருப்பதால், இதனை எதிர்க்கிறார்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்

இந்திய அரசமைப்புச் சடடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சீர்திருத்த எண்ணம் உருவாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.(51A (h).

இதன் அடிப்படையில் மகாராட்டிர மாநிலத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருநாடகா வில் கொண்டு வரவிருப்பதாக மாநில முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்த  தமிழ்நாட்டிலும் இத்தகு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.  மத்திய அரசே கூட இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத் துகிறோம்.

நீதிபதி கங்குலி விவகாரம்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி மீது பாலியல் குற்றத் தொடர்பான புகாரின் அடிப் படையில் உச்சநீதிமன்றம் அமைத்த குழு  குற்றச் சாற்றுக்குப் பூர்வாங்கமான தடயங்கள் இருக் கின்றன என்று கூறியுள்ளது. கங்குலி ஓய்வு பெற்ற தால் அவர்மீது நடவடிக்கை எடுக்க இயலாது என் கிற முறையில் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரி வித்துள்ளது.

உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில அரசு சட்டப்படியான நடவடிக்கையைத் தொடர வேண்டும்.

மற்றவர்களைவிட நீதிபதியாக இருக்கக் கூடியவர்கள் நேர்மையான முறையில் ஒழுக்கமான முறையில் நடந்து காட்ட வேண்டும். வேலியே பயிரை மேயும் நிலையை அனுமதிக்கக் கூடாது.

மேற்கு வங்க மாநிலத்தில் மனித உரிமைக் குழு தலைவராக கங்குலி இருந்து வருகிறார். நேர்மை அவரிடம் இருக்குமானால் அந்தப் பதவியிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும்; அவர் விலகாத நிலையில்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கேரளாவில் தமிழர்கள் பிரச்சினை

கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் அட்டப்பாடி, சோலையூர், புதூர் போன்ற கிராமங் களில் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் அவர்கள்.

அந்தப் பகுதிகளை தமிழர்கள் ஒன்றும் ஆக்கிர மிக்கவில்லை; பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்; பத்திரவுப் பதிவுகள் எல்லாம் முறைப்படி இருக் கிறது. 12 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்கு உரிமை கிடைத்து விடுகிறது.(Prescription Right)
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு அவசரம் காட்ட வேண்டும்  கேரள முதல் அமைச்சருடன் உடனே பேச வேண்டும், மத்திய அரசும் உடனடி யாகத் தலையிட வேண்டும்.

இந்தியாவில் எந்த ஒரு இடத்திலிருந்தும் இன் னொரு இடத்திற்கும் செல்லலாம். குடியேறலாம் என்று தான் இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு கிறது - இந்திய ஒருமைப்பாடுபற்றிப் பேசுபவர்கள் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்.

மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது

மோடி அலை மோடி அலை என்று ஓர் அலையைக் கிளப்பி விடுகிறார்கள்.

மோடி அலை வீசுவது உண்மையென்றால், டில்லியில் அல்லவா அது செல்லுபடியாகி இருக்க வேண்டும். டில்லியில் தான் மோடி அதிகமாக அக்கறை செலுத்தினார் - பிரச்சாரம் செய்தார்; முடிவு வேறு விதமாகி விட்டதே!

மத்தியப் பிரதேசத்தில்கூட வெற்றி பெற்றதற்குக் காரணம் மோடி அல்ல. அம்மாநில முதல் அமைச் சர்தான் காரணம்; மோடி பேசிய பொதுக் கூட்டத் தில்கூட அம்மாநில முதல்அமைச்சர் சவுகான் படத்தைத்தான் பொது மக்கள் தூக்கிக் காட்டி னார்கள்.

புதிய புதிய யுக்திகளையெல்லாம் பயன்படுத்தி செயற்கையான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். பன்னாட்டுப் பண முதலைகள் மோடியின் பின்னணியில் இருக்கின்றன. அவர்கள் பணத்தை வாரி இறைத்து நரேந்திர மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க முயற்சிக் கிறார்கள் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள் வார்கள்.

உண்மை வெளிவரும் - ஒப்பனைகளும் அப்பொ ழுது கலையும்.

பெரியார் உலகம்

திருச்சியையடுத்த சிறுகனூரில் 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவ  வெண்கலச் சிலையை நிறுவும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.

பெரியார் வாழ்க்கைவரலாறு ஒலி, ஒளிக் காட்சிகள் நூலகம் என்று தந்தை பெரியார்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில் பெரியார் உலகம் உருவாக்கப்பட உள்ளது.

இதற்காக 1005 சவரன் தங்கத்தை கொடுத்துள் ளார்கள். கட்சி, ஜாதி, மதங்களைக் கடந்து மக்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக் குரியது என்று குறிப்பிட்டார்.

மகளிர் மசோதா

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண் களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா 1996 முதல் நிலுவையில் உள்ளது. உடனடியாக இந்த சட்டம் உள் ஒதுக்கீடுடன் கூடியதாக நிறைவேற்றப்பட வேண்டும்.

பெண்களுடைய வாக்குகள் கிட்டதட்ட சரி பங்கு இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் மறந்திட வேண்டாம்!

- செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் 14.12.2013

Read more: http://www.viduthalai.in/headline/72098-2013-12-15-10-21-34.html#ixzz2nzD2xaku

Wednesday, December 18, 2013

பாலியல் வன்முறை உளவியல் காரணம்?



நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற அய்யத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறும்போதெல்லாம் அரசியல் காரணங்களை மட்டுமே பேசிவிட்டு, தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்; சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறும் ஊடகங்கள், சமூகக் காரணங்களைப் பேசுவதில்லை. இன்னும் குறிப்பாக மனநல ரீதியிலோ உளவியல் பார்வையுடனோ சுத்தமாகப் பேசுவதில்லை.

சமூகத்தின் ஒழுங்கு குறித்து ஏற்படும் பிரச்சினைக்கு ஏதோவொரு உளவியல் காரணம் கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் ஆண்-பெண் உடல் தொடர்புடைய சிக்கல் என்றால் அதில் முதல் காரணம் உளவியலாகத்தான் இருக்கும்.

தமிழக ஊடகங்களில் சமூகம் குறித்த விவாதங்களில் துணிச்சலாகக் கருத்துக் கூறி வருபவர் டாக்டர் ஷாலினி. அண்மையில் டெல்லியில் நடந்த இரண்டாவது பாலியல் வன்முறையைத் தொடர்ந்து அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

``இப்போ பொதுவா உலகத்துல பெண் பலகீனமானவள், அவளை நல்லபடியாக கொண்டு வரணும்னு நிறைய முயற்சி பண்றோம். ஆண் அதைவிட பலகீனமானவன். இன்னும் நாம வழிக்குக் கொண்டு வரணும்ங்றதையும். நாம உணராம விட்டுட்டோம். இதுமாதிரி பிரச்சினை வரும்போதுதான் பேசுறோம் என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாகப் பேசினார். தொடர்ந்து நம் கேள்விகளுக்கு சரமாரியாக பதிலளித்தார்.

அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன?

பொதுவாக ஓர் ஆணுக்குத் தன்மேல் நம்பிக்கை இருக்கும்போது, தன்னுடைய ஆளுமை மேல் Confidence இருக்கும்போது என்னுடைய தரம் மிகுதிதான் என்கிற தெளிவு இருக்கும். ஆணுக்கு தன்மீது நம்பிக்கையில்லாதபோதுதான் பிரச்சினை. ஆண், பெண் பாலியல் உறவுங்கிறது, ஒன்று அவருடைய உந்துதல் Instinct, இன்னொன்றைப் பார்த்துக் கற்றுக் கொள்வது Learning. மற்ற ஜீவ ராசிகளுக்கு, அது பாத்துக் கத்துக்கறதுக்கு ஒண்ணுமில்லே. பூச்சிப்புழுக்களுக்கெல்லாம் Brain ரொம்ப சின்னது. அது கத்துக்க முடியாது.
Instinct மூலமாக வாழ்ந்து முடிச்சுடும். அதுக்குப் புதுசா வித்தியாசமாக கத்துக்க வழியே இல்லை. ஆனால், மனிதர்கள் பிறக்கும்போது Instinct இருந்தாலும் எப்படி நிறைவேற்றனும்னு, பெரும்பாலும் பார்த்துத்தான் கத்துக்கிறோம்.

அப்போ, இந்தப் பையன் தவறான விசயத்தப் பாத்துட்டான்னு வச்சுக்குவோம். அவனுக்குக் கிடைக்குற மாதிரி, பெண்ணுன்னா இப்படி இருக்கணும், வளர்ந்த சம்மதிக்கிற பெண்ணோடதான் உடலுறவு கொள்ளணும்னு அவன் பார்த்திருந்தா அவன் கத்துக்குவான். அப்படிப் பார்க்காமல், விகாரமாகவே Sexual காட்சிகளையோ, Sexual வன்முறையையோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அவன் பாத்துக் கத்துக்கிட்டான்னா, அவன் இப்படிக்கூட செய்யலாம் போலிருக்கே, அப்படிங்கிற விசயம் தெரிஞ்சு போச்சுன்னா, அவன் செய்ய முயற்சி பண்ணுவான். இது எப்படி இந்தப் பையனுக்கோ, பெண்ணுக்கோ தெரிய வருதுன்னு பார்த்தா, அவங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். அவுங்க சுற்று வட்டாரத்துல, இன்டர்நெட்டுல, Pornograph பார்த்திருக்கலாம்.

எதுவுமே இல்லைன்னா அவன் வெட்டியா இருக்கிறதுனால, விகாரக் கற்பனையோடு இருக்கலாம். இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் ஓர் ஆண் தன்னுடைய ஆண்மை மேல நம்பிக்கை இருக்கும்போது பெர்சனாலிட்டி மேல அவனுக்கு கான்பிடென்ட் இருக்கும்போது, ஒரு சுயமரியாதை இருக்கும்போது, என்னோட தரம் உயர்கிறது, என் தரத்திற்கு இதெல்லாம் செய்யக் கூடாது, அப்படின்னு அவன் மனதில் இருக்கும். தன்னைப்பற்றி ஒரு அபிப்ராயமே இல்லாதபோது, வெட்டியா இருக்குற பையனுக்கு, தான் அவமானப்படுறதா, தனக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிற மனிதனுக்கு இதுக்கு மேல எனக்கு என்ன இருக்குனு நினைக்கிற ஆண் இது மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிடுவாங்க.

படித்தவர், படிக்காதவர் பெரிய அதிகாரத்தில் இருப்பவர் என்ற  வேறுபாடின்றி இந்தத் தவறு நடைபெறுகிறது. தன் சொந்த மகளிடமே தவறாக நடந்த பிரச்சினை என்னிடம் வந்துள்ளது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆண்களின் வக்கிர புத்தினு சொல்லலாமா-?

இல்லை. ஆணுக்கு இயல்பிலேயே பாலியல் இச்சை அதிகம். அவனைப்பற்றி அவனது மனதில் தெளிவான அபிப்ராயம் இல்லைன்னா அவுங்க எந்த லெவலுக்கும் போக வாய்ப்பிருக்கு. எனவே, யாராவது கடிவாளம் போட்டுக்கிட்டே இருக்கணும்.

கடிவாளம் என்றால்......?

கடிவாளம் என்பது வேறு வேறு விதத்தில் தேவைப்படுது. ஒரு பையனுக்கு விளையாட்டு, கல்வி என்று ஏதாவது ஒன்றில் ஈடுபாடு இருக்குமானால் பாலியலில் கவனம் செலுத்த மாட்டான். ஆணுக்கு இருக்கும் நேரத்தை -_ சக்தியை நல்ல முறையில் பயன்படுத்தினால் தனிமையில் ஈடுபடும் வாய்ப்புக் குறையுது. தேவையில்லாத சிந்தனைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. வீட்டில் இருப்பவர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியா இருக்கணும்.

இன்று இணையத்தில் நிறைய Pornograph படங்கள் இலவசமாகவே பார்க்கும் வசதி உள்ளது. எல்லா விதத்திலயும் பார்த்துக் கத்துக்கிறாங்க. பார்த்ததைச் செயல்படுத்தும் எண்ணம் உண்டாகிறது. இந்தப் பிரச்சினை உலகம் முழுவதும் பரவிக் கொண்டு உள்ளது. எல்லோரும் சேர்ந்துதான் இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரணும்.

தற்போது பெண்கள் அணியும் கவர்ச்சிகரமான உடைகள்தான் ஆண்களைத் தூண்டுவதாக உள்ளது என்னும் கருத்து பற்றி.....

ஒரு பெண் ஆபாசமா உடை அணிந்து செல்லும்போது, ஆண்கள் பின்தொடர்ந்து வருவார்களே தவிர, தொடுவதற்கு முயற்சி செய்ய மாட்டாங்க. ஏதாச்சும் நம்மளப் பண்ணிடுவாரோ என்ற பயம்தான் இருக்கும். அடக்க ஒடுக்கமா இருக்கிற பொண்ணுங்களைத்தான் Abuse பண்ணுவாங்க. ஆண்கள் பெண்கள் முகபாவனைக் குறிப்பைத்தான் பார்ப்பார்களே தவிர, உடைகளை அல்ல.

எனவே, பெண்கள் Body Language-_ல கவனமா இருந்தாலே போதும். பெண்கள் Body Language- கான்பிடென்டா, தைரியமா இருந்தா ஆபத்து வராது. உடை என்பது ஒரு பிரச்சினை அல்ல.

இன்றைய சமூகத்தின் கட்டமைப்பை மீறி தூண்டப்படக் காரணம்?

தன் ஆசைகளை உடனே நிறைவேற்றிக் கணும்ங்கிற நினைப்பு வந்துடுது. பொறுமையா இருக்கணும்ங்கற புரிதல் இல்லாமல் போகிறது. கேட்டதும் தேவைகள் எல்லாமே கிடைத்து விடுகிறது. கடைக்குச் சென்றால் எல்லாம் வாங்கிடலாம். இல்லைங்கிறதே இல்லைனு ஆகிவிட்டது. நினைத்ததும் எல்லாவற்றையும் சாதிக்க முடியுது. கஷ்டமே இல்லாமல் கிடைக்கிறது. எனவே சுயகட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது.

இதில் பெற்றோரின் பங்கு ஏதேனும் உள்ளதா? சரியாக வளர்க்கத் தவறியதுதான் காரணமா......?

பெற்றோர் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதே கிடையாது. பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர் ஆண் குழந்தைகளை அப்படி வளர்ப்பதில்லை. அவர்கள் மொழியிலேயே பிரச்சினைகளையும் _ எதிர்கொள்ளும் விதத்தையும் கற்றுக் கொடுக்கத் தவறுகிறார்கள். சில பெற்றோர் சொல்லி வளர்க்கின்றனர். ஆண் குழந்தைகளைக் குறிப்பிட்ட வயது வந்ததும் எதுவும் சொல்லி வளர்ப்பதில்லை. பெண் குழந்தைகளுக்காவது பருவ வயதை அடையும்போது சில விஷயங்களைக் கற்றுக் கொடுப்பர். ஆண் குழந்தைக்கு எதுவும் இல்லை. எப்ப, எப்படிச் செயல்படுத்தணும்னு சொல்லித் தரணும். சொல்லித் தர பெற்றோர் வெட்கப்படுகின்றனர். இதனால் ஆணின் மனதில் அறியாமை உள்ளது. மனநிலையில் தெளிவில்லாமல் போயிடுது. தவறுக்குக் காரணமாகி விடுகிறான். பெண் குழந்தையை அம்மா, பாட்டி train பண்ணிவிடுவது போல் ஆண் குழந்தை மீது கவனம் செலுத்துறதில்லை. எனவே, ஆண் குழந்தைகளும் கஷ்டப்படுறாங்க. மத்தவங்களையும் கஷ்டப்படுத்துறாங்க.

எந்த மாதிரி பயிற்சி கொடுக்க வேண்டும்?

உலகத்தை - குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியது ஆணின் கடமை. உன்னை நம்பி ஒரு பெண் வருவா அவளையும் நீ நல்லவிதமா காப்பாத்தணும்னு, உன் குழந்தைகளை சந்தோஷமா வச்சிக்கணும்னு சொல்றதில்ல, அப்பா அம்மாவ பார்த்துக்கணும்தான் சொல்வோம். பெண்களும் அப்பா அம்மாவைப் பார்த்துக்கலாமே. ஆண் மட்டும் வேலைக்குப் போகணும். சம்பாதிக்கணும். கார் வாங்கணும், அம்மா அப்பாவைப் பார்த்துக்கணுமா? மற்றொன்று அவனோட பிரக்ஞையே அவனுக்கு இல்ல. இரண்டாவது அவளோட Sexuality பத்தி அவனுக்கு எதுவுமே தெரியாது. அதனால அவன் நிறைய, ஏடாகூடமா போய் மாட்டிக்கிடுறாங்க. அதுக்கப்புறம் அவனைத் திட்டுறோம் இப்படி நடந்துக்கிட்டியே கரெக்டான்னு. இப்படி நடந்துக்கறதுக்கு அறியாமைதான் முக்கியமான காரணம். அதனை நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.
திருமணத்திற்கும் பாலியல் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறதா?
அதுக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை.  பாலியல் குற்றத்துல மாட்டின அந்த 22 வயது பையன் திருமணமானவன்தான். அவனால சரியான முறையில உறவு கொள்ள முடியாததால், Candle Bottle உள்ளே சொருக வேண்டிய அவசியம் இல்லைல்ல. இயலாமைதான். இயலாமை இருக்கிறதாலதான் பரீட்சைப் பொருளா வைத்து ஏடாகூடம் பண்றாங்க.

இப்போ பொதுவா உலகத்துல பெண் பலகீனமானவள், அவளை நல்லபடியாக கொண்டு வரணும்னு நிறைய முயற்சி பன்றோம். ஆண் அதைவிட பலகீனமானவன். இன்னும் நாம வழிக்குக் கொண்டு வரணும்ங்றதையும். நாம உணராம விட்டுட்டோம். இதுமாதிரி பிரச்சினை வரும்போதுதான் பேசுறோம்.

திருமணமானவருக்கே அப்படி ஓர் எண்ணம் குழந்தைகள் மீது வருகிறதே?

பொதுவாகவே, ஆணின் மூளையானது வக்கிரங்களுக்குட்பட்டதுதான், Sexual drive அதிகம். ஏதேனும் ஒரு கட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதான் கரெக்டா அவன் வருவான்.

வீட்டுக்கு அடங்காமல் போற பசங்களுக்குத் திருமணம் செய்து வைத்தால், சரியாகிவிடும் என்கிறார்களே? உண்மையா?

நம்ம ஊர்ல வந்து ஏதாவது பெண்ண பலி கொடுத்துவிட்டால் சரியா வந்திடும்னு நினைக்கிறாங்க. ஆனால், எந்தக் கடவுளுக்கும் பெண்ணைப் பலிகொடுக்கவே மாட்டாங்க. ஆடு, மாடுன்னு ஆணைத்தான் பலி கொடுப்பாங்க. ஒரு பெண்ணைப் பலிகொடுக்கிற சமுதாயம் உருப்படாது.

இருந்தாலும் ஆக்க சக்தியை எவனாவது அழிப்பானா? விதை நெல் இருக்கிற வரைக்கும்தானே அடுத்த தலைமுறை உருவாகும். விதை இருக்கிற நெல்லை எரிச்சுட்டா.. எவ்வளவு முட்டாள்தனம். உட்கார்ந்திருக்கிற கிளையை வெட்டுவது போல் ஆகும். பையன் சரியில்லைன்னா அதைச் சரிக்கட்டணும். அதை விட்டுட்டு யார் தலையிலும் கட்டிட்டு Responsibility கிடைக்கலன்னு சொல்றது  தவறானதுதான். எல்லோருக்கும் திருமணமானது, ஒரு பொண்ணு வந்தா அடங்கிடுவான். இல்லைன்னா, எனக்கப்புறம் யார் வந்து பார்ப்பார்கள்,
அந்தக் காலத்துல பெண்கள் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், ஏழேழு ஜென்மத்துக்கும் ஒரே புருஷன்தான். இந்தக் காலத்துப் பெண்கள் கணவன் சரியில்லை என்றால், சரிதான் போடா நீ கிளம்புன்னு சொல்லிவிடுகிறார்களே. பெண்கள் எல்லாம் Advance  ஆகிட்டார்கள். ஆண்களும் பெரியவர்களும்தான்  Advance ஆகல.

குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதை எப்படித் தவிர்ப்பது?

முதலில் அதை, குழந்தைக்கு உடலோட பாகங்களைப் பற்றி தெளிவா வெட்கப்படாமல், கூச்சப்படாமல் சொல்லணும். இது ஆண்குறி, இது பெண்குறின்னு, அவங்கவங்க வீட்டுல என்ன செல்லப் பெயரைச் சொல்றாங்களோ, அதை use பண்ணி சொல்லித்தரணும்.

அதுல வெட்கப்படுறதுக்கு ஒண்ணும் இல்லைங்கிறதைச் சொல்லணும். இந்தப் பாகத்தைச் சுத்தமா வச்சுக்கனும்னு சொல்லித்தரணும். அவுங்க என்ன Language பேசுறாங்களோ, அதற்கேற்ற மாதிரி வார்த்தைகளை நாம அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரணும். பெண் குழந்தைகளின் உறுப்பை யாரும் தொடக் கூடாது. அம்மா அல்லது பாட்டிதான் தொடணும். அப்பாகூட தொடக்கூடாது. வேறு யாரும் தொடக்கூடாது.

தொட்டால் என்னிடம் வந்து சொல்லணும்ங்கிறத ஒன்றரை வயதிலிருந்தே சொல்லித் தரணும். குழந்தைகளுக்கு நல்லாத் தெரியும். யாராவது தொட்டால் சொல்லிடுவாங்க. பெரும்பாலான பிரச்சினை, நமக்குத் தெரிஞ்சவங்கதான் செய்வாங்க. நமக்குத் தெரியாத யாரோ கிட்னாப் பண்ணிட்டுப் போயி, ரேப் பண்ண மாட்டாங்க. கூடவே இருக்குற யாராவது, செய்யறதுனால, கூட இருக்குற எந்த ஆணா இருந்தாலும், எச்சரிக்கையா இருக்கணும்.

கணவனாகவே இருந்தாலும் எச்சரிக்கையாகவே இருக்கணும். ஏன்னா, அப்பாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளையும் நாம் பார்க்கிறோம். ஒட்டு மொத்தமா ஏரியாவிலே சின்ன பசங்க, பெரிய பசங்க, வயசானவங்கன்னு பாகுபாடே இல்லாமல் யார்கிட்டேயும் குழந்தையைத் தனியே விடாமல் யாரிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

இது பெண்குழந்தையைப் பாதுகாக்க வேண்டியவங்க, பாதுகாக்க நாம்  செய்ய வேண்டிய வேலை. ஆண் குழந்தையை டிசைன் பண்ணும்போது, நீ கெட்டிக்காரன், புத்திசாலி என்று அவனது தன்னம்பிக்கை (Confident) யை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் தரம் அதிகமாகிவிடும். அதற்கு ஏற்றாற்போல் அவன் நடந்து கொள்வான். தன்னம்பிக்கை இல்லாதபோதுதான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுகிறான்.

ஆண் பிள்ளைகளை இன்றைக்கு உள்ள பெற்றோர்கள் வளர்க்கும் முறைதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று சொல்லலாமா?

இப்போதெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் பகிர்ந்து கொள்வதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆளுக்கொரு I-pad அய் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை  I-pad அய் நோண்டிக் கொண்டிருக்கிறது. அப்போது பிராக்டிகலாகப் பார்க்க வாய்ப்புள்ளது. தனிமையும் புத்திசாலித்தனமும் வக்கிரமும் சேரும்போது அந்தக் காம்பினேஷன் ரொம்ப மோசமானது. எனவே, குழந்தைகளிடம் அதிக நேரம் செலவு செய்து நிறைய விஷயங்களைச் சொல்லித் தரவேண்டும். அவர்களது மனதைப் புரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். மனம் என்பது ஒரு குரங்கு. அதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் பயிற்சியை _ பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

பாலியல் கல்வி இன்றைய குழந்தைகளுக்கு அவசியமா?

ரொம்ப ரொம்ப அவசியம்.

இது உளவியல் ரீதியா குழந்தைகளை ஒரு நல்ல நிலைக்கு எடுத்துக்கொண்டு வருமா?

ஒரே நாளில் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஒரு வயதில் இருக்கும்போதே நாம் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தரக்கூடிய விஷயம். அட்லீஸ்ட் பெற்றோர்கள் சொல்லித்தரவில்லை என்றால், கல்வித் திட்டத்திலாவது நாம் கொண்டு வரவேண்டும். அதுவும் இல்லையென்றால், நாம் ஊடகங்கள் வாயிலாகச் சொல்லித் தரவேண்டும். எதுவுமே, அப்பா, அம்மாவும் சொல்லித் தரமாட்டாங்க. பள்ளியிலும் சொல்லித் தரமாட்டங்கன்னா, ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி அந்தக் குழந்தைகள் அறியாமையால் தவறான கருத்துகள் வைத்திருக்கிறார்கள். அதனால்  நிறைய பிரச்சினைகள் வரும். ஓர் ஆணுக்கு வக்கிரம் இருந்தாலும் அது உலகத்தையே பாதிக்கும். அதனால் நாம் போர்க்கால அடிப்படையில் ஆண்களின் புத்தியைத் திருப்பித் தரணும் என்பது ரொம்ப அவசியமாக இருக்கிறது.

பாலியல் கல்வி முறை என்று நேரடியாக இல்லையென்றாலும் வேறு ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?

பாலியல் கல்வி என்று தனிப்பட்ட முறையில் சொல்வது தவறு. இது ஒரு வாழ்க்கைக் கல்வி. உடம்பு என்பது என்னவென்று நமக்குத் தெரிய வேண்டும். வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிய வேண்டும். கல்யாணம்னா, செக்ஸ்னா  என்னவென்று இயல்பாக எல்லாரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்போது வாக்கிங் என்பது ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார்கள். காட்டுவாசிக்கிட்டப் போயி வாக்கிங் ரொம்ப முக்கியம்பான்னு சொன்னா அவன் சிரிப்பான். அதெல்லாம் நான் செய்துக்கிட்டு இருக்கேன். இதப்பத்தி நீ பேசாதே என்று சொல்வான். இயல்பாக இருக்கிற விஷயத்தை நாம் தனிப்பட்ட முறையில் (ஸ்பெஷல்) செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கு. இப்பக் காட்டுவாசிங்க இயல்பாகவே பேசுவாங்க. இப்படிச் செய்தால் இப்படியாகும், குழந்தை இப்படிப் பிறக்கும், ஆணும் பெண்ணும் இப்படி இருப்பாங்க என்று இயல்பா பேசுற விஷயத்தை மறைத்து மறைத்தே நாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கிவிட்டோம். இதுமாதிரி இல்லாமல் இயல்பாக இருந்தால் பிரச்சினைகள் சரியாகும்.

உளவியல்ரீதியான பயிற்சி ஏதாவது.....?


உளவியல்ரீதியான பயிற்சி என்பது இன்றைக்கு நிலைமையில் உளவியலுக்கான மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவுங்க சொல்லித் தரமாதிரி இருக்கு. ஆனால், காலம்காலமாக சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த உளவியல் அடிப்படைகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்திருக்காங்க. திருக்குறள் என்பது உளவியல் ரீதியான பயற்சி மாதிரிதான். Personality development manual மாதிரி திருக்குறள் இருக்கிறது. நாலடியாரும் இருக்கிறது. இன்னும் எவ்வளவோ நூல்கள் நம்மிடம் இருந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.

உளவியல் ரீதியாக மனசுதான் நமக்கு ரொம்ப  முக்கியம். இல்லை என்றால் நாம் மிருகம்தான். மனசு மட்டும்தான் நம்மை வித்தியாசப்படுத்துகிறது. ஆனால், அந்த மனதைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும். அப்படி இல்லையென்றால் மிருக லெவலுக்குப் போய்விடுவோம். அதைவிட மோசமானது, மிருகங்கள் இதுமாதிரி செய்யாது. ஆனால் நாம் செய்வோம். புத்தி சொன்னதைத் தப்பாகப் பயன்படுத்தும்போது ஆபத்தாக ஆகிவிடும். நமக்கு மனதை ஆக்கப்பூர்வமாக வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிகாட்டுதல் இருந்துக்கிட்டே இருக்க வேண்டும். அதில்தான் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். நம்ம பசங்களுக்கு எல்லாத்தையும் சொல்லித் தந்துவிட்டு Moral scienc அய்ச் சொல்லித் தரமாட்டோம். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவு செய்வது கிடையாது.  தெளிவு, அறிவு, ஞானம், சரியான Learning  இருந்தால் சரியாகிவிடும். தெளிவு கடையில் கிடைக்காது. நாம்தான் சொல்லித் தரணும்

- மனநல மருத்துவர் ஷாலினி  பேட்டி
- சந்திப்பு : செல்வா


நன்றி : Unmaionline 2013 மே 01-15

நீதிபதி கங்குலியின் கீழ்தரச் செயல்கள்


பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் பரபரப்புத் தகவல்கள்



புதுடில்லி, டிச.17- நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பெண் வழக்குரைஞர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு விவரத்தை மத்திய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் வெளி யிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய பெண் வழக்குரைஞர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக கூறிய உச்சநீதி மன்றம், ஏ.கே.கங்குலி நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புகார் குறித்து விசாரணை நடத்த முடியாது என்று அறிவித்தது.ஆனால் பாலியல் புகா ரை திட்டவட்டமாக மறுத்த, முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழு தலைவர் பதவியில் இருந்தும் விலக மறுத்தார். ஏ.கே.கங்குலி மீது சட்டப்படி விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் வலி யுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் நேற்று டில்லியில் கூறுகையில், முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அப்படி விலக மறுத்தால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

பெண் வழக்குரைஞர் அளித்த புகார்

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில், பெண் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாண வாக்குமூலத்தையும் இந்திரா ஜெய்சிங் வெளியிட்டார். அதில் நீதிபதி கங்குலி மீது பெண் வழக்குரைஞர் அளித்த புகார் விவரம் வருமாறு:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி இரவில் (கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தையதினம்), நீதிபதி கங்குலி தன்னை தொலைபேசி மூலம் அழைத்தார். நான் ஓட்டல் அறைக்கு சென்றதும் அங்கு மேலும் ஒரு பெண் உதவியாளரும், அகில இந்திய கால்பந்து சங்கம் தொடர்பாக ஒரு ஆணும் இருந்தனர்.அவர்களை நீதிபதி எனக்கு அறிமுகம் செய்துவைத்து, அகில இந்திய கால்பந்து சங்கம் வழக்கு தொடர்பான அறிக்கையை மறுநாள் காலை தாக்கல் செய்ய வேண்டும். எனவே இரவு முழுவதும் வேலை இருப்பதால், அங்கு தங்க வேண்டியது இருக்கும் என்று நீதிபதி கூறினார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் அவருடன் இருந்த ஆணும் அங்கிருந்து சென்று விட்டனர்.

நான் நீதிபதியிடம், வேலையை விரைந்து முடித்துவிட்டு திரும்பி விடுவதாக தெரிவித் தேன். அப்போது வலைத்தளம் வேலை செய்யாததை நீதிபதியிடம் தெரிவித்தேன். ஒரு கட்டத்தில் நீதிபதி கங்குலி, மது பாட்டிலை வெளியில் எடுத்து கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஓட்டல் நிர்வாகத்தினர் கொடுத்த அன்பளிப்பு என்றும் நான் மது சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றும் கூறினார். மது அருந்திய அவர் என்னையும் அருந்துமாறு கட்டாயப்படுத் தினார். வேறு வழி இல்லாமல் நானும் சிறிது அளவு சாப்பிட்டேன்.

பின்னர் சாப்பிட வருமாறு அழைத்தார். அங்கு இருக்கையில் அமரமுயன்றபோது எனது பின்பகுதியை நீதிபதி தொட்டு, எனக்கு உதவி செய்ய வந்ததற்கு நன்றி என்று கூறினார். நீதிபதியின் விபரீத போக்கை உணர்ந்து கொண்ட நான் அவரிடமிருந்து விலக முயன்றேன். அப்போதும் நீதிபதி என் அருகில் வந்து என் தலை மீது கை வைத்து நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறி என்னை படுக்கை அறைக்குள் அழைத்து, வா... இருவரும் சற்று ஓய்வாக இருப்போம் என்று அழைத்தார். அது எனக்கு அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. பதற்றமாகவும் மன நிலையை குலைப்பதாகவும் இருந்தது.

தொடர்ந்து அவர் எனது கையை பிடித்து, உன்னால் நான் மிகவும் ஈர்க்கப் பட்டுள்ளேன். உண்மையில் நான் உன்னை விரும்புகிறேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறியபடி நீதிபதி என்னை நெருங் கினார். நான் அவரது பிடியில் இருந்து விலகி வெளியேற முயன்றபோது, நீதிபதி எனது கை மணிக்கட்டில் முத்தமிட்டார். என்னை மிகவும் நேசிப்பதாக மறுபடி மறுபடி கூறினார்.

நான் அவரை தள்ளிவிட்டு, எனது கணினியையும், பையையும் எடுத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளி யேறினேன். அவர் என்னை தொடர்ந்து வந்து, போகாதே போகாதே, நான் உனக்கு தொல்லை தருகிறேனா? என்னை விட்டு போகாதே, இப்போது எனக்கு உன்னுடைய உதவி வேண்டும். அகில இந்திய கால்பந்து வழக்கு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்றார். நான் பதில் ஏதும் சொல்லாமல் வெளியேறினேன்.

ஓட்டல் வரவேற்பு அறை வரை நீதிபதி எனது பின்னால் வந்தார். அங்கு நான் செல்வதற்கு கார் இல்லாததால், நீதிபதி தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரிடமோ பேசினார். அப்போது அங்கு ஒருவர் வந்தார். அவர் கால்பந்து சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்று நீதிபதி என்னிடம் அறிமுகம் செய்தார்.தொடர்ந்து தனியாக நின்ற நீதிபதி, வேலையை முடித்துத் தருமாறு என்னிடம் வேண்டி னார். நான் பதில் ஏதும் கூறவில்லை. பின்னர் இரவு 10.30 மணிக்கு கார் வந்ததும் நான் அங்கிருந்து திரும்பிவிட்டேன். நான் எனது விடுதிக்கு திரும்பியதும், நீதிபதி எனக்கு போன் செய்து, போய் சேர்ந்து விட்டாயா? என்று கேட்டார். அதற்கு நான் ஆம் என்று பதில் அளித்ததும் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

மறுநாள் காலையில் இருந்து அடிக்கடி எனக்கு நீதிபதி போன் செய்தார். ஆனால் நான் அந்த போன்களை எடுக்கவில்லை. அன்று இரவு 9 மணிக்கு நான், நீதிபதிக்கு போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினேன். அதில் முதல் நாள் இரவு நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்ததாகவும், மேலும் எனது பணியை தொடர விரும்பவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவித்து இருந்தேன். பதிலுக்கு நீதிபதி வருத்தம் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு நான் பதில் அனுப்பவில்லை. பின் னரும் அடிக்கடி போன் செய்தார். அவரு டன் பேசுவதை, நான் தவிர்த்துவிட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெண் வழக்குரைஞர் கொடுத்த புகார் அறிக்கை வெளியானதற்கு, முன்னாள் நீதிபதி கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் அமர்வு முன்பு அளிக்கப் பட்ட ரகசிய அறிக்கையை எப்படி வெளி யிடலாம் என்றும் அவர் கேள்வி விடுத்தார்.

போராட்டம்

இதற்கிடையில் மேற்கு வங்காள மாநில மனித உரிமைகள் குழு தலைவர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலி உடனடியாக விலகக் கோரி, கொல்கத்தா அலிபூரில் உள்ள அந்த அலுவலகம் முன்பு எதிர்ப்பாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.கறுப்பு பட்டை அணிந்திருந்த அவர்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளையும் ஏந்தி இருந் தனர். நீதிபதி கங்குலியின் உருவபொம்மை யையும் அவர்கள் கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, December 14, 2013

சொல்லுங்க மோடி சொல்லுங்க!




 - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

1. 2004 ஜூன் 15 அன்று அகமதாபாத் - காந்தி நகர் நெடுஞ்சாலையில் தீவிரவாதி என பட்டம் சூட்டி 19வயது இளம்பெண் இஷ்ரத் ஜகானை மற்ற நான்கு இளைஞர்களுடன் டி.ஐ.ஜி வன்சரா என்கவுண்டர் செய்தது சட்டபடி தவறு என 2009ல் அகமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், 2011ல் சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுக் குழு என்கவுண்டர் நாடகத்திற்கு முன்தினமே அவர்கள் கொல்லப்பட்டதை கண்டறிந்து வெளிகொண்டு வந்தது மோடிக்கு தெரியாதா?

2. 2005 நவம்பர் 23ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்த ஷொராபுதீன் அவரது மனைவி கவுசர்பீயும் குஜராத் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு, மூன்று தினங்கள் கழித்து அகமதாபாத் அருகே துப்பாக்கியால் துளைக்கப்பட்ட ஷொராபுதீன் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுவும் சட்டவிரோத என்கவுண்டர்தான். பிறகு டிஜிபி வன்சரா கிராமத்தில் கவுசர்பீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதும் மோடிக்கும் சம்பந்தம் இல்லையா?

3. இந்த என்கவுண்டர் படுகொலைகளை நடத்திய டிஜிபி வன்சரா இப்போது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து இந்த கொலைகளை முதல்வர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அனுமதி கொடுத்த பிறகுதான் செய்தோம் என சொன்னது மோடியின் லட்சணத்தை காட்டவில்லையா?

4. குஜராத் மாநிலம் பிரிக்கட்ட 1960 முதலே ஜவுளி, உரம், இரும்பு போன்றவை அங்கு பிரபலம். பிஜேபி கட்சியே துவக்கபடாத காலத்தில் துவக்கப்பட்ட குஜராத் மாநில பெட்ரோலிய கழகமும், மோடி பிறக்காததன் முன்பே துவக்கபட்ட அமுல் கம்பெனியும் குஜராத் வளர்ச்சியில் மக்களுக்கு சேவை செய்வதும், மோடியின் ஆட்சிகாலத்தில் புதுப்புது முதலாளிகள் வளர்ந்ததும், அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்ததும் யாருக்கும் தெரியாது என நினைக்கிறாரா மோடிஜி?

5. எஸ்ஸார், ரிலையன்ஸ், எல்.டி, போர்டு இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அடுமாட்டு விலைக்கு தண்ணீர், மின்சரம், சாலை வசதி ஆகியவை கொடுக்கப்படுகிறது.

மோடிக்கு நெருக்கமான அம்பானி குழுமத்திற்கு 7500 கோடி மதிப்புள்ள 5 கோடி சதுர மீட்டர் நிலத்தை வெறும் 160 கோடிக்கு கொடுத்து கார்ப்பரேட் சேவை செய்ததும், அந்த இடத்தை அந்நிறுவனம் பிளாட் போட்டு விற்பனை செய்ததும் அனைவரும் அறிந்ததுதான். ஆக மோடியின் குஜராத் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான மாடல் என்பது சரிதானா?

6. இரண்டே ஆண்டுகளில் இப்படி பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு மோடி காட்டிய சட்டவிரோத சலுகைகளால் அங்குள்ள மக்களுக்கு சேரவேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கஜானாவில் சேரவில்லை என மத்திய தணிக்கைக்குழு சுட்டிகாட்டியதை தீர்க்கதரிசியானமோடியின் கள்ள மவுனம் செரித்துவிடவில்லையா?

7. கடந்த 8 ஆண்டுகளில் குஜராத்துக்கு 87 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு பெற்றதாக மோடி புளுக, இல்லை இக்காலத்தில் வந்த முதலீடு வெறும் 720 கோடிதான் என அந்த புளுகு எட்டே நாளில் ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் வெளுத்ததை காவிக் கூட்டம் சொல்ல மறந்தது ஏன்?

 8. நர்மதா ஆற்றின் தண்ணீரையும், நிலத்தடி நீரையும் பெருமுதலாளிக்கு தாரை வார்க்கும் மோடி அரசை எதிர்த்து அங்கு விவசாயிகள் போராடுவதையும், அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகளையும் ஊடகங்கள் மூடி மறைப்பதும், பல லட்சம் விவசாயிகள் பலனடையும் சர்தார் சரோவர் அணை திட்டத்தை அமலாக்காமல் ஏமாற்றுவதை எழுதாமல் இருப்பதும் மோடி அரசின் விளம்பரங்களுக்காகதானே?

9. ஆண் பெண் விகிதாசாரத்தில் மிகவும் மோசமான இடத்தில் குஜராத் இருக்கிறது. 1000க்கு 919 பெண்களே உள்ளனர். ஊட்டசத்து குறைந்த பெண்கள் நிறைந்த மாநிலமும் இதுவே. இதற்கு மோடி சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நகர் புறத்து பெண்கள் சாப்பாட்டைவிட மேக்கப்பில்தான் கவனம் செலுத்துகிறார்கள் அதற்குதான் செலவு செய்கிறார்கள்” என்று நக்கல் அடித்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது பல்டி அடித்ததும் மோடியின் குரூர புத்தியின் ஒரு துளி அல்லவா?

10. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மின்மிகை மாநிலமாய் இருக்கும் குஜராத்தில் இன்றுவரை 11 லட்சம் வீடுகள்மின் இணைப்பு இல்லாமல் இருகிறது. அதுமட்டுமா 1 கோடியே 20 லட்சம் குடும்பங்களில் 63 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருப்பதும், பல லட்சம் மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் அலைவதும் வளர்ச்சியின் குறியீடா மிஸ்டர் மோடி?

11. மனுநீதியை அமலாக்க ஆர்.எஸ்.எஸ் கொடுத்த பயிற்சியை குடிநீர் கொடுப்பதில்கூடவா காட்டவேண்டும். பாவ்லா தாலுகா தன்வாடா கிராமத்தில் எந்த எந்த சாதியினருக்கு எப்போது தண்ணீர் விடப்படும் என பம்பு செட்டு சுவற்றில் பட்டியல் எழுதிவைக்கும் அளவுக்கு மோசமாக இருக்கிறது.

கடைசியாக தண்ணீர் இருந்தால் தலித் மக்களுக்கு கிடைகும் நிலைதான். வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய இதை ரசித்தபடியே மோடி பவணி வருவது நியாயமா?

12. “பூரண மதுவிலக்கு அமலாக்கப்பட்ட குஜராத்தில் போன் செய்தால் சாராயம் வீடுதேடிவரும்” இது தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேச்சு.. சட்டமன்ற பதிவேட்டில் உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சியில் குழாய் மூலம் சாரயம் விற்றவர்கள் இப்போது டோர் டெலிவரி செய்கிறார்கள். மோடி அவர்களே தாங்கள் வித்தியாசமான தலைவர்தானா?

13. வறுமை ஒழிப்பில் குஜராத் மிகவும் பின்தங்கி இருக்கிறது. பழங்குடியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் வறுமையை ஒழிப்பதிலும் நாட்டில் மிகவும் பின்தங்கிய மாநிலம் குஜராத்தான். குழந்தை இறப்பை தடுப்பதில் தோல்வி, பொதுவிநியோக முறை சீரழிந்த நிலை.மக்களின் சுகாதார நலன் புறக்கணிக்கப்படுவது அதாவது கிராமப்புறத்தில் 67 சதவீத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை போன்றவை திட்ட கமிஷன் அறிக்கையின் ஆதாரங்கள். வெறும் வாய் சவடால் மூலம் இதை மூட முயற்சிப்பது நியாமதானா மோடி?

14 கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு 2 லட்சம் வேலை வாய்ப்புகளை வெட்டிச் சுருக்கிவிட்டது., அனைத்து துறைகளிலும் 2500 ரூபாய் சம்பளத்தில் அத்துக்கூலிகளாக இளைஞர்களை அலையவிடுவதுதான் இந்தியாவுகான முன் மாதிரியா?

 15. ஐசோதாபென் என்கிற பெண்ணை உங்களுக்கு தெரியுமா? 14 வயதான சிறுமியை 17 வயதில் திருமணம் செய்த தாங்கள் இன்றுவரை அவரை நிம்மதியாய் வாழவிடாமல், கண்காணிப்புடன் வெளியே பேசவிடமல் வைத்திருப்பது யாருக்குத் தெரியும்? ஓப்பன் என்கிற பத்திரிகை இச்சம்பவத்தை வெளியே சொல்லும் வரை. ஏனெனில் நீங்கள் பிரம்மச்சாரி என்ற பிம்பத்தை கட்டிக்காத்து வருகிறீர்கள் அப்படிதானே? தன்னை நம்பிவந்த பெண்ணை காப்பாற்றாத எந்த ஒரு மனிதனும் தன் நாட்டை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எப்படி வரும்?

16. ஆசிஷ் கேத்தானை தெரியுமா மோடி? எப்படி மறப்பீர்கள்! உங்கள் அமைச்சரவையில் இருந்த மாயா கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனையும், பாபு பஜ்ராங்கிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்த தெகல்கா நிருபர் அவர்.

2002 ல் நீங்கள் செய்த இன அழிப்பில் உங்கள் கையில் படிந்த இரத்த கரையின் சாட்சி அவர். நீங்களும் சிறைக்கு செல்லும் காலம் நெருங்குகிறது. ஆகவே கார்ப்ரேட் கைகளில்தஞ்சம் அடைந்து, அவர்களுக்கு சேவகம் புரிந்து, இந்த நாட்டின் உட்ச பதவியை அடைய கனவு காண்கிறீர்கள். கனவு காண்பது அனைவருக்கும் உரிமை! உங்களுக்கு என்ன தடை?

17. நவீன ஊடகங்களான இணையத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கூலிப்பட்டாளத்தை வைத்து உங்களை பின்தொடர்பவரகள்

18 லட்சம் பேர் என ஆகாசபுளுகை அள்ளிவிட்டுக்கொண்டிருந்தீர்கள், கூலிக்கு மார் அடிக்கும் ஐ.டி கம்பெனிகளை நீங்கள் வாடகைக்கு வைத்துதான் இணைய உலகை ஏமாற்றுகிறீர்கள் என்பதை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்திவிட்டது. உண்மையை ஒருநாளும் நீங்கள் நம்பப் போவதில்லையா மோடி அவர்களே?18 உங்கள் காவி கட்சியில் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு தொலைகாட்சியின் மூன் லஞ்சம் வாங்கியது பழைய சம்பவமாக இருக்கட்டும். சமீபத்தில் லைம்டோன் சுரங்க வழக்கில் 54 கோடி கொள்ளையடித்த பாபு போக்கிரியாவுக்கு மந்திரி பதவி கொடுத்ததாகட்டும் எதற்காகவாவது வெட்கப்பட்டிருக்கிறீர்களா? சொல்லுங்க மோடி... சொல்லுங்க!

(கேள்விகளுக்கு உதவிய ஆதார நூல்: நரேந்திர மோடி நாமம் - கோவி.லெனின்)

- நன்றி : தீக்கதிர் - 14-12-2013

Wednesday, December 4, 2013

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன?



சட்டம் - ஒழுங்கு கடும் பாதிப்பு - ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இரட்டை வேடம்!

தி.மு.க.வுக்கே வாக்களித்து தடம்புரளாமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவீர்!

ஏற்காடு தொகுதி மக்களுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!


சங்கர்ராமன் படுகொலை வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - கி.வீரமணி அறிக்கை

நடக்கவிருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க. வுக்கே வாக்களித்து ஜனநாயகம் தடம் புரளாமல் காப்பாற்றவேண்டும் என்று ஏற்காடு தொகுதி வாக் காளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியன்று, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற விருக்கிறது. இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், உண்மையான எதிர்க்கட்சி தி.மு.க.தான் என்று ஜன நாயகத்தைக் காக்கும் வகையில் நாட்டுக்கு அறிவிக்கும் வகையில் தி.மு.க.வும் போட்டியிட களத்தில் இறங்கி யுள்ளன.

இடைத்தேர்தல் முடிவு

ஒரு இடைத்தேர்தலின் முடிவு ஆட்சியை மாற்றப் போவதில்லை; ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தேவை யான வாக்காளர்களின் மனநிலை எப்படி ஆட்சியின் பால் உள்ளது என்பதற்கான எடைமேடை அல்லவா?

செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.

இதில் அவரது ஆட்சியில் ஏற்கெனவே பொதுத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டுள்ளனவா? ஏற்கெனவே வாக்களித்த மக்களின் நம்பிக்கை இவ்வாட்சியின்மீது அதேபோல் உள்ளதா, குறைந்திருக்கிறதா என்று அளந்து பார்க்கும் அரசியல் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.

அதேநேரத்தில், இது ஒரு சம போட்டி என்றும் கருதிட முடியாத அளவுக்கு, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் பற்றிய ஏராளமான புகார்கள் பறப்பதை வைத்துப் பார்க்கையில், நிச்சயம் சமவாய்ப்பில் லாத போட்டி என்ற நிலையே உள்ளது.

மக்களின் அதிருப்தி அலை கரைபுரண்டு ஓடினாலும், அதைப் பல வகையிலும் - பண பலம், இன பலம், பத் திரிகை பலம், அதிகாரவர்க்க பலம் இவை ஆளுங் கட்சியினருக்கு உள்ள ஒரு கூடுதல் வாய்ப்பு.

அவையெல்லாவற்றையும் பொருட்படுத்தாமல் ஜன நாயகக் கடமையைச் செய்ய முன்வந்துள்ள தி.மு.க. முடிவும் இடையறாத முயற்சிகளும் பாராட்டத்தக்கவை.

எதிர்க்கட்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள கட்சியோ, தேசியக் கட்சிகள் என்பவைகளோ தேர்தலில் போட்டி யிட்டு, ஆளுங்கட்சியின் பல்வேறு வசதி வாய்ப்புகளோடு ஈடுகொடுத்து போட்டி போட முடியாது என்று தயங்கி, பின்வாங்கிவிட்ட நிலையில், ஒதுங்கிக் கொண்டுவிட்டன. தி.மு.க. முன்வந்து களத்தில் துணிவுடன் இறங்கி தனது தேர்தல் பணிகளை எதிர்நீச்சலாக செய்து வருகிறது!

கடந்த காலத்தில் ஆளும் கட்சியின் சாதனைகள் என்ன?

ஆளுங்கட்சியின் ஆளுமை கடந்த ஆண்டுகளில் எப்படி இருக்கிறது என்று சீர்தூக்கிப் பார்த்து, வாக் களிக்க வேண்டிய கடமை ஏற்காடு வாக்காளர்களுக்கு உண்டு.

1. ஆட்சியை ஏற்ற மூன்றே மாதங்களில் மின்தட்டுப்பாட்டை - மின்வெட்டை நீக்குவோம் என்று வாக்குறுதி தந்து வந்த ஆட்சியில் இன்றுள்ள மின்வசதி எப்படி உள்ளது?

2 மணிநேர மின்வெட்டு அதுவும் சிலகாலம் ஏற்பட்டதற்காக தி.மு.க.வை அதற்காக குறை கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அவர்களது ஆட்சியில் வெளியூர்களில் மூன்று மணிமுதல் 10 மணிநேரம்வரை மின்வெட்டு; அதுவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரங்கள்!

விவசாயிகள், வீட்டு உபயோகிப்பாளர்கள் இருட்டு வேதனை ஒருபுறம் என்றால்,  குறு, சிறு தொழில் செய்வோர் குறிப்பாக கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலை இழந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் துயரமும், துன்பமும் நாளும் குறையாமல் பெருகிய வண்ணம் உள்ளது!

தொழிற்சாலை நடத்துவோர் கோடிக்கணக்கில் முதலீடு - கடன் வாங்கிச் செய்யும் எங்களது இயந்திரங் கள் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக ஓட்டப்பட்டால்தான் பழுதடையாமல் இருக்கும்; இப்பொழுது விட்டுவிட்டு வரும் மின்வெட்டு காரணமாக அந்த இயந்திரங்களும்கூட பழுதாகி, கூடுதல் இழப்பு ஏற்படும் அபாயம் பெருகுகிறது என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார்கள்.

சில மாதங்கள்முன் மின் மிகை மாநிலமாகும் விரைவில் என்று கூறப்பட்டது; ஆனால், இப்போது ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல பல மணிநேரம் மின்வெட்டு, இருட்டு - அதன் காரணமாக பெருகிடும் திருட்டு, கொள்ளைகள், கொலைகள் - என்னே கொடுமை!

தமிழக அரசு இதற்கு ஒரு புது காரணம் கூற முற்பட் டுள்ளது; மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை; தமிழக அரசுக்கு எதிரான சதி என்றெல்லாம் கூறி, மத்திய அரசு மீது பழிபோடுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதாகாது.

மேட்டூர், தூத்துக்குடி முதலிய பல மின் நிலையங்கள் மத்திய அரசு நிர்வகிப்பதன்று. கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது தற்போது உருவான ஒன்று - அது இன்னும் முழுமையான உற்பத்தி பெருக்கத்திற்கு வராத நிலை. அதுவே ஏற்கத்தக்கக் காரணம் ஆகிவிடுமா?

ஒன்று முந்தைய தி.மு.க. ஆட்சிமீது குற்றச்சாற்று; இன்றேல் மத்திய அரசின்மீது பழி. இவைகளால் மக்கள் குறைகளை எவ்வளவு காலம் திசை திருப்ப முடியும்?

வளர்ச்சித் திட்டங்களுக்காக மற்ற மாநிலங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வாதாடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன?
அடுத்தவர்மீது பழிபோடுவதா?

ஏற்கெனவே பணி தொடங்கப்பட்ட திட்டங்களைக் கூட, ஒத்துழைப்புத் தராது முடக்கப்படும் நிலையை ஒரு மாநில அரசே செய்யும் அவலம் - இதுவரை கேள்விப்படாத ஒன்று அல்லவா?

1885 கோடி ரூபாய் திட்டமான மதுரவாயல் பறக்கும் திட்டம்மூலம், சென்னை துறைமுகத் திலிருந்து நேரடியாக விரைந்து சரக்குகள் - சாலைப் போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் அத்திட்டத்திற்கு இதுவரை 900 கோடி செலவிட்ட நிலையில், தமிழக அரசால் இது தடை செய்யப்பட்டு, இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போடப் பட்டுள்ளது. இதுதான் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலா?

பிரதமர் மன்மோகன்சிங் தனது ஆலோசகர் நாயர் தலைமையில் ஒரு குழு, தமிழக முதலமைச்சரைச் சந்தித்து, இத்திட்டத்திற்கு ஒப்புதலை விரைவுபடுத்த கேட்டுக்கொண்டது - விழலுக்கு இரைத்த நீர்தானா?

2. தமிழகத்தில் பத்தாயிரம் கோடிக்கான நெடுஞ் சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழையாமையால் ஏராளமாய் முடங்கிக் கிடக்கின்ற அவலம் மற்றொரு புறம்! சேது சமுத்திரத் திட்டத்தில் அந்தர்பல்டி!

3. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஏன் மத்திய அரசு விரைவுபடுத்தவில்லை என்று இரண்டு தேர்தல் அறிக்கைகளில் கேள்வி கேட்டு துளைத்து, இப்போது தி.மு.க.வின் இடைவிடா முயற்சியால் அத்திட்டத்திற்கு ரூ.800 கோடிக்கு மேல் செலவழிக்கப்பட்டு, இன்னும் 12 கிலோ மீட்டர்தான் முடிவடைய இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடையாணை வாங்கி, மணல் திட்டு - ஆதாம் பாலம் -என்று முன்பு சொன்னதையே மாற்றிக் கொண்டு, இப்போது இராமர் சேது பாலம் அதை உடைக்கக் கூடாது என்றும், மீன்வளப் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இல்லாத காரணத்தைக் காட்டி, தென்மாவட்டங்களின் பெரும் வளர்ச்சித் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கி வைத்தவர்கள்தான் வாக்குகளை அள்ள ஏற்காடு வருகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு மோசமோ மோசம்!

சட்டம் ஒழுங்கு என்பது ஒரு ஆட்சிக்கு முக்கியம். கொலை, கொள்ளை, செயின் அறுப்பு என்பவை நிகழாத நாள்கள் உண்டா?

எனது ஆட்சியில் கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவிற்கு ஓடிப் போய்விட்டார்கள் என்று முதல்வர் கூறியதை, மக்களால் மறக்க முடியுமா? இப்போது என்ன நிலை?

மூன்று ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாத கொலைகள் திருச்சி இராமஜெயம், மதுரை பொட்டு சுரேஷ் - இப்படி பல - மக்களிடையே உள்ள கேள்விகள் இவை!

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் இரட்டை வேடம்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கோ பெரும் வாய்ப்பூட்டு! குரல்வளை நெரிக்கப்படுவதுபோல பேச்சுரிமை மறுப்பு - மீறினால் வெளியே தள்ளுவதும், கடும் நடவடிக்கை எடுப்பதும்!

சட்டமன்றத்தில் இல்லாதவர்கள், பொறுப்பான தலைவர்கள்மீது தரக்குறைவான தாக்குதல் விமர் சனங்கள் - அதற்காக அத்தகைய சாதனையாளர் களுக்கு பதவிப் பரிசுகள்! தமிழ்நாட்டு ஜனநாயகத் தின்(?) விசித்திரங்கள் இவை!

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் இரண்டு தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்த அ.தி.மு.க. அரசு, தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து, எதிர்த்தவர்கள்மீது வழக்கைப் போட்டு சிறைக்கு அனுப்பியது ஏன்?

இது இரட்டை நிலைப்பாடு, இரட்டை வேடம் என்பது உலகத் தமிழர்களுக்கு விளங்கிவிட்டதே! வாக்காளர் களுக்கு - ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உண்மையாக பாடுபட்டு வருபவர்கள் யார் என்பது புரிந்துவிட வில்லையா?

விரிக்கின் பெருகும் என விடுத்து, ஏற்காடு வாக்காளர்களே,

ஜனநாயகம் காக்க, ஆளுங்கட்சி சரியான முறையில் ஆட்சி செய்ய, நீங்கள் மற்ற சபலங்களுக்கு ஆளாகாமல், தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தால், ஆளுங்கட்சி சற்று சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

தி.மு.க.வுக்கே வாக்களிப்பீர்!

தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வது, தி.மு.க.வுக்காக மட்டுமல்ல; ஜனநாயகம் காக்க, மக்கள் தீர்ப்பின்மூலம், இடிப்பாரை மக்கள் தீர்ப்பாக அது அமைந்து தடம்புரளும் ஜனநாயகம் சற்று நிதானித்துத் தடத்தில் எஞ்சிய காலத்தில் பயணிக்க உதவியதாக அமையக்கூடும் என்பதால் கூறுகிறோம்.

இன்றேல், நட்டம் தி.மு.க.வுக்கு அல்ல; தமிழர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு - ஜனநாயகத்திற்கு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

சென்னை    தலைவர்,
28.11.2013    திராவிடர் கழகம்.

குறிப்பு: இதனைத் துண்டறிக்கையாக ஏற்காடு தொகுதி திராவிடர் கழகத் தோழர்கள் வழங்குவார்கள்.

பெரியார் வெறும் சிலையல்ல - சீலம்! பெரியார்காணவிரும்பியஉலகம்சித்தரிக்கப்படும்

பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலை

பெரியாருக்குமுன்-பெரியாருக்குப்பின்-உட்பட

பெரியார்காணவிரும்பியஉலகம்சித்தரிக்கப்படும்

பெரியார் வெறும் சிலையல்ல - சீலம்!


தஞ்சை, டிச.3- தந்தை பெரியார் வெறும் சிலையல்ல - சீலம் - தத்துவ விளக்கம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

2.12.2013 அன்று தஞ்சையில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு 1000 பவுனுக்குரிய தொகை வழங்கும் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு, இயற்கை யோடு போராடி, மழையோடு போராடி, மழை நம்மை மிரட்டி னாலும், இந்த மக்கள் மழையையும் மிரட்டுவார்கள் என்று சொல் லக்கூடிய அளவில், ஒரு மகத்தான வரலாற்று பூர்வமான நிகழ்ச்சியாக இந்த தஞ்சையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக் கக்கூடிய பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் மானமிகு அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்களே,

கடமைக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில், இறுதியில் தந்தை பெரியார் அவர்களுடைய 95 அடி உயர சிலை, மிகப்பெரிய பெரியார் உலகம், அதில் பெரியார் அவர் களுடைய சாதனை இவற்றையெல் லாம் உள்ளடக்கமாக வைக்கப் படக்கூடிய அந்தத் திட்டத்திற்கு, முதல் தவணையாக நிதி திரட்ட வேண் டும் - அது ஆதார நிதியாக முயற்சி களுக்கு அமைய வேண்டும் என்று முடிவெடுத்த நேரத் தில், நம்முடைய தோழர்கள் மட்டுமல்ல, அனைத்துப் பெருமக்களும், எல்லையற்ற மகிழ்ச்சி யோடு ஒரு சிறு சங்கடத்தைக் கூட பெறாமல், ஒரு பவுன் என்று சொன் னால், ரூ.25 ஆயிரம் என்று கழகம் முடிவு செய்து - அதனைத் தாருங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்த நேரத்தில், ஒன்றரை மாத குறுகிய காலகட்டத்தில், நம்முடைய தோழர்கள் தேனீக்களைப் போல பறந்து பறந்து, பெரியார் பற்றா ளர்கள் உள்பட எல்லோரிடத்திலும் மிகப்பெரிய அளவிற்கு நிதியைத் திரட்டி, நாங்களேகூட எதிர்பாராத வகையில், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொருளாளர் என்ற தனித் தகுதியும், அதே நேரத்தில், நாளைய தமிழகம் இவரால்தான் விடியல் பெற இருக்கிறது என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பையும் பெற்ற எனது அருமை சகோதரர் அவர்கள், தளபதி அவர்களுடைய வருகை, இந்த முயற்சியை மென்மேலும் எங்களுக்கு ஊக் கத்தைத் தந்திருக்கிறது.

அப்படிப்பட்ட தளபதி அவர்களே, பல பேர் இங்கிருந்து மலையேறுகிறார்கள்; மலைக்குச் சென்ற நீங்கள் மக்களைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள். அங்கும் மக்களிடத்தில் என்ன கடமையைச் செய்ய வேண்டுமோ, அந்தக் கடமையைச் செய்திருக் கிறீர்கள். அந்தக் கடமைக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.

சமுதாய இழிவு ஒழிவதற்காக யார் பாடுபடுகிறார்களோ, அவர்கள்தான் முக்கியம்!

நீங்கள் தளபதி என்பதற்கு அடையாளமே, மற்றவர்கள் போரிடத்தயங்கி ஒதுங்கிக் கொண் டிருக்கக் கூடிய காலத்தில்கூட, நான் தளபதி கடைசிவரையில் போரிடுவேன், எனக்கு வெற்றி - தோல்வி என்பதுகூட இரண்டாம் பட்சம்தான் என்ற நிலையில், அந்த அரசியல் போராட்டத்தில், நீங்கள் களத்தில் கடைசி கட்டத்தில் நின்று, அதற் கடுத்தபடியாக, இங்கே இணைப்புரை வழங்கிய, டாக்டர் அன்பழகன் கூறியதைப் போல, எது தாய் வீடோ, அந்தத் தாய் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள்; ஈரோட்டுக் களத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது ஈரோட்டுக்களம் மட்டு மல்ல, இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம். ஆகவேதான், மிக முக்கியமாக இங்கே வந்திருக்கின்ற உங்களுக்கும், அதேபோல, இந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் மழையையும் பொருட்படுத்தாமல், டில்லி யில் நடைபெறவிருக்கின்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் - அதே நேரத்தில், எங்கள் சமுதாய இழிவு ஒழிவதற்காக யார் பாடுபடுகிறார்களோ, அவர்கள்தான் முக்கியம் என்று சொல்லி, தளபதி அவர்கள் கூறி யதைப்போல, இரட்டைக்குழலாக திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் இருப் பதைப்போல, அதில் இன்னொரு குழலும் இணைந்தது - அதுதான் விடுதலை சிறுத்தை களுடைய அமைப்பு என்று சொல்லத்தகுந்த அளவிலும், இவைகளுக்குத் தோட்டா வழங்கு வதற்குத்தான் பக்கத்தில் இருக்கின்ற இரண்டு பேர் இருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்; அதுபோல, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையினுடைய இணையற்ற பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

மேடையில் வீற்றிருக்கக்கூடிய அருமை இன் னாள், முன்னாள் அமைச்சர் பெருமக்களே மற்றும் பெருமக்களே, ஒவ்வொருவரையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமின்மை காரணத்தால், நான் சுருக்கமாக என்னுடைய நன்றியுரையை, ஏற்புரையை இங்கே வழங்கவிருக்கிறேன்.

மழையையும் பொருட்படுத்தாமல் வெள்ளம் போல் திரண்டிருக்கின்ற உங்களுக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1005 பவுனுக்குரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்கள்!

தோழர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்; தஞ்சை தந்தை பெரியார் அவர்களுக்கு மிகப்பெரிய நஞ்சை. அந்த அடிப்படையில்தான், அதிகமாக எந்த மாவட்டம் வசூலிக்கிறதோ, அந்த மாவட்டத் தில்தான் விழா என்று சொன்னவுடன், தஞ்சை தோழர்கள்தான் இந்த இடத்தில் அந்த விழா நடைபெறவேண்டும் என்று முயற்சி எடுத்து, அதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 1000 பவுன் தருவதாகச் சொல்லி, இங்கே கொடுத்திருப்பதோ, 1005 பவுனுக்குரிய தொகையைக் கொடுத்திருக் கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்வத்தோடு கொடுத்திருக்கிறார்கள்; எல்லோ ரும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. நேற்று காலையில் நான் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களைப் பார்த்து, அவருடைய வாழ்த்தினைப் பெற்று, நான் வந்தேன். மாலையில், பேராசிரியர் அவர்களிடத் திலும் செல்லவேண்டும் என்ற உணர்வோடு, நம் முடைய இனமானப் பேராசிரியர் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது சொன்னேன், இயக்கப் பொறுப் பாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றும், மிகுந்த ஈடுபாடோடும், உறுதியோடும், விரைவாகவும் செய்கிறார்கள் என்று சொன்னேன்.

திராவிடர் கழகக் கேட்டிற்குள் நுழைந்தாலே அது தானே வந்துவிடுமே!

உடனே பேராசிரியர் அவர்கள் சொன்னார், அது இருப்பதால்தானே திராவிடர் கழகத்தில் இருக்கிறார்கள்; திராவிடர் கழகக் கேட்டிற்குள் நுழைந்தாலே அது தானே வந்துவிடுமே என்று சொல்லிவிட்டு, நாங்கள் விடைபெறும்பொழுது, ஒரு நீள கவரில் ரூ.25 ஆயிரத்தினை வைத்து, பெரியார் உலகத்திற்காக நிதி என்று சொல்லி, என்னுடைய பெயரையும் எழுதிக் கொடுத்தார்கள். அது இன்றைய விடுதலையிலும் செய்தியாகவும் வெளிவந்துள்ளது.

இங்கே விடுதலை சிறுத்தைகளின் சார்பாக, ரூ.50 ஆயிரத்தினை பெரியார் உலகத்திற்காக அளிக் கிறேன் என்று அறிவித்தார்கள். நாளை அதனை உங்கள் அலுவலகத்தில் வந்து கொடுக்கிறேன் என்று சொன்னார்கள்.

தமிழ்ச் சமுதாயத்தினுடைய நன்றிக் கடன்!

பணம் முக்கியமல்ல நண்பர்களே, நம்முடைய இனத்தினுடைய உறுதிப்பாடு இதில் இருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தினுடைய நன்றிக் கடன் என்பது வந்திருக்கிறது.

தளபதி அவர்களுக்குத் தொல்லை கொடுத் தார்களே என்று எனக்கு வருத்தம்தான். ஏனென் றால், கடந்த மூன்று நாள்களாக ஓய்வின்றி சுற்று பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அப்படிப் பட்டவருக்கு நாம் தொந்தரவு கொடுக்கவேண்டுமா என்று கழகத்தவரிடம் தெரிவித்தபொழுது, தளபதி அவர்களே மகிழ்ச்சியாக, மாலை 5 மணிக்கு தேர்தல் பிரச்சாரத்தினை முடித்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறார் என்று சொன் னால், இங்கே கொடுக்கப்பட்ட நிதியினை திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களும், தலைவர்கள் முன்னிலையில், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத் தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை, இன்னும் ஏனைய பற்றாளர்கள் ஆகியவர்களின் முன்னிலையில் வழங்கியிருக்கிறார்கள்.

இந்த விழாவிற்கு தளபதி வந்ததில் ஒரு மிகப் பெரிய பொருத்தம் என்னவென்று சொன்னால், பெரியார் சமத்துவபுரம் திட்டம் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்தனை சமத்துவபுரத்திலும் பெரியார் சிலையை திறந்து வைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால், அவர்தான் நம்முடைய தளபதி அவர்கள்; சமத்துவபுரம் இந்த நேரத்தில், கொஞ்சம் அலட்சியப்படுத்த புரமாககக்கூட இருக்கலாம், ஆட்சியாளர்களால்! ஆனால், அது நிரந்தரமல்ல நிச்சயமாக! பெரியாரை அலட்சியமாகக் கருதியவர் களை, மக்கள் அலட்சியப்படுத்துவார்கள் என்பது தான் வரலாறு.

கலைஞர் அவர்கள்தான் எமது 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னின்று நடத்தினார்

அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தளபதி அவர்கள் இந்த விழாவிற்கு வந்து, ஒரு சிறப்பான பணியை செய்திருப்பதற்காக, நன்றியை தெரிவிக்கின்ற நேரத்தில், என்னுடைய பிறந்த நாள் விழாவை, நான் எப்பொழுதுமே கொண்டாடுவதை விரும்பாதவன் மட்டுமல்ல; தோழர்களிடமும்கூட அகப்படாதவன். ஆனால், என்னை முதலிலே சிக்க வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்னுடைய 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நான் முன்னின்று நடத்துகிறேன் என்று சொல்லி, 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை நடத்தினார்கள்; அவருடைய சொல் லைத் தட்ட முடியாமல், ஏற்றுக்கொண்டேன். அன்று எல்லோரும் என்னை சந்தித்தார்கள்; பிறகு அதேபோல, 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று சொன்னார்கள்; அதற்கு சரியென்று சொன்னேன்; இப்பொழுது 81 ஆம் ஆண்டு என்று சொன் னார்கள். சரி, இவ்விழாவில் என்னை முன்னிலைப் படுத்தக் கூடாது; தந்தை பெரியாரைத்தான் முன்னிலைப்படுத்தவேண்டும். ஆகவே, தந்தை பெரியாருக்குப் பேருருவச் சிலை; பெரியார் உலகம்; ஆகவே, அதனைச் செய்யவேண்டும் என்பதற்காக, முடிவு செய்து சொன்ன நேரத்தில், தோழர்கள் அற்புதமான ஒரு பணியினை முதற்கட்டமாக செய்து, 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் ரூபா யினை இங்கு முதல் தவணையாகக் கொடுத்திருக் கிறார்கள்.

தோழர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்!

பெரியார் உலகத் திட்டம் 15 ஆண்டுகாலத் திட்டமாகும். இந்த உலகம், பெரியாருக்கு முன்னால்; பெரியாருக்குப் பின்னால்; பெரியார் காண விரும்பிய சமுதாயம் - அறிவியல் சமுதாயம் - அறிவியலுக்கும், மூட நம்பிக்கைக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகள்; அறிவியலால் ஏற்படும் நன்மைகள்; மூட நம்பிக்கையால் ஏற்படும் தீமைகள்; இவைகளையெல்லாம் ஒருமுனைப்படுத்தி, ஒரே இடத்தில், ஒரு நகருக்குள்ளே, ஒரு உலகத்திற் குள்ளே சென்று திரும்பும்பொழுது, பழைய நம்பிக் கைகள் உள்ளவர்கள் கூட மாறிவருவார்கள் என்று சொல்லி, பெரியார் கண்ட, காண விரும்பிய ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்ற பணி, அங்கே தொடர்ச்சியாக இருக்கும். அதற்காகத் தோழர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அமீர கத் தமிழர்கள் இங்கே வந்து சிறப்பு செய்தார்கள்; தளபதி அவர்களுக்கும் சிறப்பு செய்தார்கள்.

பெரியார் சிலையாக மட்டுமல்ல, சீலமாகவும்!

அமீரகத் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வுகளை அங்கே நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அதுபோல, அமெரிக்காவில், பெரியார் பன்னாட்டு நிறுவனத்தின் சார்பாக, டாக்டர் சோம. இளங்கோ அவர்களும் இங்கே வந்திருக்கிறார்கள். பேராசிரியர் சாகு அவர்கள், பெரியாரின் கருத்து களை ஒடிசா மொழியில் மொழியாக்கம் செய்து, உத்கல் பல்கலைக் கழகத்தில் ஒடிசா அரசாங்கமே அந்த நூலினை வெளியிட்டிருக்கிறது. பெரியாரு டைய கருத்துகள் மிகப்பெரிய அளவிற்கு உலக ளாவிய நிலையில் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெருமை நிலைக்கவேண்டும் என்பதற்காகத் தான், எதிர்காலத்தில் இந்தப் பணியினை செய்யக்கூடிய வாய்ப்பினை இன்றைக்கு நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதற்கு சிறப்பான வகையில் ஒத்துழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்கின்ற நேரத்தில், பெரியார் சிலையாக மட்டுமல்ல, சீலமாகவும், வழிகாட்டுகின்ற ஒளி யாகவும் நமக்குப் பயன்படவேண்டிய ஒரு கால கட்டம் இப்பொழுது.

ஏனென்றால், பெரியார் கொள்கைகளை தலைகீழாக மாற்றிவிடலாம்; பெரியார், அண்ணா கொள்கைகளை - கலைஞர் ஆட்சி செய்தது; ஆகவே, அவர் செய்த காரியங்களையெல்லாம் தலைகீழாக மாற்றிவிடலாம் என்கிற ஒரு முயற்சி, ஆரியத்தாலே, இப்பொழுது திட்டமிட்டு நடத் தப்படுகின்றது. அது மிகப்பெரிய ஆபத்திற்குரிய ஒன்று.

அதற்காக நிறைய சொல்லவேண்டிய அவசிய மில்லை; அண்மையில் நடந்துகொண்டிருக்கக் கூடிய ஒரு செய்தியை உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன்.

சிதம்பரம் கோவில் வழக்கு!

சிதம்பரம் கோவில், நம்முடைய சோழர்கள் கட்டிய கோவில். அதற்கு ஆதாரங்கள் இருக் கின்றன. பராந்தர சோழன், பொன்மேடு வேய்ந் தான் என்பதெல்லாம் வரலாறு. எந்த ஒரு பார்ப் பனரும், இதுவரை ஒரு கோவில் கட்டியதாகக்கூட  வரலாறு கிடையாது. கோவிலில் நுழைந்த பெருச்சாளிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள், இதுதான் வரலாறு.

இவ்வளவு பெரிய கோவிலைக் கட்டிய, இதே தஞ்சையில் பெரிய கோவில், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கோவிலைக் கட்டிய, இராஜராஜ னுக்கு ஒவ்வொரு ஆண்டும் சதய திருவிழா மிகப்பெரிய அளவிற்கு நடைபெறுகிறது. ஆனால், அந்த சிலை எங்கே இருக்கிறது, கோவிலுக்கு வெளியேதான் இருக்கிறது; அதுவும் கலைஞர் எடுத்த முயற்சியால்தான். கலைஞர் எவ்வளவு பெரிய கெட்டிக்காரர் என்பதற்கு அடையாளம், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார். சிலையை உள்ளே வைக்க அனுமதி இல்லை என்று தொல்பொருள் துறை சொல்லியது. சரி, சிலையை வெளியே வைப்போம் என்று வெளியில் சிலை வைத்தார். உள்ளே போகவில்லை. இதிலிருந்து ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள், கோவில் கட்டு கின்ற தமிழன் வெளியில்தான் நிற்கவேண்டுமே தவிர, கோவிலுக்குள்  போக முடியாது; பார்ப் பான்தான் போக முடியும் என்பதை, சொல்லாமல் சொன்னார் கலைஞர். நாங்கள் வெளிப்படையாக சொல்வோம். இதுதான் திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள வேறுபாடு.

சிதம்பர ரகசியம் என்ற நூலில்...

அதுபோல, சிதம்பரம் கோவிலை, காலங் காலமாக சுரண்டித் தின்ற, 3000 தீட்சதர்கள்; அவர்களுக்குப் பெற்றோர்களே கிடையாது; நேராக மேலே இருந்து வந்தவர்கள் என்று அவர்கள் புராணம் எழுதி வைத்தார்கள். அவர் களுக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது; குழந்தை மணமா - அவர்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள். இதனை எடுக்கவேண்டுமென்று, எம்.ஜி.ஆர். ஆட்சியில்கூட அவர் கடுமையாக முயற்சி செய்தார்; பலரும் முயற்சி செய்தனர். அத்தனைப் பேரும் தோற்று போன இடத்தில், சிதம்பரம் நகர மக்கள், கோடானகோடி பக்தர்கள் - அங்கே திருவாசகம், தேவாரம் ஓதவேண்டும் என்பது வரலாறு - ஏற்கெனவே அந்தக் கோவில் தீட்சதர் களுக்குச் சொந்தமில்லை என்கிற தீர்ப்பு நூறாண்டு களுக்கு முன்பு வந்திருக்கிறது - அந்தத் தீர்ப்பினை கொடுத்தது யார் என்றால், முத்துசாமி அய்யர் - ஒரு பார்ப்பன நீதிபதிதான் இந்த வரலாற்றைச் சொல்லியிருக்கிறார் - சிதம்பர ரகசியம் என்ற நூலில் இந்தப் புள்ளி விவரங்களைக் கொடுத் திருக்கிறோம்.

இதையெல்லாம் ஆதாரமாக வைத்துத்தான், மிகப்பெரிய அளவில், அந்தக் கோவிலை, மக்களுக்காக, பக்தர்களின் கோரிக்கைக்காக - மிகப்பெரிய அளவில் அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்த பெருமை - கலைஞர் ஆட்சியைச் சார்ந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

உடனே சுப்பிரமணியசாமி போன்றவர்கள் வழக்கு மன்றம் சென்றார்கள்; தனி நீதிபதி அந்த வழக்கினை விசாரித்து, ஆணி அடித்ததுபோல அசைக்க முடியாத அளவில் தீர்ப்பு எழுதினார்.

பிறகு அவர்கள் மேல்முறையீடு செய்தார்கள்; மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் அமர் விலும், அரசாங்கம் கோவிலை எடுத்தது சரிதான் என்று தீர்ப்பளித்தார்கள்.

புள்ளி விவரத்தோடு சொன்னார்கள்; தீட்ச தர்கள் இருந்தபொழுது எவ்வளவு சுரண்டி னார்கள்; அரசாங்கம் எடுத்த பிறகு வருமானங்கள் முறையாக அறநிலையத் துறைக்கு வந்திருக்கிறது என்று அந்தத் தீர்ப்பில் சொன்னார்கள்.

ஆட்சிகள் மாறியவுடன், காட்சிகள் மாறு கின்றன என்று சொல்வதுபோல, ஆரியம் எப்படி சிலிர்த்து எழும்புகிறது என்பதற்கு அடையாளமாக, இப்பொழுது உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டுள்ளனர்.  எதைப்பற்றியும் கவலைப்படக் கூடியவர்கள் அல்லர் நாங்கள்!

உச்சநீதிமன்றத்தின் நீதிப்போக்கு எப்படி இருக்கிறது என்பது உலகம் முழுவதும் தெரியும். இது தனிக்கூட்டமாக இருந்தால் நான் விரிவாக உரையாற்றுவேன்;  எதைப்பற்றியும் கவலைப்படக் கூடியவர்கள் அல்லர் நாங்கள். ஆனால், இவர் களை யெல்லாம் மேடையில் வைத்துக் கொண்டு, அந்த வேலைக்கு நான் இப்பொழுது போகமாட் டேன். ஆனால், தேவைப்படும்பொழுது நாங்கள் நிச்சயமாக அதனைச் செய்வோம்.

கடவுளையே தூக்கி எறிகின்ற நமக்கு, நீதிமன்றம் என்ன? நீதியாக இருந்தால், அது நீதிமன்றம். நீதியைப் போட்டு புதைக்கின்ற மாதிரி இருந்தால் - யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று வந்தால், நீதிமன்றத்தினுடைய யோக்கியதை என்னவென்று இப்பொழுது உங்களுக்குப் புரியாதா?

ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள்!

சங்கரராமன் கொலை வழக்கில் என்னாயிற்று. 81 சாட்சியம் பிறழ் சாட்சியம். தர்மம் வென்றது; உண்மை நிலைத்தது என்று விளம்பரம் கொடுக் கிறார்கள். தர்மம் எப்படி வென்றது என்றால், கொலை செய்யப்பட்ட அய்யரின் மனைவியைக் கேளுங்கள்; ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தியைப் பாருங்கள் உண்மை புரியும்- இதுதான் நீதிமன்றத்தின் போக்குகள்.

உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதி கங்குலி அய்யர்; அவர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்தார்; அவர்தான் 2ஜி வழக்கு களில், ராசா போன்றவர்கள் பதவியில் இருக்கக் கூடாது என்று சொல்லி, பதவி விலகவேண்டும் என்று சொன்னாரே, தி.மு.க.விற்கு அவமானத்தை உண்டாக்கவேண்டும் என்பதற்காகச் செய்தார் களே, அந்தக் கங்குலியின் இன்றைய பெருமை என்ன? பெண்ணிடத்தில் தவறாக நடந்துகொண் டார்; அவருக்கு என்ன வயது? உச்சநீதிமன்றத்தின் நீதிபதியினுடைய யோக்கியதையை ஒரு பெண் வழக்குரைஞர் சொல்லும்பொழுது, நீதி, நியாயம் என்று நினைக்கும்பொழுது, எங்களுடைய ரத்தம் கொதிக்கிறது - பெரியார் தொண்டர்களாகிய எங்களுக்கு அடுத்த தேர்தலைப்பற்றி கவலை யில்லை - அடுத்த தலைமுறையினரைப்பற்றித்தான் கவலைதான் எங்களுக்கு.

சுப்பிரமணியசாமி உண்மையைப் பேசுபவரா?

சிதம்பரம் கோவில் சம்பந்தமாக, சுப்பிரமணிய சாமி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யும்பொழுது, தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரும் மேலே இருந்து குதித்தார்கள் என்று சொன்னவுடன், உடனே தடையாணை வருகிறது. 3 ஆம் தேதியன்று தமிழக அரசு பதில் சொல்லவில்லையானால், சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்கே உரியது என்று நீதிபதி கூறியதாக, சுப்பிரமணியசாமி சொல்லி யிருக்கிறார். சுப்பிரமணியசாமி உண்மையைப் பேசுவாரா என்பது வேறு விஷயம். ஆனால், அதேநேரத்தில், அப்படி இருந்தால், அதன் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? கலைஞர் என்ன அவருக்காகவா செய்தார்; மக்களுக்காகத்தானே செய்தார். தி.மு.க.வுக்கு என்ன நட்டம்? தி.க.வுக்குத்தான் என்ன நட்டம்?

நீதிக்கட்சியினால் கொண்டு வரப்பட்ட சட்டம்

சில பேர் புரியாமல் கேட்கிறார்கள், இவர்கள் தான் கடவுள் இல்லை என்கிறார்களே, அவர் களுக்கு எவன் கொள்ளையடித்தால் என்ன என்று; இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டமே - நீதிக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். அந்த வரலாற்றினை தெரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்து கொண்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் தொடர் பான வழக்கு வருகின்ற நேரத்தில், தமிழக அரசின் சார்பில், ஜூனியர் வழக்கறிஞர்கள் இரண்டு பேர் இருந்தார்கள் என்று சொன்னால், இது என்ன கொடுமை?

மனித உரிமை என்பதுதான் மிக முக்கியம்

இந்தக் கூட்டத்தின் வாயிலாக, தமிழக அரசிற்கு ஒரு வேண்டுகோளை நாம் வைக்கிறோம்; ஒரு அரசு செய்த காரியம்; இன்னொரு அரசு என்று வரும் பொழுது - அது கொள்கை முடிவாக வந்த நேரத்தில் - அதனை நிச்சயமாக அலட்சியப்படுத்தக் கூடாது; அலட்சியப்படுத்த முடியாது; அதுமட்டு மல்ல, அது எந்தக் கட்சி செய்தது என்பது முக்கியமல்ல; அதில் இருக்கின்ற நியாயங்கள் மிக முக்கியம். அதனை செய்யவேண்டும். மீறி, வேறு விதமாக நடந்தால், மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்பது மிகமிக முக்கியமானது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் தெளிவாக இருக்கிறார்கள்; திரா விடர் கழகம் தெளிவாக இருக்கிறது. பக்தர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதில் பக்தி இருக் கிறதா? பக்தி இல்லையா? என்பது முக்கிய மல்ல; மனித உரிமை என்பதுதான் மிக முக்கியம். இப்படி எத்தனையோ பிரச்சினைகள்.

ஒரு பக்கம் ஜாதியம், இன்னொரு பக்கம் மதவெறி இவைகளெல்லாம் வருகின்றபொழுது, பெரியார் சிலையாக நின்றால் மட்டும் போதாது; பெரியாரைப் பின்பற்றப்படவேண்டிய சீலமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி என்று சொல்லி, கொட்டும் மழையானா லும், கொளுத்தும் வெயிலானாலும் கொள்கை யாளர்களுக்கு அவை பொருட்படுத்த முடியாத வைகள்; எங்களுடைய பயணங்கள் என்றும் தடைபடாது; சென்றுகொண்டே இருக்கும்.

அதேநிலையில், இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி, நன்றி!

கூடுதல் தகுதியோடு அந்தப் பணியை செய்வார் நம் தளபதி!

அதேநேரத்தில், இந்த சிலை, நிச்சயமாக, இந்தப் பெரியார் உலகம் இன்றைக்குத் துவக்கத்தை நம்முடைய தளபதி செய்திருக்கிறார்கள்; ஆனால், அடுத்தபடியாக, நிச்சயமாக அந்தப் பெரியார் உலகத்திற்கு தளபதி அவர்கள் அங்கே வருவார்கள்; அந்தப் பணியை செய்வார்கள்; அதுமட்டுமல்ல, அப் பொழுது கூடுதல் தகுதியோடு அந்தப் பணியை செய்வார் என்பதை நான் மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் சொல்லி, இது எங்கள் விருப்பம் மட்டு மல்ல, வரலாற்று கட்டாயம் என்று கூறி முடிக் கிறேன், நன்றி, வணக்கம்!
இங்கே வந்திருக்கின்ற அனைத்துத் தலைவர் களுக்கும் நன்றி! விட்டு விட்டு பெய்யும் மழைக்கும் நன்றி! உங்களுக்கும் நன்றி!

வாழ்க பெரியார்! வாழ்க பகுத்தறிவு!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் உரையாற்றினார்.





தமிழர் தலைவருக்குச் சிறப்பு

பிறந்த நாள் விழா காணும் தமிழர் தலைவருக்கு விழாவில் பங்கேற்க வந்த பல்வேறு கட்சித் தலைவர்களும் கழகத் தலைவ ருக்குச் சால்வை அணிவித்து வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண் டனர். விழாவில் பங்கேற்று உரை யாற்றிய பல்வேறு கட்சிகளின் தலை வர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.


பெரியார் பேருருவச் சிலைக்கு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.50,000


பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.50 ஆயிரத்தை அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் - திருமாவளவன் தஞ்சை விழாவில் பலத்த கரஒலிக்கிடையே அறிவித்தார்.


பெரியார் உலகத்திற்கான நிதி ரூ.2 கோடியே 51 லட்சத்து 33,000

பெரியார் உலகம் - 95 அடி பெரியார்  பேருருவச் சிலைக்கு 1005 சவரன் தங்கத்துக்கான நிதியாக  ரூபாய் 2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் கழகத் தலைவரிடம் பலத்த கரஒலிக்கிடையே அளிக்கப்பட்டது. முன்னதாக தமிழர் தலைவருக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சால்வை அணிவித்தார். கழகத் தலைவரின் இணையர் மோகனா அவர்களுக்குக் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி சால்வை அணிவித்தார்.

.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...