Friday, June 30, 2017

நல்லிணக்கத்தைப் பேணும் யோக்கியதை இதுதானா?

உடுப்பி கிருஷ்ணா மடத்தில் முதல் முறையாக இஸ்லாமியர்களுக்காக இப்தார் விருந்து  வைத்து கோவில் மாடத்தில் தொழுகையும் நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - இப்தார் நிகழ்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்புவரை அனைத்து ஆளும் கட்சிகள் சார்பிலும், எதிர்க்கட்சிகள் சார்பிலும் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தலைநகர் டில்லியில் பிரதமர் அலுவலகத்தில் இப்தார் நோன்பு தருவதை நிறுத்தினார். அவரும் குடியரசுத் தலைவர் வழங்கும் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வந்தார்.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக உடுப்பியின் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் மடத்தில் அங்குள்ள அன்னபிரம்மா மண்டபத்தில் இப்தார் விருந்து நடைபெற்றது, இந்த விருந்தினை மடத் தலைவர் விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி நடத்தியுள்ளார்.
மாலை 6.59 மணிக்கு விரதத்தை முடித்துக் கொண்ட இஸ்லாமியர்களுக்கு வாழை,  தர்ப் பூசணி,ஆப்பிள்,பேரீச்சைபோன்றபழவகை களுடன் முந்திரிப் பருப்பும், மிளகு கஷாயமும் வழங்கப்பட்டன.  விருந்துக்கு வந்த இஸ்லாமியர் களுக்கு மடத்தின் தலைவர் தானே பேரீச்சம் பழத்தைப் பரிமாறினார்.
பிறகு அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
தம் உரையில், ‘‘கர்நாடகாவில் அமைதி நிலவ வேண்டும்,  நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளை கள்’’  என்று கூறிய அவர், ‘‘மங்களூர், காசரகோடு, பத்கால் ஆகிய இடங்களுக்கு நான் சென்ற போது அங்குள்ள இஸ்லாமியர்களும் எனக்கு நிறைய உதவினார்கள்.   அனைவருக்கு ஈத் வாழ்த்துக்கள்’’ எனக் கூறினார்.
அதன் பிறகு  அன்னபிரம்மா மண்டபத்தின் இரண்டாம் மாடியில் அனைத்து இஸ்லாமியர்களும், அஞ்சுமான் மசூதியின் தலைவரான மவுலானா இனயத்துல்லாவின் தலைமையில் தொழுகை நடத்தினர்.
கர்நாடகாவின் பல மதத் தலைவர்களும்,  அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வை வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.
மத நல்லிணக்கத்தைப் பேணிய இந்த நட வடிக்கையை எதிர்த்து சங் பரிவார்கள் தோள் தட்டி, தொடை தட்டிக் கிளம்பி விட்டனர். ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், விசுவ இந்து பரிசத், சிவசேனா, சிறீராம் சேனா ஆகியோர் ஒன்று சேர்ந்து தங்களுடைய இந்து வெறியை வெளிப்படுத்தியுள்ளனர்.
வரும் ஜூலை 2 ஆம் தேதி கருநாடகம் முழு வதும் உடுப்பி பெஜாவர் மடத்தினைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமி என்பவர் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
‘‘இப்தார் விருந்தினை பெஜாவர் மடத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் நடத்தியதில் ஒன்றும் தவறு இல்லை. குறுகிய நோக்கத்துடன் இதனை அணுகக்கூடாது. இப்தார் விருந்தைக் கோவிலுக்குள் நடத்திடவில்லை - கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில்தான் நடத்தினோம்.
இந்து மதத்திற்குள் இருப்பவர்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். எனவே, மாட்டிறைச்சி சாப்பிடு வதை வைத்து இஸ்லாமியர்களை ஒதுக்கிட முடியாது. காலங்காலமாக இந்து - முஸ்லிம்களிடையே ஒற்றுமை இருந்து வருகிறது. அதனைக் கெடுக்க நினைப்போரை கடவுளும், மக்களும் பார்த்துக் கொள்வர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தப்பித் தவறி இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு சிலர்,  ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பினால், வெறிகொண்ட காவிக் கூட்டம் கலவரத்தில் ஈடுபடுவது - அவர்களின் தகுதியையும், மதவெறியையும்தான் வெளிப்படுத்தும்.
பி.ஜே.பி. தலைவர்கள் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
எதிலும் இரட்டை வேடம்தான்! இதனை வெகுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கருநாடக மாநில அரசு  ஜூலை 2 ஆம் தேதி காவிகள் நடத்தும் காலித்தனத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...