Saturday, August 24, 2019

'கோபம் - அளவோடு' நியாயமே!





கி.வீரமணி

கோபங்கள் பலவகை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி வகை, தனி ரகம்!

அய்ந்தறிவு படைத்த மிருகங்களுக்குக்கூட கோபம் வராமலா இருக்கிறது?

பிறகு எப்படி ஆறறிவு படைத்த, மானம் உள்ள மனிதர்களுக்குக் கோபம் வராமலிருக்க முடியும்?

யாரையாவது பார்த்து 'இவருக்குக் கோபமே வராதுங்க' என்றால் அது மனித சுபாவத்திற்கு மாறானவர் என்று அறிமுகப்படுத்துவது போன்றது.

மனித இயல்பு கோபப்படுவதுதான். எப்படி நகைச்சுவை வரும்போது சிரிக்கின்றோமோ, துக்கம் துயரம் துளைக்கும்போது அழுகி றோமோ, அதுபோன்றது தான் கோபம் கொள் ளும் உணர்ச்சியும்கூட!

கோபப்படாதவர்கள்போல் சிலர் காட்டிக் கொண்டால் அது நடிப்பு, அல்லது நயவஞ்சகம்; எதையோ மற்றவர்களிடம் எதிர்பார்த்து பொறுத்துக் கொள்ளுகிறார் என்பதே அதன் புதை பொருள்.

Provoked Anger என்பது ஆத்திரமூட்ட பட்டதால் ஏற்படும் கோபம், பல நேரங்களில் நியாயப்படுத்தக்கூடிய கோபம் தான்!

ஆனால் காரணமின்றி எதற்கெடுத்தாலும் அற்ப விடயங்களுக்கெல்லாம் கூடத் தேவையற்றவைகளுக்காக கோபப்படுவது, மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பு - பழக்கம் ஆகும்!

ஆத்திரமூட்டப்பட்ட கோபத்தினைக் கட்டுப்படுத்துவதை விட வெடித்து வெளிப் படுத்தி விடுவதே - அது நாகரிகமான அளவில், ஓர் எல்லைக் கோட்டுடன் நிறுத்திக் கொள் வதற்குப் பழகவேண்டும்.

ஆத்திரமூட்டப்படும் கோபத்தைவிட ஆத்திரமூட்டப் படாமல் அவ்வப்போது வெடிக்கும் கோபம் நமது இதயத்தின் - இரத்த ஓட்டத்தின் - அதன் காரணமாக நமது உடல் நலத்தினை வெகுவாகப் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்!

உடல் நலம் பேணுவோர் கவனத்தில் கொள்ளவேண்டிய நல்ல அறிவுரை!

முற்றும் துறந்தவர்களுக்கே கோபம் "சாபம்" எல்லாம் புராணங்களில் வராமலிருக்கிறதா?

முனிவர் என்ற பெயரேகூட கோபம் கொள்பவர் - முனிவு என்பதன் அடிப்படையால் தானே? மொழி வல்லுநர்கள் தீர்ப்புக் கூறட்டும்!

தனி வாழ்க்கையில் கோபப்படுவோர் கூட பொது வாழ்க்கையில் ஈடுபடும்போது கட்டாயம் கோபத்தை அடக்கியே ஆகவேண்டும் - பொது நலம் கருதி.

எனக்கே கூட இந்த கெட்டப்பழக்கம் வரும்; ஆனால் மின்னல் போல் உடனே மறைந்து விடும்.

உடனடியாக நான் நடந்து கொண்டது சரிதானா? என்ற கேள்வியையும் உள்மனம் கேட்டு ஒரு 'குட்டும்' வைக்கும்!

எனது வாழ்விணையர் என்னை இவ்வகை யில் பற்பல நேரங்களில் கண்டித்து நெறிப் படுத்துவார்; அப்படி இடித்துரைக்கும் நட்பு அனைவருக்குமே தேவை!

நியாயமான கோபம் மற்ற சக தோழர் களையோ, ஊழியர் களையோ, தவறு செய்வதிலிருந்து திருந்தாதவர்களையோ திருத்த தேவையானதுதான் என்பதையும் முழுமையாக மறுத்துவிட முடியாது!

இளமையில், மாணவப் பருவத்தில் பெற் றோரின் குறிப்பாக தந்தையின் கண்டிப்பு, படிக் கும்போது ஆசிரியர்களின் அந்தக் காலத்துப் பிரம்படி (இக்காலத்தில்தான் அது முடியாத ஒன்றாயிற்றே) நம்மை மிகவும் நல்வழிப்படுத்தும் வழிமுறைகளாகவே அமைந்ததை, பிற்காலத் தில் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எண்ணி எண்ணி மகிழத்தானே செய்கிறோம்!

ஆனால் எந்தக் கோபத்தையும் நீடிக்கவிடக் கூடாது; நிலைத்து விட்டால் அது வன்மமாகி விடும். பழிக்குப் பழி என்ற மிருக உணர்ச்சிக்கு மனிதர்கள் ஆளாகி, கூலிப்படையைத் தேடு கிறார்கள், தன் ரத்த உறவுகளை, கொள்கை உறவுகளையே கூட பலிகடாவாக்கி பிறகு தண்ட னைக்காளாகி அழுவதன் பலன்தான் என்ன?

எனவே கோபப்படுதலும் சிற்சில நேரங்களில் தேவைதான் - ஆனால் அது எல்லைதாண்டி விடாமல் - நயத்தக்க நாகரிகத்தில் நின்று விடுவது நல்லது - நம் இதயத்திற்கும் நட்பிற்கும்! இல்லையா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...