Friday, May 11, 2018

எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவர்'' இந்த நாட்டிலே?'

இன்றைய (10.5.2018) நாளேட்டில் இரண்டு திருட்டு - மோசடிச் செய்திகள்! விசித்திரமான மோசடிகள்!
இரண்டிலும் வருணமும், வர்க்கமும்; நம் மக்கள் (பெண்கள்) பக்தி, தோஷம் என்பதற்கு இரையாகி, கைப்பொருள் இழந்தவர்களாகி', பிறகு காவல்துறைக்கு வேலை தருகிறார்கள்!
ஆந்திராவிலிருந்து வந்த, கும்பகோணத்தைச் சேர்ந்த சீனுவாசன், திருட்டின்மூலமே சில்வர் சீனுவாசன்' ஆகிவிட்டார்!
70 வயது மதிக்கத் தகுந்த (அநேகமாக மேல் குலத்துப் பெரியவா) கடந்த 60 ஆண்டுகளாக, வெள்ளி, தங்க நகைகளை மட்டுமே குறி வைத்து, திருடுவதற்கு நல்ல களம், பக்தியுள்ளவர்களின் வீடுதான் என்று கண்டுபிடித்துவிட்டார் போலும்! அங்கே சென்று, பெண்களின் குறை கேட்டு, தோஷம் கழிப்பதாகச்'' சொல்லி,  அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை குடங்களில் போடச் சொல்லி, பிறகு - வெண்ணை திருடிய கண்ணனைப் போல - சென்றுவிடுவார்! இவருக்கு வானமே கூரை - பிளாட்பாரமே படுக்கை அறை எல்லாம்! இந்த சிங்கம்' சிங்கிளாத்தான் வருமாம்! அதே கும்பகோணத்திற்குப் பக்கத்திலுள்ள நுனிநாக்கு ஆங்கில மேதை வலங்கைமான் சாஸ்திரி - ரைட் ஆனரபிள் சீனுவாச சாஸ்திரி - என்னபெயர் பொருத்தம் பார்த் தீர்களா? சாஸ்திரி - சில்வர் டங்' சீனுவாச சாஸ்திரி என்று வெள் ளையர் ராஜ்ஜியத்தில் பட்டம் பெற்றார்!
இவரோ தன் கைத்தொழில்'மூலமே சில்வர் சீனுவாசன்' ஆகிவிட்டார்!
திருட்டுத் தொழிலுக்கும் சஷ்டியப்த பூர்த்தி' கொண்டாடிய சாதனையாளர் இவர்! (இவரது பூர்வீகம் திருப்பதி என்கிறது இந்து' ஏடு) கோவிந்தா! கோவிந்தா!!
மற்றொரு செய்தி - அதே நாளேட்டில்தான் இன்று!
அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை 1.4 கோடி ரூபாய்க்கு விற்று மோசடி செய்த தந்தை - மகன் கைது செய்யப்பட்டுள்ளார்கள், டில்லியில்!
டில்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் வீரேந்திரர்; அவரது பேராசைக்கு அவரே பலியாகி ஏமாந்துள்ள கதை - அறிவியலும், கற் பனை வளமும் கலந்து ஏமாற்றப்பட்ட விந்தையான விந்தை யாகும்!
இது சக்தி வாய்ந் தது; இதனை வைத் திருப்பவர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்; (அட்சய திருதையில் நகை வாங்கினால் பொன் குட்டி போடும் என்று விட்ட புருடா'போல) வேண்டுமானால் மத்திய அரசின் டி.ஆ.டி.ஓ. அமைப்பினர் ஆய்வு செய்து, அவர்கள் கொடுக்கும் சர்டிபிகேட்டை வைத்து அமெரிக்க நாசா அமைப்புக்கு அனுப்பினால், அவர்கள் 34,000 கோடி ரூபாய் கொடுக்கத் தயாராக உள்ளனர் என்று அளந்து' - அந்தத் தொழிலதிபரை நம்ப வைத்தனர்.
அமெரிக்க நாசாவிற்கு விற்ற பிறகு, கிடைக்கும் லாபத்தில் 70:30 சதவிகிதம் என்று பிரித்துக் கொள்ளலாம்; மேலும் தகரத்திலிருந்து அணுக்கதிர் வீச்சு வரும்; அதிலிருந்து காத்துக்கொள்ள தனியாக உடை வாங்கவேண்டும்; வெள்ளி நிற உடை வாங்க என இரண்டு லட்சம் ரூபாய்களும் வாங்கி விட்டனர்!
தசாவதாரம்' படம் பார்த்திருப்பார்களோ, அணுசக்தி பாய்ச்சல் தியரிக்கு.
இரண்டு மாதங்கள் ஆகியும் இந்த நவீன அணு தகர டப்பாக்கள்' காணப்படவே இல்லை.
ஏமாந்ததுதான் மிச்சம்!
சீனுவாசன் சிங்கள் சிங்கமாவது சில்வரோடு நின்றது. இவர்களது கற்பனை வளமோ (கிரியேட் டிவிட்டி) அமெரிக்க நாசா வரை சென்றதற்கு ஒரு தனிப் பாராட்டே - இந்த நூதனத் திருட்டு மூளைகளுக்கு நடத்திட வேண்டாமா?
தந்தை பெரியார் கூறியதுபோல பசியா வரம் தருகிறேன் தாயே; கொஞ்சம் பழைய சோறு போடு!'' எனக் கேட்ட மோசடி சாமியார் - பிச்சைக்காரன் கதைதான் நினைவிற்கு வருகிறது!
பெரியார் கேட்டார், ஏமாந்த அந்த அம்மா புருஷன் கேட்டானாம் - ஏண்டி, அந்த வரம் தரும் சக்தி அவனுக்கு இருந்தால், அவன் ஏன் உன்னிடம் பழைய சோறு கேட்பான் - யோசித்தாயா?'' என்று!
எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவர் - இந்தப் பாரத நாட்டிலே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...