Wednesday, November 22, 2017

கடவுள் நம்பிக்கையும் 'தினமலர்' தலையங்கமும்

அதிகார பூர்வமற்ற சங்பரிவார் நாளேடான 'தினமலர்' தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. "நாட் டில் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. நரேந்திர மோடி கோயிலுக்குச் செல்லுகிறார். பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் நவராத்திரி சமயத்தில் பாட்னாவில் சில கோயில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டார். உத்தரப்பிரதேச முதல் அமைச்சர் ஆதித்யநாத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்; பா.ஜ.க., தலைவர் அமித்ஷாவும் ஆத்திகக் கருத்துக் கொண்டவர்; இந்திராகாந்தி கோயிலுக்குச் சென்றார். திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் வீட்டைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குச் செல்கின்றனர்.

முதல்வர் பழனிச்சாமி திருப்பதி சென்று வருகிறார். கடவுள் மறுப்புப் பிரச்சாரம் தமிழ்நாட்டில் குறைந்து விட்டது" என்று, தான் ஏற்றுக் கொண்டுள்ள அல்லது தான் சார்ந்துள்ள அமைப்புகளுக்கு ஏற்ப எழுதுகோலை நீட்டியுள்ளது 'தினமலர்' ஏடு.

கடவுள் நம்பிக்கை - கடவுள் நம்பிக்கையற்ற தன்மை என்பது வெறும் எண்ணிக்கையைப் பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல; மண்டைகளின் எண் ணிக்கையைவிட மண்டைக்குள்ளிருக்கும் மூளையின் வலிவை விரல் விட்டு எண்ணி முடிவு செய்திட முடியாது.

அரசியல் தலைவர்கள் கோயில்களுக்குச் செல்லு வதற்கு ஒரு காரணம் உண்டு. இது பற்றி இந்திரா காந்தி அம்மையார் சொன்னதை இவ்விடத்தில் எடுத்துக் காட்டுவது மிகவும் பொருத்தமானது.

"வழக்கமாகக் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. நான் கோயிலுக்குச் சென்றால் சிறுபான்மையினரின் நலனுக்காக நான் கூறுவதை மெஜாரிட்டி சமூகத்தினர் தயாராக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்"  ('தினமணி' 27.3.1983).

இப்படிப்பட்ட இந்திராவை, தன் சாட்சிக்குத் 'தினமலர்' அழைப்பதுதான் வேடிக்கை!

கடவுள் பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது, தலைவர்கள் கோயிலுக்குச் செல்லுகிறார்கள் என்று மார் தட்டிக் கொள்வதில் போற்றத்தக்கப் பொருள் இருப்ப தாகக் கூற முடியுமா? என்று சவால் விட்டே கேட்க முடியும்.

இந்து மதத்தின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத் தின் ஒரு பாகமாக  இருக்கக் கூடிய உத்தர கீதை என்ன சொல்லுகிறது என்று பார்க்கலாம்.

துவி ஜாதியினருக்கு அதாவது பார்ப்பனர்களான இரு பிறவியாளர்களுக்கு (பூணூல் தரித்தபின் இரு பிறவியாளர் ஆகிறார்களாம்) கடவுள் அக்னியில், முனிவர்களுக்குக் கடவுள் இருதயத்தில், புத்தி குறைந்த வர்களுக்குக் கடவுள் சிலையில், சம பார்வை உள்ளவர் களுக்குக் கடவுள் எங்கும் என்று கூறுகிறது உத்தர கீதை.

இதில் 'தினமலர்' பெருமைப்பட்டுக் கொள்ள என்னவிருக்கிறது? கோயில்களுக்குச் சென்று கடவுள் சிலைகளைக் கும்பிடுபவர்கள் மூடர்கள் என்று ஆகி விட்ட பிறகு கோயில்களுக்குச் செல்பவர்களின் எண் ணிக்கை அதிகரித்து விட்டது என்று பெருமை பேசுவது நகைப்பிற்குரியதே!

அதைவிடக் கேவலம் ஒன்று உண்டு. இன்றைக்குக் கோயில்கள், அவற்றின்மீது செலுத்தும் பக்தி என்ப தெல்லாம் வணிகமயமாகி விட்டது என்று 'தினமலர்' வகையறாக்கள் ஜெகத் குரு என்று போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே கூறுகிறாரே!

"மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும்,  மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக் (திணீsலீவீஷீஸீ) கருதுகின்றனர். பக் தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது" என்று காஞ்சிபுரத்தில் 1976 மே  மாதத் தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் பேசினாரே, இதற்கு என்ன பதில் தினமலராரே என்று கேட்க விரும்புகிறோம் - அறிவு நாணயத்துடன் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

அதோடு நிற்கவில்லை. கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையில் பிடித்துக் கொண்டு விட்டன" என்று சொன்ன வரும் சாட்சாத் "லோகக்குரு' சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே! ('தினமணி' 7.9.1976). இதற்கு ஜெயேந்திரரும் விதிவிலக்கு அல்ல.

கடவுள் மறுப்பு என்பது அறிவியல் ரீதியானது. உலகம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்ற பொய்த் திரையை முற்றிலும் கிழித்து விட்டனர் இயற்பியல் அறிஞர்கள். பிராங்கோயிஸ்  இங்கிலெர்ட் பீட்டக்ஸ் ஆகியோர் கண்டுபிடித்து அறிவித்த பெருவெடிப்பு (பிக்பேங்) தான் அது.

'தினமலர்' ஏடு கடவுள் சக்தியாலோ, சாமியார்களின் அருளாலோ அல்லது அவர்களின் அலுவலகங்கள் வாஸ்து பார்த்துக் கட்டப்பட்டதாலோ அச்சிட்டு வெளி யில் வரவில்லை.

மனிதன், தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி விஞ்ஞான ரீதியில் கண்டுபிடித்த சாதனங்கள் தான் 'தினமலர்' உட்பட பலவும் இயங்குவதற்குக் காரணம் என்பதை மறந்துவிட்டு பார்ப்பனர்கள் கடவுளைக் கட்டிப் பிடித்து அழுவது ஏன்? அதற்கும் முக்கியக் காரணம் இருக்கத்தான் செய்கிறது.

"கடவுள் என்ற பெயரால் கடைசிக் குழவிக்கல் உள்ளவரை பார்ப்பனர்களின்ஆதிக்கம் தொடரத்தான் செய்யும்" என்று தந்தை பெரியார் கூறும் ஆணித் தரமான கருத்தைப் புரிந்து கொண்டால் கோயில், கரு மாந்திரங்களைப் பார்ப்பனர்கள் ஏன் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்பதன் ரகசியம் விளங்குமே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...