Tuesday, July 11, 2017

ரூ.20 கோடி அபராதம் 2 ஆண்டுகள் சிறையாம்!

 பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்டத்தின் நீரோடி வரை 1,078 கிலோமீட்டர் நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில், சுமார் 13 லட்சம் மீனவ மக்கள் கடலை நம்பியே வாழ்கிறார்கள். இவர்களில் மீன் பிடிக்கச் செல்பவர்களை, 'தமிழக மீனவர்கள், எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் எனச் சொல்லி, கைதுசெய்கிறது இலங்கை இராணுவம்.

1983-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 13-ஆம் தேதி இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீதான தனது முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. 2012-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 500 மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டுள்ளனர்.

கடலில் மீன் பிடிக்கும்போது கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல் என்று வகுத்துக் கொண்டு மீன் பிடிப்பார்கள். பெரும்பாலும் நாட்டுப்படகுகள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிப்பது இல்லை. விசைப் படகுகளால் மட்டுமே ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியும். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 18  கடல் மைல் கடல் தொலைவு உள்ளது. 12 மைல் தூரம் வரை உள்ளூர் எல்லையாகவும், அதன் பிறகு சர்வதேச எல்லையாகவும் கணக்கிடப்படுகிறது.

சராசரியாக ஒரு விசைப்படகு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வலை விரித்தால் 20 கடல் (நாட்டிக்கல்) மைல் வரை அந்தப் படகு மிகச் சாதாரணமாகப் பயணப்படும். இந்தப் பயணம் மீனவர் விரும்பியோ, திட்டமிட்டோ நடப்பது இல்லை. கடல் நீரோட்டம் படகை இழுத்து வந்துவிடும். இந்த நீரோட்டம்தான் மீனவர்களின் தொழிலைத் தீர்மானிக்கும்.

எல்லை என்பது கடலுக்கும், மீனவர்களுக்கும் இல்லை,  பொதுவாக உலகம் முழுவதும் இரண்டு நாட்டுக் கடல் சந்திப்பில் வரும் மீனவர்களைக் கைது செய்வதோ அல்லது சுடுவதோ கிடையாது, ஈரான் மற்றும் இதர அரபு நாடுகளின் கடலில் மீனவர்கள் கைது என்பது எல்லையைத் தாண்டி நீண்ட தூரம் அந்த நாட்டுக் கடல் பகுதியில் நுழைந்தால்தான் சிறை பிடிக்கப்படுவார்கள். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லையைத் தாண்டி நீண்ட தூரம் சென்ற பிறகே தான் கைது செய்யப்படுகிறார்கள், அதே போல் பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய கடற்படையால் நீண்ட தூரம் இந்திய எல்லைக்குள் வந்த பிறகே கைதுசெய்யப்படுகிறார்கள். 


நினைவு எட்டாக் காலம் தொட்டே கச்சத்தீவு இரு நாட்டு மீனவர்களுக்கும் பயன்பட்டு வந்திருக்கிறது. முன்பு முத்துக்குளித்தலின் தங்கு துறையாகவும், வலை களைக் காயப்போடவும், மேய்ச்சல் நிலமாகவும் பயன்பட்ட கச்சத்தீவை, போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக் காரர்களும், சேதுபதி மன்னர்களுமாக ஆட்சி செய்தனர்.

ஆவண ரீதியாக இராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானதாக கச்சத்தீவு இருந்து வந்தது. இந்தத் தீவை, 1974-இல் பிரதமர் இந்திரா காந்தி  இலங்கைக்குத் தாரை வார்த்தார்.
கடுமையான தேவையான நிபந்தனைகள் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. நாடாளுமன்றத்தில் திமுக எதிர்த்துக் குரல் கொடுத்தும் வெளிநடப்புச் செய்தும்கூட மத்திய அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை.

கச்சத்தீவு ஒப்பந்தம், மீனவர் நலன் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும், இலங்கை கப்பற்படையின் சுதந்திரமான நடமாட்டத்தை இந்திய கடல்  கடல் எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு கடலின் இரு கரை மீனவர்களும் கடல் வளத்தைப் பங்கிடுவதை எந்த அரசும் தடுக்கக் கூடாது; கைதுசெய்யக் கூடாது. இராமேஸ்வரம்-இலங்கை இடையே குறைவான எல்லையைக் கொண்ட கடலைக் கருத்தில் கொண்டு, புதிய கடல் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையைத்தான் போர் முடிந்த காலம் தொட்டு தமிழக மீனவர்கள், மத்தியில் ஆளும் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கைகளை மாநில அரசுகள் நிறைவேற்ற முடியாது.

இந்த நிலையில் இலங்கையுடன் மிகவும் நட்புப் பாராட்டும் பாஜக அரசு, மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் என்று தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு ரூ20 கோடி வரை அபராதம், 2 ஆண்டுகள் சிறை விதிக்கும் சட்டத்தை இலங்கை கொண்டு வந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டில்லிக்கு வந்து மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு இரு நாட்டு மீனவர் சிக்கல் தொடர்பாக ஒரு நல்ல முடிவை நாங்கள் எடுக்க உள்ளோம், இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பைத் நல்கும் என்று கூறியிருந்தார் என ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தனர். இந்த நிலையில் இலங்கை அரசின் இந்தப் புதிய சட்டம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது இதுதானோ.
குட்டி நாடான இலங்கைத் தீவு வல்லரசாக ஆகத் துடிக்கின்ற சிங்கத்தின் தலையில் பேன் பார்க்கிறது - வெட்கக் கேடு!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...