Sunday, October 2, 2011

புதுயுகம் படைப்போம்!


அதிலும் மிகவும் கடினமான, கசப்பான கொள்கை களையும், எவராலும் எளிதில் ஏற்றுவிட முடியாத சமூகப் புரட்சி அணுகுமுறைகளையும், சுயநலத்தையும் ஏன் சுய விளம்பரத்தையும்கூட தியாகம் செய்தோ, மறுத்தோ தொண்டாற்றும் தூய இயக்கம் - மானம் பாராது,
நன்றி எதிர்பாராது,
பதவி ஏற்காது,
புகழ் நோக்காது,
எந்தவித தன்னல மறுப்புக்கும் எப்போதும் தயா ராகும் பாசறை! பெரியார் மொழியில் சொந்த சோற்றைத் தின்றுகொண்டு சிறைகள், அடக்கு முறைகள், இருட்டடிப்புகள், இமயம் போன்ற எதிர்ப் புகள் - இவைகளை தமது வாழ்க்கை முறையாக்கி, உண்மைத் துறவிகளாகவும், கட்டுப்பாடு காக்கும் இராணுவ வீரர்களாகவும், கடைசிவரை தம்மை எரித்துக்கொண்டு அழித்துக் கொள்வதற்கும் எப் போதும் தயார் என்று பிரகடனப்படுத்தக் கூடியவர்களாக உள்ள கருப்பு மெழுகுவத்திகள்!, தற்கொலை பட்டாளங்களாகி - லட்சியப் பதாகையை எப்போதும் சுமக்கும் கொள்கைப் போர் வீரர்களாக, எதற்கும் அஞ்சாது, சோக சுனாமிகள், அவதூறு அடை மழைகள், பொறாமையாளர்களின் பொசுக்கும் தீப்பிழம்புகள் முதலானவற்றைக் கண்டு அதை எதிர் கொள்ளும் ஆற்றல் மறவர்களைக் கொண்டதுதான்-
தந்தை பெரியாரின் சொக்கத் தங்கம்தான் சுயமரியாதை வீரர்களைக் கொண்ட பாசறை!
வெட்டி வா என்றால் அதை மட்டுமே செய்து, கட்டி வரலாமா என்பதற்கும் கட்டளையை எதிர் நோக்கும் கட்டுப்பாட்டின் இலக்கண இலக்கியங் களாக இயக்கத்தில் இயங்குகின்றது சிங்க இளைஞர் கூட்டம்!
ஏற்றமிகு இளைஞர் பாசறை!
95 வயது இளைஞரை, - வாய்மைப் போருக்கு என்றும் இளையராம் தந்தை பெரியாரை ஒரே தலை வராகக் கொண்ட ஒப்பற்ற, இன இழிவு துடைக்கப் படத் துடித்து நிற்கும் ஏற்றமிகு இளைஞர்களைக் கொண்ட பாசறை!
என்னைப் பொறுத்தவரை வாலிபம் என்பது வயதைப் பொறுத்ததல்ல; தொண்டாற்றும் உறுதியை, மனோபலத்தைப் பொறுத்தது என்றார் தத்துவத் தலைவர்! அதுவே நமக்கு வழிகாட்டி நெறிப்படுத்தும் ஒளிவீச்சு என்று கருதுபவர்கள் நாம்!
இந்தியாவில் மட்டுமல்ல; ஏன் அகில உலகத் திலேயே இதற்கிணையான (சுயமரியாதை இயக்கத் திற்கு - திராவிடர் கழகத்திற்கு) இயக்கம் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது!
சிங்கங்களும், அதன் குட்டிகளும் பரந்த வனத் தில் எண்ணிக்கையில் குறைவு என்பது அவர்களது தலைமைப் பண்பின் சிறப்பைக் கு(ல)றக்காதே! அதுபோலத்தான்!
என் அருமைக் கழகக் குடும்பத்துக் கண்மணி களே, எண்ணிப் பாருங்கள்!
எதிரிகளின் தப்புக் கணக்கு!
பெரியாருக்கு வயதாகிவிட்டது; அவர் கண் மூடினால் எல்லாம் நொடியில் மறைந்துவிடும்; பிறகு நமது ஆரிய ஆதிக்க சாம்ராஜ்ஜியத்திற்குத் தடையே இருக்காது; சமூகநீதிச் சமர்புரிய வேறு எவர் அவர ளவுக்கு வலிமையாக வருவார்?
நெல்லிக்காய் மூட்டைகளை அவிழ்த்துக் கொ ட்டியது போன்று உருண்டோடி விடுவார்கள். திராவிடர்களில் விபீடணர்களும், அனுமார்களும், சுக்ரீவன்களும், பிரகலாதன்களும் சிரஞ்சீவிகளாக ஆழ்வார்களாக என்றென்றும் கிடைப்பார்கள்; எலும்புத் துண்டை வீசினால் கவ்வாதவர்கள் எவருமில்லை ஆங்கே என்று ஆரியம் ஆர்ப்பரித்து, அட்டகாசமாக, வஞ்சக வலை விரித்து வீழ்த்திடத் துடிக்கும் ஒரு சமுதாயத்தில் - இராவணன் ஒழிந்தான்! இரணியன் ஒழிந்தான்! என்று பூரிப்பு அடைந்த கூட்டம் இன்று திகைத்து நிற்கிறதே! பெரியார் என்ற பேரொளியின் தத்துவம் உலகம் முழுவதும் பாய்ச்சல் பயணத்தில் பதுங்காமல், ஒதுங்காமல், ஏவுகணை போல் விண்ணை நோக்கி வெற்றிகரமாக சென்று இலக்கை அடைகிறதே என்ற வேதனை நம் எதிரிகளுக்கு!
ஆரியம் சாம, பேத, தான, தண்ட மனுதர்ம முறை களோடு, கீதை காட்டிய பாதையில் வன்முறைகளிலும் ஈடுபட்டுத் தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆரியர்கள் பெண்களை விட்டுவிட்டு வந்தார்கள், ஆனால், மனுஸ்மிருதியைக் கையோடு கொண்டு வந்தார்கள் என்று  இந்து மதம் எங்கே போகிறது? புத்தகத்தில் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் என்ற பார்ப்பனர் வெளிப்படையாக எழுதிடும் அளவுக்கு, பெரியார் குரல் அங்கும் ஒலித்தது!
ஊடகங்கள் என்ற வஜ்ராயுதங்கள் அவாளின் அஸ்திரங்களான, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஊடுருவி நடத்தும் கொள்கை திரிபுவாதங்கள், அரசியல் ஆட்சி முறைகள் இவைகளைத்தான் எதிரிகள் கடைசியாக நம்பும் நிலை ஏற்பட்டுவிட்டது!
உருவத்தில் பெரியார் இல்லை என்பது அவர்களது பழுதான பார்வையாகும்; பெரியார் என்பவர் தனி மனிதரல்ல; அறிஞர் அண்ணா அவர்கள் பொருத்தமாகச் சொன்னாரே- பெரியார் ஒரு சகாப்தம், காலகட்டம், திருப்பம் என்று! அதனை ஆழமாகப் புரிந்துகொள்ளத் தவறிய அவசர புத்தியாளர்கள் நம் இன எதிரிகள்!
பிணி போக்கும் நல் மருந்து!
மருந்து கண்டுபிடித்தவர்கள் மறைந்து விட்டதாலேயே மருந்துகள் பரவாமல் இருந்ததில்லை; இன்னுங்கேட்டால், கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியவர் யார் என்று தெரிந்துகொள்ளாமலேயே, மருந்து தேவை - எம் நோய் போக்க; எப்போது கிடைக்கும் அம்மருந்து? - அதுவல்லவோ மாமருந்து என்று மக்கள் தேடும் காலம்! மருந்தை உட்கொள்ளுவது நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு என்பதை இப்போது புரிந்து வருகிறது அகிலமும்! இந்தச் சுவரெழுத்தைப் படிக்க மறுப்போர் பற்றி நமக்குக் கவலை இல்லை!
சிங்கக் குட்டிகளைத் தயாரித்துச் சென்ற சிங்கம்!
அறைகூவல்கள் ஆரியத்தின் பல்வேறு அவதார மகிமைகளுடன் வரும் என்ற பாடத்தைச் சரியாகப் போதித்தே தனது சிங்கக் குட்டிகளைப் பக்குவப்படுத்திச் சென்றது_- கடைசி நாள்வரை கர்ஜிக்கத் தவறாத அந்த ஈரோட்டுச் சிங்கம்!
எதிர்கொள்ளவேண்டியவை கள வெற்றிகளானாலும் சரி, களத் தோல்வி ஆனாலும் சரி, எஃகு உள்ளத்துடன் ஏற்கும் மனப் பக்குவத்தோடு, இறுதிவரை போராடும் அறப்போர் குணங்கொண்ட அரும்பெரும் அய்யாவின் படை - எப்போதும் அறிவு ஆயுதத்தோடு அணி வகுத்தே நிற்கிறது!
சுயநலம் துறந்த சுயமரியாதை!
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பையே புரிந்து கொள்ளத் தவறிய   அப்பாவி மக்களிடம் உள்ள அறியாமையே அவாளின் மூலதனம் என்பதால், அதனை எதிர்க்கும் நிலையை உருவாக்கினார் அறிவு ஆசான். வெறும் பார்ப்பனரல்லாதார் என்று  எதிர் மறையாக அழைக்கப்படக் கூடாது என்று தொலை நோக்கோடு 65 ஆண்டுகளுக்கு முன்பே சேலத்தில் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றி, திராவிடர்கள் என்றால்தான் ஆரிய மாயை என்பதைப் புரிய வைக்க முடியும் என்று ஒரு புதுத் திருப்பத்தை ஏற்படுத்தி  - பதவி நாடா - சுயநலம் துறந்த சுய மரியாதைப் பாதைக்கு நம்மை அழைத்து வந்தார்!
பெரியாரின் சுற்றுப் பயணம் முடியவில்லை
பிரச்சாரம்! போராட்டம்!! என்று இரு சக்தி வாய்ந்த ஆயுதங்களையே நமக்களித்து  ஏற்பாடுகளைச் செய்தே நம்மைக் களத்தில் நிறுத்தி, அவர் உடலால் விடை பெற்றார்!  உணர்வில் என்றும் நிலை பெற்றார்!!
எடுத்துக்காட்டாக, கருஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தலைக் கொளுத்திய மதுரையா இன்று? இல்லையே! அம்மாநகரத்தில் அய்யாவுக்குச் சிலை எழுப்பி அவர்தம் சீலத்தைப் பரப்பும் சிங்க இளைஞர் கூட்டம் தனது கொள்கைப் பிரச்சாரப் பயணத்தை - உறுதியுடன் நடத்திக் கொண்டுள்ளதே!
அண்ணா எழுதிய மரண சாசனம்
மரண சாசனம் என்ற தலைப்பில் மதுரை மாநாட்டுப் பந்தல் கொளுத்தப்பட்டு (12.5.1946) கருஞ்சட்டைத் தோழர்கள், தோழியர்கள் (தலைவர்கள்கூட) தாக்கப்பட்ட தருணத்தில், திராவிட நாடு ஏட்டில் (29.5.1946) மரண சாசனம் தீட்டி வைத்துவிடு தோழா! என்று அறிஞர் அண்ணா அவர்கள் உணர்ச்சி கொப்பளிக்க எழுதினார்களே,
அதே மரண சாசனத்தை எழுதி வைத்துக்கொண்டு களம் காணத் துடிக்கும் கைம்மாறு கருதா கட்டுப்பாடு கொண்ட கருஞ்சட்டை இளைஞர்கள் கூட்டம் இப்போதும் பெருகிக் கொண்டே உள்ளது!
சில களங்களில் தோல்வி ஏற்படுகிறது என்றாலும், தொய்வடையாத வீரர்கள் அவர்கள். போரில் ஒரு சில களங்களை (Battles)
இழப்பது ஒரு பொருட்டல்ல; இறுதிப் போரில் (Win a War) இறுதி வெற்றியை முத்த மிடுவதே_நமது இலக்கு! இன்முகத்தோடு வாலிபப் பெரி யார்களாக - வைர உறுதியோடு பயணிப்பவர்கள் நாம்.
தந்தை பெரியார் சுற்றுப்பயணம் என்பது ஒரு காலத்தில் கும்மிடிப்பூண்டியை தாண்டியதில்லை என்றாலும், இன்று இமயத்தின் அருகில் பயணிக்கிறார்; (வாரணாசி) காசிக்கு மீண்டும் செல்கிறார் பெரியார். சந்நியாசியாக அல்ல - சமநீதி போதிக்கும் பேராசிரியராக பயணிக்கிறார்_ மக்கள்- வரவேற்புடன்!
அமெரிக்கா, வளைகுடா நாடுகளுக்கும்...
அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டனில் பெரியார் கருத்தரங்கு, வளைகுடா நாடுகளில் வைக்கம் வீரரின் தொண்டின் தேவை, தூரக் கிழக்கு நாடுகளான சிங்கப்பூர், மியான்மா நாடுகளிலும் பகுத்தறிவுப் பகலவனின் ஒளியே தேவை என்ற நிலை உண்டே!
இனிவரும் உலகில் என்னென்ன நடக்கும் என்று இந்த சமூக விஞ்ஞானி கணித்து (கணினி இல்லாத காலத்திலேயே) சொன்னாரே - அவை அத்தனையும் காணொலிக் காட்சி (வீடியோ கான்ஃபரன்சிங்) முதல், புராத் திட்டங்கள், கிராமச் சீர்திருத்தம்வரை அறிவியல் சாதனைகளாக நடக்கின்றனவே!
கடவுளுக்கு இனி வேலை இல்லை
கடவுளுக்கு இனி வேலையே இருக்காது என்றார் பெரியார்;
கடவுள், மத நம்பிக்கையற்ற நாத்திக நிலை பெருகி விட்டதே என்று ஓலமிடுகிறார் உலகின் மிகப்பெரிய மத குருவான போப் அவர்கள் - அண்மையில் ஸ்பெயின் தேசம் போனபோது!
21 ஆம் நூற்றாண்டு எப்படி நகருகிறது பார்த்தீர்களா?
கடவுள் அவதாரங்கள் சாய்பாபாக்கள், பிரேமானந்தாக்கள், மற்ற ஆனந்தாக்கள் என்ற சாமியார்கள்,  சங்கராச்சாரியார்கள், மகந்துகள் எல்லாம் மலையேறிக் கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?
பெரியாரின் சுற்றுப்பயணம் தொய்வின்றித் தொடர்கிறது என்பதைத்தானே?
டில்லி கோட்டையில் சமூகநீதிக் கொடி!
சமூகநீதிக் கொடியே டில்லி செங்கோட்டை அரு கிலும் சென்று பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பது அன்றாட நிகழ்வுகளால் உறுதியாக வில்லையா?
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரல், பெரியார் - அம்பேத்கர் காலத்தைவிட, இன்னமும் பலமாக - திசையெட்டும் ஒலித்து போராட்ட களம் காணத் தொடங்கவில்லையா - முரசொலிக்கவில்லையா? இன்று பெரும்பாலோர் கையில் கைத்தொலைப்பேசி - (செல்போன்) அதுவும்  3ஜி தொழில்நுட்பத்தோடு பரவியுள்ளது, நாளுக்கு நாள் புதுமை வெள்ளமாய், புதியது புதியது இதோ அதனிலும் புதியது என்று கூறி வீ-ஷீஸீவீநீ என்று புறப்படுவதுபோல் இனி பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கதிர்வீச்சுகளும் எங்கும் ஒளிமயமாகப் பரவிடுவது காலத்தின் கட் டாயம். எவ்வளவு துல்லிய தொலைநோக்கோடு அந்த தத்துவ கர்த்தா இதனை விளக்கியுள்ளார் பாருங்கள் 1947_லேயே! அதாவது 64 ஆண்டுகளுக்கு முன்பே!
சுயமரியாதைத் தத்துவம்!
...சுயமரியாதைத் தத்துவங்கள் ஒரு தனி இயக்கத்தால் பரவவேண்டிய காலம் மாறி,  இந்தத் தத்துவங்கள் கொண்ட இயக்கத்திற்குத்தான் மக்களிடம் செல்வாக்கு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. சுயமரியாதைக்காரன் இன்று எந்த சங்கத்திலும் சேர்ந்து பணியாற்றக் கூடிய தகுதி பெற்றுவிட்டான். சுயமரியாதைத் தத்துவங்கள்தான் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று மக்கள் உணர ஆரம்பித்து விட் டனர். ஆகவே, இன்று தோன்றிவரும் எந்த இயக்க மும் ஓர் அளவுக்காவது சுயமரியாதைத் தத்துவங் களைத் தன்னகத்தே கொண்டுதான் செல்வாக்குப்  பெற முடிகிறது. நமது நாட்டில் திராவிடர் கழகமாக மாறியுள்ள சுயமரியாதை இயக்கம் தவிர்த்த மற்ற கட்சிகள், பெரும்பாலும் பணம், விளம்பரம், ஆதிக்கம், அதிகாரம், சூழ்ச்சி_- தந்திரம் இவைகளின் காரண மாகவே மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கின்றனவே அல்லாது, ஒன்றாயினும் நமது கழகத்தைப்போல் கொள்கையின் காரணமாகவே மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்று திடமாகச் சொல்லலாம். நல்ல கொள்கைக்காரனாகப் பணமோ, பாரம்பரிய அதிகாரமோ, ஆதிக்கமோ, ஆணித்தரமான பேச்சோ, தந்திரமோ தேவையில்லை. அப்படிப்பட்ட வசதிகளுக்கு சுயமரியாதை இயக்கம் அடிமையாக வேண்டிய அவசியமில்லை.
தந்தை பெரியார் அவர்கள் 17.11.1947 விடுதலையில் எழுதிய அறிக்கையின் ஒரு பகுதி இது!
எனவே, என்னருந்தோழர்களே, தோழியர்களே, கொள்கைச் சிங்கங்களே, பெரியார் என்ற தனி மனித இராணுவத்தின் இணையற்ற இருபால் சிப்பாய்களே,
அதே ஆண்டு 1947-லேயே நம் அய்யா அவர்கள் கடலூர் மாநாட்டில் (20.9.1947) நமக்குச் சரியான நெறிமுறை பாடம் போதித்துள்ளார்களே! இதோ:
நாம் தீவிரவாதிகள்!
கொள்கைக்காகவே வாழும் மக்களாக நாம் பலர் ஆகவேண்டும். நமக்குள் அக்குபிக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நம்மைக் கண்டால் (கொள்கை) தீவிரவாதிகள் இவர்கள், எதற்கும் தயாரானவர்கள் என்ற நடுக்கம் எதிரிகளிடம் ஏற்படவேண்டும்.
இதுதான் தியாகம் என்பது; இத்தகையவர்களுக்குத்தான் லட்சியவாதிகள் என்று பெயர் என்று அதை - பெரியாரின் பெரும்படையினர் எல்லோரும் நெஞ்சில் செதுக்கி வைத்தும், அதனை அன்றாடம் சுவாசிப்போராகவும் மாறிட வேண்டாமா?
தேர்தல் தோல்விகளால் பாதிப்பு கிடையாது
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பொறுத்து அல்ல அதன் கொள்கை வளர்ச்சிகள். லட்சிய வெற்றிகளை அளக்கும் தன்மைகளை உள்ளடக்கியதே எந்த ஒரு சமுதாயப் புரட்சி இயக்கமும்!
ஓர் இயக்கம் தான் சந்திக்கும் மக்களைப் பக்குவப் படுத்திட அது போடும் எதிர்நீச்சல், எண்ணற்ற அடக்குமுறை, சிறைவாசங்களை ஏற்கும் பக்குவப்பட்ட தொண்டர்கள் - இவைதான் வெற்றியை அளக்கும் பல்வேறு அளவுகோல்களாகும்!
ஆயிரம் இளைஞர்களின் பாசறை!
1000 இளைஞர்களை, - (வயதாலும் இளையர்கள்) - திருமணத்தை 5, 10 ஆண்டுகள் தள்ளிப் போட்டு, இனமானக் கொடியை ஏந்திட, தந்தை பெரியார் கூறிய திராவிடர் சமுதாயத்திற்கு அறிவும் மானமும் ஏற்படுத்திட எழுச்சிமிக்க திராவிட இளைஞர் பாசறையை உருவாக்கி, பட்டறையில் காய்ச்சிய கொள்கைப் போர் வாள்களைப்போல பதப்படுத்தும் திட்டமே இவ்வாண்டுத் திட்டம்.
உண்டி, உறையுள் மட்டும் பெற்று, ஆங்காங்கு புத்தத் துறவிகள் எப்படி ஊரெல்லாம் சென்று மக்களைச் சந்தித்து கொள்கை லட்சியங்களைப் பரப்பினார்களே, அதேபோல செயல்படுவோம்! தனி மனிதரல்ல புத்தர் என்பவர்.- தத்துவம் - வாழ்க்கை நெறி என்பதைப் போல பகுத்தறிவு, சுயமரியாதை, ஒழுக்க வாழ்வு, சமு தாயக் கூட்டுப் பொறுப்புடன் கூடிய,  மக்கள் பணியை அறிவியல் நெறிமுறையில், சிந்தனையுடன் செயலாக்கும் - மனிதநேயம் மலர்ந்திட செய்யும் மக்கள் தொண்டறச் செம்மல்களாக அவ்விளைஞர்கள் உருவாக்கப் படுவார்கள்!
இருட்டில் ஒரு மெழுகுவத்தி!
இருட்டைக் குறை சொல்வதால் பயனில்லை; ஒரு மெழுகுவத்தியைக் கொளுத்தியாவது வெளிச்சத்தைப் பரவிடச் செய்! என்ற அறிவுரைபோல வெறும் வாய்ப் பேச்சு, வக்கணை, வீராவேசப் பொழிவுகள் செய்து, காணாமற்போய்விடும் மின்மினிப் பூச்சிகளோ, விளம்பர வியாதியால் பீடிக்கப்பட்ட விசித்திர நபர்களோ அல்ல நாம்!
விரல் நுனிக்குள் உலகம்!
முன்பு வேட்டையாடி உண்ட மனித குலம், விவசாயத்தில் நிலைத்து, பிறகு தொழிற்புரட்சியால் தோள்தட்டி, மின்னணு யுகத்தால் மேலோங்கிப் பாய்ந்து, தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் தழைத்தோங்கிய நிலையில், நுண் அறிவு யுகத்தினைத் தேடிடும் இன்றைய நிலையில், அறிவுப்புரட்சி - தொழில்நுட்பப் புரட்சி ஒரு புதுயுகமாம் நுண்ணறிவு யுகத்தை (Age of Wisdom) நோக்கி வேகமாக நகருகிறது!
மனிதர்கள் போட்ட நாடுகளின் எல்லைக் கோடுகள், அறிவால், தொழில்நுட்பத்தால் - கணினிப் புரட்சிமூலம் இணையம், வலை தளம் போன்றவைகளால் தகர்க்கப்பட்டு, விரல் நுனிக்குள் உலகம் அடக்கப்படும் அபார அறிவுச் சாதனை அன்றாட வாழ்வாகிவிட்டது.
கணினி - இணைய தள பயிற்சிகள்!
இந்நிலையில், நமது கிராமப்புற இருபால் இளைஞர்கள் ஒடுக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு அவதியுற்ற வாழ்வு வாழ்வோரின் வாரிசுகள் என்ற நிலையை மாற்றிட, கணினி, - இணைய தளம் தொடர்பான அடிப் படைப் பயிற்சிகளை_கழக இளைஞர்களுக்கும், அல்லாதவர்களுக்கும்கூட, அளிக்கும் வகையில், இந்தப் பெரியாராண்டு 133 இல் (செப்டம்பர் 17, 2011) நாட்டில் பற்பல பயிற்சி மய்யங்களை உருவாக்கிட, நமது இயக்கச் சார்பில்  பெரியார் இணைய தளப் பயிற்சிப் பட்டறை (பரவலாக தமிழ்நாட்டில் வட்டாரங்களாகப் பகுத்துக்கொண்டு) சிற்சில நாள்களில் சீரிய அடிப்படை அறிவைப் போதித்துத் தொண்டறப் பணி தொடங்கி நடத்திட ஆயத்தப்படுத்தப்படும்.
இனிவரும் உலகம்பற்றி பெரியார் கூறினார்களே, இதோ அவ்வுலகத்திற்கு உங்களுக்கு அன்பழைப்பு என்று கூறி, ஆக்கபூர்வ பணிகளை, ஆரவாரமின்றி செய்திட, பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது - அவருக்கு உதவிடும் வகையில்,
2. தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ்
3. பேராசிரியை டாக்டர் மு. தவமணி
4. துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன்
5. மாநில ப.க. துணைத் தலைவர் பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி
6. ச. பிரின்சு என்னாரெசு பெரியார்
ஆகியோர் செயலாற்றி, ஆங்காங்கே வட்டாரங்களைத் தேர்வு செய்து, அய்யா நினைவு நாளான டிசம்பர் 24-க்குள் ஒரு பெரும் பகுதிப் பணியை நிறைவு செய்யவேண்டும் என்பது நமது அவா!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பெரியாரியல் பாடமாக உள்ளது என்பது நாமறிந்தது. அதே நேரத்தில், டில்லியில் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் (IGNOU - Indira Gandhi National  Open University)  பெரியார் சிந்தனைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியல்லவா?
பெரியார் தலைமைத் தத்துவப் பயிற்சிப் பட்டறை
இளைய தலைமுறைகளான மாணவச் செல்வங் களை குறிப்பாக, நல்ல சிந்தனையாற்றல் - பேச்சாற்றல் - பெற்றவர்களாக்கி, எதிர்கால சமுதாயத்தை வழி நடத்தும் குடிமைப் பயிற்சிக்கான ஒரு திட்டமாக பெரியார் தலைமைத் தத்துவப் பயிற்சிப் பட்டறை களை (Periyar Leadership Training Camp)பல்வேறு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நமது அறக்கட்டளைகளும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இவ்வாண்டுமுதல் நடத்திட, (பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனுமதியுடன்) அவர்களை மிகப்பெரும் ஆற்றலும், கட்டுப்பாடும், ஒழுக்கச் சிந்தனைகளும், மனிதநேயமும் பொங்கும் வண்ணம் பல்வேறு பயிற்சி களை அரசியல் சாராமல் - பயிற்றுவிக்கும் திட்டமும் இவ்வாண்டு 133 ஆம் பெரியாராண்டிலிருந்து நடத்தப்படும்.
பெரும் நிதிச் சுமை ஏற்படும் என்பதால், பல கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இப் பயிற்சிப் பட்டறையில்  முதல் கட்டமாக மாணவர்கள் (Selective) பொறுக்குமணிகளாகத் தேர்வு செய்யப்படும் நிலை ஏற்படலாம்.
பெரியார் சுற்றுப்பயணம் எப்படி தொய்வின்றி தொடர்கிறது பார்த்தீர்களா?
1. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பகுத்தறிவு - அறிவியல் கண்காட்சி
2. கோடை காலங்களில் கிராமப் பகுதிகளில், கோயில் திருவிழா நடக்கும் ஊர்களில் தீக்குண்டம் இறங்கிக் காட்டுதல் - மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி
3. பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகள்
4. தீண்டாமை, மூட நம்பிக்கை நிகழ்வுகள் தலைவிரித்தாடும் ஊர்களில் நேரடி நடவடிக்கைகள்
5. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியாரியல் பயிற்சி முகாம்கள்
6. தை முதல் நாள் பொங்கல் விழாவை புது முறுக் குடன் - பல்வேறு போட்டிகள் நடத்திக் கொண்டாடுதல். இவற்றை முன்னெடுப்போம்.
புத்தக விற்பனையில் புதுமைகள்
தந்தை பெரியாரின் கருத்துகளைத் தரமான புத்தகங்களாகத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் புதுமையான வழிகளைப் புகுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாம் எப்போதும் முன்னோடியாகவே செயல்பட்டு வருகிறோம். புத்தகக் கண்காட்சிகள், நகர்வு புத்தகக் கண்காட்சிகள், சிறப்பு விற்பனைகள், உலகப் புத்தக நாளை ஒட்டிய விற்பனைகள், இவை தவிர்த்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நிரந்தரமாக பெரியார் புத்தக விற்பனை நிலையங்களை அமைத்து அறிவுச் செல்வங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். இந்நிலையில், உலகின் எந்த மூலையிலிருந்தும் மிக எளிதாய் நமது வெளியீடுகளை வாங்குவதற்கு ஏதுவாக திராவிடன் புத்தக நிலையம் (www.dravidianbookhouse.com)என்ற பெயரில்
புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் நமது வெளியீடுகள் மட்டுமல்லாமல் பகுத்தறிவு, சமூகநீதிக் கருத்துகளைப் பிரதிபலிக்கும் பிற படைப்புகளையும் விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாக இணையதளம் மூலமே பணம் செலுத்தி எங்கிருந்தும் புத்தகங்களை வாங்க முடியும். தந்தை பெரியாரின் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக உலகத் தமிழர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
புத்தக வெளியீடு - புதிய பரிணாமம்
இன்னொரு சிறப்புச் செய்தி என்னவெனில், தந்தை பெரியாரின் கருத்துகளை இதுவரை நூல் வடிவில் மட்டுமே படித்து வந்த தோழர்களுக்கு, அதை இன்னும் எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் ஒலிப் புத்தகங்கள் (Audio Books) வெளியிடப்பட இருக்கின்றன என்பதையும் மகிழ்ச்சியோடு இவ்வேளையில் அறிவிக்கிறோம்.
அறிவு ஆசான் - ஆப்பிளில்...
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கைக்குள்ளே அடங்கும் I-Pod, I-Pad வகைகள் இன்றைய இளைய தலைமுறையினரிடம் உலகைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. எனவே, அத்தகைய தொழில் நுட்பத்தையும் நாம் கைக்கொள்ள வேண்டுமல்லவா? இந்த 133ஆம் பெரியார் ஆண்டிற்குள் விடுதலை நாளிதழ் ஆப்பிள் I-Pod,   I-Pad  கருவிகளில் வர இருக்கிறது என்பதையும் அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
இவ்வாண்டு (2011 இல்) தொடக்கத்தில் திராவிடர் கழகமும், ஆந்திர கோரா அவர்கள் தொடங்கிய நாத்திக மய்யமும் இணைந்து திருச்சியில் நடத்திய உலக நாத்திகர்கள் மாநாட்டில் பன்னாட்டுப் பேராளர் கள், சிந்தனையாளர்கள் மூன்று நாள்கள் கலந்து கொண்டனர்.
மிகுந்த உற்சாகத்துடன் திருச்சி, தஞ்சை_ வல்லம் கல்வி வளாகங்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஆகியவற்றைப் பார்த்துப் பூரித்துப் போன பன்னாட்டு மற்றும் இந்தியாவின் இதர மாநிலப் பேராளர்கள் வியந்து பாராட்டி மகிழ்ந்தனர்!
ஆந்திராவில் தந்தை பெரியார் திரைப்பட (தெலுங்கு மொழி மாற்று- டப்பிங்) வெளியீட்டு விழா, அதன் தலைநகர் அய்தராபாத்தில் நடைபெற்றது. முன்னாள் தமிழக துணை முதலமைச்சர் மானமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் திரையரங்கில் மக்கள் வெள்ளத்திடையே துவக்கி வைக்கப்பட்டு, ஆந்திரா முழுவதிலும் சுமார் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.
இதற்கு முழு முயற்சி எடுத்த ஆந்திர நண்பர்கள் பெரியார் தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் பி.சுனில், பெரியார் திரைப்பட தெலுங்கு உரையாடல் ஆசிரியர் கட்டி பத்மராவ், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி, முன்னாள் எம்.பி. ரவிமல்லு ஆகியோர் நம் நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.
வைக்கத்தில் முப்பெரும் விழா!
அதுபோலவே கேரளத்தில் வைக்கம் சத்தியாக் கிரகத்தின் 85 ஆம் ஆண்டு விழா, தந்தை பெரியார் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ஜாதி ஒழிப்பு மாநாடு என்று முப்பெரும் விழாக்கள் 26.11.2010 அன்று கோலாகலமாக என்.எஸ்.எஸ். அரங்கத்தில் நடை பெற்றன. - திராவிடர் கழகம் மற்றும் ஆதரவாளர்கள் குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, காலை முதல் மாலை வரை இடையறாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் - தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, கேரள மாநிலம் தேவஸ்தானம் மற்றும் அச்சுத் துறை அமைச்சர் கடந்தம்பள்ளி இராமச் சந்திரன், கேரள முன்னாள் அமைச்சர் திருவாஞ்சூர் இராதாகிருஷ்ணன்,  கவிஞர் கனிமொழி எம்.பி., வைக்கம் கே.அஜீத் எம்.எல்.ஏ., குட்டி அகமது எம்.எல்.ஏ., கேரள மாநில தி.மு.க. அமைப்பாளர் எம்.ஏ. மசூத் முதலியோர் பங்கு கொண்டனர்.
தமிழ்நாடு தி.மு.க. இலக்கிய அணி துணைத் தலைவர் திருவில்லிப்புத்தூர் மானமிகு ச. அமுதன் அவர்களின் சீரிய முயற்சி இந்த விழாவில் அமைந்திருந்தது.
இப்படி தென்கோடியில் மய்யங்கொண்டிருந்த பெரியார் சுயமரியாதை காற்றழுத்த மண்டலம், இன்று இந்தியாவின் எல்லாத் திசைகளையும் நோக்கி சுழன்று சுழன்று வீசத் தொடங்கிவிட்டது. இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது! முடியவே முடியாது!! புயலுக்கு ஏது அணை?
அடுத்து இவ்வாண்டு (133 ஆம் ஆண்டு) குடிஅரசுக் களஞ்சியங்கள் தொகுப்புப் பணிகள் மிகச் சிறப்பாக நிறைவடையவிருக்கின்றன.
வெளிவருகிறது பெரியாரின் டைரிக் குறிப்புகள்
அதனைத் தொடர்ந்து நம் அறிவு ஆசானின் டைரிக் குறிப்புகளை அவர் தம் கையெழுத்திலேயே அப்படியே வெளியிட்டு பல தொகுதிகளாக வெளிக் கொண்டுவரும் பணியைத் துவக்கவிருக்கிறோம்.
தந்தை பெரியாரின் உரைத் தொகுப்பு
திருச்சி தோழர் து.மா. பெரியசாமி அவர்களால் பதிவு செய்யப்பட்ட தந்தை பெரியார் பேருரைகளை அவர்களே கைப்பட விரிவாக எழுதி (பெரியார் பேசியவாறே) வெளியிட்டுள்ள 128 முக்கிய உரைத் தொகுப்பு 3 தொகுதிகளை (ஏறத்தாழ 1000 பக்கங்கள்) பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் சார்பில் அச்சிடப்பட்டு, வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி தந்தை பெரியார் தம் நினைவு நாளில் வெளியிட ஆயத்தப் பணிகள் விரைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அறிவு ஆசானின் 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி மற்றொரு அரிய கருவூலமாக என்றென்றைக்கும் பயன்படக் கூடிய அரிய செல்வங்களாக பெரியார் சிந்தனை திரட்டு வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பன்மொழிகளில் பெரியார்!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பில், பெரியார் சிந்தனை மய்யம் என்ற துறையின் சார்பில் பன்மொழிகளில் பெரியார் - பன்னாடுகள் நோக்கிப் பயணிக்கும் பெரியார் என்ற தலைப்பில் அவர்களது சிந்தனைக் கருவூலங்கள் பற்பல மொழிகளில், குறிப்பாக, ஆங்கிலம், இந்தி, பிரெஞ்ச், ஸ்பானிஷ் மொழிகளில் வெளியிடவும், இணைய தளம் மூலம் பெரியார் நூல் களையும் படிக்க புதுவகை உத்திகளோடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
புதிய இளந்தலைமுறைக்குப் பெரியார்தம்  கொள்கைகள் இன்றியமையாதவை! பெரியார் என்ற மூச்சுக் காற்றைச் சுவாசிக்கத் தவறாதீர்கள் இளையர்களே!
பிராண வாயுவுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டுமே தவிர, மூச்சுக் காற்று உங்களைத் தேடி வராது; நீங்கள்தான் அதனைத் தேடிடவேண்டும்_- வளரவேண்டிய உங்களது வாழ்வுக்காக என்பதை இளையர்களுக்குப் புரிய வைக்கும் வகையில், நமது பிரச்சார முறையில் புதுமைகள் பொலிவுற இடம் பெறும்.
பத்துத் தலை இராவணன் என்பது கதைதான்; ஆனால், அந்த திராவிட மாவீரனிடம் பற்றுதலை கொண்ட இயக்கம் திராவிடர்தம் பெருமையை எட்டுத் திசை மட்டுமல்ல, பத்துத் திசைகளிலே (மேலும் கீழும் இணைத்தால் பத்து திசை) எடுத்துரைப்பதே பார்ப்பனப் பண்பாட்டு எதிர்ப்புப் போரின் முழக்கம்தான்.
பற்றற்ற பெரியார்தம் பற்றுகளாம் வளர்ச்சிப் பற்று, அறிவுப் பற்று இவற்றில் அவரைப் (பின்) பற்றுவதன்மூலம் பெரியாரின் பெரும்பணி முடிப்போம்! பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)
அதற்குரிய சரியான பொருள் இது எனக் காண்போம்.
புது யுகம் படைப்போம்!
புத்தன்களாக மாறி புதியதோர் உலகு செய்வோம்!!
சித்தன்களாக சீரிய சீலம் படைப்போம்!!!
வாரீர்! வாரீர்!!
கி. வீரமணி,
தலைவர்  திராவிடர் கழகம்.
- தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில் எழுதப்பட்ட கட்டுரை இ

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...