Tuesday, September 30, 2014

தேவை அமைதி!

தமிழக முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

தி.மு.க. தலைவர் கலைஞர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.இ.அ.தி.மு.க.வே இந்தக் காரியத்தில் ஈடுபடுவது தான் ஆச்சரியமானது.

இந்த வன்முறைகள்மூலம் சட்டம் - ஒழுங்கு அறவே கெட்டு விட்டது என்ற நிலை எழும்போது, அது ஆட்சிக்குத்தானே கெட்ட பெயர். இதன் மூலம் அ.இ.அ.தி.மு.க.வே - அதிமுக ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது என்ற நிலைதானே விஞ்சும்.

ஆத்திரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பார்களே அது இதுதானா? திமுக தலைவர் கலைஞர், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உருவப் பொம்மைகளை எரிப்பது நாகரிகம் தானா?

இதில் இன்னொன்றையும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஆளும் கட்சியே நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தால் ஆட்சி பிறப்பிக்கும் சட்டங்களைக் குடிமக்கள் எப்படி மதிப்பார்கள்?

ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சட்ட ரீதியாக விசாலமான வழிமுறைகள் தாராளமாக இருக்கும்போது அதனைக் கைவிட்டு விட்டு, இத்தகைய வன்முறைகளில் இறங்குவது தீர்வுக்கு வழியாகுமா?

நீதிமன்ற தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய வழிமுறைகளைக் கையாளுவதற்கு ஆளும் கட்சியே வழிகாட்டலாமா?

இதற்கு முன்பேகூட கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல்வழக்கில் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது தருமபுரியில், வேளாண் கல்லூரிப் பேருந்தை எரித்ததால் மூன்று பெண்கள் கொடூரமான முறையில் மரணம் அடைந்த வழக்கில், அஇஅதிமுகவை சேர்ந்தவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டதே நினைவில்லையா?

இப்பொழுதுகூட அரசுப் பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்க சொத்து அல்லவா!
பொதுச் சொத்துக்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து நட்ட ஈடு வசூலிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை இந்த ஆட்சி தானே கொண்டு வந்தது! இந்தச் சட்டத்தின்படி பா.ம.க. நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று இவ்வாட்சி உத்தர விடவில்லையா? (அதனை எதிர்த்த பா.ம.க. நீதிமன்றம் சென்ற வழக்கு நிலுவையில் உள்ளது)

பிரதமராக இருந்த இந்திராகாந்திகூட கைது செய்யப்பட்டதுண்டு, கலைஞர் போன்றவர்களும் கைது செய்யப்பட்டதுண்டு. அப்பொழுதெல்லாம் வன்முறையில் ஈடுபடாததோடு, சம்பந்தப்பட்ட தலைவர்களும், யாரும் வன்முறையில் இறங்கக் கூடாது என்று பொறுப்புணர்ச்சியோடு அறிக்கைகள் வெளியிடப்பட்டதுண்டே!

தந்தை பெரியார் அனுபவிக்காத சிறை வாசமா? அவர்களாவது கொள்கைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்கள். சிறை செல்லுமுன் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கை கொடுப்பார் தந்தை பெரியார்.

ஆனால், ஜெயலலிதா அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்பது கொள்கை, இலட்சியங்களை முன்னிறுத்தி நடத்திய போராட்டத்துக்காக அளிக்கப்பட்ட தண்டனையல்ல; எந்தக் காரணத்துக்காக இந்த தண்டனை என்பது எல்லோருக்கும் தெரியும்.

மோடியைப்பற்றி குற்றம் சொல்லும்பொழுது, அவர்மீது எந்தத் தண்டனையையும் எந்த நீதிமன்றமும் அளிக்கவில்லையே என்று வக்காலத்துப் போட்டுக் கருத்துத் தெரிவிக்கும் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையால் அவருக்குப் பின்னடைவு அல்ல  - நாட்டுக்குத்தான் பின்னடைவு என்று கருத்துச் சொல்லுகிறாரே. ஏனிந்த  இரட்டை அளவுகோல்? இதன் பின்னணியில் இருக்கும் உணர்வுக்கு என்ன பெயர்!?

காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு என்றாலும், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்கிறார் என்றால் இவாளைப்பற்றித் தெரிந்து கொள்ள இதுதான் சரியான தருணமும் - சந்தர்ப்பமுமாகும்.

வன்முறை என்பது இருமுனை கூர்மையான ஆயுதம் என்றார் அறிஞர் அண்ணா; அந்த அண்ணா பெயரில் கட்சி நடத்துகின்றவர்கள் இதனைத் தெரிந்து, வைத்திருக்க வேண்டாமா?

சட்டமறுப்பு இயக்கம் நடந்த  காலத்திலும், வெள்ளையனே வெளியேறு என்று சொல்லப்பட்ட காலத்திலும்கூட, வன்முறைகளை காங்கிரஸ்காரர்கள் கையாண்டபோதுகூட கடுமையாகக் கண்டித்தவர் தந்தை பெரியார். தண்டவாளத்தைப் பெயர்த்த போது, தண்டவாளத்துக்குக் கீழா சுதந்திரம் இருக்கிறது? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியவரும் - அவரே!

அ.இ.அ.தி.மு.க. இப்பொழுது செய்ததற்காக அல்ல - இதனை யார் செய்திருந்தாலும்  - திராவிடர் கழகம் கண்டிக்கவே செய்யும் - திராவிடர் கழகத் தலைவர் கண்டித்துக் கருத்தைத் தெரிவிக்கவே செய்வார்.

சில தொலைக்காட்சி அரங்கங்களில் சில அறிவு ஜீவிகள் உட்கார்ந்து கொண்டு மக்கள் கொந்தளித்து எழுந்தார்கள்! என்று எல்லாம் கருத்துச் சொல்லுவது ஆபத்தானது; எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதற்கு ஒப்பாகும். ஊடகங்கள் வன்முறைகளை அடக்கவேண்டுமே தவிர, தூபம் போடக் கூடாது.

இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் ஆட்சி என்பது இல்லாமல் இருந்தது போன்ற நிலைதான் - இனி மேலாவது சட்டம், ஒழுங்கு நிலையைச் சரிபடுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்ப்பார்ப்பு!

Read more: http://viduthalai.in/e-paper/88423.html#ixzz3EmMCpz2x

Tuesday, September 23, 2014

அட, அண்டப்புளுகு தினமலரே!

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி தினமலரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டுரையை வெளியிட வேண்டாமா?

வெளியிட்டது - ஆனால், விஷமமாக!

இதோ தினமலர்....

நட்புக்கு மரியாதை பெரியார் - ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்த போதும், இறுதிவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.

பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர்; கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி இறந்தபோது மயானம் வரை சென்று கண் கலங்கி அழுதவர், பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்தபோது பொறுப்பில் லாமல் இருக்கிறார் என்று தன் சொத்துக் களை பழனி முருகனுக்கு என்று உயில் எழுதி வைக்க, பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டபோது ராஜாஜி சொன்னார்:

கவலை வேண்டாம். பழனியில் இருப் பது தண்டாயுதபாணிதான்; பழனியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோவில் கட்டி, நீங்களே அந்தக் கோவிலுக்குத் தர்மகர்த்தா ஆகிவிடுங்கள். சொத்துகள் உங்கள் வசமே இருக்கும் என்று ஆலோசனை வழங்கி னார். அன்று தொடங்கிய அவர்களின் தூய நட்பு, மூச்சு உள்ளவரை தொடர்ந்தது தினமலர் (17.9.2014) எழுதுகிறது.

தந்தை பெரியார் அவர்களைப் பெருமையாகக் கூறுவதுபோல முற்பகுதி - பிற்பகுதியிலோ அதற்கு மாறான - தாறுமாறான அக்கப்போர்!

தினமலர் இப்படி கிறுக்கியுள்ளதே - இதற்கு ஆதாரம் என்ன? அதை நாணய மாக வெளிப்படுத்தவேண்டாமா?

இதே பாணியில் நாம் எழுத முடியாதா? 

செத்துப்போன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஒரு கட்டத்தில் பணமுடை ஏற்பட்டு யாருக்கும் தெரியாமல் ஈரோடு சென்று பெருந்தனவந்தரரும், பக்திமானுமான பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கரிடம் சென்று பண உதவி கேட்டார்;

என் மகன் ராமசாமியிடம் வர்த்தகத்தையெல்லாம் ஒப்படைத்து விட்டேன்; அவனிடம் எதற்கும் கேட்டுப் பாருங்கள் என்று சொன்னார். ஈ.வெ.ரா. விடமா? அது நடக்குமா? என்ற யோச னையில் காஞ்சிபுரம் திரும்பி விட்டார் என்று எங்களால் எழுத முடியாதா?

கவர்னர் ஜெனரலாக இருந்த தனது நண்பர் ராஜாஜியிடம் - திருமண ஏற்பாடு, சம்பந்தமாக ஆலோசனை கேட்க, அப் பொழுது ராஜாஜி சொன்ன யோசனை யையே தூக்கி எறிந்துவிட்டு தன் போக்கில் நடந்துகொண்டு, அதில் முழு வெற்றியும் பெற்றவர் தந்தை பெரியார் என்பதெல்லாம் இந்த இனமலர்களுக்குத் தெரியுமா? தெரிந்தாலும் நாணயமாக அவற்றை யெல்லாம் ஏற்றுக்கொள்ளும் நற்புத்தியும் தான் ஏது?

தினமலரே! தினமலரே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள் ளாதே - எச்சரிக்கை!

- கருஞ்சட்டை

Wednesday, August 20, 2014

வினா-விடை சித்திரபுத்திரன்


வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம் கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடா விட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?

விடை: நமது மதமும் ஜாதியும்

வினா: நாம் பாடுபட்டு சம்பாதித் தும் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100 க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாக இருக்கிறோம்.

ஆனால் பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100 க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?

விடை: மதமும் ஜாதியும்

வினா: உண்மையான கற்பு எது?

விடை: தனக்கு இஷ்டப்பட்ட வனி டம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு

வினா: போலி கற்பு என்றால் எது?

விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.

வினா: மதம் என்றால் என்ன?

விடை: இயற்கையுடன் போராடு வதும் அதைக் கட்டுப்படுத்துவதும் தான் மதம்.
வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓவு (லீவு) கொடுக்கப்படுகின்றது.
விடை: பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.
வினா: பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?
விடை: அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந் திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

வினா: மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல் லைகள் ஒழிந்து போகும்.

வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்ய வேண் டும்?

விடை:  அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு, ஓய்வு கிடைத்து விடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)

வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக்கொள்ளா விட்டால் எல் லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்து விடும்.

வினா: பெரிய மூடன் யார்?

விடை: தனது புத்திக்கும் பிரத்தியேக அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன் எப்போதோ சொன் னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
வினா: ஒழுக்கம் என்பது என்ன?

விடை: ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா: சமயக் கட்டுப்பாடு, ஜாதி கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை: மனிதனை தன் மனசாட்சிக் கும், உண்மைக்கும் நேராய் நடக்கமுடி யாமல் கட்டுப்படுத்துவது தான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.

வினா: உண்மையான கடவுள் நம் பிக்கை என்றால்  என்ன?

வினா: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து அவரைக் காக்கப் பிரயத்தனம் செய்வது தான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.
வினா: இந்தியா சீர்பட என்ன வேண்டும்?

விடை: இந்தியா சீர்பட்டு இந்தியர் களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டு மானால் நாஸ்திகமும் நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.

வினா: கிறித்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

விடை: கிறிஸ்துவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள் கைகளும் இருந்த போதிலும் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர் களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க் கைக்கோ, மான உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வ தில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமானதுமாகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை: மத விஷயத்தில் அவர் களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பார்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க  முடிந்தது. மத விஷயத்தில் பார்ப் பனர்களுக்குள்ள பெருமை போய் விட்டால் அவர்கள் இழிவான மனிதர் களுக்கும் இழிவான மனிதர்-களாகி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக் குப் பாடுபடத் தெரியாது. ஆகவே சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியர்களாவார்கள்.

வினா: பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையா கிருக்கின்றது?.

விடை: அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக் கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

- (விடுதலை 2.5.1949)

(சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் - தந்தை பெரியார் எழுதியது)

தந்தை பெரியார் ஒரு சகாப்தம்

Monday, August 4, 2014

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புரட்சிகள்

கோப்புப் படம்

கடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத் திறனோடு மிகவும் புரட்சிகரமான நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம். அத்தகைய புரட்சிகரமான மாற்றங்களை போற்றிப் புகழ வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பயன் அடைந்தவர்களின் கடைமை, அதைப் பொதுமக்களும் தெரிந்துப் போற்றிப் புகழ்ந்திடவே இக்கட்டுரை.

ஊர், உலகம் எல்லாம் தேர்வாணையங்கள் எத்தனைப் பணியிடங்கள் நிரப்பத் தேவையாய் இருக்கிறது என்பதை முதலில் கணக்கிட்டுவிட்டு, பிறகு அந்தத் தேர்வுக்கு அறிக்கை வெளியிடும் நடைமுறையைக் கடைபிடித்து வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிர்த்த முக்கில் இருந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமும் அதன் பெரிய அண்ணன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும்கூட இத்தகைய பழம்போக்கான நடைமுறையைக் கடைபிடித்துவருகின்றன.

பழமையைத் துளி கூட விரும்பாத ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த நடைமுறையைத் தன் காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு முதலில் தேர்வை நடத்துவோம்; பிறகு பொறுமையாக எல்லாப் பள்ளிகளையும் தொடர்பு கொண்டு மிக விரைவாகச் சுமார் ஆறு மாத காலத்தில் காலிப் பணியிடங்கள் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம், பின்னர் அடுத்த ஆறு மாத காலத்தில் பணி வழங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து புரட்சிகரமாகச் செயல்பட்டு ஒட்டு மொத்த உலகத்துக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.

மத்திய அரசுப் பணியாளர் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வை (Civil Service Exam) மூன்று கட்டமாக சுமார் ஓராண்டு காலத்துக்கு நடத்தும். ஒரே தேர்வை மூன்று கட்டமாக ஓராண்டுக்கு நடத்துவதில் என்ன பெரிய நிர்வாகத் திறமை இருந்துவிடப் போகிறது என்று மாற்றி யோசித்த ஆசிரியர் தேர்வு வாரியம், தான் தலையிட்டு நடத்தும் எல்லா தேர்வுகளையும் ஓர் ஆண்டுக்கு நடத்துவது என்று முடித்துவிட்டது, அதுவும் ஒரு தேர்வுக்கு ஒரே கட்டம்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை மேய்ந்து பாருங்கள், நடப்புத் தேர்வுகள் என்ற பகுதியின் கீழ் இருக்கும் பகுதியில் உள்ள தேர்வுகளின் பட்டியலைப் பாருங்கள், தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பவர் ஸ்டாரின் லத்திகாவுக்கு அடுத்து நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரே நிகழ்வு இதுதான்.

இந்தத் தேதியில் இந்த அறிவிப்பை வெளியிடுவோம், முடிவுகளை வெளியிடுவோம் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டு அப்படியே செய்துவிடுவதில் என்ன ஒரு திறமையும் நேர்மையும் பளிச்சிடப்போகிறது. இத்தகைய நடைமுறைகளை முற்றாக வெறுக்கும் வாரியமானது இதையெல்லாம் கைவிட்டு எந்தத் தேதியில் அறிவிப்பை வெளியிடுவது என்பன போன்றவற்றை முன்பே அறிவிப்பதில்லை. அப்படி அறிவித்தால் அந்தத் தேதியில் அறிவித்தாக வேண்டுமே, இதுபோன்ற கட்டுப்பாடுகளை விரும்பாத வாரியம் தான் ஒரு சுதந்திர அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. நேர்மையான, சுதந்திரமான ஒரு அரசு அமைப்பு இயங்குவதுதானே ஆரோக்கியமான சமூகத்துக்கு நலம்பயக்கும்.

மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசுத்துறை அமைப்புகள் அதற்கென ஒரு அலுவலரோ அல்லது அதற்குப் பொறுப்பான ஒருவரோ இருப்பதுதானே வழக்கம். இந்த வழக்கத்தையும் வாரியம் மிகவும் வெறுத்துப் புதுமையைப் புகுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளைப் பார்த்தால் வாரியத்தின் இந்தப் புதுமையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர், மர்ம நபர் தகவல் தெரிவித்தார் என்பது போன்றே செய்திகள் வரும்.

மற்ற எந்த அரசுத் துறைகளும் செய்யாத மிகப் பெரிய சாதனை ஒன்றை கடந்த ஓராண்டு காலமாக வாரியம் செய்துவருகிறது. பிற துறைகள் என்னதான் முயன்றாலும் இந்தச் சாதனையை இன்னும் முறியடிக்க முன்னூறு ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர். பிற அரசுத் துறைகளில் நீங்கள் ஒரு குறையைக் கண்டறிந்தால் அந்தத் துறையைத் தொடர்பு கொண்டு பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர நீதிமன்றத்தை உங்களால் பொசுக்கென அணுகிவிட முடியுமா, நிச்சயமாக முடியாது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீங்கள் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் தொடுக்க முடியும், அதற்குத் தேவையான காரணங்களையும் வாரியமே நமக்காக ஏற்படுத்தித் தருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டுமே சுமார் 700 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறதாம், இது போக முதுநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வேறு மேலும் பல நூற்றுக் கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். இவ்வாறு சாதனை புரிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய நீதிமன்ற வழக்குகளுக்காகவே இரண்டு பணியாளர்களை நியமிக்கப்போவதாக மான்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனது கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் (கருத்தாகப் பார்த்தால் இவர்கள் இன்னும் / இப்போது ஆசிரியர்கள் அல்ல) இன்னும் பல்லாண்டுகளுக்கு மாணவர்கள் நலனுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உழைக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஓய்வை அனுபவிக்கும் பெரும் பொருட்டு தேர்வு வாரியம் ஆண்டுக்கணக்கில் இத்தேர்வுகளை நடத்துவதாக தேர்ச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சிலரை இதற்கு முன்பு அவர்கள் பணிபுரிந்த தனியார் பள்ளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த ஓய்வு நடவடிக்கையை செயல்படுத்தும் விதமாக அவர்களைப் பணியிலிருந்து விடுவித்து வாரியத்தின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டனர். தேர்ச்சிபெற்றவர்களும் ஓய்வை ஓராண்டாகச் சுகமாக அனுபவித்துக் கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள்.



மிக நீண்ட காலமாகச் சிறப்பாகவும் புரட்சிகரமாகவும் செயல்பட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் பொது மக்களின் கவணத்திற்கு வந்தது தற்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் "ஆசிரியர் தகுதித் தேர்வு-2013" நடத்தியதன் பிறகும் இத்தேர்வில் உடனுக்குடனும் முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை திருத்திக் கொண்டு மீண்டும் வேறு வகையான வழிமுறைகளைக் கையாண்டு தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்துகொள்வதிலும் வாரியத்தைப் போலச் சிறந்த ஒரு அமைப்பை மங்கள்யான் செயற்கைக்கோளானது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்தால்தான் உண்டு.

- சிரியன். ஆ

Friday, August 1, 2014

சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்? - கி. வீரமணி

  • சலுகைகள் ஆயிரம் இருந்தும் அரசுப் பள்ளிகளின் செல்வாக்குக் குறைவானேன்? மூடப்படும் நிலை ஏற்பட்டது ஏன்?
  • ஆசிரியர் பயிற்சி நிலையங்களும் மூடப்படும் நிலை ஏன்?
முதல் அமைச்சர் உடனடித் தீர்வு காண வேண்டும்!  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
கி.வீரமணி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளும், ஆசிரியப் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து, இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை முதல் அமைச்சர் காண வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
 
இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்த தமிழ்நாட்டுக் கல்வித் துறை இப்போது பல்வேறு அவலங்களுக்கும் குறைபாடுகளுக்கும் கடும் விமர்சனத்திற்கும் ஆளாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளாக உள்ளவை பல - போதிய அடிக்கட்டுமான வசதிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை - அதன் காரணமாக, பல ஏழைப் பெற்றோர் கள்கூட, தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியதால் ஏற்பட்ட மாணவர்கள் போதாமை.

அரசுப் பள்ளிகளை மூடும் நிலை

அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் இல்லாததால் பள்ளிகளை மூட வேண்டிய நிலை என்று சில பகுதிகளில் உள்ள கிராமப் பெற்றோர்கள் கூறுவதாக தொலைக்காட்சியில் செய்திக் கோவைகள் வருகின்றன.

அரசின் கல்வித் துறை இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்; ஏற்கெனவே படிக்கும் பல லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வசதிகள் - இலவச சைக்கிள், உயர் வகுப்பு மாணவர் களுக்கு மடிக்கணினி, சம்பளமில்லா படிப்புச் சலுகை எல்லாம் வரவேற்கத்தக்கவை என்றாலும், புதிதாக பல ஊர்களில் அரசுப் பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுவதைத் தவிர்த்திட, மாற்றுப் பரிகாரம் செய்ய வேண்டியதும் அவசர அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டவே இதனை எழுதுகிறோம். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பலவும் மூடப்படும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏன்?

தமிழ்நாட்டில் 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 450 தனியார் பள்ளிகள் (ஒரு காலத்தில் வாரிவழங்கியதன் விளைவு இது) உள்ளன.

குழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை

இந்தப் பள்ளிகளில் அரசு கல்வித் திட்டப்படி இரண்டு ஆண்டு பட்டயப் பயிற்சிப் படிப்பு வழங்கப்படுகிறது. தேர்வில்  வெற்றி பெற்ற பிறகு டி.இ.டி. (T.E.T.) ஆசிரியர் தகுதித் தேர்வு   தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு, பெற்றால் அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். (இப்படி ஒரு வடி கட்டலுக்குப் பதில் படித்து வெளியேறும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு முறையையும் பாட திட்டத்தையும் ஒழுங்குபடுத்தினால், இந்த இரட்டைத் தொல்லை நீங்கக் கூடும்).

இதில் எத்தனை வழக்குகள், தேவையற்ற விமர் சனங்கள், போராட்டங்கள், அரசுக்கும் தலைவலி - இவற்றை அடிப்படை மாறுதல்கள் மூலம் தவிர்க்க வேண்டும் அரசுகள். இப்போதும் காலந் தாழ்ந்து விடவில்லை.  முதிர்ந்த ஓய்வு பெற்ற கல்வி ஆசிரியர்கள், கல்விஅறிஞர்களைக் கொண்ட கல்வி மேலாண்மை வாரியம் சுதந்தரமான முடிவு எடுத்து ஒழுங்குப் படுத்தும் அதிகாரத்துடன் ஏற்படுத்தப்பட்டு  செயல் பட்டால் அது பல பிரச்சினைகள் எழுவதற்கே வாய்ப் பில்லாமல் செய்யும் என்பது உறுதி.

1. இடை நிலை ஆசிரியர் நியமனம் சரியாக நடை பெறாதது.

2. பல்வேறு போட்டிகளைச் சந்திக்க வேண்டிய வயதான ஆசிரியர்களின் பரிதாப நிலை.

இவை காரணமாக இப்படிப்பிற்குரிய கிராக்கி தேவை (Demand) குறைவதால், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை மூட வேண்டிய கொடுமையான நிலை!

மாணவர் - ஆசிரியர் விகிதத்தில் மாறுதல் தேவை!

மாணவர் ஆசிரியர் விகிதாசாரம் 1:30 என்பதைக் கடைப்பிடித்தால்,  ஆசிரியர்கள் தேவையும் அதன் காரணமாக நியமனங்களும் அதிகம் வாய்ப்பாக அமையும்.

ஆரம்பக் கல்விக்கு அரசுகள் செலவழிக்க தாராளமான நிதி ஒதுக்கீடும், அதனைச் சரியாகச் செலவிடுவதுமான முறையில் மாறுதல் செய்தால் பள்ளிகளை - ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டி இருக்காது.

ஆட்சியாளர் நோய் நாடி, நோய் முதல் நாட முன் வரவேண்டும்.

மாவீரர் லெனின் ரஷ்யாவில் பொறுப்பேற்றவுடன் அவர் முன்னுரிமை தந்தது இரண்டு துறைகளுக்கு E என்பதில் Education, Electricity)கல்வி, மின்சாரம் என்பவைகளில்தான்.

முதல் அமைச்சர் கவனிப்பாரா?

ஆட்சியாளர் மறவாமல் மற்ற இலவசங்களை  விரிவுபடுத்துவதைவிட பள்ளிகள் மூடப்படாமல்  பார்த்துக் கொள்ள உடனடித் தீர்வு காண முன் வர வேண்டும். தமிழக முதல்வர் கவனிப்பாரா?


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
29.7.2014

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


Monday, July 28, 2014

எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர்




கேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப் படுகிறதே?

பதில்:- கடந்த 17-7-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகிய மூன்று முக்கிய மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மூன்று முக்கியத் துறைகளும் பேரவையிலே ஒரே நாளில் அவசர அவசரமாக விவாதிக்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே, இந்தத் துறைகளின்பால் இந்த ஆட்சியினருக்கு உள்ள ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

கழக ஆட்சியில் மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டு, இந்த மூன்று துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டதற்கு மாறாக தற்போது ஒரே நாளில் மூன்று துறைகளுக்கான மானியங்கள் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானிய விவாதத்தின் போது பல முக்கிய அறிவிப்புகளை ஆசிரியர் சமுதாயம் மிகுந்த ஆவலுடன்
எதிர்பார்த்திருந்தது. 

குறிப்பாகப் பள்ளிகளில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் மாணவர் நலன் - முன்னேற்றம் கருதி நிறைவு செய்யப்படும் என்றும்; முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான,  மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத் திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள் என்றும் ; அ.தி.மு.க. அரசு ஏற்கனவே அறிவித்தவாறு 61 மாணவர்களுக்கே 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் ; மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டு 1,268 பள்ளிகளை மூடும் திட்டம் கைவிடப்படும் என்றும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இணையாக 4 உயர்த்தப்படும் என்றும்; இவை அனைத்தையும் நிறைவு செய்திடும் வண்ணம் தேவையான  அறிவிப்புகள் எல்லாம் அணி அணியாக வரப் போகிறதென்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இதில் எந்த அறிவிப்பும் வரவில்லை.பள்ளிக் கல்வி அமைச்சர், இடை நிலை ஆசிரியர்கள் அல்லாத 3,459 புது ஆசிரியர்கள்  மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. 

அ.தி.மு.க. அரசு அமைந்து மூன்றாண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் இந்தப் பள்ளிக் கல்வித் துறை ஆறு அமைச்சர்களைக் கண்டிருக்கிறது என்ற ஒன்றே இந்தத் துறையின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டும்.
 
 பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக முதலில் பொறுப்பேற்ற சி.வி. சண்முகம், அவர் அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படு வார்கள் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.

 சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து இந்தத் துறையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு வார காலமே அந்தத் துறையின் அமைச்சராக இருந்தார். அவர் 55 ஆயிரம் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுவிட்டார்கள் என்று, திடீரென்று ஒரு போடு போட்டார்; 

அ.தி.மு.க. ஆட்சியில் புதிய தாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை பற்றி, அவரிடம் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே, அவரிடமிருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டு, அமைச்சரவையிலிருந்து கழற்றி விடப்பட்டார். 

அவரைத் தொடர்ந்து என்.ஆர். சிவபதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரானார். அவரோ முன்னர் செய்யப்பட்ட அறிவிப்புகளை ஆராய்ந்து பார்க்காமல், 26 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப் போகிறோம் என்றார். சில நாட்களுக்குப் பிறகு விழிப்புணர்வு பெற்றவரைப் போல,
 
 அவரே 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். சிவபதியைத் தொடர்ந்து நான்காவது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக வைகைச் செல்வனும், ஐந்தாவது அமைச்சராக என்.எஸ். பழனியப்பனும் பொறுப்பிலே இருந்த போது "நமக்கேன் வம்பு"என்று ஆசிரியர் நியமனம் பற்றியே எதுவும் கூற வில்லை. ஆனால் அப்போது ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. அரசு 64 ஆயிரம் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நியமித்துள்ளது என்றார். இன்று அவர் இருக்குமிடம் தெரியவில்லை.

 இன்றைய பள்ளிக் கல்வி அமைச்சர் 12-7-2014 அன்று ஒரு விழாவில் பேசும் போது, கடந்த மூன்றாண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரை வில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார். ஆம் 10ஆம் தேதி பேரவை தொடங்கிய பிறகு அமைச்சர் செய்த அறிவிப்பு இது!

ஆனால் இதே அமைச்சர் கல்வி மானியக் கோரிக்கையின் விவாதத்தின் போது 3,459 ஆசிரியர்கள் மற்றும் 415 ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்திருக்கிறார். எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும்
 
 இறக்கியும் கூறிட முடிகிறதோ அ.தி.மு.க. அமைச்சர்களால்!உண்மையில் எத்தனை ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் சங்கத்தாரைக் கேட்டால் மிகக் குறைவாகக் கூறுகிறார்கள். 

கல்வி மானியத்திற்குப் பதிலளித்த அமைச்சர், இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக எதுவும் கூறாததால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கும் இடை நிலை
ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...