Wednesday, March 27, 2013

டெசோ எதிர்ப்பாளர்களே, சிந்தித்து பாருங்கள்!


- வெளிச்சம்
இன்றைக்கு தமிழகமெங்கும் ஈழத்தில் நடந்த இனப்  படுகொலையினை எதிர்த்து சாதி, மத, கட்சி வேறுபாடுகளை கடந்து ஒரு பெரிய எழுச்சி உண்டாகியுள்ளது. வேதனையான தருணத்திலும் ஆறுதலான ஒன்று. அதுவும் சமீப காலங்களாக சாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்திய கட்சி களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. (ஆமாம் அவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்! கொஞ்ச நாட்களாக கடை மூடியே உள்ளதே) பற்பல அமைப்புகள் இனப் படுகொலையினை  எதிர்த்தும், ஈழ தமிழரின் இன்னல்கள் நீங்க தொடர்ந்து குரலெழுப்பி வந்தாலும், டெசோ அமைப்பின் மறுவுருவாக்கத்திற்குப்  பிறகு போராட்டம் அடுத்த முக்கிய கட்டத்திற்கு சென் றது என்றால் அது மிகையாகாது. டெசோ அமைப்பு சரியான நேரத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்களால் தமிழர் தலைவர் ஆசிரியர், எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் மற்றும் பேராசிரியர் சுபவீ  அவர்கள் ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டது. டெசோவின் சாதனை!
ஈழத் தமிழர் பிரச்சினையினை பல சிறிய அமைப்புகள் ஆதரித்து குரல் எழுப்பி வந்தாலும் தமிழக அளவிலோ, இந்திய அளவிலோ அதைப்  பெரிதாக அவர்களால் கொண்டுச் செல்ல முடியவில்லை, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. டெசோ அதை செய்து காட்டிவிட்டது. இந்த தருணத்தில், எல்லோரும் ஒருங்கிணைந்து தங்கள் சுய விருப்பு வெறுப்புகளை களைந்து  டெசோ மூலமாக இப்பிரச்சினைக்கு தொடர் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு இது மிக முக்கியமான காலக் கட்டம். ஆனால் நடப்பதோ வேறு. ஒரு சில அமைப்புகள்  மற்றும் பத்திரிகை கள் தாங்கள் தான் ஈழத்  தமிழரின் வாழ்விற்கு  ஏக போக உரிமையாளர்கள் போலவும் மற்றவர் களுக்கு இதில் என்ன வேலை என எண்ணிச்  செயல்படுவது வேதனையிலும் வேதனை. அது மட்டுமின்றி, குதிரை கீழே தள்ளியது மட்டுமின்றி குழி பறித்தது போல,டெசோ அமைப்பையும் குறிப்பாக திமுக மற்றும் கலைஞர்  அவர்களை குறிவைத்து தாக்குவது நமக்கு அவர்களின் அடிப் படை நோக்கத்தினையே சந்தேகப்பட வைக்கிறது. எந்த தொலைக்காட்சியில் நடக்கும் விவாதம் ஆகட்டும், எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு எதுவேண்டும் என்றாலும் இருக்கட்டும், ஒரே  குறிக்கோள் கலைஞரைக் கொச்சைப்படுத்த வேண்டும். தாக்க வேண்டும்.
ஆபிரகாம் லிங்கன் சொன்னது மாதிரி, ஒரு சிலரை எப்போதும் ஏமாற்றிவிடலாம். எல்லோ ரையும் ஒரு சில முறை ஏமாற்றிவிடலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்றி விட முடியாது என்பதுதான் உண்மை. இவர்களால் தொடர்ந்து தங்கள் பொய்ப்புரை மூலமாக மக்களை ஏமாற்றி விடமுடியாது. நேற்று முளைத்த மழையில் இன்று முளைத்த காளான்கள் நுரை யீரல் பிதுங்கக்  கத்துவதுதான் வேடிக்கை. இதில் ஒரு காளான், ஏதோ தம்பி பிரபாகரனின் தளபதியாக போர்முனையில் இருந்து போரினை நடத்தியது  போல பேசுவதுதான் 'சுத்தக்  காமெடி'. தமிழ் திரைபடங்களில்தான் எவ்வளவு சோகமான துயரமான கதையாக  இருந்தாலும் இடை யிடையே நகைச்சுவை காட்சி  என்கிற கோமாளித் தனம் அரங்கேறும். ஒருவேளை அத் துறையினை சார்ந்த 'தமிழர்' என்பதால் தொடர்ந்து நகைச் சுவையாக பேசி வருகிறார் போலும். வரலாறு களை மறந்துவிட்டாரா  அல்லது தெரியாமலேயே பேசுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது. 80களின் தொடக்கத்தில் வெளிக்கடை சிறையில் குட்டி மணி தங்கதுரை உட்பட 35 பேர்  ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நேரத்தில்  தமிழகத்தில் பெரும் கிளர்ச் சியையும் கொந்தளிப்பையும் உரு வாக்கியதில் பெரும் பங்கு திமுக விற்குதான்  என் பதை மறக்கமுடியுமா? அன்று முதல் திமுக கட்சி தலைமை மட்டுமின்றி. எல்லா மட்டத்திலும்,  கடைநிலைத்  தொண்டன், மற்றும் திமுக அனுதாபிகள் வரை  தொடர்ச் சியாக முழு மூச்சாக ஈழப் பிரச் சினையில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்கள்.
எம்.ஜி.ஆர்., மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜியார் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு பண உதவி செய்திருந்தாலும் உளமார அவர் இந்த ஈழப் பிரச்சினையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை என்பதுதான் உண்மை. இதை அனை வரும் அறிந்திருந்தாலும் காலஞ்சென்ற டி ஜீ பி  மோகன்தாஸ் அவர்களின் புத்தகம் இதற்கு கூடுத லாக இன்னொரு  சாட்சி. (கொடுமை என்னவென் றால் திமுக 1981இல் அறவழியில் போராட்டம் நடத்திய பொழுது அதிமுக அரசு கலைஞரை கைது செய்து சிறையில் தள்ளியது). அதிமுக கட்சியின் தலைமையே இப்படியென்றால் அதிமுக கட்சியினரைப்  பற்றி ஒன்றுமே கேட்கவேண்டாம். அய்யோ பாவம், அரிச்சுவடியே அறியாதவர்கள். 'இங்கிருந்து பிழைப்புக்காக அங்கே போய்விட்டு தனி நாடு கேட்பது என்ன நியாயம்' என்கிற அளவு தான் அவர்களுக்கு ஈழ மக்களின் இன்னல்களைப்  பற்றிய அறிவு. ஆனால்,  திமுகவின்  நிலையே வேறு. அவர்கள் உணர்வு பூர்வமாக இதை எதிர் கொண்டவர்கள். ஈழப்  பிரச்சினைக்காக தன் இன்னுயிரை முதன்முதலாக மாய்த்துக் கொண்ட வன் ஒரு திமுக தொண்டன். 80களின் இறுதிவரை ஈழ உணர்வினை அணையாமல் பார்த்துக் கொண் டவர்கள் திமுகவினர்.
திமுக சந்தித்த இழப்புகள் இதனால் அவர்கள் எந்தக்  காலகட்டத்திலும் அரசியல் பயன் அடைந்தவர்கள் அல்ல. இழந்தது தான் ஏராளம்.  ஆட்சிப்  பறிபோனது ஒருபுறம். சிறை தண்டனை, பொருள் இழப்பு, கட்சிப் பிளவு, அவமானம் எத்தனை எத்தனையோ. ஒரு முறையல்ல இருமுறை ஆட்சியை இழந்த கட்சி திமுக.தான்.  இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனைகள் திமுகவிற்கு மட்டும் தான் ஏற்பட்டது. எந்த அரசியல் கட்சி இதுவரை இப்படி தங்கள் எதிர்காலத்தையே விலை கொடுத்திருப்பார்கள்? (பாரதீய ஜனதா கட்சி கூட ஒட்டு வராது  என்று தெரிந்ததும் இராமரை கழட்டி விட்டுவிட்டார்களே!). ஆனால் திமுக தலைமை என்றுமே தடம் புரண்டது இல்லையே. அதைவிட அக்கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்கள் நெஞ்சில், ஈழம் என்றத் தீயை அணையாமல் வைத்திருந்தனரே. (அதன் வெளிப் பாடே இன்றைக்கு டெசோவின் ஆர்ப்பாட்டங் களுக்கு கட்சியினரிடம்  பெரும் எழுச்சி காண முடிகிறது). காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய தும் பட்டாசு வெடித்து கொண்டாடியது, தோழன் இதுநாள் வரை மூடிவைத்திருந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு தானே. வேறு எந்தக்  கட்சிக்கும், குறிப்பாக மற்றொரு பெரிய கட்சியான அதிமுக வினர்க்கு ஈழப் பிரச்சினை  என்பது என்றைக்கும் நோக்கமாக இருந்தது இல்லை. திமுகவின் தொடர் தோல்விகளை  அவர்கள்தானே அறுவடை செய்து கொண்டனர். ராஜீவ் கொலையை ஏதோ திமுக தலைமை திட்டம் போட்டுச்  செய்தது போல சுப்பிரமணிய சுவாமி, சோ மற்றும் வாழப்பாடிக்  கூட்டங்கள்,  ஊடகங்கள் மூலமாக பரப்பிவந்தனர்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசும் (இதில் காங் கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட்  என்ற வித்தியாசம் பாராமல்) மாநில அதிமுக அரசும், தமிழகத்தில் ஈழம், பிரபாகரன் என்கிற சொற்றொடர்களை பயன்படுத்துவதே தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற ஒரு நிலையினைக்  கொண்டுவந்தது. அப்படி மீறிப்  பயன் படுத்தியவர்களை பொடா சட்டத்தில் சிறையில் தள்ளி அச்ச உணர்வினை உருவாக்கினர்.
அதிமுகவைக் குறை கூறாதது - ஏன்? இன்றைக்கு திமுகவை குறை கூறும் 'ஞானிகள்' அதிமுகவையோ, முதல்வர் ஜெயலலிதாவையோ எந்தக்  குற்றமும் கூறமாட்டார்கள். காரணம்  ஒரு பக்கம் 'அவாள்' பாசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிறைக்கு போய்விடுவோமோ என்ற பயம். கலைஞரைத்  தானே சகட்டு மேனிக்கு விமர்சிக்க முடியும். மே 2009இல்,   பெரிய உலக நாடுகளின் , இந்தியா உட்பட, மேற்பார்வையில் ஈழத்தில் இனப் படுகொலை நடந்து முடிந்த பிறகு, இன்றைக்கு திமுகவின்  மீதும் அதன் தலைவரின் மீதும் ஒரு சில விஷமிகள்,  வேண்டுமென்றே குற்றச்சாற்றுகள் சுமத் துவது ஏதோ உள்நோக்கம்  உள்ளது  போல இருக் கிறது. திமுகவின் மீது மட்டும்  குற்றம் சொல்பவர்கள் ஏன் அதிமுகவினரை வசதியாக விட்டுவிட்டார்கள் என்பது புரியவில்லை. அன்றைக்கு வாய்மூடி மௌனியாக இருந்தது எல்லா அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, மக்களும் தானே. ஏன் இன்றுப் போல அன்று மக்கள் வீதிக்கு வந்து போராடவில்லை? எந்த திரைக்காட்சி அன்றைக்கு ரத்து  செய்யப்பட்டது? மக்கள் எப்பொழுதும் போலத் தானே தொலை காட்சியிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி இருந் தார்கள். மேதகு பிரபாகரன் அவர்களின் மரணம் சாதிக்க முடியாததை இன்று அவர்தம் அன்பு மகனின் மரணம் சாதித்து விட்டது. 30 ஆண்டுக்களுக்குப்  பிறகு மீண்டும் அதே எழுச்சி. அதே உணர்ச்சி பிரவாகம். இதை மட்டுப்படுத்த உளவுத்துறை இந்த அமைப்புகள் மூலம் சதி செய்கிறதோ என்கிற அய்யம் தான்  வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இனப் படுகொலையினை, 'போர் என்றால் பொது மக்கள் சாவது நடைமுறையில் ஒன்று' என்றார். அதைப்பற்றி இன்று யாரும் விவாதிப்பது இல்லையே. திரும்பத்  திரும்ப திமுகவே  தாக்கப்படுகிறது.  'அன்றே ஆட் சியை விட்டு திமுக வெளியேறி இருக்க வேண்டும்' என்று கூறுவது  ஈழத் தமிழரின்பால் உள்ள அக்கறை போலத் தெரியவில்லை. நிச்சயமாக இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. இன்றைக்கு கூட மாணவர் களின் எழுச்சியினை ஒடுக்க ஆளும் அதிமுக அரசு தொடர் விடுமுறை அளித்து போராட்டத்தை நீர்த்துப் போக முயற்சிக்கிறதே  ஏன் வாய் திறந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அப்பப்பா என்ன கபட நாடகம்! இரட்டை வேடம்!
ஏற்கனவே இருமுறை திமுக ஆட்சியை இழந்தபொழுது, மக்கள் ஈழப் பிரச்சினையை கருத்தில்  கொண்டு திமுகவை வெற்றிப்  பெற செய்யவில்லையே. ஏன் ஈழ போராட்ட வரலாற் றின் அசகாய 'சூரர்' வைகோவை 2009 நாடாளு மன்ற தேர்தலில் அவர்தம் தொகுதி மக்களே அவரைத் தோற்கடித்து விட்டனர்-- அதற்கு என்ன பதில்? எந்த அரசியல் கட்சியும் மக்கள் நாடித் துடிப்பை அறிந்துதான் செயல்பட முடியும் என்பது வரலாறு நமக்கு சொல்லும் பாடம் -- திமுக அதையும் தாண்டி தேர்தல் இலாப நட்ட கணக்கு பாராமல் தங்களை ஈழப் பிரச்சினையில் ஈடுப்படுத்தி கொண்டது என்பது தான் உண்மை. இன்னொரு செய்தியையும்  நினைவில் கொள்ள வேண்டியது, ஆட்சிதான் திமுகவிடம்  இருந்ததே தவிர அரசாங்கம் பார்ப்பனியத்திடமும் மலை யாளிகளிடமும் தான் இருந்தது. பெரும்பாலான தமிழர்கள் கணினி துறைக்கு வேலைக்கு சென்று விட்டு, முகநூலில் 'லைக்', 'கமெண்ட்' போடுவ தோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக் கின்றனர். தமிழர்கள்  முக்கிய முடிவெடுக்கும் மத்திய அரசுத்  துறைகளிலும், ஆங்கில ஊடகங் களிலும்  கோலோச்சவில்லை என்பது  இன்னொரு குறை.
அம்மாவுக்கு டில்லி சிம்மாசனமா?
திமுகவை அரசியலில் தோற்கடித்துவிட்டு  எப்படியாவது 'அம்மாவை' டில்லியில் அரியாசனம் ஏற்றிவிடவேண்டும். அதற்காக பக்கம்பக்கமாக இன்றைக்கு திமுக மீது குற்றம் சுமத்தும் ஆனந்த விகடன், மே 19க்கு  பிறகு அவர்கள் பத்திரிகையின் போக்கில் என்ன மாறுதல் செய்து விட்டார்கள் ? இனிமேல் அரை குறை ஆடையோடு நடிகைகளின் கவர்ச்சிப்  படம் போட மாட்டேன் என்று முடிவு செய்ததார்களா? இல்லையே. புலம் பெயர்ந்த தமிழர்களின் உணர்வு களை தூண்டி இங்கு கல்லா கட்டியதுதான்  மிச்சம் . ஒரு பக்கம் ஈழ மக்களுக்கு கண்ணீர். அடுத்த பக்கத்திலேயே நடிகையின் ஆபாசப்  படம் போட்டு இன உணர்வினை காயடிப்பது. இதைத் தானே விகடன் செய்து வந்தது. ஏமாளி தமிழன் வெட்கம் கெட்டு அந்தப் பத்திரிகையை வாங் கியதுதான் வேதனை. ஆமாம் திமுக அப்படித்தான் தமிழர்க்கு துரோகம் செய்தது என்றால்  ஏன் தளபதி ஸ்டாலின் அவர்களைப் பற்றி விகடன் நூல் வெளியிட்டுக்  காசு பார்க்க வேண்டும். அடடா என்ன தமிழ்ப் பற்று!
தொலைக்காட்சி விவாதங்களில் வரலாறுகளை திமுகவினரோ அல்லது திமுக ஆதரவாளர்களோ சொல்ல  வரும்பொழுது இடைமறித்து 'எதற்கு பழைய கதை, மே 2009அய்ப் பற்றி பேசுங்கள் என்று விவாதத்தினை திசை திருப்புவதும் ஒருவகையில் முரண் தானே!. மே 2009 மட்டும் பழையக்  கதை அல்லாமல் புதிய கதையா ?
அடுத்த படம் சூட்டிங்குக்கா?
இப்பொழுது வாய் கிழிய தொலைக்காட்சியில் பேசுபவர்கள்  அப்போது எங்கிருந்தார்கள் என்பதுதான்  நம் கேள்வி. எல்லோரையும் போல இவர்களும் இனப்படுகொலையை வேடிக்கை தானே பார்த்தார்கள். குறைந்தப் பட்சம் 'அய்யோ எல்லாம் முடிந்து போய்விட்டதே, இனி நான் இருந்து என்ன பயன்' என்று யாரும் தங்கள் வாழ்கையை முடித்துக்  கொள்ளவில்லையே. அடுத்த படச் சூட்டிங்குக்கு தானே கிளம்பினார் கள். இன்னும் சிலர், இன்னும் 'தம்பி இறக்க வில்லை'யென்று எல்லோரையும் நம்பவைத்து பிரச்சினையை வேறு திசைக்கு அல்லவா திருப்பி விட்டுக் கொண்டிருந்தார்.. இவர்கள் என்றைக் குமே ஈழப் பிரச்சின்னைக்கு உருப்படியாக எது வுமே செய்தது இல்லை. தாங்கள்தான்  ஒட்டு மொத்த  குத்தகைகாரர்கள்  போல நினைத்துக் கொண்டு  மற்றவர் கள் எல்லோரையும் ஏளனப்படுத்தி மொத்த  பிரச்சினையையும் செயலி ழக்க செய்து கோமாவில் வைத்திருந் தார்கள். இதைத்  தானே மத்திய அரசும், உளவுத் துறையும் எதிர்ப்பார்த்தது . டெசோ தொடங்கிய  பிறகுத் தானே தமிழகத்தில் மீண்டும் உணர்வு பூர்வமான எழுச்சி, அமைப்புரீதியாக ஏற்பட்டது.  வட இந்தியர்களும், ஏன் உலக அளவிலும் பல  நாட்டு தூதுவ ர்கள் அளவில் கொண்டு சென்றது டெசோ தானே. தயவுசெய்து 'தமிழ் ஆர்வலர் களிடம்' வேண்டுவது இந்த நேரத்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசாங்கத்திற்கும், அய்.நா. அமைப்புக்கும் அழுத்தம் கொடுத்து, ராஜபக் சேவிற்கு தண்டனை வாங்கித்தருவதும், ஈழ விடுதலை அடைவதுமாக நம் லட்சியம் இருக்கவேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் குறை கூறி லட்சியத்தை சிதைத்து விடக் கூடாது. தமிழர் தலைவர் கூறியது போல எது நம்மை இணைக் கிறதோ அதில் கவனம் செலுத்திக்  குறிக் கோளினை நோக்கி முன்னேறுவோம். இலக்கை அடைந்தவுடன் வேண்டுமானால் மோதிக் கொள் ளலாம். ஆதலினால்,  உங்களது  செய்கைகளால்  இப்பொழுது ஏற்பட்டுள்ள உணர்வுகளை மங்கச் செய்து விடவேண்டாம். இதுவே தாழ்மையான வேண்டுகோள்.
சிந்தித்துப் பாருங்கள்... தெளிவாகப்  புரியும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே, தமிழில் பேசுங்கள்!


- க.திருநாவுக்கரசு

இந்திய அரசியல் சட்டத்தினால் ஏற்பளிப்பு செய்யப்பட்ட தேசிய மொழி தமிழ்! 14 மொழிகள் தேசிய மொழிகளாக இருந்த காலம்போய் இன்று 22 மொழிகள் இந்தியாவின் அரசியல் சட்ட 8 - ஆவது அட்ட வணையில் இடம் பெற்று இருக்கின்றன. மக்களவையிலும், மாநிலங்கவையிலும் நமது தமிழ்நாட்டு உறுப்பினர்கள் மொழி தொடர்பான விவாதங்களில் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். அப் போது நமது உரிமைகளை அங்கே வலியுறுத்தி இருக்கிறார்கள். அவ் விவாதங்களை ஏடுகளில் படித்தபோது மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ்ந்து போயிற்று.
கடந்த மார்ச் 15ஆம் தேதி மக்கள வையில் யூ.பி.எஸ்.சி தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது ம.தி.மு.க. உறுப்பினர் அ.கணேச மூர்த்தி தமிழில் பேசினார். அவர் பேசுகிறபோது, அவையின் தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஓய்வு பெற்று ஓராண்டு ஆகியும் புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. தமிழ் மொழி பெயர்ப்பாளரை நியமிக்க மக்களவைத் தலைவர், செகரட்டரி ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதே விவாதத்தில் கலந்து கொண்ட தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், அவையில் தமிழில் பேச விரும்பினா லும், மொழி பெயர்ப்பாளர் இல்லாத தால் ஆங்கிலத்தில் பேச வேண்டி யுள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அஇஅதிமுக உறுப்பினர் க.தம்பிதுரை பேசுகிறபோது, மொழி பெயர்ப்பு வசதி இல்லாததால் என்னால்  தமிழில் பேச முடியவில்லை, ஆகவே ஆங்கிலத்தில் பேசுகிறேன். இதுபோன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவையில் அனைத்து மொழிகளுக்கான மொழி பெயர்ப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
நமது தமிழ் நாட்டு உறுப்பினர் களுக்கு நாடாளுமன்றத்தில் தமிழில் பேச வேண்டும் என்கிற அவா இருக்கிறது. ஆனால் மத்திய அரசு - மக்களவைத் தலைவரின் கீழ் உள்ள நிர்வாகம் ஓராண் டுக்கு மேலாகியும் மொழி பெயர்ப்பாளரை நியமிக்கவில்லை. மத்திய அரசை மிகச்சிறிய பிரச்சினையிலிருந்து மிகப் பெரிய பிரச்சினை வரை அங்குசத்தால் குத்த வேண்டியுள்ளது. இயல்பாக ஓர் அரசுக்கு உள்ள பொறுப்பின்படி ஒரு போதும் மத்திய அரசு நடந்து கொண் டதில்லை.
ஆனால் அதிகாரத்தைக் குவித்து வைத்துக் கொள்வதிலும், அதிகாரத்தை செலுத்துவதிலும் அதிகாரிகள், முதல் நிலை அமைச்சர்கள் கருத்தாய் இருக் கிறார்களே தவிர உரிமைகள் பகிர்ந் தளிக்கப்படுவதில்லை. பல பிரச்சினை களில் அவர்களது முடிவுகள் நகைப்பூட் டுவனவாக இருக்கும். முதல் நிலை அமைச்சர்கள், கிளை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என்று 70க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர் களுக்குள் நல்ல அறிமுகம் இருக்குமா? பிரதமர் இவர்களை அறிந்து வைத்தி ருப்பாரோ என்பதெல்லாம் அய்யப்பாடாக இருக்கிறது.
மாநிலங்கள் அவையில் திருச்சி சிவா ஆட்சி மொழிகள் சட்ட மசோதா விவாதத்தில் கலந்து கொண்டு மிக அரியதோர் உரையை ஆற்றியிருக்கிறார். பல அரிய கருத்துக்களை அவர் எடுத்து வைத்து இருக்கிறார். தற்போதுள்ள 22 தேசிய மொழிகளையும், ஆட்சிமொழி களாக ஆக்க வேண்டும் என்று உறுதிபட கூறிய அவர் மூன்று குறிப்புகளை அவையில் முன் வைக்கிறார்.
1) அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவனையில் உள்ள அனைத்து மொழி களையும், மத்திய அரசின் அனைத்து அதிகாரப் பூர்வ தேவைகளுக்கும் பயன் படுத்துவதை உறுதி செய்ய 1963-ஆம் ஆண்டின் ஆட்சி மொழிகளின் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
2) திருச்சி சிவா ஓர் ஆவணத்தின் உள்ளடக்கத்தை எடுத்துரைத்தார். பிறகு நகரில் நடைபெற்ற மார்ச்சிஸ்ட் கட்சியின் ஆவணம் அது! - அதன் உள்ளடக்கத் தின் கூறாக,இந்தியாவின் ஒற்றுமைக்கும் சமத் துவ உணர்வுக்கும் மக்களது மொழிகள் பற்றி ஒரு சரியான அணுகுமுறை வேண் டும். நாடாளுமன்றத்திலும், மத்திய நிர்வாகத்திலும் இந்திய மொழிகளின் அனைத்து அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை வேண்டும், அவை உடனுக்குடன் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து சட்டங்கள், அரசானைகள், தீர்மானங்கள் ஆகி யவை அனைத்து இந்திய மொழிகளி லும் கிடைக்க வேண்டும் என்று மாநி லங்களவையில் எடுத்து கூறியிருந்தார்.
3) ராஜமன்னார் குழுவின் பரிந் துரையில் உள்ள கீழ்க்காணும் கருத்தை அவையில் எடுத்து சொன்னார்.
இது பொதுமக்களை மத்திய அரசின் நிர்வாக அமைப்புக்கு உணர்ச் சிப் பூர்வமாக கொண்டு வந்து மத்திய நிர்வாகம், மாநில மட்டத்திலுள்ள நிர்வாகம் போல தங்களுடையது தான் என்று மக்களை உணர வைக்கும், திருச்சி சிவா மாநிலங்களவையில் மிக விரிவாகப் பேசி இருக்கிறார். அவை நம் உள்ளத்தை தொட்டு உணர்ச்சி மேலிடச் செய்கிற உரை, அதில் அய்யமில்லை. நாம் மேலே எடுத்துக் கூறி இருக்கிற மூன்று அம்சங்கள் அவரது உரையில் வெளிப் பட்டு இருக்கிற கருத்துக்கள் மக் களிடையே மத்திய அரசை நெருக்க மாகக் கொண்டு வருபவையாகும். ஆனால் அவர்கள்தான் எப்போதும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்ப வர்களாகக் காட்சியளிப்பார்கள். இவை ஒரு பக்கம் இருந்தாலும் நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்கள் மக்களவையிலும், மாநிலங் களவையிலும் ஆற்றி இருக்கின்ற மேற்சொன்ன உரைகள் - எமக்கு ஒர் எண்ணத்தை தோற்றுவித்தது.
இனி நாடாளுமன்றத்தில் நமது தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தமிழில் பேசினால் என்ன? என்பது தான் அது!

Monday, March 18, 2013

அய்.ஏ.எஸ். தேர்வு - புது விதிகளும் பின்னணி சதிகளும்


- அறிவு ஆதனி
IAS, IP  உள்ளிட்ட பதவி களுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) சமீபத் தில் தேர்வு முறைகளில் மாற்றங் களை வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பு சார்ந்த ஒரு அமைப்பு சமூக நீதிக்கு எதிரான செயல்களில் ஒன்றாக தேர்வு முறைகளில் மாற்றங்களை செய் துள்ளது.
முதல் நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில்/படிகளில் நடைபெறும் இத்தேர்வு முறையில் முதன்மை தேர்வில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் தான் பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
தேர்வுமுறை மாற்றம்: தாள் - I, II  என தாள் IX வரை 9 தாள்கள் இருந்த பிரதான தேர்வில் தற்போது தாள் - I,II என தாள் VII வரை 7 தாள்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் வட்டார மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது முன்பு 22 வட்டார மொழிகளில் ஏதேனும் ஒன்று கட்டாயம் எடுத்து எழுத வேண்டும் ,இதனால் அவரவர் தாய் மொழியையோ விரும்பும் வட்டார மொழியையோ ஒரு பாடமாக எடுத்து எழுத இயலாத நிலை உருவாகி யுள்ளது.
தாள் - I (ஆங்கிலம்) தவிர மற்ற அனைத்துத் தாள்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம் என்கிற முறை இருந்தது. அது தற்போது மாற்றப்பட்டு எடுத்துக்காட்டாக தமிழ்மொழி வாயிலாக பட்டம் படித்தவர்கள் மட்டுமே தமிழ் மொழியில் முதன்மைத் தேர்வு எழுத முடியும். என மாற்றப்பட் டுள்ளது. மேலும் 25 மாணவர்கள் அந்த மொழியில் அந்த குறிப்பிட்ட பாடத்தில் தேர்வு எழுத விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் எழுதவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
முதன்மைத் தேர்வில் தமிழை ஒரு தாளாக தேர்வு செய்து எழுதலாம் என்று இருந்த நிலை தற்போது தமிழ் மொழியில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழை விருப்பப்பாடமாக தேர்வு செய்து எழுத முடியும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
25 விருப்பப்பாடங்கள் மற்றும் 22 மொழிப்பாடங்கள் உள்ள நிலையில் மற்ற பாடங்களுக்கு இல்லாத ஒரு கட்டுப்பாடு மொழிப்பாடங்களுக்கு மட்டும் ஏன்? உதாரணமாக சட்டம் என்ற பாடத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய சட்டத்தை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை (எந்த வொரு பட்டப்படிப்பு படித்தவரும் தேர்வு செய்து எழுதலாம்) ஆனால் மொழிப் பாடங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுபாடு?
இந்தியா போன்ற பல்வேறு மொழி கலாச்சார இயல்பு கொண்ட நாட்டில் வட்டார மொழிகளை நசுக்குவது எதற்காக? தமிழ் படித்தவர்கள் தேர்வில் வெற்றிபெற்று உயர்ந்த பதவிக்கு வரக்கூடாதா? பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்கள் கிராம மக்கள் கல்வியிலும், பதவிகளி லும் உயர்ந்து வருவதைப் பொறுக்கவில்லையா?
தாய்மொழி: ஒருவன் எத்தனை மொழிகள் கற்றாலும் தாய் மொழியில் மட்டுமே சிந்திக்க இயலும் என உளவியல் கூறுகிறது. தாய் மொழிக்கல்வியே அறிவு வளர்ச்சிக்கு சிறந்தது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மனித சமுதாயம் வளர அறிவு சார்ந்த வளர்ச்சி தேவை என்கிற நிலையில் ஏனிந்த இரட்டை அளவுகோல்? பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்பதவிக்கு வருவது யாருக்கோ, எங்கேயோ எரிகிறதோ?
சமூக நீதி: ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் படைக்க சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்கிறநோக்கில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முகவுரையிலும், அடிப்படை உரிமையிலும் கூறப்பட்ட சமூக நீதி, கேசவானந்த பாரதி Vs கேரளா, Basic Structural (1973) என்ற வழக்கில் சமூக நீதி என்பது அடிப்படை கட்டமைப்பு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில் (அடிப்படை கட்டமைப்புகளை மாற்றவோ, நீக்கவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை) இத்தேர்வு முறை மாற்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
அரசியலமைப்பு சார்ந்த ஒரு அமைப்பே அரசியல் சட்டத்திற்கு எதிராக மாற்றதை கொண்டு வந்திருப்பது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்
சமூக நீதிக்காக போராடி அதில் வெற்றியும் கண்ட தந்தை பெரியார், அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம் கொண்டு வர காரணமானவர் என்பதை மறந்து விட்டார்களா? பெரியார் கண்ட இயக்கம் சமூகநீதிக் களத்தில் வடபுலத்திலும் பரந்து விரிந்திருக்கிறது. இந்தியாவெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து போராடுவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் என்று கூறும் நிலையில் கிராமப்புற, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பயன் பெறுவது தடுக்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் இச்செயல் முதுகெலும்பை முறிக்கும் செயல் என்பது அப்பட்டமான உண்மை.
தாய்மொழிக் கல்வி சிறந்தது என்கிற நிதர்சனமான உண்மை இருக்க, வட்டார மொழி நசுக்கல் என்பது இந்தி திணிப்பின் இரண்டாவது முயற்சி, இரண் டென்ன எத்தனை முறை முயன்றாலும் இங்கு அது எடுபடாது என்பது தெரியாதா?
பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் மக்களாட்சி நாட்டில் வட்டார மொழியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல். இது அரசு தனது பொறுப்பிலிருந்து விலகு வதைக் காட்டுகிறது. அனைவருக்கும் சமவாய்ப்பு, நலி வடைந்தோருக்கு இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியை உயர்த்திப்பிடிக்கும் ஊன்றுகோல், அனைவரும் சமம் என்கிற நிலையில் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது பின்னால் தாக்கும் கொல்லைப் புறத்தனம்.
இத்தேர்வு முறை மாற்றத்தால் கிராமப்புற, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து சீர்குலைய செய்யும் தன் தலையில் மண்ணை வாரிப்போடும் செயல்.
மொழி அறிவு: மொழி என்பது வேறு அறிவு என்பது வேறு. மொழி அறிவை வளர்க்கும் கருவிதானே தவிர மொழியே அறிவாகாது. ஆங்கிலம் தெரிந்தவன் அறிவாளி, தமிழ் பேசுபவன் அறிவாளி இல்லை என்கிற நினைப்பு முற்றிலும் தவறானது. தமிழ் மொழியில் தேர்வு எழுத நியாயமில்லாத கட்டுப்பாடு விதிப்பது அறிவின் வழி உயர்வு அடையும் வழியை மூடுவதற்கு சமம்.
நிர்வாகத் திறன்: கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்மட்ட நிர்வாகத்திற்கு வந்த பிறகு நாடுபல முன் னேற்றங்களை கண்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. மனிதனை மனிதனாய் பார்க்கும் சமுதாயம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான, அறிவுசார்ந்த, பொருளாதார முன்னேற்றம் கொண்ட நாட்டை உயர்த்தும் செயல், இது யாருக்கோ இடிக்கிறதோ?
ஒடுக்கப்பட்டவன் உயர்ந்து நிற்பது பொறுக்க வில்லையோ அவாளுக்கு?
குறிப்பு: புதிய விதிமுறைகள் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் இதன் பின்னணிகளைத் தெரிந்து கொள்வது அவசியமே!

Sunday, March 17, 2013

இத்தாலிக்குக் கிட்டப் பார்வை, இலங்கைக்கு எட்டாப் பார்வையா!


- கவிஞர் கலி. பூங்குன்றன்
கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை இத்தாலியக் கடற்படையினர் இருவர் சுட்டுக் கொன்றனர். (15.2.2012) நாடே கொந் தளித்தது. அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு முறை இத்தாலிக்குச் சென்று வருவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. ஒரு முறை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட அனுமதிக்கப்பட்டனர். இரண்டாவது முறையாக இத்தாலியில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு அளிப்ப தற்காக உச்சநீதிமன்றத்தால் அனுமதிக் கப்பட்டனர். இரண்டாவது முறையாக அவர்கள் இருவரும் இத்தாலி சென்ற நிலையில் மீண்டும் வாக்குறுதிப்படி இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். இத் தாலி அரசும் அவர்கள் பக்கம் நிற்கிறது.
பிரச்சினை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இந்தியாவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்துள்ளது.
இந்தியாவுக்கான தூதர் உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில்தான் இத்தாலிய கப்பற்படை வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கு மாறாக இத்தாலி நடந்து கொள்வதால் இத்தாலி யுடன் உள்ள தூதர் உறவு முறைகூட ரத்து செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்குரல் கொடுக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்பு நியாயமானதுதானே! இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் அதே வகையில் தான் நாடாளுமன்றத்திலும் பதில் கூறியுள்ளார்.
நீதிமன்ற அனுமதியின்றி வெளியில் செல்லக் கூடாது என்று இந்தியாவில் உள்ள இத்தாலி தூதர் டேனியல் மன்சினி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இத்தாலி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், இத்தாலியுடனான அரசு முறையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்படும். நம்பிக்கையின் அடிப்படையில்தான் இரு தரப்பு உறவும் பலப்பட வேண்டும். இந்தப் பிரச்சினை முக்கியமான பிரச்சினை என்பதை உணர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.
பிரதமரின் இந்தக் கருத்தும், அறி விப்பும், எச்சரிக்கையும் வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்து களுக்கு இடம் இல்லை -_ இருக்கவும் முடியாது.
இதே அளவுகோல் தமிழக மீனவர்களை இலங்கையின் கப்பற்படை படுகொலை செய்யும் பிரச்சினயில் காணாமற் போன மர்மம் என்ன என்பது முக்கியமான கேள்வியாகும்.
கேரள மீனவர்கள் என்பதால் அவர்கள் இந்தியர்கள் -_ தமிழக மீனவர் கள் என்றால் அவர்கள் அந்நியர்களா?
கேரள மீனவர் படுகொலை செய்யப் பட்டனர் என்றதும் இராணுவ அமைச்ச ராக இருக்கக் கூடிய கேரளத்துக்காரரான அந்தோணிகூட துடியாய்த் துடிதுடிக் கிறாரே! அவசர அவசரமாக சட்ட நட வடிக்கைகள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கவில்லையா?
இந்தியாவுக்குள் ஏனிந்த இரட்டைப் பார்வையும், இரட்டை அளவுகோல்களும் என்று தமிழர்கள் கேட்டால் குறுகிய நோக்கம், - குறுகிய பார்வை என்றுகூட  22 காரட் தேசியவாதிகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இத்தாலிக்- கப்பற்படையைச் சேர்ந்த மாஸ்மிலியானோ லாட்டோரே, சல்வாட் டோரே சிரானே ஆகிய இருவரும் கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்றது குற்றம்தான்; கடற்கொள்ளைக்காரர்கள் என்று கருதியதால் அவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். (சுட்டதை ஒன்றும் நியாயப்படுத்த முடியாது)
அதே நேரத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது -_ கொலை செய்வது -_ தாக்குவது - _ சிறைக் குக் கொண்டு செல்லுவது _- அங்கே சித்திரவதை செய்வது என்பது திட்டமிட்ட வகையில் அல்லவா நடக்கின்றன?
இத்தாலியின் மீது வருகின்ற அந்த இயற்கை சீற்றம் _ தார்மீகக் கோபாக்னி இலங்கையின் மீது வெடிக்காதது ஏன்? ராஜபக்சே மீது வராதது ஏன்?
இரண்டு கேரள மீனவர்கள் சுடப்பட் டனர் என்பதற்காக நாடாளுமன்றமே கிடுகிடுக்கிறதே! எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழக மீன வர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனரே -_ இந்திய நாடாளுமன்றத்தின் மீசை துடிக் காதது -_ ஏன்? ரத்தம் கொதிக்காதது _ ஏன்?
கேரள மீனவர்கள் இருவர் சுடப்பட் டனர் என்கிற போது சூடாகக் கூடிய இந்தியாவின் இராணுவ அமைச்சர் அந்தோணி 800--_க்கும் மேற்பட்ட தமிழின மீனவர்களைப் பதறப் பதற பறவை களைச் சுடுவதுபோல ஆத்திரம் தீர சுட்டுத் தீர்க்கிறார்களே அந்தோணியார் ஆத்திரப்படாதது _ - ஏன்? இந்தக் கேள்விகள் நியாயமற்றவை என்று சொல்லப் போகிறார்களா? குறுகிய பார்வை என்று குற்றஞ் சொல்லப் போகிறார்களா?
அப்படியாவது சொல்லட்டும் பார்க்கலாம். ஒரு பார்ப்பனக் குடும்பம் இலங்கையில் சங்கடப்பட்டது என்றவுடன் அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பி.வி. நரசிம்மராவ், அந்தக் குடும்பத்தையே தான் பயணம் செய்த விமானத்தில் ஏற்றிவந்ததெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?
ஏனிந்த இரட்டை அளவுகோல்? ஏனிந்த இரட்டைப் பார்வை? ஏனிந்த இரட்டை உணர்வு?
பிரான்சில் இரு சக்கர ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சட்டம் போட்டால், பஞ்சாபியர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் (தலை முடியும், - பந்தும் இடையூறாக இருக்கு மாம்) என்று அவர்கள் கூக்குரல் போடு வதால், இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆமாம், ஆமாம்,  சீக்கியர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நேரில் சென்று கேட்டுக் கொண்டாரே _ அது எப்படி?
இன்னொரு நாட்டுச் சட்ட விதிகளில் இந்தியா தலையிடலாமா?
இந்தியாவில் இனவுணர்ச்சி என்பது தமிழர்களுக்கு மட்டும் இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத சட்டமா?
தமிழர்களை, தமிழ்நாட்டை மற்ற வர்கள் வஞ்சிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது. அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
ஈழத் தமிழர்களுக்காக 50 ஆயிரம் பேர் கைதாகிறார்கள் என்றால் - அந்த வுணர்வை மனந் திறந்து வரவேற்பதில் லையே! -  அதனைச் செய்பவர்கள் டெசோ அமைப்பினர் என்கிற அழுக்காறு தமிழர்களாக இருக்கக் கூடியவர்களுக்கே  மென்னியை அடைக்கிறதே!
இந்தக் கேவலமான குணம் தமிழர்களிடையே நிலவும் மட்டும் - 800 மீனவர்கள் என்ன? 8000 தமிழக மீனவர்களையும் குருவிகள் போல சுட்டுத் தள்ள, சிங்களக் கடற்படை துப்பாக்கிகளைத் தயார் செய்து கொண்டுதானிருக்கும். தமிழர்களைச் சுட்டுத் தாகம் தீர்க்க அந்தத் துப்பாக்கிகளைக்கூட இந்தியாவே இலங்கைக் கடற்படைக்கு இனாமாக வாரி  வழங்கிக் கொண்டு தானிருக்கும்.
தமிழக மீனவர்களை எப்படிச் சுடுவது -_ எந்த இடத்தில் சுடுவது என்கிற பயிற் சியையும் சிங்களக் கடற்படையினருக்கு இந்திய அரசு இந்தியாவில் கொடுத்துக் கொண்டு தானிருக்கும்.
தமிழா, இனவுணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!
என்ற இரு முழக்கங்களைத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சொன்னது என்றைக்குத் தமிழனின் நெஞ்சில் நேர்மையாகக் குடி கொள்ளுகிறதோ, அன்றைக்குத்தான்  தமிழன் பிழைப்பான்; இல்லை என்றால் நாதியற்ற இனம்தான் நானிலத்தில். எச்சரிக்கை! எச்சரிக்கை!!



ஏனிந்த இரட்டை அளவுகோல்?

ஆப்பிரிக்கக் கண்டம் உகாண்டாவில் வணிகம் செய்ய சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை வெடித்த அந்தக் கணமே இந்திய அரசு துடிதுடித்தது.
பிரான்சு நாட்டின் தலைநகரில் வாழும் சீக்கியர்கள் தலைக் கவசம் அணிய வேண்டும் (பிமீறீனீமீ) என்று ஆணை பிறப்பிக்கப்பட்டபோது பிரான்சு அதிபரை நேரில் சந்தித்தவர் இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அந்த ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நேரிலேயே வேண்டுகோள் விடுத்தாரே _- அது எத்தகைய உணர்வு?
வியன்னாவில், சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, இந்தியாவில் பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்களில் போராட்டங்கள் தலைதூக்கின. பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்குமாறு வேண்டு கோளுக்கு மேல் வேண்டுகோளாக விட்டுக் கொண்டே இருந்தார்.
அப்பொழுது புதிதாக வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த எஸ்.எம். கிருஷ்ணா அவசர அவசரமாக ஆஸ்திரியாவில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். வியன்னாவில் ஒரே ஓருயிர் பறிக்கப்பட்டது; 30 பேர் காயம் அடைந்தனர் அதற்கே இந்திய அரசு துடி துடித்தது. இலங்கையிலே ஈழத் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் கொடூரமான முறையிலே கொன்று குவிக்கப்பட்டனர்! இந்திய அரசு கண்டு கொண்டதா?
லெபனானில் இசுரேல் தாக்குதல் நடைபெற்றபோது 12 ஆயிரம் இந்தியர்கள் அங்கு வாழ்கிறார்கள் என்ற வுடன் இந்தியர்களை மீட்க ஆறு போர்க் கப்பல்களை இந்தியா அனுப்பி வைக்கவில்லையா?
கப்பலில் வந்து சேர்ந்த அந்தக் கேரள மக்களை பல்வேறு விமான நிலையங்களிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரவில்லையா? (21.7.2006 செய்தி இது)
கேரள அரசுத்துறை அதிகாரிகள் அவசர அவசர மாகக் கூட்டப்பட்டு உடனடியாக இத்தகு செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. (20.7.2006).
கேரள மக்கள் மட்டும்தான் இந்தியர்கள்; தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? ஏனிந்த இரட்டை அளவு கோலும் ஏற்ற இறக்கக்
கோணல் பார்வையும்? இதைக் கேட்டால் தமிழர்கள் பிரிவினைவாதிகளா?

20 ஆண்டுகள் தமிழக மீனவர்களை சிறையில் அடைப்பேன் என்ற கொலையாளி ராஜபக்சே
பிரேசிலில் ரியோடிஜெனிரோ நகரில் நடைபெற்ற ரியோ பிளஸ் 20 அய்.நா. மாநாட்டில் உரையாற்றிய ராஜபக்சே தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையிலடைப்பேன் என்றார் (2012 ஜூன்).
அம்மாநாட்டில் இவ்வள வுக்கும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபரின் வெறி பிடித்த பேச்சுக்கு எந்த விதப் பதிலையும் அளிக்கவில்லை. இந்தியத் தரப்பில்.
தமிழின மீனவர்கள் தானே அனுபவிக்கட்டும் என்று வாய் மூடி இருந்தனர் போலும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...