Monday, August 20, 2007

2007-லும் கோயில் நுழைவுக்காகப் போராடும் நிலையா?

தமிழ்நாட்டில் இன்னும் சில ஊர்களில் குறிப்பாக, கிராமக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்கிற கொடுமை உண்மையிலேயே வெட்கப் படத்தக்கதாகும்.70, 80 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய போராட் டங்களில் சுயமரியாதை இயக்கம் ஈடுபட்டு, அதன்பின் சட்ட ரீதியாகவே தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பு -வெற்றி பெற்றுள்ள தறுவாயில், கோயில் கருவறைக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட தோழர்கள் அதிகாரப்பூர்வமாக அர்ச்சக ராகலாம் என்கிற அளவுக்கு மனித உரிமை வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் கோயிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் சில இடங்களில் நுழைய அனுமதியில்லை என்பது எந்த வகையிலும் அனுமதிக் கப்பட முடியாத ஒன்றாகும்.சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள திரவுபதை யம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக் கப்படவில்லை என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கோயில் நுழைவுப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை கோயிலை இழுத்து மூடிவிடுவது என்று முடிவு செய்து, அதன்படி கோயிலும் இழுத்து மூடப்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டு, தமிழ்நாடு முழுவதும் இந்துக் கோயில்களில் எங்கெங்கு தாழ்த்தப் பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லையோ, அந்தக் கோயில் களில் எல்லாம் அவர்களை அனுமதிக்க சட்ட ரீதியான முயற்சியினை மேற்கொள்ளவேண்டியது சட்டப்படியான கடமையாகும்.பிரச்சினை வரும் சூழல் இருந்தால் சுமுகமாகப் பேசிப் பார்ப்பதில் ஒன்றும் தவறு கிடையாது - நியாயத்துக்குக் கட்டுப்பட மேல்ஜாதி(?) மக்கள் மறுப்பார்களேயானால், அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்கக்கூடாது.21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோமா அல்லது கற்காலத்தை நோக்கிப் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோமா?பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக் கச்சியேந்தல் போன்ற தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் 10 ஆண்டுகாலமாக தேர் தலையே நடத்த முடியாது என்றிருந்த நிலையையே மாற்றி, அங்கெல்லாம் தேர்தலையும் நடத்தி, இந்த அரசு பெரியார் அரசு என்று நிரூபித்த மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆட்சி, இந்தப் பிரச்சினையிலும் தலையிட்டு, ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இந்துக்களே ஒன்றுபடுவீர் என்று குரல் கொடுக்கும் சங் பரிவார்க் கும்பல் எங்கே போய் இப்பொழுது ஒளிந்து கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை.பேச்சுவார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தீர்வு காணும்வரை போராட்டத்தை ஒத்தி வைப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்திருப்பது அவர்களின் பொறுப்புணர்ச்சியைக் காட்டக்கூடிய ஒன்றாகும்; இதனைப் பலவீனமாக யாரும் கருதக் கூடாது.சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த தலைவர்களும், அரசியல் கட்சியி னரும், சமூக அமைப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து பேச வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லுகிற தமிழகக் கட்சி ஏதும் கிடையாதே. அப்படியிருக்கும்பொழுது இதில் சுமுகத் தீர்வு காண்பதில் என்ன இடர்ப்பாடு இருக்க முடியும்? அப்படியே முட்டுக் கட்டை போட யாரேனும் முன்வந்தால் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியுமே!இது ஒரு கட்சிப் பிரச்சினையாக யாரும் கருதத் தேவை யில்லை. ஒட்டுமொத்தமான மனித உரிமைப் பிரச்சினை யாகும். இதில் திராவிடர் கழகம் தன் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் அளிக்க எப்பொழுதும் தயாராகவே உள்ளது என்பதையும் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விடுதலை தலையங்கம்(17.08.207)

மாட்டு மூத்திரம் வாங்கலியோ, மாட்டு மூத்திரம்

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது அரிதாகி விட்டது.உத்தரப்பிரதேசத்தை இரு மாநிலங்களாகப் பிரித்து உத்தரகண்ட் என்று தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இங்கு பார்ப்பனர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். பா.ஜ.க., ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. கந்தூரி முதலமைச்சராக இருக்கிறார் (இவர் ஆட்சியும் இப்பொழுது ஆட்டம் கண்டுவிட்டது. பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங் அங்கு விரைந்துள்ளார் என்பது வேறு செய்தி!).இந்தப் பா.ஜ.க., ஆட்சியில் பசு மாட்டு மூத்திரத்துக்கு ரொம்பவும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மூத்திரம் ஆறு ரூபாய்க்கு விலை போகிறதாம்.யோகா குரு ராம்தேவ் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துக்கு இந்த மாட்டு மூத்திரம் மிகவும் தேவைப்படுகிறதாம்.அந்த மாநிலத்தில் இருக்கும் கால்நடை வளர்ப்புத் துறையும், நாட்டு மக்கள் மத்தியிலே மாட்டு மூத்திரத்தைப்பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தப் போகிறதாம்.ரத்த வங்கி போல மாட்டு மூத்திர வங்கிகளை கூட்டுறவு சங்கங்களை அமைத்து மக்களுக்கு வழங்கப் போகிறார்களாம்!சபாஷ்! பி.ஜே.பி., என்கிற இந்துத்துவா ஆட்சி வந்தால் தண்ணீ ருக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்க உத்தரவு போட்டு விடுவார்கள். இதன்மூலம் தண்ணீர்ப் பஞ்சத்துக்கும் தீர்வு கிடைக்கக் கூடும் அல்லவா?

மாட்டு மூத்திரம் என்றால் அதுவும் பசுமாட்டு மூத்திரம் மட்டும்தான் - எருமை மாட்டு மூத்திரமோ, காளை மாட்டு மூத்திரமோ அல்ல! பசுதானே அவர்களின் கோமாதா! ஏற்கெனவே பசுவை உணவுக் காக வெட்டக் கூடாது என்று ஒரு சட்டத்தையும், அந்த மாநிலத்தில் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி விட்டனர். மீறி வெட்டினால் சிறைத் தண்டனையோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வேறு கட்டவேண்டும்.மாட்டு மூத்திரத்தை எடுத்து இரசாயன பரிசோதனை செய்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. அது ஒரு கழிவுப் பொருள்தான். கழிவுப் பொருளைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று இதுவரை எந்த மருத்துவத் துறை விஞ்ஞானமும் தெரிவிக்கவில்லை.பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள். அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள்.பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்! `பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.இன்னும் ஓர் அளவுகோலையும் தந்தை பெரியார் கூறுவதுண்டு.பஞ்சகவ்யம் குடிப்பது என்பது நமது முட்டாள்தனத்தைப் பார்ப்பான் அளக்கும் தர்மா மீட்டர் என்றும் சொல்லுவார்.தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றினார்; பிரச்சாரம் செய்தார். திராவிடர் கழகம் இருக்கிறது; தொடர் பிரச்சாரம் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகு காரணங்களால் இந்தப் பஞ்சகவ்யம் எல்லாம் அனேகமாகக் குறைந்து போய்விட்டது.அதேநேரத்தில், பா.ஜ.க., - சங் பரிவார்க் கும்பல் பசுமாட்டு மூத்திரத்துக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நம் மக்கள் தெரிந்துகொள்ளுவது நல்லது.தன் மலத்தையே தின்ன பரமஹம்சர்கள் எல்லாம் கூட இந்த நாட்டில் உண்டு.கேட்டால் அவர்கள் `மும்மலத்தையும் அறுத்த மலந்தின்னிகள் என்று பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.வெட்கக்கேடு. இந்த 2007-லும் இப்படி ஒரு கூட்டம்!இந்துத்துவா என்றால், ஓகோ என்று பேசுகிறார்களே - ஒரு வெங் காயமும் இல்லை - மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதுதான் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாதா?

- மயிலாடன்


Tuesday, August 14, 2007

வகுப்பு வாரி உரிமை நாள்! - தமிழர் தலைவர் அறிக்கை

தந்தை பெரியார் அவர்கள் 1950 ஆகஸ்ட் 14 ஆம் நாளை வகுப்புவாரி உரிமை நாள் என்று அறிவித்துப் போராடினார். அந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-


இன்று ஆகஸ்ட் 14!


இந்நாள் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல -ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில், சமூகநீதி தேவைப்பட்ட பெரும்பான்மை மக்களின் வாழ்வில் மறக்க முடியாத - மறக்கவே கூடாத ஒப்பற்ற ஒரு பெரும் நாள்!


சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 1921 இல் உருவாக் கப்பட்டு, 1922, 1924 ஆம் ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்டு 1928 இல் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் அமைச்சராகயிருந்த காலத்தில் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி ஒதுக்கீடுச் சட்டம் பார்ப்பனர்களின் தொடர் முயற்சியால் செல்லாது என்று சென்னை - உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது (28.7.1950).


உச்சநீதிமன்றமும் 1950 செப்டம்பரில் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.வகுப்புவாரி உரிமை நாள்!தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார்; போர்ப்பறை கொட்டினார். நாலாத் திசைகளிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகக் கிளம்பி மாணவர்களை, ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பினார்.ஆகஸ்ட் 14 ஆம் தேதியை வகுப்புரிமை நாளென்று அறிவித்தார். தந்தை பெரியார் வேண்டுகோள்படி அன்று தமிழ்நாடெங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்தனர்.கல்வித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கம்!


தமிழ்மண் - தன்மான மண் - சமூகநீதி மண் என்ற உண்மை மத்தியில் ஆட்சியில் இருந்தோர்க்கு மிகத் தெளிவாக உணர்த்தப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் எப்படி இருந்தது?மக்கள் தொகையில் 2.7 சதவிகிதமாக இருந்த பார்ப்பனர்கள்பற்றிய புள்ளிவிவரம் இதோ:


இண்டர் மீடியட் 33.8 சதவிகிதம்

பி.ஏ.; பி.காம் 33.6 சதவிகிதம்;


பி.எஸ்ஸி., 46.6 சதவிகிதம்;


பி.ஏ. ஆனர்ஸ் 48.5 சதவிகிதம்


என்று நூற்றுக்கு மூன்று சதவிகிதம்கூட முழுசாக இல்லாத பார்ப்பனர்கள் இந்த அளவுக்கு அவர்களின் விகிதாச்சாரத்துக்கு மேலாக இருபது மடங்கு அனுபவித்து வந்தனர்.வகுப்புவாரி உரிமையும் செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டதால் இந்த ஆதிக்கம் இன்னும் பன்மடங்கு உயர்ந்து, பார்ப்பனர் அல்லாத மக்கள் படுகுழியில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டு விடாதா?முதல் சட்டத் திருத்தம்அந்த நியாயமான கோபம்தான் தந்தை பெரியார் அவர்களைத் தணலாகக் கொதிக்கச் செய்தது; எரிமலையாக வெடிக்கச் செய்தது.


சென்னை மாகாணத்தில் தந்தை பெரியார் தலைமையில் மக்கள் கொதி நிலையை அடைந்ததைக் கண்ட பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்த முன்வந்தார்.தமிழ்நாட்டில் நடக்கும் வகுப்புரிமைக்கான போராட்டம்தான் சட்டத் திருத்தத்துக்குக் காரணம் என்பதை நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நேரு அவர்கள் அறிவு நாணயத்தோடு ஒப்புக்கொண்டார்.


அதன்படி 1951 பிப்ரவரியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் (15(4)) கொண்டு வரப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் `பால் வார்க்கப்பட்டது.இன்றைக்கு தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு என்றால், இதற்கு அஸ்திவாரக் கல் அதுதான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான மூலம் - அதுதான் என்பதை மிகுந்த நன்றி உணர்ச்சியோடு நினைவு கூரவேண்டும்.


1950 இல் சென்னை மாநிலத்தில் இருந்த அதே நிலைதான் இன்றைக்கு இந்தியா முழுமையும் உருவாகியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.கல்வியில் இட ஒதுக்கீடு கானல் நீரா?


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு மண்டல் குழுப் பரிந்துரையின் காரணமாக -சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது 1990 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் எளிதில் கிடைத்துவிட வில்லை. சட்ட ரீதியாகக் கிடைக்கவேண்டிய அந்த உரிமைக்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தவேண்டியிருந்தது.


மண்டல் குழுப் பரிந்துரைகளில் கூறப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இதுவரை கானல் நீராகவே இருந்து வருகிறது.வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எப்பொழுது அமலுக்கு வந்ததோ, அப்பொழுதே கல்வியிலும் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்பது சொல்லாமலேயே அமலுக்கு வரத் தகுதி படைத்ததாகத்தான் பொருள்.


ஆனாலும், நீதிமன்றங்கள் அன்று முதல் இன்றுவரை எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் நடந்துவருவதைப் பார்க்கிறோம்.வெட்கப்படவேண்டிய ஒன்றுபிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது (29.3.2007) எந்த வகையில் நியாயம்? அந்தத் தடை ஆணையை நீக்கக் கோரி மத்திய அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது (7.8.2007).


மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஜனநாயகத்தின் கெதி இந்த நிலையில்தானிருக்கிறது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்றல்லவா?பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் (அரசமைப்புச் சட்டம் 340 ஆவது பிரிவின்படி) அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் தரும் பரிந்துரை களை அமல்படுத்தவேண்டும் என்று உள்ளதே அது வெறும் ``ஏட்டுச் சுரைக்காய்தானா?


1950- அதே நிலைதான் இன்றும்!1950 இல் வகுப்புவாரி உரிமைக்குக் கத்தி தீட்டப்பட்டபோது எழுந்த அதே கொந்தளிப்பு அதைவிடவும் அதிகமாக இப்பொழுது ஏற்பட்டாக வேண்டும். இதில் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டம் தேவையில்லை! ஓரணியில் அனைவரும் திரளவேண்டும். தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்புக் கேட்டை பிற்படுத்தப்பட்ட மக்கள் போதிய அளவுக்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.தந்தை பெரியார் 1950 இல் அறிவித்த இந்த வகுப்புரிமை நாளில் மக்களைத் திரட்ட உறுதிகொள்வோம் - திட்டங்களை வகுப்போம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!



சென்னை
14.8.2007






தலைவர்,திராவிடர் கழகம்.

Tuesday, July 17, 2007

சோதனைப் பதிவு

கடவுள் இல்லை!
கடவுள் இல்லை!!
கடவுள் இல்லவே இல்லை!!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்!
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்!
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!

தர்மகர்த்தா அணுகுமுறைவேண்டாம்! - தலையங்கம்

சென்னை - செவ்வாய் - ஜூலை 17 - 2007
தர்மகர்த்தா அணுகுமுறைவேண்டாம்!
தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை உடையன என்றாலும், நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி இன்னோ ரன்ன வகைகளில் அரசின் உதவிகளைப் பெற்றுதான் அவை செயல்படுகின்றன.புதிய பொருளாதாரக் கொள்கைப்படி தொழில் நிறு வனங்கள் பெரும்பாலும் தனியார் கைக்குப் போய்க் கொண் டிருக்கும்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தர வாதம் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் கடமைப்பட்டே இருக்கின்றன.அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்திலும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்கூட இதனைச் சுட்டிக்காட்டி யுள்ளார்.தனியார் துறை நிருவாகிகள் நாங்களாகப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்போம் என்றும், அதற்காகத் தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இந்தத் தர்மகர்த்தா முறை என்பது, அவர்களாக மனமிரங்கி பிச்சை போடும் ஒரு முறையாகும்.இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெரும்பான்மையினர் ஆவார்கள்.இவர்கள் காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அமலுக்கு வந்த பிறகேதான் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓரளவு முன்னேற்றத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதிலும் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு மத்திய அரசு கவலை எடுத்துக்கொள்வதில்லை.இந்தச் சூழ்நிலையில் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.தனியார் துறைகளில் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர் என்பது போன்ற பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிபத்தியம் செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தெரிவு செய்யும்போது எந்தக் கண்ணோட் டத்தில் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பது எல்லோ ருக்கும் தெரிந்ததே!சட்டப்படியாக அறுதியிடவில்லையென்றால், தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு என்பது அறவே புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த நிலை சமூகத்தில் அமைதியற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்காதா என்பதை தனியார் துறை நிருவாகிகளும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.இந்தியாவுக்குள் தொழிலகங்களை நடத்தும் முதலாளி கள், இந்தியாவுக்குள் ஒரு நீதி, வெளிநாடுகளில் ஒரு நீதி என்கிற மனுதர்ம மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களை தொடங்கும்போது, அந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றனர். அதே முதலாளிகள் இந்தியா என்று வருகிறபோது தட்டிக் கழிக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.எனவே, இந்திய முதலாளிகள் அல்லது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு முதலாளிகள் தர்மகர்த்தா முறையில் (மனம் இரங்கிப் பிச்சைப் போடுவது) வழங்கு வதாகக் கூறும் இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைக் கண்டு மயங்கக் கூடாது.அரசுத் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகள் அத்தனையிலும் இட ஒதுக்கீடு கண்டிப் பாக, சட்ட ரீதியாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அதிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல் அவரவர்களுக் குரிய விகிதாசாரத்தில் வாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்
தந்தை பெரியார் அறிவுரை
ஏற்றத் தாழ்வை விரும்புவோர்!``உயர்வு தாழ்வுகளைச் சரிப் படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள், தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்கவேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.
(பெரியார் 85 ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் 92)

தமிழக தமிழ் நாளேடுகளில் முதல்முறையாக...

'ஒருங்குறி'யில் விடுதலை!
http://viduthalai.com/20070717/news03.htm
தமிழக தமிழ் நாளேடுகளில் முதல்முறையாக ஒருங்குறியில் விடுதலை நாளேடு தன் பணியைத் தொடங்குகிறது. 1994-இல் முதல் தமிழ் இணைய நாளேடாக வெளிவந்த ஏடு 'விடுதலை'தான் என்பது குறிப்பிடத்தக்க செய்தி!
அய்யாவின் கொள்கைகள் அகிலம் முழுக்க சென்றடைய ஒவ்வொரு பணியும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் விடுதலையும், பெரியார் இணையக் குழுவும்
நடைபோடுகின்றன. தொடர்ந்து விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு மற்றும் பெரியாரின் எழுத்துக்கள் யூனிகோட் எனப்படும் ஒருங்குறியில் உலகெங்கும் வலம் வர இருக்கின்றன என்ற மகிழ்ச்சிச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்!

Thursday, March 22, 2007

பெரியார் - அண்ணா வழி ஆட்சியில் அமைச்சராக இருக்கும்
துரைமுருகன் கட்சிக்கரை வேட்டியை மாற்றி
மேலாடையின்றி கோயிலுக்குச் செல்வதா?
தி.மு.க.வுக்கும் கலைஞருக்கும் இழைத்த
தீரா களங்கம் கறை வேறு உண்டா?
துரைமுருகன் அவர்களை அமைச்சராக்கியது
கட்சியும் கலைஞருமா -
ஆதிகேசவப் பெருமாளா?

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் துரை முருகன் குமரி மாவட்டம் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு கட்சிக்கரை வேட்டியை மாற்றிக் கொண்டு மேலாடையின்றி சென்றது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களைப் பற்றி எழுத அவர் நமக்கு ஓர் அவசியத்தை உண்டாக்கித் தந்தமைக்காக வெட்கமும் வேதனையும் அடைவதோடு கூனிக்குறுகி நிற்கும் பகுத்தறிவுச் சுயமரியாதைக் கொள்கை யாளர்களின் குமுறலை முறைப்படி வெளியிட்டுநகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு (குறள் 784)என்பதற்கொப்ப நமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியுள்ளது குறித்து நாம் மகிழவில்லை; மிகுந்த துன்பத்துடன் தான் எழுதுகிறோம்.
கரை வேட்டியை மாற்றுவதா?
அவர் ஒரு சாதாரண துரைமுருகனாக இருந்து எந்தக் கோயிலுக்குள்ளும் சட்டையைக் கழற்றிவிட்டுச் சென்றால் அதுபற்றி பத்தோடு பதினொன்று சம்பவம் என்று நாம் அலட்சியப்படுத்தி விடலாம் கவலைப்படத் தேவையில்லை.
அவர் மானமிகு முதல்வர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர். தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பாளர்களில் ஒருவர். அவர் தனது குமரி மாவட்ட கேசவப் பெருமாளிடம் உள்ள பயபக்தியைக் காட்ட சட்டையைக் கழற்றியதோடு தி.மு.க. கரை போட்ட தனது வேட்டியையும் கூட மாற்றிவிட்டு வேறு வேட்டி அணிந்து ``பகவானைத் தரிசித்துப் பரவசமானார் என்றால் இதைவிட தி.மு.க.வுக்கு அதன் ஒப்பற்றத் தலைவருக்கு தன்னை அமைச்சராக்கிய முதல்வருக்குத் தீரா களங்கம் - கறை வேறு உண்டா? `குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப் படத்தையும் செய்தி யையும் படிக்கும் கலைஞர் மனது எவ்வளவு காயப்பட்டு உள்ளம் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கும் என்பதை நாம் நன்கு உணர்வோம்.
தம்முடைய தோழர்கள் தொண்டர்கள் பெரியார் - அண்ணா வகுத்த கொள்கை நெறியில் நிற்கவேண்டும் என்பதற்காக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி எழுதியும் பேசியும் வருபவர் நம் முதல்வர் கலைஞர் அவர்கள்.
83 வயதிலும் `சதாவதானம் செய்யும் கலைஞர்`குடிசெய்வார்க்கில்லை பருவம் என நேரங் காலம் பார்க்காது தனது 83 ஆம் வயதிலும் கூட அத்துணைப் பிரச்சினைகளையும் சந்தித்து - அஷ்டாவதானம் கூட அல்ல - ``சதாவதானம் செய்து கடுமையாக உழைக்கும் அவருக்கு சக அமைச்சர்கள் மகிழ்ச்சியைத் தருவதா அல்லது மாறாக நடப்பதா?
`மாண்புமிகு வரும் போகும் - `மானமிகு அப்படியல்லவே!
`மாண்புமிகு என்பது வரும் போகும்; ஆனால் `மானமிகு என்பது ஒருமுறை ஏற்றுக்கொண்டால் அது கொள்கையாளர்களை விட்டு இறுதி மூச்சடங்கும் வரை விலகாது!25.3.2007 `குமுதம் ரிப்போர்ட்டரில் அட்டையிலேயே ``பக்திப் பழமான அமைச்சர் துரைமுருகன் என்று அவரின் சட்டை அணியாத படம் போட்டு உள்ளே எழுதியுள்ள கட்டுரையில் உள்ள முக்கிய பகுதிகள் இதோ:
``...திருவட்டாரில் அமைச்சரின் கார் நேராகப் போய் நின்ற இடம் பிரசித்திப் பெற்ற ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழைமையான ஆலயம் இது. திருவிதாங்கூர் மகாராஜா வம்சத்தினர் இன்றும் தங்கள் குல தெய்வமாகக் கொண்டாடும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலுக்கு முன் மாதிரியே இந்த ஆலயம்தான் என்கிறார்கள். ஒரே வித்தியாசம் அங்கு மூலஸ்தானத்திலுள்ள விஷ்ணுவின் சிலை சயன (படுத்த) நிலையில் பதினெட்டு அடி நீளம் இருக்கும். இங்கோ சிலையின் நீளம் இருபத்திரண்டு அடி.தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் வருகிற 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கோயிலின் கும்பாபிசேகமும் நடைபெற இருப்பதால் திருப்பணி வேலைகளும் நடந்து கொண்டிருக் கின்றன. இந்தச் சூழலில்தான் கட்சிக் கரை வேட்டி சகிதமாக அமைச்சர் கோயில் வளாகத்திற்குள் வந்தார்.

கேரளா ஆகம விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமல்படுத் தப்படுவதால் மேல்சட்டை அணிந்து உள் பிரகாரத்தினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. எனவே அமைச்சரை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவருக்கு ஜரிகை போட்ட பட்டு வேஷ்டி மற்றும் மேலே போர்த்திக் கொள்ள மெல்லிய அங்கவஸ்திரம் ஆகியவற்றை வழங்கினர். அமைச்சரும் பவ்யமாக அவற்றை வாங்கிக் கொண்டு கட்சிக் கரை போட்ட வேஷ்டிக்கும் தனது சட்டைக்கும் விடை கொடுத்தார். சந்தன மாலை மரியாதைகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அடுத்து கோயில் உள் பிரகாரத்தினுள் செல்ல ஆயத்தமானார்.உடனே பூஜைக்கான பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒரு தாம்பாளத்தில் கொண்டு வரப்பட்டன. உதவியாளர் ஒருவர் அதனை ஏந்திக் கொண்டுவர அமைச்சர் உள்ளே போனார்.கோயிலில் பூஜை செய்யும் நம்பூதிரி முதலில் அமைச்சரின் பெயரைக் கேட்டிருக்கிறார். அமைச்சர் தனது பெயரைச் சொன்னதும் நட்சத்திரத்தைக் கேட்டாராம் நம்பூதிரி. சற்று நிதானித்து `கார்த்திகை என்று சொன்னாராம் அமைச்சர். பின்னர் அமைச்சரின் பெயரில் சிறப்புப் பூஜை நடந்திருக்கிறது. பூஜை முடிந்ததும் நம்பூதிரி கொண்டு வந்த பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர் சந்தனத்தை எடுத்துத் தனது மார்பில் லேசாகத் தேய்த்துக் கொண்டாராம்.அதன் பிறகு அங்கவஸ்திரம் சகிதமாகவே கோயிலை வலம் வந்து அங்குள்ள சிற்பங்களை வெகுவாக ரசித்தார் அமைச்சர். உத்தேசமாக முக்கால் மணிநேரம் அங்கு செலவழித்த அமைச்சர் பின்னர் கரைவேஷ்டி - சட்டைக்கு மாறி நாகர்கோயிலுக்குப் பயணமானார்.மாணவப் பருவம் தொட்டு திராவிட இயக்கத்தில் ஊறியவரான துரைமுருகன் இந்த அளவுக்கு பக்தி மானாக மாறிப் போனதை தங்களாலேயே நம்ப முடியவில்லை என் கிறார்கள் உடன்பிறப்புகள். அதே சமயம் தி.மு.க.வின் மேல்மட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில் ``மிக மோசமான உடல்நலப் பாதிப்பு இருதய அறுவை சிகிச்சை ஆகிய பிரச்சினைகளுக்குப் பிறகுதான் அமைச்சரின் போக்கில் இந்த மாற்றம் என்றார்
என்று `குமுதம் ரிப்போர்ட்டர் எழுதுகிறது!
அன்று சாய்பாபா சிக்கல்!
முன்பு முதல்வர் கலைஞர் இல்லத்திற்கு சாய்பாபா வந்தபோதே அவரை வரவேற்று மேலே அழைத்துப் போக கலைஞரின் தூதுவராக வந்த சகோதரர் துரை முருகன் சாய்பாபாவிடம் மோதிரம் பெற்றதோடு எதையும் முன்கூட்டியே அறியும் சக்தியை சாய்பாபா பெற்றிருக்கிறார் என்று பேசிய போதும் மோதிரம் வரவழைக்கும் சாய்பாபாவின் மோடி மஸ்தான் வேலை பி.பி.சி. தொலைக்காட்சி மூலம் சந்தி சிரித்ததும் உலகம் முழுவதும் அறிந்த செய்தி என்றே அவருக்குச் சுட்டினோம்.
நீங்கா அவமானம்!
இப்போதும் அதுபற்றிக் கவலைப்படாமல் இப்படி நடந்துகொள்வ தனால் தி.மு.க.வுக்கும் கலைஞர் அரசுக்கும் நீங்கா அவமானத்தை அல்லவா தேடி வைத்துவிட்டார்! நாம் எங்கு போய் முட்டிக் கொள்வது?
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கென்றே ஓர் அமைச்சர் உள்ளார். கோயிலுக்குச் செல்வதும் அவருடைய பல பணிகளில் ஒரு பகுதி என்றாலும்கூட அவர் கூட தி.மு.க. கரை வேட்டியை மாற்றிக் கொண்டு சென்றார் என்று செய்தி வந்ததில்லையே!
அ.தி.மு.க.வும் - பகுத்தறிவும்
முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மண் சோறு கல் சோறு தின்று வீதியில் புரண்டனர் என்றால் அவர்கள் தலைமையும் சரி அவர்களும் சரி தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று என்றும் அழைத்துக் கொண்டதில்லை.
ஆனால் கலைஞர் அரசில் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது முதல்வரிலிருந்து எந்த அமைச்சரும் கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை என்பதற்கு என்ன காரணம்? ஒரே காரணம் இது பெரியார் - அண்ணா வழி நடக்கும் பகுத்தறிவாளர் அரசு என்று உலகுக்குப் பிரகடனப்படுத்தத்தானே!அப்படி உறுதிமொழி எடுத்த பிறகு இப்படி ஒரு அலங்கோலமா? அவலமா?
முதலமைச்சருக்கு மன உளைச்சல்!
முதல்வர் கலைஞருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் மன உளைச்சலையாவது ஏற்படுத்தாமல் உதவ வேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றோரின் ஆதரவுகளைவிட அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களின் ஆதரவு அன்றாடக் கடமை அல்லவா?அமைச்சராக ஆக்கியது கேசவப் பெருமாளா?தி.மு.க. கரை போட்ட வேட்டிதான் அவரை மந்திரியாக்கியது - கலைஞரின் சகோதரப் பாசமும் கொள்கைக் குடும்பம் இது என்று காட்டுகின்ற வற்றாத அன்பும்தான் அவரை அமைச்சராக்கியது!

கேசவப் பெருமாளோ அல்லது பட்டுத் துண்டு பட்டு வேட்டியோ அல்ல. வேலிகள் பயிரை மேய்ந்தால் நாம் வன்மையாகக் கண்டிப்பது நம்முடைய கடமையாகிறது!இந்த அரசின் சாதனைகளைப் பாராட்ட வேண்டியவற்றை பாராட்டும் அதே நேரத்தில் கண்டித்து உரிமையுடன் சுட்டிக் காட்டவேண்டியவற்றை உடனடியாகச் சுட்டிக்காட்ட திராவிடர் கழகம் ஒருபோதும் தயங்காது!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை 22.3.2007

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...