Wednesday, April 25, 2018

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் இலட்சணம்


தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா?
நாளை (16.4.2018) சென்னையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் போராட்டம்  சுனாமியாக வெடிக்கட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
==================
தாழ்த்தப்பட்டோர்மீது தொடர்ந்து ஏவப்படும் வன்முறைகள், தீண்டாமை அனுசரிப்பு இவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட இயற்றப்பட்ட சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியைக் கண்டித்து நாளை (16.4.2018) காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற உள்ள அனைத் துக் கட்சி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை அரசியல் சட்ட வரைவுக்குழு தலைவராகப் போட்டு, அவருடைய பரந்த சட்ட ஞானத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டு, பிறகு அவரை அரசியலில் கறிவேப்பிலையாக்கியது - அங்கே ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனக் கும்பல் ஒன்று.
அண்ணல் அம்பேத்கர் வெளிப்படுத்திய வேதனை!
அவரே பிறகு சொன்னார் - மாநிலங்களவையில் 1953இல் ஆந்திரா மொழி வழி மாநில பிரிவினை மசோதா விவாதத்தின்போது.
"என்னை வாடகைக் குதிரையாக்கிக் கொண் டார்கள் என்றாலும், சில சமூகநீதிக்கு முன்னுரிமை தருவதிலும், பீடிகையில்,
சுதந்திரம், (Liberty)
சமத்துவம் (equality)
சகோதரத்துவம் (Fraternity)
இவைகளை கொள்கை தத்துவங்களாகவும், மதச் சார்பின்மைக்கு அடிகோலியும் பல அடிப் படை உரிமைகளுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்த முடிந்தது" என்றார் அவர்.
அதில் 17ஆம் பிரிவு "தீண்டாமை" ஒழிக்கப் பட்டு விட்டது. எந்த  ரூபத்தில் அதைக் கடைப் பிடித்தாலும் அது சட்டத்தில் தண்டனை தரக்கூடிய விதியாக  நுழைத்தார்.
1955இல் தனிச் சட்டம்
அதனை செயல்படுத்த, 1955இல் 'தீண்டாமை யை'க் கடைப்பிடிப்பவருக்குத் தண்டனை தர வழி செய்திட சட்டம் கொணர்ந்தனர்.
இதற்கெல்லாம் முன்னோடியாக, பிரிட்டிஷார் ஆண்ட போதே, 1938இல் தொடங்கி 1948 வரை 1) ஒரிசா, 2) பம்பாய் 3) கிழக்குப் பஞ்சாப், 4) அய்த ராபாத் 5) சென்னை ஆகிய மாநிலங்களில் 21 சட்டங்கள் கோயில் நுழைவுக்கே அனுமதியளித்து நிறைவேற்றப்பட்டன.
ஆனால் அவைகளில் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்தன.
தந்தை பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபின், இந்த கோயில் நுழைவுக்குத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரையும், மற்றவர்களையும் இணைத்து மதுரை, ஈரோடு, திருவண்ணாமலை கோயில்களுக்குள் நுழைந்து பூசை செய்யப் போராட வைத்தார்!
1922 - திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் பெரியார்
அதற்குமுன் 1922இல் திருப்பூர் காங்கிரசு மாநாட்டில், கோயில் நுழைவு "தீண்டாதாருக்கு"த் தேவை என்று தீர்மானம் கொண்டு வர, அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யர் ஆவார். (ஆதாரம்: திரு.வி.. எழுதிய வாழ்க்கைக்  குறிப்புகள்)
அதற்குப் பிறகே 1948இல் கோயில் நுழைவுச் சட்டங்கள் சில மாநிலங்களில் காங்கிரசு ஆட்சி களில் கொண்டு வரப்பட்டன!
1976இல் மீண்டும் ஒரு சட்டம்!
தீண்டாமைக்கெதிராக மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய தனிச் சட்டம் 1955இல் இயற்றப்பட்டதை, இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் 1976இல் PCR Act (Protection of Civil Rights) என்று நிறைவேற்றப்பட்டது; காரணம் தீண்டாதார் என்ற உழைக்கும் சகோதரர்களுக்குப் போதிய பாதுகாப்பை முந்தைய 1955 சட்டம் அளிக்கவில்லை என்பதைத் தொடர்ந்து அச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் மீது உயர் ஜாதி வெறியினர் நடத்திய தாக்குதல், வன்கொடுமைகள், வன்புணர்ச்சி உட்பட, ஜாதி பஞ்சாயத்துக்கள் மூலம் தண்டனை அளிப்பது போன்ற அநாகரீகக் கொடுஞ் செயல்கள் பெருகியதைத் தடுக்கவே அவர் வேகப்படுத்தினார்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது...
ராஜீவ்காந்தி பிரதமராக வந்தபிறகு 1989இல் அச்சட்டம் பலமுறை மாற்றப்பட்டு தண்டனைகள் அதிகப்படுத்தப்பட்டனசமூகக் கொடுமைகள் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எதிராகக் குறையவில்லை என்பதால் -- Scheduled castes and the scheduled Tribes Prevention of Atrocities  (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) என்ற சட்டத்தின் மூலம் கூர்முனைப்படுத்தப்பட்டது.
இவ்வளவு இருந்தும் உயர் ஜாதித் திமிரும் மமதையும், கொண்டவர்கள், உழைக்கும் அந்த தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களை பிள்ளைப் பூச்சிகளாக, புன்மைத் தேரைகளாக மண்ணுக்கும் கேடாய் நடத்திய நிலை மாறவில்லை!
குற்றமிழைத்த உயர்ஜாதியினர்மீது காவல்துறையினர் FIR போடுவதற்கேகூட, போராட்டங்கள் நடத்தும் அவலம்!
பிணங்களைத் தூக்கிச் செல்வதற்குக்கூடத் தடைகள்!
தாழ்த்தப்பட்டோர் இறந்தால்  பிணங்களைத் தூக்கி சுடுகாட்டுக்குச் செல்ல, நீதிமன்ற ஆணையைக்கூட மதிக்காத ஜாதி வெறி ஆணவம் தமிழ்நாட்டில்கூட நடந்ததே!
இந்த நிலையில், அண்மையில் டாக்டர் சுபாஷ் காஷிநாத் மகாஜன் என்பவருக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் (Dr. Subash kashinath Mahajan Vs State of Maharastra and ANR.)  என்ற வழக்கில் 20.3.2018இல் உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை உடனே கைது செய்யக் கூடாது என்றுகூறி, கொஞ்ச நஞ்சம் இருந்த அச்சட்டத்தின் பல்லையும் பிடுங்கி விட்டது!
காரணம் சரியானபடி தக்கவகையில் சட்ட நிபுணர்களை சமூகநீதியில் நம்பிக்கை உள்ள வழக்குரைஞர்களை வைத்து வாதாடவே இல்லை. இன்று மோடி அரசு அம்பேத்கர் படத்தைத் தூக்கிப் பிடித்து கபட நாடகம் ஆடுகிறது!
நாடே கிளர்ச்சி சுனாமியால் சூழப்பட்டுள்ளது.
'சட்டத்தை நானே எரிப்பேன்' என்றாரே அம்பேத்கர்
இந்த நிலைகளை நன்கு புரிந்த டாக்டர் அம்பேத்கர் "சட்டத்தை நான்தான் எழுதியதாக அடிக்கடி சொல்லுகிறீர்கள்; அதே அரசியல் சட்டத்தை எரிப்பதிலும் நான்தான் முதல் ஆளாக இருப்பேன்" என்று மாநிலங்கள் அவையில் மேற் காட்டிய விவாதத்தில் மனம் நொந்து பேசினாரே!
மொத்தம் 31 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்றத்தில்  இப்பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி உண்டா?
உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதியினர்
பிற்படுத்தப்பட்டவர் கூட கிடையாதே! ஒரே ஒரு பெண் நீதிபதி அவரும் விரைவில் ஓய்வு பெறப் போகிறார்; எல்லாம் பார்ப்பன - மற்ற உயர்ஜாதியினரின்  ஏகப் போக சாம்ராஜ்யம்தான்!
பா... போன்ற பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் இழிந்த, வேதனைத் தீயில் வெந்து கருகுவதாக சமூகநீதி ஆக்கப்பட்டது பார்த்தீர்களா?
16ஆம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் -
எழுச்சி பெறட்டும்!
தமிழ்நாட்டில் திமுக, திராவிடர் கழகம், காங்கிரசு, இரு கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் இணைந்து நாளை நடத்தப் போகும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கருப்புக் கொடி போராட்டம் போல வலிமையாகச் செய்து, சமூகநீதி - பெரியார் மண்ணில் தலை தாழாது பறக்கட்டும்! ஜாதி - தீண்டாமையை ஒழிக்க அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் இயற்றியதையும் செயல்படுத்தாத தமிழக அரசின் போக்கினையும், அதில் கண்டித்தாக வேண்டியதும், செயல்பட வைப்பதும் மிக முக்கியமானதாகும்!
அணி திரண்டு பணி முடிக்க வாரீர்! வாரீர்!!


கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

================
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் இலட்சணம்
இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தினை செயலற்றதாக்கியவர்கள் பார்ப்பன, உயர் ஜாதியினர், படித்த கூட்டமும்கூட!
சில எடுத்துக்காட்டுகள்:
1. வடநாட்டில் (.பி.யில்) முன்பு பிளாக் டெவலப்மண்ட்   (BDO) ) அலுவலகத்தில் கீழ்நிலை வேலை பார்த்த ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தனர் - அங்குள்ள அலுவலக உயர்ஜாதி அதிகாரிகள். இதன்மீதான வழக்கு வராமல் தடுத்து விட்ட நிலையில், மகளிர் அமைப்பினர் போராட்டத்திற்குப் பிறகு வழக்கு முதற் கட்டத்தில் குற்றமிழைத்தோருக்குத் தண்டனை கிடைத்தது; மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் அத்தண்டனைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆயினர். காரணம் அத்தீர்ப்பில் கூறப் பட்டது என்ன தெரியுமா?
"இவர்கள் உயர்ஜாதியினர், பாதிக்கப் பட்ட பெண் தாழ்த்தப்பட்டவர், அவருடன் வன்புணர்ச்சி செய்திருக்கவே மாட்டார்கள்" என்பதுதான்! என்னே விசித்திரம்! (மகாபாரதத்தின் பராசரர் - மச்சகந்தி கதை கூடவா அந்த நீதிபதிக்கு தெரியாது?)
2. மற்றொன்று, .பி.யில் மாற்றப்பட்ட ஒரு மாவட்ட நீதிபதிக்குப் பதிலாக வந்தவர் உயர் ஜாதி நீதிபதி, மாற்றப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர்; அந்த நாற்காலியைக் கழுவி சுத்தம் செய்து, பிறகே அதன் மீது அமர்ந்து நீதி விசாரணையைத் துவக்கினார். இதுதான் சட்டத்தின் லட்சணம்!


மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா?

மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா?
வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு
தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை  அறிக்கை

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்ட வகுப்புகள் இழுத்து மூடப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைக் கண்டித்து  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாண வர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை  உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு .தி.மு.. அரசுக்கு ஏன் இந்தக் கேடு கெட்ட புத்தி! ராஜகோபாலாச்சாரியாரின் வழியிலே செயல்படத் தொடங்கிவிட்டார்களா?
மீண்டும் குலக்கல்வியா?
1937-1939 ஆம் ஆண்டுகளில் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952 இல் மறுமுறை ஆட்சிக்கு வந்தபோது 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலைப் படித்தால் போதும் என்ற கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
ஆச்சாரியாரைப்பற்றி அறிந்தவர் அல்லவா அய்யா தந்தை பெரியார், இது நவீனக் குலக்கல்வித் திட்டம், வருணாசிரமக் கல்வி என்று கூறி, போர்ப்பறை முழங்கினார். நாடே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்தெழுந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று கட்சிகளைக் கடந்து தந்தை பெரியார் தலைமையிலே கனன்று எழுந்தது தமிழ்நாடு.
இந்தக் குலக்கல்வித் திட்டத்தை விலக்கிக் கொள்ளாவிட்டால், கழகத் தோழர்களே! பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும்; நாள் குறிப்பிடுவேன், அக்கிரகாரத்திற்கு நெருப்பு வையுங்கள்'' என்ற அறிவிப்புக் கொடுத்தார்.
விளைவு ஆச்சாரியார் பதவியை விட்டு விலகி ஓடும்படிச் செய்யப்பட்டது.
65 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த நிலவரம், .தி.மு.. அரசுக்குத் தெரியாதா? எம்.ஜி.ஆர். அவர்களே வருமான வரம்பு கொண்டு வந்து கையைச் சுட்டுக்கொண்டாரே!
மாணவர்கள் குறைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய வேண்டுமே தவிர, குல்லாய்க்கு ஏற்ப தலையைச் சீவக்கூடாது!
இது பணப் பிரச்சினையல்ல - தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தின் தலையை நிமிர்த்தும் மிகப்பெரும் சமூகப் பிரச்சினை! இதில் வேண்டாம் விஷப் பரீட்சை!
.தி.மு.. அரசு பாம்புப் புற்றுக்குள் கைவிட ஆசைப்படுகிறதா? எரிமலையை எழுப்ப வேண்டாம். சமூகநீதியில் கை வைத்தால், நாடே தீப்பற்றி எரியும் - ஜாக்கிரதை!
பாதிக்கப்படுவோர் யார்?
இன்னும் நூற்றுக்கு நூறு கல்வி என்ற  நிலையை எட்டவில்லை. வகுப்புகளை இழுத்து மூடினால் அந்தப் பிள்ளைகள் எங்கே போய்ப் படிப்பார்கள்?
இதில் பாதிக்கப்படுவோர் - உயர்ஜாதியினரோசெல்வந்தர் களோ அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும்தான்
புலிவாலை மிதிக்காதீர்!
ஏற்கெனவே விவசாயிகள் வெந்து மடிந்து கொண்டுள்ளனர். வேண்டாம் இந்த விபரீதம்! புலிவாலை மிதிக்கவேண்டாம்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி
தலைவர் 
திராவிடர் கழகம்.

20.4.2018


Tuesday, April 3, 2018

கங்கை என்னும் சாக்கடை!

கங்கை நதியைப்பற்றி இந்துமதத் தலைவர்கள், அபிமானிகள் கட்டி விடும் கதைகளுக்கோ பஞ்சமில்லை; கங்கையில் குளித்தால் சகல பாவங்களும் பறந்தோடி விடும் - புண்ணியம் மூட்டை மூட்டையாக வந்த சேரும் என்றெல்லாம்  மூட்டை மூட்டையாகப் பொய்களை அவிழ்த்துக் கொட்டுவார்கள்.
செத்த பிறகுகூட அஸ்தியைக் கங்கையில் கரைத்தால் செத்தவன் மோட்சத்துக்குப் போவான் என்ற புரையோடும் மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை.
ஆனால் உண்மை என்ன? கங்கையைப்பற்றி மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வின் அடிப் படையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரிய தாகும். 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு என்ன கூறுகிறது?
"கடந்த ஆண்டு ஆய்வின்படி உத்தரப் பிரதேசத்தில் 16 குளியல் இடங்களில் கழிவு நீர் கலப்பது 50 சதவீதத்தையும் தாண்டி விட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனுமதிக்கப்படும் அளவைக் காட்டிலும் அதிகம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் 88 சதவீத குளியல் இடங்களில் கங்கை நதி நீர் தூய்மையாக இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2050 ஆம் ஆண்டில் இந்திய நதிகளில் நீர் மாசுபாடு மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் உடல்நலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனறும் யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 கங்கை நதி நீர் மாசுபடுவதை தடுக்க நிர்மாணிக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் போதுமானதாக இல்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கான்பூர், அலகாபாத், வாரணாசி ஆகிய இடங்களிலும் கங்கை நீர் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வாரணாசியில் உள்ள மல்வியாபலம் நதி நீரும் மாசு அடைந்துள்ளது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களின் வழியாக கங்கை நதி பாய்கிறது. பீகாரில் அபிஷ் மால் என்ற இடத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் கங்கை நதியில் நுண்ணுயிர்க் கிருமிகள் அடங்கிய கழிவு நீர்அதிகம் கலப்பதால் இந்த இடங்களில் கங்கை நதி நீர் மிகவும் மாசு அடைந்துள்ளது. 
மேற்கு வங்காளத்தை பொறுத்த வரையில் 2016ஆய்வின்படி கழிவு நீர் நுண்ணுயிர்க் கிருமிகள் கங்கை நதியில் அதிகம் கலந்திருப்பது கண்டு அறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பெரும்பாலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் எந்த அளவிற்கு தண்ணீர் சுத்தப்படுத்தப்படுகிறது என்ற புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை."
- இவ்வாறு அந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.
கங்கை என்ற சாக்கடையைத் தூய்மைப்படுத்த 187 திட்டங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எவ்வளவுப் பொறுப்பற்ற மூடத்தனம்!
மக்கள் நல அரசாக இருந்தால் என்ன செய்ய வேண்டும், மத்திய - மாநில அரசுகள் கங்கையில் குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தடை செய்ய வேண்டாமா? ஆனால் மத்தியில் உள்ள இந்துத்துவா பிஜேபி ஆட்சி கங்கையைச் சுத்திகரிப்பதாகக் கூறிக்  கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணம் கொட்டியழப்படுகிறது. கண்மூடித்தனமான ஒரு வேலையில் ஈடுபட்டு வருகிறது.
கங்கையில் குளிப்பது உடல் நலத்துக்கு உகந்ததல்ல என்று ஒரு பக்கம் மத்திய அரசின் ஒரு துறையான மாசு கட்டுப்பாடு வாரியம் அறி விக்கிறது. ஆனால் மத்திய அரசின் நிதித்துறையோ அதற்கு மாறாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் பாழாக்குகிறது. ஏனிந்த இரட்டை வேடம்?
நடப்பது மக்கள் நல அரசல்ல - மனுதர்ம அரசே!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...