Wednesday, April 13, 2016

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வா?

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வா?
உச்சநீதிமன்றத்தில் முன்னுக்குப்பின் முரணானதீர்ப்பு
தந்தைபெரியார் பிறந்த சமூக நீதி மண் இதனைஅனுமதிக்காது
தேர்தலிலும் எதிரொலிக்கும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணம்!  - கி. வீரமணி

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது - சமூக நீதிக்கு எதிரான இந்தப் போக்கை தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண் கடுமையாக எதிர்க்கும் - திராவிடர் கழகம் களம் காணும் என்று எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் - அறிக்கை வருமாறு:

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி - 1976 நெருக்கடி நிலை காலத்தில் பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் சென்றாலும் சென்றனர். அன்று தொட்டுக் கல்வித் துறையில் பார்ப்பனீயம் தன் சித்து வேலைகளில் இறங்கி விட்டது. குறிப்பாக நுழைவுத் தேர்வு என்ற பாம்பு தலை தூக்குவதும், அதனை எதிர்த்து சமூக நீதியாளர்கள் தடியைத் தூக்கினால் பொந்தில் நுழைந்து கொள்வது என்பதும் வாடிக்கையாகி விட்டது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அறிமுகம்

மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வு 1984ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திணிக்கப்பட்டது.  அன்று முதல் திராவிடர் கழகம் தான் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. அதன்பிறகு நுழைவுத் தேர்வு மூலமே தொழிற் கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இந்த நிலையில், 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது நுழைவுத்தேர்வை நீக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 2007ஆம் ஆண்டில் இருந்து நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு, அகில இந்திய மருத்துவ நிறுவன (எய்ம்ஸ்) நுழைவுத் தேர்வு என்று ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் சேர தனித்தனி நுழைவுத்தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதால், மருத்துவப் படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.அய்.) மத்திய சுகாதார அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்தது. எம்.சி.அய். அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு இந்தியா முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த உத்தரவிட்டது மத்திய அரசு.

நுழைவுத் தேர்வை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து 115 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் 2010இல் தாக்கல் செய்யப்பட்டன.   இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவக் கல்வியில் நாடு தழுவிய பொது நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று  தீர்ப்பளித்தது.  மூவர் கொண்ட அமர்வில்  இரு நீதிபதிகள் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கினர். (18.7.2013). இந்த தீர்ப்பை எதிர்த்து ஜூலை 2013-ஆம் ஆண்டு  எப்.சி.அய். சார்பில் மறு சீராய்வு மனு போடப்பட்டது. 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்ததும், நாடுமுழுவதும் பொது நுழைவுத்தேர்வு தேவை என்ற நிலையெடுத்து அரசின் சார்பில் 2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வழக்கும் தொடரப்பபட்டது.

“மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பது தவிர நுழைவுத் தேர்வை நடத்திட உத்தரவிடும் சட்டப்படியான அதிகாரம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்.சி.அய்.) கிடையாது” என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் அறுதியிட்டுக் கூறியது. (18.7.2013)

நீதிபதிகள் அல்டம்ஸ் கபீர், விக்கிர மஜித்சிங் ஆகிய இருவரும் அளித்த அந்த தீர்ப்பில் முக்கியமானதொரு கருத்தைத் தெளிவுபடுத்தியும் இருந்தனர். நுழைவுத் தேர்வு இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று ஆணி அடித்தது போல அறைந்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் முன்னுக்குப் பின் முரணான தீர்ப்பு

இவ்வளவுக்குப் பிறகும் மறு சீராய்வு மனு மீதான தீர்ப்பு தலை கீழாக ஆனதுதான் ஆச்சரியம்!

அதே உச்சநீதிமன்றம் முந்தைய தீர்ப்புக்கு மாறாக நுழைவுத் தேர்வை அனுமதித்துள்ளது. வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு அளிக்கப்படும் வரை பொது நுழைவுத் தேர்வை நடத்திடத் தடையில்லை என்றும் உச்சநீதிமன்றம் நேற்று கூறி இருக்கிறது.

மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளை வகுப்பதுதான் மருத்துவக் கவுன்சிலின் வேலையே தவிர நுழைவுத் தேர்வை நடத்தச் சொல்லுவதற்கான சட்டப்படியான அதிகாரம் அதற்குக் கிடையாது என்று எந்த உச்சநீதிமன்ற அமர்வு சொன்னதோ, அதற்கு முரண்பாடாக - மருத்துவக் கவுன்சிலின் மேல் முறையீட்டை ஏற்று நுழைவுத் தேர்வை நடத்திட  அதே உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது  - அசல் முரண்பாடல்லவா! இப்படியெல்லாம் தீர்ப்பு சொன்னால் உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விடாதா? இது கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பிரச்சினையல்லவா?

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வி முறையா இருக்கிறது?


இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் நடைமுறையில் இருக்கிறதா?

சி.பி.எஸ்.இ., மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வி, மாநில அரசு என்று பல்வேறு வகையான பாடத் திட்டங்கள் உள்ளனவே! இந்த நிலையில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எப்படி சரியானதாக, நியாயமானதாக இருக்க முடியும்?

அகில இந்திய நுழைவுத் தேர்வு என்பது - சி.பி.எஸ்.இ. முறையில் படித்து வந்த  மாணவர்களுக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல், ஒரு சார்பாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் நுழைவுத் தேர்வைத் திணிக்கலாமா? இதனை அனுமதிக்கத்தான் முடியுமா?
புள்ளி விவரம் என்ன சொல்லுகிறது?

அ.தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் சரியான முறையில் பின்பற்றப்படாததால் (நாம் தெரிவித்த யோசனையை கேட்கவில்லை) சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. பிறகு ஆட்சிக்கு வந்த திமுக அரசு நிபுணர் குழுவை அமைத்து, அது தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வழக்கிலும் வென்றது. தி.மு.க. ஆட்சியில் தனி சட்டமே இயற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. (15.3.2007).

நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட மனுவில் கொடுக்கப் பட்டுள்ள புள்ளி விவரம் அனைத்துத் தரப்பு மக்களின் கண்களையும் திறக்கக் கூடியதாகும். (உச்சநீதிமன்றம் உட்பட).

2004-2005ஆம் ஆண்டில் 5 லட்சத்திற்கும் - அதிகமான மாணவர்கள் பிளஸ் டூ தேர்வை எழுதினார்கள். அதில் 2 லட்சத்து  10 ஆயிரம் மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த வர்கள். இவர்களில் பெரும்பாலோர் அதிக மதிப்பெண்களை எடுத்திருந்தனர். நிறைய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியிலும் நுழைந்தனர். பிளஸ் டூ தேர்வும் நுழைவுத் தேர்வைப் போன்றது தான். ஆனால், புதிய  நுழைவுத் தேர்வு காரணமாக கடந்த ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1195 இடங்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 227தான்; அதனால் தான் நுழைவுத் தேர்வை ரத்து செய்தோம் என்று தி.மு.க. ஆட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்துக்கு அனுமதி வழங்கியது.

10.1..2010 முதல் 13.1.2010 வரை அய்தராபாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட மாட்டாது என்று முடிவு எடுக்கப்பட்டதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

பொருத்தமில்லாத காரணம்

அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு இன்னொரு காரணம் முன் வைக்கப்படுகிறது. இப்பொழுதுள்ள நடைமுறையில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு பல நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டியிருப்பதாகவும் அது அவர்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதாகவும் ஒரு கதையை அளக்கிறார்கள். அதாவது உண்மையா? தேசிய அளவில் ஒரு நுழைவுத் தேர்வை எழுதினாலும், டில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய்., புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மற்றும் இராணுவ மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனித் தனியாகத்தான் நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய நிலை இன்னும் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்? எந்த வகையில் பார்த்தாலும் தேசிய நுழைவுத் தேர்வு கிராமப்புற, ஏழை, எளிய முதல் தலைமுறையாகப் படிக்க முன்வரும்  மாணவர்களின் தலையில் விழுந்த இடிதான் என்பதில் அய்யமில்லை. பார்ப்பனீய  சூழ்ச்சி இதன் பின்னணியில் பதுங்கி இருக்கிறது என்பதில் அய்யமில்லை.

கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு!

நுழைவுத் தேர்வை எழுதுவதற்குத் தேவையான பயிற்சிக்கூடங்கள் கிராமப்புறங்களில் உண்டா? நகரப்புறங் களில் வந்து படிக்க வேண்டுமானால், அதற்காக ஆகும் செலவை சுமக்கும் சக்தி ஏழை, எளிய மக்களுக்கு உண்டா?

அப்படியே பார்த்தாலும் நுழைவுத் தேர்வு தான் தகுதியின் அளவுகோலா? நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் (27.4.2007) அழகாக ஒன்றைச் சென்னார்களே!

நுழைவுத் தேர்வு தகுதியின் அளவுகோலா?

“நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட ‘கோன்பனேகா குரோர்பதி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி போல அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை ‘டிக்‘ செய்யும் வாய்ப்புள்ளது” என்று தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டியுள்ளார்களே - இடித்துச் சொன்னார்களே!
தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இடஒதுக்கீட்டில் முக்கியமான நிலைப்பாடு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. 69 சதவிகித அடிப்படையில் கல்வி வேலை வாய்ப்பில் இடங்கள் அளிக்கப்படுகின்றன. இதற்கு எதிராக மத்திய அரசு செயல்படும் நிலையை, தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு தூண்டி விடவில்லையா?

மாநில அரசின் உரிமைகளில் அத்துமீறி நுழைய மத்திய அரசை அனுமதிக்கலாமா? தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் சமூகநீதிக்கு எதிராக ஒரு சிறு துரும்பை அசைத்தாலும், அது கொந்தளிக்கும் பெருங்கடலாக, சீறி எழும் எரிமலையாகப் பேருரு எடுக்கும் என்பதை மறந்து விடலாமா?
மத்திய தொகுப்பில் இடஒதுக்கீட கிடையாது

மாநிலங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீதத்தையும் மருத்துவ முதுநிலை பட்டப் பிரிவில் 50 சதவீதத்தையும் பொதுத் தொகுப்புக்கு மத்திய அரசு எடுத்துச் செல்லுகிறது. அப்படி எடுத்துச் செல்லப்படும் இடங்களில் இடஒதுக்கீடுக்கு இடம் இல்லை.

தமிழ்நாட்டின் 69 சதவீதத்தை விழுங்கிடத் திட்டமா?
இந்தக் கொடுமை போதாது என்று ஒட்டு மொத்தமாகவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டை முழுவதுமாக விழுங்கிக் கபளீகரம் செய்யும் சதி நடக்கிறது! நடக்கிறது!! இதன் பின்னணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது - முடியாது. மக்களின் கவனமெல்லாம் தேர்தல் அரசியல் பக்கம் திசை திரும்பி இருக்கும் நேரம் பார்த்து இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு வெளியாகியுள்ளது.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்!

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது. சமூக நீதியாளர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி நீதிமன்றம் வழியாக தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் (9ஆவது அட்டவணையில் பாதுகாப்புச் செய்யப்பட்டிருக்கிறது) காப்பாற்றிட தேவையான சட்ட ரீதியான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திராவிடர் கழகம் களத்தில் இறங்கும்

மற்றவர்களுக்குத் தேர்தல் களம் என்றாலும் திராவிடர் கழகத்தைப் பொருத்தவரை சமூக நீதிக் களத்தில் இறங்கிச் செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். திமுகவைப் பொருத்தவரை எந்த வடிவத்தில் வந்தாலும் நுழைவுத் தேர்வை எதிர்ப்போம் என்று மானமிகு கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் (‘முரசொலி’ 8.2.2016)

மத்திய பிஜேபி ஆட்சி சமூகநீதிக்கு  எதிரானது என்பதை இப்பொழுதும் மெய்ப்பித்துக் கொண்டு விட்டது;  தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?  தமிழ்நாட்டில் நுழைவு தேர்வுக்கு  இடமில்லை என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும்; அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் - மத்திய அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

இப்பிரச்சினை தமிழகத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை. இடஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர். 1980 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தாரே நினைவிருக்கிறதா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, April 9, 2016

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் தமிழர் தலைவர் கி.வீரமணி சந்திப்பு

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் தமிழர் தலைவர் சந்திப்பு

தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு
தமிழகம் வருவதாக முதல்வர் ஒப்புதல்
பாட்னா, ஏப்.8- பீகார் தலைநகர் பாட்னாவில் ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ பெற உள்ள பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து அளவளாவினார்.
அப்போது தமிழ்நாட்டில் செப்டம்பரில் நடைபெற உள்ள தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதாக மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் 2015-ஆம் ஆண்டுக்கான “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’’ பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு, பாட்னாவில் நாளை (9.4.2016) வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பொருட்டு பாட்னாவிற்கு 7-ஆம் தேதி வருகை தந்த தமிழர் தலைவருக்கு, பாட்னா விமான நிலையத்தில், அய்க்கிய ஜனதா தள மாநில நிர்வாகிகளும், ரவீந்திரராம் தலைமையில் பீகார் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
தமிழர் தலைவருடன், மானமிகு மோகனா வீரமணி, பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விருது வழங்கும் குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், (அமெரிக்கா) திராவிடர் கழக வெளியுறவு செயலர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்
கோ.கருணாநிதி ஆகியோரும் வருகை தந்தனர்.
முதல்வருடன் சந்திப்பு!
மாலை 7 மணிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் சந்தித்து, பொன்னாடை அணிவித்தார். பீகாரில் முழு மதுவிலக்கை நிறைவேற்றியதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார். உலக நல்வாழ்வு தினத்தை ஒட்டி, பழக்கூடையும் மானமிகு மோகனா வீரமணியால் அளிக்கப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை பெற்றிட ஒப்புதல் தந்தமைக்கு டாக்டர் இலக்குவன்தமிழ் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் தமிழர் தலைவருடன், பெரியார் பற்றியும், பெரியார் டிரஸ்டு நடத்திடும் கல்விக் கூடங்கள் பற்றியும் மற்றும் சமூக, அரசியல் நிலவரங்கள் குறித்தும் விரிவாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் அளவளாவப்பட்டது.
தமிழர் தலைவருடன், பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விருது வழங்கும் குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், திராவிடர் கழக வெளியுறவு செயலர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பீகார் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச் செயலாளர் ரவீந்திர ராம், பீகார் மேலவை உறுப்பினர் சஞ்சய்குமார் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் மாதத்தில் வருகை தந்து தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளையும் பீகார் முதல்வர்
நிதிஷ்குமார் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் முதல்வர் இல்லத்தில் நிதிஷ்குமாரால் நிறுவப்பட்ட போதி மரத்தினை தமிழர் தலைவர் உள்ளிட்ட விருந்தினர்களைப் பார்வையிட அழைத்துச் சென்றார்.அனைவருக்கும் தேனீர் அளித்து மகிழ்வித்தார் முதல்வர் நிதிஷ்குமார். தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைத்து விருந்தினர்களையும் வாயில்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, April 5, 2016

டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் கொளுத்திய மனுதர்ம வாசகங்களைக் காணீர்!!


டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தீவைத்துக் கொளுத்திய மனுதர்ம நூலின் 40 விதிகள்
1.  'எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலா காது'' (10 : 147)
2. ''இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது'' (10 : 148).
3. ''இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற் குணமின்மை இவற்றையுடையவனா யினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக'' (10 : 154).
4. ''அன்றாட வேள்விகள் அய்ந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு'' (9 : 14).
5. ''நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை'' (9 : 15).
6. இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).
7. 'படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).
8. மாதர்க்குப் பிறவியைத் தூய்மை யாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளை யுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).
9.  பிள்ளை இல்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக இருந்தால் அப்பேது ஸ்திரீ தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்ட தன் மைத் துனன் அல்லது தன் கணவ னுக்கு ஏழு தலை முறைக்குட் பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம் . ( அத் 9. சு.59)
10.  கணவன் துராசாரமுள் ளவனாக இருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப்போல பூசிக்க வேண்டியது. ( அத் 5. சு.154)
11.  பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத் தில் கணவன் ஆக்ஞை யிலும், கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. ( அத் 5. சு.148)
12 . பெண்களையும், பிராமணரல்லாதா ரையும் கொல்லுதல் பாதகமாகாது. ( அத் 11 சு.65)
13. தனக்கு பொக்கிஷநாசம் முதலிய மேலான ஆபத்து வந்தாலும் அரசன் அதிகத் தீர்வையை ஏற்படுத்தி பிராமணர் களுக்குக் கோபம் வரச் செய்யக்கூடாது. அவர்கள் கோபித்தால் இவன் சேனை யோடும். வாகனத்தோடும் அழிந்து போகும் படி சபிப்பார்கள். (அத் 9. சு.343)
14. வைதீகமாக இருந்தாலும், லௌகீகமாக இருந்தாலும் மூடனாயிருந்தாலும் பிரா மணனே மேலான தெய்வம்.( அத் 9. சு.317)
15 . ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல் எப்படி ஹோமத்தினால் விர்த்தி செய்யப்படுகின்றதோ அப்படியே பிரா மணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந் தாலும் பூஜிக்கத்தக்கவன்; மேலானவன்.
அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியை பிராம ணர்களுக்கு தானஞ்செய்து மற்றதை தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது. ( அத் 8. சு.38)
16. பிராமணனுக்குத் தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத் தண்ட னையாகும். மற்ற வருணத் தாருக்கு கொலைத் தண்டனை யுண்டு. ( அத் 8. சு.379)
17. சர்ப்பம், பிராமணன் இளைத்திருந்தாலும் அவனை அவமானம் செய்யக் கூடாது. (அத் 4. சு.135-6)
18. பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யா மலும் துன்பப்படுத்தாமலும் அவன் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண் டும். (அத் 8. சு.380)
19. பிராமணனுக்கு மங்களத் தையும், சத்திரியனுக்குப் பலத் தையும், வைசியனுக்குப் பொரு ளையும் , சூத்திரனுக்குத் தாழ் வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது. சூத்திரனுக்குத் தாஸன் என்ற தொடர் பெயராக இட வேண்டியது. (அத் 2. சு.31-32)
20. பிராமணனுக்குப் பஞ்சு நூலாலூம் சத்ரியனுக்கு சணப்ப நூலாலும் வைசிய னுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண் டியது. (அத்2. சு.44)
21. பன்றியின் மோத்தலினாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வை யினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது. (அத்3.சு,241) சிரார்த்த உணவு சூத்திரனுக்குக் கூடாது.
22. எவன் சிரார்த்தஞ்செய்து அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்குப் போடு கிறானே அந்த மூடன் கால சூத்திரமென் னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான். (அத் 3. சு. 249)
23. ''இவர்களுக்கு நேரே உணவு பரிமாறல், ஏவலாளரைக் கொண்டு, உடைந்த சட்டியில், அன்னமிட்டு வைக்க வேண்டும். இவர்கள் ஊரிலும், நகரிலும் இரவில் திரியக்கூடாது'' (10 : 54).
24. அந்த சிரார்த்தத்தில் (சூத்திர னுக்கு தானஞ்செய்யப்பட்ட சிரார்த்தத் தில்) புசித்த பிராமணன் தன் மனைவி புணர்ச்சி யினாசையால் வந்தபோதிலும், அவளுடன் அன்று சம்போகஞ் செய்தால் அவளுடைய மலத்தில் அந்த மாதம் முழுவதும் அவனுடைய பிதுர்க்கள் மூழ்குகிறார்கள். (அத்.3.சு .250)
25. சூத்திரன் என்பவன் ஏழு வகைப் படும் 1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன். 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்கிறவன். 4. விபசாரி மகன். 5. விலைக்கு வாங்கப் பட்டவன். 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன். 7. தலைமுறை தலை முறையாக ஊழியம் செய்கிறவன். (அத் 8. சு. 415)
26. சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவ னத்திற்காவது அல்லது இரண்டிற்கு மாவது, பிராமணனையே தொழ வேண் டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122)
27. பிராமணர்களை வழிபடாததனா லும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத் திரத் தன்மை அடைந் தார்கள். (அத்10. சு.43)
28. பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125)
29. சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்க லாம், பிராமணனுக்குத் 29. தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத் திருக்கிறார். (அத்.8. சு 413)
31. சூத்திரன் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும்படி அரசன் செல்ல வேண்டியது, அப் படிச் செய்யாவிட்டால் அரசர்கள் தண்டித்து அங்ஙனம் செய்யச் சொல்ல வேண்டியது. (அத் 8. சு. 235)
32. சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் ; இதனால் அவனுக்குத் தானம் முதலியவையும் உண் டென்று தோன்றுகிறது (அத் 1. சு.91)
33. யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும் . ஆகையால் அதைக் கொள்ளையிடுவது தர்மமாகும்.
(அத். 7. சு.24)
34. செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும் கேளாமலும் பலாத் காரத்தினாலும் கொள்ளையிடலாம். (அத்.11. சு.13)
35. சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்க வனாயிருந்தாலும், குடும்பத்திற்கு உபயோக மானதைவிட அதிகப் பொருளை சம்பாதிக்கக் கூடாது . அப்படிச் சம்பாதித்தால் தன்னால் உப சரிக்கத்தக்க பிராமணனையே இம்சை செய்ய வேண்டி வரும். (அத்.10.சு.129)
36. சூத்திரன், பிராமணர்களைத் திட்டி னால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8.சு.270)
37. சூத்திரன் பிராமணன் பெயர்,சாதி இவை களைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டும். (அத்.8.சு.271)
38. சூத்திரன் பிராமணனைப் பார்த்து நீர் இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய் தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (அத்.8. சு.272)
39. சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆச னத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (அத்.8.சு.281)
40. சூத்திரன் பிராமணனின் எந்தெந்த உறுப்புகளை கையினாலும் தடியினாலும் தாக்கு கிறானோ, அந்தந்த உறுப்புகளை நறுக்க வேண் டும் அடித்தால் கையையும் , உதைத்தால் காலை யும் வெட்டிவிட வேண்டும். (மனு. அத் 9. சு.280)


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இடஒதுக்கீடு, சமஸ்கிருத வாரம், ‘பாரத் மாதா கி ஜே’ எல்லாவற்றிலும் இரட்டை வேடம்!


எதிர்ப்பால் பின் வாங்கும் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸின் இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்வீர்!

அதிகாரம் ஆணவப் போதைகளை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
பிரதமர் மோடிக்கு நெருக்கடியைகொடுக்கிறார்-ஆர்.எஸ்.எஸ்தலைவர்?  வெளியுறவுக் கொள்கையில் கடும் சிக்கல் வரும் எச்சரிக்கை!
எல்லாவற்றிலும் இரட்டை வேடம் போடும் ஆர்.எஸ்.எஸின் முரண்பாடுகளையும், அதிகார ஆணவப் போதைகளையும் முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஆரியக் கலாச்சாரமான சனாதன பார்ப்பனீயக் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காகவே, ஹிந்து மகாசபை என்ற பழைய பார்ப்பனியப் பாதுகாப்பு, வெளிப்படையாகத் தெரிவதால் அந்த மதவெறி அமைப்பின் பக்கம் வர அஞ்சும் அப்பாவி மக்களை ஈர்க்க, ‘தேச சேவை’ என்ற போர்வை போர்த்தப்பட்டு, அதன் முகமூடி அமைப்பாக 1925இல் மகாராஷ்டிர சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பே ஆர்.எஸ்.எஸ். என்ற ‘ராஷ்டிரிய சுய சேவக் சங் ஆகும்! (R.S.S.)

‘சித்பவன்’ பார்ப்பனர்களுக்கு கூடாரமே ஆர்.எஸ்.எஸ்.
அதன் மூலம் முக்கிய தலைவர்களிலிருந்து அதனிடம் பயிற்சி பெற்று காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே வரை இந்த ‘சித் பவன்’ மகாராஷ்டிர பார்ப்பனரேயாவர்!
சமூகநீதிக்கு  எதிராகக் குரல் கொடுத்து வர்ணப் பாதுகாப்பை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்து, தேசியத்தைப் புகுத்த பிள்ளையாரை ஒரு ஆயுதமாக மகாராஷ்டிரத்தில் கொண்டு வந்த உத்தியைக் கையாண்ட பாலகங்காதர திலகர் என்ற பார்ப்பனரும் சித்பவன் பிரிவு பார்ப்பனரே! இவர் கீதையையும் அதன் வர்ண தர்மங்களையும் போற்றியவர் (வி.டி. சவார்க்கரும் அதே பிரிவுதான்)
தீண்டாமை எதிர்ப்பு என்பதும்கூட ஒரு பாவனைதான்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் லட்சியம் ஹிந்துத்துவாவைப் புகுத்திப் பார்ப்பனீய மறுமலர்ச்சிக்கான சமஸ்கிருதத்தை - அதன் கலாச்சார பண்பாடுகளை நாடு தழுவிய அளவில் பரப்புதல் - வர்ண தர்மத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும்போது, ஒரு தந்திர உத்தியாக, தீண்டாமையை எதிர்ப்பதைப் போல் காட்டிக்  கொள்வது!
“பேசுநா இரண்டுடையாய் போற்றி,
தந்திரமூர்த்தி போற்றி”
என்று அறிஞர்அண்ணா “ஆரிய மாயை” நூலில் குறிப்பிட்டதற்கு சரியான எடுத்துக்காட்டு ஆர்.எஸ்.எஸ்.!
அடிப்படை மூலக் கொள்கையை அடைய அவ்வப்போது உத்திகளையும் தந்திரங்களையும் அஸ்திரங்களாக ஏவி, வியூகங்களை மாற்றி அமைப்பது ‘அவாளுக்கு’ கை வந்த கலையாகும்!
எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு  அனுமதியில்லை என்று ஆர்.எஸ்.எஸ். கூறியது; பிறகு மெல்ல 10 ஆண்டுக்கு பின் பெண்களை உள்ளே சேர்த்து, அவர்களது சம உரிமையை மனப்பூர்வமாக ஏற்காமல், ‘அவர்கள் வேலை குடும்பப் பாங்கோடு வீட்டிற்குள்ளே இருப்பது தான் நல்லது’ என்று தேன் தடவிய பூச்சு கொண்ட பேச்சு பேசுகிறது!
அரசியலில் ஈடுபடுவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். எழுதிக் கொடுத்தது என்னாயிற்று?
முதல் முறை ஆர்.எஸ்.எஸ். தடை (1948) செய்யப்பட்டபோது, மத்திய அரசிடம் இவர்கள் கொடுத்த வாக்குறுதியில் அரசியல் அமைப்பு அல்ல ஆர்.எஸ்.எஸ். என்று கூறியதுடன், சட்ட திட்டங்களை இனி வகுத்துக் கொள்வோம் என்பதுதான். (அதுவரை கிடையாது).
சென்னைப் பார்ப்பனர் டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரிதான் இவர்களுக்காக மத்திய உள்துறை அமைச்சருடன் பேசி, எழுதி, தடை நீக்கம் செய்யப் பயன்பட்டவர்!
வெளிப்படையாக நாங்கள்(R.S.S.) அரசியலுக்கு வர மாட்டோம் என்று கூறிக் கொண்டே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2014) வெளிப்படையாக அரசியல் காட்சிகளை அரங்கேற்றியவர்கள் இவர்கள்!
இரண்டு வகையான பேச்சுகளும், நடத்தையும் இவர்களது வாடிக்கைகளில் வழமையாகி விட்டன!
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.
இடஒதுக்கீடு பற்றி பல பல்டிகள்
இதோ ஒரு சில:
பீகாரில் இடஒதுக்கீட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று (ஒழிக்க வேண்டுமென்பதை மறைமுகமாக) கூறி, எழுந்த கடும் எதிர்ப்பும், பா.ஜ.க. பீகாரில் சந்தித்த படு தோல்வியும் பேச்சை மாற்றி கட்டாயம் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரே “பிளேட்டை” மாற்றிப் போட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.
‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லும்படி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் கூறி, திட்டமிட்டே சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கும், மற்ற பொதுவானவர்களுக்கும் ஒரு இக்கட்டான சங்கடத்தை ஏற்படுத்தி தேசபக்தி சர்டிபிகேட்டை இவர்களிடமிருந்து தான் பெற வேண்டும் என்பது போன்ற ஒரு மாயையை  அதிகார ஆணவ போதை மூலம் அறிவித்து வருகின்றன!
மகாராஷ்டிர முதல்வரின் பாசிச குரல்!
மகாராஷ்டிர முதல் அமைச்சர் (பா.ஜ.க.) தேவேந்திர பட்னவிஸ் (மராத்திய பார்ப்பனர்) ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லாதவர்களுக்கு இந்த தேசத்தில் வாழ இடமில்லை என்று ஏதோ குடிஉரிமையை இவர்கள் பார்த்து மற்றவர்களுக்கு வழங்கும் பிச்சை போல பேசியுள்ளார்!
ஒரு பொறுப்பான பதவியில் உள்ள முதல் அமைச்சர் இப்படிப் பேசுவது அழகா? நியாயமா? ஏற்புடைத்தா?
எதிர்ப்பான கொந்தளிப்பான  வீச்சைத் தாங்க முடியாத நிலையில், உடனே ஆர்.எஸ்.எஸ். கட்சி டில்லியிலிருந்து அப்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மறுப்புத் தெரிவிக்கிறது!
சூழ்ச்சிப் படலம்!
ஏன் இரட்டை குரல்? எதற்காக இந்த இரட்டை வேடம்?
நோட்டம்(Feelers) விட்டுப் பார்க்கும் பார்ப்பனீயத் தந்திர முறைகளில் ஒன்று இது!
சமஸ்கிருத வாரம் கொண்டாட சுற்றறிக்கை விடுவது, பிறகு எதிர்ப்புப்  பலமாக வந்தவுடன் பின் வாங்குவது - இதெல்லாம் மக்கள் விழித்துள்ளனரா? என்று பார்க்கும் சூழ்ச்சிப் படல அரங்கேற்றமே!
இந்தப் பாசிசம் ஒரு போதும் பலிக்காது! ராம் ஜெத்மலானி போன்ற பிரபல வழக்குரைஞர்  பா.ஜ.க. தலைவர்களில் முன்பு ஒருவராக மதிக்கப்பட்டவர், ‘இப்போது நெருக்கடிகால சூழ்நிலை நிலவுகிறது’ என்று நேற்று தஞ்சையில் கூறியிருப்பது எதனைக் காட்டுகிறது?
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாரத மாதாவின் கையில் தேசியக் கொடியா உள்ளது? மாறாக, காவிக் கொடி அல்லவா உள்ளது? இதன் நோக்கம் புரிகிறதா?
வந்தே மாதரம் பாடல்
‘வந்தே மாதரம்‘ பாடலேகூட இஸ்லாமிய சிறுபான்மை யினரைக் கொச்சைப்படுத்தும் தன்மையது என்பது எத்துணைப் பேருக்குத் தெரியும்?
1938இல் ஆச்சாரியார் (ராஜாஜி) முதலமைச்சராக இருந்தபோது சென்னை ராஜதானியில் - சட்டமன்றம் துவங்குமுன் வந்தே மாதரம் பாட்டு பாடக் கட்டளை இட்டு, பின்பு அது திரும்பப் பெற்ற பழைய வரலாறே இதன் நோக்கத்தை விளக்குவதாகும்.

இந்த இரட்டை வேடத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


கி.வீரமணி   
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை
4.4.2016  



.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...