Monday, February 23, 2015

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

திருமண வீடு - சாவு வீட்டில்கூட - சந்திக்க மறுக்கும்

தமிழ்நாட்டுத் தலைவர்கள் வடநாட்டைப் பார்க்கட்டும்!

பிரதமர் மோடியும் - லாலுவும் - முலாயமும் கூடிக் குலவும் காட்சியைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புதிய நாகரிகத்தை வளர்க்கட்டும்



வடநாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி அளவளாவும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில் துக்க வீட்டில்கூட ஒருவரை ஒருவர் சந்திக்க மறுக்கும். தயங்கும் நிலை அல்லவா இங்கு இருக்கிறது. உ.பி. திருமணச் சடங்கு ஒன்றில் பிரதமர் மோடியும், லாலு பிரசாத்தும், முலாயம்சிங் யாதவும் கூடி மகிழ்கின்றனர். வடநாட்டில் நிலவும் இந்த நனி நாகரிகத்தை தமிழ்நாட்டின் தலைவர்களும், பிரமுகர்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:

தமிழ்நாடும் தென் மாநிலங்களும் மிகவும் பண்பட்டவை நனி நாகரிகம் படைத்தவை. வடநாட்டவர்களைவிட பல துறைகளில் முன்னேறியவர்கள் என்று பெருமைபேசி மகிழுபவர்கள் என்ற நிலை அரசியல் கட்சிகளின் தவறான அணுகுமுறையால் ஒரு கட்சித் தலைவரோ, அல்லது வேறு பொறுப்பாளர்களோ, திருமணம், வரவேற்பு மற்றும் துக்க, இரங்கல் நிகழ்ச்சிகளில் கூட ஒருவரை மற்றொருவர் சந்திப்பது, குறைந்தபட்ச மரியாதையை, விசாரிப்புகளை ஒருவருக்கொருவர் இன்முகத்தோடு பரிமாறிக் கொள்ளுதல் போன்றவைகூட, - காணாமற் போனவையாக ஆகி விட்டன! இது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரிய கூடா ஒழுக்கம் ஆகும்!

தலைவர்களே, வடநாட்டைப் பாருங்கள்!

வடநாட்டைப் பார்த்து தமிழ்நாட்டவர் கற்றுக்கொள்ளும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எவ்வளவு கடுமையாக கட்சித் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ பேசித் தாக்கிக் கொண்டாலும் மத்திய அரங்கம் (Central Hall Parliament) என்ற நாடாளுமன்ற அரங்கில் நுழையும்போது, தோள் மேல் கைபோட்டு, நட்புறவும் நயத்தக்க நனி நாகரிகமும் பொங்கி வழிவது போல் பேசிக் கொள்ளும் நடைமுறை வெகு சர்வ சாதாரணம் ஆனால் - தமிழ்நாட்டில்....? இந்நிலையை மாற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?

சட்டமன்றம் கூடுகிற நிலையில், ஒருவரைப் பார்த்து மற்றொரு கட்சியினர் வணக்கம் கூறும்போது மறுபுறம் அதற்கு பதில் வணக்கத்தை புன்னகையோடு கூறும் நிலைகூட அருகிப் போய் விட்ட அவலம் உள்ளது!

தலைவர்கள் எதிர்பாராமல், ரயில் நிலையம், விமான நிலையம் - விமானப் பயணம் போன்றவைகளில் அடுத்தடுத்த பகுதிகளில் - ஒரே பெட்டியில் - பயணம் செய்யும்போதுகூட, ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து விடக் கூடாது என்று ஓடோடி அறைக் கதவைச் சாத்திக் கொள்வது, அல்லது சந்திப்பைத் தவிர்க்க இரயில் நிற்பதற்கு முன்பேகூட குதித்து ஓடுவதுபோல கீழே இறங்கி குடுகுடுவென்று காரில் ஏறிக் கதவை அடைத்துக் கொள்வது எல்லாம் கசப்பான நிகழ்வுகள் அல்லவா!

பிறந்த நாளிலாவது வாழ்த்து கூறக் கூடாதா?

திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப் பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும், வேதனையோடும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

எவ்வளவு கருத்து வேறுபாடு, கொள்கை மாறுபாடு இருந்தாலும், பிறந்த நாள்களுக்கு வாழ்த்து அனுப்பியோ; நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறுவதோ, மனித நேயத்தையும், மக்கள் பண்பையும் வளர்த்து, தொண்டர்கள் மத்தியில் வெறுப்புக் குறைய, அல்லது மறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.

அந்தக் காலத்துத் தலைவர்களின் அன்பும், பண்பும் அகிலம் அறிந்தவை. (ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்).

பிரதமர் மோடி - லாலு - முலாயம் - சந்திப்பும் அளவளாவலும்
நேற்று (22.2.2015) ஒரு படம் பல நாளேடுகளில் வந்துள்ளது.

உ.பி. மாநிலத்தில் ஒரு ஊரில் (சைபை) திருமணச் சடங்கு விழா ஒன்று.

லாலு பிரசாத் மகளுக்கும், முலாயம் சிங் பேரனுக்கும் மணவிழா; அதில் பிரதமர் மோடி சென்று ஒரு மணி நேரம் - எதிரும் புதிருமாக இருக்கும் தலைவர்களுடன் - கலகலப்பாக சிரித்துப் பேசி மகிழ்ந்துள்ள செய்தி எவ்வளவு வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க, பின்பற்றப்பட வேண்டிய முறை!

பிரதமரைச் சந்தித்த கெஜ்ரிவால் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தேர்தல் முடிந்த நிலையில் பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது அவரது இல்லத்தில் பிரதமர் மோடி அவர்கள் கெஜ்ரிவால் இருமல் - ஆஸ்தமாவிலிருந்து விடுபட தனது மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தி உதவுவதாகக் கூறி, தமது பண்பைக் காட்டியுள்ளார்.

வடநாட்டுத் தலைவர்கள் பலரிடமும் நான் பழகியுள்ளேன் - எந்தவித பந்தாவும் இல்லாமல் பழகுபவர்கள் அவர்கள்.

தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு வெறுக்கத்தக்க நோய் எப்படியோ கடந்த 30 ஆண்டுகளாகப் பரவி விட்டது. யார்மீதும் குற்றம் சுமத்தி புண்ணைக் குடைய விரும்பவில்லை நாம்.

தமிழர்களை உலக அரங்கில் உயர்த்தும்

நம் நாட்டில் கட்சி, கொள்கை வேறுபாடுகளைத் தள்ளி வைத்து (தற்காலிகமாக) பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் தயங்காமல் சந்தித்து அன்புடனும், பண்புடனும் தலைவர்கள், பொறுப்பாளர்கள் நடத்து கொள்ளுவது தமிழர்களை உலக அரங்கில் உயர்த்திட, திராவிடத்திற்கு ஏற்றம் தேடிடச் செய்ய அணுகுமுறை மாற்றம் அவசரம் அவசியம் என்று கனிவுடன் வேண்டுகோளாக வைக்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

23-02-2015

Monday, February 16, 2015

இங்கர்சால் கூறுகிறார்...



போப்பாண்டவர்களை விட, குருமார்களைவிட, பாதிரிகளைவிட, அர்ச்ச கர்களைவிட, ஆண்டவ னின் அடியார்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித் தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந் திருக்கிறான்.

மத ஸ்தாபனங்களைக் காட்டிலும், அதனைத் தோற்றுவித்த மூல கர்த்தாக்களைக் காட்டிலும், சித்தாந்தங்களை சிருஷ்டித்தவர்களைக் காட்டிலும் சாமியார்களைக் காட்டிலும், சாதாரண தீக் குச்சியைக் கண்டுபிடித்தவன் மக்கள் சமூகத்தின் சுக வாழ்விற்கும், சவுகரியத்திற்கும் எவ்வளவோ நன்மை புரிந்தவனாகிறான்.

- கடவுள்கள் - கோயில்கள் நூல்
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்



தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையை பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடி கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையை பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடு வோமா?
 
***************
 
நீதிக்கு நான் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கிறேன். அதாவது எந்த விஷ யத்தை அந்த விஷயத்திற்காகவும் அதன் விளைவு களுக்காகவும் நேசிக்கிறோமோ அந்த மாதிரியான விஷயங்களில் ஒன்றாக நீதியை நான் கருதுகிறேன்.
 
***************
 
ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயலுகையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது.
 
***************
 
விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே  பல குற்றங்களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது.

மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
 
***************
 
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.


Friday, February 13, 2015

காதலர் தினத்தை ஆதரிப்போம்- திராவிடர் கழக மாணவரணி அழைப்பு

காதலர் தினத்தை ஆதரிப்போம்!
 
பாசிஸ்டுகளின் எதிர்ப்பை முறியடிப்போம்!
 
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திராவிடர் கழக மாணவரணி அழைப்பு



மனித இனத்தின் இயற்கை உணர்வான காதல் என்பது, இரு தனி மனிதர்களுக்கிடையிலான அன்புப் பரிமாற்றமாக மட்டுமில்லாமல், இந்தியாவைப் பொறுத்தளவில் ஜாதி, மதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தகர்க்கும் மனித நேயக் கருவியாகத் திகழ்கிறது. 

இதனாலேயே ஜாதி-மதங்களைக் காப்பாற்ற நினைக்கும் ஜாதீயவாதிகளும் மதவாதிகளும், பாசிஸ்டுகளும் மதத்தின் பெயராலும் கலாச்சாரத்தின் பெயராலும் காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு ஆங்காங்கே வன்முறையிலும், அருவருக்கத்தக்க செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோம் என்று வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் அளவுக்கு அறிவிப்பு விடுக்கும் அசட்டுத் துணிவை இன்றைய சூழ்நிலை அவர்களுக்குத் தந்திருக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தான போக்காகும். மனிதநேயத்தில் அக்கறை கொண்டோரும், சமூக நல்லிணக்கத்திலும், சமூக அமைதியிலும் பற்றுக் கொண்டோரும் இந்தப் போக்கைக் கண்டிக்க முன்வரவேண்டும்.

காதலர் தினத்தை எதிர்ப்பதாகக் கூறி நடக்கும் இத்தகைய பாசிச வன்முறைப் போக்குக்கு, முற்போக்கு இயக்கங்களும், கல்லூரி மாணவர் அமைப்புகளும், அமைப்புகளைச் சாராத பல்வேறு கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.

 காதலர்கள் மீதான வன்முறைகளிலிருந்து அவர்களைக்  காப்பதற்கான முயற்சிகளிலும், அத்தகைய வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்டோர்,  மாணவர்கள், இளைஞர்கள்  ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று திராவிடர் கழக மாணவரணி அழைப்பு விடுக்கிறது.

இந்த உணர்வோடு தங்களைப் பதிவு செய்துகொள்ளவிரும்புவோர் 9176757084, 8807541920  என்ற எண்களில், அல்லது savelove.tn@gmail.com    என்ற மின்னஞ்சலில் தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
மாநில செயலாளர்
9444210999
த.சீ.இளந்திரையன்
மாநில இணைச் செயலாளர்
9750134599

த.அஜிதன்
மாநில துணைச் செயலாளர்
9789775497



மாணவர்களை முட்டாளாக்க வேண்டாம்!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் இருபால் மாணவர்களுக்கும் சிறப்பு வழிபாடு ஒன்று சென்னை சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டுமாம். இந்த வழிபாட்டில் பங்கு கொள்ளும் இருபால் மாணவர்களிடம் அகல் விளக்குகள் வழங்கப்படுமாம். அந்த அகல் விளக்கை ஏற்றி எங்கள் வாழ்வில் ஒளியேற்று இறைவா! என்று மாணவர்கள் வேண்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு வழிபாடு நடத்துவார்களாம். அதன் பிறகு பூஜையில் வைக்கப்பட்ட காப்புக் கயிறுகளை மாணவர்களுக்கு வழங்குவார்களாம்.

இதனைப் படிக்கும் பொழுது, இந்த 21ஆம் நூற்றாண்டின் நுழைவு வாசலில் ஆன்மீகவாதிகள் எதிர்கால நம்பிக்கை ஒளி விளக்குகளின் கைகளில் அகல் விளக்கைக் கொளுத்தி கடவுளிடம் விண்ணப்பம் போட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முன் வருகிறார்கள் - வெட்கக்கேடு!

இது மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கையையும், சோம்பேறித்தனத்தையும் தானே வளர்க்கும்.

கடவுளிடம் கையேந்தினால் தேர்வில் வெற்றி பெறலாம் என்ற பொய் நம்பிக்கையை மாணவர்களிடம் திணித்தால் அவர்கள் கல்வியில் எப்படிக் கவனம் செலுத்துவார்கள்? அன்றாடம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்படும்?

அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்வில் சிறப்பாக வெற்றி பெறுவதற்குமான அறிவார்ந்த வழிமுறைகள் உள்ளன. கல்வியாளர்கள் அதைப்பற்றி எல்லாம் எடுத்துக் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் புறந்தள்ளி, அறிவுக்கு ஒவ்வாத முறையில் தவறான வழியில் மாணவர்களைத் திசை திருப்பலாமா!?

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வை ஊட்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(பி) தெளிவாக, திட்டவட்டமாகக் கூறுகிறது.

இந்த நிலையில், இதற்கு முற்றிலும் முரண்பாடாக மூடநம்பிக்கை வலைக்குள் மாணவர்களைச் சிக்க வைப்பது சட்டப்படி குற்றமல்லவா!? மாணவர்களின் எதிர் காலத்தை இருட்டறையில் தள்ளுவது குற்றம் அல்லவா?

இது ஏதோ ஒரு மதப்பிரச்சினை என்று கருதி விடக் கூடாது; எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்ற வேலையில் ஈடுபட்டாலும் அது குற்றம் குற்றமே!
இதுகுறித்து ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் விமர்சிக்க வேண்டாமா?

ஆனால் நம் நாட்டு ஏடுகளும், இதழ்களும் ஊடகங்களும் ஆன்மீக மலர்களைத்தானே வெளி யிட்டுக் கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு எதை விற்றாவது கல்லாப் பெட்டியை நிரப்ப வேண்டும் என்பதுதானே நோக்கம்.

சரி, கல்வியாளர்கள் இல்லையா? அவர்கள் முன்வந்து கருத்துக்களைச் சொல்லக் கூடாதா என்று கேட்கலாம்;  அப்படிச் சொல்லுவதற்கு முதுகெலும்பு வேண்டுமே, நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிக் கொள்ளும் சுயநல கதகதப்பில் அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!

அரசியல்வாதிகள் கருத்துச் சொல்ல பெரும்பாலும் விரும்பாததற்குக் காரணம் இது கடவுளோடு, பக்தி யோடு சம்பந்தப்பட்டது என்பதால் வாக்கு வங்கியை நினைத்து வாய் மூடிக் கொள்ளும் நிலைதான்.

கடைசியில் எங்கு வந்து நிற்கிறது என்றால், இது பகுத்தறிவாளர்கள் அதிலும் குறிப்பாக திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினை என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இதில் உண்மை நிலை என்னவென்றால் எதிர் காலத்தின் உலகை நிர்மாணிக்கக் கூடிய மாணவர்களை தன்னம்பிக்கையற்றவர்களாக ஆக்கி விடக் கூடாது என்று கருதுகிற ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டிய, தலையிட வேண்டிய ஒன்றாகும். இது வெறும் கழகப் பிரச்சினையல்ல.

இதில் இன்னொரு கேள்வியும் உண்டு, தேர்வுகளுக்குமுன் இப்படி வழிபாடு நடத்திய மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்று விட்டனர் என்பதற்கான புள்ளி விவரங்கள் உண்டா?

கடவுள் நம்பிக்கை இல்லாத மாணவர்கள் எல்லாம் தேர்வில் தோல்வி அடைந்து விடுகின்றனரா?

பக்தி என்பது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லக் கூடிய மூட உணர்வு என்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஓர் எடுத்துக்காட்டே!

டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி யூனியன் பிரதேசத்தில்
இராமனுக்குப் பிறக்காதவர்கள் இவ்வளவு அதிகமா?

டில்லி சட்டமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் அமைப்புகளுக்கும், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கும், அக்கட்சிக்கும் படுதோல்வியைப் பரிசாக, டில்லி வாக்காளர்ப் பெரு மக்கள் வழங்கி, விட்டனர். மதவெறி அரசியலும், அதிகாரப் போதை, ஆணவ உளறலும், இனிமேல் செல்லாது என்று உணர்த்தி உள்ளனர்.

அமித்ஷா - மோடி கூட்டு ஏதோ பெரிய அற்புத அதிசயங்களை யெல்லாம் தரக்கூடிய அலாவுதீனின் அற்புத விளக்கு என்பதைப் போன்ற (மாய்மாலப் பிரச்சாரப் புரட்டு என்ற) பெரிய பலூனை - கெஜ்ரிவால் என்ற சின்ன குண்டூசியைக் கொண்டு குத்தி ஒன்று மில்லாமல், பரிதாபத்திற்குரிய நிலையில் எதிர்க்கட்சித் தகுதியைக்கூடப் பெறாது வீழ்த்திப் பாடம் புகட்டி யுள்ளனர்!

நாடாளுமன்றத் தேர்தலில் மோடியால் இளைஞர் களுக்கும், ஏனையோருக்கும் தரப்பட்ட குளோரோபாம் - மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவில்லை; மயக்க மருந்து தொடர்ந்து வேலை செய்யவும் கூடாது; அது மரணத்தில்தான் போய் முடியும்!

ஆகவே நாடு அழிவை நோக்கி - மதவெறி பழைய வர்ண தர்ம வெறி, சிறுபான்மையினரை மிக மோசமாக சித்தரித்து நடத்திய வன்கொடுமைக்கு வாக்கு பெட்டி வழியே இப்படி ஒரு மவுனப் புரட்சியை டெல்லி வாக்காளர்கள் நடத்திப் பாடம் போதித்துள்ளனர்.

5 முறை தேர்தல் பிரச்சாரத்தினை மும்முரமாக நடத்திய மோடி பிரச்சாரம் பரிதாபத்திற்குரிய நிலையில் 5 இடங் களைக்கூட பெற முடியாமல், வெறும் 3 இடங்களையே பெற்றுள்ளது!

கிரண்பேடி என்ற ஒரு பச்சோந்தி பதவி ஆசைப் பெண்ணை -விளம்பர வியாதியால் வீணே அலைந்த ஒரு பெண்ணை - ஒரே நாளில் கட்சித் தாவ வைத்து, எடுத்த எடுப்பிலேயே முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்து பெண்கள் வாக்குளைப் பெற இந்த மாயமான் காட்சியை நடத்தியும்கூட கை கொடுக்கவில்லை.

அவரே தோற்றுப் போனார்!

கூடு விட்டுக் கூடு பாயும் குணவதிக்கு வாக்குகளால் பாடம் கற்பித்துள்ளனர்!
அவருக்குத் திடீர் பிரோமோஷன் கொடுத்த ஷாவின் வித்தைகளின் விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது!

அதைவிட டில்லி வாக்காளர்கள் இந்தப் பெருத்த தோல்வியை பா.ஜ.க.  அணிக்குத் தந்து, நன்றாகக் கரி பூசி விட்டனர்.

எவ்வளவு கேவலமான பேச்சு! - தேர்தல் பிரச்சாரத்தில்? ஒரு ஆர்.எஸ்.எஸ். கதாகாலட்சேப பெண்ணைக் கொண்டு வந்து மத்திய இணை அமைச்சராக்கியதோடு, அவரை டில்லி தேர்தல் பிரச்சாரத்திலும் களம் இறக்கினர் - பிரதமர்.

அந்தப் பெண் அமைச்சர்  உதிர்த்த நாகரிகமான கருத்து - தேர்தல் பிரச்சார வரலாற்றில் எங்கே தேடினாலும் கிடைக்காது.

அருவருக்கத்தக்க ஆணவப் பேச்சு! பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் இராமனின் பிள்ளைகள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லோரும் முறை தவறிப் பிறந்தவர்கள்

- எத்தகைய கேவலமான இழி நிலைப் பேச்சு! இப்படிப்பட்டவர் மோடி அரசில் இன்னமும் மந்திரியாக தொடருவதும், பிரதமர் மவுனமாக இருப்பதும் சரிதானா?

67 இடங்களைப் பெற்று வியக்கத்தக்க வெற்றி பா.ஜ.க.வுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. பா.ஜ.க. வெறும் மூன்றே இடங்களைத்தான் பெற்றுள்ளது! அப்படியானால்

ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பிரச்சாரகரான அந்தஅமைச்சர் அம்மாவின் கணக்குப்படி டில்லி யூனியன் பிரதேசத்தில் இராமனுக்குப் பிறந்தவர்கள் வெறும் மூன்று தொகுதிகளில்தான் உள்ளனர்.

மற்றவர்கள் எல்லாம்....? நமக்கே எழுதிடக் கை கூசுகிறது!
 
இப்படிப்பட்ட கழிசடைகளையெல்லாம் துடைப்பத் தால் கூட்டி வாரிக் குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டார்கள்!

வார்த்தைகளால் பதில் கூறாமல் வாக்குகளால் செயலில் காட்டி, மூக்கறுத்துள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகுக்கேகூட உச்ச வரம்பு எட்டு நாள்கள்!

ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் புளுகுக்கு எட்டு மாதங்கள் போலும்!
இனியாவது ஆர்.எஸ்.எஸ். பல குரல்  மன்னர்களின் ஆணவம் குறையுமா?
எங்கே பார்ப்போம்!


- ஊசி மிளகாய்



Thursday, February 5, 2015

நீதி போதனை வகுப்பா?

உச்சநீதிமன்றத்தில் டில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சமூகத்தில் அறநெறிகள் குறைந்து வருகின்றன. பணம் சம்பாதிப்பது மட்டுமே சமூகத்தின் குறிக்கோளாக மாறி வருகிறது. இதுபோன்ற சமூகச் சீரழிவை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை நீதி போதனை வகுப்பைக் கட்டாய மாக்கி, மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த வழக்குரைஞர் கள், தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி சிக்ரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசும், மத்திய அரசின் கல்வி வாரியமும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பேகூட இந்தக் கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது இது நல்லதுதானே - நல்லொழுக்கத்தை மாணவர்களாக இருக்கும் பருவத்திலிருந்தே பயிர் செய்தால்தானே அவர்களின் எதிர்காலம் ஒழுக்கம் உள்ளதாக, கட்டுப்பாடு உள்ளதாக இருக்கும் என்று சொல்லக்கூடும்.

நடைமுறையில் பார்க்கும்பொழுது - அதுவும் பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் - சங் பரிவார்க் கூட்டத்தின் அழுத்தத்தில் ஆட்சி நடை போடும் ஒரு சமயத்தில் நீதி போதனை என்பது இந்து மதப் பிரச்சாரப் புயலாகத்தான் வீசும்.

ஏற்கெனவே அரியானாவில் கீதை கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டு விட்டது; கல்வித் திட்டத்தையே இந்து மயமாக ஆக்க இருப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதி போதனை என்றாலே இதிகாசக் கதைகள், புராணக் கதைகளைத்தான் மாணவர்களுக்குப் போதிப்பார்கள்; பல ஆண்டுகளுக்குமுன் உயர்நிலைப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு (Moral Instruction) நடைபெற்றுக் கொண்டு தானிருந்தது. அப்பொழுதும் புராண அளப்புகள்தான்; இராமன் கதை, அரிச்சந்திரன் கதை, குரு பக்திக்கு எடுத்துக்காட்டு கட்டை விரலைக் காணிக்கையாக துரோணாச்சாரிக்குக் கொடுத்த ஏகவலைவன் கதை களைத்தான் கதைத்துக் கொண்டிருந்தனர்.

குசேலனுக்கு 27 குழந்தைகள் - அவன் கிருஷ்ணன்மீது கொண்ட ஆழமான பக்தியின் காரணமாக கிருஷ்ண பகவான் தங்கத்தையும், பொருளையும் வாரி வழங்கி செல்வந்தனாக ஆக்கினார். ஆகவே, மாணவர்களே, பகவான்மீது பக்தி செலுத்துங்கள் என்று சொல்லுவதனால் மாணவர்கள் சோம்பேறிகளாக ஆவதைத் தவிர வேறு வழியே இல்லை!

தந்தை பெரியார்தான் அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால், அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், இருபது வயதிலும், அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தை கள் எட்டாவது இருக்கும்.

இந்தக் குழந்தைகளும் சோம் பேறித் தடியன்போல், ஒரு வேலைக்கும் லாயக்கு இல்லாத மாமிசப் பிண்டங்களாக அல்லவா இருந்திருக்கக் கூடும்! இப்படி இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இதுபோல் இருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகியிருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? (பொன்னி பொங்கல் மலர், 1948)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளாரே! இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? மதம் காட்டும் மார்க்கம், புராணம் காட்டும் புத்தியுரை இதுதானா?

இவற்றையெல்லாம்தானே நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார்கள்? இனிமேலும் சொல்லியும் கொடுப்பார்கள்.

கொள்கைக்காக நஞ்சுண்டு மறைந்த சாக்ரட்டீசை பற்றியா சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?

பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து என்று கூறிய தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றியா எடுத்துக் கூறுவார்கள்?

இப்பொழுதே ஆசிரியர் தினம் என்பதை குரு உத்சவ் என்று சொல்லி வியாசரின் பிறந்த நாளைத்தான் இன்றைய தினம் மத்தியில் ஆட்சியிலிருக்கும் வகையறாக்கள் கொண்டாடுகிறார்கள்.

நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் நாளாக ஏற்காமல், சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி, வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் பிறந்த நாளை(?) கொண்டாடக் கூடியவர்கள்.

இத்தகைய ஓர் ஆட்சியில் நீதி போதனை என்ற வகுப்பு எந்தக் கேவலத்திற்கு - பிற்போக்குத் தனத்திற்கு, மூட நம் பிக்கைக்கு இழுத்துப் போகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

நீதி போதனை வகுப்பில் மதச்சார்பின்மை என்னும் தத்துவத்தின் சீலத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் - இந்து ராஜ்ஜி யத்தைப் படைப்போம் என்று காட்டுக் கூச்சல் போடுவோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத் தில் நீதி போதனை வகுப்பு என்பது மாணவர்கள் மத்தியிலேயே மதவாதத்தைத் திணிக்கும் பேராபத்தில் கொண்டு போய் விடும் - எச்சரிக்கை!

எச்சரிக்கை!!

Wednesday, February 4, 2015

மூளைப் பாதுகாப்பு அரண்கள் - எவை?


முதுமை அடைந்தவர்கள் நோய் களினால் தாக்குண்டு அவதியுறுவது ஏற்கப்பட முடியாத ஒன்று என்றாலும், நியாயப்படுத்தக் கூடியதுதான்.

ஆனால், இளைய தலைமுறையினர் பலரும் பல்வேறு நோய்களினால் பாதிக் கப்பட்டு, வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளுவது அநியாயமான கொடுமை யாகும்!

எதுவும் நம் கையில் இல்லை என்று சாக்குருவி வேதாந்தம் பேசுவது, செய்கின்ற செயலுக்குப் பொறுப்பேற்கத் தெரியாத, அல்லது பொறுப்பின்மை யின் அடையாளமேயாகும்.

வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி, குறிக்கோள், உணவுப் பழக்கவழக் கங்கள் தொடங்கி, மது, சிகரெட் போன் றவைகளை நண்பர்களுடன் விளை யாட்டு, வேடிக்கையாகத் தொடங்கி, பிறகு அது விபரீதமாகிவிட்டதோடு, முதலில் வரவேற்றவர்களே, அவற்றை வழியனுப்பத் துடித்தாலும் விடமாட் டேன் உன்னை, விடமாட்டேன் என்று கெட்டியாய் முதலைப் பிடியுடன் பிடித்துக் கொள்வது இளைஞர் உலகின் இன்றைய வாழ்வின் அலங்கோல மாகும்!

எடுத்துக்காட்டாக சில ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் இதோ:

1. இயந்திர வாழ்க்கையாக சுழலும் நம் இளைஞர்கள் - மாணவர்கள் பலர் - வீடுகளிலிருந்து கல்விக் கூடம், தொழில் பணிமனைகளுக்குக் கிளம்பும் நேரத்தில், காலைச் சிற்றுண்டியைப் புறக்கணித்து, வெறும் வயிற்றுடன் ஓடுகிறார்கள்!
இதன் விளைவு...?

அவர்களது உடலில் சர்க்கரை அளவு (காலை நேரத்தில்) குறைகிறது; மூளைக்குத் தேவையான இரத்த ஓட்ட மும் குறைகிறது; மூளை பாதிப்படை கிறது; இதனால் வேலையில் சுணக்கம். உடலில் கலக்கம், மயக்கம்! சிற்சில நேரங்களில் சோர்வுடன் கூடிய தூக்கம்!

‘Break Fast’  என்பது ஆங்கிலச் சொல், காரணப் பெயர்தான் - பட்டினி யைத் தவிர்க்கும் உணவு முறை இது. இதைத் தவிர்த்தல் அறிவுடைமை ஆகாது - உடல்நலக் கேடு செய்யும். எனவே, இதனை மாற்றிக் கொள்ளுங் கள்.

2. அதிகமான உணவை உண்டு, வயிற்றில் திணிக்காதீர்; அதிகமாக பலூனை ஊதினால், அது வெடித்து விடு கிறது; உடலோ அதனைச் செரிமானம் செய்ய இயலாது தவிர்த்து, பல வகையில் உடலுக்கு எச்சரிக்கை மணி அடித்து, உடலின் செரிமான இயந்திரப் பகுதியை பழுதாக்குகிறது - வயிறு குப்பைத் தொட்டியல்ல, வடிகால் பெறவேண்டிய பயிர், வளரும் கழனி - மறவாதீர்!

இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று எண்ணும்போதே, உடனடியாக இலையை விட்டு எழுந்துவிடுங்கள். அது உங்கள் ஆயுளைக் கூட்டும்.

3. புகைப் பிடித்தல் - இன்றைய இளைஞர்களிடம் மலிந்துள்ள ஒரு மகத்தான தீய பழக்கம்!

புற்று நோய் வந்து ஆயுளைப் பறிப்பதுபற்றிய தகவல்களை அறியாத வர்களா இவர்கள்? இருந்தும் - தெரிந்தே விளக்கை கையில் வைத்து, பாழுங்கிணற்றில் விழலாமா?

இப்பழக்கத்தால் மூளைச் சுருங்கிச் சுருங்கி, அல்சைமர்ஸ் Alzheimer என்ற மறதி நோய்க்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து வரவேற்கும் நிலை அல்லவா ஏற்படுகிறது.

4. அதுபோலவே, அதிகமான சர்க் கரை - இனிப்பு பொருள்களை உண் ணுதல்மூலம், நாம் உண்ணும் மற்ற உணவில் உள்ள புரதச் சத்துகளும், ஊட்டச் சத்துக்களும் நம் உடலில் சேர்வதற்குப் பெரிதும் தடையாக இது அமைந்து விடுகிறது.

இதுவும் மூளையை வெகுவாகப் பாதிக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

5. காற்றுத் தூய்மைக்கேடு. நமது உடலின் மூச்சுக் காற்றான உயிர்க் காற்று (பிராண வாயு) மூளைக்கு அதிகம் தேவை. கெட்ட காற்று - கரியமில வாயு மற்றும் மாசுபட்ட காற்றை நாம் அதிகம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டால் - மூளைக்குச் செல்லவேண்டிய பிராண வாயு குறைகிறது. இதனால் மூளையின் செயல் திறன் - ஆற்றல் குறைகிறது என்கின்றனர் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள்!

6. தூக்கம் என்பதின் முக்கியத்துவம், தேவைபற்றி நம்மில்பலர் அறிந்தவர் கள் அல்லர்.

நல்ல தூக்கம் நம் மூளைக்கு நல்ல ஓய்வைத் தரும். நீண்ட நேரம் தூங் காமல் இருந்தால், அத்தூக்கக் குறைவும் நமது மூளையின் ஆற்றலை வெகு வாகப் பாதிக்கிறது.

உணவுக்கு என்ன விதியோ அதே விதிதான் தூக்கத்திற்கும் (The Same Formula)

(அ) அளவும் குறைதல் கூடாது

(ஆ) அளவும் கூடவும் கூடாது

(இ) குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக் கத்தை நமது உடற் கடிகாரத்திற்கு ஏற்படுத்தி விட்டால், அது நம் வாழ்வை நீட்டும்!

7. தூங்கும்போது சிலர் தலை யணையில் தலை வைத்து முகத்தையும் - போர்வை கொண்டு இழுத்து மூடிக் கொண்டு தூங்குகிறார்கள்.

இது மூளையைப் பாதிக்கும், நல்ல காற்றுத் தேவை குறைகிறது; தூய்மை யற்ற காற்று உள்ளே புகுந்து மூளையைக் கெடுக்கிறது!

அதுபோலவே, நம் உடல் நிலை சரியாக இல்லாதபோதும்கூட சிலர் - அவர்கள் பணிப் போதையாளர்கள் (Workaholic) ஆகி பழக்கப்பட்ட காரணத்தினால், கடுமையான பணி - படித்தல், எழுதுதல், சிந்தித்தல் - இவைகளைச் செய்தால், பாரம் இழுக்க முடியாத இயந்திரமாக மூளை பலவீன மடையும் வாய்ப்பு அதிகம்.

8. எதையும் பயன்படுத்தாமலேயே வைத்தால், அது துருப் பிடித்து விடும்; பயனற்றதாகி விடும். பயன்பாட்டுத் தகுதியை இழக்கும்.

அதுபோலத்தான் மூளையும்கூட! எவ்வளவுக்கெவ்வளவு பயன்படுத்து கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது விரியும் - தெளிவாக ஆணை பிறப் பிக்கும்.

பயன்படுத்தாவிட்டால், அது சுருக்க மடைந்து, செயல்திறனை இழக்கவே செய்யும். எப்பொருளையும் பயன் பாட்டில் வைத்திருக்கத் தவறாதீர்!

9. மிகவும் குறைவாகப் பேசுவது, மூளைக்குப் பாதுகாப்பு என்கின்றனர் அத்துறை மருத்துவர்கள்! அதற்காக அறிவுப்பூர்வமான உரையாடல்களைத் தவிர்த்து விடாதீர்கள்! பெரிதும் கேட் பாளராக இருங்கள்; பேச்சைக் குறைத்து செயலைப் பெருக்குங்கள்!

இவை நம் மூளைப் பாதுகாப்பு அரண்கள் ஆகும்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
 
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



பாண்டே ’பாட்டை’ நிறுத்து!

தினத்தந்தி தொலைக்காட்சியில் ஒருங் கிணைப்பாளராக இருக்கக்கூடிய ரங்கராஜ் பாண்டே தந்தை பெரியாரைச் சீண்டுவது என்றால், அவருக்கு ருசிக்கும் போல் தோன்று கிறது.

விவாதத்தில் பங்கேற்றவர்கள் பேசினால் கூட அதனைப் புரிந்து கொள்ளலாம்.
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தந்தை பெரியாரைக் குறைகூறும் அளவில் 
இவர் பேசுவது ஏன்? இதுதான் ஒருங்கிணைப் பாளரின் வேலையா?

இந்து ஆன்மிகக் கண்காட்சிபற்றிய விவாதம் - இவர் கேட்கிறார் - கடவுளே இல்லை என்று சொல்பவர்கள், பெரியார் உருவச் சிலையை வழிபடலாமா? என்று, தான் மூப்பாகக் கேள்வியை எழுப்புகிறார்.

சொல்லுவதில் கொஞ்சம் அறிவுப் பசை இருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம்.
கூழ் முட்டை போல பேசக் கூடாதல்லவா! பெரியாருக்கு மக்கள் சிலை எழுப்புவது உண்மை!

ஆனால், அதனை வழிபடுவதற்காக அல்ல என்பது ஆரம்பப் பள்ளிக்கூட மாணவன்கூட சொல்லி விடுவானே!
அந்தச் சிலைக்குக் கீழ்தான் ’கடவுள் இல்லை இல்லவே இல்லை’ என்று கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளதே!

பெரியார் கூற்றுப்படி அந்தச் சிலையின் உருவத்தைவிட அதன் பீடத்தில் பொறிக்கப் பட்டுள்ள அந்த வாசகங்கள்தான் மிகமிக முக்கியமானவை.
இந்த நிலையில் அபாண்டமாக மோசடி யாக உண்மையைத் திரித்துக் கூறக்கூடாது திரி நூல்கள்!

ஒருக்கால் உண்மையைத் திரிப்ப தால்தான் இவாளுக்குத் திரிநூல் என்று பெயர் வந்திருக்கலாமோ!

அதோடு விட்டுவிடவில்லை; கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொல்லவில்லையா? என்று அதே பாண்டே தான் சம்பந்தமில்லாமல் எடுத்துக் கொடுக் கிறார்.

அதையாவது ஒழுங்காகச் சொல்லத் தெரிகிறதா? இப்பொழுதாவது தெரிந்துகொள் ளட்டும்.
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்பதுதான் தந்தை பெரியார் சொன்ன வாசகம்.

இது யாரையோ தனிப்பட்ட முறையில் ஏசுவது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது ஒரு தத்துவம் - அறிவியல் ரீதியான கணிப்பு.

உயர்நீதிமன்றப் படிக்கட்டுகள்வரை இதனை எதிர்த்து ஏறிவிட்டார்கள். பொட்டில் அறைந்தது மாதிரி கடவுள் நம்பிக்கை யாளரான உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யாகயிருந்த மு.மு.இஸ்மாயில் தீர்ப்புரை வழங்கியதெல்லாம் இந்தப் பூணூல்களுக்குத் தெரியுமா?

யாருக்குச் சிலை வைக்கப்படுகிறதோ, அவரின் கருத்துகளைத்தான் அந்தப் பீடத்தில் பொறிக்க முடியும்! என்று காலாகாலத்திற்கும் அழியாத கல்வெட்டாக தீர்ப்பு வழங்கிய வரலாறெல்லாம் இந்தக் கத்துக்குட்டிகளுக் கெல்லாம் தெரியுமா?

தந்தை பெரியாரின் மனிதநேயமெல்லாம் தர்ப்பைப் புல்களுக்குத் தெரியும் - ஆனால், அவாளின் இனவெறி அவற்றை மறைத்து விடும்.

நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே! என்று சொல்லுபவர்தானே அவாளின் லோகக் குரு (சந்திரசேகரேந்திர சரஸ்வதி - தெய்வத்தின் குரல் 3 ஆம் பாகம், பக்கம் 148).

இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பெரியார்மீது பழியேற்றத் துடிக்கிறார்கள்.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!

என்று தேவாரம் புகழ் திருஞானசம்பந்த அய்யர் பாடியிருப்பதற்கு என்ன பொருள்?

பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண் களைக் கற்பழிக்க மதுரைவாழ் சிவனே! அருள் புரிவாயாக! என்புது போலவா தந்தை பெரியார் சொன்னார்?

நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் (பாடல் 878) என்ன கூறுகிறது?

வெறுப்போடு சமணர் முண்டர் வாதி இல்
சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரிய னகள் பேசில் போவதே
நோயதாகி,
குறிப்பெனக்கு அடையுமாகில், கூடுமேல்
தலையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா
நகருள்ளானே

என்ற தொண்டரடிப் பொடியாழ்வார்தம் பாடலின் திரண்ட பொருள் என்ன?
சமணர்களைக் கண்ட மாத்திரத்திலேயே தலையை அறுக்கவேண்டும் என்று சீரங்கத்து அரங்கநாதனை வேண்டுகிறானே - இதைப்பற்றி எல்லாம் என்றைக்காவது எடுத்தாண்டது உண்டா இந்தப் பீகாரி?

இந்தச் சில்லுண்டித்தனமெல்லாம் தந்தை பெரியாரிடம் வைத்துக் கொள்ளவேண்டாம்!


ஒன்று கொடுத்து ஒன்பது வாங்கவேண் டியிருக்கும்.
சங்கராச்சாரியார்களின் கதைகளையெல் லாம் வண்டி வண்டியாக ஏற்றவேண்டி வரும்!

யாரோ ஒருவரை அழைத்து அவர் திராவிடர் கழகம் என்று காட்டுவது கயவாளித் தனம் அல்லவா! அவரோ பெரியார் கருத்துகள் அத்தனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உளறுகிறார்.

தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் கொச்சைப்படுத்தும் வேலையை பாண்டே நிறுத்தவேண்டும் - வீண் வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டாம்!


யார் இந்த “மண்ணுருண்டை மாளவியா?


இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடியரசு நாளான ஜனவரி 26இல்தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.

ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.

(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற _ மனிதநேய அடிப்படையில் - வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).

அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி _ பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் _- வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி).

இன்றைய தலைமுறையினரில் பலருக்கு பண்டித மதன் மோகன் மாளவியா யார் என்றே தெரிந்திருக்காது. தெரிய வாய்ப்பில்லை.

இவரது 152ஆவது பிறந்த நாளையொட்டி இவருக்கு மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேரன் கூறுகிறார்!
19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவருக்கு 21ஆம் நூற்றாண்டில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

இவர் ஹிந்து மஹாசபா என்ற சனாதன மதத்தைப் பரப்ப, பாதுகாக்கவே ஒரு அமைப்பை 1915இல் நிறுவியவர்.

RSS என்ற அமைப்புக்கு முன்னோடி இந்த ஹிந்து மகாசபை _- அதன் பெயர் பச்சையாக, வெளிப்படையாகத் தெரிவதை மறைத்து, ஏதோ சேவைக்காகவே தோற்றுவிக்கப்பட்ட தேசிய அமைப்பு என்ற ஒரு உருமாற்றத்தை புனே சித்பவன் -பிரிவு பார்ப்பனர் டாக்டர் ஹெட்கேவாரால், ஹிந்து மஹாசபை தோற்றுவிக்கப்-பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு _ 1925இல் ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கப்பட்டது. அதே நோக்கத்தோடு!

பண்டித மதன்மோகன் மாளவியா என்ற ஹிந்து சனாதனி _- கீழ்க்கண்ட அமைப்பு-களுடன் அதிக தொடர்பு கொண்டவர்.
அ) பிரக்ய ஹிந்து சமாஜ்.

ஆ) பாரத் தர்ம மகாமண்டல்.

இ) சனாதன தர்ம மஹாசபா போன்ற மத அமைப்புகளுடன் இணைந்து, வேத வைதிக சனாதனத்தைப் புகுத்துவதை தமது வாழ்நாள் பணியாகச் செய்தவர்.
இவரது சனாதன உணர்வு எவ்வளவு தீவிரம் என்றால் இவர் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் (1930) கலந்து கொள்ளச் சென்ற போது, ஓர் சனாதன ஹிந்து - கடல் கடக்கக் கூடாது என்ற வேத அய்தீகத்திற்கு மாற்று கண்டுபிடித்து (!) - ஒரு பிடிமண்ணை எடுத்து உருண்டையாக்கி, அதை எடுத்துக் கொண்டே சென்று வெளிநாட்டில் தங்கினால், சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்று வியாக்கியானம்  கூறிக் கொண்டு, கப்பலில் மண் உருண்டையுடன் சென்றவர். எனவே இவரை அக்காலத்தில் மேடைகளில் பேசும்போது மண்ணுருண்டை மாளவியா என்று அழைப்பது வழக்கம்.

(பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது மாளவியாவைப் பின்பற்றுவதில்லை!)
இந்நாட்டின் பாரத ரத்னமாகிய (?) இவரின் மிகப் பெரிய சாதனை _- காசி ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவியது.

பல்கலைக்கழகம் நிறுவியது எல்லோருக்கும் கல்வி தர என்றால், அதற்கு ஏன் ஹிந்து பல்கலைக்கழகம் என்று பெயர் இட வேண்டும்? இதன் விளைவாக அதே உ.பி.யில் அலிகார் என்ற இடத்தில் இஸ்லாமியர்களுக்காகப்  பல்கலைக்கழகம் ஒன்றும் ஏற்பட்டது!

நம் மக்களின் ஒருமைப்பாடு பட்டபாடு இது! கல்விகூட மதக் கண்ணோட்டத்துடன் என்பதே இந்த நாட்டின் தனிச் சிறப்பு!

ஹிந்து மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான சனாதன தர்மத்தின் முக்கியக் கூறான வர்ணாஸ்ரம தர்மம் அதாவது ஜாதி அமைப்பு ஒழியக் கூடாது; நிலைத்து நிற்க வேண்டும் என்று 1929 மே முதல் வாரத்தில் சென்னைக்கு வந்தும், அதன்பின் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளிலும் சென்று தீவிரமான சனாதனக் கருத்துகளைப் பரப்பியவர்.

சென்னையில் 1929 மே முதல் வாரத்தில் வந்து பேசிய பண்டித மதன்மோகன் மாளவியா. ஜாதியை ஒரு போதும் ஒழிக்க முடியாது என்றார்!

1. ஜாதி தர்மம் என்பது ஹிந்து தர்மம் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையிலேயே கூறும் தர்மம்!

2. தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கம், இந்த வேண்டாத வேலையில் -_ ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகிறது; அதனை முளையிலேயே இங்குள்ளவர்கள் கிள்ளி எறிய வேண்டும்.
(இன்று சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள 89 ஆண்டு கால இயக்கம் என்பது கல் போன்ற உண்மை).

3. கோவில்களில் எல்லா  இடங்களிலும் நுழைய வேண்டும் என்று கூறுவது தவறு, எதனால் பிரச்சினைகளும், போராட்டங்களும் ஏற்படுகின்றன என்றால், யார் யார் (எந்தெந்த ஜாதிக்காரர்) எங்கெங்கே, எதுவரை செல்லலாம் என்று நன்கு விளம்பரப்படுத்தி, அறிவிப்புச் செய்யாததாலேயே ஏற்பட்ட தீய விளைவு அது என்று கூறி, ஜாதிமுறைகளை நியாயப்-படுத்தினார்.

4. குழந்தை மணம் (பால்ய விவாஹம்) தடை பற்றி விவாதம் எழுந்தபோது, குழந்தை மணம் தேவை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறி வாதாடியவர் பண்டித மதன்மோகன் மாளவியா.

இவரை 1929 மே முதல் வாரம் (8.5.1929) கோட்டயத்தில் நடந்த S.N.D.P. யோகம் என்ற சிறீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையார் நடத்திய மாநாட்டிற்கு அழைத்துப் பேசச் சொன்னபோது, அவர் ஜாதியை ஒழிக்க முடியாது; அது வீண் வேலை, தீண்டாமைக்கு ஹிந்து சாஸ்திரங்களில் இடமில்லை என்று கூறியதோடு, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்-களையும் தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்ப சுத்தி மூலம் அழைத்து வர வேண்டும்; வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசியபோது அங்கே கூடியிருந்தோர் பொறுமை இழந்து, எதிர்க் கேள்வி கேட்டனர்!

அவர்கள் ஹிந்து மதத்திற்குத் திரும்பினால் எந்த ஜாதியில் அவர்கள் வைக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் கேட்டபோது, மாளவியா பதில் அளிப்பதைத் தவிர்த்தார்! கீதை சொல்லும் குணகர்மப்படி சிறந்தவர்களை உயர் ஜாதியில்  வைப்பார்களா என்று கேட்டனர்.

வைதீக சனாதனிகளும் இவரது குறிப்பிட்ட அளவு தீண்டாமை எதிர்ப்புப் பேச்சைக்கூட ஏற்காமல், எதிர்த்தனர்.

சென்னையில் திரும்பி வந்துபேசும் போது, மதராஸ் சாஸ்திரிகள் ஆன பார்ப்பனர்-களிடம் வேதத்தில் தீண்டாமைக்கான சுலோகங்கள் இல்லை என்று கூறி மாளவியா சில சுலோகங்களையும் கூறினார். மதராஸ் சாஸ்திரிகளோ அதை மறுத்து எங்களிடம் ஆதாரம் உண்டு. வேதம் சனாதன மதம் தீண்டாமையைக் கூறியுள்ளது என்று பதில் கூறினர்.

ஆதாரம் காட்ட  முடியுமா உங்களால் என்று இந்தப் பார்ப்பனர்களை அவர் கேட்க, அவர்கள் அச்சிட்ட சமஸ்கிருத வேத சாஸ்திர புத்தகங்களைக் கொண்டு வந்து காட்ட, இவர் வேறு வழியின்றி, அடுத்து எப்படியிருந்தாலும் இப்படிப்பட்ட மக்களிடம் பரிதாபம் காட்ட வேண்டாமா? என்று அய்யோபாவம் ஆர்கியுமெண்டைப் பேசி, பின்வாங்கினார்.

5. சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்கு வதற்குப் பதிலாக ஹிந்தியைப் பொது மொழியாக வைக்க வேண்டும் என்று (ஒரு தந்திரமாக) பேசியவர்.

மேற்காட்டிய அத்துணையும் அந்தக் கால 1929 ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளன _- குடிஅரசு -”Revolt’ ஏடுகளில் இவரது பேச்சுகளையும் -_ கருத்துகளையும் மறுத்து பல கட்டுரைகள் வெளிவந்து விளாசித் தள்ளியுள்ளனர் _ ஆதாரப்பூர்வமாக! உ.பி.யைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதியே இன்று அவரது கருத்தாக (இணையத்தில்) வாஜ்பேயிக்கும், மதன்மோகன் மாளவியாவுக்கும் பாரத ரத்னா; விருது அறிவித்தது எவ்வகையிலும் ஏற்கக்கூடியது அல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்!
எனவே,

1. இரு விருதுகளும், இரு பார்ப்பனப் பெரு மக்களுக்கு,

2. ஜாதி வர்ண தர்மக் காப்பாளர்களுக்கு,

3. சனாதனப் பாதுகாவலர்களுக்கு,

4. மக்களின் ஒருமைப்பாட்டை உடைத்து - மத அடிப்படையில், ஜாதி அடிப்படையில், அவர்களை வைத்திருப்பது நீடித்து நிலைத்து இருப்பதற்கு.

5. மதமாற்றங்களுக்கு முன்னோடித்தனத்தின் சன்மானம் - இத்தியாதி! இத்தியாதி.

காந்தியைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.-காரரான நாதுராம் கோட்சே என்றால், கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல, அவர் இந்து மஹா சபையைச் சேர்ந்தவர் என்று வெகு சாமர்த்தியமாக பிஜேபிகாரர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் கூறுவதுண்டு.

அப்படியே பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த ஹிந்து மஹா சபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? படுகொலைக்குப் பரிசு பாரத ரத்னாவா?

மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆறு மாத நிறைவு எத்தனை சாதனைகளைக் குவிக்கிறது -  பார்த்தீர்களா? _ புரிந்து கொள்ளுங்கள்!

இளைஞர்களே, இளைய தலைமுறையாக பழைய வரலாற்றுச் சுவடுகளை உற்று நோக்கி உண்மையை உணருங்கள்!

ஏமாந்தவர்களாக இனியும் இரோம் என்று விழிப்புற்று எழுக! எழுகவே!!

கி.வீரமணி,
ஆசிரியர்

-----------------------

பிப்ரவரி 01-15


பெரியார் தம் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க சூளுரைப்போம்!

இன்று அண்ணா அவர்களின் 46ஆம் ஆண்டு நினைவு நாள்

பெரியார் தம் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க சூளுரைப்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், அண்ணா தலைவராக ஏற்றுக் கொண்ட தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதைச் சமூகத்தைப்  படைக்கச் சூளுரைப்போம் என்று ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் தலை மாணாக்கராகத் திகழ்ந்து,  உலக வரலாற்றில் எங்கு தேடினும் கிடைக்காத ஒரு சரித்திரச் சாதனையை நிகழ்த்தி, தனி ஒரு வரலாற்றையே உருவாக்கிய பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 46ஆம் நினைவு நாள் இன்று!

என்ன அந்த சரித்திரச் சாதனை தெரியுமா, நண்பர்களே? தன்னை உருவாக்கிச் செதுக்கிய தலைவனுக்கு, தான் முதன் முதலாக உருவாக்கிய (தி.மு.கழக) ஆட்சியை, சட்டமன்றத்திலேயே பதிவு செய்யும் வகையில் இந்த அரசே தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு என்று பிரகடனப்படுத்திய வரலாறு அது! அத்தகைய தலைவரின் வாழ்நாளில், அத்தலைவரே பூரித்து, இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி, (சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்செய்தியை நேரில் சென்று தெரிவித்தபோது) எனக்கு வலி குறைந்தது; மகிழ்ச்சி என்று சொன்ன வரலாறு எங்காவது உண்டா?

திராவிடர் இயக்க ஆட்சியின் சாதனை இது!

அத்தகைய அண்ணாவின் ஓராண்டு கால ஆட்சி - அசோகன் ஆட்சி, பவுத்த நெறியைப் பரப்புகின்ற பணி செய்ததைப் போல, அண்ணாவின் ஆட்சி - பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் - திராவிடர் இயக்கத்தின்  - கொள்கை லட்சியங்களை நிறைவேற்றிடும் வண்ணம் செய்த முப்பெரும் சாதனைகள் சரியான அடிக்கட்டு மானத்தை இட்ட, லட்சியங்களை கோட்டையில் கொலுவிருக்கச் செய்தவை ஆகும்!

1. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் (முன்பு நடந்தவை உட்பட) வழங்கியது.

2. சென்னை ராஜ்யம் பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றச் சட்டம்.

3. பள்ளிகளில் தமிழ் - ஆங்கிலம்  என்ற இரு மொழிக் கொள்கை மூலம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை முறித்து தடுத்த திருத்தொண்டு

மற்றும் ஜாதி ஒழிப்புக்கு ஜாதி மறுப்புத் திருமணங் களுக்கு தங்கப் பதக்கப் பரிசு, சமூக நீதிக்கு பாதுகாப்பான ஒரு பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஆணையம் அமைக்கத் துவக்கப் பணிகள் - தகுதி திறமை பேசி, மருத்துவக் கல்லூரிக்கு மனுபோட உயர்த்தப்பட்ட மதிப் பெண்களை பழைய படியே குறைத்து, வாய்ப்பற்றவர் களுக்கு அரிய வாய்ப்புக்களை பாதுகாக்க சமூகநீதி காப்பு,

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைநகர் சென்னையில்  வரலாறு காணாத பெருமை - சிறப்புடன் நடத்திய சாதனை, இப்படி எண்ணற்ற சாதனைகள் - குறுகிய காலத்தில்.

இத்தகைய அண்ணா, அடிப்படை கட்டுமானமான பகுத்தறிவுக் கொள்கைகளை, மதச் சார்பின்மையைக் காக்க, அரசு அலுவலகங்களில் கடவுள் படம் வைக்கக் கூடாது என்ற சுற்றறிக்கை. (ஆச்சாரியார் போன்றவர்களின் எதிர்ப்பையும் கூட பொருட்படுத்தாது செய்தல்) போன்ற பல சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர்.

அய்யாவிடம் அண்ணா கேட்டது

ஆட்சிக்கு வந்த பிறகு அய்யாவைப் பார்த்து பொது மேடையிலேயே, அதிக அதிகாரமில்லாத இவ்வாட்சியி லிருந்து நடத்தவா? அல்லது இதை விட்டு விட்டு முன்புபோல தங்கள் பின்னால் வந்து ஒரு தொண்டனாகப் பிரச்சாரப் பணி செய்யவா என்று கேட்க, அதற்கு அவரது தலைவரான தந்தை பெரியார்.

இப்பணியை நானும் தோழர்களும் தொடருவோம்; நீங்கள் ஆட்சியில் தொடருங்கள் ஒரு நாள், ஒரு மணி, ஒரு நிமிடம் கூட குறைவில்லாமல் ஆட்சியிலிருந்து முடிந்த நல்லவைகளை நாட்டு மக்களுக்குச் செய்யுங்கள் என்று கூறிய காட்சி - நமது மனதில் ஒளிபட நிற்கிறது இன்றும்!

ஆரிய மாயை இன்று...

அத்தகைய அண்ணா பெயர் வெறும் திரையாகப் பயன்படுகிறது!

ஆரிய மாயையைக் கண்டு, வெகுண்டு உரைத்த தலைவர் பெயரிலேயே அண்ணா, ஆரியம் சார்ந்த கலாச்சாரத்தினையும், மூடநம்பிக்கைகளையும் முனைப் புடன் நடத்துவதாக ஆக்கி, காரணப் பெயரான ஒரு தலைவரை வெறும் இடு குறிப்பெயராக்கிய வேதனையில், வெட்கப்பட்டுத் துடிக்கின்றன நமது நெஞ்சங்கள்!

ஏனோ இந்த கொள்கைப் பஞ்சங்கள் என்றாலும் தி.மு.க. என்னும் இரும்புக் கவசம் இன்னும் இருக்கிறது, கலைஞர் தலைமையில்.
சூளுரைப்போம்!

அண்ணா நினைவு நாளில் அவர் விரும்பிய பெரியா ரின் சுயமரியாதைச் சமூகத்தை அமைக்க அனைவரும் சூளுரைத்து, சுயமரியாதைச் சூடு பெறுவோமாக!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்
முகாம்: சிங்கப்பூர்
3-2-2015

Sunday, February 1, 2015

குழந்தைகள் பெறுவதைக் குறைத்தல் அவசியம்

கர்ப்பத்தடை
- தந்தை பெரியார்

குழந்தைகள் பெறுவதைக் குறைத்தல் அவசியம்


ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும் பலமும், வீரமும் சுயமரியாதையும் அறிவுமுள்ள வர்களாக இருக்க  வேண்டுமானால் அவர்கள் குழந்தைப் பருவம் முதற் கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போஷிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும் வளர்க்கப்பட வேண்டும்.  அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டு மானால் பெற்றோர்கள் தங்கள் தகுதிக் கும் சக்திக்கும், போதுமான அளவே குழந்தைகள் பெறுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.  அப்படி இல்லாமல் சக்திக்கும் அளவுக்கும் மீறி பெற் றோர்கள் அதிகமாகக் குழந்தைகள் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத்திற் குள்ளாவதுடன் குழந்தைகளும் பல வீனர்களாகவும் சௌகரிய மற்றவர் களுமாகி அவர்களைக் கொண்ட தேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகிவிடுகின்றார்கள்.

உதாரணமாக, நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுவோமேயானால் நாளுக்குநாள் ஜனங்களின் எண் ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மை யோர்கள் தொழிலில்லாமல், வாழ் வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் காப்பாற்றவும், படிப்பிக்கவும், சக்தியில்லாமல் கஷ்டப் பட்டுக்கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பதும் நாம் அனுபவித்தும் பார்த்தும் வருவதுமானச் சம்பவங்களாகும்.  சில குழந்தைகளைக் கொண்ட சிறிய குடும் பங்களுக்கும் அதிகமாக பிள்ளைக் குட்டிகளைக் கொண்ட பெரிய குடும் பங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை நாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிகின்றோம்.  முதலாவது, பிள்ளை களை அதிகமாக பெறப்பெற பெற் றோர்களின் சுகபோகங்கள் தானாகவே குறைந்துகொண்டு வருகின்றன.  அது போலவேதான் ஒரு நாடும் தனது சக்திக்கு மேற்பட்ட மக்களையுடைய தாக ஆகிவிட்டால் அது சதாகாலமும் பஞ்சத்தினாலும் நோயினாலும் துன்பப் பட்டுக்கொண்டிருக்க வேண்டியதோடு அது தன் அழகையும் முற்போக்கையும் இழந்து சுயமரியாதையையுமிழந்து தயங்க வேண்டியதாகி விடுகின்றது.

இந்த உண்மையை அறியாமலே இதுவரை அநேக சமுக சீர்திருத்தக் காரர்கள் என்பவர்களும். பொருளாதார சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களும் தங்கள் நாட்டின் மக்கள் சமுகத்தின் முற்போக்கிற்கும் பொருளாதார முற் போக்கிற்கும் வேறு எத்தனையோ துறைகளில் உழன்று கஷ்டப்பட்டும் பயனடையாமல் சலிப்பின் மீது கடைசியாக ஒரு நாட்டு மக்களை மற்றொரு நாட்டுமக்கள் வெறுக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். சதா காலமும் பிறர் மீதே குற்றம் சொல்ல வேண்டியவர்களாகவுமாகி விட்டார்கள்.  நன்றாய் வாழுபவர்களின் மீது பொறாமை படவேண்டியவர்களாகவும், மற்றவர்களைப் பட்டினி போட்டால் தான் தாம் வாழலாம் என்று நினைக்க வேண்டியவர்களாகவும் ஆகி விட்டார்கள். ஆனாலும், சமீபகாலத்தில் சில நிபுணர்கள் இவ்விஷயங்களை நடுநிலைமையிலிருந்து ஆராய்ச்சி செய்து பார்த்து இவ்விதக் கொடு மையான நிலைமைக்கு உண்மையான காரணங்களைக் கண்டு பிடித்திருக் கிறார்கள்.

அஃதென்னவென்றால், முதலில் குறிப்பிட்டதான அதாவது ஜனங்கள் அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்று ஜனசமுகத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது என்பதேயாகும். ஆகவே, இந்த முடிவானது இப்போது மேல் நாட்டின் அறிவாளிகள் பலராலும், மற்றும் பொது நல சேவைக் காரர்கள் பலராலும், வைத்திய நிபுணர்கள் பொருளாதார நிபுணர்கள் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இத்துறைகளில் இறங்கி, மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து மிக்க முற்போக்கான மார்க்கங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்றியும், இந்தத் தத்துவத்தை அநேக அறிஞர்கள் தங்கள் வாழ்க்கைகளில் அமலுக்குக் கொண்டு வந்து கொண்டுமிருக்கின்றார்கள்.  அதாவது மேல் நாட்டார்களின் படித்த வர்கள் என்று சொல்லப்படும் கூட்டத் தார்களிலேயே அநேகர் கர்ப்பம் தரிக்காமலிருக்கத்தக்க பல உபாயங்களைக் கையாண்டு வருகின்றார்கள்.  இதற்காகப் பல சாதனங்களையும் கண்டுபிடித்து பொது ஜனங்களுக்கு அறிவித்து சில சாதனங் களை வினியோகித்தும்  வருகின்றார்கள்.  ஆனால் சாதாரண ஏழை ஜனங்களும், பாமர ஜனங்களும் இதன் உண்மைத் தன்மையை உணரவோ, பயன் அடைய முடியாமலோ இருந்து வருகிறார்கள் உண்மையிலேயே இம்மாதிரி அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் கருத்தரிக்க விடாமல் - இருக்கக் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் மிக்க ஏழை மக்களேயாவார்கள்.

ஆனால், இவர்களோ, இம்மாதிரியான அதாவது கருத்தரிக்காமல் இருப்பதற்கான காரியங்களைப் பற்றிப் பேசுவது கூட நாகரிக விரோதமான பேச்சு என்று கருதுகின்றார்கள். அறிவில்லாத பொது ஜனங்களும் மத விஷயத்திலும், கடவுள் விஷயத்திலும் கண் மூடித்தனமான மூட பக்தியுள்ளவர்களும் இதை மத விரோதமானதென்றும், பாவகரமானதென் றும், கடவுள் கோபத்திற்கு இலக்கான காரியமென்றும்பேசி இந்தத் தத்துவங்களை எதிர்த்து வருவதால் ஏழை மக்களும் பாமர மக்களும் இப்படி ஒரு மார்க்கம் இருக் கின்றது என்று அறியக்கூட சவுகரியமில் லாமல் போய்விட்டது.  ஆனால், மேல் நாட்டில் டாக்டர் மோரீஸ்டோப்ஸ்  என்கின்ற ஒர் ஆங்கிலப் பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து எவ்விதப் பழிப்புக்கும், எதிர்பிரச்சாரத்திற்கும் அஞ்சாமல் இவ்விஷயத்தைக் கர்ப்பத் தடையை பிரச்சாரம் செய்யத் துணிந்ததன் பயனாய், இப்போது இவ்விஷயம், மேல் நாட்டில் எங்கும் சாதாரணமானதும், சகஜமானதுமான விஷயமாய் பேசிக் கொள்ளும்படியாக ஆகிவிட்டது.  அது மாத்திரமல்லாமல், மேல் நாடுகளில் பல இடங்களில் பிள்ளைப் பேற்றை தடுக்கும் படியான வசதிகள் சம்பந்தமாக, பல வைத்திய சாலைகள் ஏற்படுத்தப்பட்டும் இருக்கின்றன.  கருத்தரிக்காமல் இருக்க வேண்டுமென்ற ஆசை உடையவர் களுக்கு அம்மார்க்கங்களைக் கற்றுக் கொடுப்பதுடன் அதற்கு வேண்டிய சாதனங் களையும் கையாளும் முறைகளையும் போதிக்கின்றார்கள். 

 மருந்து வியாபாரக் கடை முதலியவைகளில்,  கர்ப்பத்தடைக்கு, அனுகூலமான மருந்துகளும், சாதனக் கருவிகளும் விற்பனை செய்யவும் ஏற் பாடுகள் செய்து இருக்கின்றார்கள்.

இவைகள் வைத்திய நிபுணர்களாலும், சமுகச் சீர்திருத்த ஆராய்ச்சிக்காரர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதால் இதைச் சட்ட விரோதமென்று யாரும் சொல்லத் துணியவில்லை.  இது எவ்விதத்திலும் சட்டவிரோதமான காரியமுமல்ல என்பதை யாவரும் உணர வேண்டும்.  ஏனெனில், சட்டவிரோதமான காரியம் என்பதெல்லாம் அன்னியனுக்கும் தனக்கும் துன்பத்தையும் நஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய காரியங்களுக்குத்தான் சொல்லலாம். இதனால் யாருக்கும் எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ அதிருப்தியோ ஏற்படுவதற் கில்லை.

அன்றியும், இந்தக் கர்ப்பத்தடை முறை என்பது கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கப்பதற்கு உரியதே ஒழிய, கர்ப்பம் ஏற்பட்ட பிறகு அதனை கலைப்பதற்காக ஏற்பட்டதல்ல.  அதற்கு இந்த முறைகள் பயன்படவும் மாட்டாது.  அன்றியும், கர்ப்பம் ஏற்பட்ட பிறகு கலைப்பது என்பது தாயின் சரீர சக்திக்கும், சில சமயங்களில் உயிருக்கும், ஆபத்தை விளைவிக்கக் கூடியதாயிருப்ப தால் கண்டிப்பாக அந்த முறையை யாரும், கையாளக் கூடாது  என்பதே நமதபிப் பிராயம். கர்ப்பத்தைக் கலைக்கும் முறை எதுவானாலும் அது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டியதேயாகும்.  தேசப் பொது நன்மையையும், சமுக நன்மையையும் மாத்திரமே உத்தேசித்து, அறிஞர்கள் கர்ப்பத்தடையைக் கண்டுபிடிக்கவில்லை மற்றும் என்னென்ன காரியங்களுக்கு கர்ப்பத்தடை அவசியமென்பதையும் சற்று விளக்குவோம்.

பெண்ணானவள் திட சரீரியாயில்லா மலும், காயலாவுடனும், சரியான அமைப்புப் பொருந்தி சரீரமாயில்லாமலும் இருக்கின்ற சமயத்தில் கர்ப்பம் தரித்து, பிள்ளைகளைப் பெறுவது என்பது அவளுக்கு மிகவும் அபாயகரமானதாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும்.   உதாரணமாக. ட்சயரோகத் தாலும் நீரிழிவு வியாதியாலும், நெஞ்சு துடிதுடிப்பினாலும்,  பீடிக்கப்பட்டிருக்கின்ற பெண்களும், பிள்ளை பெறும் துவாரம் அதிகமாக சிறுத்து இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிப்பது மிக்க ஆபத்துக்கும் கஷ்டத்திற்கும் உள்ளான கெடுதியாகும். தொற்று வியாதி, மேக சம்பந்தமான வியாதி, காக்கை வலிப்பு, பைத்தியம், கேனம் முதலிய வியாதியுள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதும் பயனற்றதும் வாழ்க்கையில் மிக்க கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதுமாகி விடும். பிரசவத்தினால் சரீரமெலிவும், பலக்குறைவும் ஏற்படுகின்ற சுபாவசரீர முடையவர்கள்  சுபாவசரீரமுடையவர்கள் மறுபடியும், மறுபடியும் கர்ப்பமானால், சரீரம் மிகவும் பலவீனமடைந்துவிடும். ஒரு ஸ்திரீ ஒரு குழந்தையைப் பெற்று, அது நன்றாக பால் குடித்து வளர்வதற்கு முன்னாலும் முதலில் கர்ப்பமாகி பிள்ளை பெற்ற பலவீனம் நீங்குவதற்கு முன்பும் கர்ப்பமாகி விட்டால், முதல் குழந்தை சௌகரியமில்லாமல்  மட்டு மல்லாமல்  மறு குழந்தையைப் பெறு வதற்கும் போதிய சக்தியில்லாமல் போய்விடும்.

பெண்ணும், ஆணும் தகுந்த வயது அடைவதற்கு முன் அதாவது பெண்கள் 22 வயதுக்கு முன்னும், புருஷர்கள் 25 வயதுக்கு முன்னும், சதிபதிகளாயிருக் கும் போது பெண்கள் கர்ப்பம் தரித்து விட்டால், அந்தக் குழந்தைகள் மிக்க இளமைப்பருவத்தின் காய்ப்பாகி உறுதி யற்ற சரீரக் கட்டுடையதாகி விடும்.  

குடும்பத்திற்குப் போதியவரும்படி இல்லாத நிலையில் பெண்கள் பிள்ளை களைப் பெற்று விட்டால் குடும்பத்திற்குத் தரித்திரமும், கஷ்டமும் அதிகமாகி வாழ்க்கை திருப்தியுமற்றதாகி  விடும். அன்றியும், ஆண், பெண் ருதுசாந்தியான வுடன் பெண் கர்ப்பமாகிவிட்டால் கொஞ்சகாலமாவது தம்பதிகள் இயற்கை இன்பம். கல்வி இன்பம் அடைவதற்குச் சாவகாசமில்லாமல் போய்விடும். இவ் வளவு விஷயங்களில், பெண்கள் கர்ப்ப மாவது அசம்பாவிதமா யிருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கு இந்தக் கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக் கின்றது.  என்னவெனில் பெண்களுக்குக் கர்ப்பத்தை உண்டாக்குகின்ற பொறுப்பு மாத்திரம் ஆணை சேர்ந்ததாயிருக்கின் றதே தவிர, மற்றபடி கர்ப்பமான நிமிஷ முதல் பிள்ளை பெறும் வரை, அதன் பொறுப்பு முழுவதும் பிள்ளை பெறும் போது அடையும் பிரசவ வேதனையும், அதனால் உண்டாகும் ஆபத்துகளும்  பெண்களே  அடைகின்றார்கள்.  பிள் ளையைப்பெற்ற பின்பும், தாயானவள் தான் இரத்தத்தைப் பாலாக்கி, குழந்தை களுக்கு ஊட்டி வளர்க்கின்றாள்.

குழந்தைக்கு வரும் வியாதிகளுக்குக் தானே பத்தியமிருக்க வேண்டியவளா கிறாள்.  அதைச் சுமந்து போஷிக்கும் வேலை முழுவதும் தாயே செய்ய வேண்டியவளாகிறாள்.  பெண்ணானவள் ஒன்று இரண்டு பிள்ளைகளைப் பெற்ற வுடனேயே சகல விதசுகபோகங்களிலும் விரக்தியுடையவளாகிவிட வேண்டிய வளாகிறாள்.

குழந்தை பெற்ற உடனே குழந்தையின் போஷனையையும், வளர்ச்சியையும் உத்தேசித்துத் தனது சுதந்திரத்தைவிட்டு புருஷனுக்கும். குடும்பத்திற்கும் அடிமையாகிவிட வேண்டிய வளாகிறாள்.

புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும் பெண் ஜாதி ஒரு புருஷனைத் தவிர, வேறு புருஷனை எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த  தடையாயி ருக்கின்றது.

பிள்ளைகளைப் பெறுவதாலேயே பெண்களுக்கு சுதந் திரம், மானம், அறிவு எல்லாவற்றையும் விட்டு விட நேரிடுகின்றது.

சிறிதளவா வது  சுயேச்சையுள்ள பெண்ணாய் விளங்குவதைவிட, பிள்ளைகளைப் பெறும் அடிமையான இயந்திரமாகவே இருக்க வேண்டியதாய் இருக்கின்றது.  கூறி வந்தவைகளாலும், இதுவரை இன்னும் பல காரணங்களாலும் பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது முக்கியமான காரியமாகும் என்று சொல்லுகின்றோம்.

ஆகவே, இந்தத் தலையங்கத்தில் கர்ப்பத் தடையின் அவசியத்தைப் பற்றி ஒருவாறு விளக்கினோம்.  இனி அடுத்த வியாசத் தில் அதன் உபாயங்கள் என்ன என் பதைப் பற்றி நிபுணர்கள் என்பவர்களின் அபிப் பிராயத்தை எடுத்து விளக்கம் எண்ணியுள்ளோம்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை உச்சநீதிமன்றம் கண்டனம்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்க  மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, பிப்.1 பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான வன்முறை சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.தேவ் தலைமையிலான அமர்வு மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளது.  குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, குழந்தைகள் கடத்தலையும், அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதையும் தடுப்பது தொடர்பாக மேற்கொள் ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி பிறப்பிக்கபட்ட உத் தரவை, மாநில அரசுகளுக்கு டிசம்பர் 12-ஆம் தேதிதான் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த மெத்தனப்போக்கு கவலையளிப்பதாக உள்ளது.

மேலும் இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலை யிடாமல் இருக்கிறது. பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தைகடத்தல் போன்ற குற்றங்கள் மீது மத்திய அரசு மாநில அரசுகளின் மீது பழியைப் போட்டு தனது கட மையில் இருந்து ஒதுங்கி விடுகிறது; இது நாட்டை வழி நடத்திவரும் அரசுக்கு அழகான செயலல்ல. பெண் களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இதைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...