Saturday, March 31, 2012

அண்ணாவை அவமதிக்காதீர்!


- மின்சாரம்
அண்ணா என்ற பெயர் அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத் தப்படுகிறது. திராவிட என்ற ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான இன அடையாளத் தத்துவம் தரைமட்டமாக்கப்படுகிறது.
பவுத்தமார்க்கத்தில் பார்ப்பனர்கள் புகுந்து திரிபுவாதப் புயலை நுழைத்து சேதப்படுத்தியதுபோல திராவிடர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் வேலை வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் (6.10.1929) தீர்மானம் ஒன்றை  ஏ.பி. பாத்ரோ முன்மொழிந்தார். தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆர்.கே. சண்முகம் அவர்களும் கடுமையாக (ஆங்கிலத்தில் பேசி) எதிர்த்தார்.
மக்கள் பிறவியில் ஜாதி உண் டென்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்தப் பார்ப்பன ரையும் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் சேர்ப்பது நமக்குப் பயன்படாது என்றார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களின் உரைக்குப் பிறகு கூட்டத்தின் தலைவர் முனுசாமி நாயுடு வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பாத்ரோவின் தீர்மானத்துக்கு வெறும் ஏழு வாக்குகளும், அதனை எதிர்த்த தந்தை பெரியார் அவர் களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வாக்கு களும் கிடைத்து தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
இரண்டாவது தீர்மானமாக பார்ப்பனர்களைச் சட்டசபையில் சேர்த்துக்  கொள்ளலாம் என்பதாகும். அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் அந்தத் தீர்மான மும் தோற்றுப் போனது.
(குடிஅரசு 13.10.1929)
நெல்லூர் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் குடிஅரசு இதழில் பின் வருமாறு எழுதினார் (22.9.1929).
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால், அவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட் டது போல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் ஆகிவிடும் என்பதை மட்டும் அழுத்தந் திருத்தமாய் உறுதியாகச் சொல்கிறோம் என்று எழுதினாரே!
1929இல் தந்தை பெரியார் எச்சரித்ததை இப்பொழுது 2012இல் க(ச)ட்சியாகப் பார்க்க முடிகிறது.
திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்தபோது திராவிடர் என்பதற்குப் பதிலாக திராவிட என்பதோடு நிறுத்திக் கொண்டு பார்ப்பனர்களும் தி.மு.க.வில் சேரலாம் என்ற கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டது.
வி.பி. இராமன் போன்ற பார்ப் பனர்கள் தி.மு.க.வில் சேர ஆரம்பித் தனர். ஆனாலும் தேர்தலில் ஈடுபட முடிவு எடுத்த திமுக இதுவரை எந்த ஒரு பார்ப்பனரையும் திமுக வேட் பாளராக நிறுத்தவில்லை என்பது இமயமலை போன்ற உண்மையாகும். தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் உண்டா? என்பதுதான் அந்தக் கேள்வி.
என்னை நம்பி யாரும் வர வில்லையே! என்பதுதான் அண்ணா அவர்கள் அளித்த அழகான பதில். இன்றுவரை தி.மு.க.வில் இந்த நிலை உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
தி.மு.க.விலிருந்து பிரிந்து அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்.
ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். எச். வெங்கட்ரமண ஹண்டே என்ற பார்ப்பனருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவறான வழிகாட்டி, தீராப் பழியைத் தேடிக் கொண்டார். கட்சிக்கு செல்வி ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணியை கொள்கை பரப்புச் செயலாளராகவே ஆக்கி, திராவிடர் இயக்கத்தின் ஆதார அடி வேர்மீதே வெடி குண்டை வீசினார்.
ஆம், வரலாற்றில் பவுத்த மார்க்கத்துக்குப் பார்ப்பனர்களால் ஏற்பட்ட பாதகம் அ.இ.அ.தி.மு.க.வின் பார்ப்பனத் தன்மை மூலம் ஏற்பட்டு விட்டது.
அதன் அப்பட்டமான அடை யாளம்தான் சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வரக் கூடாது; ராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வழக்குத் தொடுத்ததாகும்.
இப்பொழுது அடுத்த கட்டமாக, ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதமாகும். (28.9.2012).
அண்ணாவின் பெயரைக் கட்சி யிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இப்படிஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதி இருப்பது எந்த வகையில் சரி?
அண்ணா ராமனை ஏற்றுக் கொண்டவரா?
இராமாயணத்தை அண்ணா அவர்கள் ஒப்புக் கொண்டதுண்டா?
தீ பரவட்டும்! என்ற சொல்லை யாவது செல்வி ஜெயலலிதா கேள்விப் பட்டு இருப்பாரா? தீ பரவட்டும் என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளதே அறிவாரா?
டாக்டர் ரா. பி. சேதுபிள்ளை அவர் களோடு சென்னையிலும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடு சேலத்திலும்  இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும்  கொளுத்துவதா கூடாதா? என்ற விவாதப் போரில், கொளுத்தப்பட வேண்டும் என்ப தற்கான காரண காரியங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துத் திணற அடித்த வரலாறு எல்லாம் அறிந்தவரா இந்த அம்மையார்?
திராவிடர் இயக்கப் பெரும் புலவர் குழந்தை அவர்களை அறிவாரா? அவர் எழுதிய இராவண காவியம் பற்றி கேள்வியாவது பட்டதுண்டா?
அந்த நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது தெரியுமா? பிறகு கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அந்தத் தடை நீக்கப்பட்ட வரலாறெல்லாம் புரியுமா?
புலவர் குழந்தையின் இராவண காவியத்துக்கு அண்ணா தந்த அணிந்துரையை ஒருமுறை செல்வி ஜெயலலிதா படித்துப் பார்க்கட்டும்! -- இதுவரை படிக்காவிட்டால் படிக்குமாறு இந்த நேரத்தில் பரிந்துரையும் செய்கிறோம்.
இராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர் களுக்குத் தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது.  தாசர் நிலைகூடாது தமிழா! இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா! என்று அறிவு றுத்தவே இராவண காவியம் நூல்.
இராவணகாவியமும், இராமா யணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது (இராவண காவியம்) இரா வணனைத் தேவனாக்க அல்ல,  தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே!
இராமாயணம்பற்றி அண்ணாவே இவ்வளவு எழுதியிருக்கிறார் என்றால், தந்தை பெரியார் அவர்கள் எழுதிக் குவித்ததோ. அளவிடற்கரியது. குறிப்பாக தந்தை பெரியார் எழுதி இலட்சக்கணக்கில் வெளிவந்திருக்கும் இராமாயணப் பாத்திரங்கள் இராமாயணக் குறிப்புகள் என்ற இரு நூல்களைப் படித்தாக வேண்டும்.
சச்சு இராமாயணம் என்று அது இந்தியிலும் வெளி வந்துள்ளது. Ramayana A True Reading என்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.
திராவிடர் இயக்கத்திற்குத் தலைமை வகிப்பது என்றால் சாதாரணமானதா? இந்த அடிப்படை உயிர் எழுத்துக் களையும், மெய்யெழுத்துக்களையும் படிக்காமல், உணராமல், ஏற்காமல் எப்படி திராவிடர் இயக்கத்தில் உறுப்பினராகக்கூட ஆக முடியும்? உறுப்பினராகவே ஆக முடியாது என்றால் எப்படி கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
இது ஒன்றும் அரசியல் அல்ல- _ அடாவடித்தனமாகப் பேசுவதற்கு?
ஒரு மாபெரும் இயக்க வரலாற்றின் ஆரம்பப் பாடங்கள்.
கடைசி கடைசியாக நமது கேள்விகள் மூன்றே மூன்றுதான்!
அண்ணாவின் கொள்கையை ஏற்காதவர் எப்படி அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சீரணிக்க முடியாதவர் எப்படி திராவிட இயக்கத்தில் இடம் பெற முடியும்?
திராவிடர் இயக்கச் சித்தாந்தத்தின் எதிரியாக இருக்கக் கூடியவர் திராவிட இயக்கத்தில் இருக்க முடியுமா? இது அசல் ஊடுருவல் அல்லவா?
இப்பொழுது ஒரே வழி தான் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை ஏற்கா விட்டால் கட்சியிலிருந்து விலகி நிற்க வேண்டும் இல்லை இவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என்றால் கட்சியின் பெயரிலிருந்து அண்ணா வையும், திராவிட பெயரையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் அறிவு நாணயம் என்பது.
இறுதியாக அண்ணா திமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்.
அய்யாவையும் அண்ணாவையும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் ஏற்காத ஒருவர்தான் உங்களுக்குத் தலைவரா? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

தீபரவட்டும்!
சுயமரியாதைக்காரர்களின் சீர்திருத்த முயற்சிகளை ஆரியம் கெடுத்துக் குலைத்து வருகிறது. இஸ்லாமியர் இரண்டாண்டிலே இவ்வளவு  வலிமை பெற்றுத் தனிக்கலை, தனிநெறி கொண்டு, இந்துக்கள் என்பவரின் நெறி, கலை ஆகியவை தமதல்ல, வேறு என்பதைத் தெரிந்து வாழ்ந்து வருவதனால்தான். ஆரிய மார்க்கத்தையும் கலையையும் தனதெனக் கருதிக்கொண்டு, ஆரியக் கற்பனைகளைத் தமிழ்க் கலையிலே கலக்கிக் கொண்டதனாலேயே, இன்று தமிழர் என்ற தனி உரிமைக்கோ, தன்மானத்துக்கோ, தன்னரசுக்கோ போரிட முடியாத நிலை பெற்றனர். எனவே, தமிழரும், இஸ்லாமியர் போலவே தங்களின் தனிக் கலையைப் போற்றிப் பிற இனக்கலையை ஒழித்து வந்தால்தான், சுயமரியாதையுடன் வாழமுடியும். ஆகவேதான், கம்ப இராமாயணம், பெரிய புராணமாகிய ஆரிய நெறி கூறும் ஏடுகள், பொசுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறோம்.
*******
இராமாயணம் வைணவர்க்கு மேலான நூல்; பெரிய புராணம் சிவனடியார்களின் பக்தியை விளக்கிடும் நூல். சைவம், வைணவம் எனும் இரு மார்க்கங்களையும் பின்பற்றும் தமிழ் மக்கள் முறையே பெரிய புராணம், கம்ப இராமாயணமாகிய இரு நூற்களையும் தமது மார்க்க நூற்களாகக் கொள்கின்றனர். வைணவம், சைவம் எனும் இரண்டும் இந்து, மார்க்கத்தின் கிளைகள், தமிழர் இந்துக்களல்லர். தமிழருக்குத் தனி நெறி உண்டு என்றாலும் இவ்விரு மார்க்கங்களையும் தழுவிக் கொள்வதால், தமிழர் தம்மை இந்துக்கள் என்று கருதிக் கொள்வதால் தமிழர், தாங்கள் தனி இனம் என்பதை மறுத்து, இந்துக்களில் ஒரு பகுதி என்று எண்ணி, தன்மானத்தையும், தன்னரசையும் இழந்தனர்.
- அறிஞர் அண்ணா, (நூல்: தீ பரவட்டும்!)


.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

திராவிடர் கழகத் தலைவரை சீண்டும் திருவாளர் சோ


துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய திருவாளர் சோ ராமசாமி பொருத்தமில்லாத இடத்தில், தேவையில் லாமல் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார். பார்ப்பன வட்டாரங்களுக்கு அவர்தான் இலக்கு. காரணம் அவர்தானே திராவிடர் இயக்கத்தில் அடிப்படைக் கொள்கையாகிய ஆரிய ஆதிக்கத்தின் ஆணி வேரை சுட்டுப் பொசுக்குகிறார்!

நாள்தோறும் தினமலர் அர்ச்சனை செய்கிறது ஆசிரியர் வீரமணி அவர்களை என்றால், அதற்கான காரணத்தைப் புரிந்து  கொள்வது வெகு எளிதே!

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு மீறிய தற்காக அம்மாநில அரசை டிஸ்மிஸ்ஸே செய்யலாம்.

வீரமணி போன்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டை எப்படி மீறலாம் என்கிறார்கள்.

இதற்கெல்லாம் யார் வழிகாட்டிகள்? இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி நடந்து, வழிகாட்டியதே தமிழ்நாடுதானே? மீற முடியும், மீறலாம். கோர்ட் என்று நாம் பெயருக்குத்தான் வைத்திருக்கிறோம். அதற்கு நாம் எவ்வளவு தூரம் கீழ் படிகிறோம் என்பது கேள்விக்குரியதுதான் என்று பேசி இருக்கிறார் (துக்ளக் 4.4.2012 பக்கம் 6)

இதே திருவாளர் சோ ராமசாமி நீதிமன்ற தீர்ப்பு தமது இனத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதகமாக இருந்தால் அதனை எந்தப் பார்வையில் பார்க்கிறார்? குஜராத் கலவரத்தில் நீதிபதி நானாவதி தலைமையிலான ஆணையம் மோடிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தபோது ஆகா! அற்புதம் அற்புதம்! என்று ஆடினார்.

பாபர் மசூதி இடிப்புப்பற்றி விசாரித்த லிபரான் ஆணையம் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று சொன்னால் அது அபத்தம் என்று எழுதக் கூடிய சோ நீதிமன்ற தீர்ப்புப்பற்றியெல்லாம் விமர்சிக் கலாமா?

இடஒதுக்கீடு விஷயத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகக் கூறி, அதில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களை சம்பந்தப்படுத்துகிறார். 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னால், இடஒதுக்கீடு என்னும் சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும், பாடுபடும் ஓர் இயக்கத்தின் தலைவர் போராடிப் பெற்ற 69 விழுக்காடு இடங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவது அவரின் கடமையல்லவா!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சரத் துக்களைப் பயன்படுத்தி, அதற்குச் சட்டப் பாது காப்பை உண்டாக்கித் தருதல் எப்படி சட்ட விரோத மாகும்?

தமிழ்நாட்டின் 69 சதவிகித இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் 76ஆவது திருத்தத்தையும் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டதே.

எந்த உச்சநீதிமன்றம் 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு செல்லக் கூடாது என்றதோ, அதே உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு செய்துள்ள சட்ட ஏற்பாடு செல்லும் என்று தீர்ப்புக் கூறிவிட்டதே - சட்டப்படியான இந்தச் செயல் எப்படி நீதிமன்றத்தைச் சிறுமைப்படுத்தியதாகும்?

உண்மை என்னவென்றால் நீதிமன்றம் தமிழ் நாட்டின் இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் செல்லாது என்று சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் இந்த சோ ராமசாமி அய்யர்களின் ஆசையும் - வெறியுமாகும்.

இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் வந்ததே இந்த இடஒதுக்கீட்டுக்காகத் தானே? அதற்காகவும் போராடி வெற்றி பெற்றதும் தந்தை பெரியாராலும், தமிழ்நாட்டின் சமூக நீதி ஆர்வலர்களாலும்தானே! காமராசரை மதிப்பதாகக் கூறும் இதே துக்ளக் ராமசாமிக்கு இடஒதுக்கீடுப் பிரச்சினையில் அவரின் நிலைப்பாடு என்ன என்று தெரியாதா?

நீதிமன்ற தீர்ப்புப் பிரச்சினையில் சற்றும் பொருத்த மில்லாமல் திராவிடர் கழகத் தலைவரை இழுத்துப் போட்டுக் குளிர் காய்வதன் மூலம் தன் பார்ப்பன ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்று பொருள்.

69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைக் குறைகூறும் இதே சோ, திராவிடர் கழகத்தலைவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்து கொண்ட முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பற்றி விமர்சிக் காதது ஏன் - அதற்குப் பெயர்தான் இனப்பற்று என்பது. பார்ப்பன எதிர்ப்பாளரான வீரமணி கூறிய கருத் தினை ஏற்று இப்படி நடந்து கொண்டு விட்டாரே ஜெயலலிதா என்ற கோபம் உள்ளுக்குள் இருக்கலாம் என்றாலும் இனப்பற்று வெளிப்படையாக விமர்சிக்கத் தடை போடுகிறதே!

பார்ப்பனீயத்தின் நயவஞ்சகம் கறுப்புச் சட்டைக்காரர்களிடம் எடுபடாது - எச்சரிக்கை!


.
 

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...