Saturday, July 23, 2016

மாட்டுத் தொழில்: பலன் அடைபவர்கள் உயர்ஜாதியினரே!

கோரக்ஷா தள் என்றால் மகராஷ்டிராவிற்கு கீழ் உள்ள மாநில மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத ஒரு அமைப்பு ஆகும். அப்படி தெரிந்த ஒரு சில நபர்கள் கூட ஏதோ பசு பாதுகாப்பு அமைப்பு - கோசாலை போன்றது. வயதான பசுக்கள் அங்கே இருக்கும், அதற்கு ஊர்க்காரர்கள் சாப்பிட்டு விட்டு மீதியுள்ள ரொட்டி மற்றும் அழுகிப்போனப் பழங்கள், ஒரு பிடி அகத்திக்கீரைக் கட்டு மற்றும் புல் போன்றவற்றை போட்டுவிட்டுச் செல்லும் இடம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல; கோரக்ஷா தள் என்பது ஒரு கொடூரமான இரக்கமற்ற முறையில் மனிதர்களைத் துன்புறுத்தி கொலைசெய்யும் அமைப்பு.  தொடர்ந்து கோரக்ஷா தள் என்ற கொலைகார அமைப்பின் செயல்பாடுகளை படத்துடன் வெளியிட்ட ஒரே ஒரு நாளிதழ்  விடுதலை மட்டும் தான்.   

கோரக்ஷா தள் என்பது ஒரு தீவிர இந்துத்துவ அமைப்பு, இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவு. ஆர்.எஸ்.எஸ். தங்களின் அமைப்பினர் ஏதாவது குற்றச்செயல்கள் புரிந்தால் அவர் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று உதறிவிடுவதுபோல் இந்த அமைப்பையும் தங்களது அமைப்பின் துணை அமைப்பு அல்ல என்று பலமுறை கூறிவந்துள்ளது. ஆனால் அரியானா, பஞ்சாப், குஜராத், மபி, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் போது கோரக்ஷா தள் அமைப்பினரும் தங்களது அணியின் பதாகை ஏந்தி கையில் வாள் மற்றும் பசுவைக் கட்டும் கயிற்றுடன் வலம் வருவார்கள்.    

ஆஜ் தக் என்ற இந்தி தொலைக்காட்சி முதல்முதலாக இவர்களின் கோரமுகத்தை ரகசியமாக படம்பிடித்து வெளிக்கொண்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் ஒரு கிராமத்தில் இருந்து கோரக்ஷா தள் அமைப்பினர் 7 பேர் ஒரு ஜீப்பில் ஏறி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் ஒவ்வொரு சரக்கு வாகனத்தையும் நிறுத்தச் சொல்லி சோதனையிடுகின்றனர். அப்போது ராஜஸ்தான்-அரியானா எல்லை யில் மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்றை வழிமறித்தனர். அந்த வாகனத்தில் இரண்டு முதியவர்கள், ஓட்டுனர் மற்றும் 15 வயது சிறுவன் ஒருவனும் இருந்தனர்.   

பல கிலோ மீட்டர் தூரம் வரை அந்த மாடு ஏற்றிச்செல்லும் வாகனத்தைப் பின் தொடர்ந்த அவர்கள் அந்த வாகனத்தின் டயர்களை துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தினர். நிலைகுலைந்து நின்ற அந்த வாகனத்தில் உள்ள மாடுகளை விரட்டிவிட்டு ஓட்டுநர் உள்பட நால்வரையும் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர். அதன் பிறகு நடந்ததுதான் மனித குலத்திற்கே அவமானகரமான கொடூரம். முதலில் அந்த முதியவர்களை நிர்வாணமாக்கி அவர்களின் கால்களில் ஆணிகளை அடித்தனர்.

அந்தச் சிறுவனை சாகும் வரை கம்பாலும், இரும்பு கம்பிகளாலும் தொடர்ந்து அடித்தனர். அதன் பிறகு அந்த ஓட்டுநரின் கைகள் மற்றும் கால்களை உடைத்து அங்கேயே போட்டு விட்டுச் சென்றனர். சிறுவனின் உடலை அந்த வாகனத்தோடு எரித்தனர்.

இணைய தளங்களில் இன்றும் அந்த கொடூரக் காட்சிகள் காணொலிகளாக உள்ளன. ஆனால் இது குறித்து அரியானா, ராஜஸ்தான் மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது அரியானா அரசே கோரக்ஷா தள் அமைப்பினருக்கு ஆயுதப் பயிற்சி மற்றும் நிதி உதவி செய்ய புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

கோரக்ஷா தள் அமைப்பினரின் பார்வை அத்தனையும் சிறுபான்மையினர், தலித்துக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதுதான். வடமாநிலங்களைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி மற்றும் அதன் தோல் தொடர்பான வணிகத்தில் மிகப்பெரிய பொருளாதாரப் சங்கிலிப்பின்னல் உள்ளது, அந்தப் பொருளாதார பின்னலில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் வருகின்றனர்.  

சிறுபான்மையினர் இறைச்சிக்காக மாடு ஆடுகளை கிராமம் கிராமமாக வாங்கி வெட்டுவது, தலித் மக்கள் அந்த ஆடு மாடு களின் தோலை அகற்றித் தூய்மைப் படுத்துவது, அந்தத் தோலை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மொத்தமாக வாங்கி தோல் பதனிடும் சிறிய தொழிற்சாலைகளுக்கு கொண்டு சேர்ப்பது. இந்த தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் உயர்ஜாதியினர். இங்கு பதப்படுத்தப்படும் தோல்கள் ஏற்றுமதியாகின்றன. தோல் ஏற்றுமதியில் பெரும்பாலும் பார்ப்பன பனியா முதலாளிகளே இருக்கின்றனர்.   

இப்படி பெரும் பொருளாதார வலைப் பின்னல் கொண்ட இந்த வணிகத்தில் தற்போது தலித்துகளும் சிறுபான்மையினருமே தாக்கப்படுகின்றனர். இதற்குப் பின்னால் இதில் கிடைக்கும் பொருளாதார பலன் அவர்களுக்குப் போய்ச் சேரக்கூடாது என்ற நோக்கமும் உண்டு. இது குறித்து சுத்தீஷ் தாவே என்னும் மகராஷ்டிராவைச் சேர்ந்த வினோபாவின் சீடர் ஒருவர் கூறும் போது, பாபாசாகிப் அம்பேத்கர் தலித் சமூகத்தினரைப் பார்த்து ‘‘இறந்த மாட்டிறைச்சியை உண்ணாதீர்கள்; இறந்த மாட்டின் தோலை அகற்றும் பணியைச் செய்யாதீர்கள்; நீங்கள் வேறு வேலைக்குச் செல்லுங்கள்’’ என்று கூறினார். காரணம் அன்றைய காலகட்டத்தில் அனைத்துத் தொழிலுக்கும் மாட்டுத் தோல் முக்கியப் பொருளாக இருந்தது. அது சாதாரண கொல்லுப் பட்டறையின் ஆயுதக் கைப்பிடியாக இருந்தாலும் சரி, விவசாயத்திற்காகக் கிணற்றில் நீர் இறைக்க ஏற்றத்தின் நுனியில் நீரை அள்ளிக் கொண்டுவருதற்குப் பயன்படும் தூளியாக இருந்தாலும் சரி - இவை அனைத்தும் தோலிலேயே தயார் செய்யப்படுகின்றன. 

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பலர் அம்பேத்கரின் இந்த வார்த்தைக்குக் கட்டுப்பட்டு பல்வேறு தொழில்களுக்குச் சென்றனர். ஆனால் இதர மாநிலங்களில் இந்தத் தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இல்லையென்றால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாவார்கள். உண்மையில் இறந்த மாட்டின் தோலை உரிக்கும் பணிக்கு யாரும் மனமுவந்து செல்வதில்லை. பொருளாதர தேவைகளின் முன்பு மண்டியிடவேண்டியுள்ளது.

அம்பேத்கர் 1930-களில் மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் இந்தக் கோரிக்கையை விடுக்கிறார். இன்று 85 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் பொருளாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணியைச் செய்யவேண்டிய அவலம் தீரவில்லை, ஆகவே, தலித்துகள் இனிமேலும் இந்த தொழில் புரிவதை விட்டுவிடவேண்டும். மாட்டுத்தோலை உரிப்பதால் தலித்துகளுக்கு அப்படி என்ன வருவாய் கிடைக்கிறது? சில நூறு ரூபாய்களை மாட்டு உரிமை யாளரும் தோல் வாங்க வருபவரும்  தருவார்கள். ஆனால் பதப்படுத்தப்பட்ட ஒரு மாட்டுத்தோல் பல ஆயிரங்களில் ஏற்று மதியாகின்றது. பணக்காரப் பார்ப்பன, பனியா தோல் ஏற்றுமதியாளர்களின் கொள்ளை லாபத்திற்காக தலித்துகள்  தங்கள் உழைப்பைக் கொடுக்கின்றனர். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் கோரக்ஷா தள் அமைப்பினரால் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகின்றனர் என்று வினோபாவின் சீடர் கூறினார்.  

ஜூலை 11 ஆம் தேதி குஜராத் மாவட்டம் உனாவில் கோரக்ஷா தள் என்ற அமைப்பினால் மிகவும் கடுமையான சித்திரவதைக்கு ஆளான 4 தலித் இளைஞர்களில் ஒருவர் மரணமடைந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே கோரக்ஷா தள் அமைப்பினரின் சித்திரவதைகளைக் கண்டு பொறுத்துக்கொண்டிருந்த மக்களின் கோபம் இன்று வெடித்து கிளம்பியுள்ளது. குஜராத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகமே நின்று போகும் வகையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மாட்டு அரசியல் மக்களை வெகுவாகப் பாதிக்கப் போகிறது - இந்த மாட்டு அரசியலில்தான் பா.ஜ.க. மாட்டிக் கொண்டும் மரிக்கப் போகிறது. பெரும்பான்மையான மக்களின் உணவு என்னும் பிரச்சினையில் மூக்கை நுழைத்து மூச்சடங்கப் போகிறது என்பதில் அய்யமில்லை.

Wednesday, July 20, 2016

கலைஞர் கூறியதில் குற்றம் என்ன?



- மின்சாரம்
மத்திய அரசுக்கு சொந்தமான அஞ்சல் அலுவலகத் தில் கங்கை நீர் விற்பனை செய்வது பற்றி திமுக தலைவர், முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் கருத்து ஒன்றைக் கூறிவிட்டாராம்.
அவர் என்ன தவறாகக் கூறிவிட்டார்? ஒரு மதச்சார்ப்பற்ற அரசின் அலுவலகத்தில் குறிப்பிட்ட மதம் சார்ந்த ஒன்றை விற்பனை செய்வது சட்ட விரோதம் தானே? திருநீறு குங்குமம் கூட விற்பார்கள் போலும் என்று கூறியிருக்கிறார். உடனே, ஆகா எப்படி சொல்லலாம் கலைஞர்?  இந்துக்களாகிய எங்கள் மனதைப் புண்படுத்தி விட்டார் என்று கூறி, கலைஞர் வீட்டுக்கு குங்குமம் வகையறாக்களை அனுப்பி வைத் தார்களாம். தமிழக பிஜேபி தலைவரும் கலைஞர் அவர்களின் கருத்துக்கு எதிராக துள்ளிக் குதித்தி ருக்கிறார்.
ஆத்திரப்படுகிறார்களே தவிர, தமிழக மூத்த தலைவர் எழுப்பிய கேள்விக்கு அறிவார்ந்த முறையில் பதில் அவர்களால் சொல்ல முடிந் துள்ளதா? அறிவு வேலை செய்ய முடியாத இடத்தில் ஆத்திரம்தானே அலை மோதிக் கிளம்பும்.
இந்த ஆத்திரக்காரர்களுக்கு ஒரு சரியான சவுக்கடி செய்தி வெளிவந்துள்ளது.
எந்த அஞ்சல் அலுவலகம் கங்கை நீரை விற்கிறதோ அந்த அஞ்சல் துறையே ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றினைச் செய்திருக்கிறது.
“கங்கை நீர் மாசு அடைந்துள்ளது,  எனவே குடிப்பதற்கு உகந்ததல்ல” என்று அஞ்சல்துறை அதிகாரி அறிவித்து விட்டாரே!
இது என்ன கொடுமை! குடிப்பதற்கு உகந்ததல்ல என்று தெரிந்திருந்தும் கங்கை நீரை மத்திய அரசு விற்கிறது என்றால், இது மக்கள் விரோத அரசுதானே!
அஞ்சல் துறையின் இந்த அறிவிப்புக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
ஆகா, புனித கங்கை நீரைக் குடிப்பதற்கு உகந்ததல்ல என்று அவமானப்படுத்தலாமா? அஞ்சல் துறை அதிகாரி, கறுப்புச் சட்டைக்காரரா? கருணாநிதியின் ஆள் என்று சொல்லப் போகிறார்களா?
கங்கை நீரில் தொற்று நோயை உண்டாக்கும் கார்சினோ ஜென்ஸ் (CARCINOGENS) எனப்படும் புற்று நோயை உண்டாக்கக் கூடிய காரணிகள்  உள்ளன என்று தேசிய புற்று நோய்ப் பதிவு மய்யம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழக பிஜேபி தலைவராக இருக்கக் கூடியவர் ஒரு டாக்டராக இருந்தும், அறிவியல் ரீதியாக இந்தப் பிரச் சினையை அணுகியிருக்க வேண்டாமா? மதப் போதை கருத்துக் கண்களைத் திரையிடலாமா? மதத்தை ஒரு அபின் என்று புரட்சியாளர் லெனின் சொன்னதுதான் எவ்வளவு சரியானது!
கங்கை நீர் மட்டுமல்ல - புனித நீர் என்று சொல்லப்படுகிற  அய்யப்பன் கோவில் பம்பை நதியாக இருந்தாலும் சரி, கும்பகோணம் மகாமகக் குளமாக இருந்தாலும் சரி எல்லாமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!
கும்பகோணம் மகாமகக் குளத்துத் தண்ணீர் என்பது என்ன?
மலக்கழிவு 28 சதவிகிதம், மூத்திரக்கழிவு
40 சதவிகிதம் ஆகும். இதை நாங்கள் சொல்ல வில்லை. மகாமக நிகழ்ச்சி முடிந்த பின்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில்  அக்குளத்து நீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்தக் தகவலைக் கூறுகிறது.
அய்யப்பன் கோயில் பம்பை நதியின் யோக்கிய தைதான் என்ன?
பம்பை நதி மலக்காடாகவே காட்சி அளிக்கிறது. மலத்தின் வாடை அறிந்த பன்றிகள் மொய்க்கின்றன.
மதம் என்ற போர்வையில் மனித அறிவு நாச மடைகிறது - உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை ஒரு கணம் யோசித்து பார்க்கட்டும் - டாக்டர் படித்த தமிழிசை சவுந்தரராஜன்கள்.

Tuesday, July 19, 2016

தேர்தல் வாக்குறுதிப்படி அ.தி.மு.க. அரசு கல்விக் கடனை தள்ளுபடி செய்யட்டும்!

கல்விக் கடன் கட்ட முடியாமல் மாணவன் தற்கொலை! 
தேர்தல் வாக்குறுதிப்படி அ.தி.மு.க. அரசு கல்விக் கடனை தள்ளுபடி செய்யட்டும்!

கடனை வசூல் செய்ய அம்பானி நிறுவனத்திடம் ஒப்படைப்பதா?
இந்த ‘ஈட்டிக்காரன்’ வேலையைத் தடுத்து நிறுத்துக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள  அறிக்கை

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வும்- நீதிபதிகள் போக்கும் - நிலைமையும்!

வேலை வாய்ப்பின்மையாலும், பல்வேறு காரணங்களாலும் வாங்கிய கல்விக் கடனைக் கட்ட முடியாத, இயலாத சூழ்நிலையில் அவர் களிடமிருந்து கடனை வசூல் செய்யும் வேலையை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விட்டிருப்பது சட்டப்படி சரியானதுதானா? அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கல்விக் கடனை ரத்து செய்யாதது ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு தனது கொள்கை முடிவின்படி, கடன் தந்து பிறகு அவர் களிடமிருந்து வசூலிக்க கடன் ஒப்பந்த உறுதிமொழி (பெற்றோர் களிடமும்) பெற்றுள்ள நிலையில், அக்கடன் ஒழுங்காக திருப்பிச் செலுத்தவேண்டியது முறைதான். ஆனால், வேலை வாய்ப்பின்மை, வறுமைச் சூழல் - இப்படி எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கலாம். அதன் காரணமாக அக்கடனை திருப்பி உடனடியாகத் தர முடியாமல் இருக்கலாம்.
சட்ட நெறிமுறைகள்மூலம்

மனிதாபிமானத்திற்கு முற்றிலும் விரோதமாக, வங்கிகள் கூலிப்படைகளையோ, அடியாட்களை வைத்து மிரட்டியோ, வசூலிக்க முயற்சிக்கக் கூடா தல்லவா! சட்ட நெறிமுறைகள்மூலம் தான் கடனை வசூலிக்கவேண்டும்.

கடனை வசூலிக்கும் பொறுப்பை
அம்பானியிடம் விடுவதா?


இந்நிலையில், சில வங்கிகளின் கடனைவசூ லிக்கும் பொறுப்பினை அம்பானியின்ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திடம் அரசுடைமையாக்கப் பட்ட வங்கிகள் விட்டிருப்பது பச்சையான சட்ட விரோதமும், நியாய மீறலுமாகும்!

எந்த வங்கிச் சட்டப் பிரிவின்கீழ் இப்படி தனியார் கம்பெனிமூலம் பொதுத் துறை (அரசுடைமை) வங் கிகள் கடன் வசூலைச் செய்ய முடியும்? முடியாதே!

மத்திய, மாநில அரசுகளின் இத்தகு சட்ட விரோத நடவடிக்கைகளால் இளம் மாணவர் ஒருவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி, மனிதநேயம் உள்ளவர்கள் நெஞ்சில் இரத்தக் கண்ணீரை வடியச் செய்யும் கொடுமையல்லவா!

தேர்தல் வாக்குறுதியின்படி அதிமுக அரசு கல்விக் கடனை ரத்து செய்யட்டும்!

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தது என்னாயிற்று?
எச்சரிக்கை செய்யவேண்டாமா?

தமிழ்நாடுஅரசு,முதல்வர்அவ்வங்கிஅதிகாரிகளை அழைத்து, இதனைச் செயல்படுத்த விருக்கிறோம்; எனவே, இந்த இடைத்தரகர்கள் கொடுமையெல்லாம் செய்யாதீர்கள் என்று எச் சரிக்கை செய்யவேண்டாமா?

மதுரை அவனியாபுரம் கொத்தனார் வேலை பார்ப்பவரின் மகன் லெனின் என்னும் மாணவ இளந்தளிர் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால் விளைந்த உயிர்ப் பறிப்புக்கு யார் பொறுப்பு?

தேவை - ஈட்டிக்காரன் வேலைக்கு முற்றுப்புள்ளி!


உடனடியாக வங்கிகளின் இந்த ‘ஈட்டிக்காரன்’ கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்; இன்றேல், திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழகம் நாடு தழுவிய அறப்போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி! உறுதி!!


கி.வீரமணி   
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை
18.7.2016

Thursday, July 14, 2016

‘‘பகுஜன் - சர்வ ஜன் ஹித்தே, சர்வஜன் சுகே!’’

 ஊசிமிளகாய்
புத்த மதம் நம் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டதற்கு முக்கிய காரணம், ‘‘எதிர்த்து அழிக்க முடியாதவைகளை அணைத்தோ, ஊடுருவியோ அழித்துவிடு’’ என்ற பார்ப்பன தந்திர முறைகள்தான் என்பது வரலாற்று உண்மை!

அண்ணல் அம்பேத்கரின் தத்துவ வாரிசு போல் பணியாற்றி ஓய்வின்றி உழைத்து, சமூகநீதிப் புரட்சியாளர்கள் இதோ என்று ஜோதிபாபூலே, சாகு மகராஜ், நாராயண குரு, தந்தை பெரியார், அம்பேத்கர் ஆகியவர்களை சரியாக அடையாளம் காட்டி, இந்தியா வின் ஒவ்வொரு மாநிலத்திலும் பயணம் செய்து, தவறாது தந்தை பெரியார், அம்பேத்கர் படங்களை பொதுக்கூட்ட, பிரச்சார மேடைகளில் வைத்தும், கடும் உழைப்பாக ‘‘பகுஜன் சமாஜ்’’ என்ற அரசியல் கட்சியை - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாம், கிறிஸ்தவர் போன்ற பாதிக்கப்பட்ட சிறுபான் மையோருக்கென உருவாக்கினார் கன்ஷிராம் அவர்கள்!

அக்கட்சி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது; அரசியலில்கூட அவர் எப்படி யாரைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவர்களை (கட்சி ரீதியாக)ப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றார்.

லக்னோவில் ‘பெரியார் மேளா’ நடத்தி பெரும் அதிர்ச்சியை பார்ப்பனர்களுக்குத் தந்தார்! செல்வி மாயாவதி அவர்களை தலைவராக உருவாக்கத் தக்க பயிற்சியும் தந்தார். மாயாவதியும் ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு...?!

அதன் பிறகுதான் ஆரிய ஊடுருவல் நடந்து, அதன் தனித்தன்மையான அடையாளமான ‘பகுஜன்’ என்பது மறைந்து, சர்வஜன் என்ற நிலைக்கு ஆளாகி, பார்ப்பனீயத்திற்குப் பலியாகும் பரிதாப நிலை - தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்திற்கு ஏற்பட்ட விபத்து போலவே அங்கும் ஏற்பட்டுள்ளது!

சத்தீஷ் சந்திரமிஸ்ரா என்ற வக்கீல் பார்ப்பனர், அதன் பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டு, அவர் கொள்கை விளக்கப் பரப்புரை - பேட்டிகள் தரும் அளவுக்கு அது கீழிறக்கத்திற்குச் சென்று கொண்டுள்ளது அக்கட்சி. அக்கட்சியின்மீது மிகுந்த நட்புறவும், பற்றும் கொண்ட கன்ஷிராம் தோழர்களுக்கு சொல்லொணாத மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது!
அக்கட்சியை விட்டு, நீண்ட காலம் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட தலைவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் வெளியேறிடும் நிலையில், மிஸ்ராக்கள்தான் இனி எல்லாம் என்பது போன்ற ஒரு விரும்பத்தகாத நிலை - விபத்து - மாயாவதி அம்மையாருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ ஏற்பட்டுள்ளது!

அதன் ‘கெமிஸ்டிரியே’ மாறியிருக்கிறது. ‘சர்வஜன் ஹித்தே - சர்வஜன் சுகே!’ ‘எல்லோரது நலம்; எல்லோரது மகிழ்ச்சி’ என்று புதுக்குரல் கேட்கத் தொடங்கியுள்ளது என்கிறார் மிஸ்ரா!
2007 ஆம் ஆண்டிலேயே, செல்வி மாயாவதி பார்ப்பனர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு அணியில் கொண்டு வந்தார் என்று பெருமிதத்துடன் இவர் கூறுகிறார்.
அப்போது வெற்றி பெற்ற முதலமைச்சர் செல்வி மாயாவதி அமர்ந்துள்ளார்; இந்த சத்தீஷ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனர் பக்கத்தில் நின்றார்; வந்த அத்தனை பேரும் மிஸ்ராவின் கால்களைத் தொட்டனர்; விழுந்து கும்பிட்டனர்; ஆனால், முதலமைச்சர் மாயாவதியைக் கண்டு கொள்ளவில்லை!  காரணம் வெளிப்படை!

இனி அக்கட்சியும் ‘சர்வஜன்’ என்றால், ‘பார்ப்பனஜன்’ என்றே உள் பொருள். ஆனால், கட்சியின் பெயரோ இன்னும் பகுஜன்தான் (BSP) என்பது முரண்பாடே!
பதவி படுத்தும்பாடு, ‘கொள்கை காற்றில், மனதில் கோட்டை’ என்றால், இந்நிலைதான்!

வரலாற்றின் பாடங்களைக்கூட கற்காவிட்டால், உருப்படுவது எப்படி?

அந்தோ, கன்ஷிராமின் கொள்கைக் கருவூலம் இப்படியா கொள்ளைப் போவது?
வேதனை, வேதனை, வெட்கமும்கூட!

Saturday, July 2, 2016

'விஜயபாரதத்தின்' பார்ப்பனப் புத்தி

சமஸ்கிருதத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் போர்க் குரல் எழுவது கண்டு ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' இதழ் (1.7.2016) இரத்தக் கொதிப்பேறி தன் எழுத்தாணியால் இடக்கு முடக்காக தலையங்கம் தீட்டுகிறது.

முதற் கேள்வி - சமஸ்கிருதம் தான் முக்கியம் என்று கருதினால் விஜயபாரதத்தை தமிழில் வெளியிடுவதற்குப் பதிலாக சமஸ்கிருதத்திலேயே வெளியில் கொண்டு வரலாமே!
சமஸ்கிருதத்தை எதிர்ப்பவர்களின் பெயர்களில் சமஸ்கிருதம் வரலாமா என்று மேதாவித்தனமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு நீட்டி முழங்குகிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.
தமிழில் சமஸ்கிருதத்தை ஊடுருவச் செய்து, தமிழையே பல கூறுகளாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று பிரிப்பதற்குக் காரணமாக இருந்தவர்களே நடைமுறையில் தமிழில் சமஸ்கிருத சொற்கள் கலந்து வரும்போது அதனைக் குறை சொல்லும் போக்கிரித்தனத்தை என்னவென்று சொல்லுவது?

பார்ப்பனரான கோ. சூரிய நாராயண சாஸ்திரி (பரிதிமாற் கலைஞர் என்று தன் பெயரை தமிழாக்கிக் கொண்டவர்) தமிழில் ஆரிய சமஸ்கிருதம் ஊருடுவிய வரலாற்றை 'தமிழ்மொழியின் வரலாறு' எனும் நூலிலே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழிலிருந்து பல கிளைமொழிகள் தோன்றுவதற்கு வடமொழியான சமஸ்கிருதமே காரணம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

"மணிப்பிரவாளம்" என்றதோர் புதிய பாஷையை வடமொழியாளர்கள் ஏற்படுத்தினர். அதாவது தென் மொழியும், வட மொழியும் சரிக்குச் சரி கலந்து எழுதுவதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டனர். மணியும் பவளமும் கலந்து கோர்த்ததோர் மாலை காட்சிக்கின்பம் பயத்தல் போல தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்குமென்ற போலி யெண்ணமே இத்தகைய ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு துண்டிற்று.. . ஸ்ரீபுராணம் என்னும் சைவ நூல் முழுவதும் மணிப் பிரவாளமென்னும் இவ்வாபாச நடையின் இயன்றதாமாறு காண்க"
- என்று பரிதிமாற் கலைஞர் என்ற பார்ப்பனரே வருந்திக் கூறியுள்ளார். தமிழில் சமஸ்கிருதம் கலந்து எழுதுவதை ஆபாச நடை என்றே சாடுகிறார்.

ஆரியர்களே கைபர் 'கணவாய்' வழியாக இந்தியாவினுள் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ? இதனையறிவுடையோர் எளிதினுணர்ந்து கொள்வார்கள்" என்றும் குறிப்பிடத் தவறவில்லை பரிதிமாற் கலைஞர்.

தங்களைப் பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்ததாக எழுதி வைத்துக் கொள்பவர்கள், நால்வருண பிளவை ஏற்படுத்தியவர்கள், தமிழ் மொழியிலும் தங்களின் ஆபாச நச்சு எத்து வேலையைக் காட்டிப் பிளவுபடுத்தினர்.

வச்சணந்தி மாலை என்னும் இலக்கண நூலை வகுத்த ஆரியம் உயர் மெய்யெழுத்துக்களைக்கூட வருண வாரியாகப் பிரித்தது என்றால், இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்லுவது!

பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும் பிராமண வருணம் என்றும் அடுத்த ஆறு மெய்கள் சத்திரிய வருணமென்றும் அடுத்து நான்கு மெய்கள் வைசிய வருணமென்றும், பிற இரண்டும் சூத்திர வருணமென்றும் பிரித்தனரே!

இப்படியெல்லாம் தமிழில் ஊடுருவிய கொலை பாதகர்கள்தாம் வழக்கில் தமிழில் சமஸ்கிருதம் கலந்திருப்பதைக் கேலி செய்கின்றனர். கருணாநிதி என்ற பெயர் ஏன் என்று ஏகடியம் செய்கின்றனர்.

பார்ப்பனர்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் கலவாத பெயர்களைச் சூட்ட வேண்டும். அதற்கான மறுமலர்ச்சியைத் தந்தை பெரியார் கொடுத்ததுண்டு. அதன் விளைவுதான் நாராயணசாமி, நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன்  அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதுமாகும்.

பார்ப்பனர்கள் தங்கள் நச்சுக் கொடுக்கை நீட்ட நீட்ட வடமொழி மீதான வெறுப்பு மேம்படுமேயன்றிக் குறையப் போவதில்லை. தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழை வெறுத்துச் சமஸ்கிருதத்தைத்  தூக்கியும், நம்மீது திணித்தும் ஆட்டம் போடும் அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டியது தன்மானம் உள்ள தமிழர்களின் கடமையாகும்.

முதற் கட்டமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. இது முதற் கட்டம்தான்; அடுத்து வெடிக்க இருக்கிறது பெரும் போராட்டங்கள்.


.
 

மதக் கலவரத்திற்கு கொம்பு சீவும் சங்பரிவார்க் கும்பல்

மேற்கு உத்தரப்பிரதேசம் கைரானா வில் இந்துக்கள் விரட்டப்படுகின்றனர் என்று போலியான செய்தியை பரப்பி இரு சமூகத்தினருக்கிடையே பதற்றத்தை ஏற் படுத்திய பாஜக, இந்துக்களின் கணக் கெடுப்பு நடத்த மாநில பாஜக மற்றும் பஜ்ரங்தள், விஎச்பி மற்றும் விஜய வாஹினி அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தது, இதனை அடுத்து கைரானாவில் இந்து மக்கள் கணக்கெடுப்பை நடத்திய காவி அமைப்பினரில் 20க்கும் மேற்பட் டோரை உத்தரப்பிரதேச மாநில காவல் துறை கைது செய்தது.

உத்தரப்பிரதேச மாநிலம், கைரானா வில் சில குடும்பங்கள் தொழில் ரீதியாக வும், பிழைப்பு தேடியும் இடம் பெயர்ந்துள் ளனர். இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி இஸ்லாமி யர்களின் மிரட்டலால் இந்துக்கள் இடம் பெயர்ந்து வருவதாக போலி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு அமைத்த குழுக்கள் உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தை தேர்தல் ஆதாயம் தேடும் விதமாக மாற்ற உத்தரப் பிரதேசம் முழுவதும் இந்துக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைத் தனர். மேலும் டில்லியில் உள்ள பாஜக தலைமை உத்தரப்பிரதேச பாஜகவின ருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது, அதில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்துக்களை சந்தித்து அவர்கள் குறித்த விவரங்களை திரட்டுங்கள் என்றும் துணைக்கு இந்துத்துவ அமைப்பு களை அழைத்துக் கொள்ளலாம் என்று விரி வாக கூறப்பட்டிருந்தது.

இதனால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட் டுள்ளது, இந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க மதுரா, ஆக்ரா, கைரானா, பைசாபாத், போன்ற நகங்களிலும் வடக்கு மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களிலும் 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது.

தடை உத்தரவு அமலில் இருக்கும் போது இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, மாநிலத் தலைவர் ஞானேந்திர பால், மாநில துணைத் தலைவர் சச்சின் ஷர்மா, அலிகர் மண்டல பஜ்ரங் தள் தலைவர் வீர் சிங் உள்ளிட்ட 6 பேர் தலைமையில் சுமார் 20-க்கும் மேற் பட்ட இந்துத்துவ அமைப்பினர் ஷாம்லீ மாவட்டத்தில் உள்ள கைரானாவிற்குச் சென்றனர். இந்நிலையில் தடை உத் தரவை மீறி அங்கு சென்றதாக இந்துத்துவ அமைப் பினர் அனைவரும் கைது செய்யப்பட்ட தாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் பூஷன் தெரிவித்தார்.

உ.பி. மாநில தேர்தலுக்கு முன், மதக் கலவரத்தை உண்டாக்கியே தீருவது என்ற தீவிரத்தில் இருக்கிறது. சங்பரிவார் கும்பல் என்பது மட்டும். உண்மை, உண்மையே!
- கருஞ்சட்டை


.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...