Monday, August 31, 2015

சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

ஊன்றிப்  படித்து உண்மையை உணர்வீர்!
  • குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை வைத்து ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்பதா?
  • ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர் ஞான கங்கையில் ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறாரே!
  • சட்டத்தின்மூலம் ஜாதியை ஒழித்து விட்டு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூக நீதிக்கான அறிக்கை

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை  வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி!

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர் - சட்டப்படி ஜாதியை ஒழித்துவிட்டு, அதன்பிறகு அந்தக் கோரிக்கையை முன் வைக்கட்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குஜராத்தில் அண்மையில் பட்டேல் ஜாதியினர் தாங்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்கப் பட்டு, இடஒதுக்கீடு தர வேண்டும்; குஜராத் மக்கள் தொகையில் 15 விழுக்காடு தாங்கள் உள்ளதாகக் கூறி, மிகப் பெரிய கிளர்ச்சி நடத்தினர்.

குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் அரசு இதனை அடக்க முடியாத அளவுக்குச் சென்றதால், இராணுவத்தை அழைத்து அமைதி திரும்பும் நிலையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

150 பேருந்துகள் எரிக்கப்பட்டன; துப்பாக்கிச் சூடு! 10 உயிர்களுக்கு மேல் பலி! காவல்துறையின் அடக்குமுறை காரணமாக ஏற்பட்டது என்பது குஜராத் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள செய்தி; பல ஊர்களில் ஊரடங்கு உத்தரவு.
சட்டம், ஒழுங்கு, வளர்ச்சி - எல்லாம் மாடல் குஜராத்திலேயே கேள்விக் குறியாயிற்று!

மோடியே புலம்புகிறார்

காந்தி பிறந்த மண்ணில் இப்படியா என்று பிரதமர் மோடியே புலம்பியுள்ளார்!
இதன் தாக்கமும், வேகமும் மற்ற வட மாநிலங்களிலும் பரவும் என்ற நிலை உள்ளது.

இதனை முன்னெடுத்து, அழைப்புக் கொடுக்க பட்டேல் ஜாதியைச் சேர்ந்த ஹார்திக்பட்டேல் என்ற 22 வயது இளைஞர் - பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி - என்ற ஓர் அமைப்பின் அமைப்பாளராக உள்ளார்.

ஹார்திக்பட்டேலின் குழப்பம்

அவருக்கு இடஒதுக்கீடு - சமூக நீதி பற்றிய முழுத் தெளிவு இல்லை என்பது பற்பல நேரங்களில் அவரது கருத்துக் குழப்பத்தின் மூலம் தெரிகிறது.

பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு தேவை; அது கிடைக்கா விட்டால் யாருக்குமே கிடைக்காத அளவுக்கு அந்த இடஒதுக்கீடு அறவே ஒழிக்கப்படுதல் வேண்டும் என்று பேசுவது அவரது கருத்துக் குழப்பத்திற்குச் சரியான எடுத்துக்காட்டு.

(அவரே டில்லி பேட்டியில் - 30.8.2015) அதை மாற்றி OBC  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எங்களை இணைத்ததோடு இதைக் கோரும் மற்ற ஜாதியினரை இணைத்து ஒரு தேசீய முன்னணியை உருவாக்கும் என்றும் பேசியுள்ளார்)

எம்.ஜி. வைத்யா என்ன கூறுகிறார்?

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை விளக்கவாதியான எம்.ஜி. வைத்யா (என்ற பார்ப்பனர்) ராய்ப்பூரில் நேற்று உடனே செய்தி யாளர்கள் சந்திப்பில், (ஆதாரம்: 31.8.2015 ஹிந்து நாளேடு)
ஜாதி அடிப்படையில் தரும் இடஒதுக்கீடு (கல்வி, உத்தியோகங்களில்) உடனடியாக ஒழிக்கப்படல் வேண்டும்; ஏனெனில் இனி ஜாதியை அடிப்படையாகக் கொள்வது என்பது எவ்வகையிலும் பொருத்தமானது அல்ல என்று கூறுகிறார்.

இதன் மூலம்தான் இந்த இடஒதுக்கீடு போராட்டத் திட்டம் விதை எங்கே உருவானது என்ற நியாயமான சந்தேகம் நாட்டில் பல சமூகநீதிப் போராளிகளுக்கும் உண்டாவது இயல்புதானே!

ஜாதி ஒழிப்புக் கொள்கை ஆர்.எஸ்.எசுக்கு உண்டா?

ஆர்.எஸ்.எஸ். கருத்து - கொள்கை என்பது தெளிவாகிறது. அவர்களை நோக்கி நாம் சில

கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்:

(1) ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை ஒழிக்க வேண்டுமென்று  முழங்கும் ஆர்.எஸ்.எஸ்.,  ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லத் தயங்குவதேன்?
 
ஜாதிபற்றி கோல்வால்கர்

சட்டம் போட்டு - ஜாதியை ஒழித்தால் -  ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு தானே ஒழிந்து விடுமே! அதற்கு ஆர்எஸ்.எஸ். தயாராகாது; சந்தேகமிருந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தத்துவ கர்த்தா -  சர்சங்க் ஜாலக் முதன்மையர் கோல்வால்கரின் ஞான கங்கை (Bunch of Thoughts) நூலைப் படிக்கட்டும்.

நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வருண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறிக் கேலி செய்யப்படுகிறது. வருண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால்வருண அமைப்பில் உருவாகிய சமூக அமைப்பினை, சமூக சமநீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.

வருண அமைப்பில் தோன்றிய உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற  ஏற்றத் தாழ்வு உணர்வு சமீப காலத்தில் தோன்றியதாகும் என்று எழுதியுள்ளார் கோல்வால்கர்.

எவ்வளவு பெரிய கோணிப் புளுகு இது! மனு தர்மத்தை வெள்ளைக்காரனா எழுதினான்?

இவர்களின் சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன?

மனுஸ்மிருதியில் எடுத்த எடுப்பில் முதலாவது அத்தியாயத்தில் 87ஆவது சுலோகத்தில் உள்ளது என்ன?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினி ருந்து உண்டான பிராமண, க்ஷத்திரியர், வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு உபயோகமான கருமங்களை தனித்தனியாக பகுத்தார்.

 88வது சுலோக பதில்:

பிராமணனுக்கு ஓதுவித்தல்; ஓதல், யக்யம் செய்தல், தானங் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய தொழிலை ஏற்படுத்தினர்.

91வது சுலோகத்தில்

சூத்திரனுக்கு இம்மூன்று வருணத்தாரும் பொறாமை இன்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.

இதன்படி கீழ்ஜாதி மக்களுக்கு காலங்காலமாய் கல்வி அதன் காரணமாய் வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப் பட்டதன் விளைவாக எழுந்த குரல் தான் பிறகு சமூகநீதி முழக்கமாய் மாறியது.

எல்லார்க்கும் எல்லாம் என்றால் இடஒதுக்கீடு தேவைப்படாது. இருப்பது குறைவானது; பசித்தவர்கள் அதிகம். யாருக்குத் தரப்படல் வேண்டும் என்பதற்கான பதில்தான் இடஒதுக்கீடு.

பசியேப்பக்காரனுக்கு முதல் பந்தி புளியேப்பக்காரனுக்குக் கடைசிப் பந்தி
இது எப்படி தவறாகும்?

உயர்ஜாதியினரால் சேவை என்ற முகமூடி போர்வையைப் போர்த்திக் கொண்டு ஹிந்து வருண தர்மத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஹிந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவர் எப்படி ஜாதியை ஒழிக்கச் சொல்வார்?

ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன்?

(2) நாடு முழுவதும் முன்பு அரும்பாடுபட்டு முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது ஒப்புக் கொள்ள வைத்த ஜாதிவாரி கணக்கு - மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும்போது இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையின்படி, எடுக்கப்பட்ட ஜாதிவாரி புள்ளி விவரத்தை - சென்சஸ் மக்கள் தொகை கணக்கீட்டை, பழைய சட்ட வரைமுறையின்படி அது ரிஜிஸ்டிரார் ஜெனரல் சுதந்தரமாக வெளியிட வேண்டிய கணக்கீட்டை, இம்முறை மோடி அரசு பிரதமர் அலுவலகம் மூலம் வெளியிட்டதே -சட்ட நடைமுறை விரோதச் செயல் அல்லவா! அதுவல்லாமல் முழுமையாக ஜாதி வாரியும் இணைத்து வெளியிடாமல் மதக் கணக்கினை மட்டும் வெளியிட வேண்டிய அவசரம் என்ன?

ஜாதிவாரியான கணக்கீடு வெளியிடாததற்கு தென்னை மரத்தில் ஏறியவன் புல் பிடுங்கப் போனதாகச் சொன்ன சமாதானம், போல தவறுகள் உள்ளன என்று ஏனோ தானோ வெண்டைக்காய் விளக்கம் எதற்கு? மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாகத் தானே வெளியிடப்பட வேண்டும்? இதனை பிரதமர் அலுவலகமா ஆணையிட்டு சில பகுதிகள் மட்டும் வெளியிட வேண்டும்?

எனவே, ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். மாய்மாலம் சுத்தப் புரட்டு ஆகும்!

அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம் பெற்றுள்ளதை அறியாதவர்களா இவர்கள்?

 அறியாமையா? தகிடு தத்தமா?

(3) தற்போதைய சமூகநீதி இடஒதுக்கீட்டுக் கால நிர்ணயம் இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி வேலை வாய்ப்பில் கிடையாது.

அரசியல் தேர்தலில் ரிசர்வ் தொகுதிக்குத்தான் 10 ஆண்டு முதலில் கூறி அது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அதையும், காலநிர்ணயம் செய்யப்படாத கல்வி, வேலை வாய்ப்பையும் ஒன்றாகக் குழப்புவதும் ஒன்று அறியாமை; இன்றேல் திட்டமிட்டு தகிடுதத்தம்  புரிந்து கொள்ளுங்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

31.8.2015,
சென்னை

Saturday, August 29, 2015

மதிய உணவுத் திட்டத்திலும் கை வைக்கும் மத்திய பிஜேபி அரசு.

இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெரும் பணக்காரர்கள் - ஜாதியில் உயர்ந்த இடத்தில் இருக் கும் பார்ப்பனர்களின் கூட்டாட்சியாகவே நடைபெறுகிறது என்பது வெளிப்படை.

இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஏழை  எளிய மக்களுக்கும், சமூக நீதி தேவைப்படும் மக்களுக்கும் எதிரானதே.

ஓர் அரசின் முக்கிய கடமை அடிப்படைக் கல்வியை அனைவருக்கும் கொடுப்பதே! அந்த வகையில் தேவையான அனைத்து உதவிகளையும் ஆர்வமோடு செய்தாக வேண்டும். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசின் சிந்தனையும், செயல்பாடும் எந்தத் திக்கு நோக்கி இருக்கிறது?

திடீரென்று ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. மாநிலங்களில் மிக முக்கியமாக செயல்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கப்படும். மானியம் இல்லாத எரிவாயு உருளைக்கான உதவி நிதியை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் பொருள் என்ன? வீட்டில் மதிய உணவுக்கு வழியில்லாத நிலையில், பள்ளிகளில் அளிக்கப்படும் ஏழை, எளிய மக்கள் வீட்டுப் பிள்ளைகளின் வயிற்றில் தடி கொண்டு தாக்கும் மனிதாபிமானமற்ற  குரூர மனப்பான் மையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மட்டரகமான முடிவு இது என்பதல்லாமல் வேறு என்னவாம்?

இந்தியாவிலேயே இலவச உணவுத் திட்டத்தை (காலை சிற்றுண்டி) முதன் முதலாக அறிமுகப்படுத்தியது நீதிக் கட்சியே! பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் அதனைச் செயல்படுத்திக் காட்டினார். (இலவச புத்தகம், உடை உட்பட) அதன் காரணமாக நடைபாதைகளில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள்கூடப் பள்ளிக்கு வரும் உந்துதல் உண்டாக்கப்பட்டது.

கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது; எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக வந்தபோதும், கலைஞர் அவர்கள் ஆட்சியின்போதும் மேலும் மேலும் கவனம் செலுத்தப்பட்டு சத்துணவுத் திட்டமாகப் பரிணாமம் பெற்றது என்பது தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் குறிப்பிடத்தக்க  - அடிக் கோடிட்டுக் காட்டத்தக்க செயல்பாடாகும்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் (1.7.1982) புதுப் பொலிவுடன் இத்திட்டம் வளர்ச்சி பெற்றது 2 முதல் 5 வயதுக்குட்பட்ட முன் பருவக் கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும் இச்சத்துணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அரிசிச் சோறு, காய்கறிகள், பருப்பு உள்ளடக்கிய சத்துணவு வழங்கப்பட்டது. 1984 முதல் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டது.

1989 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்களோ, அர்த்தமுள்ள சத்துணவுத் திட்டமாக வளர்த்தெடுத்தார் சத்துணவில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டில் கொண்டைக் கடலை பச்சைப் பயிறு, வேக வைத்த உருளைக்கிழங்கு வழங்கப்பட்டன. 2006ஆம் ஆண்டில் வாரம் மூன்று முட்டைகள் அளிக்கப்பட்டன. பின்னர் 5 முட்டைகளாகின. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டது.

மதிய உணவுத் திட்டம் என்கிறபோது - இந்தியா விலேயே தமிழ்நாடு இத்திசையில் தனி அத்தியாயம் படைத்த பூமியாகும். தமிழ்நாடு அறிமுகப்படுத்திய இத்திட்டம்தான் இப்பொழுது இந்திய அளவிலே செயல்படுத்தப்படுகிறது. இந்த வளர்ச்சியைத் தடுப்பது தான் மத்திய அரசின் மனு நீதிக் கொள்கையா!?

14 வயது வரையில் அனைத்து இருபால் சிறுவர் களுக்கும் அடிப்படை  இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் 44ஆம் பிரிவு அடித்துக் கூறுகிறது. ஆனாலும் அது நிறை வேற்றப்படவில்லை; மறுபடியும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதே உறுதிமொழி மேற் கொள்ளப்பட்டது. இந்த அடிப்படைக் கடமைகூட நிறைவேற்றப்படாத நிலையில் மதிய உணவுத் திட்டத்தைக் கொல்லைப்புற வழியாக மத்திய பிஜேபி ஆட்சி முடக்குவது - ஒரு வகையான மனுதர்மச் சிந்தனையே!

வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லி கடல் அளவுப் பிரச்சாரம் செய்து மக்களை மயக்கி ஆட்சிப் பீடம் ஏறிய நரேந்திரமோடி பள்ளிப் பிள்ளைகளின் கல்விக் கண்களைக் குத்துவது எந்த வகையில் நியாயமானது?
மதிய உணவு திட்டத்தால் இந்தியா முழுமையும் பலன் அடையும் மாணவர்கள் 10 கோடி உதவி பெறும் பள்ளிகளில் எண்ணிக்கை 11.67 லட்சமாகும்.

இதனை மேலும் வளர்க்க வேண்டிய ஓர் அரசு, அதனைக் குழி தோண்டிப் புதைக்க எத்தனிக்கலாமா? கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியைக்கூட இந்தப் பிஜேபி அரசு குறைத்து விட்டது என்பது கசப்பான - வெளிப் படுத்தித் தீர வேண்டிய உண்மையாகும்.

1966ஆம் ஆண்டு கோத்தாரி ஆணையம் மத்திய அரசின் மொத்த உற்பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியது. ஆனால் அதிகபட்சமாக ஒரே ஒரு ஆண்டில் மட்டும்தான் 4.2 விழுக்காட்டை எட்டியது. பிஜேபி ஆட்சியில் கடந்த நிதியாண்டில் கல்விக்கான நிதி ரூ.4000 கோடி  குறைக்கப்பட்டது. இதனால் படிப்பில் இடை யில் நிற்கும் (Dropouts) மாணவர்களின் எண்ணிக்கை கூடுதல் ஆகும் ஆபத்து இருக்கிறது.

இவ்வளவுக்கும் கல்விக்கென்று அரசு தனி வரியையே வசூலிக்கிறது. மதிய உணவு திட்டத்திற்குக் கடந்த ஆண்டு ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இவ் வாண்டோ வெறும் ரூ.9 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் மதிய உணவுக்கான எரிவாயு மானியத்தையும் நிறுத்துகிறது என்றால் இதன் பின்னணி என்ன?

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 6 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுக்கும் அரசுக்கு மதிய உணவுக்கான எரிவாயு மானியத்தினால் என்ன நெருக்கடி ஏற்படப் போகிறதாம்?

குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் ஏற்கனவே ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குலத் தொழிலைச் செய்தால் அது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது என்று கூறப் பட்டுள்ளது. இதன் மூலம் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) குலக் கல்வித் திட்டத்தை வேறு வழியில் அமல்படுத்த முனைந்துள்ளது.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்கிற மனு தர்ம ஆட்சியை (பிஜேபியின் நோக்கமே இந்துத்துவா ஆட்சியை அமைப்பதுதானே!) மறைமுகமாகக் கொண்டு வருகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களே உரிமைப் போருக்குத் தயாராவீர்!

மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியம் ரத்து குறித்து தமிழ்நாடு அரசு வாயைத் திறக்காதது ஏன்? அரசு விளக்க வேண்டும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...