Friday, August 31, 2012

டெசோ : தாக்கமும் ஆக்கமும்


டெசோ : தாக்கமும் ஆக்கமும்
ஈழத்தமிழர்களுக்கு இன்னல் நேரும் போதெல்லாம் தமிழகத்திலிருந்து வரும் முதல் குரல் திராவிடர் கழகத்திடமிருந்துதான்! 2008, 1995, 1983 என்று வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் எவருக்கும் இந்த உண்மை தெளிவாகத் தெரியும். திராவிடர் கழகம் தனித்தும்,
ஒத்த கருத்துடைய அமைப்புகளை இணைத்துக் கொண்டும் ஈழத்தமிழர் நலனுக்கான குரலை தொடர்ந்து எழுப்பி வருகிறது. தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இச்செய்தியை எட்டச் செய்ததில் திராவிட இயக்கங்களின் பணியை யாரும் குறைத்துவிட முடியாது.

அதிலும் குறிப்பாக திராவிடர் கழகம் எந்தச் சூழலிலும், எந்த இன்னலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து களத்தில் இருக்கிறது. 1983-ல் ஈழ விடுதலை மாநாட்டை நடத்தியதிலிருந்து தொடர்ந்து எத்தனை எத்தனை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், விளக்கக் கூட்டங்கள், மாநாடுகள்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் இந்த தொடர்ந்த செயல்பாடுகளுக்குக் காரணம் இந்த இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான இனநலமும், மனிதநேயமும் தான்! 1983-ல் மட்டுமல்ல, 1939-லேயே தந்தை பெரியார் அவர்கள் இது குறித்துக் கொண்டிருந்த கவலையை 1939 ஆகஸ்ட் 13-ஆம் நாள் குடிஅரசு வெளிக்காட்டுகிறது.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை சர்க்கார் கொடுமையாய் நடத் துவதையும் அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் இந்தக் கமிட்டி வன்மையாய்க் கண்டிக் கிறது. அதற்குத் தோழர்கள் ஈ.வெ.ரா., ராவ் பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்,  சவுந்தர பாண்டியன் ஆகியவர்களை இலங்கை சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது. (குடிஅரசு 13.8.1939)
இதனுடைய நீட்சியாகத் தான் திராவிட முன்னேற்றக் கழகமும் 1956 முதல் இப்பிரச்சினையில் கவனம் செலுத்திவருகிறது. 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற கொடுமைகளையொட்டி தமிழகத்தைத் திரட்டி போராட்டக் களத்தில் நிறுத்தியதும், போர்க் களத்தில் நின்ற போராளிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டியதும் இவ்வியக்கங்கள் செய்த பணியே! 1985-ஆம் ஆண்டு தமிழீழ ஆதரவாளர் அமைப்பு ஜிணிஷிளி என்ற பெயரில் கலைஞர் அவர்கள் தலைமையில் ஓர் அமைப்பினை உருவாக்கி, அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, பேராசிரியர் அன்பழகன், மதுரை பழ.நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து தமிழகம் முழுக்க சுழன்றடித்துப் பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு தமிழர்களைத் திரட்டினர்.
ஆண்டன் பாலசிங்கம், சந்திரகாசன் ஆகியோர் நாடு கடத்தப்படுவதைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட போராட்டமும், அன்றைய டெசோ மாநாடும் ஏற்படுத்திய தாக்கமும், ஊக்கமும் தான் ஈழத்தமிழர் பிரச்சினையை தமிழ்நாட்டுத் தமிழர்களின் கடமையாக ஆக்கியது. இது டெசோவின் முதல் அத்தியாயம்.
கொடுமையான முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான முன்னெடுப்புகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. மனித உரிமை என்ற அடிப்படையிலும், போர்க்குற்றங்கள் என்ற அடிப்படையிலும் இப்போது தான் இப்பிரச்சினை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அய்ந்தாம் கட்ட ஈழப் போராட்டம் என்பது உலக நாடுகளிடை யேயான அரசியலைப் புரிந்து கொண்டு அவற்றின் உதவியோடு மேற்கொள்ளப்படும் பன்னாட்டு அரசியல் போராட்டமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை காலம் உணர்த்தியுள்ளது. தனி ஈழம் தான் தீர்வு என்று தி.மு.க. தலைவர் கலைஞரும் அறிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் மீண்டும் டெசோ செயல்படவேண்டும் என்ற கருத்தினை கடந்த மார்ச் மாதத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்வைத்தார். கட்சி அரசியல் மாச்சரியங்களைக் கடந்து தமிழர் நலன் என்ற ஒற்றை நோக்கில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார். தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு மீண்டும் டெசோ உருவானது; விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களையும் இணைத்துக் கொண்டு விரிவானது.
மீண்டும் டெசோ உருவானதன் அதிர்வலை களை எங்கும் உணரமுடிந்தது. தமிழக எல்லையைக் கடந்து இந்திய அளவிலும், அதனையும் கடந்து சிங்கள ஆட்சியாளர்களிடமும் இதன் தாக்கம் தெரிந்தது. டெசோ மாநாடு என்று அறிவிக்கப்பட்டதும், சிங்கள புத்தபிக்குகள் இந்தியப் பிரதமருக்குக் கண்டனக் கடிதம் எழுதினார்களாம். இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம், அதேபோல இந்திய அரசும் நடந்து கொள்ள வேண்டும் என்பது போல் மிரட்டல் தொனிக்கும்படி இருந்ததாம் அக்கடிதம். இன்னொரு புறம் சிங்கள அமைச்சர்கள் டெசோ குறித்து, தங்கள் கண்டனத்தை வெறிக் கூச்சலுடன் பதிவு செய்தனர்.
சிங்கள இன வெறியர்கள் டெசோ இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாகக் கூக்குரலிட்டனர். இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர மேனனும் இலங்கை சென்று பேசிவந்ததாகவும் தகவல்கள் வெளியாயின. தனி ஈழம் தான் தீர்வு என்று கலைஞர் சொன்னபோது, அதற்கு திமிரான பதிலும் வந்தது சிங்கள அமைச்சர் ஒருவரிடமிருந்து! இப்படியாக, டெசோ சிங்கள வெறியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், உள்ளூர் மேளங்கள் எப்போதும் போல் தனித்தனியாக அடித்துக் கொண்டிருந்தன. கலைஞர் டெசோ என்று மீண்டும் அறிவித்ததும், பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனக் கொடுக்கு ஊடகங்களும் தங்கள் அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடங்கின.
உள்ளூர் அரசியலைக் கருத்தில் கொண்டு சில தலைவர்கள் கலைஞரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தனர். சில ஈழ வியாபாரிகள் டெசோவைக் கண்டு அலறினர். முதலில் மித்ரபேதம் செய்ய முயன்றனர். டெசோவினால் பலன் இல்லை என்றனர். டெசோ உண்மையானது இல்லை என்றனர். தமிழர் ஒற்றுமையைக் கருதாமல் தங்கள் சுயலாபத்துக்காக டெசோவிற்கும் கலைஞருக்கும் எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்தனர். அதனால் பார்ப்பன ஊடகங்களின் விளம்ப ரங்களைப் பெற்றார்கள்.
டெசோ : தாக்கமும் ஆக்கமும்
இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் டெசோ தான் தீர்மானித்த பாதையில் பயணத்தைத் தொடர்ந்தது. முதலில் விழுப்புரத்தில் மாநாடு என்று அறிவித்திருந்த டெசோ தலைவர் கலைஞர், டெசோ சார்பில் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தவுடன், ஆஹா... பார்த்தீர்களா! இவர்கள் இந்திய அரசுக்குப் பணிந்துவிட்டார்கள்! மாநாடு நடக்காது என்று கூத்தாடினார்கள். பின்னர் ஆகஸ்ட் 12 அன்று ஒய்.எம்.சி.ஏ திடலில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
பன்னாட்டு அளவிலும், இந்திய அளவிலும் தலைவர்களைப் பங்கேற்கச் செய்ய திட்டமிட்டுச் செயலாற்றியது டெசோ. மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பன்னாட்டுப் பேராளர்களுக்கு அனுப்பப்பட்ட கருத்துருவை கலைஞர் வெளியிட்டபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில், தனி ஈழத்தைப் பற்றி கருத்து இருக்கிறதே தவிர, அதை இப்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக உத்தேசமில்லை. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது, அவர்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்துவது, அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைவது, இவற்றில் எப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கலாம், நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம் என்பதற்காகத்தான் இந்த மாநாட்டைக் கூட்டி, அதிலே கலந்து கொள்கின்றவர்களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும் நாங்கள் முக்கியமாகக் கருதி, அவற்றின் அடிப்படையில் அமைதியான முறையில் அறவழியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுதான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய திட்டமாகும்'  என்று குறிப்பிட்டார். டெசோவை எதிர்த்து, அதனால் பலன் இல்லை என்று கூப்பாடு போட்ட சிலர், கலைஞர் தனி ஈழம் என்பதைக் கைவிட்டுவிட்டார் என்பது போல திரிக்கத் தொடங்கினர்.
பன்னாட்டுப் பேராளர்களும், வட இந்தியத் தலைவர்களும் கலந்து கொள்ளும் மாநாட்டில் ஜனநாயகப்பூர்வமாக எதுவும் விவாதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும், வாழ்வுரிமை மீட்பு என்பதை முன்னிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து, ஒத்துழைப்பையும் பெற்று பன்னாட்டின் ஆதரவைப் பெற முயற்சிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், முதலில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பது சார்ந்தும் தனி ஈழ ஆதரவுத் தீர்மானம் என்பது தனியே இடம்பெறவில்லை. ஆனால் கிடைத்தது வாய்ப்பென்று, தமிழீழத்தை கருணாநிதி கைவிட்டுவிட்டார்; ஈழம் இல்லாமல் எதற்கு டெசோ மாநாடு? என்று பொங்கினார்கள்.
டெசோவால் பலன் இல்லை என்றவர்கள், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தைப் பற்றிக் கவலைப்படுவானேன்? வீணான மாநாடு என்று சொன்ன பிறகு, அதில் தனி ஈழத் தீர்மானம் போட்டால் மட்டும் ஆதரிக்கவா போகிறார்கள். (தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு என்று, பெயரிலேயே தன் நோக்கத்தைக் கொண்ட அமைப்பு தனியாகத் தீர்மானம் போடவில்லையே தவிர, ஒவ்வொரு தீர்மானத்திலும் அது குறிப்பிட்டிருப்பதென்ன என்பதைப் பிறகாவது புரிந்துகொண்டிருப்பார்களா? தீர்மானம் குறித்துத் தொடக்கத்தில் கவலைப்பட்டவர்கள், இடம் கிடைத்ததென கட்டுரை தீட்டியவர்கள் - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவேயில்லை! அவ்வளவு நாணயம்!!)
பன்னாட்டு அறிஞர்கள் வர மாட்டார்கள் என்றார்கள். இலங்கையிலிருந்து யாரும் வரக்கூடாது என்றார்கள்.  டெசோ மாநாடு இலங்கை இறையாண்மைக்கு எதிரானது எனவும், இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன சிங்கள அரசின் கருத்தை வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்கள் இங்குள்ள சில தமிழின காப்பாளர்கள்(!) என்போர்.
டெசோ : தாக்கமும் ஆக்கமும்மாநாட்டுப் பணிகள் வெகு தீவிரமாக நடக்க நடக்க, அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு, தனது பார்ப்பனியத்தைக் காட்டத் தொடங்கியது. மாநாடு நடக்க இருந்த கடைசி நாட்களில் ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் என்று ஒருவரைப் பிடித்து மாநாடு நடத்த தடை வழங்க வேண்டும் என்று வழக்குப் போட வைத்தது. மாநாட்டால் மருத்துவமனை நோயாளிகளுக்குத் தொல்லை ஏற்படும் என்று வழக்காம்! அங்கே விஜய் டிவியின் விழாக்கள் நடந்தபோதும், அய்.பி.எல் கிரிக்கெட் தொடக்க விழா நடந்தபோதும் ஆ.ஊ.சங்கத் தலைவர் ராமச்சந்திரன் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேட்கத் தோன்றுகிறதா? விடுங்கள், அம்பை நோவானென்?
வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொண்டது டெசோ. ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடத்துவது பற்றி காவல்துறை முடிவு செய்யட்டும் என்று முதலில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விடிய விடிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அனுமதி இல்லை என்றது சென்னை காவல்துறை. மேல்முறையீட்டுக்குச் சென்றது தி.மு.க. மாநாட்டை எப்படியும் நடத்தியே தீர்வது என்று மாற்று இடமாக அண்ணா அறிவாலயத்தை அறிவித்து தயாரிப்பு வேலைகள் நடந்தன.
பன்னாட்டுப் பேராளர்களுக்கு விசா கிடைக்காது; ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று வெளியுறவுத் துறையிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது என்று ஈழத்தை ஆதரிப்பதாகச் சொல்வோர் ஈழம் கூடாது என்று மத்திய அரசு சொல்வதாகக் கூறி மகிழ்ச்சியடைந் தார்கள். ஈழம் இல்லாமல் ஒரு ஈழ ஆதரவு மாநாடா என்று கேலி செய்தார்கள். வரலாற்றுக் காரணங்களை முறையாக எடுத்துச் சொல்லி, இந்திய அரசின் உள் துறையிடமிருந்தே ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடையில்லை என்று அனைவருக்குமான அனுமதியையே எழுத்து வடிவில் பெற்றுத் தந்தது டெசோ. படிப்படியாக அத்தனைத் தடைகளையும் தகர்த்து, கடைசியில் மாநாடு நடக்க வேண்டிய அதே நாளில் விடுமுறை என்பதையும் தாண்டி நீதிமன்றத்தின் கதவைத் தட்டி, நீதியைப் பெற்றுவந்தது தி.மு.க! ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலையில் அக்கார்ட் விடுதியில் தொடங்கியது மிக முக்கியமான ஆய்வரங்கம். பன்னாட்டுப் பேராளர்களும், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட முக்கிய இந்தியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குபெற்றனர். சிங்கள அரசின் கடுமையான கண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை நாடாளுமன்ற தமிழ் எம்.பி.க்கள் வராவிட்டாலும், சிங்களவராயினும் இடதுசாரித் தலைவரான விக்ரமபாகு கருணரத்னே கலந்துகொண்டார். திட்டமிட்ட வண்ணம் காலையில் வெற்றிகரமாக நடந்த ஆய்வரங்கத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற ஆணையோடு அதே ஒய்.எம்.சி.ஏ அரங்கில் மாநாடு தொடங்கியது.
கட்டுப்பாடான மக்கள் திரண்ட இன உணர்வுக் கூட்டத்தின் மத்தியில் காலையில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. போர்க்குற்றங்கள், பண்பாட்டுக் கூறுகள் அழிப்பு, தமிழர்களிடம் இருந்து வன்பறிப்புக்கு ஆளாகும் நிலங்கள், சிங்களக் குடியேற்றம், அகதிகள் மறுவாழ்வு, அய்.நா. அவை மூலம் வாக்கெடுப்பு, தமிழர்களுக்கான முடிவை தமிழர்களே எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காஷ்மீர் பரூக் அப்துல்லா தலைமையில் இயங்கும் தேசிய மாநாட்டுக் கட்சி, மகாராஷ்டிரா சரத் பவாரின் தேசீயவாதக் காங்கிரஸ் கட்சி, இராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் லோக் ஜனசக்தி கட்சி (பீகார்) இப்படி பலரும், இலங்கை அரசின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது கலந்து கொண்ட சிங்கள இனத் தலைவர் மனிதநேயர் நவ சம சமாஜ கட்சி எம்.பி. விக்ரம பாஹு கருண ரத்னே, ஆம்நெஸ்டி இண்டர்நேஷனல் சார்பில் கலந்துகொண்ட ஆனந்த் குருசாமி, நைஜிரியா, துருக்கி, மொராக்கோ, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட பன்னாட்டுப் பேராளர்களும், வடபுலத் தலைவர்களும் உரையாற்றினர். உணர்வுடன் கூடிய மக்கள் மத்தியில், தங்கள் நாடுகளிலும் மாநிலங்களிலும் டெசோ பணிகளை முன்னெடுக்க வேண்டும்; மக்களுக்கு விளக்க வேண்டும்; ஆதரவு திரட்ட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
கூடிக் கலைந்த மாநாடாக அல்லாமல், எதிரிகளின் கூட்டைக் கலைக்கும் மாநாடாக நடைபெற்றது டெசோ. சிங்களர்களும், பார்ப்பனர்களும் டெசோ-வின் வலிமையை நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் அவர்களின் துடிப்பு நன்கு வெளிப்பட்டது. தமிழகத்திற்கு வெளியில் டெசோவை ஆபத்தானதாகவும், தமிழர்களுக்கு மத்தியில், டெசோவைக் கேலி செய்தும் தொடர்ந்து தங்கள் பிரச்சாரத்தை நடத்தின.
டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயற்பாடு களை வலுப்படுத்த வேண்டும். தனி ஈழத்தை உருவாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றும் "டெசோ'வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஐ.நாவில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட ஈழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதைப் பார்க்கவேண்டும். என்று சிங்கள இனவெறி அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். மேலும், கொழும்பில் இந்திய தூதரின் இல்லத்துக்கு முன்பாக "தேசிய இயக்கங்களின் ஒன்றியம்" என்ற பெயரில் சிங்களவர்களுடன் ஒன்று திரண்டு, டெசோ தலைவர் கலைஞர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரது உருவ பொம்மைகளை தீ வைத்துக் கொளுத்தி தங்களது இனவெறியை வெளிப்படுத்தினர்.
மாநாட்டில் கலந்துகொண்டு துணிச்சலாக தனது கருத்துகளை வெளிப்படுத்திய சிங்கள இடதுசாரித் தலைவரான விக்கிரமபாகு மீண்டும் இலங்கை திரும்ப முடியாவண்ணம் அச்சுறுத்தல்கள் செய்யப்பட்டன. தற்போது இந்த கோரிக்கையை வற்புறுத்தி, இந்த பிரிவினைவாதிகளின் போர்வை யில் சென்னையில் மாநாடு நடைபெற்றுள்ளது. தேசப்பற்றுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கக் கூடாது. தனி ஈழக் கொள்கைக்கு எதிராக, நாட்டு மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று மகிந்த ராஜபக்சே பதறினார். டெசோ தனது அடுத்த கட்டப் பணிகளை மிகத் தெளிவாகத் தொடங்கியது. ஆக்கபூர்வமான தீர்மானங்கள் உலக அரங்கில் அய்.நா. முதல் பற்பல நாடுகள், ஜன சமூக அமைப்புகள், இந்திய அரசின் செயல்பாட்டை விரைவுபடுத்திடும் பணிகளை எல்லாம் இனி செய்ய வேண்டும்.
ஒத்த கருத்துள்ள அனைவரும் ஒன்றுபட்டு நிற்காவிட்டாலும்கூட தனித் தலைமையோடும், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்குப் பாடுபட உறுதியோடு முயற்சிக்க வேண்டும். வீண் விமர்சனங்களில் பொது எதிரியான ஹிட்லரிசத்தின் தர்பாரில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள்ளாகி யுள்ளவர்களை மீட்டெ டுத்து மான வாழ்வு, உரிமை வாழ்வு வாழ வகை செய்ய வாரீர்! என்று மீண்டும் அழைப்பு விடுத்தார் கி.வீரமணி. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, டெசோவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும்,  கலைஞரின் விளக்கக் கடிதத்தையும் நேரில் கொடுத்தனர். தனது விளக்கக் கடிதத்தில்,
1. மாநாடு முடிவு செய்தபடி இலங்கையிலுள்ள தமிழர்கள் கோரி வரும் அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்ய அவர்களுக்கு உரிமைகள் வழங்கும் தீர்மானத்தை அய்.நா. பொதுச் சபையிலும், அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலிலும் கொண்டு வர வேண்டும்.
2. அதைத் தொடர்ந்து இந்திய அரசால் முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக அய்.நா. அமைப்பின் இதர உறுப்பு நாடுகளைக் கொண்டுவர சாத்தியமான அனைத்து ராஜிய உக்திகளையும் எடுக்க வேண்டும்.
3. இந்தியாவில் வாழும் அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை அல்லது நிரந்தர வசிப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.
4. தமிழர்களுக்கான மறுவாழ்வு உதவியாக இந்திய அரசு வழங்கிய ரூ.500 கோடி மற்றும் இதர பொருள் உதவிகள் இப்பணிகளுக்காக முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை அனுப்ப வேண்டும்.
5. சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் விடுதலை. வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தாய்நாடு திரும்புதல், தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மீட்டல், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்தல், மருத்துவ வசதிகள் விரிவாக்கம் மற்றும் 10 ஆவது தீர்மானத்தில் கோரியவாறு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை உட்பட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் அதன் முன்னணிப் பாத்திரத்தை வகித்தல்;
6. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கச்சத்தீவை மீண்டும் எடுத்தும் தனுஷ்கோடி அல்லது மண்டபத்தில் இந்திய கடற்படை தளம் அமைத்தல் (தீர்மானம் 11) ஆகியவை மூலமாக இலங்கைக் கடற்படை தாக்குதல்களிலிருந்து இந்திய மீனவர்களைக் காப்பாற்ற முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
7. இந்த மாநாடு கோரியவாறு (தீர்மானம் 12) இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அளிப்பதைத் தவிர்த்தல்.
டெசோ : தாக்கமும் ஆக்கமும்
என்பவற்றைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார் டெசோ தலைவர் கலைஞர். அடுத்த கட்டமாக அய்.நா. அவையின் மனிதநேய அமைப்பின் தலைமையிடமான ஜெனீவாவுக்கு நேரில் சென்று இக்கோரிக்கை யினையும், டெசோ மாநாட்டுத் தீர்மானங்களையும் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
எந்தப் பணியை யார் முன்னெடுத்தால்  பலன் தருமோ, அவரே அதனை முன்னின்று செய்ய வேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சினையை இந்தியாவில் டெசோ முன்னெடுக்கும்போது அது கவனம் பெறுவதாக மட்டுமல்லாமல், கவனமாகச் செய்ய வேண்டிய வற்றைச் செய்வதாகவும் நடக்கிறது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளின்படி, தமிழர் நலன் என்ற ஒற்றை நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல், சமுதாய இயக்கங்களும் இணைந்து இதற்கு வலிமை சேர்க்க வேண்டும்.
- சமா.இளவரசன்


Thursday, August 30, 2012

பிள்ளைகள், அட்டையா? பனை-தென்னையா?


தென்னயப் பெத்தா இளநீரு! பிள்ளையப் பெத்தா  கண்ணீரு!! என்று நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ஒரு கவிஞர் தனது கருத்தாழத்தைக் காட்டினார்!
நம் நாட்டுக் கூட்டுக் குடும்ப முறையில், பிள்ளைகள் - இளமைப் பருவத்தில் கட்டுப்பாட்டுடன் வளர்க்க முடிந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டிருக்கிறது!
அமெரிக்கா போன்ற மற்ற வெளிநாடுகளில் இந்தக் கூட்டுக் குடும்ப முறை - குறிப்பாக - இந்து அவிபக்தக் குடும்ப முறை-  என்பதே கிடையாது!
16 வயது வரை வளர்த்து, ஆளாக்கி அதற்கான கல்வி தந்து பிறகு, அவரவர்கள் தனித்தனியே சம்பாதித்துத் தம் காலில் தாம் நிற்கவேண்டும் என்பதுதான் அங்கே உள்ள முறை.
இது அவர்களுக்குத் தக்க பாடமாக அமைந்து, அவர்களுள் பொறுப்புணர்ச்சியை விதைத்து  அவ்வளர் இளம் பிராயத்தினரை வாழ வைக்கிறது.
இளம் மாணவப் பருவத்தில் கூட, விடுமுறைகள், ஓய்வு நேரங் களில் கூட பகுதி நேரப் பணிகளின் மூலம் பணத்தைச் சம்பாதித்து சேமித்துதான் தத்தம் வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைக்கிறார்கள் இளைஞர்கள். வாழ்வதோ, வீழ்வதோ - எல்லாம் அவரவர் உழைப்பு, திறமையைப் பொறுத்ததே - அங்கு!
ஆனால் இங்கே....?
அப்பா அம்மாதான் இந்த பிள்ளை களைத் தொட்டில் - கட்டில் - பிறகு கடைசி இடுகாடு சுடுகாடு வரை தூக்கிச் சுமக்க வேண்டும்.
திருமண வயதில் மணமுடித்து, பேரப் பிள்ளைகளுக்கு நல்வரவு கூறி - நாளும் அந்த கூடுதல் சுவையையும் - மகிழ்ச்சியையும் போதை யாக்கிக் கொண்டு - மற்ற கஷ்டங் களை மறந்துவிடும் வாழ்க்கை வினோத ஆயுள் தண்டனை இந்தப் பெற்றோர்களுக்கு!
நன்றி உணர்ச்சியோடு, முதுமையடைந்த பெற் றோர்களை (பொது இல் லங்களுக்கு அனுப்பி, பரா மரிக்க வைத்துவிடாமல்) தங்களுடன் வைத்துப் பாசம் காட்டும் பிள்ளைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அருகி வருவது வேதனைக்குரியது; அதை விடக் கொடுமை என்ன தெரியுமா?
கொழுத்த சம்பளம் பெற்ற பிறகும் கூட, பெற்றோர்கள் ஓய்வூதியக்கார நிலை அடைந்தவர்கள் என்றாலும் கூட, தங்களது பிள்ளைகுட்டிகளுக்கு சீர் வரிசை செய்து, அவர்களது கல்வி, பராமரிப்பையும் இவர்களிடம் ஒப் படைத்துவிட்டு, அவர்கள் கை நிறைய , பை நிறைய சம்பளம் வாங்கி வங்கியில் போட்டு வாழுவது - இன்றைய கணினி யுகப் புரட்சியின், காட்சியின் மாட்சி!
எவ்வளவு வெட்கக்கேடானது!
காலங்காலமாக வாழ்ந்து நமக்காக ஓடானார்களே அவர்களை உயர்த்தி வைத்து, அவர்களுக்கு நாம் தென்னையாய், பனையாய் இருந்து பயனளிப்போம் என்று எண்ணிடாமல், உறிஞ்சிடும் அட்டைகளாக வாழ்வது எவ்வளவு கொடுமை!
பென்ஷன் பணத்தை மொத்த மாக வாங்கி அந்தப் பணத்தைப் பிடுங்கி தாங்கள் வீடு வாங்கிக் கொண்டு அந்த பெற்றோருக்கு வீடு மேலே வாங்கித் தர முன் னோட்டமாக முதியோர் இல்லத் தைத் தேடி அனுப்பும்   நல்ல உள் ளங்கள்(?) நாளும் பெருகலாமா?
நாகரிகம் - பண்பு - என்பது பிறர் துன்பத்தினைக் கண்டு மகிழ்வதா? ஏன் செய்தால் என்னவென்று உரிமை (அதற்கு மட்டும்) கொண்டாடுவதா? படிப்பு வளருகிறது! பிடிப்பு தளருகிறது! வருமானம் பெருகுகிறது! தன் மானம் அருகுகிறது!
அந்தோ! என்னரும் தாய் மண்ணே!
உறிஞ்சும் அட்டைகளின் கண்ணீரில் மிதந்து அணைகட்டி  பெருமைப்படுவதா வாழ்க்கை?
- கி.வீரமணி

வைத்தியரே, முதலில் உங்கள் நோயைப் பாருங்கள்!


மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கையை முன்னிலைப் படுத்தி ஒரு பிரதமரை மாற்றலாம். அதன் மூலம் தேர்தலில் அறுவடை காணலாம் என்ற நப்பாசையில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாண ஆட்டம் போடுகிறது.
சாகப் போகிறவனுக்கு ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் பெரிய தூணாகத் தெரியும் என்பதுபோல பி.ஜே.பி. நடந்து கொள்கிறது.  பிஜேபி ஆளும் மாநிலங்களிலேயே ஆட்சியும், கட்சியும் சவுத்துப் போய்விட்டன.
2014 மக்களவை  தேர்தலில் காங்கிரசும் ஆட்சியை பிடிக்காது; பி.ஜே.பி.யும் ஆட்சியைப் பிடிக்காது என்று பி.ஜே.பி.யின் மூத்தத் தலைவரும், பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளராகக் கருதப்பட்ட வருமான லால்கிஷண் அத்வானி கையை விரித்துவிட்டார். அது கட்சிக்குள் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் அதற்குச் சப்பைக் கட்டுகட்டும் ஒரு வேலையிலும் இறங்கினர். இப்படி தன்னம்பிக்கை இழந்து தளர்ந்துபோன கட்சிக்கு இந்த நிலக்கரிச் சுரங்கம் பகிர்வுபற்றி தணிக்கை அதிகாரியின் அறிக்கை உயிர் தண்ணீர் ஊற்றி இருப்பதாக நம்புகிறார்கள்.
இது ஒரு யூக நட்டம் என்று சொல்லப்படுவது ஆகும். ஆனால் நிஜ ஊழல்களைச் செய்ததில் பிஜேபியை அடித்து வீழ்த்த வேறு கட்சிகளோ தலைவர்களோ உண்டா?
இதே பிரச்சினையில் பிஜேபி ஆளும் மாநில முதல்வர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களே என்ற வினாவுக்கு அறிவு நாணயமாகப் பதில் சொல்ல முடியவில்லை அந்தக் கட்சியால். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநில பிஜேபி அரசுகளும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் குற்றச்சாற்றுக்கு ஆளானதுபற்றி பேச்சு மூச்சு இல்லையே - ஏன்?
இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்று பிரதமர் ஒளியூட்டமாக அறிவித்த நிலையில், அதனை எதிர் கொள்ள பிஜேபிக்குத் துணிவு இல்லையே  - ஏன்?
பொதுவாக இதுபோன்ற பிரச்சினையில் குற்றச் சாற்றுக்கு ஆளானவர்கள்தான் விவாதங்களை எதிர் கொள்ள அஞ்சுவார்கள் இங்கு வேடிக்கை என்னவென்றால் குற்றச்சாற்றைச் சொல்லுகிறார்கள் அஞ்சுகிறார்கள். குற்றச்சாற்றை சுமந்தவர்கள் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார்கள். எப்படி இருக்கிறது கதை!
மேலும், ஊழல் என்ற விடயத்தில் பிஜேபி மார்தட்டலாமா? அவர்கள் ஆளும் எந்த மாநிலத்தில் ஊழல் இல்லை? கருநாடகாவைவிட ஊழலுக்கு இன்னொரு மாநிலம் உண்டா?
கருநாடக மாநிலத்தில் அமைச்சர்களாக இருந்த ரெட்டிசகோதரர்கள் ஏன் சிறைபிடிக்கப்பட்டனர்? கருநாடக மாநில முதல் அமைச்சர் எடியூரப்பா ஏன் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது? இன்னும்  பிணையில்தானே இருக்கிறார்?
உத்தமபுத்திரன் பிஜேபி ஆளும் குஜராத்தில்  பாருங்கள் - பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று வாய் ஒழுக எழுதும் ஊடகங்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி; அறிவு நாணயத்துடன் பதில் சொல்வார்களா?
பி.ஜே.பி. நரேந்திர மோடியின் குஜராத் அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நிதி முறைகேடுகளைச் செய்துள்ள தாக இதே இந்தியத் தலைமைக் கணக்கு அதிகாரி கூறியுள்ளாரே!
குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு முதல் தவறான முறையில் செயல்பட்டதால், 5000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
தேவையற்ற முறையில் சலுகைகள் அளிக்கப்பட்ட நிறுவனங்களில் கவுதம் அதானி, அதானி மின்னாற்றல், ரூயாயின் எஸ்ஸார் குழுமம் மற்றும் முகேஷ் அம்பானியின்  ரிலையன்ஸ் குழுமம் ஆகியவையும் அடங்கும்.
அடக்க விலைக்கும் குறைவான விலையில் எரிவாயுவை விற்ற வகையில்  71 கோடி ரூபாய் அளவுக்கு அதானி நிறுவனத்திற்கும், கெப்பாசிடி கட்டணங்களைத் தள்ளுபடி செய்ததன் மூலம் 12.02 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கும்  குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் லாபம் அளித்துள்ளது. குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனத்தின் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் ஒரு நடைமேடையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டியதால்,  நடை மேடையின் வாழ்நாள் உறுதித் தன்மைக்கு  குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம்தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.
கிருஷ்ணா-கோதாவரி படுகையில், முறையான நிதி மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற் கொள்ளாமல் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை   குஜராத் மாநில பெட்ரோலியம் நிறுவனம் மேற் கொண்டதன் காரணமாகவே  பெரும்பாலான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் செய்யப்பட்ட மதிப்பீட்டின் அளவு ரூ. 10.223 கோடியாக இருந்தது, இறுதியில் 130 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சட்டமன்ற அவையில் இறுதி வேலைநாளில் வைத்ததன் மூலம், அதன் மீது அவையில் விவாதம் மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லாமல் மோடி செய்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இதற்குப் பதில் என்ன? வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்வீராக!

Wednesday, August 29, 2012

திராவிடர் கழகப் புதிய பொறுப்பாளர்கள்


திராவிடர் கழகம்
1. துணைத் தலைவர் :கலி. பூங்குன்றன்
பணிகள்:
அ. மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களோடு தொடர்பு
ஆ. விடுதலைப் பணி
இ. பத்திரிகை தொடர்பு
ஈ. மக்கள் தொடர்பு
உ. தலைமைச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள்
ஊ. மாநாடுகள்
எ. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
ஏ. தலைவருக்கு அனைத்து உதவிகளும்
2. செயலவைத் தலைவர்    :    சு. அறிவுக்கரசு
பணிகள்:
அ. வெளிநாடு, வெளிமாநிலத் தொடர்புகள்
ஆ. பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைப்பு
இ. தொழிலாளர் அணி ஒருங்கிணைப்பு
ஈ. இயக்க ஏடுகளில் எழுத்துப் பணி
3. பொதுச்செயலாளர் : டாக்டர் துரை. சந்திரசேகரன்
பணிகள்:
அ. பிரச்சாரம்
ஆ. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
இ. புத்தகச் சந்தை
ஈ. பகுத்தறிவுக் கண்காட்சி
உ. கலை நிகழ்ச்சிகள்
4. பொதுச்செயலாளர்:  டாக்டர் பிறைநுதல்செல்வி
பணிகள்:
அ. மகளிரணி
ஆ. மகளிர் பாசறை
இ. குழந்தைகள் முகாம்
ஈ. மருத்துவ முகாம்கள்
5. பொதுச்செயலாளர் :    வீ. அன்புராஜ்
பணிகள்:
அ. தலைமை நிலையம்
ஆ. மாவட்டக் கழகங்களோடு தொடர்பு
இ. விடுதலை மாவட்டச் செய்தியாளர்கள் தொடர்பு
ஈ. விடுதலை விளம்பரம்
உ. பெரியார் வீர விளையாட்டுக் கழகம்
ஊ. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்
எ. கழகத் தலைவரின் சுற்றுப் பயணம் - ஏற்பாடுகள்
ஏ. போட்டிகள் நடத்துதல்
அய். வெளியீடுகள்
6. பொதுச்செயலாளர்:    தஞ்சை இரா. ஜெயக்குமார்
பணிகள்:
அ. மாணவரணி
ஆ. இளைஞரணி
இ. பெரியார் சமூகக் காப்பு அணி
ஈ. ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல்
7. மாநில அமைப்புச் செயலாளர்: இரா. குணசேகரன்
பணிகள்:
அ. உறுப்பினர் சேர்க்கை
ஆ. தொடர் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடுகள்
8. பிரச்சார செயலாளர்:    வழக்குரைஞர் அருள்மொழி
9. திராவிட மகளிரணி  மாநில செயலாளர்:    கலைச்செல்வி, தஞ்சாவூர்
10. திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்:    டெய்சி மணியம்மை
11. மாநில சட்டத்துறை செயலாளர்:    வழக்குரைஞர் ச. இன்பலாதன்
12. திராவிட தொழிலாளரணி மாநில செயலாளர் :    ஆ. நாகலிங்கம், திண்டுக்கல்
13. திராவிட விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் :    குடவாசல் கணபதி
14. மாநில இளைஞரணி செயலாளர்    :    இல. திருப்பதி, இராசபாளையம்
15. மாநில மாணவரணி செயலாளர் :    இளந்திரையன், விருத்தாசலம்
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்
1. தலைவர்    :    கி. வீரமணி
2. துணைத் தலைவர்    :    கலி. பூங்குன்றன்
3. பொருளாளர்    :    கோ. சாமிதுரை
4. செயலவைத் தலைவர்    :    சு. அறிவுக்கரசு
5. ராஜகிரி கோ. தங்கராசு
6.  முனைவர் துரை. சந்திரசேகரன், பொதுச்செயலாளர்
7. டாக்டர் பிறைநுதல் செல்வி, பொதுச்செயலாளர்
8. வீ. அன்புராஜ், பொதுச்செயலாளர்
9. தஞ்சை இரா. ஜெயக்குமார், பொதுச்செயலாளர்
10. இரா. குணசேகரன், அமைப்புச் செயலாளர்
11. அ. அருள்மொழி, பிரச்சார செயலாளர்
12. ச. இன்பலாதன், சட்டத்துறை மாநில செயலாளர்
13. ஆ. நாகலிங்கம், திராவிடத் தொழிலாளரணி மாநில செயலாளர்
14. குடவாசல் கணபதி, திராவிட விவசாய அணி மாநில செயலாளர்
15. தஞ்சை கலைச்செல்வி, திராவிட மகளிரணி மாநில செயலாளர்
16. டெய்சி மணியம்மை, திராவிட மகளிர் பாசறை செயலாளர்
17. இராசபாளையம் இல. திருப்பதி, மாநில இளைஞரணி செயலாளர்
18.  இளந்திரையன் விருத்தாசலம், மாநில மாணவரணி செயலாளர்
19. மதுரை தே. எடிசன் ராசா, தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர்
20. க. பார்வதி
21. திருமகள்
22. பழநி. புள்ளையண்ணன்
23. சாமி. திராவிடமணி
24. நாகர்கோவில் ப. சங்கர நாராயணன்
25. திருப்பத்தூர் (வ.ஆ.) கே.சி. எழிலரசன்
ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
1. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர்
1. வடசென்னை 2. தென்சென்னை 3. கும்மிடிப்பூண்டி 4. ஆவடி
2. சு. அறிவுக்கரசு, செயலவைத் தலைவர்
1. வேலூர் 2. திருப்பத்தூர் 3. செய்யாறு 4. அரியலூர் 5. பெரம்பலூர் 6. திருச்சிராப்பள்ளி 7. லால்குடி
3. ராஜகிரி கோ. தங்கராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. தஞ்சாவூர் 2. பட்டுக்கோட்டை 3. கும்பகோணம்
4. டாக்டர் துரை. சந்திரசேகரன், பொதுச்செயலாளர்
1. சிதம்பரம் 2. விருத்தாசலம் 3. நீலமலை 4. கோவை மாநகர் 5. திருவண்ணாமலை 6. பொள்ளாச்சி 7. திருப்பூர் 8. மேட்டுப்பாளையம்
5. டாக்டர் பிறைநுதல்செல்வி, பொதுச்செயலாளர்
1. ஈரோடு 2. கோபி 3. நாமக்கல் 4. கரூர்
6. தஞ்சை இரா. ஜெயக்குமார், பொதுச்செயலாளர்
1. விழுப்புரம் 2. கடலூர் 3. கல்லக்குறிச்சி 4. புதுச்சேரி 5. நாகப்பட்டினம் 6. திருவாரூர் 7. மயிலாடுதுறை 8. காரைக்கால் 9. திருத்துறைப்பூண்டி
7. இரா. குணசேகரன், அமைப்புச் செயலாளர்
1. கன்னியாகுமரி 2. திருநெல்வேலி 3. தென்காசி 4. தூத்துக்குடி
8. மதுரை தே. எடிசன்ராஜா, தலைமைச் செயற்ழு உறுப்பினர்
1. மதுரை மாநகரம் 2. மதுரை புறநகர் 3. திண்டுக்கல் 4. பழனி
9. சாமி. திராவிடமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. புதுக்கோட்டை 2. அறந்தாங்கி 3. காரைக்குடி
10. க. பார்வதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. திருவள்ளூர் 2. காஞ்சிபுரம் 3. அரக்கோணம்
11. இ. திருமகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. செங்கற்பட்டு 2. தாம்பரம்
12. பழநி. புள்ளையண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. சேலம் 2. ஆத்தூர் 3. மேட்டூர் 4. தருமபுரி 5. கிருட்டினகிரி
13. ச. இன்பலாதன், சட்டத்துறை செயலாளர்
1. சிவகங்கை 2. இராமநாதபுரம்
14. இல. திருப்பதி
1. விருதுநகர் 2. தேனி
கழகத் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு...
இவை கழக வளர்ச்சி கருதி செய்யப்பட்டுள்ள ஒரு புதிய ஏற்பாடு.
பொறுப்பாளர்களுக்கு அவர்தம் பணிகளை செவ்வனவே ஆற்றுவதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டுகிறோம்.
மற்றபடி, இந்த அறிவிப்புகளையொட்டி,
தனிப்பட்ட பாராட்டுகள், பிளக்ஸ் விளம்பரங்கள், சுவரொட்டிகள் இவைகளையெல்லாம் செய்வதை அறவே தவிர்த்து, அவரவர்கள் தத்தம் கடமைகளை தொய்வின்றித் தொடருவதிலேயே கண்ணுங்கருத்து மாய் இருந்து கழக வளர்ச்சிக்குத் துணை புரிய கேட்டுக்கொள்கிறோம்.
கழகத் தலைவர் மன்னையில் 27.8.2012 இல் தெரிவித்தபடி, விளம்பரப் பதாகைகள் கொள்கைப் பிரச்சார வாய்ப்பாக மட்டும் பயன்படுத்தவேண்டும்.
கடவுளை மற, மனிதனை நினை
சாதி ஒழிந்த சமுதாயமே நமது கழக லட்சியம்,
சமூகநீதிக்கு என்றும் குரல் கொடுப்போம்,
மானமும் அறிவும் மனிதர்க்கழகு - தந்தை பெரியார்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு - தந்தை பெரியார்
மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!
தற்குறி இனத்தை மாற்றித் தரணியெங்கும் தமிழர்களை அனுப்பியது - திராவிடமே!
போன்ற வாசகங்கள், அய்யா, அம்மா, கழகத் தலைவர் ஆகியோர் படங்கள் பதாகைகளில் இடம்பெறலாம்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...