Monday, November 30, 2009

நாத்திகர் ஆனாரா தாக்கரே?


நாத்திகர் ஆனாரா தாக்கரே?

மும்பை சிவசேனா வீரர் பால்தாக்கரே நாத்திகர் ஆகிவிட்டாராம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
தம் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “சமானா" வில் எழுத்து வடிவத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் என்பதால் இதனை அலட்சியப்படுத்தவும் முடியாது.

பொதுவாக சங்பரிவார்க் கூட்டம் ஒன்றை முதலில் சொல்லும்; அது குறித்து பிரச்சினை வெடித்தால் “அய்யய்யோ நான் அப்படி சொல்லவேயில்லையே!” என்று சத்தியம் செய்யும்.

ஆனால் பால்தாக்கரே இப்பொழுது தன் கட்சியின் ஏட்டிலேயே வெளிப்படையாக எழுதி விட்டாரே!

பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையிலா? பொருள் முதல்வாதம், எண்ண முதல்வாதம் என்ற அடிப்படையில் ஆழச் சிந்தித்து ஆத்திகத்தை ஆயிரம் அடியின் கீழ் புதைந்து விட்டு, நாத்திகராகக் கம்பீரமாக வெளிவந்துள்ளாரா என்ற கேள்விக்கு விடை கூறுதல் கடினம்தான்.

நடைபெற்ற மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மண் கவ்வியதால் ஏற்பட்ட தோல்வியின் சம்மட்டி அடியால் துவண்டு போன மனிதன், தோல்வி ஜன்னியில் இப்படி உளறுகிறாரா என்ற கேள்வியிலும் அர்த்தம் உண்டு.

“மராட்டியர்கள்தான் என் முதுகில் குத்தி விட்டனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு தீய சக்தியானது மராத்தி மக்களிடம் இருந்து என்னைப் பிரித்து விட்டது. எனக்கு மராட்டியர்கள் மீதும், கடவுள் மீதும், ஏன் எல்லா வற்றிலுமே நம்பிக்கை போய்விட்டது. இதைச் சொல்வதற்காக மிகுந்த வேதனைப்படுகிறேன். அதே சமயம் உண்மையை மறைக்கவோ, அல்லது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதையோ நான் விரும்பவில்லை’’ என்று மாரடித்து ஒப்பாரி வைத்துள்ளார்.

அடேயப்பா! எவ்வளவு பெரிய “வீராதி வீரர்” “சூராதி சூரர்!’’ அவர் வாய் திறந்தால் மராட்டிய மண்டலமே ஒடுங்கி நடுங்குமே வெளி மாநிலத்தவர்கள் வெலவெலத்துப் போய் விடுவார்களே, தமிழர்களை என்ன பாடுபடுத்தினார்?

அந்த சூரர்தான் இப்பொழுது சுருங்கிப் போய் சோணகிரியாகி விட்டார். உருட்டல், மிரட்டலால் ஓங்கி வளர்ந்து பெரிய மனுஷனாகப் பவனி வந்தவர் படுக்கையில் வீழ்ந்த நோயாளியாகி விட்டாரே!

மும்பை தொலைப்பேசி முகவரி புத்தகத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்களைக் கணக்கெடுத்தார். இனி மும்பைக்கு வர வேண்டுமானால் “விசா” வாங்கிக் கொண்டுதான் வர வேண்டும் என்று வீராவேசம் பேசிய “வேங்கைப்புலி” இப்பொழுது விலா ஒடிந்து போன பூனையாக “மியாவ் மியாவ்” என்று ஈனக் குரலில் கத்துகிறதே! இப்பொழுது மட்டுமல்ல; 1995 இல் அவரின் மனைவி மரணம் அடைந்தபோதுகூட மனுஷன் மாரடித்துப் புலம்பியவர் தான்.
1993 செப்டம்பர் 6 அந்த நாளை தாக்கரேயால் மறக்கவே முடியாது. அந்த நிலைப்பற்றி ‘வீக்’ (The Week November 19-1995) இதழ் வெளிப்படுத்துகிறது.

I don’t know if death had arranged the trap, “Says thackeray. ‘That night the lights went out, the hotline was gone, the telephone was dead and the medicine could not be found. she was breathing with great difficulty and I watched helplessly as she died gasping. I lost her on Ganesh Chaturthi. And she had been so religious and had done puja for your siddhi vinayaka.’’
Your Siddhi Vinayaka! These words of the champion of Hindutva are soaked in bitterness and tears, tears that he tries to hide behind his new dark glasses, a bitterness that has turned him into a blasphemer. Thackeray, 68, is like a rebelious boy who has lost his favourite little treasure. “I don’t believe in God any longer,” he says in deliance.

அந்த இரவில் மின்சாரம் இல்லை, விளக்குகள் இல்லை; தொலைப்பேசி வேலை செய்யவில்லை; என் மனைவி மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஏதும் செய்ய முடியாதவனாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் அன்று விநாயகர் சதுர்த்தி. அவள் மத ஆச்சாரங்களில், ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவள். சித்தி வினாயகனை அவள் தொழுது கொண்டிருந்தார். ஆனாலும் அவளை எந்தக் கடவுளும் காப்பாற்றவில்லை.

கடவுள்மீது இனி நம்பிக்கை வைக்க மாட்டேன் ஒரு போதும் இனியில்லை’’ - என்று அன்றும்கூட இப்படித்தான் எகிறிக் குதித்தார்.

மாதுங்காவில் அவர் பங்களாவில் இருந்த கடவுள் படங்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டன. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த உத்திராட்ச மாலைகளை எல்லாம் உருவி எறிந்தார். கையில் எப்பொழுதும் இருக்கும் ஜெபமாலைக்குக் கல்தா கொடுக்கப்பட்டது. இப்பொழுது 14 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மனநிலையில் மனிதன் சித்தப்பிரமை பிடித்து செதிர் காயாக உடைந்து கிடக்கிறார்.

கடவுள் நம்பிக்கை போய் விட்டது என்று தாக்கரே கூறியுள்ளாரே - சங்பரிவார் வட்டாரம் மூச்சு விடவில்லையே - ஏன் முணுமுணுப்பைக்கூட வெளிப்படுத்தவில்லையே! இந்தச் செய்தி வெளியில் பரவிவிடக் கூடாது என்பதில் தான் அவர்கள் அக்கறை செதுத்துபவர்கள் என்பது நமக்குத் தெரியும்.

பால்தாக்கரேயே பாதை மாறி விட்டாரா? - ‘பகவான் மீது அவர் வைத்திருந்த அபார நம்பிக்கை நாசமாயிற்றா?’ என்று பாமர மக்களும் பேச ஆரம்பித்து விடுவார்களேவிளைவு என்ன? சாதாரணமாக மிக பக்திக்கு ஹானி விளைந்தால் பார்ப்பனியத்தின் பல் பிடுங்கப்பட்டு விடுமே, ஆரியத்தின் அஸ்திவாரம் நொறுங்கிப் போய் விடுமே. அதன்பின் பிழைப்பு என்னாவது, ஆதிக்கம்தான் என்னாவது என்ற பயத்தில் தாக்கரே விஷயத்தை மூடி மறைத்து விட்டார்கள்.
ஒன்று மட்டும் உண்மை. ஏதோ ஒரு பிரச்சனையில் தோல்வி ஏற்பட்டு விட்டதாலோ, இழப்பு ஏற்பட்டு விட்டதாலோ அந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பில் “கடவுள் நம்பிக்கை எனக்கு போய் விட்டது’ என்று கூறுவதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.

பகுத்தறிவுவாதியாக நாத்திகராக மலர்வதற்கு ஆழ்ந்த சிந்தனையும், துணிவும் தேவைப்படும்.
தன் மனைவி இறந்த போது (1995இல்) தனக்குக் கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்று சொன்னது உண்மையாக இருந்திருக்குமேயானால், 2009இல் ஒரு தேர்தல் முடிவை முன் வைத்து இப்படி ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!
ஒரு கருத்தை வேண்டுமானால் முன் வைக்கலாம் - கடவுள் நம்பிக்கை என்பது ஒரு சந்தர்ப்பவாதம் என்பதுதான் அது!

--மின்சாரம் 

Tuesday, November 17, 2009

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

பொது அறிவு எனும் பட்டறிவு-மரணக் குறிப்பு (Obituary)

படிப்பறிவு வேறு; பகுத்தறிவு வேறு, பட்டறிவு (Comman sense) வேறு. இம்மூன்றும் வெவ்-வேறானவை! ஆனால் ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவுள்ளவை!

மனிதகுலம் தழைத்தோங்க, இவை ஆற்றிய, ஆற்றி வரும் தொண்டு வார்த்தைகளால் வருணிக்க முடியாத மலையளவு ஆகும்!


இங்கிலாந்தின் ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான ஒரு சிறந்த சிந்தனைச் சிதறல்தான் மேலே காட்டியுள்ள தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தக் குறிப்புரையாகும்!

ஆங்கிலத்தில் உள்ள அதன் சுவையோடு அப்படியே என்னால் தரமுடியாது என்றாலும் கூடுமான வரை முயன்று வெற்றி பெற்றிருப்பதாகவே கருதுகிறேன்; எனவேதான் நமது வாசக நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று நமது மிகப் பெரும், பழம்-பெரும் நண்பரான பட்டறிவு (Comman sense) மறைவுற்றமைக்காக இரங்கல் தெரிவிக்க அனைவருமே கூடியுள்ளோம்!

அவர் எவ்வளவு நீண்ட காலமாக நம்முடைய நண்பராக இருந்து வழிகாட்டினார் என்பதை சரியாக நினைவு கூர முடியவில்லை. காரணம் நீண்ட காலத்திற்கு முன்பே இந்த அதிகாரிகள் வர்க்கத்தின் சிகப்பு நாடாவால் காணாமற் போகும்படி செய்யப்பட்டு விட்டார்! எனவே சரியான வயது கூட ஆதாரங்களுடன் நாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.

ஆனால் அவரை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கும் வண்ணம் நமக்கு மிக அருமையான பல பாடங்களை அவர் கற்றுக் கொடுத்துள்ளார். அவற்றின் மதிப்பினை நாம் இப்போதும், எப்போதும் உணர்ந்து கொண்டே இருப்போம் என்பது உறுதி.

மழையிலிருந்து எப்படி தப்பித்து வரமுடிகிறது; வாழ்க்கை என்பது எப்போதுமே ஒரு நியாயமாக நடப்பது அல்ல; அது போல சில நேரங்களில் நாம் நம்மை நொந்து கொள்ளும் நிலையில் அது என் தவறாகக் கூட இருக்கலாம் என்பது போன்ற பட்டறிவுச் சிந்தனைகளையொட்டிய பழக்க வழக்கங்களை நாம் பெற்றுள்ளோம்!

பொருளாதாரத்தில் சம்பாதிப்பதற்கு உட்பட்டு செலவழித்தல், நம்பக் கூடிய காரண காரியங்கள் அவர்கள் குழந்தைகள் அல்லர், வயது வந்தவர்கள் என்று உணர்ந்து அதற்கேற்ப நமது அணுகுமுறைகள் என்ற நடைமுறை வாழ்க்கைமூலம் பட்டறிவின் வாழ்வு நீண்டு வளர்ந்து வந்தது.

ஆனால் அவரது உடல் நலம் திடீரென்று கெட ஆரம்பித்தது எப்போது என்றால், திட்டமிட்டே, நல்ல எண்ணத்தோடு அவை இருந்த போதிலும் கூட சமூகம் சுமக்கமுடியாத கட்டுப்பாடுகளை அவரது இடத்தில் அமர்த்தி வைத்தபோதுதான்! 6 வயது பெண்ணின் கன்னத்தில் பாலுணர்வு உந்துதலால் முத்தம் கொடுத்த குற்றத்தை ஒரு சிறுவன் இழைத்தான் என்றும், மதிய உணவுக்குப் பின் வளர் இளம் பிராயத்தினர் (Teen agers) வாய் கொப்பளிக்க மவுத் வாஷ் திரவத்தைப் பயன்படுத்தினர் என்றும், வகுப்பில் அடங்காப் பிடாரியாக நடந்த ஒரு மாணவனைப் பள்ளியை விட்டு வெளியே அனுப்பினர் என்பது போன்ற (பட்டறிவுக்கு முரணான கொள்கைகளால்) (அவரது) பட்டறிவின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமாகியது!

அவரது வாழ்வு மிகவும் பிடிமானமற்றதாக ஆனது எப்போது தெரியுமா?

வீட்டில் ஒழுங்காக வளர்க்கத் தவறிய பெற்றோர்களின் குழந்தைகளை ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளில் ஒழுங்கீனத்தைக் கண்டித்து தண்டித்து முறைப்படுத்திய ஒரே காரணத்திற்காக, பெற்றோர்களால் ஆசிரியர்கள் தாக்கப்பட்டபோது!

அதன் உடல் நிலை மேலும் மோசமானதாக ஆனதற்கு முக்கிய காரணம், மாணவர்கள் வெப்பத்தினால் தாக்கப்பட்டு (தோல் வியாதி வராமல் தடுக்க)விடக்கூடாது என்பதால் சூரிய ஒளி படும்படி மாணவர்களின் உடலில் மருந்து திரவம் தடவவும், ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை (இது இதய நோய் தடுப்பு - இதய ரத்தக்குழாய்கள் அடைபடாமல் தடுக்க அவசர சிகிச்சைக்கான அவசர முதல் உதவி) ஆசிரியர்கள் தாங்களே செய்யாமல், பெற்றோர்கள் அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டபோதும், ஒரு மாணவி, கருத் தரித்துள்ள செய்தியையோ, அல்லது அவளுக்கு நடந்த கருச்சிதைவு (Abortion) பற்றியோ ஆசிரியர்கள் உடனே பெற்றோர்களுக்குத் தகவல் அறிவிக்க முடியாமல் இருந்தபோதும்தான். (இவை இங்கிலாந்தில் சர்வ-சாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன.)

பட்டறிவு என்ற மனிதருக்கு இனியும் நாம் வாழ வேண்டுவது அவசியம்தான் என்ற மன உறுதி பறந்தோடி விட்டது எப்போது தெரியுமா?

மத அமைப்புகள் வெறும் பொருள் சம்பாதிக்கும் வணிக மய்யங்களாகி வருவதாலும், குற்றம் புரிந்த கிரிமினல்கள் அவர்களால் பாதிக்கப் பட்டவர்களை விட நல்ல முறையில் நடத்தப்பட்ட போதும்!

பட்டறிவுக்கு சரியான அடி, உதை, குத்து கிடைத்தது_ ஏனெனில் கொள்ளைக்காரர்களிடம் இருந்து அவர் (பட்டறிவு) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியவில்லை_ அதுவும் சொந்த வீட்டிலேயே.

அதோடு மட்டுமா? அந்தக் கொள்ளைக்காரன் அடி வாங்கிய இவர் மீதே தன்னைத் தாக்கி காயப் படுத்திவிட்டான் என்று (பொய்) வழக்கைப் போட்ட போது, பட்டறிவு தன்னம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டது!

அதை விடக் கொடுமை, பட்டறிவு இறுதி வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து இனி நாம் வாழ்வது அர்த்தமற்றது என்ற எண்ணத்தைத் தனக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டது எப்போது தெரியுமா?

கொதிக்கும் காபி ஒரு கப் வாங்கி (அவரது கவனக் குறைவால்) தனது தொடை மீதுள்ள துணியின் மேல் ஊற்றி தொடையில் காயமேற்படுத்திக் கொண்டமைக்காக, ஆடை மீது வழக்குப் போட்டு பெரும் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்ற (நியாயமற்ற) போக்கினைக் கண்டபோது! பட்டறிவு என்னும் இவரது தாய்தந்தையர் இவருக்கு முன்பே மரணமடைந்துவிட்டனர். அவர்களின் பெயர் உண்மை மற்றும் நம்பிக்கை என்பவை ஆகும். இவருக்கு தனது துணைவியார் (Discretion) யுக்தானுச்சாரம் நிலைமைக்கேற்ப நடக்கும் தன்மையர் என்பவர் மூலம் பொறுப்பு (Responsibility) என்ற ஒரு மகளும், பகுத்தறிவு (Reason) என்ற ஒரு மகனும் உண்டு.

பட்டறிவின் மற்றொரு துணைவியார் நான்கு பிள்ளைகளைப் பெற்றதால்_ மேற்கூறிய ‘பொறுப்பு’ என்ற மகளுக்கும் ‘பகுத்தறிவு’ என்ற மகனுக்கும் நான்கு (வேறுதாய் வயிற்று) (Step Brothers) சகோதரர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் பட்டியல் இதோ.

1. “எனது உரிமைகள் எனக்குத் தெரியும்’’ என்று கூறுவோர்.

2. “இப்போதே அது எனக்கு வேண்டும்’’ என்று (அடம் பிடிக்கும்) கூறும் நிலையோர்.

3. “என்னைக் குற்றம் சொல்லாதீர்; வேறு சிலரைத்தான் நீங்கள் குறை கூறவேண்டும்’’ (கடமை தவறியதைச் சுட்டிக் காட்டும்போது) என்று கூறுவோர்.

4. “என்ன செய்வது? நான்தான் பாதிக்கப்பட்டவன்’’ என்று (குற்றம் சாற்றப்படும்போது) கூறுபவர்.

பட்டறிவின் இறுதி ஊர்வலத்தின் போது அதிகமானோர் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மரணம் அடைந்து-விட்டார் என்பதே பலருக்குத் தெரியாது!

நீங்கள் அவரை இன்னமும் நினைத் திருக்கிறீர்கள் என்றால் அருள் கூர்ந்து இதை மற்றவர்களுக்குக் கூறுங்கள்.

இல்லையெனில் அவர் இறந்து-விட்டதை அறியாத பெரும்பான்மையில் நீங்களும் ஒருவராகி விட்டு, ஒன்றும் செய்யாமல் கைகட்டி வாய் பொத்தி வாழும் வாழ்க்கை வாழுங்கள்!

சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரும், சிறந்த பகுத்தறிவுப் பேராசிரியருமான டாக்டர் ரத்தினகுமார் அவர்கள், நேற்று அவருக்கொரு நண்பர் லண்டனிலிருந்து அனுப்பினார் என்று கூறி இந்த அற்புத சிந்தனை ஓவியக்கட்டுரையை (ஆங்கில நகலை) தந்ததைப் படித்தேன்; சுவைத்தேன். அத்தேனை நீங்களும் பருகிப் பயன்பட தந்துள்ளேன். படித்துப் பயனடையுங்கள்!

Friday, November 13, 2009

"நடந்த கதை’ திரையிடல் -இன்று


பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

நாள்: 13.11.2009 வெள்ளி மாலை 6.30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை-7;

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.குமரேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: ப. திருநாவுக்கரசு (ஆசிரியர், ‘நிழல்’) அஜயன் பாலா (எழுத்தாளர்) மீரா.கதிரவன் (திரைப்பட இயக்குநர் - 'அவள் பெயர் தமிழரசி')

திரையிடல்: 'நடந்த கதை’

இயக்கம் : பொன்.சுதா (குறும்படம் -21 நிமிடங்கள்)
கதை : அழகிய பெரியவன்
ஒளிப்பதிவு: இராசாமதி

அனைவரும் வாரீர்!




குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...