Thursday, May 31, 2012

பக்தியா? மனச்சிதைவு ‍‍ நோயின் பாதிப்பா?


- பேராசிரியர் ந.வெற்றியழகன்
முப்பால் நோய்கள்:
பொதுவாக, நோய்கள் எனப்படுபவை மூவகையில் அடங்கும். அவை, 1. மனம் சார்ந்தவை, 2. உடல் சார்ந்தவை, 3. மனம்_ உடல் சார்ந்தவை. இவற்றில், மனம் சார்ந்தவை நோய்கள் பற்றி ஆய்வு செய்ய இருக்கிறோம். மனம் மட்டும் தொடர்புடைய நோய் உள நோய் (Psychosis) ஆகும். நரம்புத் தொடர்புடையது உளத்தளர்ச்சி நோய் (Neurosis). இதில் முதலில் கூறப்பெற்ற உளநோயினால் பாதிப்புக்குள்ளானவர்களுள் பெரும்பாலோர் ஸ்கிசோப்ரென்யா (Schizophrenia) எனப்படும் மனச் சிதைவு நோய்க்கு ஆளானவர். மனச்சிதைவு நோயாளர்கள் ஸ்கிசோபரனிக் (Schizophrenics)ஆவர்.
உடைந்துபோன உள்ளம்
இந்த ஸ்கிசோபெரன்யா என்பதன் பொருள் மனம் உடைந்துபோதல் என்பதாகும். மனச்சிதைவு அல்லது ஆளுமைச் சிதைவு (Splitting of Mind or Personality) இதன் விளக்கமாகும். இந்த நோயினை, கிரெப்ளின் என்பவர் 1896ஆம் ஆண்டு டிமென்சியா பிரேகாக்ஸ் (DementiaPraecox) எனக் குறிப்பிட்டார். இதனை புலுலர் (1950) என்பார் ஸ்கிசோபெரன்யா என அழைத்தார்.
நான் யார் தெரியுமா?
இந்த மனச்சிதைவு நோயாளிகள் இயற்கை மீறிய அல்லது இயல்பு நிலை தாழ்ந்த (Abnormal) நிலையில் காணப்படுவர். இவர்கள், உலகெங்கும் அங்கிங்கெனாதபடி, நிறைந்துள்ளனர். இவர்கள், பகுத்தறிவு மனப்பான்மைக்கும், காரண_காரிய விளைவுகளுக்கும், உலகியல் நடைமுறை (Worldliness)க்கும் அப்பாற்பட்ட விந்தை வேடிக்கை மனிதர்கள்!!
இவர்கள், தமக்கு எல்லாம் வல்ல இறையாற்றல் இருக்கிறது; தாங்கள் கடவுளின் அவதாரம்; என்றெல்லாம் எண்ணி அவ்வாறே நடந்துகொள்வர். தங்களை பகவான் என்று அழைத்துக் கொள்வர். பிறரும் அவ்வாறே தம்மை அழைக்க வேண்டும் என் விரும்புவர். இன்றும் பலர், தாங்கள் இறையடியார்கள், கடவுள் பக்தர்கள்; கடவுளோடு உரையாடுபவர்கள் அவரின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.
பத்தில் நான்கு:
இந்த மனச்சிதைவு நோய் 10 வகைகளாக மனநோய் மருத்துவ அறிஞர்களால் பாகுபடுத்தப்பட்டுள்ளன. விரிவுஅஞ்சி, அவற்றுள் மிக முதன்மையானதாகக் கருதப்படும் 4 வகைகளை மட்டும இங்கே விளக்க விழைகிறோம். அவை:
1. எளிய இயல்பு நிலை (Simple Sehizophrenia)
2. இளம்பருவ நிலை (Hebe Phrenia)
3. அய்யுறு நிலை (Paranoid Schizophrenia)
4. முதிர்நிலை (Catatonic Schizophrenia)
இனி, ஒவ்வொன்றாக ஆய்வோம்.
1. எளிய இயல்பு நிலை:
மனச்சிதைவு நோயின் தொடக்கநிலை; சொற்கள் சிதைந்து வெளிப்படும்; சிந்தனையில் தெளிவு இராது. இவை இதன் வெளிப்பாடுகளுள் சில.
திரும்பத்திரும்ப
2. இளம்பருவ இயல்பு
பேச்சில் தொடர்பு இராது; இயைபு இராது; இளமைப் பருவத்து உண்டாவது இது. மதக் கோட்பாடுகளில் அழுத்தமான நம்பிக்கைகள்; மதத் தத்துவங்களில் மன ஈடுபாடு; சிறுபிள்ளைத்தனமான பேச்சு; செயற்பாடுகள்; சின்னப்புன்னகை உதிர்ப்பு; இடைவெளி விட்டு வறட்டுத்தனமாகச் சிரிப்பது; ஒரே சொல்லை அல்லது சொற்றொடர்களை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருப்பது;
ஓம்! ஓம்!! ஓம்!!!
ஹரேராம்! ஹரேகிருஷ்ணா!!
அல்லேலுயா!
அல்லாஹூ அக்பர்!
என்று முழக்கமிடுவது (Steriotyped Repetition of words or sentences)
சந்தேகம் என்னும் ஒரு சரக்கு
3. அய்யுறு நிலை:
யாரைப் பார்த்தாலும் எவற்றைப் பார்த்தாலும் அவர்கள் அல்லது அவை தனக்கு எதிராக, இருக்கிறார்கள், இருக்கின்றன, செயல்படுகின்றன(ர்), என்னைக் கொல்லச் சதி புரிகின்றனர்; என்னைப் பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர் என்றெல்லாம் அய்யப்படுவது. தன் துணைவியின் ஒழுக்கத்தில் அய்யப்படுவது; சீற்றப்படுவது - முதலியவை தன்மைகள் எல்லாம் இந்நோயாளிகளின் இயல்புகளாம்.
அழைக்கின்றார்! அழைக்கின்றார்!!
இவை எல்லாவற்றையும் விட உச்ச கட்டம் ஒன்று உளது. இதோ! இசைமயமான தேவகானம் என்காதில் விழுகிறது! அதோ! இறைவன் என்னோடு பேசுகிறார்! உரையாடுகிறார்! என்னை, அன்போடு அழைக்கின்றார்! அழைக்கின்றார். இறைவா! நான் உன்னைவிட்டு ஓடிப்போக முடியுமா? முடியுமா? என்றெல்லாம் கூறுவார்.
தன்னந்தனிமையில் பேச்சு
4. முதிர்நிலை
மனச்சிதைவு நோயின் முதிர்ந்த _ முற்றிய கட்டம் இது! தன் எதிரே, எவரும் இல்லாத நிலையில் யாரோ ஒருவர் இருப்பதாகக் கருதி நீண்ட நேரம் உருக்கமாக, கண்ணீர் பெருக்கமாகப் பேசிக்கொண்டிருப்பது; தன் குறையைத் தாழ்மையுடன் கூறி நிவாரணம் கேட்பது. எதிர்முனையில் எவரும் அழைப்பு எடுக்காத நிலையில் ஒருவர் தான்மட்டும் தனி அலைபேசியில் (Cell) தானே பேசுவது; மகிழ்வது வேண்டுவது என்கிற பெயரோடு இந்த முதிர்வுநிலை மனச்சிதைவு நோய் ஒத்துள்ளதல்லவா? இதைத்தான் பிரார்த்தனை (Prayer) என பகுத்தறிவாளர் டாக்டர் ஏ.டி.கோவூர் குறிப்பிட்டுள்ளதை நினைவு கூர்வோமே? இது ஒரு கட்டம்! இதற்கு மேலும் ஒரு கட்டம்.
சோதனை மேல்சோதனை போதுமடா சாமி!
ஆண்டவரே!  ஆண்டவரே! என்னை ஏன் கைவிட்டீர்? உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்! நான் என்ன தவறு செய்தேன்? என்னை நீ கைவிடலாமா? இது தகுமா? இது முறையா? இது தருமம்தானா?
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி!
என்னை மேலும் சோதனை செய்யலாமா? தாங்கமாட்டேன்! என்று புலம்புவது மற்றொரு நிலை!
மோட்சத்தில் முன்னிருக்கை:
கால்கள் இரண்டையும் மடக்கி, முடக்கி, முழந்தாளிட்டு, வானை நோக்கி இருகை நீட்டி, பகவானே! எனக்கு உன் கடைக்கண் காட்டு! மோட்சத்தில் எனக்கு முதல்வரிசையில் ஒர் இருக்கை இடம் ஒதுக்கி (Reservation of front Seat) வை! இன்னமும் திருவுளமே இரங்காதா? ஏழைக்கருள் செய்ய வாதா? -_ ஜெகன்மாதா? என, குனிந்து, நிமிர்ந்து, மண்டியிட்டு மண்ணிலே நெற்றி இடிபட விழுந்து, உடலுறுப்புகள் நிலத்தில் படிய இருகை குவித்து, தலைகவிழ்த்து பக்தி செய்து வருவது எல்லாம் இந்த கேட்டா டானிக் ஸ்கிகோபெரன்யா என்றும் மனச்சிதைவு நோயின் வெளிப்பாடுகள் என மனச்சிதைவு நோய்பற்றிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
பிரார்த்தனை பேரம்!
மாட்டுப் பட்டியில் உள்ள சாணியை ஒருவன் தன் கையால் எடுத்து உருட்டித் திரட்டி பிடித்துவைத்து அந்தச் சாணி உருண்டையின் எதிரே நின்று பயபக்தியோடு, பவ்யமாக, தலைகுனிந்து, நாத்தழுதழுக்க, பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்! _ கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு, சங்கத் தமிழ் மூன்றும் தா! என, பிராத்தனை செய்து பேரம் பேசுகிறாரே இதற்கு என்ன பெயர்? மனச்சிதைவு நோயின் ஒருவகையான கேட்டா டானிக் ஸ்கிசோபெரன்யா _ அல்லாமல் வேறு என்னவாம்?
யாவர் இந்த மூவர்?
தமிழ்நாட்டின் மிகப் புகழ்பெற்ற பெரிய கவிஞர் ஒருவர் இந்த கேட்டாடானிக் மனச்சிதைவு நோயாளர்கள் பற்றிக் கூறியுள்ளதை அல்ல _ பாடியுள்ளதைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். பின் கூறப்போகும் மூவகையினரின் பேச்சில் பொருள் இராது; இயைபு இராது; தெளிவு இராது; அதுமட்டுமல்ல, முன்னுக்குப்பின் முரணாக இருக்கும். தாம் முதலில் சொன்ன கருத்துக்கு மாறாக - முரணாக அடுத்து உடனடியாக அவர்களே மறுத்துப் பேசுவர். அவற்றை, ஒரு பேச்சுக்காகக் கூட எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றை, ஒரு பெருட்டாகவே மதிக்கக் கூடாது என்கிறார் அந்தக் கவிஞர். அவர் கூறும் அந்த மூவர் யாவர்? இவர்கள்தாம் அவர்கள்.
1. பைத்தியக்காரர்கள்
2. முட்டாள்கள்
3. பக்தர்கள்
இக்கருத்தமைந்த பாடலடிகள் கீழே வருகின்றன. பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பக்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ? இவ்வண்ணம், பாடிய பாவலர் யார் தெரியுமா? கம்பர்! உண்மைகளை எத்தனை அழகாக - வலிவாக எடுத்துப் பாடியுள்ளார்?
முன்னுக்குப்பின் முரண்
முன்னுக்குப்பின் முரணாகக் கூறுவதும் மனச்சிதைவு நோயாளியின் இயல்பு என்பதற்கு ஒரு வலிவான சான்று ஒன்றையும் பார்ப்போம். கவிஞர் _அவர் சிவனடியார் _ சிவன் மீது பக்திகொண்டவர். பாடிய பாடலின் கருத்துகளைப் பார்ப்போமே? எனது இறைவன், இத்தகையோன், இவ்வடிவினன், இந்தச் செயல்புரிபவன் என உலக மக்கள் எவராலும் தங்கள் மனத்தால்கூட உணர்ந்து அறிந்து வெளியிலே சொல்ல முடியாத அரிய தன்மையன் _ என்ற கருத்தில் தம் பாடலின் முதலடியைப் பின்வருமாறு தொடங்குகிறார்.
உலகுஎலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் இப்படிப்பாடிய இந்தக் கவிஞர் தாம் முதலடியில் சொன்ன கருத்தை உடனடியாக அதனோடு முரண்பட்டு, அந்த இறைவன், தலையிலே நிலவை யணிந்தவன்; கங்கையாறு அவன் தலைச்சடாமுடியில் நீர் மலிந்து காணப்படும்; அவன் வரம்பற்ற சுடர் படிவினன்; தில்லைச் சிற்றம்பலத்திலே திருநடனம் செய்து கொண்டிருப்பான்; அவன் தன் திருவடியில் சிலம்பு அணிந்திருப்பான், அவன் தாளை வணங்குவோம்! என இன்ன தன்மையன் என உணர்ந்து கூறமுடியாத சிவன் மேற்சொன்னபடி யெல்லாம் காணப்படுவான் என்று பாடுவது, கம்பர் கூறிய மூன்றாவது வகை மனச்சிதைவு நோயாளிதான் இந்தக் கவிஞர் என்பது தெளிவாகிறதல்லவா? அவரது, இக்கருத்துகள் அமைந்த மற்ற பாடலடிகள் கீழே: நிலவு லாவிய நீர்மலி வேணியன்; அலகில் சோதியன்; அம்பலத்(து) ஆடுவான்; மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்! இந்தக் கவிஞர் யார் தெரியுமா? பெரியபுராணம் பாடிய சேக்கிழார்!
விரிவாக அறிய விரும்பினால்
அமெரிக்க மனநல மருத்துவக் கழகம் (American Pschiatric Association) வெளியிட்டுள்ள லாஸ் ஏன்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் மனநல மருத்துவ வல்லுநரும் ஆன ஜேம்ஸ் சி. கோலமன் (James C. Coleman) எழுதிய, தாழ்நிலை உளவியலும் நவீன வாழ்வியலும் (Abnormal Psychology and Modern Life) என்னும் ஆங்கில நூலில், மேலும் விரிவாக, விளக்கமாக எழுதப்பட்டுள்ளன. விரிவாக அறிய விரும்புவோர் அதனைப் படித்து மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
பக்தி - மனச்சிதைவு நோயின் பாதிப்பா?
இவற்றையெல்லாம்-, நாம் அறிந்து கொள்கிறபோது, பக்தி என்பதும், பிரார்த்தனை என்பதும் மனச்சிதைவு நோயின் - குறிப்பாக கேட்டாடானிக் ஸ்கிசோபெரன்யா (Catatonic Sehizophrenia)-வின் பாதிப்பு என்பதும் தெள்ளத் தெளிவாகப் புலனாகின்றது அல்லவா? மதம், பக்தி என்னும் மனச்சிதைவு நோய் வகைகளின் பாதிப்பு மக்கள் சமுதாயத்தை விட்டு நீங்கப்படும்! உலகின் தலைசிறந்த, சமுதாய மனநல மருத்துவராம் பகுத்தறி(வியல்)வுப் பகலவன் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பண்பாட்டு மருத்துவம் ஓங்கட்டும்!!

ஆரியர்களின் பூர்வீக நாடு எது?


- பொறியாளர் பி.கோவிந்தராசன்
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடு உடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!  தென்னிந்தியரின் /திராவிடரின் / சிவனடியாரின் பரந்த மனப்போக்கினை தெரிவிக்கின்றது. இத்தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உருவாக்கியது வேதமதம். இந்த  மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்ததால் கொடுந்தண்டனை. வேதமதத்தில் ஆரியர்களே முதல் வர்ணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும். ஆரியர்களின் கடவுள்களுக்கு ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய ஆரியர்களால் இந்தியர்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன்னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலம்.
அய்ரோப்பிய வரலாற்று ஆசிரியரின் நூல்:
ஆடம் ஹார்ட் டேவிஸ் என்று வரலாற்றாளர், “History” என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரும் இவரது நண்பர் நாத்திகர் டாக்டர் சூசன்பிளாக்மோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினார். (விடுதலை நாளிதழ் 4.2.2012) இவர்கள் இருவரும் பகுத்தறிவுவாதிகள்.
ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூலில் எவ்வாறு ஆப்பிரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், இந்தியர்கள், அமெரிக்கர்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை விரிவாகக் கூறியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதையும் விவரிக்கிறார். அந்த நூலில் ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“The origin of (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vidic gods who feature in Vedas, the 3000 years old scaret texts, that are central to the development of Hinduism.” The religion evolved to focus on senior deity called Brahma, Vishnu creator and Shiva the destroyer along with their consorts or sakthis From 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana (கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணலில் நாள்: 02.09.2011 சொல்லியவை)
மேலே கண்ட வரிகளில் தெரிவிப்பது கீழ்வருமாறு. ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுளையும், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (சிவன்) போன்ற உபக்கடவுள்களையும், அவர்களின் மனைவிகளையும் உள் அடக்கிய பல்வேறு கடவுள்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள், இந்த கடவுள்களின் உதவியால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி இருந்தது...
பாரசீக மொழியில் இருந்து மதக்கடவுள்கள்:
சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் _ Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish, Not available (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல், குறித்த பாரசீக சொற்களை தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.
பாரசீக மொழியும் ஆரியரும்:-
வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் அய்ரோப்பிய மொழி குடும்பத்தை சார்ந்தது எனக் கண்டறிந்தார் மற்றும் அதன் உட்பிரிவான இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்றும் கண்டறிந்தார். ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழியான பாரசீக மொழி ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப்பற்றியும் பல சுவையான வரலாற்று செய்திகள் தருகின்றன.
அவைகள் கீழே தரப்பட்டுள்ளன. (பாரசீக சொற்கள் தொகுப்பு பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது)
1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு.1500இல் நடந்தது. இதன்பின் இஸ்லாமிய மதம் தோன்றி இந்தியாவுக்கு கி.பி.800இல் பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுதது வந்தார். இறுதியாக தில்லியில் டில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி.1206-_1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் வந்தனர். முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரை குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.
2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமளவில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈராணியரின் தொண்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.
3. வேத கால கடவுள்களான இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றோர்களும், ரிஷிகளான வஷிஷ்டா, அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.
4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.மு.1600அய்ச் சார்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு.1400 சேர்ந்த மித்தாணி கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்கள் பெயரும் ஒத்துப் போகின்றன.
5. ஆரியர்கள், யாகங்கள் செய்தனர். தீயை வணங்கினர். பசுவை வணங்கினர். குதிரையை வணங்கினர். காமதேணு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் தீயைப்பற்றி பல சொற்கள், யாகங்களைப்பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.
6. இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
7. பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டியில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள், காலம், பருவம் (Time) (Season) ஆகும். பஞ்ச என்ற சொல், அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கின்றது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது. பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.
8. Gowpathi Sha = (கௌபதி+ஷா) = கௌபதி + ஷா = பசுபதி + மன்னன் (அ) அரசன். இந்த Pathi என்ற சொல் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.
9. Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.
10. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.
11. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது.  இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.
12. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja” இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில், வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் என்று அழைக்கப்படுகின்ற Stepi Culture என்று வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங்கியது. இந்த “Airyana Vaeja” என்ற இடம் பாரசீக மொழியில், நிணீஹ்ணீ/கயா வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.
13. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில் கங்கைக்கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனிததலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர்கள் துர்க்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.
14. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை,  முகாம் (Camp) படைவீடு, சந்தை (மார்க்கெட்) என்று பொருள். இதன் அடிப்படையில் ஹுமாயுன் / முகலாயர் காலத்தல் படைவீரர்கள் சந்தையில் பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில் Campu Language என்று அழைக்கப்பட்டன. (Camp = உருது) (Camp=  பாசறை).
15. பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.
16. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.
முடிவுரை:
1. துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த NDA அரசில் அமைச்சராக இருந்த திருமதி. மேனகா காந்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளதால், இந்த நூலில் ஆரியர் பற்றி சொல்லப்படும் செய்திகள் மற்றும் விளக்கங்கள் சிறப்புப் பெறுகின்றன.
2. பாரசீகத்திலிருந்து வந்த வேதகால கடவுள்கள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தியாவில் பிராமணீயத்தை வளர்க்க உதவியதாக வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூல் “History” இல் தெரிவிக்கின்றார்.
3. கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
4. Helena Petroun Blavatsky தனது “Secret Doctrine” (1888) இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாம்_அய் சார்ந்தவர்கள். Abraham x-brham (பிரம்மன்=பிராமணர்) கிதீக்ஷீலீணீனீ பிராமணனின் எதிர்பதம்.
5. பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகயை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டு தோற்கடித்தன.
6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைபிடித்ததால் “The American Hertage Dictionary of English Language” என்ற அகராதியில் ஆரியர் என்பவருக்கு கீழ்கண்ட விளக்கம் தந்துள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany. Originally it referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”
7. ஆரியர்கள் துர்கிஸ்தான் (துர்க்மேனிஸ்தான்) இருந்து வந்தார்கள் என்று அகராதி உருவாக்கிய மேனகா காந்தியும், ஆரியர்கள் நாசிகள் (NAZI) நாசகாரர்கள் என்று அகராதி எழுதிய அமெரிக்கப் பண்பாட்டு கழகமும் போற்றுதலுக்குரியவர்கள்.

Wednesday, May 30, 2012

ஆரிய வித்து தேடி அலையும் ஹிட்லர் வாரிசுகள்! அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் ‍


- ச.மா.இளவரசன்

உலக வரலாற்றில் ஓர்ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் உச்சியை எட்டி, ஆட்டிப் படைப்பவர்கள் யூதர்கள். தங்களைத் தொடர்ந்து அத்தளத்தில் இறுத்திக் கொள்ளவும் சரியான நகர்வுகளைச் செய்பவர்கள். அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளின் மூலம் தங்கள் ஆதிக்கத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்கள். இதே பண்பு நலன்களைக் கொண்ட மற்றோர் இனம் உண்டென்றால் அது சர்வ நிச்சயமாக இந்தியாவில் இருக்கும் ஆரிய இனம் தான்; பார்ப்பனர்கள் தான்.
இவ்விரு இனத்தினைக் கூர்ந்து நோக்குபவர்களுக்கு இவ்வுண்மை புலப்படும். சரி இது இணை! முரண் என்ன? உலகின் உயர்ந்த இனம் என் ஆரிய இனம் தான் என்று நெஞ்சு நிமிர்த்திய ஹிட்லர் தான் யூத இனத்தைப் பூண்டோடு தன் நாட்டிலிருந்தும் தான் பிடிக்கும் நாட்டிலிருந்தும் அழிக்க முனைந்தவன் என்பது தான் அந்த முரண்!
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிளம்பிய ஆரியர்கள், கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியா வந்தார்கள். பிறகு இந்தியப் பெருநிலமெங்கும் பரவினார்கள். இந்தியாவின் அதிகாரங்களில் மதத்தின் வாயிலாகவும், பண்பாட்டு வாயிலாகவும் ஆதிக்கத்தைச் செலுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். இப்படி நாம் சொல்லத் தொடங்கினால்... சேச்சே... ஆரியர்களாம்... கணவாய்களாம்... சுத்த பேத்தல்... ஆர்யன இன்வேஷன் தியரி இஸ் எ மித்-னு ப்ரூவ் ஆயிடுச்சு தெரியுமா? என்று எதையோ தின்ற பாணியில் முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்பவர்களைப் பார்த்திருப்போம். ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை மறுக்க முடியாமல் சிலர் ஆரியர்கள் வேறு; பார்ப்பனர்கள் வேறு. இவர்கள் அந்தணர்கள். இங்கேயே வாழ்ந்தவர்கள் என்று மழுப்புபவர்களும் உண்டு. டி.என்.ஏ-விலேயே மாற்றம் இல்லை தெரியுமா? என்று அறிவியலைக் காட்ட முற்படுவோரும் உண்டு.
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் பணி நமக்கு வேண்டாம்... பரிசுத்த ஆரியர்கள் அதைச் செய்வார்கள். அவர்களிடம் செல்வோம் வாருங்கள்!
காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதி! இயற்கை எழில் சூழந்த இப்பகுதியில் வாழும் பல்வேறு பழங்குடி இன மக்களில் டார்ட்களும், அவர்களில் சிறு குழுவினரான ப்ரோக்பாக்களும் யார் என்பதை அவர்கள் வாயிலாகவே தெளிவுபடுத்திக் கொள்ளலாம். ஆறு அடிக்குக் குறையாத உயரமும், சிவந்த மேனியும், கூர்மையான முக அமைப்புகளும், நீல நிறக் கண்களும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் இவர்கள். நாங்கள் உண்மையான ஆரியர்கள். எங்களின் பூர்வீகம் கில்கித். எங்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் சிதையாமல் அழியாமல் காத்துவருகிறோம். எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு அந்த உணர்வை ஊட்டியிருக்கிறார்கள். என்கிறார்கள் இம்மக்கள். நாங்கள் அலக்சாண்டரின் படை வீரர்கள் என்று என் தாத்தா சொல்வார். அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது, போரில் தோற்றுவிட, சிலர் இமாலயப் பகுதியிலேயே தங்கிவிட்டார்கள். அவர்களின் வாரிசுகள் தான் நாங்கள். நான் அலெக்சாண்டர் படம் பார்த்தேன். அதில் அவர்கள் அணிந்திருக்கும் போர் உடை எங்களின் பாரம்பரிய உடையை அப்படியே ஒத்திருப்பதைக் கண்டேன். என்கிறார் அவ்வினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
ப்ரோக்பா மக்களிடையே மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி (2006 மார்ச் 13) ஒன்று தெரிவிக்கிறது. பலதார மணம் இரு பாலருக்கும் முற்காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த நூற்றாண்டில் பெண்கள் பலரைத் திருமணம் செய்யும் பழக்கம் நிறுத்தப்பட்டு, ஆண்களுக்கு மட்டும் இப்போது பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் சார்ட் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞரான டாஷி என்பவர். முன்பு யார் இருந்தாலும், அவர்களின் முன்னிலையில் மாறிமாறி முத்தம் பரிமாறிக் கொண்டிருந்ததாகவும், வரிசையில் நின்று முத்தமிட்டுச் செல்லும் பழக்கம் 1970களுக்குப் பிறகு மாற்றப்பட்டு, வெளியாட்கள் இல்லாமல் தான் இப்போது அது நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் உள்ள ஆரிய இன மக்கள் பற்றி தன்னுடைய ஆவணப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சஞ்ஜீவ் சிவன் (பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர்).
தூய ஆரியர்கள் எனப்படும் இம்மக்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து பலரும் மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில் இருந்தும் வரும் மாணவர்கள் இவர்களின் பூர்வீகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்துவருகிறார்கள். அவ்வாறு வருவோரில் ஜெர்மனில் இருந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமானது. அதிலும் ஜெர்மானியப் பெண்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. அவர்களின் நோக்கம் வெறும் ஆய்வு மட்டுமல்ல என்கிறது சஞ்சீவ் சிவனின்ஆத்துங் பேபி: தி ஆர்யன் சாகா என்ற ஆவணப்படம். 2010 கோவா திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.
வெகு எளிதில் யாரும் சென்று பழகி, பதிவு செய்துவிடமுடியாத செய்திகளைத் தருகிறது இவரது ஆவணப்படம். அப்பகுதியில் உலவும் ஜெர்மானியப் பெண்களைத் தொடர்ந்து சென்றும், அவர்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்தும், பின்னர் அவர்களிடம் பேசி பேட்டி வாங்கியும் பதிவு செய்துள்ளார் தனது ஆவணப்படத்தில்! ஆரிய இனத்தூய்மை பற்றியும், மேன்மை பற்றியும் பேசி, அதற்காக பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லரின் சிந்தனைகளும், இனப்பற்றும் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதையே அவை உறுதி செய்கின்றன.
ஆய்வுக்காக என்று வரும் பெரும்பாலான ஜெர்மன் பெண்களின் முக்கிய நோக்கம், தூய ஆரிய இனத்தை மீண்டும் தங்கள் நாட்டில் உருவாக்குவது. அதற்காக அவர்கள் மேற்கொண்டிருக்கும் பணி, தூய ஆரிய இனம் என்று கருதப்படும் லடாக் பகுதியில் வாழும் டார்ட் இனத்து ஆண்களுடன் பழகி, தூய ஆரிய வித்துகளைப் பெற்று, அவர்களின் மூலம் கரு உருவாக்கிக் கொண்டு செல்லுவது! இதை அந்தப் பெண்கள் பெருமையுடன் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.
நான் இந்தப் பணியை மேன்மையானதாக நினைக்கிறேன். இதைச் செய்வதிலும் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் பிள்ளைக்கு நான் அவனின் தந்தை பற்றிச் சொல்வேன். அவன் மிகச் சிறந்த ஆரிய இனத்தவனாக, அறிவாளியாக வளர்வான். என்கிறார் இவ்வாறு ஆரியக் கருவைச் சுமக்க வந்திருக்கும் ஜெர்மானியப் பெண் ஒருவர். இவர்களுக்கு வித்து தானம் தந்து ஆரிய இனத்தைப் பெருக்கும் முயற்சியில் உறுதுணையாயிருக்கும் ப்ரோக்பா இனத்து ஆண்களும் அதை பெருமையோடு ஒப்புக்கொள்கிறார்கள்.
ஒரு ஜெர்மன் பெண் என்னிடம் வந்தாள். நான் அவர்களோடு தங்கினேன். மகிழ்ச்சியாக இருந்தோம். அவர்களோடு உறவு கொண்டேன். எனக்கு ஒன்றும் செலவு இல்லை. அனைத்தையும் அவ்ர்களே பார்த்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் பணமும், பரிசுகளும் தருவார்கள். சாக்லெட் தருவார்கள். அதை என் பிள்ளைகளுக்கு நான் கொடுப்பேன். என் குடும்பத்துக்கு இது தெரியாது. அவர்கள் ஜெர்மனியில் இருந்து வருகிறார்கள். நாங்கள் ஆரியர்கள். தூய ஆரிய இனத்தின் வித்துகளை அவர்கள் அங்கே எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். என் குழந்தைகள் வருங்காலத்தில் ஜெர்மனியில் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்ததும் தந்தையாகிய என்னை வந்து சந்தித்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறார் ஒருவர்.
5, 6 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் வந்தார்கள். அவ்ர்கள் ஆரிய இன வித்துகளைப் பெற விரும்பினார்கள். என்கிறார் மற்றொரு இளைஞர். இது ஒருவர், இருவரோடு முடியும் விசயமில்லை. இவ்வாறு ஆரிய விதைகளைப் பெற்றுக் கொண்டு செல்ல ஜெர்மானியப் பெண்கள் வருவது இப்போது மட்டும் நடைபெறுவதில்லை. பல்லாண்டுகளாக இது நடைபெற்றுவருவதாகக் கூறுகிறார் நியூ ஜெர்ஸி பல்கலைக் கழகத்தின் மானுடவியல் ஆய்வாளர் மோனா பான்.
நான் யார் என்பது அவசியமில்லாதது. இது நான் தொடங்கியதில்லை... என்னோடு முடியப்போவதுமில்லை. என்று ஆவணப்படத்தில் ஒளிமறைவில் பேட்டியளித்திருக்கும் ஜெர்மானியப் பெண் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1979-ஆம் ஆண்டுவாக்கில் இரண்டு ஜெர்மானியப் பெண்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலவுவதைப் பார்த்துப் பிடித்த ராணுவம் அவர்களை விசாரித்தபோது இவ்வுண்மை தெரியவந்ததாகச் சொல்கிறார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேட்டியளித்த டாஷி.
இது குறித்து மேலும் நாம் தகவல்களைத் தேடியபோது, எவரெஸ்ட் ஏறிச் சாதனை படைத்தவர்களில் ஒருவரான ஹெச்.பி.எஸ். அலுவாலியா எழுதி, 1980-ல் வெளிவந்த தனித்து வாழும் அரசாட்சி: லடாக் (Hermit Kingdom: Ladakh) நூல் இது குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.  இது பற்றிக் குறிப்பிடும் அலுவாலியா, ஜெர்மானியப் பெண்கள் தூய ஆரியர்களைத் தேடிவந்து கருவுற்றுச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. இது ஆரிய இனப் பெண்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, அவ்வினத்து ஆண்கள் இவ்வெள்ளைக்காரப் பெண்களுடன் உறவு கொள்வதை மகிழ்ச்சியாகவே நினைக்கிறார்கள். என்கிறார்.
ஜெர்மனியில் மீண்டும் துளிர்த்துவரும் ஆரிய இன மேன்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடாக இதை நாம் கருதலாம். ஹிட்லர் சொன்ன ஆரிய இனமும், லடாக்கில் வசிக்கும் ஆரிய இனமும் ஒன்று தானா? ஹிட்லரின் ஆரிய இனக்கோட்பாடு வெள்ளைக் காரர்கள் உருவாக்கிய போங்கு என்றெல்லாம் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். உண்மை ஆரியர்கள் இவர்களே என்றும் அவர்கள் சொல்கிறார்கள். சரி, இந்த உண்மை ஆரியர்கள் வேறு; நம்மூர் பார்ப்பனர்கள் வேறா என்னும் கேள்வி ஒன்று தொக்கி நிற்கிறதல்லவா? அதற்கும் விடை கிடைக்கிறது வேறு சிலரின் ஆய்வில். புத்த மதத்தைத் தழுவியிருக்கும் இவர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் இந்து பார்ப்பனர்களுடையதாகவே இருக்கிறது.
கோமாதா வழிபாடும், இவர்களின் தெய்வங்களும் பார்ப்பனப் பண்பாட்டை ஒத்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மஹாபாரதம் மற்றும் இந்து ஓவியங்களில் இவர்கள் குறிப்பிடப்பட்டிருக் கிறார்கள் என்றும் சொல்கிறது அத்தகவல். ஆடு, மாட்டு ஓட்டி வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த பெண்களுடன் கலந்து தான் இந்தோ-ஆரிய இனம் உருவானது. அதனால் தான் பஞ்சமர்களுக்கும் கீழாக பெண்களைக் கருதுகின்றன இந்து மதத் தத்துவங்கள். அதே போல, கிரேக்கர்களின் டி.என்.ஏ-வை ஒத்த டி.என்.ஏ-க்கள் வடஇந்தியாவில் உள்ள ஆரியர்களிடம் இருப்பதாகக் கூறும் ஆய்வும் ஆரியப் படையெடுப்பை நிறுவும் ஆதாரங்களாக வருங்காலத்தில் இருக்கும். ஆரிய இனத்தின் மேன்மை என்னும் கருத்தாக்கத்தில் ஸ்வஸ்திக் சின்னம் கொண்ட நாஜிக் கும்பலும், காவிக் கும்பலும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள் என்பதில் இனியும் அய்யமிருக்க முடியாது.


Tuesday, May 29, 2012

ஏழை மக்களின் தலைகள்தான் கிடைத்ததா?


திருடன் கையில் சாவி கொடுப்பது என்பார்கள். அந்த நிலைதான் - பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் முடிவை பெட்ரோல் நிறுவனத்தின் கையில் விட்டு வைப்பதாகும். கடந்த 8 ஆண்டு ஆண்டுகளில் 39 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 17 முறை  விலை உயர்த்தப்பட்டுள்ளது.
உலகில் கச்சாப் பொருள்களின் விலையேற்றத் திற்கு ஏற்ப பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும் என்று சொன்னால்கூட எத்தனை முறை பெட்ரோல் விலையைக் குறைத்திருக்கிறார்கள்?
இதில் இன்னொரு விடயமும் - கவனிக்கத் தக்கது. உலகம் தழுவிய இந்தப் பிரச்சினையில் மற்ற மற்ற நாடுகளில் பெட்ரோல் விலையை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் அதிகமாக இருப்பது ஏன் என்ற வினாவும் எழுகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டரின் விலை ரூ.59 வங்கதேசத்தில் ரூ.43.40, இலங்கையில் ரூ.69.70, அமெரிக்காவில் ரூ.39.60 இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் ரூ.77 என்ற நிலை ஏன்?
பெட்ரோல் விலை இந்த அளவு உயர்வுக்குக் காரணம் அதற்குள் திணிக்கப்படும் வரிதான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அதைக் குறைப்பது குறித்து ஏன் யோசிக்கக் கூடாது? எண்ணெய் நிறுவனங்களுக்கு நட்டம் நட்டம் என்று கூறுகிறார்களே அதாவது உண்மையா? எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண் டிலும் தெரிவிக்கும் அறிக்கை கவனிக்கத் தக்கதாகும்.
எடுத்துக்காட்டாக 2010-2011ஆம் ஆண்டின் IOC நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டில் (4 மாதத்தில்) நிகர லாபம் ரூ.5294 கோடி, அரசுக்குச் செலுத்தியுள்ள வரி ரூ.832.27 கோடியாகும். HPCL என்று கூறப்படும் நிறுவனத்தின் லாபம் ரூ.2142.22 கோடியாகும். அரசுக்குச் செலுத்திய வரி ரூ.90.90 கோடியாகும். BPCL நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2142.22 கோடியாகும் அரசுக்குச் செலுத்திய வரி ரூ.198 கோடியாகும்.
இந்த மூன்று நிறுவனங்களின் நான்கு மாத லாபம் ரூ.10,699.61 கோடியாகும்.
உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, பெட்ரோல் நிறுவனங்கள் நட்டம் அடைவதாகக் கூறுவதில் கூட அய்யவினா எழுகிறதே!
அப்படி  லாபம் ஈட்டப்பட்ட அந்தக் கால கட்டத் தில் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லையே! இப்பொழுதைக்கு உடனடியாக டீசல் விலை, மண்ணெண்ணெய் விலை, சமையல் எரிவாயு விலை ஏற்றப்படாவிட்டாலும் அடுத்த கட்டமாக ஏற்றபடக் கூடிய அபாயம் தலைக்குமேல் கூரிய கத்தியாகத் தொங்குகிறது என்றே கணிக்கப் படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், அதன் விளைவு - எல்லா மட்டங்களிலும் விலை உயர்வு இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்துவிடுமே!
ஏழை, நடுத்தர மக்கள், அன்றாடம் கூலிக்காரர்கள், மாதாந்திரச் சம்பளக்காரர்கள் இந்தத் திடீர்க் கூடுதல் விலையை எப்படி சமாளிப்பார்கள்? திடீர் பெட்ரோல் விலை உயர்வு போல திடீர் வருமானம் எங்கிருந்து இம்மக்களின் வீட்டில் கொட்டப் போகிறது?
போதும் போதாதற்கு தமிழ்நாடு அரசோ அதன் பங்குக்கு மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என்று மக்களின் தலையில் ஆணி அடித்து விட்டது.
கல்வி நிறுவனங்கள் திறுக்கப்படும் நேரம் - குடும்ப வருமானத்தில் அதற்காகவும் பணம் தேவைப்படும் ஒரு சூழல்! விலைவாசி உயர்வு என்பது சமூக அமைப்பின் முகத்தையே மாற்றக் கூடியதாயிற்றே!
பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு வரிச் சலுகை, வரி தள்ளுபடி, வாராக்கடன், வெளி நாடுகளில் கறுப்புப்பணம் என்று பல லட்சக் கணக்கான கோடிகளை இந்தியாவின் வரவுக்குள் கொண்டு வர இயலாமல், ஏழை எளிய மக்களின் தலைகளில் மிளகாய் அரைப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும்.
கூட்டணி கட்சியான திமுக உட்படப் போர்க் கொடி தூக்கி இருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்; செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் முறையும் மாற்றப்பட்டாக வேண்டும் இது மிக மிக முக்கியமாகும்.

Monday, May 28, 2012

சட்டமன்றத் தேர்தலில் இம்முறை நரேந்திர மோடியால் அவ்வளவு எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது


 அச்சுத் யக்னிக்

2012 டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பணிகளை உயர்மட்ட அரசியல் தலைவர்கள் தொடங்கிவிட்டனர். இரு தேசிய கட்சிகளாக காங்கிரசும், பா.ஜ.க.வும் அடி மட்டத்திலிருந்து ஆதரவு திரட்டத் தொடங்கிவிட்டன. அவற்றின் தலைவர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் சொற்போர்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டதை அடுத்து, தொகுதிவாரியான முதல் சுற்று தொகுதி சீரமைப்புப் பணிகளை இரண்டு கட்சிகளுமே முடித்துள்ளன. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், குறைந்தது 60 தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன அல்லது தாழ்த்தப் பட்டோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன அல்லது பொதுத் தொகுதியாக ஆக்கப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் இவ்வாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், இரண்டு கட்சிகளுக்கும் புதிய சவால்கள் தோன்றியுள்ளன.
மோடியின் பேராசை
நிதி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்ற முக்கியமான துறைகளை வகித்து வரும் மாநில அரசின் மூத்த அமைச்சர்கள் சிலரும், பா.ஜ.க.மாநிலத் தலைவரும் தொகுதி எல்லைகள் மாற்றியமைக்கப் பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்கள் அனைவருமே  மாற்றி அமைக்கப் பட்டுள்ள தங்கள் தொகுதிகளின் புதிய பகுதிகளில்  தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தொகுதிவாரியான ஜாதி, பிரிவு வாக்காளர் கலவை பற்றிய ஓர் ஆய்வை அண்மையில் முதல்வர் நரேந்திர மோடி மேற்கொண்டார். தனது தலைமையில் மூன்றாவது முறையாக நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் பிரச்சார, பணித் திட்டங்களை நுண்ணிய அளவில் தயாரிக்க அவர் விரும்புகிறார் என்பதற்கான அறிகுறி இது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று ஏற்கெனவே மோடி அறிவித்துள்ளார்.
புத்துணர்வு பெற்றுள்ள குஜராத் காங்கிரஸ் 2002 இல் பா.ஜ.க. வெற்றி பெற்ற 127 இடங்கள், 2007 இல் வெற்றி பெற்ற 117 இடங்களை விட அதிகமான இடங்களை இந்தத் தேர்தலில் பெறுவது ஒருபுறம் இருக்கட்டும். இத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதி எல்லை மாற்றம் ஒரு பிரச்சினை என்றால், மோடிக்கு அதைவிட அதிக சங்கடம் அளிக்கும் மற்ற பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் ஒன்று குஜராத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது என்பதுதான். கடந்த ஓராண்டு காலத்தில் யாத்திரைகள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள் என்று பல நிகழ்ச்சிகளை நடத்திய தங்களின் தீவிரமான செயல்பாட்டின்  மூலம் மக்களுடன் புதிய தொடர்பை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  சட்டமன்றத்தில், பல்கலைக் கழக வளாகங்களில், உள்ளூர் ஊடகங்களில் என்று  காங்கிரஸ் கட்சியின் பல நிலைகளிலான புதிய ஆக்கிரமிப்புகள் கண்களுக்குத் தெரிகிறது. என்றாலும், மோடியின் பெரு முயற்சிகள் மற்றும் அவரது தலைசிறந்த நடிப்புத் திறன் ஆகியவற்றையும் பயன் அற்ற முறையில் பின்னுக்குத் தள்ளுவது அவ்வளவு எளிதான செயலல்ல என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. ஆனால் காங்கிரசின் தற்போதைய மாநிலத் தலைமை நரேந்திர மோடியுடன் ஒவ்வொரு முனையிலும் போராட முயல்கிறது என்பது மட்டும் உண்மை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மான்சா தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.  குஜராத் சட்டமன்றத் தலைவராக இருக்கும் பா.ஜ.க. தலைவர் ஒருவரின் இத்தொகுதியில் கிடைத்த தோல்வி ஆளும் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வெகுஜன போராட்டங்களில் காங்கிரஸ் பங்கேற்பு
இயற்கை வளங்கள் மீது தங்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள உள்ளூர் விவசாயிகளும் பழங்குடியின மக்களும் ஆங்காங்கே மேற்கொண்டு வரும் அடிமட்டப் போராட்டங்களிலும் ஒரு குறைந்த அளவிலேனும் காங்கிரஸ் தலைமை பங்கேற்று வருகிறது. அண்மையில் சவுராஷ்டிரா மற்றும் குஜராத் பருத்தி விவசாயிகளின் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு காங்கிரஸ் போராடியதால், பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
குறைந்த விவசாய நிலம் உள்ள அல்லது நிலமே இல்லாத விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளைப் பற்றி முன்பெல்லாம் எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்த காங்கிரஸ், அண்மைக் காலங்களில் காட்டிய அக்கறையினால், பெரும் மற்றும் நடுத்தர விவசாயிகளின் ஆதரவும் பலப்பட் டுள்ளது. உயர்பிரிவு விவசாயிகளிடையே மனநிறைவின்மை வளர்ந்து வருவது பற்றி மாநில பா.ஜ.க. தலைவர் மேற் கொண்ட கிசான் யாத்திரைக்கு பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. அவரது சொந்த பகுதியான சவுராஷ்டிராவிலும், அவரது சொந்த சமூகத்தைச் சேர்ந்த படிதார்களிடையேயும் அதற்கு ஆக்கபூர்வமான ஆதரவு கிட்டவில்லை.
ஏழைகளின் வாழ்வாதார நீர்நிலைகள் தொழில் அதிபர்களுக்கு தாரை வார்க்கப்பட்டன
இரண்டாவதாக, பொதுச் சொத்து ஆதாரங்களையே பெரிதும் நம்பி வாழும், கிராமப்புறங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், தொழிலாளிகள்  போன்ற ஏழை சமூகத்தினரிடையே மனநிறைவின்மை பரவலாக வளர்ந்து வருகிறது. தன்னை விகாஷ் புருஷ் என்று காட்டிக் கொள்ள, முன்னேற்றம் என்ற பெயரால், பெரும் அளவிலான விளை நிலங்களையும், கடற்கரையோர நிலங்களையும் பெரும் தொழிலதிபர்களுக்கு மோடி கொடுத் துள்ளார். அதே போல, சவுராஷ்டிரா, குச் போன்ற பல மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளையும், உப்பங்கழிகளையும் பெரிய தொழிற்சாலைகள், சட்டப்படி யாகவோ அல்லது  அடாவடியாகவோ  எடுத்துக் கொண்டன. தங்களது பிழைப் புக்காக இத்தகைய நீராதாரங்களையே பாராம்பரிய உரிமையாக அனுபவித்து வரும் கால்நடை பராமரிப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் இதனால் பாதிக்கப் பட்டு பெரும் ஏமாற்றமடைந்து வெறுப் புடன் இருக்கிறார்கள்.  சவுராஷ்டிரா கடற் கரையில் அமைக்கப்பட்ட நிர்மா சிமெண்ட் ஆலைக்கு எதிராக விவ சாயிகள் மேற்கொண்ட போராட்டம் தவிர வேறு எந்த போராட்டமும் அமைப்பு ரீதியாக ஏற்பாடு செய்து மேற்கொள்ளப் படவில்லை. குச், சவுராஷ்டிராவைச் சேர்ந்த பல கிராம மக்கள் நீதிகேட்டு குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடியுள் ளனர். அவர்களின் வழக்கு நிலுவையில் உள்ளது.
கால்நடை வளர்ப்பவரிடையே  வளர்ந்து வரும் கசப்புணர்வைக் கண்டு அதனைப் போக்க,  வரும் மழைக் காலத் தில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி மேம்படுத்தும் திட்டம் ஒன்றை மோடி அரசு அறிவித்தது. ஆனால் மாடுகள் மேய்க்கும் ரபாரிகள், ஆடுகள் மேய்க்கும் பார்வார்டுகளின் தலைவர்கள் இதனை ஒரு ஏமாற்று வேலை என்று கூறு கிறார்கள். இது மோடி அரசின் கழைக் கூத்து என்று குஜராத் ஊடகமும் கிண்டலடித்துள்ளது.
மோடியின் சர்வாதிகாரித்தனமான போக்கு
மூன்றாவதாக, மோடியின் சர்வாதி காரத் தனமான போக்கு, வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தற்போது பெற்றுள்ள பலத்தைக் குறைத்துவிடும் என்று கருதப்படுகிறது. அவர் நடந்து கொள்ளும் முறை, சில சங் பரிவார அமைப்புகளை, குறிப்பாக விசுவ இந்து பரிசத் மற்றும் பாரத் கிசான் சங் ஆகியவற்றை, தற்போதைய தலைமை யிடமிருந்து விலகி இருக்கச் செய் துள்ளது. பா.ஜ.க.வின் இரண்டு முன்னாள் முதல்வர்களான கேசுபாய் படேலும்,  சுரேஷ் மெஹ்தாவும்  மோடி இருந்த மேடையிலேயே அவர்களின் அதிருப்தி யையும், கருத்து வேறுபாட்டையும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்தினர். மோடியின் முன்னேற்ற செயல்திட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர் பா.ஜ.க. தலைவரான கனுபாய் கல்சாரியா போர்க் கொடி தூக்கியவர், நிர்மா சிமெண்ட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றார். முதல்வருக்கு எதிராக அவர் போராடியபோதும், கட்சி அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ். சின் தலைமை மோடியை பிரதமாக்குவதற்கு ஆதரவாக இருந்தாலும் கூட, உள்ளூர் குஜராத் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மோடியின் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு வேலை செய்யக் கூடத் தயாராக இல்லை.
இந்த மூன்று அம்சங்களும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக செயல்படும் என்றாலும்,  வளர்ந்து வரும் குஜராத் மாநில நடுத்தரப் பிரிவு மக்களின் பார்வையில் மோடி ஒரு நாயகராகவே தோற்றம் அளிக்கிறார் என்பதுடன் தனது கட்சிக்காரர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடக்கி வைக்க இயன்ற அவரது செயல்படும் விதத்தினால் கவரப்பட்டவர்களாக இருக்கின்றனர். முன்பு உயர் மற்றும் நடுத்தர மக்களே நடுத் தர வகுப்பினராக இருந்தனர். ஆனால் வேகமாக நகர்ப்பகுதிகளும், தொழில்களும்  பெருகி வருவதால்,  நடுத்தரப் பிரிவினர் என்றால் குஜராத் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட , தலித் சமூகத்தினர் என்றே பொருள்படும்.
நடுத்தரப் பிரிவு மக்களிடையே செல்வாக்கும் ஆதரவும் பெற்றுள்ளார் மோடி
இவ்வாறு வளர்ந்து வரும் நடுத்தரப் பிரிவு மக்களிடையே தனது செல்வாக்கின் கவர்ச்சியை அதிகரிக்கச் செய்யவே இந்துத்துவா கொள்கையைக் கடைப்பிடித்த மோடி, தங்க குஜராத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என்று கூறி,  உள்ளூர் விவகாரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் குஜராத்தியர்களின் மனப்பான்மைக்குத் தீனி போட்டு,  சந்தைப் பொருளாதார முன்னேற்றத்தைத் தனது செயல்திட்டங்களிலும், பிரச்சாரத்திலும் சேர்த்துக் கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்த மூன்று செய்திகளின் கலவை மாநிலத்தின் நடுத்தரப் பிரிவு மக்களிடையே அவருக்கு அளப்பரிய செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. அத்துடன் அவருக்குக் கிடைத்த நிபந்தனையற்ற ஆதரவினால், தன்னையே குஜராத் என்று உருவகப்படுத்திக் கொண்ட மோடி, எவராவது தன்னை விமர்சனம் செய்தால், அது குஜராத்தையே விமர்சிப்பது, குஜராத் மக்களை, அவர்களது உணர்வை விமர்சிப்பது என்பதாக மக்கள் காணும்படி செய்துவிட்டார். இந்து நடுத்தரப்பிரிவு மக்கள் குஜராத்தில் பெரும்பான்மையின ராக இல்லாத நிலையில்,  மாநிலத்தின் மனிதவள புவியியல் அமைப்புடன் இணைந்த சமூகக் கலப்பானது, குஜராத்தின் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் இந்துநடுத்தரப் பிரிவினருக்கு உறுதியுடன் ஒரு முடிவெடுக்க ஆதரவு அளிக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் உள்ள குறைபாடுகள்
நடுத்தரப் பிரிவு மக்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்கு அல்லது அவர்கள் நம்பும் அளவுக்கு நரேந்திர மோடியைப் போன்ற தலைவர் எவரும் காங்கிரசில் இல்லை. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அதிகார அமைப்புகளிலும், விரிவான கூட்டுறவுத் துறை அமைப்புகள் அல்லது கல்வி நிறுவன அமைப்புகளில் ஆழமாக பா.ஜ.க. ஊடுருவி இருப்பதுடன் ஒப்பிடும்போது, காங்கிரசுக்கு ஓரளவுக்கே செல்வாக்கு உள்ளது. மோடி முன் வைக்கும் வாதங்களை முறியடித்து கேட்போரை மனம் கவரச் செய்யும் பேச்சாற்றல் கொண்டவர்கள் எவரும் காங்கிரசில் இல்லை. மோடி கூறுவது போன்ற முன்னேற்றத் திட்டங்களைப் பற்றியும், 2002 கலவரங்களில் பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்குவது பற்றியும் கேள்வி கேட்கவோ அல்லது மாற்றுத் திட்டங்களை அளிக்கவோ காங்கிரசால் முடியவில்லை. மோடிக்கு அமெரிக்க நாட்டு விசா ஒன்றைப் பெறுவதற்காகவும், அனைவரையும் உள்ளடக்காத மோடியின் மாதிரி முன்னேற்றத் திட்டத்திற்கு மேற்கு நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவும் பெரும்பாடு பட்ட  குஜராத் மாநிலத்தைத் தாயமாகக் கொண்ட அமெரிக்க வாழ் பெரும் வணிகர்கள் தொழிலதிபர்கள் போன்றோரின் செல்வாக்கோ ஆதரவோ காங்கிரசுக்கு இல்லை.
என்றாலும், அண்மையில் காங்கிரஸ் திடீரென்று வெளிப்படுத்திய ஆற்றல், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தக்கூடும். என்றாலும் இன்னமும், குஜராத்தில் பா.ஜ.கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரசால் முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
2012 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி தனது அடுத்த சவாலான, 2004 நாடாளுமன்றத் தேர்தல்  பற்றி தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்குவார் என்பது நிச்சயமானது. ஒட்டு மொத்த இந்திய நாட்டின் நடுத்தரப் பிரிவு மக்கள் தங்களின் முழுமனதான ஆதரவை அவருக்கு அளித்து அவரை தேசிய அரசியலில் ஒரு தலைவராக நிலை நிறுத்தப் போகிறார்களா என்பது ஒரு பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது.
(நன்றி: தி ஹிந்து, 9.-5.-2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்).


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...