Tuesday, May 31, 2016

ஆந்திர முதல் அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்


ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரை அறியாமலேயே ஓர் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார். மக்களிடத்தில் பாவங்கள் அதிகரித்து வருவதால் கோயில் வருவாய் அதிகரித்து வருகிறது - கோயில் உண்டியல் நிரம்பி வழிகிறது என்று கூறியுள்ளார்.

கிறித்துவ மதத்தில் பாவத்தின் சம்பளம் மரணம் என்றுசொல்லுவார்கள். சந்திரபாபு நாயுடு அவர்களின் கருத்துப் பார்வையில் சொல்ல  வேண்டுமானால் பாவ மூட்டைகளின் சுமைதான் கோயில் உண்டியலாகும். கோயிலுக்குச் சென்று நிவர்த்திக் கடனைத் தீர்த்து விட்டால், உண்டியலில் பணத்தைக் கொட்டி விட்டால், தான் செய்திருக்கிற பாவங்கள் தீர்ந்தே தீரும் என்ற நம்பிக்கை ஒரு மனிதனுக்கு ஏற்பட்டு விடுமேயானால், நாட்டில் பாவங்கள்  - அதாவது குற்றங்கள் செய்ய யாரும் தயங்கவோ, அச்சப்படவோ தேவையில்லை என்பது விளங்கி விட்டதா இல்லையா?

சில கோயில்களில் ஒரு பெரிய பட்டியலே தொங்குகிறது. இன்னின்ன பாவங்களுக்கு இன்னின்ன பொருள்களைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் - படைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபெருமானுக்கு நடைபெறும் ‘பிரதோஷ வழி பாடும் சிறப்புகளும்‘ என்ற தலைப்பில் தினத்தந்தி குடும்பமலரில் (2.5.2004) வெளிவந்த அந்த விவரம் இதோ:

நல்லெண்ணெய் - பக்தி, சுகம், நலம்தரும்; திரவியப் பொடி - கசடுகள் நீங்கிடும்;  கதம்பப் பொடி - நறுமணம் உண்டாகும்; தண்ணீர் (கங்கா) மனத்தூய்மை - ப. அரிசி மாவுப் பொடி - கடன் தீரும்; குபேரசம்பத்து   கிடைக்கும்;’ தேன் - குரலினிமை;  கற்கண்டு - ஒற்றுமை; கரும்புச் சாறு - தோஷம்; பிணி நீங்கும்; சர்க்கரை - பகை, எதிரிகள் ஒழிவர்; பழ வகைகள் - வியாபார முன்னேற்றம்; பஞ்சாமிர்தம் - நீண்ட ஆயுள், உடல்பலம், வெற்றி; நெய் - முக்தி, சுகவாழ்வு; பால் - ஆயுள் விருத்தி; தயிர் - குழந்தைப் பாக்கியம் உடல் வலு; இளநீர் - ராஜபோகம்; எலுமிச்சை, நா.பழம், ஜாதிக்காய் - மரண பயம் நீங்கும்; விபூதி  - சகல ஞானமும் கை கூடுதல்; சந்தனம் - குளிர்ச்சி உண்டாகும்; பன்னீர் - சர்ம நோய்கள் அகலும்; ஸ்வர்ணாபிஷேகம்; ஆபரணம் - அணிகலன்கள் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாகும் - இப்படி ஒரு பட்டியல் கோயிலில் தொங்குகிறது.

பக்தி என்பது ஒரு பண்டமாற்று முறையாக இருப்பதை நோக்க வேண்டும்; அரசு அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதைப் போல கடவுளுக்கு காணிக்கை என்ற பெயரால் கொடுப்பது இலஞ்சம் அல்லாமல் வேறு என்னவாம்?

இதுபற்றிப் பகுத்தறிவுத் தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

‘நான் பாவம் செய்து தான் தீருவேன்; நீ மன்னித்துத் தான் ஆக வேண்டும்‘ என்று பிரார்த்தித்திருப்பதை கடவுள் ஏற்றுக் கொள்வதானால், மனிதன் எந்த பாவத்தைச் செய்வதற்கும் ஏன் பயப்பட வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை. பாவத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அர்த்தம்தான் என்ன? (பகுத்தறிவு மலர் இதழ்-9 (1935). என்ற வினாவைத் தொடுத்த தந்தை பெரியாருக்குப் பக்தர்கள்,  வைத்திருக்கும் நாணயமான பதில் என்ன?

அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதும் இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானது.

“கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான், விபச்சாரி விசேஷ அபிஷேகம் செய்கிறாள். குடி கெடுப் பவன் கும்பாபிஷேகம் செய்கிறான்; கொள்ளை லாபம் அடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான்; ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழி செல்லுபவர்கள் ஆலயங்களிலே நுழைய முடியாதபடி தடை உண்டா? இல்லை; ஆனால் ஆதி திராவிடர் மட்டும் ஆலயத்துக்குவர கூடாது என்று தடுக்கிறோம் - நியாயமா?” (நூல்: ‘தீண்டாமை வானொலி’ உரை பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - பக்கம் 312)
திராவிடர் கழகத்துக்காரர்கள், பகுத்தறிவாளர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் வக்கிரப் புத்தியோடு தாண்டிக் குதிப்பார்கள். ஆனால் ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒன்றும் நாத்திகப் பேர் வழி அல்லவே - சாட்சாத் பக்த சிரோன்மணியாயிற்றே!

அவரே சொல்லுகிறார் என்கிறபோது, அதற்கு என்ன பதில்? ஆத்திகவாதிகளாக இருந்தாலும் ஆன்மிகக் கொழுந்துகளாக இருந்தாலும் சரி, சராசரி அளவுக்கு அறிவைக் கொஞ்சம் செலுத்தினால் பகுத்தறிவாளர்கள் விடுக்கும் கேள்வியில் நிமிர்ந்து நிற்கும் அறிவு நாணயத்தை ஏற்றுக் கொண்டுதானே தீர வேண்டும்.

காஞ்சி சங்கராச்சாரியாரே என்ன சொல்லுகிறார்?

“பத்துப் பதினைந்து வருஷங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படுகிறது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றன. இவை நிறைய வரவர பக்தியும் மேன்மேலும் வளருகிறது - இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட - துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவதற்குக் காரணம் என்ன? ஓரளவிற்கு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்கமின்மையும் சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன” (தினமணி 7.9.1976) என்று சங்கராச்சாரியாரே ஒப்புக் கொண்டு விட்டாரே!
பக்தர்களே, பதறாமல் சிந்திப்பீர்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, May 30, 2016

தமிழக அரசின் செயல்பாடுகள்-பிரச்சினைகள்அடிப்படையில் திராவிடர் கழகத்தின் ஆதரவும்,எதிர்ப்பும் இருக்கும்!

ஜூலையில் - திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார திட்டம்
நுழைவுத் தேர்வை நிரந்தரமாக தடை செய்க!
மத்திய பிஜேபி அரசின் ஈராண்டு ஆட்சி தோல்வி மயமே!
மத்திய அரசின் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் கமிட்டியின்  புதிய கல்விக் கொள்கைக்குக் கண்டனம்
தமிழக அரசின் செயல்பாடுகள்-பிரச்சினைகள்அடிப்படையில் திராவிடர் கழகத்தின் ஆதரவும்,எதிர்ப்பும் இருக்கும்!
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்
சென்னை மே 30 - திராவிடர் கழகத்தின் ஆதரவும், எதிர்ப்பும் ஆட்சியைப் பொறுத்தவரை  பிரச்சினைகளின் அடிப்படையில் இருக்கும் என்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலையில் கிராமப்புற பிரச்சார திட்டம் முடுக்கி விடப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம் (2ஆம் பக்கம் பார்க்க) 

தீர்மானம் 2: 

ஆட்சியும் - கழகத்தின் அணுகுமுறையும்

தமிழ்நாட்டில் நடைபெற்ற 15ஆவது சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
சட்டமன்றம், ஜனநாயகப் பண்புகளுடன் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணக்கத்துடன் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று இச்செயற்குழு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது.

தேர்தலில் போட்டியிட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் வரைதான் அரசியல் மாறுபாடுகளாகும்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் கட்சி, வாக்கு அளித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி என்பது பொதுவான இலக்கணமாகும். எதிலும் அரசியல், காழ்ப்புணர்ச்சி அணுகுமுறைகளுக்கு இடமில்லாமல் தமிழக அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

அரசியல் கட்சியல்லாத சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், ஆட்சியாளரின் மக்கள் நலச் செயல்பாடுகளுக்கு ஆதரவையும், மாறான பணிகளுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் என்றும், வாதாட வேண்டியவைகளுக்காக வாதாடும், பாராட்ட வேண்டியவைகளைப் பாராட்டும், போராட வேண்டியவைகளுக்குப் போராடும் என்ற வழக்கமான அணுகுமுறையை, முன்பு எப்பொழுதும் கடைபிடித்து வந்ததுபோலவே, இம்முறையும் பின்பற்றும் என்றும் கழக செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 3:
கிராமப்புற பிரச்சாரத் திட்டம்

மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கை, ஜாதி உணர்வு, கலாச்சாரச் சீர்கேடுகள், மதவெறி இவற்றிற்கு எதிராக அறிவியல் முறையில் அணுகி, மக்களிடத்தில் விழிப்புணர்வுப் பகுத்தறிவுப் பிரச்சாரம், மதுவிலக்கு, சமூகநீதி பற்றிய விளக்கம், அதன் தேவைகள் பற்றிய இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் - இவற்றை உள்ளடக்கிய; கிராமப்புற பிரச்சார திட்டத்தை ஜூலை முதல் தொடங்கி நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4: 
கழக அமைப்புப் பணிகள்

திராவிடர் கழகத்தில் உட்பிரிவுகளான மகளிரணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி அமைப்புகளை மேலும் வலுவாகக் கட்டி, கடைகோடி மக்களுக்கும் இயக்கப் பணிகள் போய்ச் சேரும் வகையில் அமைப்புப் பணிகளில் தேவையான மாற்றங்களைச் செய்து புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது!
(அ)    பொறுப்பாளர்கள் மாற்றம்.
(ஆ)    உறுப்பினர் சேர்க்கை.
(இ)    இலக்குகள் நிர்ணயம்.
(ஈ)    நூல்கள் விற்பனை, துண்டு அறிக்கைகள் விநியோகம்.
(உ) கரும்பலகைப் பிரச்சாரம்.
(ஊ)    பெரியார் பேசுகிறார் திட்டம் விரி வாக்கம், பெரியார் பயிற்சிப் பட்டறைகள்.
தேவைப்படும்போது ஜூலை மாதத்தில் கழகத் தலைவர் தலைமையில் தலைமைக் கழக குழுவே மாவட்டங்களுக்குச் சென்று கலந்துரையாடல் நடத்துவர்.

தீர்மானம் 5.(அ): 

மருத்துவ நுழைவுத் தேர்வை
நிரந்தரமாக நீக்குக!


மருத்துவக் கல்வி, பல் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு என்ற முறை சமூகநீதிக்கு எதிரானது. நீண்டகாலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டு, சமீபகால மாகத்தான் கல்வி வாய்ப்புகள் அளிக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் நுழைவுத் தேர்வு மூலம் கடுமை யாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு என்பது சட்டரீதியாக தடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வைத் திணிப்பது சட்டவிரோதமானதுமாகும். நுழைவுத் தேர்வுதான் தகுதிக்கான அளவு என்றால் +2 தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்றது தகுதிக்கான அளவுகோல் இல்லையா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லாத நிலையில், நுழைவுத் தேர்வைக் கண்மூடித்தனமாக திணிப்பது என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இச்செயற்குழு திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் நுழைவுத் தேர்வு கிடையாது என்பதை மாற்றி, நிரந்தரமாகவே நுழைவுத் தேர்வு கிடையாது என்பதை உறுதிப்படுத்த வேண் டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நுழைவுத் தேர்வுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ளதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமான தமிழ்நாட்டின் குரலை மதித்து, நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரத் தடையை ஏற்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தனித் தீர்மானம் ஒன்றைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5(ஆ) : 

டாக்டர்கள் ஓய்வு வயதை உயர்த்தக் கூடாது!


மாநில, மத்திய அரசின்கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65 வயதாக உயர்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதானது - பல்லாயிரக்கணக்கான இளம் மருத்துவர் களுக்கான அரசுப் பணியைத் தடை செய்வதாகும்.

மண்டல்குழுப் பரிந்துரையின்கீழ் 27 சதவீத அடிப்படையில் மருத்துவர்களாக பணியாற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும்; தாழ்த்தப் பட்டவர்களுக்கான வாய்ப்பும் பறிபோவ தால் இந்த முடிவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
இல்லையெனில் உரிய வகையில் போராட்டத்தில் இறங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: 
மத்திய அரசின் புதிய கல்விக்
கொள்கைக்குக் கண்டனம்


மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டுள்ள டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் கமிட்டியின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான ஆபத்துகளில் ஒன்று - இந்தியா முழு மைக்குமான புதிய இந்தியக் கல்விப் பணி சர்வீஸ் - (All India Educational Service) ஒன்றைத் துவக்கி, அதிக தகுதி யும், திறமையும் வாய்ந்தவர்கள் தேர்வு என்று கூறி, பொத்தாம் பொதுவில், தற் போது மாநிலங்களின் தனி கலாச்சாரம், சமூகநீதி முன்னேற்றம் - இவைகளைப் பறிக்கும் மறைமுகமானதொரு அபாயத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர்!

இது ஏற்கனவே நெருக்கடி நிலை காலத்தில், மாநிலப் பட்டியலில் இருந்த கல் வியை பொதுப்பட்டியலுக்கு (Concurrent list)
கொண்டு செல்லப் பட்டதை மேலும் ஆழப்படுத்தும் வகையில் மத்திய அரசின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரத் திட்டமிடப்படுகிறது!
இதன் மூலம் ஹிந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத்துடன் இதை பரிந்துரைத்துள்ளதற்கு மாநில அரசுகள் ஒரு போதும் தம் இசைவைத் தரக் கூடாது என்றும், இதனை எதிர்த்து கல்வி ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7: 

மத்திய பி.ஜே.பி. அரசின் இரண்டாண்டு கால செயல்பாடுகள் முற்றிலும் தோல்வி மயமே!
மத்திய பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது இரண்டாண்டு கால பயணத்தை முடித்துள்ளது.
கடந்த இரண்டாண்டுகளில் எந்த விதமான மக்கள் வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. பல அறிவிப்பு களும் ஏட்டளவில்தான் உள்ளன.

(அ)    தொழிற்சாலைகள் தொடக்கமோ, புதிய வேலைவாய்ப்புகளோ இல்லை.

(ஆ)    பிரதமரின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களாலும் எந்தவித பலனும் நாட்டுக்குக் கிடைக்கவில்லை.

(இ)    மாறாக, இந்துத்துவா அஜண் டாவை செயல்படுத்துவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக, இந்துக்களின் புனித நதி என்று கூறிக்கொள்ளும் கங்கை நதி சுத்திகரிப்பு என்ற, மக்கள் நல வளர்ச்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு காரியத் திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொட்டி அழப்படுகிறது.

(ஈ)    கறுப்புப் பணத்தை மீட்டு, தலா ரூ.15 லட்சம் அளிக்கப்படும் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது. மாறாக, மோடி ஆட் சியில் வெளிநாட்டில் கறுப்புப் பணப் பதுக்கல் ரூ.50 லட்சம் கோடி!

(உ)    கல்வி காவி மயம், சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு இவற்றில் அக்கறை காட்டுகிறது.

(ஊ)    சமூகநீதிக்கு மாறான நடவடிக் கைகள்.

(எ)    பசு பாதுகாப்பு - மாட்டிறைச்சிக்குத் தடை.

(ஏ)    சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய வர்களும், சங் பரிவார்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் - அச்சுறுத்தும் வகை யிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும், ஆபாசமாகப் பேசுவது, வசைபாடுவது.

மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதான வழக்குகளில் தலையிட்டு அவர்களை விடுவிக்கும் வேலையை ஒரு பக்கத்தில் செய்துகொண்டே பயங்கர வாதத்தை எதிர்ப்பதாக வாய்ஜாலம் காட்டுவது போன்ற மக்கள் நல அரசு என்ற (Welfare State) தன்மைக்கு முற்றிலும் எதிராகத்தான் மத்தியில் உள்ள பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்பட்டு வருவதால், இந்த இரண்டாண்டு கால ஆட்சியானது முற்றிலும் தோல்வி கண்ட ஆட்சி என்பதை இச்செயற்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, May 9, 2016

ஜனநாயகமா?பணநாயகமா? - தந்தை பெரியார்

உலகில் ஜனநாயகம் என்னும் வார்த்தை மிகவும் செல்வாக்கு பெற்றது என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது.

செல்வாக்குப் பெற்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையானதும், நேர்மை யானதும் என்று சொல்லி விட முடியாது.

செல்வாக்கு பெற்ற வார்த்தைகள் பெரும்பான்மையும் சில சுயநலங்கொண்ட மக்களால் உள்எண்ணத்தோடு கற்பிக்கப்பட்டு, பாமர மக்களுக்குள் பிரச்சாரம் செய்யப்பட்டதின் பயனாகவே செல்வாக்கடைய முடிந்ததாக இருக் குமே தவிர உண்மையில் அதன் யோக்கியதையால் - ஏற்படும் பயன் களால் செல்வாக்கு ஏற்பட்டதென்று சொல்லிவிடவும் முடியாது.

புண்ணியம், சத்தியம், அகிம்சை, ஜீவகாருண்யம், ஒழுக்கம், கற்பு என்பன போன்ற வார்த்தைகளுக்கு நாட்டில் மதிப்பும் செல்வாக்கும் இருந்து வருகின்றது. என்றாலும் அவைகள் உபயோகப்படும் மாதிரியும் காரியத்தில் அனுஷ்டிக்கப்படும் தன்மையும் எப்படி இருந்து வருகின்றது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இவை பெரும்பாலும் வலுத்தவன் இளைத்தவனை அடக்கியாளும் காரியத்திற்கும் தன்தன் சுயநலத்துக்குமே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன என்பது கண்கூடு.

இம்மாதிரியிலேயேதான் ஜனநாயகம் என்கின்ற வார்த்தையும், பணநாயகத்துக்கு அடிமை அதாவது பாமர மக்களையும், ஏழை மக்களையும் அடக்கியாள, படித்த - பணக்கார மக்களால் கற்பிக்கப்பட்டதும், பயன்படுத்தத் தக்கதுமான வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

உலகிலே எந்தெந்த நாட்டில் ஏழை மக்கள் கண் விழித்தார்களோ அங்கெல்லாம் ஜனநாயகத்தின் புரட்டு வெளியாகிக் கொண்டுதான் வருகின்றது. ஜனநாயக அரசாங்கம், - ஜனநாயக ஸ்தாபனங்கள் - ஜனநாயக முயற்சிகள் என்பவைகளைப் பற்றிய அனுபவம் இந்திய மக்களுக்குச் சுமார் 50, 60 வருஷகாலமாக இருந்து வருகின்றது என்று எண்ணுகின்றோம். இந்த 50, 60 வருஷ கால அனுபவத்தில் ஜனநாய கத்தின் பலன் என்ன என்பதைப் பார்த்தால் பிறகு ஜனநாயகம் என்பதில் அதன் வார்த்தைக்கேற்ற தத்துவம் இருக்கின்றதா?  அல்லது ஜனநாயகம் என்பது பணநாயகத்தின் அடிமையா என்பது விளக்கும்.

இந்தியாவில் ஜனநாயக ஸ்தாபனம் என்னும் காங்கிரசு ஏற்பட்டு சுமார் 50 வருஷங்களுக்கு மேலாகின்றது. ஜனநாயக தத்துவம் என்னும் முனிசிபாலிட்டிகள், ஜில்லா தாலுகா போர்டுகள் முதலியவை ஏற்பட்டும் 50, 60 வருஷங்களாகின்றன.

சட்ட சபைகள், நிர்வாக சபைகளில் பெரும்பாகம் முதலியவைகளும் ஜனநாயகத்துக்கு வந்து 20 வருஷங்கள் முதல் 40 வருஷங்கள் வரை ஆகின்றன.

இவைகளால் பொதுமக்களுக்கு ஜனநாயக தத்துவ நன்மை என்ன ஏற்பட்டது? அல்லது ஜனநாயக உரிமை என்ன ஒழுங்காய் பயன்படுத்தப்பட்டது? என்பதை யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.

ஜனநாயக சட்டசபையையும் நிர்வாக சபையையும் எடுத்துக் கொள்ளுவோம். ஜனநாயக ஸ்தாபனங்களின் பேரால் நடக்கும் புரட்டுகள் எவ்வளவு?  என்பதில் காங்கிரசைப்பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றோம். பொதுவாக பேசுவோமானால் இன்று ஜனநாயகம் பணநாயகத்தின் அடிமையா அல்லவா என்பதை முதலில் யோசிப்போம். நமது சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டால் ஒரு இரண்டு மூன்று ஜமீன்தார்களோ, பணக்காரலேவா தேவிக் காரர்களோ, முதலாளிகளோ ஒன்று சேர்ந்து 3 அல்லது 4 லட்ச ரூபாய் முதல் வைத்து ஜன நாயகத்தை விலைக்கு வாங்கும் கூட்டாளிகளாகி ஒரு கூட்டு வியாபாரம் ஆரம்பித்தால், 26 ஜில்லாக்களிலும் குறைந்த அளவாக மெஜாரிட்டி சட்டசபை மெம்பர்களையாவது தங்கள் இஷ்டப்படி ஆடக்கூடியவர்களாக சம்பாதித்து விட முடியுமா முடியாதா என்று யோசித்துப் பாருங்கள். இன்னமும் கொஞ்சம் பணம் செலவு செய்தால் அரசாங்க நியமன மெம்பர்களையும் சுவாதீனம் செய்து கொள்ள முடியுமா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் எந்தத் தேர்தலை எடுத்தாலும் தல ஸ்தாபன தேர்தலுக்கு 2,000ரூ செலவு 5,000ரூ செலவு, 10,000ரூ செலவு என்று சொல்லப்படுவதும் சட்டசபை முதலிய தேர்தல்களுக்கு 10,000ரூபாய் செலவு 20,000 ரூபாய் செலவு, 50,000 ரூபாய் செலவு என்று சொல்லப்படுகின்றதும் உண்மையா அல்லவா என்று கேட்கின்றோம்.

100க்கு 90 மக்களை ஏழை விவசாயிகளாகவும், ஏழைத் தொழிலாளிகளாகவும் எழுத்து வாசனை அற்ற பாமர மக்களாகவும் சராசரி வாழ்க்கைக்கு போதுமான சவுகரிய மில்லாத மக்களாகவும் கொண்ட இந்த நாட்டில் மேல் கண்டபடி 1000, 16,000 இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்தால் தான் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை அடையலாம் என்கின்றதான ஜனநாயகம் அல்லது கலப்பற்ற உண்மையான ஜனநாயகமா?  பணநாயகமா? என்று கேட்பதல்லாமல் இத்தேர்தல்களின் பயனாய் ஏற்படும் கலகம், காலித்தனம், மனஸ்தாபம், கட்சி, பிரதிக் கட்சி மனப்பான்மை ஆகியவை ஒரு கூட்ட மக்களை முடி நாயகத்துக்கு நிபந்தனை அற்ற அடிமைகளாகச் செய்து வருகின்றதா இல்லையா என்றும் கேட்கின்றோம்.

அரசாங்கம் தன்னை ஜனங்களுக்காக ஜனங்கள் அபிப்பிராயப்படி நடக்கும் ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளுவதை நாம் புரட்டு என்று சொல்லுவதை விட, அவர்களால் கொடுக் கப்பட்ட ஜனநாயகத் தத்துவத்தைக் கையாளும் ஜனங்கள் உண்மையாய் யோக்கியமாய் அனுபவிக்கத் தகுதி உடையவர்களாய் இருக்கின்றார்கள் என்று சொல்லப்படுவதானது இன்னும் 1000 பங்கு முழுப்புரட்டு என்றுதான் சொல்லப்பட வேண்டியதாகும். ஜனநாயகம் கொடுக்கப்பட்ட எல்லாத்துறைகளிலும் பணம் உள்ளவன், பூமி உள்ளவன், வீடு வாசல் உள்ளவன், இந்திய மக்களின் சராசரி வரும்படிக்கு மேல் 10 பங்கு 100 பங்கு அதிக வரும்படி உள்ளவன் ஆகியவர்களுக்குத்தான் ஓட்டுரிமை இருக்கின்றதே தவிர, கைகால் உரமாய் இருந்து அவனவன் கைப்பட உழைத்து உண்ணும் பாட்டாளி மக்களுக்கு ஓட்டுச் சுதந்திரம் கிடையவே கிடையாது. மற்றும் தன் உழைப்பின் பயனாய் வருஷம் ஒன்றுக்கு 350 ரூபாய் வரையில் கூலியோ, சம்பளமோ, பெறுகின்ற வனாய் இருந்தாலும் அவனுக்கும் ஓட்டுரிமை கிடையாதென்கின்ற முறையில்தான் ஜனநாயக ஓட்டுரிமை இருக்கின்றதென்றால் இப்படிப்பட்ட ஏழை பாட்டாளி மக்களுக்கு ஜனநாயகப் பிரதிநிதித்துவம் எப்படி கிடைக்குமென்று கேட்கின்றோம். 
ஓட்டு அருகதை, பிரதிநிதி அருகதை இப்படியாக இருந்தாலும் பிரதிநிதித்துவத்தைப் பெறும் முறை முன் குறிப்பிட்டபடி 10000, 16,000, லட்சம் ரூபாய் செலவிட வேண்டியதாய் இருக்கின்ற தென்றால் ஏதோ ஒரு சில பணக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் பொதுமக்கள் இதை நினைக்கத்தான் யோக்கியதையுடையவர்களாவார்களா என்றும் தேர்தல் கூச்சல் போடுகின்றவர் களைக் கேட்கின்றோம். இந்த மாதம் பூராவும் ஜனநாயகத் தேர்தல் கூச்சலாகவே இருக்கிறது. இந்திய சட்டசபைத் தேர்தல், டவுன் முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்கள் ஆகியவைகளின் பேச்சுக் களாகவே இருக்கின்றன. இந்திய சட்டசபைத் தேர்தல் சம்பந்தமாய் லட்சக்கணக்கான செல்வம் உள்ளவர்களும், லட்சக்கணக்கான செல்வந்தர்களைத் தங்கள் கைக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்றவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்பது வெளிப்படை. பணச் செலவு இல்லாமல் ஏமாற்றலாம் என்று கருதுகின்றவர்கள் ஜனநாயக ஸ்தாபனங்களின் புரட்டுகளையும் அயோக்கியத்தனங்களையும் ஆதாரமாய்க் கொள்ள வேண்டியவர்களாய் இருக் கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே இரண்டுக்கும் யோக்கியதையற்ற வெகு பேர் சீ அந்தப்  பழம் புளிக்கும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது நிற்க, முனிசிபல் டவுன் தேர்தல்களை எடுத்துக் கொள்ளுவோம். ஒரு ஓட்டுக்கு 10 ரூபாயில் இருந்து 15 ஆகி 20 ஆகி, 25 ஆகி, 35 ஆகி, 50 ஆகி விட்டதுடன் சில ஓட்டுகளுக்கு அதாவது சிறிது சாமார்த்தியவாளியாய் இருந்து வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுப்பதாய் பாசாங்கு செய்தவர்களுடைய ஓட்டுகளுக்கு 100 ரூபாய் விலையும் ஆகிவிட்டது. இதில் எதுவும் இரகசியமிருப்பதாய் சொல்ல முடியாது. சர்க்கார் சேவகர்கள், குமாஸ்தாக்கள் ஓட்டுகளும் இந்த விலைக்குத்தான் வாங்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்க வேண்டியிருக்கின்றது. சிலர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டி ருக்கலாம் என்றாலும், அதற்குத் தகுந்த பிரதிப் பிரயோஜனமாவது அடையக் கருதியே ஓட்டுச் செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இவற்றோடு மாத்திரமல்லாமல் ஜனநாயகத்தைப் பணநாயகம் என்று மாத்திரம் சொல்வதோடல்லாமல் காலித்தன நாயகம் என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையில் சில ஊர்களில் தேர்தல்கள் நடைபெற்றதாகச் செய்திகள் எட்டுகின்றன.

இன்றைய தினம் இருக்கும் பண நெருக்கடியில் 20ரூ, 30ரு, 100ரூ போல ஒரு காக்காப்புள்ளி போடுவதற்குப் பணம் கிடைப்பதாயிருந்தால் அதை வேண்டாமென்று சொன்னவர்களை முட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் பொது ஜனங்கள் கேட்ட ஜனநாயகத் தத்துவத்தில் புரட்டு இல்லை என்று சொல்ல எவராலும் முடியாது. அரசாங்கத்தார் வழங்கிய ஜனநாயகத் தத்துவத்தில் ஏமாற்றமும், புரட்டும் இல்லையென்றும் யாராலும் சொல்ல முடியாது. இதை ஏற்றுக்கொண்டு ஜனநாயகப் பிரதிநிதிகளாய் நிற்கும் அபேட்சகர்களிடத்தில் புரட்டும், ஏமாற்றமும், பித்தலாட்டமும் மாத்திரம் அல்லாமல் நாணயக் குறைவும், யோக்கியப் பொறுப்பேற்ற தன்மையும் அடியோடு இல்லை என்றும் சிறிது கூட சொல்லிவிட முடியாது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு ஓட்டர் இப்படிப்பட்ட காரியத்துக்கு இப்படிப்பட்ட ஆட்களிடம் பத்தோ, இருபதோ, அய்ம்பதோ, நூறோ வாங்கிக்கொண்டு ஓட்டுச் செய்தால் அது எப்படி குற்றமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை. எப்படி ஒரு பெண் கற்பு இழந்தால் அந்தப் பெண்ணுக்கும், அதற்குச் சரிபங்கு பொறுப்பாளியாய் இருந்த ஆணுக்கும் சரிசமமான பாவம் என்று சொல்லுகின்றோமோ, அது போலவேதான் ஒரு ஓட்டர் பணம் வாங்கினால் அந்த ஓட்டருக்கும், அவருக்குப் பணம் கொடுத்த அபேட்சகருக்கும் அதற்கு இவ்வளவு தாராளமாய் இடமளித்த அரசாங்கத்துக்கும் சமமான பாவம், குற்றப் பொறுப்பு இருக்கின்றது என்று தான் சொல்லு வோம். இன்றைய சட்டத்தில் இதற்கு வேறு மாதிரியான அபிப்பிராயம் இருக்கலாம். ஆனால் தீர்ப்பு நாள் சட்டமிருக்கின்றதாகச் சொல்லுகின்றார்களே, அந்தச் சட்டத்தில் அதாவது ஒவ்வொரு வருடைய பகுத்தறிவையும் உபயோகித்து நடு நிலைமையில் இருந்து பார்க்கும் தன்மையில் மூன்று பேரும் அதாவது ஓட்டரும், அபேட்சகரும், தேர்தல் முறைகளும் மூன்றும் குற்றவாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்க தத்துவம் பணக்காரத் தன்மையது என்பது யாரும் மறுக்கக் கூடியதல்ல. ஏனெனில் பணக்காரனுக்குத்தான் ஓட்டு என்பதோடு அதிகப் பணம் செலவு செய்யத் தகுந்தவன் தான் வெற்றி பெறக்கூடிய நிலையில் இன்று பெரும் பான்மையான எல்லா தேர்தலும் இருந்து வருவதையும் அந்தப்படியே நடந்து வருவதையும் அரசாங்கம் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது.

போட்டி போடும் இரண்டு அபேட்சகர்களும் இந்த மாதிரி நடந்து கொள்வதால் அரசாங்கத்தாரிடம் பிராது கொடுக்க எவனும் வருவதில்லையே ஒழிய, அதாவது சூதாடிகள் சூதுக் குற்றத்துக்காக எப்படி அவர்களே பிராதுக்கு வராமல் இருக் கிறார்களோ அதுபோல் இருவரும் வருவதில்லை.

ஆனால் அரசாங்கம் இந்தக் குற்றத்துக்கு ஜவாப்தாரியல்ல என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் மற்றக் காரியங்களுக்கு எப்படிப் புலன் விசாரித்து நடவடிக்கை நடத்து கிறார்களோ அதுபோல் நடத்தி இக்காரியங்களை ஒழித்து இருக்கலாம். ஆதலால் அரசாங்கம் இதில் பங்கு பெறாமல் தப்பித்துக் கொள்ள முடியாது.

இந்தக் காரணங்களால் தான் ஜனநாயகம் என்று சொல்லப்படுவது ஏமாற்றம் என்றும், அது பணநாயகத்தில் லைசென்சு பெற்ற கூலி என்றும், அதைப் பொது மக்கள் இந்த மாதிரிப் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு செய்யலாம் என்கின்ற காரியத்திற்கு அல்லாமல் வேறு காரியத்திற்கு உதவும் என்று எண்ண இடமில்லை என்றும் சொல்லுகின்றோம்.

- பகுத்தறிவு - தலையங்கம் - 30.09.1934



‘அட்சய திருதியை’

நாளை (மே 9) அட்சய திருதியையாம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒரு நாளுக்கு “அட்சய திருதியை” என்று இந்துப் புராணம் கூறுகிறது.
சயம் என்றால் தேய்தல், அட்சய என்றால் அதற்கு எதிர்பதம் வளருதல் என்று பொருளாம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் என்று ‘மணிமேகலை’ காவியத்தில் வரும் அல்லவா!
இந்த நாளுக்காக சொல்லப்படும் ‘மகாத்மி யங்கள்’ ஒன்றா இரண்டா? உண்மையாக இருந்தால் ஒரே ஒரு கதை தானே இருக்கும்.
ஊருக்கு ஊர் ஊத்தை வாயர்கள்  உளறுவதற்குப் பெயர்தானே புராணப் புழுதி யும், மதச் சமாச்சாரங்களும்.
பூலோகத்தைப் பிரம்மன் படைத்த நாள்தான் இந்நாள், ராமன் வாழ்ந்த திரேதாயுகம். இந்த நாளில்தான் பிரம்மாவால் படைக்கப்பட்டதாம்.
வறுமையில் வாடியவன் குசேலன். அவனுக்கு 27 பிள்ளைகள். வறுமையைப் போக்கிக் கொள்ள அவன் நண்பன் கண்ணனை நாடிச் சென்றான். கண்ணனுக்கு மிகவும் விருப்பமான அவலைக் கொண்டு சென்று கொடுத்தான். அந்த அவலை அவன் தின்று முடித்தபோது குலேசன் வீடு குபீர் மாளிகையாக காட்சி அளித்தது, அவனின் மனைவி நகைக் காய்ச்சி மரமாகக் காட்சி அளித்தாள், செல்வம் கொழித்த அந்த நாள் தான்  அட்சய திருதியையாம். 27 பிள்ளைகளைப் பெற்ற குசேலனுக்கு 20 வயதுக்கு மேற்பட்ட ஏழு தடியன்கள் இருக்க மாட்டார்களா? இந்த ஏழு தடிப் பசங்களை வீட்டில் வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால் அந்த நாட்டில் மற்றவர்களும் இது போலிருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்தநாடு எப்படி உருப்படி ஆகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்கு கடவுள் செல்வம் கொடுக்கலாமா? என்று அறிவார்ந்த கேள்வியைக் கேட்டவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (பொன்னி பொங்கல் மலர் 1948).
அஷ்டலட்சுமி, தான்ய லட்சுமி அவதாரம் எடுத்த நாள் தான் இந்த அட்சய திருதியையாம் இப்படி பற்பல அண்டப் புளுகு மூட்டைகள். இவையெல்லாம் சொன்னவர்கள் யார்? கடவுளே சொன்னாரா, அவரே எழுதி  வைத்தாரா? என்று யாரும் கேள்வி கேட்டு விடாதீர்கள் அப்படிக் கேட்டால் அவர்கள் நாத்திகர்கள், நாக்கில் புற்று வந்து சாவார்கள் என்று ‘சபி’ப்பார்கள்..

இதில் அய்தீகம் என்ன என்றால் இந்த நாளில் குன்றி மணி அளவாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் அந்த வீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்குமாம்.
கடன் வாங்கியாவது தங்கம் வாங்குகிறார்கள்; அன்று வாங்கிய தங்கத்தை அடகு வைத்துதான் தங்கம் வாங்குவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் கொடுமைதான் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.
வியாபாரிகள் அட்சய திருதியைப் பற்றி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்வதால் மக்கள் நகைக்கடைகளில் குவிய ஆரம்பிக்கிறார்கள் - இந்தக் கூத்து கடந்த 10 ஆண்டு களாகத்தான், களைகட்டி நிற்கிறது. 2011ஆம் ஆண்டில் 700 கிலோ, 2012இல் 720 கிலோ, 2013இல் 1100 கிலோ, 2014இல் 1500 கிலோ, 2015இல் 2500 கிலோ என நகைக்கடைகளில் விற்பனையானது. 2016இல் 3000 கிலோ தங்கம் விற்பனை  ஆகும். எதிர்பார்க்கப் படுகிறதாம்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கியவர்கள் வீட்டில் தங்கம் குவிந்தது என்பதற்கு ஆதாரம் உண்டா, புள்ளி விவரம் தான் உண்டா?
மத நம்பிக்கைகள் சுரண்டலின் கூடாரம் தான் என்பதற்கு இந்த அட்சய திருதியை ‘திருக்கூத்து’ ஒன்று போதாதா?
- மயிலாடன்


Sunday, May 8, 2016

தமிழ்நாடு முதல் அமைச்சரை நோக்கி சில வினா கணைகள்???


- மின்சாரம்

1) ஒரு ஜனநாயக நாட்டில் மக்களைச் சந்திக்க இயலாமல் அந்தப்புரத்தில் இருப் பது ஏன்?

2) ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் ஹெலிகாப்டரில் வந்து ஓட்டுகளைக் கேட்பதற்கு வருவது ஒரு வகையான மேல் தட்டு முதலாளித்துவ மனப்பான்மை அல்லவா?

3) கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் வாரம் ஒரு முறை செய்தியாளர் களைச் சந்திப்பேன் என்றவரின் வாக்குறுதி என்னாயிற்று? ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடகங்களை சந்திக்க மறுப்பது - அச்சத்தினாலா? அகந்தையினாலா? மாறு பட்டு எழுதும், செய்தி வெளியிடும் ஊடக வியலாளர்கள் மீது எந்த ஆட்சியிலும் இல்லாத எண்ணிக்கையில் வழக்குத் தொடுப்பது பேச்சுரிமைக்கும், கருத்துரி மைக்கும், எதிரானது அல்லவா?

4) தலைநகரத்திலும், தூத்துக்குடி, நெல்லைப் பகுதிகளிலும் பெரு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தாங்க முடியாத பெரும் சங்க டத்தில் மூழ்கி  தத்தளித்தபோதுகூட மக் களின் துயர் துடைக்க நேரில் வராதது ஏன்?
பெயர் அளவிற்குச் சென்னையில் தமது தொகுதியான இராதாகிருஷ்ணன் நகருக்கு மட்டும் வந்த நேரத்தில்கூட பயணம் செய்யும் தனது வாகனத்தை விட்டுக் கீழே இறங்கி மக்களின் குறைகளைக் கேட்காதது ஏன்? ஏன்? 

இரட்டை விரலைக் காட்டி இரட்டை இலை சின்னத்தை நினைவூட்டியது ஏன்? எருது புண் காக்கைக்குத் தெரியுமா?

5) கட்சியின் அலுவலகத்திற்குக் கட்சிப் பொதுச் செயலாளர் செல்லுவதுகூட அதி சயமாகவே கருதப்பட்டு, வாண வேடிக்கை கள், மேளதாளங்கள் வைத்து வரவேற்பது விலா நோக சிரிக்க வைக்கும் கோமாளித் தனம் அல்லவா?

6) கட்சிக்காரர்களை அவர்கள் அமைச் சர்களாக இருந்தாலும் கூனிக் குறுகிக் காலில் விழச் செய்து புன்முறுவல் பூப்பது பூர்ஷ்வாத்தனம் அல்லவா?

7) தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பொழுதுகூட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக்கூட மேடையில் தன் னோடு சமமாக அமர அனுமதிக்காமல், மேடைக்கும் கீழே உட்கார வைப்பது - பார்ப்பனீய வருணாசிரமத் தன்மைப்படி முகத்தில் பிறந்தவர் பிராமணன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்னும் நவீன வரணாசிரம வடிவம் தானே?

8) மத்திய அமைச்சராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருணாசலம் அவர்களை தான் பயணம் செய்த விமானத்தில் பயணிக்கக் கூடாது என்ற அந்தத் தீண்டாமை மனப்பான்மை இன்னும் தொடர்கிறது என்று கருதலாமா?

9) 2011இல் ஆட்சிக்கு வந்த போது திமுக ஆட்சி ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் வைத்துவிட்டுச் சென்று விட்டதாகக் குற்றச் சாட்டிய முதல் அமைச்சர் ஜெயலலிதா இப்பொழுது நான்கரை லட்சம் கோடி ரூபாய்க் கடன் வைத்திருப்பது எந்தவகையி லான ஆட்சித் தர்மம் - ஆட்சி நிர்வாகம்?

10) ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டை  மின்மிகு மாநிலமாக மாற்று வோம் என்று உறுதியளித்தாரே ஜெய லலிதா - கடந்த அய்ந்து ஆண்டுகளில் ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தையாவது புதிதாக உற்பத்தி செய்ததுண்டா? 300 மெகாவாட் திறன் கொண்ட பத்து சோலார் மின்சார மய்யங்களை அமைக்கப் போவ தாக ஜெயலலிதா வாக்குறுதி அளித்தாரே - அதனை நிறைவேற்றியதுண்டா?

12) தமிழ்நாடு சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் இதுவரை 137 அறிவிப்புகளைத் தெரிவித்தாரே - அந்த அறிவிப்புகளில் எத்தனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட் டுள்ளன? 137 அறிவிப்புகளுக்கும் தேவை யான நிதி ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 196 கோடி ரூபாய்க்கான வழி என்ன? ஏற் பாடுதான் என்ன?   செயல்படுத்த முடியாது என்று தெரிந்திருந்தும் சட்டமன்றத்தில் அறிவிப்பது யாரை ஏமாற்றிட?

13) தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழ் அறிஞர்கள் 1921களில் கூடி முடிவெடுத்த ஒன்றை திமுக ஆட்சி நிறைவேற்றிக் கொடுத்ததை மறுபடியும் பழைய பத்தாம்சாலி சமஸ்கிருத ஆண்டுப் பெயர்களைக் கொண்ட சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றியதன் மூலம் முதல் அமைச்சர் ஜெயலலிதா பார்ப்பனீய சிந்தனையோடு தான் செயல்படுகிறார் என்று கருதலாமா? திராவிடப் பண்பாட்டுக்கு எதிரானவர் என்று பிரகடனப்படுத்தலாம் அல்லவா?

14) அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைச் சிதைத்ததும், புதிதாகக் கட்டப்பட்ட சட்டமன்ற அலுவ லகத்தை மருத்துவமனையாக மாற்றியதும், துறைமுகம் முதல் மதுரவாயலுக்கு இடை யிலான பறக்கும் பாலம் - திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக  முடக்கியதும் சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுத்ததும், மக்கள் நலனைவிட திமுக மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் வன்மம்தான் ஜெயலலிதாவை ஆட்டிப் படைக்கிறது என்றும் சொன்னால் அது தவறா?

15) ஆட்சி என்பது அய்ந்தாண்டு களுக்கு ஒரு முறை மாறக் கூடிய வாய்ப் புள்ளது என்பது அரசியலில் பாலபாடம் - புது ஆட்சி என்பது பழைய ஆட்சியின் தொடர்ச்சியே! உண்மை இவ்வாறு இருக்க தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அவற்றை எல்லாம் முடக்குவது - ஆட்சி  அமைப்பு முறைப் பண்புக்கு விரோதமானது என்ற ‘அரிச்சுவடி’ கூடத் தெரியாதவர்தான் ஜெயலலிதா என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்? வன்மம், காழிப்புணர்ச்சி என்பவை ஜெயலலிதா அவர்களின் உடன்பிறப்பு என்று கருதலாமா?

16) சென்னை - கன்னியாகுமரி கடலோர சாலைத் திட்டம்,  10 ஆடை அலங்காரப் பூங்காக்கள், விவசாயிகளைப் பங்குதாரர் களாகக் கொண்ட ஆறு அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நீதிமன்றங் களில் தமிழ், தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்ற தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறை வேற்றாமல் வாக்குக் கேட்டு வரத் தகுதி உண்டா?

17) ஊழல் வழக்கில் சிறை சென்றதைத் தவிர மக்கள் பிரச்சினைக்காகப் போராடி சிறை சென்றதுண்டா?

18) அண்ணா பெயரையும், ‘திராவிட’ இனப்பண்பாட்டுப் பெயரையும் கட்சியில்  வைத்துக் கொண்டு, யாகம் நடத்துவது, மண் சோறு சாப்பிடுவது என்பது போன்ற மூடநம்பிக்கைகளின் வழியாக கட்சியையும், ஆட்சியையும் நடத்திச் செல்லுவது அடிப்படைக் கொள்கைக்குத் துரோகம் அல்லவா?

19) தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வெளியில் வந்து அவர்தம் சிலைக்கு மாலை அணிவிக்க மறுப்பது ஏன்? அவரின் நினைவு நாளிலும் மரியாதை செய்யாதது ஏன்? ஏன்?? ஏன்???

20) திராவிட இயக்கத்தில் ஆரிய ஊடுருவல் என்பது இவற்றின் மூலம் தெளி வாக தெரிகிறதா இல்லையா? முடிந்தால் முதல் அமைச்சர் அவர்களே, அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளரே பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!!




 
+இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, May 4, 2016

தாயுள்ளம் யாருக்கு? மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கொடுத்த கலைஞருக்கா? அவர்களை வீட்டுக்கு அனுப்பிய அம்மையாருக்கா?

வாக்காளர்களே எண்ணிப் பாரீர்!

அரூரில் தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சாரம்
அரூர், மே 3 - மக்கள் நலப் பணியாளர்கள்  13 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுத்த கலைஞருக்குத் தாயுள்ளமா? அவர்களை வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவுக்குத் தாயுள்ளமா? சிந்தித்து வாக்களிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர்
கி. வீரமணி அவர்கள்.

அரூரில் நேற்று (2.5.2016) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரூர் மாநகரில் பேசக்கூடிய சிறப்பான வாய்ப்பை தேர்தல் மூலம் அளித்து இருக்கிறீர்கள். இந்த அரூருக்கு நான் புதியவன் அல்ல. குறிப்பாக நான் என் மாணவப் பருவத்திலிருந்து வந்து கொண்டு இருக்கக் கூடியவன். இங்கு வரும்போது, எச்.எல்.முருகேசன் அவர்களை நினைத்துக் கொண்டு வந்தேன். அவர் பழைய மாவட்டக்கழக செயலாளர், எங்களுக்கு எப்போதும் வரவேற்பளிக்கக் கூடியவர். அப்போது இருந்த உணர்வை இப்போது மேடையில் நிற்கும் இளைஞர்களின் உள்ளத்தில் அந்த எழுச்சிமிகு உணர்வை கண்டேன் வியந்தேன்!

திராவிடன் - தமிழன் உணர்வு

இங்கு அந்த காலத்தில் பேரறிஞர் அண்ணாவால் நிறுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற்றவர், சுயமரியாதை வீரர், சுயமரியாதைச் சுடரொளி முத்து என்பவர் பெரியாருடைய கொள்கையாளர். அண்ணாவின் வழி நடந்தவர். கலைஞரால் மதிக்கப்பட்டவர். திமுகவும் திராவிடர் கழகமும் இரட்டைக் குழலாக இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டானவர்.
அரூர் பகுதியில் திராவிடர் கழகம் என்றால், மிசா காலத்தில் எங்களோடு சிறைச்சாலைக்கு வந்த அரூர் தேசாய் வேணுகோபால், செல்லன், அவர்களுக்குப் பிறகு வீராசாமி என்று ஏராளமான தோழர்கள் இருந்தார்கள் என்ற நீண்ட பட்டியல் இருக்கிறது. அவர்களின் உழைப்புதான் இன்றைக்கும் கழகத்தை கட்டிக்காக்கிறது. இந்த இயக்கம் வெறும் பதவிக்காக வந்த இயக்கம் அல்ல. இதுவொரு  சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தும் புரட்சிகரமான இயக்கம். சமுதாயப் புரட்சி இயக்கம் என்பதனால் தான், நாம் அனைவரும் ஒரே மேடையில் இருக்கிறோம். நமக்கு ஜாதி தெரியாது, நமக்கு வேறு பிரிவுகள் தெரியாது. நாம் அனைவருக்கும் ஒரே உணர்வுதான் உண்டு. அதுதான் திராவிடன் - தமிழன் என்ற உணர்வு

உருவத்தால் மாறினாலும்
உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள்


திராவிட இயக்கமும், புலவர்கள் வட்டமும் அரூரிலே மிகச்சிறப்பாக இருக்கும். எங்கள் இயக்கத்தின் பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி அவர்களின் மகன் கண்ணிமை அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் பாவலர் மணிவேலன். பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். அவர் இரண்டொரு நாட்களுக்கு முன்னால் மறைந்த செய்தி கேட்ட நேரத்தில் மிகுந்த வேதனைப் பட்டோம். துயருற்றோம். அவர்களின் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு சோகமான நிலையில் தான் இங்கு வந்தோம்.
திராவிடர் கழகம் என்றைக்கும் பற்றோடு இருக்கக்கூடிய ஓர் இயக்கம். உருவத்தில் வேறு பட்டவர்களாக இருந்தாலும், உள்ளத்தால் ஒன்று பட்டவர்கள்.
கள்ளத்தால் நெருங் கொணாதே என புரட்சிக் கவிஞர் அவர்கள் சொல்வார். அப்படிப்பட்ட அற்புதமான இயக்கம்!

மீண்டும் சாதனை படைப்பது திமுகவே!
இந்த தொகுதியில் ஒரு சிறந்த இளைஞரை தகுதி வாய்ந்தவரை அடையாளம் கண்டு கலைஞர் அவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள். மக்களாகிய நீங்கள் இங்கு காட்டும் உணர்வை வரும் 16 ஆம் தேதி அதிகாலை வரை எடுத்துச்செல்லவும். அப்போது தான் இவர் போன்றோர் வெற்றி பெறுவர். நீங்கள் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. திமுக தோழர்கள் பலரும் போட்டியிடுவார்கள். ஆனால், போட்டி முடிந்து தலைவர் சொல்லி விட்டார் என்றால், யாரை அடையாளம் காட்டினாரோ, நாங்கள்தான் இருக்கிறோம் என்ற அளவில் பணியாற்றுவார்கள். அந்த உறவு முறைதான் திமுகவில் இருக்கும்.

கீரை விசுவநாதன் ஆனாலும், முல்லை செழியனானாலும் ஒரே தோட்டத்தில்தான் இருப்பார்கள். கீரையும், முல்லையும் திமுக என்ற ஒரே தோட்டத்தில் தான் இருப்பார்கள். ஒரு பக்கம் கீரை இருக்கிறது. இன்னொரு பக்கம் முல்லை இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து இந்த தேர்தலில்  மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க வேண்டும்.
புதிய வாக்காளரே! இளைஞர்களே! சிந்தியுங்கள்!

தேர்தல் வருகிறது என்றால், யாரோ 5 ஆண்டுகள் வந்து போகட்டும் என்று அலட்சியமாக இருக்கலாமா? நன்றாக நினைத்துப் பாருங்கள். கடந்த தேர்தலில் மக்கள் காட்டிய அலட்சியத்தால் கடந்த 5 ஆண்டு காலம் எவ்வளவு பெரிய விலை கொடுக்க நேரிட்டது. திராவிடர் கழகத்தினர் தேர்தலுக்கு நிற்கிறார்களா? அல்ல. நாங்கள் ஒரு போதும் நிற்க மாட்டோம். அதே போன்று யார் வேண்டுமானாலும் வரட்டும் என்ற அலட்சிய போக்கு பெரியார் காலத்திலிருந்தே எங்களுக்குக் கிடையாது.
நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். யார் வேண்டுமானாலும் திறந்த வீட்டில் நுழைவது போன்று வந்து விடக் கூடாது என்பதற்காக நாங்கள் காவலுக்கு நிற்கிறோம். நாங்கள் உங்கள் மத்தியில் எங்களுக்கு ஓட்டு கேட்டு வரவில்லை. வாக்காளர் பெரு மக்களே, புதிய இளைஞர்களே! சிங்கக் குட்டிகளே! நீங்கள் எல்லோரும் சிந்தித்து செயலாற்றும் தருணம் இது.

திராவிடர் கழகம், தி.மு.க. இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த இனத்தை, மொழியை காப்பாற்ற முடியாது. எப்போதும் காப்பாற்றிக் கொண்டு இருக்கக் கூடியவர்கள் நாங்கள்.
இங்கு மற்ற கூட்டங்களைவிட தாய்மார்கள் அதிக அளவில் வந்திருக்கின்றீர்கள் மகிழ்ச்சி! இங்கு பேசிய  மகளிர் புத்தமணி, வேலம்மாள் போன்றோர் சிறப்பாக இந்த கூட்டுக் குடும்பத்தின் உறவுக் குரல், உரிமைக் குரலை வெளிக் காட்டியது சிறப்பான தொன்று.

ஆணவ நாயகமா? ஜனநாயகமா?

நீங்கள் 5 ஆண்டுகளாக எத்தனை முறை முதலமைச்சரை சந்தித்து இருக்கிறீர்கள்? சந்தித்திருந்தால் காணொலிக் காட்சி மூலம் சந்தித்து இருப்பீர்கள். அதுவும் ஒரு 5 நிமிடம் கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளில் பார்த்திருப்பீர்கள். கட்டடங்களில் அந்த அம்மையார் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டும். ஆனால், கலைஞர் அவர்கள் திறந்து வைக்கும் பணிமனைகள், மருத்துவமனைகள் போன்ற கட்டடங்களில், அந்த துறைக்கான அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் எல்லாம் இடம் பெற்றிருக்கும். அவர்களையெல்லாம் அழைத்து, உட்கார வைத்து நிகழ்ச்சியை நடத்துவார்கள். ஆனால் அம்மையார் திறந்த கல்வெட்டில் பார்த்தீர்கள் என்றால், அவர் பெயரைத் தவிர வேறு எவர் பெயரேனும் உண்டா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? ஆணவ நாயகமா? நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆணவக் கொலை நடக்கின்ற மாதிரி, இப்பொழுது ஜனநாயகப் படுகொலை நடக்கிறது.

ஜாதி அடுக்குமுறையும் - அதிமுக மேடை அடுக்கும்

ஜாதிய அடுக்குமுறை போல் அம்மையார் பேசும் மேடையும் அடுக்கு முறையில் இருக்கிறது. தளபதி ஸ்டாலின் போன்றோர் கேட்ட பிறகு, அந்த அடுக்குகள் குறைந்து இருக்கின்றன. காரணம் நாளாக, நாளாக பயம் வந்து விட்டது.  தாங்கள் வெற்றி பெறப் போவதில்லை என்ற உணர்வை உளவுத் துறையின் மூலம் கேட்கும் அவல நிலை அவர்களுக்கு வந்துவிட்டது. அதனால்தான் அவர்களின் போக்கு மாறிக் கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டு வாக்காளர் என்றால்
தனித் தன்மை உண்டு


தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள், எல்லாக் கட்சிகாரர்களை விட, தலைவர்களைவிட, வேட்பாளர்களைவிட புத்திசாலியானவர்கள் தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்களுக்கு ஒரு தனித் தன்மை உண்டு. என்ன தெரியுமா? யாரை ஆட்சிக்குக் கொண்டு வந்தாலும், பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், தோசையை திருப்பிப் போடுகின்ற மாதிரி தாய்மார்களுக்கு தெரியும். அதுபோல் ஆட்சியை மாற்றினால்கூட, அப்படியே மாற்றித்தான் பழக்கமே தவிர, இங்கொன்று, அங்கொன்று என்று ஒட்டுப் போடும் வேலையை செய்ய மாட்டார்கள். ஒட்டுப் போடும் வாய்ப்பும் வராது. எனவே நமக்கு வேண்டிதெல்லாம் நீதியான ஆட்சி, நியாயமான ஆட்சி. அந்தநீதியான ஆட்சியை தி.மு.க.தான் கொடுக்கும் என்பதற்கு அவர்களின் தேர்தல் அறிக்கையே சான்று.

கலையட்டும் காணொலி ஆட்சி


தி.மு.க. ஆட்சியில் நான்கு வழிச் சாலைகள் போட்டார்கள். அவர்கள் மட்டும் கடந்து  செல்லவா? கூட்டணி கட்சியினரும், பொது மக்களும் போக வேண்டிதானே. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எல்லாவற்றிலும் காணொலிக் காட்சியை செய்து வைத்தார்கள். இப்போது அவர் நடத்தும் தேர்தல் பொதுக் கூட்டத்திலும் வைத்திருந்தால் 5,6, உயிரையாவது காப்பாற்றி இருக்க முடியும். சமுதாய மாற்றத்திற்கான பணிகளை தி.முக செய்யும் செய்தது.

மாற்றம் வேண்டுமா? ஏமாற்றம் வேண்டுமா?

நீங்கள் உதயசூரியன் சின்னத்தை எண்ணி வாக்களித்தால், அரசியல் மாற்றம் மட்டுமல்ல. சமுதாய மாற்றத்தையே திமுக ஆட்சி கொண்டு வரும். எல்லோருக்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி. எனவே நீங்கள் மாற்றத்தை உருவாக்க வேண்டும். மாற்றம் மாற்றம் என்று பல பேர் சொல்லுவார்கள். மாற்றம் வேண்டும் என்று சொல்லி டில்லிக்குப் போனவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. இந்த மாற்றம்  ஏமாற்றமாக இல்லாமல் இருக்க அதற்கு ஒரே வழிதான் டாக்டர் கலைஞர் தலைமையிலான 6ஆம் தடவையாக அமையப் போகும் ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான்.

நாங்கள் பிரச்சாரம் செய்வதன் நோக்கம், ஜாதியற்ற சமுதாயம் அமையவும், காட்சியில் மட்டும் வரும் அம்மையாரின் ஆட்சியை மாற்றி இந்த இனத்தின் மீட்சியை  உருவாக்கத்தான். காட்சி ஆட்சிமாறி  நல்லாட்சியாக வேண்டும் என்ற உணர்வுடன் தான் சொல்லுகிறோம். காட்சி ஆட்சி மாறவில்லையென்றால் நமக்கு வீழ்ச்சிதான் ஏற்படும் மறவாதீர்!
இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்பட திமுக வை ஆதரிப்பீர்!

ஆளுங்கட்சி அம்மையார் சொன்னதையும் செய்தோம்! சொல்லாததையும் செய்தோம் என்கிறார்களே! செய்தார்களா?

அவர்களின்  கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னார்களே! தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக ஆக்குவோம் என்றார்களே! தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாகவா இருக்கிறது? ஒரு நாளாவது மின் வெட்டு இல்லாமல் இருக்கிறதா? ஏன் தலைநகர் சென்னையிலே மின்வெட்டு இருக்கிறதே!

ஒரு யூனிட் மின்சாரமாவது, இந்த ஆட்சியில் தயாரித்து இருப்பார்களா? தளபதி ஸ்டாலின் போன்றோர் கேட்கிறார்களே! இப்போதுதான் கூடுதல் மின்சாரத் தேவை ஏற்பட்டுள்ளது.   தனியாரிடம்  மின்சாரம் வாங்கி இருக்கிறார்கள்.  தனியாரிடம்  7 ரூபாய்க்கும் அதிகமாக வாங்குகிறார்கள்.

தாய்மார்களுக்கு தெரியுமே! கடைக்கு போய் ஒரு சாமானை 4 ரூபாய்க்கு வாங்குவார்களா? அல்லது 7 ரூபாய்க்கு வாங்குவார்களா? அவர்களுக்கு தெரியுமே! அது போல் மின்சாரத்தை குறைத்து வாங்க வேண்டியதுதானே. ஏன் 7 ரூபாய்க்கு வாங்க வேண்டும்?

மின்சாரத்தில் நல்ல மின்சாரம், கெட்ட மின்சாரம் உண்டோ!

அந்த 4 ரூபாயிலிருந்து 7 ரூபாய்க்கு வாங்குவதில் கமிஷன் (ஊழல்) இருக்கிறது. எல்லா இடத்திலும் இந்த வெட்டுகள் இருக்கின்றன. அதன் விளைவாகத்தான் இன்று அமைச்சர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். ஏன் அமைச்சர்களுக்கு முதலாவதாக டிக்கெட் கொடுக்கவில்லை? ஏன் தனியாக விசாரிக்க வேண்டும்? இன்றைக்கு அமைச்சர்களின் நிலை என்ன? முதலில் இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் திமுக தேர்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

அதிமுக தேர்தல் அறிக்கை - சிதம்பர ரகசியமா?
அதிமுகவில் தேர்தல் அறிக்கை  இன்னும் வெளியிடபடவில்லை. ஏன் தேர்தல் அறிக்கை வரவில்லை? அது ஏன் சிதம்பர ரகசியமாக இருக்கிறது? நமக்குப் புரியவில்லை. தேர்தல் அறிக்கையை வைத்து சொன்னீர்களே, செய்தீர்களா? என்று கேட்போம் என்ற பயத்தால் கூட இருக்கலாம். அவர்கள் வெளியிடாமல் இருப்பது தேர்தல் உத்தியா? மின் திருட்டை ஒழித்தாரா? இந்த ஆட்சியில் மின்சாரம் வரவில்லை. மாறாக மெழுகுவர்த்திதான், டிமான்ட் பற்றாக்குறை வந்தது.

சொன்னதை செய்தாரா? அம்மையார்?

2012க்குள் 151 நகராட்சி, மாநகராட்சி, கழிவுகளைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதனால் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார்கள்.

நான் தருமபுரியிலிருந்து காரில் வரும்போது வரும் வழியில் பெரிய அளவில் தீப் பிடித்து எரிந்து கொண்டு இருந்தது.  என்னவென்று உடனிருந்தவர்களை கேட்ட பொழுது நகராட்சிக் குப்பைகள் என்றார்கள். அதை சுவாசித்தால் நம் பிள்ளைகளின் நிலை என்னாவது? தூய கார்பன் நியூட்ரல் நகரமாக மாற்றப்படும் என்றாரே! மாற்றினாரா? அம்மையாரின் பேச்சு நீரில் எழுதிய எழுத்துக்களைப் போன்று அல்லவா இருக்கிறது!

டாக்டர் கலைஞர் ஆட்சியில் 2006 - 2011 இல் செய்த சாதனைகள் சாதாரணமானவை அல்ல; ரூபாய் 1200 கோடிக்கு சட்டமன்ற கட்டடம் கட்டினார். இந்த அம்மையார் சென்னாரே! மழை பெய்தால் கட்டடம் ஒழுகுகிறது என்றாரே! நிற்க முடியவில்லை என்றாரே! அதற்காகத் தானே சட்டமன்ற கட்டடத்தை கலைஞர் கட்டினர். ஆட்சி மாற்றம் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி வரும் ஆனால், அரசாங்கம் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கும். கலைஞர் கட்டினார் என்பதற்காக கட்டடத்தை மாற்றலாமா?
அண்ணா பெயரில் கட்சி - அண்ணா நூலகம் மாற்றமா?

அண்ணா பெயரில் கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம். ஆசியாவிலே மிகப்பெரிய அளவிலான நூலகம் ரூபாய் 130 கோடிக்கு மேல் செலவழித்து கட்டியிருக்கிறார்கள். அந்த நூலகத்தை மாற்ற வேண்டுமெனச் சொன்னார்.
நீதிமன்றம் தடை கொடுத்து காப்பாற்றியது. அந்த நூலகத்திற்குப் புத்தகம் வாங்கவில்லை. அதில் எல்லா ஜாதியினரும், பிரிவினரும் படிக்கிறார்கள். நூலகம் அண்ணா பெயரில் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் கூட்டம் முடியும்போது அம்மையார் அண்ணா நாமம் வாழ்க! எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! என்கிறார். அண்ணாவுக்குப் போட்ட நாமம் இதோடு இருக்கட்டும். மறுபடியும் இன்னும் 5 ஆண்டு நாமம் போடவேண்டாம். உண்மையாகவே அண்ணாவைப் பற்றி சிந்திப்பவர்கள் யார்? அண்ணா பெயரில் உள்ள கட்சி அல்ல, அண்ணாவால் உருவாக்கப்பட்டது திமுகதான்; அதைத்தான் கலைஞர் செய்து கெண்டு இருக்கிறார். வளர்ச்சி என்பது கல்வித் துறையில் இருக்கவேண்டுமே தவிர, மதுபான உற்பத்தியில் அல்ல. ஜெயலலிதா ஆட்சி என்றால் டாஸ்மாக் மயம். எல்லோருக்கும் துன்ப மயம், கலைஞர் ஆட்சி என்றால் அனைவருக்கும் இன்ப மயம்!

தாயுள்ளம் யாருக்கு?

தாயுள்ளம் யாருக்கு இருக்கிறது? கலைஞர் ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை கொடுத்தார். அது தாயுள்ளமா? உச்சநீதிமன்றம் சொல்லியும் கூட மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியது தாயுள்ளமா? இதுவரை 200க்கும் அதிகமானவர்கள் இறந்து இருக்கிறார்களே. அவர்களுடைய நிலை என்ன? அவருக்கு இருப்பது தாயுள்ளமா? இல்லை, அது வேறுவகை உள்ளம்.
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
------------------------------
உதயசூரியன் பொத்தானை அழுத்துங்கள்
ஒளி கிடைக்கும் - இருளுக்கு விடை கிடைக்கும்


திமுக, அதிமுக  இரண்டு பேரும் மோசம் என்று சொல் கிறார்கள். மற்றவர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்களே! வெண்ணெயும், சுண்ணாம்பும் ஒன்று என்று சொன்னால் அவர்களின் பார்வையில் ஏற்பட்ட பழுதே தவிர, தன்மையில் ஏற்பட்ட கோளாறு அல்ல. இந்த தேர்தல் என்பது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் தானே ஒழிய, வேறு கட்சிகளுக்கு இடம் கிடையாது. நீங்கள் மாற்றம் வேண்டும் என்று எண்ணி, மாற்று அணிக்கு போடும் ஓட்டு என்பது செல்லாத ஓட்டே! ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா அம்மையார், தோல்வி பயத்தால் திணறிக் கொண்டு இருக்கிறார். ஆளுங்கட்சி அமைச்சர்களை ஊருக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் விரட்டி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அரூர் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் இராஜேந்திரன் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடையாது. எங்கு பார்த்தாலும் பணம் பறிமுதல் நடக்கிறது. அதிமுகவினர் நோட்டுக் கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கிறார்கள். அதற்கு மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம். கோடி கோடியாக பணம் எடுக்கிறார்கள். இதற்கு முன்பெல்லாம் ஆள் கடத்தல் தான் உண்டு. இந்த தேர்தலில் புதிதாக பணம் கடத்தல் நடைபெற்று வருகிறது. ரூபாய் நோட்டுக் கடத்தல் நடக்கிறது. இதுவரை ஆம்புலன்சில் நோயாளிகள் தான் இருந்தார்கள் இப்போது நோட்டு பணம் இருக்கிறது. திமுக ஏழைகளின் நண்பன், அவர்கள் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. அவர்கள் உங்கள் குணத்தை நம்பி நிற்கிறார்கள் நீங்கள் அவர்களின் குணத்தை நம்பி ஓட்டு போடுங்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு சிறுபான்மை மக்களுக்கு நல்ல ஆட்சியாக, இனத்தின் மான மீட்பு ஆட்சியாக திமுகதான் இருக்கும். எனவே நீங்கள் 16ஆம் தேதி வாக்குச் சாவடிக்கு சென்று உதயசூரியன் என்று சின்னம் இருக்கும். அதில் பொத்தானை அழுத்தினால் விளக்கு எரியும். இருண்ட ஆட்சிக்கு விடை கொடுத்து விடியல் வரும். விடிவு சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என முடிக் கிறேன் நன்றி வணக்கம்.

- அரூர் கூட்டத்தில் தமிழர் தலைவர் 2.5.2016

Tuesday, May 3, 2016

மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்விக் கண் இவற்றை பேச திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதியில்லை

சென்னை அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேருரை
சென்னை, மே. 3- மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்விக் கண் இவற்றை பேச திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதியில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

14.4.2016 அன்று வடசென்னை பெரம்பூரில் நடைபெற்ற பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
பெரியார் - அம்பேத்கர்  ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று. இவருடைய கொள்கை - அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளே ஆகும். இரண்டு தலைவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற பெருமைக்குரிய தலைவர்கள்.

நம்முடைய தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. தொடர் போராட்டமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல் வேறு காலகட்டங்களை - தடை ஓட்டப் பந்தயங்களையெல்லாம் நாம் தாண்டியிருக்கின்றோம் என்கிற பெருமைமிகுந்த இந்த வேளையில், அதற்கான போராட்ட விளக்கப் பொதுக்கூட்ட மாகவும், தேர்தலுக்கு முன் - இந்தத் தொகுதியில் - தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய தொகுதி என்ற பெருமையான கொளத்தூர் தொகுதியில் உரையாற்றக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்ற நம்முடைய செயல் வீரர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அருமைத் தோழர் குமாரதேவன் அவர்களே,
எனக்கு முன்பாக உரையாற்றி அமர்ந்துள்ள கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

கழகத்தினுடைய பொதுச்செயலாளர் மானமிகு அன்புராஜ் அவர்களே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற் றிய  வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் ஞானசேகரன் அவர்களே, சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே, தொழிலாளர் அணி செயலாளர் செல்வராஜ் அவர்களே, மற்றும் இங்கே நம் அனைவரையும் ஒருங்கிணைத்து உரையாற்றிக் கொண்டிருக்கக் கூடிய வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் - பழைய தலைவர் கருங்குழி கண்ணன் அவர்களே,
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக வரவேற்புரையாற் றிய வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலா ளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே,
இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்ற மகளிரணி பொறுப்பாளர் களே, இயக்கப் பொறுப்பாளர்களே ஒவ்வொருவருடைய பெய ரையும் சொல்வதற்கு நேரமின்மை காரணத்திற்காக அவர்களு டைய பெயர்களையும் சொன்னதாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று சொல்லி என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

இங்கே எனக்கு முன் உரையாற்றிய அத்துணை தோழர்களும், தோழியர்களும் மிக அருமையான கருத்தை தெளிவாகச் சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சியினுடைய நோக்கம் என்ன? என்பதை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், ஒன்றைத் தெளிவுபடுத்தினார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எப்படிப்பட்ட புரட்சியாளர்! நாம் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிற்கான செயல் திட்டத்தை இந்த ஆண்டு - அவருடைய 125 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டியும் நடத்துகிறோம்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய இறுதி விருப்பம் - இறுதிப் போராட்டம் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது. இங்கே அழகாக கழக துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்.

கடைசியாக ஜாதி ஒட்டிக் கொண்டிருக்கும் இடம் கோவில் கருவறை

ஏதோ, 10 பேருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்கிற போராட்டம் அல்ல அது. தத்துவ ரீதியாக காலங்காலமாக இருக்கின்ற ஜாதி, தீண்டாமை என்பதினுடைய உயிர்நிலையைப் போக்குவதற்கான - அதற்கு மரண அடி கொடுத்து - இனிமேல் தத்துவ ரீதியாக நடைமுறையில் எங்கு கடைசியாக ஜாதி ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால், கோவில் கருவறைக்குள்.

உங்களுக்குத் தெரியும் - தந்தை பெரியார் போராடினார் - இன்றைக்கு எல்லா இடங்களிலும் செல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஒரு காலத்தில் பிராமணாள் காபி கிளப் என்று இருந்தது. இன்றைக்கு யாராவது அப்படி சொல்ல முடியுமா? போட முடியுமா? பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று தனியே பிரித்து வைத்திருந்தார்கள். சூத்திராள் சாப்பிடும் இடம் என்று. இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியாது இந்த விவரங்கள் எல்லாம்.

மறுபடியும் வேறு ஒரு ஆட்சி வந்து -வருணாசிரம தருமம் வந்து ஆட்சியில் உட்கார்ந்து - நெற்றியில் சூத்திரன் என்று பச்சைக் குத்திக் கொள்ளுங்கள்; பஞ்சமன் என்று ஒட்டிக் கொள் என்று சொன்னால்தான் அவர்களுக்குப் புரியும். வந்த பிறகுதான் அவர்களால் உணர முடியும். வருவதற்கு முன்பே காக்கக்கூடிய சக்தி பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமே உண்டு.

அந்த அடிப்படையில்தான் கவலையோடு நாங்கள் பேசுகி றோம். இது ஒரு கேளிக்கை விழா அல்ல. நாங்கள் என்ன பதவிக் குச் செல்லவேண்டும் என்பதற்காக பேசுகிறோமா? அல்லது எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்காக வந்திருக்கி றோமா? யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்றே மக்களுக்கு இன்னமும் தெரியவில்லை. பேசுகிறவர்களுக்கே என்ன பேசுகி றோம் என்று தெரியவில்லை? இதுபோன்ற குழப்பங்கள் எல்லாம் எங்களுக்கு எப்பொழுதும் கிடையாது. காரணம், நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படுவதைவிட, அடுத்த தலைமுறை யைப்பற்றி கவலைப்படக்கூடியவர்கள்.

மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்விக் கண் இவைகளைப் பற்றிப் பேச திராவிடர் கழகத்தைவிட்டால், பெரியார் இயக்கத்தை விட்டால், வேறு நாதி உண்டா தமிழர்களே! நீங்கள் எந்தக் கட்சி யைச் சேர்ந்தவர்களாகவும் இருங்கள்; யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை பிறகு முடிவு செய்துகொள்ளுங்கள். அது உங்களுடைய உரிமை. ஆனால், நாங்கள் ஓட்டு கேட்பதற்காக வரவில்லை. மாறாக, இந்த சமுதாயத்தினுடைய மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்வி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் இவை எல்லாம் காப்பாற்றப்படவேண்டும்.
பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்கள் நமக்கு கொள்கைபூர்வமான பிரச்சார திருவிழா!

அம்பேத்கர் பிறந்த நாள் விழா என்பது நமக்கு சம்பிரதாயமா? பெரியார் பிறந்த நாள் விழா  என்ன நமக்கு சம்பிரதாயமா? இல்லை. கொள்கைபூர்வமான பிரச்சார திருவிழா.

தாலி அகற்றும் நிகழ்ச்சியை எதற்காக ஏற்பாடு செய்தோம் - பெண்ணடிமைத்தனம் கூடாது என்பது தந்தை பெரியாருடைய கருத்து - அம்பேத்கர் அவர்களுடைய கருத்தாகும். அந்த விழாவிற்குத் தடை விதித்தார்கள். கருத்துச் சுதந்திரத் தடை. அந்த விழா யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல. யார் விரும்புகிறார்களோ, அவர்கள் அகற்றிக் கொண்டார்கள். யாரையும் நாங்கள் வலுக்கட்டாயமாக அகற்றச் சொல்வதில்லை.

பெரியார் திடலில் தாலி அகற்றும் விழாவிற்கு ஏற்பாடு செய் திருந்தவுடன், நம் இன எதிரிகள் அதற்குப் பெரிய விளம்பரங் களைக் கொடுத்தார்கள். அகில இந்திய விளம்பரம் அந்த நிகழ்விற்குக் கொடுத்தார்கள். இன்றைக்கு இங்கே அமர்ந்திருக் கிறார்கள் வாழ்விணையர்கள். எனக்கு சிறப்பு செய்யும்பொழுது என்னிடம் சொன்னார்கள், அய்யா, நாங்கள் தாலி அகற்றிக் கொண்ட இணையர் என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.

தாலி அகற்றியதால், அவர்கள் ஒன்றும் காணாமல் போகவில் லையே! இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டாமா? எவ் வளவு பெரிய அச்சத்தை நம் மூளைக்குள் புகுத்திவிட்டான் பார்ப் பான். பார்ப்பனிய தத்துவத்தினுடைய ஆபத்து எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை தெளிவாக நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

நான் என்ன சாப்பிடவேண்டும் என்பது என்னுடைய உரிமை
!

அதேபோன்று, உண்ணும் உணவு இருக்கிறது பாருங்கள் - உண்ணுவதற்கும், எண்ணுவதற்கும் இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உண்டு. நான் என்ன சாப்பிடவேண்டும் என்பதை மத் திய அரசோ, மாநில அரசோ, ஒரு கட்சியோ நிர்ணயம் செய்யக் கூடாது. நான் என் வீட்டில் என்ன சமைக்கவேண்டும் என்று இன்னொருவர் சொல்லக்கூடாது. அது என்னுடைய உரிமை யல்லவா!

அதேபோன்று பெண்கள் - அவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்பது அவர்களுடைய உரிமை. நீ காதல் செய்யாதே - உனக்கு காதல் வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது? சட்டப்படி, பக்குவம் உள்ளவர்களா என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் இன்னமும் ஜாதி வெறித்தனம் இருப்பதினால், ஆணவக் கொலை - கவுரவக் கொலை நடைபெறுகிறதே! நேற்று உயர்நீதிமன்றத்தில் காவல் துறை மூன்று மாதத்திற்குள் என்னென்ன செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறதே! உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

அவரே தானே போட்டுவிட்டாரா அவற்றை. இந்தக் கருத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற மரியாதை - நியாயங்கள். ஆகவே, நியாயம் வெல்லத்தான் செய்யும் - எவ்வளவு தடுப்பணைகள் வைத்தாலும் - எவ்வளவு குறுக்கீடு இருந்தாலும் சரி!

அம்பேத்கர் அவர்களைப்பற்றி இங்கே சொன்னார்கள் - அம்பேத்கரைப்பற்றி எழுதும்போது - உயர்ஜாதிக்காரர்கள்தான் ஊடகங்களிலும் இருக்கிறார்கள். அதிகாரிகளாக இருக்கின்ற நம்மாட்கள் கொஞ்சம் பயந்து போய்தான் இருக்கிறார்கள். உணர்வாளர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு இப்பொழுதுதான் தலையெடுக்கக் கூடிய வாய்ப்பு.

சமூகநீதி, இட ஒதுக்கீடு இல்லையானால், நம்மாட்கள் எல்லாம் பதவிகளுக்கு வந்திருக்க முடியுமா?

எங்களுடைய ஊர்வலத்தில் சொல்வோமே, ‘‘அய்.ஜி. எல்லாம் அவாளு - கான்ஸ்டபிள் எல்லாம் நம்மாளு’’ என்று சொன்னோமே!

இன்றைக்கு அய்.ஜி. எல்லாம் நம்மாட்களாக வந்திருக் கிறார்களே! அப்படி வந்தாலும் இன்னமும் அந்தத் துணிச்சல் வரவில்லையே! வர முடியாது! காரணம் என்னவென்றால், அமைப்பு இன்னும் மாறவில்லை. அந்தத் துணிச்சலை அவர் களுக்குக் கொடுப்பதற்கான நிகழ்வுதான் - இந்த நிகழ்வு.

அம்பேத்கர் - பெரியார் விழா என்றால் வித்தியாசம் வெவ் வேறு வித்தியாசம் இல்லை.  தாலி அகற்றும் நிகழ்வு - யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல. மாட்டுக்கறி விருந்து என்றால், யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல. அவரவர்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காகத்தான். அதனால் என்ன கெட்டுப் போய்விட்டது? அதனால் என்ன மாறிப் போய்விட்டது சமுதாயத்தில்? நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
நம் ஏட்டைத் தவிர,

வேறு எந்த ஏடும் சொல்லாது!


இன்றைய ‘விடுதலை’யில் அறிக்கை எழுதியிருக்கிறேன். இந்தக் கருத்தை, இவ்வளவு தாராளமாக நம் ஏட்டைத் தவிர, வேறு எந்த ஏடும் சொல்லாது. நாங்கள்தான் இந்தக் கருத்தை சொல்லிக் கொண்டு வருகிறோம். அந்தக் கருத்து வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறது. எவ்வளவு பேர் சொன்னார்கள் என்பது அல்ல. அந்த அடிப்படை என்ன என்று சொன்னால் நண்பர்களே, நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவை - அய்.நா. சபையில் இந்த ஆண்டு கொண்டாடு கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? உலக தலைவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் என்று அர்த்தம். நம்மூரில் இன்னும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், தாழ்த்தப்பட்ட வர்களின் தலைவர் என்று சொல்கிறார்கள். குறுகிய ஒரு சிமிழுக்குள் அடைக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை!

சிவப்பு ஒருபோதும் காவி ஆகாது;
கருப்பு ஒருபோதும் காவி ஆகாது

என் கைகளில் இருப்பது இன்றைக்குக் காலையில் வந்திருக்கின்ற ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை.
ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள், அதுபற்றி சொல்கிறேன்.

அவர்கள் எப்படி அம்பேத்கரை உள்ளே விழுங்கவேண்டும் என்று பார்க்கிறார்கள்; பெரியாரை விழுங்க முடியாது. அம்பேத்கரை எப்படியாவது கபளீகரம் செய்து, புத்த மார்க்கத்தை எப்படி இந்த நாட்டை விட்டு ஒழித்தார்களோ, அதேபோன்று, அம்பேத்கரையும் முழுக்க காவிச் சாயம் பூசலாம் என்று பார்க்கிறார்கள். சிவப்பு ஒருபோதும் காவி ஆகாது; கருப்பு ஒருபோதும் காவி ஆகாது.

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்கிறார்கள், dalit icon


பெரியாருக்கு யுனெஸ்கோ விருது!
தயவு செய்து நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது அம்பேத்கருடைய பெருமை உலகளாவிய நிலையில். பெரியாருக்கு யுனெஸ்கோ விருது அளித்தார்கள். 1970 ஆம் ஆண்டிலேயே பெரியாரை அடையாளம் கண்டு, மத்திய அரசு - மாநில அரசு ஆகியவை எல்லாம்

Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners

புதிய உலகின் தொலைநோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
தந்தை பெரியார் சமூக சீர்திருத்தத்தின் தந்தை

அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி
என்றெல்லாம் அவர்கள் வாசகங்களைக் கொடுத்துப் பாராட்டினார்கள்.

அதேபோல, அம்பேத்கர் அவர்களுக்கு சிறப்பு செய்வதில் கூட இவர்கள் எல்லாம் முன்னாலே இருந்தார்களே, செய்தார் களா?

இந்த நாட்டிற்காக பிரிட்டிஷ்காரனிடம் மன்னிப்புக் கேட்ட வர்களின் படமெல்லாம் நாடாளுமன்றத்தில்  வைக்கப்பட்டது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில்தான், அம்பேத்கர் அவர்களுடைய படமே - 42 ஆண்டுகாலம் கழித்து நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

பெரியார் பெயரை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு சங்கடம்


இன்றைக்கு உலக அளவில் அம்பேத்கர் அவர்களுடைய கருத்து, இந்தியாவில் மாணவர்கள் மத்தியில் பரவியிருக்கிறது. காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் பல்கலைக் கழகங்களில் அமைந்திருக்கிறது. இதனை கண்டுதான் நடுங்குகிறார்கள் இப்பொழுது. அவனுக்கு அம்பேத்கர் பெயரை வைத்தால், அவர்கள் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பெரியார் பெயரை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு சங்கடம்.

அம்பேத்கர் அவர்கள் அரசியலுக்குச் சென்றதினால், அவர் பெயரை சொல்லி மிகச் சாமர்த்தியமாக, அவருடைய மற்ற கொள்கைகளை மறைத்து- அரசியல் சட்டத்தை எழுதியவர் என்கிறார்கள். நவீன மனுதர்மம் என்கிறார்கள். மனுதர்மத்தையே அழிப்பதற்காகப் பிறந்து எரித்தவர் அம்பேத்கர் அவர்கள். அவரை முரண்பட்டு சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை!

இன்றைக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள், நாங்கள்தான் உண்மையான அம்பேத்கர் பக்தர்கள் என்று சொல்கிறார்கள். இன்றைய விடுதலையில்கூட அந்தச் செய்தியைப் போட்டிருக் கிறோம்.

பி.ஜே.பி.,காரருக்கு அம்பேத்கர்மேல் எவ்வளவு காதல் தெரியுமா அவர்களுடைய வாரப் பத்திரிகையில் ஒரு அட்டைப் படம் போட்டிருக்கிறார்கள். மோடி சொல்கிறார், நான் அம்பேத்கர் பக்தன் என்று சொல்கிறார். அங்கேதான் ஆபத்தே இருக்கிறது.

நாங்கள் எல்லாம் பெரியாருக்குத் தொண்டர்கள். பெரியாருக் குப் பக்தர்கள் அல்ல - பஜனை பாடிக் கொண்டிருப்பதற்கு. பக் தர்கள் பஜனை செய்வார்கள்; தொண்டர்கள் செயல்படுவார்கள். நாங்கள் கொள்கையாளர்கள்.

மோடி சொல்கிறார், I am a  Bakth    என்கிறார். அவர்களுடைய விஜயபாரதத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? அம்பேத்கரிஸ்ட் என்றால், அது ஆர்.எஸ்.எஸே!

நம் நண்பர்கள் சில பேர்களுக்குக் குழப்பம். தாகமாக இருந்ததால் மோர்தான் என்று நினைத்து பினாயிலைக் குடித்து விட்டார். இன்னமும் இருக்கிறார் அந்த நண்பர். அதுபோன்று இன்றைக்கு நிறைய பேர் பினாயிலைக் கொடுத்து, மோர்தான் சாப்பிடுங்கள் என்று சொல்கிறார்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
நாளிதழில் வந்த செய்தி!


இதை மற்றவர்கள் நம்ப மறுக்கிறார்கள். இன்றைக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அதில் ஆர்.எஸ்.எஸினுடைய வடநாட்டுத் தலைவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்கள்,

அம்பேத்கரை எல்லோரும் பாராட்டலாம். நாம் மட்டும்தான் பாராட்டவேண்டும் என்பதல்ல. அவர்கள் பாராட்டக்கூடாது என்று அவர்களைத் தடுப்பது எங்களது வேலையல்ல. ஆனால், உண்மையாகவே அம்பேத்கரைப் பாராட்டவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? அம்பேத்கர் அவர்கள் எதனை உயிர்க் கொள்கையாகக் கருதினாரோ, அதனை செய்தால் நீங்கள் அம் பேத்கரை உண்மையாகவே பாராட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.

all-India prachar pramukh Manmohan Vaidya spoke to Akhilesh Kumar Singh about Sangh’s views on the Dalit icon.
Was he not a strong anti-Brahminical social structure lobbyist?
Brahminism is a politically motivated publicity jargon fabricated by forces with vested interests.
If it means caste-based discrimination and inhuman practices like untouchability, then the RSS also stands against it. Babasaheb was never anti-Brahmin. His mentor was a Brahmin. He was against all forms of casteism and caste-based discrimination. There are many social reformers who were from Brahmin community who fought against such social evils.

இதன் தமிழாக்கம் வருமாறு:
உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  செய்திதொடர்பாளர் பேசும் போது, அவர் ஒரு தலித் தலைவராகத் தெரிகிறார்; அகிலேஷின் நடவடிக்கைகள் பார்ப்பனியத்திற்கு எதிரானது அல்ல என்று கூறினார்.

பார்ப்பனியம் அரசியல் அல்லது எந்த ஒரு தளத்திலும் தன்னுடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத ஒன்றாகும்.

அதாவது ஜாதிய அரசியல், மனிதத்தன்மையற்ற செயல்பாடுகள் மற்றும் தீண்டாமைகளை அது ஒருபோதும் விட்டுவிடப் போவதில்லை.  இதற்கு எதிராக நிற்பவர்களை ஆர்.எஸ்.எஸ். என்றுமே தனது எதிரியாகத்தான் பார்க்கும்.

பாபா சாகேப் அம்பேத்கர் பார்ப்பனருக்கு எதிரி அல்ல என்று கூறும் அதே நேரத்தில், அவரை பார்ப்பனர் என்று கூட கூறத்தயங்காது அது. ஆனால் அம்பேத்கர் ஜாதியத்திற்கு எதிராக நின்றவர்; ஜாதியத்தை அழித்து ஒழிக்கவேண்டும் என்று தன்னுடைய வாழ்நாளையே போராட்டக் களமாக்கியவர். அவர் பார்ப்பனியம் என்ற தீய சக்திக்கு ஆதரவாக என்றுமே தனது கருத்தைக் கூறியதில்லை.

பார்ப்பனீயத்தினுடைய தன்மை என்ன என்பதுபற்றி நாங்கள் சொல்லவேண்டாம். பொதுமக்கள் நீங்கள் இருக்கிறீர்கள். என்னுடைய கைகளில் இருப்பது தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய, படித்து பாதுகாத்து வைத்து நமக்குக் கொடுத்த புத்தகம். அம்பேத்கர் அவர்கள் 1945 ஆம் ஆண்டு What Congress and Gandhi Ji have done to the untouchables  காங்கிரசும், காந்தியும் தீண்டப்படாத மக்களுக்கு செய்தது என்ன? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் தனியே பிரிக்கவில்லை அவர். ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட அத்துணை பேர் குறித்தும் ஒரு வார்த்தை சொன்னார் - அடிமை ஜாதிகள் -   (Servile Classes) சரியான வார்த்தை அது. இன்றைக்கு உரிமை மறுக்கப்பட்ட அத்துணை பேரும் ஓரணியில் இருக்கிறார்கள் என்று கொண்டு வந்தார். அதைதான் தந்தை பெரியாரும் சொன்னார் - The Non Brahmin Movement என்று வந்ததும் அதுதான். அதில் எல்லோரும் இருப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் இருப்பார்கள். தனித்த ஜாதிகளுக்கு இடமில்லை. அதுதான் பின்னாளில், திராவிடர் கழகம் - திராவிடர் இனம் என்று ஆக்கினார்கள்.

திராவிடர் கழகம் எல்லா வகையிலும் ஆய்வு செய்திருக்கின்ற ஒரு இயக்கமாகும்

அண்ணல் அம்பேத்கர் சொன்னார், திராவிடர் இனம் என்பது தென்னாட்டில் மட்டுமல்ல - வடநாட்டில் காலங்காலமாக இருந்த பூர்வீகக் குடிகள். இன்னமும் நாகர்கள் என்றால், திராவிடர்கள் என்றார் அம்பேத்கர். தமிழ்மொழிதான் திராவிடர்களுடைய மொழி என்று எழுதியிருக்கிறார். பல பேர் அம்பேத்கரைப்பற்றி பேசுவார்கள் - அவரைப்பற்றி படிப்பதில்லை. திராவிடர் கழகம் எல்லா வகையிலும் ஆய்வு செய்திருக்கின்ற ஒரு இயக்கமாகும்.

அந்த வகையில், இந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடிய ஒரு செய்தியை உங்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக் கிறோம்.
பார்ப்பனியம் என்றால் என்ன? என்பதுபற்றி பல பேருக்குக் குழப்பம் இருக்கும்.

ஆனால், அம்பேத்கர் அவர்கள் எவ்வளவு அழகாக தெளிவாக சொல்கிறார் பாருங்கள்.

கடைசிவரையில் அந்தக் கருத்தை அவர் மாற்றிக் கொள்ளாத தினால்தான், இந்துத்துவம், இந்து மதம் என்கிற ஜாதியை, சனாதனத்தை, பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற இந்த அமைப்பு இருக்கிறதே  - முழுக்க முழுக்க ஜாதியை-  தீண்டா மையை காப்பாற்றுகின்ற அமைப்பு என்பதினாலே - தத்துவ ரீதியாக அதனை அவர் தாக்கினார். தனி மனித தாக்குதலே அம்பேத்கரிடமும் கிடையாது; பெரியாரிடமும் கிடையாது.

ஒரு மனிதனுக்கு உள்ள உரிமை - இன்னொரு மனிதனுக்கு மறுக்கப்படக்கூடாது
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று போராடுகிறோமே - அந்த வேலைக்கு நாங்கள் போகவேண்டும் என்பதற்காகவா? கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் போக மாட்டோம்.

ஆம்பள சாமியையும் குளிப்பாட்டுகிறார்கள்; பொம்பள சாமியையும் குளிப்பாட்டுகிறார்கள். அசிங்கமாக இருக்கிறது. ஆனால், எந்தக் கடவுளுக்கும் கோபம் வரவில்லை? இருந்தால் தானே கோபம் வரும். அந்த வேலைக்கு நாங்கள் என்ன மனு போட்டுச் செல்வோமா? நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அதற்கென்று நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு உள்ள உரிமை - இன்னொரு மனிதனுக்கு மறுக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் போராடு கிறோம்.

மற்ற மதத்தைப்பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள் என்று எங்களைப்பற்றி புரியாத சிலர் சொல்வார்கள்.

இஸ்லாமிய மதத்தில் சாதாரண இஸ்மாயில் பாய், முல்லாவாக வேண்டும் என்றால், ஏழு ஆண்டுகள் படித்துவிட்டு வந்தால், முல்லாவாகலாம். பிறகு மவுல்வி ஆகிறார். சாதாரண இஸ்மாயில் பாய், மவுல்வி இஸ்மாயில் ஆகிறார்.

கிறித்துவ மதத்தில், சாதாரண அந்தோணி, ஏழு ஆண்டுகள் படித்துவிட்டு, அவர் பாதிரியார் ஆகிறார். பிறகு பாதர் அந்தோணி ஆகிறாரே!
உங்களுடைய அர்த்தமுள்ள இந்து மதத்தில் இப்படி ஆக முடியுமா? அங்கேதானே பேதம் இருக்கிறது. அதனை ஒழிப்பதற் காகத்தானே பெரியாரும், திராவிடர் கழகமும் போராடிக் கொண் டிருக்கிறோம்.

கோவிலில் சிலை செதுக்கியவன் எங்களுடைய ஆள்; கோவில் கோபுரம் கட்டியவன் எங்களுடைய ஆள்; கோவிலுக்கு மானியம் கொடுத்தவன் எங்களுடைய ஆள்; நீ அடிக்கிற மணியை செய்தது எங்களுடைய ஆள். இவ்வளவு செய்த பிறகும், நம்மாள் உள்ளே செல்ல முடியவில்லை.

வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய மணியை அடிப்பதற்காக கயிற்றை நம் கைகளில் கொடுத்துவிட்டான். நம்மாள் வேர்க்க விறுவிறுக்க அடித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பயல், சிறிய மணியை கைகளில் பிடித்தபடி, செட்டியார் வாள் நகருங்கோ, முதலியார்வாள் நகருங்கோ, நாயக்கர்வாள் நகருங்கோ என்று சொல்லியபடியே  உள்ளே போய்விட்டான்.
நம்மாள் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு சாமி என்கிறான். இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

அதாவது படிக்கட்டு ஜாதிமுறை. எனக்குமேல்  அவன்; அவனுக்கு மேல் இன்னொருவன்; எனக்கு கீழே இன்னொருவன் என்று இருந்தால், எல்லோரும் சேர்ந்து போராட முடியாது. அதுதான் அதிலிருக்கும் தந்திரமே! அவர்களுக்குள்ளாகவே சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இப்பொழுது ஜாதியைப் பிரித்தவுடன், நாலாம் ஜாதிக்காரனும், அய்ந்தாம் ஜாதிக்காரனும் சண்டை போடுகிறார்கள்? சிலர் சொல்வார்கள், எந்த அய்யரும் சண்டை போடுவதில்லையே என்று. எப்படி அவர்கள் சண்டை போடுவார்கள். அவன்தான் மேலே இருக்கிறானே! அவனுக்கு சண்டை போடுவதற்கு வாய்ப்பே கிடையாதே!
ஏணிப்படி ஜாதி முறையை கற்பனை செய்து பாருங்கள். மேலே இருக்கிறவனுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. அவன் கொஞ்சம் ஆட்டினால், நாலாவது படிக்கட்டில் இருப்பவன், அய்ந்தாவது படிக்கட்டில் இருக்கிறவன்மேல் விழுகிறான்; ஏண்டா என்மேல் விழுகிறாய் என்று இவனும், அவனும் அடித் துக் கொள்வார்கள். அவன் மேலே இருந்துகொண்டு, என்னங்க அங்கே சண்டை நடக்கிறதே என்று. இதுதானே ஜாதிக்கலவரம்.

இன்றைக்கு அமைதிப் பூங்காவாக தமிழகம் இருப்பதற்கு என்ன காரணம்? இந்த இயக்கம் இல்லாவிட்டால், பெரியார் பிறந்திருக்காவிட்டால் இதுபோன்ற நிலை இருக்குமா?
நேற்றுகூட பிகார் மாநிலத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ளவர்கள் எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்று சொல்கிறார்கள். அங்கே வேலை செய்தது போதும் - இனிமேல் அடிக்கடி இங்கே வாருங்கள் என்று சொல்கிறார்கள்.

நம்முடைய கம்யூனிஸ்ட் ராஜா அந்த நிகழ்ச்சிக்கு வந் திருந்தார். உங்களுக்கு முதல்வர் வீடே கொடுத்திருக்கிறார்; அடிக்கடி இங்கே வாருங்கள் என்றார்.
What congress and Gandhi Ji
have done to the Untouchables
The cardinal principles of this philosophy of the Brahmins were six
(1) graded inequality, between the different classes;
(2) complete disarmament of the Shudras And the Untouchables;
(3) complete prohibition of  the education of the Shudras and the Untouchables;
(4)  ban on the Shudras and the  Untouchables occupying places of power and authority;
(5) ban on the Shudras and the Untouchables acquiring property
(6) complete subjugation and suppression of women

இதன் தமிழாக்கம்:
1. பல்வேறு இனக்குழுக்களிடையே பகைமையை மூட்டுவது.
2. சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் வலுப் பெறாமல் பார்த்துக்கொள்வது.
3. கல்வி என்பது சூத்திரர்களுக்கு எள்ளளவும் கிடைக்கக் கூடாது என்று.
4. சூத்திரர்களின் சொத்துக்களை அபகரிப்பது.
5. சூத்திரர்கள் எந்த ஒரு பொருளையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
6. பெண்களின் உரிமைகளை நசுக்குதல்
மேற்கண்ட 6 கொள்கைகளும் பார்ப்பனியத்தின் உயிர் மூச்சாகும்.
தாழ்த்தப்பட்ட தோழர்களில்கூட மட்டத்திலே உயர்ந்தவர்கள் என்கிறார்கள். அதற்கும் கீழே இன்னொரு ஜாதி; பிரித்து பிரித்து நாம் எல்லாம் ஒன்று சேரக்கூடாது என்று வைத்திருக்கிறார்கள். அத்துணை பேரையும் ஒன்று சேர வைத்த பெருமை தந்தை பெரியாரையே சாரும்.
உலகத்திலேயே படிப்பை கொடுக்கக்கூடாது என்கிற ஒரே மதம் இந்து மதம் என்கிற சனாதன மதமாகும்.
இந்த இயக்கம் இல்லாவிட்டால், எல்லோரும் படித்திருக்க முடியுமா?

சரசுவதி பூஜை கொண்டாடியதினாலா இன்றைக்கு எல்லோரும் படித்திருக்கிறார்கள்? இல்லவே, இல்லை, பெரியார் என்ற ஒரு மாபெரும் சக்தியால்தான். திராவிடர் இயக்கங்கள் இல்லாவிட்டால், இன்றைக்கு இவ்வளவு கல்விக் கூடங்கள் வந்திருக்குமா? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். காமராசர் ஆட்சி தொடங்கி கல்வி புரட்சி நடந்ததன் காரணத் தினாலேதான்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக் காதே - அறிவை கொடுக்காதே என்று சொன்னது மனுதர்மம். அந்த மனுதர்மத்தை மாநாடு போட்டு எரித்தவர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள்.

மறுபடியும் மனுதர்மம் ஆட்சிக்கு வந்திருக்கிறது.  அதுதான் காவி கட்சி. மனுதர்மம்தானே ஆர்.எஸ்.எஸ். இன்றைக்கு சந்தர்ப் பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாம்பு கொஞ்சம்  தலைதூக்குகிறது - அடி வாங்கியதும் உள்ளே தலையை இழுத்துக் கொள்கிறது. மறுபடியும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறது. அந்த ஆபத்து, ஆபத்துதானே!
எங்களைப் போன்ற கருப்புச் சட்டைக்காரன் - காவலுக்குக் கெட்டிக்காரர்கள். அதனால் அந்தப் பணியை செய்துகொண்டி ருக்கிறோம்.
அதிகார இடங்களில் சூத்திரர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ வரக்கூடாது.

பார்ப்பனியத்தினுடைய விளைவு நம் நாட்டில் எவ்வளவு மோசமாக மக்களை மனிதத் தன்மையற்று நடத்தியது என்று சொல்கின்ற நேரத்தில், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொல்லிய அந்த ஆதாரத்தை நான் எடுத்துச் சொல் கிறேன். சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது.

He was a sacred person. There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed. Sir P. C. Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning on the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass, ready to wash his feet and take the sacred liquid to their parents who would not take their food without having a sip of it first. He was entitled to first fruits.
In Malabar, where the Sambandham form of marriage prevails, the servile classes, such as the Nairs, regard it an honour to have their females kept as mistresses by the Brahmins.


இதன் தமிழாக்கம்:

பிரபல வேதியல் அறிஞர் சர். பி.சி ராய் பார்ப்பனியக் கொடு மைகள் பற்றி தனது வாழ்க்கை வரலாற்றில் கூறியிருப்பதாவது,  சிறுவயதில் நான் பார்ப்பனியத்தால் கடுமையாக பாதிக்கப்பட் டேன். நாங்கள் வரிசையாக தண்ணீர் குடிக்க ஆசிரியர்களால் நிறுத்தப்படுவோம். யாராவது ஒரு பார்ப்பனர் வந்து அவன் காலைக் கழுவிய பிறகு அந்த தண்ணீர் அனைவருக்கும் குடிக்க வழங்கப்படும். மேலும் எனது பெற்றோர்கள் யாராவது ஒரு பார்ப் பனர் வந்து எச்சில் படுத்திய பிறகு தான் அவர்களும் உண்பார்கள் எனக்கு தருவார்கள் என்றும், கடையில் ஆசையுடன் ஒரு பழம் வாங்கினால் அதை யாராவது ஒரு பார்ப்பனர் சிறிது கடித்து சுவைத்தபிறகே என்னை சாப்பிட அனுமதிப்பார்கள் என்று கூறியுள்ளார்.  இதைவிடக் கொடுமை என்னவென்றால் கேரளா வில் (மலபார் பகுதி) நாயர் குடும்பத்தினர் புதிதாக திருமணமான தனது மனைவியிடம் ஒரு நம்பூதிரி பார்ப்பனர் உடலுறவு கொண்ட பிறகு தான் தாலிகட்டிய ஆண்மகன் தனது மனைவி யுடன் கூடவேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது.

இவையெல்லாம் இன்றைக்கு இல்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், மதம், சனாதன தர்மம் இவைகளில் கை வைக்கக்கூடாது என்கிறார்களே, அது மீண்டும் அப்படிப்பட்ட ஒரு இந்துத்துவ ஆட்சி வந்தால், பழைய சனாதனம், வைதீக முறைகள் திருப்பப்பட்டால், இவை நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதை அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எங்களுக்கு சமுதாயத்தைப்பற்றியும், அடுத்த தலைமுறை யைப் பற்றியும் கவலை இருப்பதால், ஆகவேதான், இதனை நாங்கள் சொல்கிறோம்.
ஆகவே, நண்பர்களே, மீண்டும் அது திரும்பி வந்துவிடக் கூடாது. அதனை இன்னமும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற இடம், கோவில் கருவறைகள். அனைத்து ஜாதியினரும் அய்.ஏ. எஸ்., அய்.பி.,எஸ்., அதிகாரிகளாகி விட்டார்கள். அனைத்து ஜாதியினரும் அய்க்கோர்ட் ஜட்ஜாகி விட்டார்கள்; உச்சநீதிமன்ற நீதிபதிகளாகி விட்டார்கள். கலைஞர் ஆட்சியினால்தான் - தி.மு.க. ஆட்சியினால்தான். அந்த ஆட்சி இல்லையானால், இந் நிலை ஏற்பட்டிருக்குமா? வடநாட்டில் பல மாநிலங்களில் சூத்திரர் களோ, பஞ்சமர்களோ உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இல்லையே!

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் போராடுகிறோம்

இன்னமும் உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் மூன்று, நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில்  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லையே! இதனை கேட்பதற்கு நாதியில்லை, எங்களைத் தவிர. எல்லோரும் வாக்கு வாங்கிக்கொண்டு சட்டப்பேரவைக்குச் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனை சொல்கின்ற இயக்கம் எங்களுடைய இயக்கம். உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் போராடுகிறோம். உங்களுடைய பிள்ளைகளின் படிப்பு களுக்காகப் போராடுகின்ற இயக்கம். உங்களுடைய பிள்ளை களின் வேலை வாய்ப்புக்காக - சமூகநீதிக்காகப் போராடுகின்ற இயக்கம் எங்களுடைய இயக்கம். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது, அது கண்டிப்பாக வெற்றி பெறும்.
கோவில்களுக்குள் பெண்கள் உள்ளே போகக்கூடாது என்று வைத்திருந்தார்கள்; இன்றைக்கு மகாராஷ்டிராவில், பெண்கள் களத்தில் இறங்கி போராடி, வெற்றி பெற்று உள்ளே சென்றார்கள். அடுத்து கேரளாவில், உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தக் கருத்து எங்கேயெல்லாம் பரவியிருக்கிறது பாருங்கள். நீதிபதி கேட்கிறார்,
உச்சநீதிமன்ற நீதிபதி தொடுத்த வினாக்கள்!

அரசியல் சட்டப்படி, ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு காட்டக்கூடாது; எல்லா உரிமைகளும் பொதுவானது; ஆண்கள் பக்தர்களாக இருந்து கோவிலுக்குள் செல்லலாம் என்றால், ஏன் பெண்கள் செல்லக்கூடாது. எவரெஸ்ட் சிகரத்தில் பெண்கள் ஏறக்கூடாது என்று சொல்வீர்களா? தடுப்பீர்களா? என்று கேட்கிறார்.

பெரியாரின் கொள்கைகள் பரவும்; அவருடைய கருத்துகள் பரவும். நாங்கள் யாரும் சென்று பிரச்சாரம் செய்யவேண்டாம். அறிவியலை யாராவது பிரச்சாரம் செய்தார்களா? செல்போன் கண்டுபிடித்தார்களே, எல்லோரும் வாங்கிக் கொள்ளுங்கள், வாங்கிக் கொள்ளுங்களே என்று விற்றார்களா? இல்லையே, ஒருவர் வாங்கியதும், குப்பன், சுப்பன், முத்தன், வேலைக்காரி, கீரைக்காரி எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்களே!

இதை நான் தவறு என்று சொல்லவில்லை - வளர்ச்சி - அதனால் நமக்கு மகிழ்ச்சி. அறிவியல் தானாகப் பரவும். அது போல், பெரியார் கருத்தும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் கருத்தும் அறிவியல். அதனை யாராலும் தடுக்க முடியாது. அந்த எண்ணத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அந்த அடிப்படையில்தான், நாங்கள் தீர்மானம் போட்டோம்.
சட்டப்பேரவையில் கொடுத்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டாமா?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆகமப் பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்யுங்கள் என்று.
இன்றைய ஆட்சிக்கு நாணயம் இருந்தால், சட்டப்பேரவையில் கொடுத்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டாமா? இந்த லட்சணத்தில், தேர்தல் பரப்புரையில் என்ன சொல்கிறார்கள்? நாங்கள் சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம். சொல்லாதது என்ன? மதுவிலக்கு வேண்டும் என்று சொல்லி, பாட்டு பாடியவரை சிறைக்கு அனுப்பியதுதான். இது தான் அவர்கள் சொல்லாததை செய்தது.

தி.மு.க. அணி வெற்றி பெற்றால்தான்
சமூகநீதி நிலைநாட்டப்படும்!

ஆகவே, நண்பர்களே, நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். எங்களுக்கு என்ன அக்கறை - ஏன் தி.மு.க.வை ஆதரிக்கவேண்டும்; தி.மு.க. அணி வெற்றி பெறவேண்டும் என்று சொல்கிறோம். அரசியலுக்காக அல்ல நண்பர்களே! அந்த அணி வெற்றி பெற்றால்தான், உண்மையிலேயே சமூகநீதி நிலை நாட்டப்படும்.
அன்றைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்துதானே வாய்ப்புகளை உருவாக்கினார்கள். ஜாதி மறுப்பு திருமணத்திற்கு முதல்முறையாக அங்கீகாரம் கொடுத்ததே அண்ணா அவர்களுடைய ஆட்சி. ஆனால், இன்றைய ஆட்சி அண்ணாவின் பெயரை சொல்லிக் கொண்டு எப்படி நடக்கிறது? அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். நான் சொல்லவில்லை, பொதுவான ஏடுகளேகூட, எப்படி எழுதுகின்றன என்பதை நீங்கள் நினைத் துப் பார்க்கவேண்டும்.

18 ஆம் தேதி அன்று நடைபெறக்கூடிய போராட்டத்திற்கு அவசியம் நீங்கள் வரவேண்டும்; எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும். இப்பொழுது சமுதாயத்தில் சிறைச்சாலைக்குப் போவது என்பது வாடிக்கையாகிவிட்டதே!

சிறை என்பது ஒரு பெரிய சங்கடம் என்று சொல்ல முடியாது. சிறைச்சாலையில்தான், இந்த சுதந்திர நாட்டில், 69 ஆண்டுகளுக் குப் பிறகு, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் மிகவும்  மலிவானது என்னவென்றால், கூலிப்படைதான்!

வெளியில் இருந்தால், எந்த நேரத்தில் வந்து செயினை அறுத்துக் கொண்டு செல்வார்கள் என்று தெரியாது; கூலிப்படை வந்து என்ன செய்வார்கள் என்று தெரியாது. 5000 ரூபாய்க்கு கூலிப்படை கிடைக்கிறது. இந்த ஆட்சியில் மிகவும்  மலிவானது என்னவென்றால், கூலிப்படைதான்.

ஜாதி வெறி எடுத்தவன், என் ஜாதி, உன் ஜாதி என்கிறானே, ஜாதிக்கு அடையாளம் என்ன? தேநீர்க் கடைகளில் வைத்திருக் கிறார்களே, இரட்டைக் குவளை முறை. ஆனால், சாராயக் கடையில்  அந்த நிலை இருக்கிறதா? ஒரு கிளாஸ் உள்ளே போனதும், பிரதர் என்கிறான்; சமத்துவம் தானே வந்துவிடுகிறதே!

சுடுகாட்டில் கூட சமத்துவம் இல்லையே! நம்முடைய உழைத்த சகோதரன் உயிரிழந்துவிட்டான்; அவனுடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்குக்கூட பாதையை விட மாட்டேன் என்கிறார்களே! அதற்கு முன் ஒரு பாடலைப் பாடுவார்கள் - ‘‘சமரசம் உலாவும் இடமே!’’ என்று சுடுகாட்டைச் சொல்வார்கள். ஆனால், அங்கே சமரசம் இல்லை. ஆனால், டாஸ்மாக் கடையில்தான் சமரசம் உலாவுகிறது!

இதுபோன்று நம் மக்களை நாசம் செய்து, மிகக் கேவலமாக வைத்திருக்கின்ற நிலையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? இதில் அண்ணா பெயரில் கட்சியின் பெயர் வேறு. இதுதான் மிகப்பெரிய சங்கடம்.

ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த செய்தி!

இதோ என் கைகளில் இருப்பது ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகை. இது யார் பத்திரிகை என்று உங்களுக்குத் தெரியும்.

ஜெயலலிதாவிற்கு தனது கட்சியில், 227 நல்லவர்கள், வல்ல வர்களைக்கூட தேர்வு செய்யத் தெரியாதா என்ன?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சிறீரங்கம் அரங்க நாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் ஆகிய திருத்தலங்களில் பூஜித்தும், கர்ப்பக்கிரகத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியும் எடுத்துவரப்பட்ட வேட்பாளர் பட்டியல், மூன்று நாள்களில் ஏழு முறை மாற்றப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாள்களில் 100 முறைகூட மாற்றப்படலாம்.

திங்கள்கிழமையா, செவ்வாய்க்கிழமையா, புதன் ஓரையா, ஏகாதசியா, வடக்கே சூலமா, தெற்கே சூலமா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலேயே இத்தனை திருத்தங்கள் என்றால், என்ன விசாரணையும் ஆராய்ச்சியும் நடத்தி, இவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்தார் ஜெயலலிதா?

(இங்கே ஒரு தகவலை சொல்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. நான் படிக்கின்ற காலத்தில் பதிவாளராக ஒருவர் இருந்தார். சச்சிதானந்தம் பிள்ளை மிகுந்த சைவ பக்தி உள்ளவர். தமிழறிஞர் - நேர்மையா னவர். பல்கலைக் கழகத்தில் இடங்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். சச்சிதானந்தம் அவர்களிடம் ஒருவர் சென்று சீட் வேண்டும் என்று கேட்டார்; உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார்; இவர் சிவனடியார் என்று சொன்னதும், சச்சிதானந்தம் அவர்கள், சிவனடியாரா? இவனுக்கு மட்டும் இடம் கொடுங்கள் என்று சொன்னார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவர் முழுக்க முழுக்க திராவிடர் கழகத்தில் இருக்கின்றவர். அவருடைய தாத்தா வைத்த பெயர் என்பதால், அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது அவருக்கு)

பெருமாள் பெயர், முருகன் பெயர் இருப்பவர்களாகப் பார்த்து டிக் அடித்தார் என்றால், அடுத்த தேர்தலில் நிச்சயமாக இவர்களுக்கு சீட் கிடைக்காது. இப்படித்தான் கடந்த தேர்தலிலும் ஆட்கள் தேர்வு நடந்தது. அய்ந்து ஆண்டுகள் கழித்து, இவர்களில் எவரும் தேற மாட்டார்கள் எனத் தெரிந்து, இந்த முறை அவர்களுக்கு ஜெயலலிதா வாய்ப்பு தரவில்லை.
இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்கள் என அழைத்து வரப்பட்டு ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்ட 100 பேரை மீண்டும் வீட்டுக்கே அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. இதில் 10 பேர் அமைச்சர்களாகவும் இருந்து சுகம் அனுபவித்தவர்கள்.

கடந்த அய்ந்து ஆண்டுகால தமிழ்நாட்டின் நிர்வாகம்-அரசு ஜெயலலிதாவாலேயே சகித்துக் கொள்ளமுடியாத எத்தகைய தகுதியற்ற மனிதர்கள் வசம் இருந்துள்ளது என்பதற்கு முக்கிய மான உதாரணம் இது.

அம்மா தாயே! எங்கோ ஒரு குக்கிராமத்தில் எதற்கும் உதவா தவனாக, அன்றாடச் சாப்பாட்டுக்கே  வழி இல்லாதவனாகச் சுற் றிக்கொண்டிருந்த என்னை, எம்.எல்.ஏ. ஆக்கி, அமைச்சராகவும் ஆக்கி, தங்கள் தலைமையில் செயல்பட வாய்ப்பும் கொடுத்த நீங்கள்தான் எனக்கு மீனாட்சி, காமாட்சி, அங்காள பரமேஸ்வரி, அகிலாண்ட ஈஸ்வரி என, இந்த மனிதர்கள் பேசும்போது ஜெயலலிதாவைப் பாசத்தால் பாராட்டுகிறார்கள் என்றுதான் நினைத்தோம். இல்லை, அவர்கள் உண்மைகளைச் சொல்லியிருக்கிறார்கள்; எதற்கும் லாயக்கு அற்றவர்களாகவே பல எம்.எல்.ஏ.-க்கள், பல அமைச்சர்கள் இருந்துள்ளனர். அம்மா விடம் பொய் சொல்லக் கூடாது என்பதற்காக, அன்றைக்கே உண்மையைப் பேசியிருக்கிறார்கள்!

இரண்டாம் முறை வாய்ப்பு தரப்படாத அளவுக்கு மோசமாக 100 எம்.எல்.ஏ-க்கள் நடந்து கொண்டார்கள் என்றால், கடந்த அய்ந்து ஆண்டு காலத்தில் என்ன வகையான ஆட்சி நடந் திருக்கும்? வெறும் ஒப்புக்கு உட்கார்ந்துகொண்டு, மந்திரிகளின் மாதாந்திர கமிஷன்களில் வண்டியை ஓட்டியிருக்கிறார்கள் இந்த எம்.எல்.ஏ-க்கள் என்றுதானே முடிவுக்கு வரவேண்டும்? குறிப் பிட்ட தொகுதியில் சொந்த செல்வாக்கு இவர்களுக்கு இருந்தி ருந்தால், ஜெயலலிதா சீட் தர மறுத்திருக்க முடியுமா?

மாறாக, இவர்களுக்கு எல்லாம் மறுபடியும் வாய்ப்பு கொடுத்தால் கட்சி தோற்றுப்போகும் என உளவுத்துறை கொடுத்த அறிக்கை காரணமாகத்தான் இவர்கள் காலி செய்யப்பட்டு உள்ளார்கள். `இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் ஓட்டு கேட்டு ஊருக்குள் போக முடியாது என்றும் உளவுத் துறை அறிக்கை கொடுத்தது. ஏனென்றால், இவர்களில் பல பேர் கடந்த முறை ஓட்டு கேட்டுப் போனதற்குப் பிறகு ஊருக்குள் போகாத வர்கள். ஏன் போகவில்லை? அம்மா போகச் சொல்லவில்லை; அதனால் போகவில்லை.
தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சொன்ன ஜெயலலிதா, தன் மீதான வழக்கில் இருந்து விடுபடுவதற்காக கோயிலுக்குப் போகச் சொன்ன ஜெயலலிதா, தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையில் இருந்து வெளியில் வருவதற்காக யாகங்கள் நடத்தச் சொன்ன ஜெயலலிதா, தனது உடல்நலனுக்காக பல்வேறு பூஜைகள் நடத்தச் சொன்ன ஜெயலலிதா  தொகுதிக்குள் போ, மக்களைச் சந்தி, அவர்களுக்கான தேவை என்ன என்பதை எனக்கு எழுது எனக் கட்டளையிடவில்லை. அதனால் இவர்களும் தொகுதிக்குள் போகவில்லை.

ஜெயலலிதா கிரேட் டிக்டேட்டர்தானே! ‘சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோரும் தொகுதிக்குள் போய் மக்களைச் சந்திக்க வேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தால் ஒருத்தராவது பார்க்காமல் இருந்திருப்பாரா இருந்திருக்க முடியுமா? அம்மாவே சொல்லாவிட்டாலும் இவர்கள் தொகுதிக்குள் போனால் அம்மா திட்டப்போகிறாரா? இல்லை. பொறுப்பை உணர்த்தாத தலை மையின் கீழ் அக்கறையற்ற மனிதர்களின் அய்ந்து ஆண்டுகள் உதவாக்கரையாகக் கழிந்துவிட்டன என்பதற்கு உதாரணம்தான், 100 எம்.எல்.ஏ.க்களுக்கும் 10 அமைச்சர்களுக்கும் தரப்பட்ட கல்தா!

அந்த 150 எம்.எல்.ஏ-க்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் களாவது தகுதி படைத்தவர்களாக, துறைச் செயல் பாடுகளில் தேர்ச்சிபெற்ற, கெட்டிக்காரர்களாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை.

2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அய்ந்து ஆண்டு காலத்தில் 23 முறை அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது. ஓர் ஆட்சிக்கு ஒரு முறை பதவியேற்பு விழா நடத்தலாம். அதிகபட்சம் மூன்று முறைகூட நடக்கலாம். 15 தடவைக்கு மேல் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டுக்குத் தாடி எதற்கு ஆளுநர் பதவி எதற்கு? என அண்ணா கேட்டார்.

அண்ணாவுக்குத் தெரியாத ஆளுநரின் அவசியத்தை அம்மா உணர்த்துகிறார். இத்தனை தடவை பதவியேற்பு விழாக்கள் நடத்துவதற்கே, சொந்த வேலைகள் இல்லாத ஒருவர் வேண்டாமா?
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், செல்லூர் ராஜு, என்.சுப்பிரமணியம் ஆகியோர்தான் தாங்களும் மாறாமல் தங்கள் துறையும் மாறாமல் இருந்தவர்கள். கோகுல இந்திரா, எஸ்.பி.சண்முகநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, எஸ்.பி.வேலுமணி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஆர்.பி. உதயகுமார், பி.வி.ரமணா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, வெளியில் அனுப்பப்பட்டார்கள். தாங்கள் திருந்தியதாக எப்படி நிரூபித்தார்கள் எனத் தெரியவில்லை. மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டார்கள். அதன் பிறகாவது நீடித்தார்களா என்றால்..? அக்ரி கிருஷ்ண மூர்த்தியும் என்.ஆர்.சிவபதியும் ரமணாவும் மீண்டும் தூக்கி வீசப்பட்டனர்.

150 பேரில் சுத்தமான, திறமையான, செயல்படக் கூடிய 30 பேரைக்கூட ஜெயலலிதாவால் தேர்வுசெய்ய முடியவில்லையா?

பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி  அய்ந்து ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் அய்ந்து முன்னோர்கள். பள்ளிக் கல்வித் துறை எப்படி முன்னேறியிருக்க முடியும்? பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சி.எம். ஜெயலலிதாவா அல்லது சபீதா அய்.ஏ.எஸ்-ஸா? பேசாமல் அவரையே அமைச்சர் ஆக்கியிருக்கலாமே!

பெண் பிரச்சினைகளில் மாட்டியே சிக்கல் ஆனவர்கள் பட்டியல் நீண்டது. திருச்சி பரஞ்சோதி, செங்கோட்டையன், எம்.எஸ்.எம். ஆனந்தன், பி.வி.ரமணா, ஜெயபால் என இவர் களின் கதைகள் ஒவ்வொன்றும் பயங்கரம். போயஸ் கார்டனில் ஃபேக்ஸ் மெஷின் ரிப்பேர் ஆனதற்குக் காரணமே இவர்கள் மீதான புகார்கள்தான். பெரிய பதவி, திடீர் அதிகாரம், புதுப் பணம் மூன்றும் சேர்ந்து பலரையும் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடவைத்தன. இந்த அய்ந்து பேர் சிக்கிக்கொண்டார்கள்; பலர் சிக்கவில்லை. செந்தில்பாலாஜி பற்றி தனிப் புத்தகம்தான் போட வேண்டும். ஒரு பாராவுக்குள் அடக்கிவிடக்கூடிய பேரா அது?

இதில் புரியாத புதிர் என்னவென்றால்

அமைச்சர் பதவிக்கு லாயக்கு இல்லை எனத் தூக்கி வீசப் பட்டவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ.வாகப் போட்டியிட ஜெய லலிதா வாய்ப்பு தந்திருப்பதுதான்.
அதிகாரம் பொருந்திய மனிதராக இருந்து, அமைச்சரவையில் வருவாய்த் துறை தரப்பட்டு, அதில் இருந்து டம்மியான அய்.டி. துறைக்குப் போய், மீண்டும் வருவாய்த் துறை பெற்று பதவியும் பறிக்கப்பட்ட பரிதாப செங்கோட்டையன் மீண்டும் வேட்பாளர். ம.தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து, அ.தி.மு.க-வில் இருந்து கார்டனுக்குள்ளேயே போய், சின்ன வயதிலேயே செல்வாக்கான அமைச்சர் ஆகி ஜெயலலிதாவின் பதவி போனால் அடுத்து இவர்தான் என்றெல்லாம் மகுடம் சூட்டப் பட்ட செந்தில்பாலாஜி, திடீரென பதவிப் பறிப்புக்கு ஆளாகி, கரூரில் சிறை வைக்கப்பட்டார். அவருக்கும் மீண்டும் வாய்ப்பு. இப்படித்தான் சி.வி.சண்முகத்துக்கும் மீண்டும் வாய்ப்பு. எதற்காக நீக்கப்பட்டார்கள்? எதற்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்? அய்யோ பாவம்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும் என்ன பெரிய பாவம் செய்து விட்டார். அவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருந்தால் பட்டியலுக்கு ஒரு புண்ணியம் கிடைத்திருக்குமே! யார் ஆள் கிறார்கள் என்பது முக்கியம் அல்ல; எத்தகைய ஆள் ஆள்கிறார் என்பதே முக்கியம். தொகுதிக்கே வராத எம்.எல்.ஏ.க்கள், துறையில் எந்தச் சாதனையுமே செய்யாத அமைச்சர்கள், இதை அய்ந்து ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத முதலமைச்சர்  இதுதான் அய்ந்து ஆண்டுகால ஆட்சி. இதற்குத்தானா மக்கள் வாக்களித்தார்கள்? தகுதியற்ற மனிதர்களுக்கு, தங்களது பணிகளைச் செய்யத் தவறிய மனிதர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்க மறுத்ததன் மூலமாக, கட்சி ஜெயிக்கும் என ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால், ஆட்சி செய்த அய்ந்து ஆண்டுகளும் தோற்றுவிட்டனவே. அதற்குக் காரணம் அவர்தானே!

இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட 10 அமைச்சர்களில் பி.மோகன், எஸ்.சுந்தர்ராஜ், என்.சுப்பிரமணியன், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.அப்துல் ரஹீம் ஆகிய அய்வரும் பெரிய புகார்கள் எதிலும் சிக்காதவர்கள். (புகார்களே இல்லாத வர்கள் எனச் சொல்ல வரவில்லை!) ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மறுத்த ஜெயலலிதா, தொடர் சர்ச்சை மனிதர்களாகவே வலம்வந்த நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், எஸ்.காமராஜ் ஆகியோருக்கு மீண்டும் அங்கீகாரம் தந்திருக்கிறார் என்றால், அவரது அளவு கோல் என்னவென்று புரியவில்லை.

இந்த எம்.எல்.ஏ-க்கள், இந்த அமைச்சர்கள் மீதான அனைத் துப் புகார்களையும் விசாரிப்பதுபோல நடித்து, கார்டனுக்கு மறைத்து சர்ச்சை நபர்களைக் காப்பாற்றி, பல்வேறு மாவட்டங் களில் அ.தி.மு.க. ஸ்தம்பிக்க காரணமான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் அதே இடத்தைத் தக்க வைத்துள்ளார்கள். கடந்த இரண்டு மாத காலமாக விசாரணை வளையத்தில் இருந்து, ஓமகுண்டங்களின் முன்னால் பரிசோதனை செய்யப் பட்ட இவர்கள், என்ன பரிகாரம் செய்து மீண்டார்கள் என்பது அவரவ ருக்கே தெரியும். இந்த அய்வர் அணியில் கொஞ்சம் தப்பியவர் எனச் சொல்லப்பட்ட பழனியப்பனுக்கு, இந்த முறை வாய்ப்பே  இல்லை. ‘அமாவாசை நேரத்தில்தான் பிரச்சினை வருமோ!’ என அமைச்சர்கள் இதுவரை அலறினார்கள்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எல்லா நாட்களும் அப்படித்தான் இருந்தன இருக்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்ந்து ஆண்டுகளுமே அப்படித்தானே?
இதனை எதற்காகச் சொல்கிறோம் என்றால், அண்ணா பெயரில் உள்ள ஒரு ஆட்சி - அண்ணா பெயரில் சென்னை கோட்டூர்புரத்தில்  அமைந்துள்ள ஆசியாவிலேயே பெரிய நூலகம் - தி.மு.க. ஆட்சியில் கலைஞர் திறந்து வைத்தார் என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக - அந்த நூலகத்தைகூட சரிவர பராமரிக்கப்படவில்லை. ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வரும். அரசாங்கம் என்பது ஒரு தொடர்ச்சியல்லவா! நடுநிலை யோடு சிந்தித்துப்  பாருங்கள் நண்பர்களே!

இதில் சிலர் உளறுகிறார்கள் - திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று. இப்பொழுது போராட்டமே - ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுக்கும் - தி.மு.க.வுக்கும்தான். வேறு யாருக்கும் போட்டி கிடையாது. மற்றவர்கள் எல்லோரும் ஒரு அங்கீகாரம் வேண் டுமே என்பதற்காக தேர்தலில் நிற்கிறார்கள். அவர்களைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்கவேண்டிய அவசியமில்லை.
கடந்த அய்ந்தாண்டு காலத்தில் எவ்வளவு பெரிய சங்கடங் கள். நுழைவுத் தேர்வைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியது திராவிடர் கழகம்.
வருங்கால சந்ததியினுடைய வாழ்வு இங்கே இருக்கிறது. எனவே, நாங்கள் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்தாலும், இதனையும் முக்கியமாக கவனிக்கவேண்டும். ஏனென்றால், கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொள்ளக் கூடாது. யாருக்கோ வந்த விருந்து என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஆகவே, எங்களுக்கு அரசியல் பார்வை கிடையாது நிச்சயமாக!

தி.மு.க. ஊழல் செய்திருக்கிறது, அப்படி, இப்படி என்று சொல் கிறார்கள். அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம். ஒரு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் 28 லட்ச ரூபாய்தான் செலவு செய்யவேண்டும் என்று விதி இருக்கிறது. அதன்படிதான் கணக்குக் கொடுக்கப் போகிறார்கள். 27 லட்சத்து 999 ரூபாய்தான் செலவு செய்தோம் என்று கணக்குக் கொடுக்கப் போகிறார்கள்.
28 லட்சம் ரூபாய்க்குள்தான் அந்த வேட்பாளர் செலவு செய்தார் என்று சொல்ல முடியுமா? ஊழலைப்பற்றி பேசும் யோக்கியர்கள் யாராவது பதில் சொல்லட்டும். பொய்க் கணக்குக் கொடுத்துவிட்டு, ஊழலில் பெரிய கோடு என்ன? சிறிய கோடு என்ன?

இப்பொழுதுள்ள அமைப்பு முறைகளை மாற்றவேண்டும்

நாங்கள் யாரும் ஊழலை ஆதரிக்கவில்லை. நாங்கள் யாரும் லஞ்சத்தை நியாயப்படுத்தவில்லை. இந்த அமைப்பு முறைகளை மாற்றவேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்கிறார், 60 கோடி ரூபாய்க்குமேல் பணப் புழக்கம் இருக்கும் என்கிறார். யாரைச் சொல்கிறார்? யாரைக் கண்டுபிடிப்பது?

வெளிநாட்டுக் கருப்புப் பணத்தை கொண்டு வந்து, ஒவ்வொருடைய கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார் மோடி. அப்படி செய்தார்களா?
வெளிநாட்டு கருப்புப் பணம் இருக்கட்டும்; உள்நாட்டில்  நடைபெறும் தேர்தலில் செலவழிக்கப்படும் பணம் முக்கால்வாசி கருப்புப் பணம் அல்லவா! பிறகு என்ன ஒரு யோக்கியதை - இன்னொரு யோக்கியதைப் பார்த்து சொல்வது. ‘‘ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை’’ என்று ஒரு பழமொழி சொல் வார்கள். அதுபோன்று இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கலாமா?
ஆகவே, எல்லாவற்றையும் நீங்கள் சிந்தித்து முடிவு செய்யுங்கள்! 18 ஆம் தேதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்கிற போராட்டம் இருக்கிறதே - அது ஜாதி ஒழிப்புப் போராட்டம் - தீண்டாமை ஒழிப்புப் போராட்டம். அப்போராட் டத்தில் பலரும் கலந்துகொள்ளவேண்டும். அது திராவிடர் கழகம் நடத்துகின்ற போராட்டமாக இருக்கலாம்; ஆனால், திராவிடர் கழகத்துக்காரர்கள் மட்டும்தான் கலந்துகொள்ளவேண்டும் என்று நினைக்காதீர்கள். இப்பொழுதே, கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அப் போராட்டத்தில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறார்கள். நீங்களும் வரவேண்டும். நான் ஏற்கெனவே சொல்லியதுபோல, மூன்று வேளை நிச்சயமாக சாப்பாடு உண்டு.

பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் நேரத்திற்கு சாப்பிட்டது சிறைச்சாலையில்தான். ஆகவே, தாராள மாக சிறைச்சாலைக்குச் செல்லலாம். சமுதாயத்தில் யார் சிறைக் குப் போகாதவர்கள்? சிறையில் இருக்கும் அதிகாரிகள்கூட சில நேரங்களில் சிறைக்குப் போகிறார்கள். ஒரு சுழற்சி போன்று ஆகிவிட்டது. அதனால், பயப்படுவதற்கோ, சங்கடப்படுவதற்கோ ஒன்றுமில்லை. தாராளமாக எல்லோரும் அணிவகுத்து வர வேண்டும்.

18 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கட்டுப்பாடாக நடந்துகொள்ளவேண்டும். நம்முடைய போராட்டம் என்றால், பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்கமாட்டோம். போராட்டத் தின் போது கைது செய்வார்கள்; அமைதியாக நாம் செல்வோம். யாருக்கும் ஒரு சிறு சங்கடத்தைகூட - காவல்துறையினர் உள்பட - எங்களால் எந்த சங்கடமும் இருக்காது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்பதற்குத்தான் மறியல் போராட்டம்!

எனவே, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது - அதனை நடைமுறைப்படுத்துங்கள் என்கிற அழுத்தத்தைக் கொடுப்பதற் காகத்தான் போராட்டம். ஆகவே, அந்தப் போராட்ட விளக்கத்தை செய்தால், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சொன்ன ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு சீக்கிரம் வந்து விடும்.

கடந்த ஆண்டு செயல்முறைத் திட்டம் என்று - பெண்ண டிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்வு - மாட்டுக்கறி உண் ணும் விழாவினை நடத்தினோம். இந்தாண்டு ஜாதி, தீண்டாமை ஒழிப்பில், அம்பேத்கர் கருத்தையும் எடுத்துச் சொன்னார்கள். ஆகவே, அதனையும் செயல்படுத்துவதற்கு, 14 ஆம் தேதியை யொட்டி, 18 ஆம் தேதி போராட்டம் நடைபெறும்.

பழங்குடித் தோழர்களின் ஆதரவு!

எனவே, பெரியார் - அம்பேத்கர் கருத்து அதிலும் நிறை வேற்றப்படும். இளைஞர்கள் ஏராளம் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். நம்முடைய பழங்குடித் தோழர்கள் இங்கு வந்து ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களையும் நான் பாராட்டுகிறேன், அவர்களை வரவேற்கிறேன். அவர்களும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும், நம்முடைய இன இழிவைப் போக்கவேண்டும் என்று கேட்டு, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்து என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>
---------------------------------------------------------------------------------------------------------------

மே 01-15

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...