Thursday, September 29, 2016

சேலத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா?
போராடி பெற்ற திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் மோடியின் ‘‘மேக்இன் இந்தியா’’ - ஸ்டாண்டப் இந்தியா என்பதற்கான அர்த்தமா?
சேலத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி
திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள தமிழக உரிமை கோரும் போராட்ட அறிக்கை

கருநாடகத்தைப் பார்த்த பிறகாவது தமிழக அரசு செயல்படுமா?

போராடிப் போராடிப் பெற்ற சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய மோடி அரசின் திட்டத்தை எதிர்த்து வரும் அக்டோபர் 3 ஆம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகளே இல்லை; மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கக் கூடாது என்று திராவிடர் இயக்கமும், தமிழ்நாட்டிலிருந்த அத்துணை அமைப்புகளும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததுண்டு.

பிரதமர் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்


1967 இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பின், அன்று பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி 1970 இல் கலைஞர் (தி.மு.க. ஆட்சி) முதல்வராக இருந்தபோது சேலம் உருக்காலைக்கு அடிக்கல் நாட்டினார் (16.9.1970).

ஆனாலும், அதற்கு அடிக்கடி, ‘‘மூடுவோம், மூடுவோம் அல்லது தனியாருக்குத் தாரை வார்ப்போம்‘’ என்ற அச்சுறுத் தல்கள் அறிவிப்புகள் தொடர்ந்தன; லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணம் கூறப்பட்டதுண்டு. பின்னர் லாபம் கொழிக்கும் ஆலையாகவே செயல்பட்டது தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு!

உருக்காலை கேட்ட தமிழ்நாட்டிற்குப் பட்டை நாமம் சாத்துவதுபோல உருட்டாலை (எவர்சில்வர் தகடுகள்) உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையாகத்தான் இருந்தது!
தனியார் மயமாக்கிடும் மிகப்பெரிய ஆபத்து!

தனியார் மயம் கொள்கையைக் கொண்டுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, திட்டக் கமிஷனைக் கலைத்து, ‘நிதி ஆயுக்‘ என்ற ஒரு நிர்வாக அமைப்பினை அமைத்தது. அவ்வமைப்பின் பரிந்துரைப்படி - (20.9.2016 நாளிட்டது) 22 பொதுத் துறை நிறுவனங்களின் அரசு பங்குகளில் பெரும்பான்மையை தனியாருக்கு விற்று விடுவது - 51 சதவிகிதத்திற்கும் கீழே - ஏதோ பெயரளவில் பொது நிறுவனம் என்பதுபோல குறைந்த அளவு பங்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு தனியார் மயமாக்கிடுவது என்ற அறிவிப்பு மிகப்பெரிய ஆபத்து ஆகும்!
இதில் வேலை பார்க்கும் சுமார் 2000 பேர்களின் குடும்பங்கள் (ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்பட) பலரும் வேலைகளை இழக்கும் அபாயம் உடனடியாக ஏற்படக்கூடும்.
அம்பானி, அடானி - டாட்டா பிர்லாக்களின் நிறுவனங்களில் ஒரு பகுதியாக...

தனியாருக்குப் பெரும் பங்குகள் இருந்தால் அடிப்படையில் அவர்கள்தான் உண்மை ஆளுமை உடையவர்களாகி, நியமனங்களில் கூட இட ஒதுக்கீடு ‘சமூகநீதி’ குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அம்பானி, அடானி - டாட்டா பிர்லாக்களின் நிறுவனங்களில் ஒரு பகுதியாகவே சேலம் உருக்காலை என்ற உருட்டாலை ஆக்கப்பட்டு, பொதுத் துறை தன்மையை அது அறவே இழக்க நேரிடும்!

காரணம், 3000 கோடி திட்டம் இழப்பில் நடக்கிறது என்றால், நிபுணர்களைக் கொண்டு அதனை லாபத்தில் நடத்துவதற்குரிய புதிய வழிமுறை ஆக்க ரீதியாக அலசி ஆராய்வது முக்கியமே தவிர, மூடு விழா செய்வது சரியான தீர்வாகாது; தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் என்பது மத்திய அரசின் எண்ணமா?

நெய்வேலி என்.எல்.சி. ஆலை, திருவெறும்பூர் ‘பெல்’ நிறுவனம், கல்பாக்கம் அணுமின் உற்பத்தி சாலை, ஆவடி ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலை, சேலம் உருக்காலை ஆகியவை தமிழ்நாட்டின் ‘‘பஞ்ச ரத்தினங்கள்’’ என்று கூறப்படுபவை. இந்த நிறுவனங்கள் மோடி ஆட்சியில் முடக்கப்படும் ஆபத்துகள் தலைதூக்கி வருகின்றன.

நிதிப் பற்றாக்குறையினை ஈடுகட்டுவதற்காக விற்கிறார்களாம்

இலாபத்தில் நடைபெறும் பொதுத் துறை நிறுவனங்களாகிய நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள், திருச்சி பி.எச்.எல். என்ற கனரக யந்திரத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகளையும், தங்களது  நிதிப் பற்றாக்குறையினை ஈடுகட்டு வதற்காக விற்கிறோம் என்று முந்தைய மத்திய அரசும் கூற, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததும், அதன் பங்கை தமிழக அரசிடமே கொடுங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடிதம் எழுதியதும் நினைவிருக்கலாம்!
மலேசியாவின் இரட்டைக் கோபுரம், மெல்போர்ன் மைதானம் போன்றவை சேலம் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அந்த அளவு தரம் வாய்ந்த சேலம் இரும்பு உருக்காலைக்கு பிரிட்டன் அரசின் பாதுகாப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இங்குத் தயாரிக்கப்படும் இரும்புத் தகடுகளை 37 நாடுகள் விரும்பி வாங்கிக் கொண்டுள்ளன. நீண்ட கால கோரிக்கையான வெப்ப உருட்டாலை 1995 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன்கள் முதல் 25 ஆயிரம் டன்கள் வரை உற்பத்தி செய்த சாதனை சேலம் ஆலைக்கே உள்ள தனிச் சிறப்பாகும்.

‘எவர்சில்வர் தகடு’ ஆலையாக ஆக்கியதை எதிர்த்தே சேலத்தில் திராவிடர் கழகம் கண்டனக் கூட்டம், கடும் ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெற்றது; பிறகு மூடும் அபாயம் நீங்கியது!  (1995 இல் ஒருமுறையும், 2010 இல் ஒருமுறையும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுண்டு).

இலாபத்தில் சேலம் உருக்காலையை
இயங்க வைக்க முடியும்


தனியாருக்குத் தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்க இயலாது; சேலம் இரும்பாலையின் நட்டத்தைப் போக்க, நெய்வேலி, திருச்சி மத்திய நிறுவனங்களுக்குத் தேவையானவற்றை சேலம் உருக்காலையில் சிறு தொழிற்பிரிவுகளை அமைத்தாலே இலாபத்தில் அதனை இயங்க வைக்க முடியும் என்பது வல்லு நர்கள் கருத்தாகும்! ரயில்வே பெட்டிகள் தயாரிப்புப் பிரிவு, பி.எச்.எல். மூலம் மின்சார அனல் மின்சாரத் தயாரிப்புப் பிரிவு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து செய்தால், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் பயன்படும் வகையில் செய்ய முடியும்.

நட்டத்தைப் போக்க நடவடிக்கை
எடுக்க முன்வரவேண்டும்


‘மனமிருந்தால் மார்க்கமுண்டு.’ எனவே, மத்திய அரசு, இந்தத் தனியாரை எஜமானர்களாக்கும் இம்முயற்சியைக் கைவிட்டு, நட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
நமது தமிழ்நாடு அரசும், முதல்வரும் தமிழ்நாட்டு எம்.பி.,க் களும் உடனடியாக பிரதமர், கனரக இரும்புத் தொழிற்சாலை அமைச்சர் ஆகியோரைக் கண்டு இதனைத் தடுத்து நிறுத்திட ஆவன செய்யவேண்டும்.

மேக் இன் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்ற பிரதமர் மோடியின் கோஷம் தலைகீழ் அர்த்தம் கொண்டதுதானோ? அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள ‘சோஷலிஸ்ட்’ என்பதனை இந்த அரசில் நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அக்டோபர் 3 ஆம் தேதி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


இதற்கு முதல் கட்டமாக - 3.10.2016 திங்கள் அன்று சேலத்தில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும். ஒத்தக் கருத்துள்ள கட்சிகள், அமைப்புகள், உள்ளூர் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள முன்வரவேண்டும்.
சேலம் செயலாற்றும் காலம் என்று காட்டவேண்டும்; மோடி அரசு வெளியார்க்குத் தாரை வார்க்கும் அத்திட்டத்தைக் கைவிடும் வரையில் பல கட்டமாக அறப் போராட்டங்களைத் தொடர வேண்டியிருந்தால், திராவிடர் கழகம் அதனை கடமையாகக் கருதிச் செயல்படுவதற்கு ஒரு போதும் தயங்காது!
ஆயத்தமாவீர்!

ஆபத்தைத் தடுப்பீர்!!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
26.9.2016  

பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் நியமனம் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்தது - ஏன்?

பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் நியமனம்
இட ஒதுக்கீட்டைப் புறக்கணித்தது - ஏன்?
யூ.ஜி.சி.க்கு - ஜார்க்கண்ட் துணைவேந்தர் கண்டனம்
புதுடில்லி, செப்.28 பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அரசமைப¢புச் சட்டத்திற்கு எதிராக அறிவிப்பை வெளியிட்டுள்ள யுஜிசிக்கு ஜார்க்கண்ட் துணைவேந்தர் நந்தகுமார் யாதவ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிவரும்பல்கலைக்கழகமானியக்குழுஉதவிப் பேராசிரியர்கள் நியமனங்களில்மட்டுமே பிற்படுத் தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் நந்தகுமார் யாதவ் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

யுஜிசியின் அறிவிப்பானது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மீறுவதாக உள்ளது. ஜார்க்கண்ட்மத்தியப்பல்கலைக்கழகத்தில்பேரா சிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவ தற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் விளம்பர அறிவிப்பை வெளியிட தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசியக் கொள்கை

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தேசியக் கொள்கையை மாற்றுகின்ற அதிகாரத்தை யுஜிசி பெற்றுள்ளதா என்று அவருடைய கடிதத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஜார்க்கண்ட் துணைவேந்தர் நந்தகுமார் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடும்போது, மத்திய அரசின் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணிகள், பதவியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. உதவிப் பேராசிரியர்கள் அல்லது கூடுதல் பேராசிரியர்கள் அல்லது பேராசிரி யர்கள் பதவிகளில் தனித்தனியே ஒதுக்கீடு என்று கிடையாது.

தேசியக் கொள்கையின்படி, காலிப்பணியிடங்களில்  நேரடியாக நியமனங்கள் செய்யப்படல் வேண்டும். காலிப்பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யுஜிசியின் சார்பில் பணி நியமனம்குறித்து இரண்டு கடிதங்கள் பல்கலைக் கழகங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளன. 23.3.2016 அன்று ஒரு கடிதமும், 3.6.2016 அன்று மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதங்களில் யுஜிசி குறிப்பிடும்போது, தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உதவிப் பேராசிரியர்கள், கூடுதல் பேரா சிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் அனைத்து நிலைகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு, முதல் கட்ட நிலையில்மட்டும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் இதே பிரச்சினையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய முயல்கிறது என்று மத்திய அரசைக் குற்றம் சாட்டியிருந்தார்.

யுஜிசியின் மூத்த அலுவலர்கள் கூறும்போது, 2007 ஆம் ஆண்டு முதல் இதே நிலையைத்தான் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்கள்.

கடுமையான எதிர்ப்பு
யுஜிசியின் அறிவிப்பிற்கு துணைவேந்தர் பேராசிரியர் நந்தகுமார் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான யுஜிசியின் அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என்றும், உடனடியாக இதுகுறித்த வழிகாட்டுதல்களை யுஜிசிக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் இறுதி முடிவு வரும்வரை பல்கலைக்கழத்தில்கூடுதல்பேராசிரியர்கள்,பேரா சிரியர்களுக்கானகாலிப்பணியிடங்களைநிரப்புவ தற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் துணைவேந்தர் நந்தகுமார், தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, September 8, 2016

மெல்லச் சாகும் அரசுப் பள்ளிகள்




அய்யங்கோட்டை துவக்கப் பள்ளி 1941ல் துவங்கியது என்பதற்கான அடையாளம் இது. பள்ளிச் சுவரில் எப்போதோ வெள்ளை பூசப்பட்ட தூணில் இந்த எண்கள் மட்டும் கடந்த காலத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன,திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் சத்துணவுக் கூடமாக மாற்றப்பட்டுள்ள துவக்கப் பள்ளி (படங்கள் ம.ஹரிகரன்)


தமிழகத்தில் கணக்கிலேயே வராமல் எண்ணற்ற அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; பாழடைந்த கட்டிடங்களில் குழந்தைகள் படித்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், பள்ளிக்கல்வியின் தரம் மேலும் உயர வழிவகை செய்யப்படும் வகையில் நடப்பாண்டில் 5 புதியதொடக்கப்பள்ளிகள் தொடங்கப் படும் என்று விதி 110 ன் கீழ் முதல்வர்ஜெயலலிதா அறிவித்தார்.“ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி வசதி சதவீதம் 98.30 ஆகவும், நடுநிலைப்பள்ளி வசதி90சதவீதமாகவும் உள்ளது.

இதைமேலும் மேம்படுத்தும் வகையில் நடப்பு கல்வியாண்டில் 5 புதியதொடக்கப்பள்ளிகள் தொடங்கப் படும். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாகவும், 19 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளுக்கு 10 இடைநிலை ஆசிரியர்பணியிடங்களும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு 95 ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும்.

மேலும் இப்பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வகுப்பறைகள், கழிவறைகள், சமையலறைகள், குடிநீர் வசதிகள் போன்றவை ஏற் படுத்தித் தரப்படும். இதற்காக 28 கோடியே 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அவர்அறிவித்தார். பள்ளி கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர், சமையலறை, அறிவியல் ஆய்வகங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள் கலை மற்றும் கைத்தொழில் அறைகள், கணினி அறைகள், நூலக அறைகள் மற்றும் பழுது சரிபார்த்தல் போன்றவற்றிற்காக 60 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத் தப்படும்; சென்னை மாநகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் வீடுகள் இழந்த மக்களுக்குமாற்று குடியிருப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளது.

எழில் நகர்ப்பகுதியிலும் பெரும்பாலான பகுதியிலும் இரு தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும்.மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவு கையாள்வதில் புதிய தொட்டுணர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத் தப்படும் என விரிவான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.இந்த அறிவிப்புகள் தொடக்கக் கல்வியில் தன்னிறைவை பெற்றது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிகின்றது.

முதல்வர் முன்வைத்துள்ள தொடக்கக்கல்வி குறித்தஇந்த கூற்று உண்மைதானா? உண்மையில் தமிழக தொடக்கக் கல்வியின் இன்றைய நிலையை அரசு மூடி மறைக்கிறது. பள்ளிக் கல்வி குறித்த ‘மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பள்ளி கல்வியின் முழுமையான நிலை குறித்த விபரங்களை வெளிப்படைத் தன்மையோடு அரசு முன்வைக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக புள்ளி விபரங்களின் அடிப்படையில் மிகைப்படுத்தப்பட்ட மோசடி விபரங்களையே அரசு அளித்து வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

உண்மை நிலை என்ன?

தமிழகத்திலுள்ள 23,928 அரசு தொடக்கப் பள்ளிகள்; 5,053 உதவி பெறும்தொடக்கப்பள்ளிகள் மற்றும் 7,260அரசு நடுநிலைப்பள்ளிகள்; 1656 அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 37, 797 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 1,26,000 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
அதேநேரத்தில் 7130 சுயநிதி நர்சரி மற்றும்நடுநிலைப்பள்ளிகளில் 67,785 ஆசிரியர்கள் உள்ளனர் என்ற புள்ளிவிபரம் தெரிய வருகின்றது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகப்பெருமளவில் குறைந்துள்ளது. 18,000 அரசுதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 1000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. ஓராசிரியர் - ஈராசிரியர் மட்டுமே கொண்டுள்ள இப்பள்ளிகளில் எப்படி தரமான ஆரம்பக் கல்வியை கொடுக்க முடியும்? ஓராசிரியர் பள்ளியில் கற்பித்தல் நிலைமை மிகவும் பரிதாபம்.

விரயமாகும் பணி நேரம்

ஓராண்டுக்கு 220 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன. இதில்14 வகையான இலவசத் திட் டங்களை செயல்படுத்துவதற்காக கல்வித்துறை அலுவலகத்திற்கு செல்வதற்கும் அதுகுறித்த பதிவேடுகளை பராமரிக்கவும், மாதம்ஒருமுறை தலைமையாசிரியர் ஆய்வு கூட்டங்களுக்கு சென்றுவரவும், ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெயர் சேர்ப்பு, ஆடு, மாடுகள், கோழிகள் கணக்கெடுப்பு மற்றும் சமூக நல திட்டங் களை செயல்படுத்தவும் மற்றும் பள்ளியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும் என ஒரு ஆசிரியரின் பணிநேரம் முழுமையும் விரயமாகி விடுகிறது. ஒரு ஆசிரியர் மட்டுமே 5 வகுப்புகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்கும் எப்படி வகுப்பெடுக்க முடியும் என்பதற்கான விளக்கத்தையும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கலாம் என ஆசிரியர் இயக்கங் கள் விமர்சிக்கின்றன.

பாழடைந்த கட்டிடங்களில் பச்சிளங்குழந்தைகள்

அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் அடிப்படைகட்டமைப்பு வசதிகளும் மிக மோசமான நிலையிலேயே உள்ளன. மாநிலம் முழுவதும் 10,000 த்திற்கும்மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பாழடைந்து இடியும் நிலையில் கட்டிடங்களும் வகுப்பறைகளும் உள்ளன. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செங்குத்தாக சரிந்து வருவதை தடுப்பதற்காக தனியார் பள்ளிகள் போன்று ஆங்கில வழி வகுப்புகளை துவங்கி வகுப்பறைகளிலிருந்து தாய்மொழியை விரட்டும் பணியை மேற்கொண்ட பெருமையும் முதல்வர் ஜெயலலிதாவையே சேரும். ஆனாலும் அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தபாடில்லை.

ஆரம்பக்கல்வி தாய்மொழி வழிக்கல்வியாகத்தான் இருக்க வேண்டுமென்ற அறிவியல் பூர்வமான உலக நாடுகளின் நடைமுறைக்கு எதிரான இத்தகைய அணுகுமுறை எதிர்கால தலைமுறையை சுய சிந்தனை அற்றவர்களாக உருவாக்கிடவே வழிவகுக்கும்.அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கொடுப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கட்டமைப்பினையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் இதைச் செய்யாமல், இலவசத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சாதனை படைத்துவிட்டோம் என்று பேசுவதில் எவ்வித பயனும் இல்லை. 14 வகையான இலவச பொருட்கள் மற்றும்உபகரணங்களை வழங்கி வருவதால் அரசு பள்ளிகள் மேம்பட்டு விட்டனவா? மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்து விட்டதா? இது எதுவும் நிகழவில்லையே ஏன்? மாறாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும் கல்வி வணிகமும் பெருகி வருகின்றது.

மூடப்படும் அரசுப்பள்ளிகள்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால்அரசு உண்மை விபரத்தை வெளியிட மறுத்துவருகிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒற்றைப்படையில்தான் மாணவர் சேர்க்கை இருப்பதாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.



ஒரே மாவட்டத்தில் 70 பள்ளிகள் மூடல்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருஒன்றியத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து தொடக்கப் பள்ளிகள் வீதம் மொத்தம் 14 ஒன்றியத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 70 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்று அரசுப்பள்ளி ஆசிரியர்களே கூறுகின்றனர்.புதிதாக திறக்கப்பட்ட பள்ளிகள், ‘தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் என ஒவ்வொரு ஆண்டும் அரசுஅறிவிப்பு வெளியிடுகிறது. ஆனால்ஏற்கெனவே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் இன்றைய நிலையை கல்வி அதிகாரிகள் வெளிப் படையாக கூற மறுக்கின்றனர்.“திருவள்ளூர் மாவட்டம் கொல்லமதுராபுரத்தில் செயல் பட்டுவந்த தொடக்கப்பள்ளி சிலஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டதால் வேலன் கண்டிகை தொடக்கப் பள்ளிக்குத்தான் எங்கள் கிராமத்தைசேர்ந்த குழந்தைகள் செல்ல வேண்டியுள்ளது.


ஏரிக்கரை மீது இரண்டு கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். மழைக்காலத்தில் குழந்தைகளை எப்படி அனுப்ப முடியும். பெற்றோர்கள் கூடவே செல்லவும் முடியாது. ஆகவே உள்ளூரில்மீண்டும் பள்ளியை திறந்து செயல் பட வைத்தால் எங்களுக்கு பெரும் நிம்மதி” என்று அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர்.அதேபோன்று திண்டுக்கல்மாவட்டம் ஆத்தூர் தொகுதிக் குட்பட்ட அய்யங்கோட்டை தொடக்கப்பள்ளி மூடப்பட்டுவிட்டது. மேலும் அய்யங்கோட்டை புதூர் தொடக்கப்பள்ளியும் மற்றும்சிறுமலை தொடக்கப்பள்ளியும் மூடப்பட்டு விட்டன. அய்யங் கோட்டை துவக்கப்பள்ளியில் தற்போது பால்வாடி நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள அடைய கருங்குளத்தில் தனியார் மூலம் 1934ல் தொடங்கப்பட்ட பள்ளி பின்னர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது.

இப்பள்ளியை சுற்றி புதிய புதியதனியார் பள்ளிகள் திறக்கப்பட்டதாலும் ஆசிரியர் எண்ணிக்கை இப்பள்ளியில் குறைந்ததாலும் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து இந்தாண்டு 2 மாணவர்கள் மட்டுமேபயின்றதாகவும் அம்மாணவர் களும் வேறு பள்ளிக்கு மாற்றப் பட்ட நிலையில் அப்பள்ளி நடப்பாண்டு மூடப்பட்டுள்ளது என்று கருங்குளம் கிராமத்து பொதுமக்கள் கூறுகின்றனர். இப்படி கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிமுகவும்- திமுகவும் போட்டி போட்டு மூடியுள்ளன.கல்வி வணிகமயத்தை ஊக்குவிக்கவும், தனியார் கல்வி முதலாளிகளை பாதுகாக்கவும் வேண்டும்என்பதே அரசின் திட்டம்.

அந்ததிட்டத்தை மிக சரியாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஜெயலலிதா அரசு. அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு குறித்து திமுக கேள்விகேட்டால், திமுகவை சேர்ந்த கல்வி முதலாளிகளுக்கு பிரச்சனையாகி விடுமல் லவா? ஆகையால் இரண்டு கட்சிகளும் இப்பிரச்சனையில் வாய்திறப்பதில்லை என்பதே ஊரறிந்த ரகசியம் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் இயக்கத்தின் மூத்த ஆசிரியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

- நன்றி : தீக்கதிர் - 06-09-2016

Saturday, September 3, 2016

மோடியின் 70 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா உரையும்- சில கேள்விகளும்!



  மோடி 70 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றும்  போது தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சி யினரை விமர்சித்து பேசி வாக்கு வாங்கும் நிலையிலேயே அவரது பேச்சு இருந்தது.

1) மோடி:  தனக்கு முந்தைய அரசு கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது என்று கூறினார்.
விடுதலை: முந்தைய அரசுகள் என் றால் வாஜ்பாய் அரசையும் குறிப்பிடு கிறாரா?
 சுஸ்மா சுவராஜ், நிதின்கட்கரி, பிரகாஷ் ஜவ்டேகர், ஸ்மிருதி இரானி மற்றும் அருண்ஜெட்லி போன்ற மத்திய அமைச் சர்கள் மீதும் வசுந்தரா ராஜே, சிவ்ராஜ் சிங் சவுகான், ஆனந்திபென் பட்டேல், ரமன் சிங் போன்ற மாநில முதல்வர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது, விசாரனை நடைபெற்றுவருகிறது, மோடியின் மீது கூட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்காக விதிமுறைகளை மீறி சலுகைதர பரிந்துரை செய்த குற்றச்சாட்டு உள்ளது, குஜராத் பெட்ரோலியம் என்ற நிறுவனம் துவங்கி அதன் பெயரில் பல கோடி ஊழல் புரிந்த குற்றச்சாட்டை தணிக்கைத்துறை மோடி மீது கூறியுள்ளது.

2) மோ: நான் சொல்வதையே செய் வேன் செய்வதையே சொல்வேன்.
வி: எங்கே அந்த 15 லட்சம்? அனை வரது வங்கிக் கணக்கிலும் வரும் என்று கூறிய அந்த ரூ. 15 லட்சம் எங்கே? பல கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறினீர்களே கார்பரேட் நிறுவனங்களில் சுமார் 77 லட்சம் இளைஞர் கள் பணி உத்தரவாதம் இன்றி கொத்தடி மைகளாக ஒப்பந்த அடிப்படைகளில் பணிபுரிகின்றார்கள்

3) மோ: இன்று ஒரு நிமிடத்தில் 15 ரயில் டிக்கெட்டுகள் புக் செய்யபடுகின்றன
வி: கடந்த ஓராண்டில் மட்டும் ரயில் திருட்டுச் சம்பவம் 20,000 மேல் நடந்துள் ளது. நகரின் மய்யத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஒரு ரயிலில் இருந்து 6 கோடி திருடப் பட்டுள்ளது, தனி நபருக்கு ரயில் பயணத் தில் பாதுகாப்பில்லை

4) மோ:  இன்று அரசின் எல்லா மருத்துவமனைகளிலும் ஆன்லைன் ரெஜிஸ்டிரேசன் நடைபெறுகிறது
வி:  சொல்ல மறந்தவை - கடந்த ஆண்டு 4000-த்திற்கும் மேற்பட்ட கர்ப் பிணிகள் சிகிச்சை குறைபாட்டால் உயிரி ழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கர்ப்ப காலத்தில் சரியான முறையில் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரையின் படி சிகிச்சை பெற்று வந்தவர்கள்.

5)  மோ:  வருமான வரி திரும்ப பெறுவது மிகவும் எளிதாகியுள்ளது,
வி: சுமார் 60 விழுக்காடு மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் வருவாய் இழந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் வந்துவிட்டார் கள்

6) மோ: பாஸ்போர்ட் பெறுவதை நான் எளிதாக்கியுள்ளேன்.
வி: யாருக்கு? கருப்புப் பணம் பதுக்கு பவர்கள் விரைவில் தப்பிச்சென்று கொண்டு இருக்கிறார்கள்

7)  மோ: 24  மணிநேரத்திற்குள் நிறு வனங்களின் பெயர்கள் பதிவு செய்யப் படுகின்றன,
வி: சிறு குறு நிறுவனங்கள் ஆயிரக் கணக்கில் இழுத்து மூடப்பட்டுள்ளன, குடிசைத்தொழில் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்க வழியில்லாமல் திண்டாடி நிற்கின்றன.

8) மோ:  சூரிய ஒளி மின்சாரம் 116 விழுக்காடு அதிகரித்துள்ளோம்
வி: சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன் படுத்துவோர் வெறும் 7  விழுக்காடு தான் உள்ளனர் என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் சோலார் எனர்ஜி நிறுவனங்களில் 2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையை மய்யமாக வைத்து அட்டவணை ஒன்று வெளியிட்டுள்ளது. இங்கு நிறுவனங்கள் பொய் கூறுகின்றனவா? மோடி பொய் கூறுகிறாரா?

9) மோ:  முதலில் 30-35 கிலோ மீட்டர் மின்சார கேபிள்கள் பதிக்கப் பட்டன. ஆனால் தற்போது 50 கிலோ மீட்டர் மின்சார கேபிள்கள் பதியப்படு கின்றன.
வி: கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய சாலைப்பணிசெய்யும் கருவிகள் வந்து விட்டன, இதன்படி 100 கிலோ மீட்டர் டிரான்ஸ்மீட்டர் வேலைகள் நடந்திருக்க வேண்டுமே?

10) மோ:  ஒரு நாளைக்கு 70 முதல் 75 கிலோ மீட்டர் சாலைகள் போடப் பட்டன. இன்று ஒரு நாளைக்கு 100 கிலோமீட்டர் போடப்படுகிறது,
வி: இன்று நவீனகருவிகள் வந்துவிட்ட நிலையில் மேலும் அதிகரித்திருக்க வேண்டுமே ஏன் இல்லை?

11) மோ: எனது அரசு 60 கோடி எரிவாயு இணைப்புகளைத் தந்துள்ளது
வி:  இந்திய எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி கிட்டத்தட்ட செயல்படாத நிலைக்குச் சென்று விட்டது, அரசு எரிவாயு நிறுவனங்கள் ரிலையன்ஸ் மற்றும் வெளி நாட்டு பெட்ரோலிய நிறுவனங்களை நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது அதாவது இந்த எரிவாயு இணைப்பு மூலம் தனியார் முதலாளிகளுக்கு கொள்ளை லாபம் அடிக்க வழிவகை செய்துவிட்டார்.

12) மோ: 70 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கியுள்ளோம்
வி: இதனால் சாமானியனுக்கு என்ன பயன் விளைந்தது,

13)  மோ பழைய சட்டங்களை நீக்கியுள்ளோம்,
வி: சட்டங்களை நீக்கிய பிறகு தொழிற் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடக்க ஆரம்பித்து விட்டன,

14)  மோ: ஜன் தன் யோஜனாவில் 21 கோடி மக்கள் சேர்ந்துள்ளனர்
வி: ஜன் தன் யோஜனாவினால் பல கோடி மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ள தாக வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை விட்டுள்ளது.

15) மோ:  2 கோடிக்கு மேல் கழிப் பறைகள் கட்டப்பட்டுள்ளன,
வி: கழிப்பறைகள் கட்டப்பட்டன - சரிதான், அதை தூய்மைப்படுத்த என்ன வழிவகை செய்துள்ளார்.

16) மோ: 7000-த்திற்கும் அதிகமான கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப் பட்டுள்ளன.
வி: தூய்மைப்படுத்த நவீன கருவிகள் கொடுத்துள்ளீரா?

17) மோ: எல் ஈ டி விளக்குகள் மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்தியுள் ளோம்,
வி: இதற்கான வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கத்தயாரா?

18) மோ: எல் ஈ டி பல்புகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன,
வி:  இதனால் அரசுக்கு என்ன லாபம்?

19) மோ:   எங்களது நடவடிக்கை யில் விலைவாசி குறைந்துள்ளது,
வி: பச்சைப் பொய், 2013-ஆம் ஆண்டு 40 ரூபாய்க்கு விற்ற பருப்பு வகைகள் வணிக விலையேற்ற விகிதப்படி இன்று ரூ.70 இருக்கவேண்டும் ஆனால் இன்று ரூ.180-க்கு மேல் விலையேற்றம் பெற்று விற்பனை ஆகிறது,

20)  மோ:  பணவீக்கத்தை கட்டுப் படுத்த ரிசர்வ் வங்கியிடம் பேசியுள் ளோம்.
வி:  ரிசர்வ் வங்கி தலைவரான ரகுராம் ராஜனே மோடியைப் பற்றி நான் எது கூறினாலும் அது பெரும் பூகம்பத்தைக் கிளப்பும் என்று கூறியுள்ளாரே இதற்கு என்ன பதில்?

21) மோ:  விவசாயிகளின் வாழ்க் கையை மேம்படுத்தியுள்ளோம்.
வி:   மகாராஷ்டிராவில் மட்டும் பிரபல மான விவசாயிகள் தற்கொலை, இன்று கேரளாவரை பரவியுள்ளது, இதுதான் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடா?

22). மோ:  விவசாயிகளுக்கு ஹெல்த் கார்ட் கொடுத்துள்ளோம்.
வி:    தற்கொலை செய்து சாகும் விவ சாயிக்கு ஹெல்த் கார்ட் எந்த வகையில் உதவும்

23) மோ: ரயிலில் பயோ டாய் லெட் வசதி செய்து கொடுத்துள்ளோம்,
வி:   முதலில் ரயில் பயணிகளின் பாது காப்பை உறுதிசெய்யுங்கள்

24)  மோ:   முந்தைய அரசுகள் முடக்கிய திட்டங்கள் பல்வற்றை நிறைவேற்றியுள்ளோம்,
வி: திட்டங்களை நிறைவேற்றத்தானே அரசுகள் உள்ளது, இதில் விளம்பரம் ஏன்?

25) மோ: ரயில்வே திட்டங்களுக்கு 4 மாதங்களில் அனுமதி கொடுத்து விடுவோம்.
வி: இந்தியாவில் தமிழகத்தில் 50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே திட்டங்களை எப்போது முடிக்கப்போகிறீர்கள்

26)  மோ:   95 விழுக்காடு கரும்பு விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளோம்.
வி:  இதில் என்ன பெருமை? கரும் பாலைகளுக்கு கரும்பு தரும் விவசாயி களுக்கு பணப்பட்டுவாடா செய்வது என்பது தொடர் நடைமுறைதானே!

27) மோ: இன்னும் மூன்று ஆண்டு களில் 5 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு தருவோம்
வி: 2 ஆண்டுகளுக்கு 60 கோடி எரிவாயு இணைப்பு என்று கூறிவிட்டு அடுத்த 3 ஆண்டுகளில் வெறும் 5 கோடி என்று கூறுவது முரணாக உள்ளது.

 28) மோ:   கடைசி குடிமகனுக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என் பதில் நாங்கள் உறுதியாக இருக்கி றோம்.
வி: சிறுபான்மையினரும், தலித்துகளும் இந்தியக் குடிமகன்கள் இல்லையா?

29) மோ: ஜாதி மதத்தின் பெயரால் யாரையும் இழிவு செய்யவேண்டாம்
 வி: இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த அய்தராபாத் சட்ட மன்ற உறுப்பினர் தலித்துகளை கொலை செய்வேன் என்று கூறினாரே அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மோடி அவர்களே!

30) மோ: நாட்டை சுகாதாரச் சீர் கேடில்லாத நாடாக மாற்றிவிட்டேன்

வி: கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருநகரங்களில் டெங்குவினால் இறந்த வர்களின் எண்ணிக்கை 3000 த்தை தாண்டுகிறது,  கடந்த அய்ந்து ஆண்டு களாக நமது நாட்டை விட்டு ஓடிப்போன போலியோ மீண்டும் வரத்தொடங்கி யுள்ளது, காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்து விட்டதாக மார்ச் 24 ஆம் தேதி சர்வதேச காசநோய் ஒழிப்பு தினத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO)  கவலை தெரிவித்துள்ளது.

- சரவணா ராஜேந்திரன்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...