Friday, January 28, 2011

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே...


அன்பார்ந்த விடுதலை வாசகர்களே...

வணக்கம்.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாகவும்,  இணையத்தில் வெளிவந்த முதல் தமிழ் நாளேடாகவும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் போர்வாளாகவும் திகழும்  விடுதலை இணைய தளம் தற்பொழுது பல மாற்றங்களுடன் புதுப்பொலிவுடன் வெளிவருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தரும் ஆதரவின் மூலமாக அறிகிறோம்.

விரைவில், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், விடுதலை இணைய வாசகர்களுக்காக மட்டுமே தொடர் கட்டுரை எழுத இருக்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகிறோம்.

அதேபோல, விடுதலை நாளேட்டில் வரும் செய்திகள் தவிர்த்து, உடனுக்குடன் செய்திகளை நாம் வழங்கி வருகின்றோம்.

மேலும் பல தகவல்களுடன், புதிய கட்டுரை, படைப்புகளுடன் விடுதலை இணைய தளம் வெளிவருவதற்கு உங்களுடைய பங்களிப்பும் தேவை.
இணைய பதிப்பில் உங்களுடைய கவிதை, கட்டுரை,  பகுத்தறிவு தகவல்கள் வெளிவருவதற்கு  ஏதுவாக தங்களின் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
புதிய செய்திகளையும் உடனுக்குடன் newseditor@viduthalai.in என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விடுதலை கருவிப்பட்டை வழங்கியிருந்தோம். இப்போது 2011 பெரியார் நாள்காட்டியை உங்கள்து கணினியின் Desktop-இல் Wall Paper-ஆக பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம்.

பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டும் கீழ்க்காணுமாறு ’பதிவிறக்குக’ என்னும் பொத்தானின் கீழ் பதிவுப்பட்டை, நாள்காட்டி ஆகியவற்றுக்கான இணைப்பு இருக்கும். அதைச் சொடுக்குவதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இவ்வாறு தொடர்ந்து புதுமைகளைப் புகுத்துவதற்கு ஏதுவாக, உங்களுக்கென்று விடுதலை இணையத்தில் தனிக் கணக்கினை தொடங்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றோம்.

இனிவரும் நாள்களில், விடுதலை இணையத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே விடுதலை மின்னிதழை (இ-பேப்பர்) படிக்கக் கூடிய வகையில் மாற்றம் செய்யவிருக்கின்றோம். அனைவரும் விடுதலையை படிக்கலாம் என்றாலும், பதிவு செய்தவர்களே அதிகம் பயன்பெற வாய்ப்புகள் உண்டு.

ஆகவே, தாங்கள் உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவு செய்வதற்கோ, படிப்பதற்கோ எவ்விதக் கட்டணமுமின்றி எப்பொழுதும்போல் தொடர்ந்து விடுதலை இணையம் செயல்படும்.

பதிவு செய்ய வ்விணைப்பைச் சொடுக்கவும்.

நன்றி!
விடுதலை இணையக் குழுவினர்

Thursday, January 27, 2011

பொன்மொழிகள் - விடுதலை


1: மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை. (விடுதலை, 10.10.1973)

2: பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மை யினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.(விடுதலை, 30.12.1972)

3: தொழிலாளர்களுக்குச் சிறிது கூலி உயர்வு கொடுப்பதைவிட அவர்களுடைய பிள்ளை குட்டிகளுக்குக் கல்வி, சம்பளம் இல்லாமல் படிக்க வசதி வேண்டும்; சோறு போடவேண்டும்; மற்ற வசதிகள் எல்லாம் செய்துதரவேண்டும்._ (விடுதலை, 23.2.1960)

1: பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம். (விடுதலை, 24.2.1954)

2: கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணர முடியாதவனுக்குத் தலைவிதி._(86 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் விடுதலை மலர்)

3: தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.(விடுதலை, 20.3.1950)

1: சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது.(விடுதலை,5.4.1961)

2: பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.(விடுதலை,20.9.1964)

3: நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும்.(விடுதலை,3.10.1958)

1: ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.(விடுதலை,18.1.1951)

2: நமக்குக் கேடும், இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா?(விடுதலை,17.10.1965)

3: மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.(விடுதலை,26.3.1951)

1: பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பதைத் தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே-யில்லை. இந்த மூன்று குணமும் மனிதனுக்குக் கூடாது என்றுதான் சொல்லவேண்டும்.(விடுதலை,17.11.1958)

2: நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது.(குடிஅரசு,13.4.1930)

3: கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில் லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணர முடி யாதவனுக்குத் தலைவிதி.(86 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் மலர்)

1: தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக்கொண்டு கரையேற நினைப்பதுபோல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளி களும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.(விடுதலை, 12.7.1972)

2: மக்களை முட்டாள்களாக்கப் பசனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.(விடுதலை, 5.1.1972)

3: ஆங்கிலத்தில் நாணயத்துடன், நேர்மையுடன் நடந்துகொள்வதே சிறந்த கொள்கை என்ற பழமொழி உண்டு. அதாவது நாணயம் என்ற சொல் யோக்கியதையினால் வளர்ச்சி-யடையும் ஒரு திட்டத்தைக் குறிப்பதாகும்.(விடுதலை, 23.10.1964)

1: பிறவியில் மனிதன் அயோக்கியனல் லன்; அறிவற்றவனல்லன்; ஒழுக்கக் கேடான-வனல்லன்; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்கவழக்கங்களால் தான் மனிதன் அயோக்கியனாகவும், மடையனா-கவும் ஆகின்றான்.(விடுதலை, 
11.11.1968)

2: நாம் பார்ப்பானைப் பிராமணன் என்று சொன்னால் நாம் நம்மைச் சூத்திரன் என்று ஒப்புக்கொள்கிறோம் என்பதுதான் பொருள். இனி நமது மக்கள் பார்ப்பானைப் பார்ப்பான் என்றே அழைக்கவேண்டும்.(குடிஅரசு, 2.2.1971)

3: ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ?(விடுதலை, 21.3.1954)

1:சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் 
தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும்.- (விடுதலை, 5.8.1963)

கலைஞர் தந்த அற்புத கருத்தோவியக் காவியம் இளைஞன்


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் மிக அற்புதமான கலை திரை ஓவியம் - கொள்கை லட்சிங்களை இளைஞர்களுக்குப் போதிக்கும் உணர்ச்சி பூர்வமான காவியம் ஒன்றை கலைஞரின் கைவண்ணம் - படைப்பாற்றல் மூலம் கண்டு மற்ற நண்பர்கள் தொல். திருமாவளன் (உடன்பார்த்தவர்களை) போலவே எல்லையற்ற மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அடைந்தேன்.

கலைஞரின் 75 ஆவது திரைக் காவியம்

நமது திராவிடர் பேரியக்கக் குடும்பத்தில் இன்றைய இணையற்ற தலைவரான கலைஞர் தம் 75 ஆவது திரைக் காவியம் இளைஞன் என்ற அந்தப் படம்!

புரட்சிகரமான சிந்தனைக்கு உலைக்கூடமாக ஊதி ஊதி உந்தப்படும் இளைஞன் கார்த்தி என்ற கதாபாத்திரம்தான் கதையின் முக்கியக் கருவி.

ஒரு கப்பல் கம்பெனி அதிபர் தெய்வநாயகம் (சரத்பாபு) நல்ல இதயம் படைத்தவர். அவரது ஒரே மகன் ராஜநாயகம் (சுமன்) ஒரு மனித இரக்கமற்ற கொடுமையாளன்; ஆடம் பரவாதி. அவனை ஆட்டிப்படைக்கும் ஒரு சாகசக்காரி சோனா (நமீதா) அந்தக் குடும்பத்திலும் ஒரு படித்த பண்பு மிகுந்த (ராஜ நாயகத்தின்) தங்கை (மீரா ஜாஸ்மின்) நியாயத்தின் பக்கம் நிற்கும் ஒரு பெண்.

கப்பல் கட்டும் தளத்தை தொழிலாளர்களுக்கு வாழ்வளிப்பதற்குப் பதிலாக, பணம் சம்பாதிக்கும் பேராசை காரணமாக, இந்த ராஜநாயகம் தன் தந்தையையே உதா சீனப்படுத்தி கொடுமையான முதலாளியாகி, தொழிலாளர்களைக் கொத்தடிமைகளை விடக் கேவலமாக நடத்தி வேலை வாங்குகிறார்; 8 மணி நேரம் 12 மணி நேர வேலையாகி, அது 16 மணி நேரமாகவும் ஆக்கிட உத்தரவிடுகிறான் வன்னெஞ்சினன் ஆனான்.

பழைய கால சமூகத்தின் முதலாளிகளின் கோரமுகம் இங்கே பளிச்சிடுகிறது.

கார்த்தியின் தந்தை (நாசர்) ஓர் ஏழைத் தொழிலாளி; அவனது தாயார் (குஷ்பு) அந்த ஏழையின் வாழ்வில் உள்ள ஒரு ஓட்டைக் குடிசை வாழ் ஒளிவிளக்கு! - அருமையான தாய்.

வறுமையை சுவாசிக்கும் அக் குடும்பத்தின் நிலையை அப்பட்ட மாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. வறுமை வாட்டினாலும் அத்தயை குடும்பங்களில் வாஞ்சைக்குப் பஞ்ச மேது? பாசத்துடன் உள்ள கார்த்தியின் குடும்பத்தில், பணிச்சுமை, அடி உதை சித்தரவதைக் கொடுமையின் வலியை மறக்க தினமும் குடித்துவிட்டு வரும் அந்த மூத்த தொழிலாளி தனது மனைவியை அடிக்கிறார்; (உழைப்பின் வலியையும் அவமானத்தையும் மறைக்க குடிதான் அந்த தொழிலாளி வர்க்கத்திற்கு மருந்து ஆகிறது!) முதலாளியின் கொடுமைகளைக் கொட்ட, அத்தகைய குடும்பங்களில் தயார் நிலை கொத்தடிமை, எதிர்த்து அடிக்கத் தெரியாத மனைவிகள்தானே - அது போன்ற ஒரு மனைவியாகத்தான் குஷ்பு இருக்கிறார்.

அந்தத் தாயும், தாய்-தந்தை படும் கஷ்டம் கார்த்தியை சிறுக சிறுகச் சிந்திக்கத் துண்டுகிறது. வெளிநாட்டு என்சினீயர் செய்யவேண்டிய திறன் படைத்த முக்கிய பணி - கொடி மரத்தைத் தூக்கி சரியான இடத்தில் வைக்கும் பணியை - அனுபவத்தில் முதிர்ந்த (கார்த்தியின்) தந்தையை செய்ய வைக்கிறான் ராஜநாயகம்; அந்த இடத்தில் முதலாளித்துவக் கொடுமை எப்படிப்பட்டது என்பதை கண்கள் கசிந்துருகி கண்ணீர் விடும் நிலையில், செய்தமைக்குப் பாராட்டுக்குப் பதில் கடுமையான தாக்குதல் அந்தத் தொழிலாளியின் மீது. ஏன் தெரியுமா? இந்தத் திறமையான பணி வெற்றியில் அவனுக்கு திமிர் ஏறிவிடக் கூடுமாம்! அதை ஆரம்பத்திலேயே அடக்கி ஒடுக்கி வைத்தால்தான் மற்ற தொழிலாளிகளும் வாயற்ற புழுப் பூச்சிகளாக இருப்பார்கள் என நினைத்து, அடித்துத் துவைக்க அவர் செத்துவிடுகிறார்!

சுயமரியாதைச் சூரியன்

கஞ்சியில் புழு, பூச்சிகள்- குடிக்க மறுத்தால் கடும் அடி உதை கங்காணி களால். முன்காலத் தேயிலைத் தோட்டத் துக் கங்காணிகளையே நல்லவர்களாக்கி விடும் அளவுக்கு கொடுமைக்காரர்களை, தொழிலாளர் கூட்டத்தினை ஏவுகணை களாக்கி, தாதாக்கள் போல அவர்கள், அத்தொழிலாளிகளை ஆலையிட்ட கரும்பாக பிழிந்து விடுகின்றனர். அடக்கு முறைகளும், ஒடுக்கு முறைகளும் எல்லோரையும் என்றென்றும் அடி பணிந்தே கிடக்க வைக்காது; அந்த இருளிலும் சுயமரியாதைச் சூரியன் விடியலைத்தர உதித்தே தீருவது இயற்கை விதிதானே!

அதன்படி இளம் தொழிலாளியாக கப்பல் கட்டச் சேர்ந்த கார்க்கி, கொடுமை கண்டு குமுறுகிறான் ; கைவல்லம் (டெல்லி கணேஷ்) போன்ற பாத்திரங்கள், இன்னும் இவர் போன்ற கொடுமையில் குமுறி அழுது காலம் கனியக் காத்திருக்கும் தொழிலாளியை மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக விழிப்புணர்வுக் கதிரொளி பரவி காரிருளை விரட்டத் துவங்குகிறது.

புரட்சிதான் ஒரே வழி

இளைஞர்கள் என்ன செய்வது? எப்படி புரட்சிக்குப் பூபாளம் பாடுவது? ஆயுதப் புரட்சிதான் ஒரே இறுதி வழி, தகர்ப்போம். செய் அல்லது செத்துமடி என்பதாக முடிவு செய்து ஒரு இரகசியமாகக் குமுறும் ஒரு தொழிலாளர் பட்டாளத்தினைச் சேர்ந்த வீரர்கள் பற்றிக் கேள்வியுற்று அன்னை - மார்க்சிம் கார்க்கிய தாய் காவியம் போல், நல் அறிவுரை கூறி - உயிர் பலிகளைக் கொடுத்து இரத்த ஆறு ஓடவிட்டு, இதை சுடுகாடாக்குவதனால் எந்தப் பலனும் ஏற்படாது.

ஆயுதப் போர் இப்போது பலன் தராது என்று அறிவுரை கூறி, குழி தோண்டி பீரங்கிகளைப் புதைத்து வைக்கச் செய்து, தொழிலாளிகளால் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, உணர்வு பூர்வ ஒற்றுமையைக் கட்டி, ஒரு புயலை மய்யம் கொள்ளச் செய்கிறார் அவனை. அந்தப் புயலுக்கு (ராஜநாயகத்தின் தங்கையும் பயன்படுகிறார்) பூவொன்று புயலுக்குத் துணையாக நிற்கிறது!

ஆணவம், அதிகாரம் பயன்படாத நேரத்தில் முதலாளி வர்க்கத்திற்குப் பயன்படும் ஆயுதம் நயவஞ்சக நர்த்தனம் தானே! அதையே ஒரு நாடகமாக்கி அரங்கேற்றுகிறார் ராஜநாயகம்.


அப்பாவி தொழிலாளி வர்க்கம், கார்த்தி - தாய் உட்பட அவர்களை ஜாலக்காரியின் கூற்றை உண்மை என்று நம்பி, உழைப்பை, உற்சாகத்தில் இரவு பகல் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது தனது கப்பலை குறித்த காலத்திற்குள் முடித்துத் தர கடும் உழைப்பை, வியர்வையை ரத்தம் சிந்தி தருகின்றனர்.

பிறகுதான் புரிகிறது அந்த சிரித்திட்ட ஓநாய் சைவமாகவில்லை; வேஷம் போட்டு, சூழ்ச்சிப் பொறியை கண்ணிவெடியாக்கி சிக்க வைத்தது என்பது. அப்போது இந்தத் தாய் அந்த மகனுக்கும் தொழி லாளர்களுக்கும் இனி இதோபதேசம் பயன்படாது. எடு கருவியை தொடு போரை எனக் கூறி போராட்டம் வெடித் துக் கிளம்பி தொழிலாளர்களின் வெற்றி யால் சூழ்ச்சி முறியடிக்கப் படுகிறது!

கொடுமைக்காரர் ராஜநாயகம் என்ற நல்ல பாம்பு - சாகடிக்கப்படுகிறது. அதன் கோர நஞ்சுக்கு அவன் தந்தையே கூட இரையானவர்தானே!

பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் கூடிடும் கப்பல் கட்டும் தளம்; கொடுமை கோலோச்சிய தளம் அது என்பதை சித்திரிப்பது; சண்டைகள் - குதிரைகளின் குளம்படிச் சத்தமும் கோர ஒலிகளும், மனித உயிர்கள் புழு பூச்சிக் களாக ஆக்கிடுவது போன்ற காட்சிகள், ஆங்கிலப் படத்தை நாம் பார்க்கிறோமோ என்ற உணர்வைத்தான் உருவாக்குகிறது. (Lawrence of Arabia) லாரன்ஸ் ஆஃப் அராபியா படம் பார்த்துள்ளேன். பல படங்களின் காட்சிகளை வெல்லுவதாக அமைந்திருக்கும் இப்படக் காட்சி, இயக்குநர் முதலியவர்களின் திறமை தான். (கவிஞர் வாலி இது பென்ஹர் படம் போல எடுக்கப்பட்டுள்ளது என்றார்)

நறுக்குத் தெறிக்கும் வசனங்கள்

கலைஞர் அமைத்த காட்சிகள் - கதையமைப்பு - பேச்சுகள் - எல்லாம் - வசனங்கள் நறுக்குத் தெறித்தவைகளாக - நகைச்சுவை மின்னல்களைக் கொண்டதாக உள்ளன! நாசர் தன் மனைவியை (குஷ்பு) அறைந்து 32 பல்லையும் பேர்த்துடுவேன் என்றவுடன், அமைதியாக குஷ்பு எனக்கு 32 இல்லையே1 பல் முன்னேயே விழுந்துவிட்டது. 31 தாங்க இருக்குது என்ற போது நம்மை அறியாமல் சிரிக்கிறோம்.

பா.விஜய் மூலம் கனல் தெறிக்கும் வசனங்கள், பழைய மனோகராவை நினைவூட்டு கின்றன! தமிழன் அடிமையாக மாட்டான் - சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியுமா - மானமும் அறிவும்தான் எங்களுக்கு உயிரினும் முக்கியம் என்பதை வலியுறுத்தும்போது (இதே கருத்து பாடல்களிலும், நீயே, நானே என்று கூட்டு முயற்சி எழுச்சிப்பாடல் நரம்புகளைப் புடைக்க வைக்கின்றன.)

நீ என்ன பத்து தலை இராவணன் என்ற நினைப்போ என்று ராஜநாயகம் கேட்கும்போது, அதைச் சொல்லி நீ பெருமை தேடிக் கொள்ள முயல் கிறாயோ? என்று திருப்பிக் கேட்டு இராவணனின் பெருமையை தனது வசனத்தில் பளிச்சிடச் செய்கிறார் மானமிகு சுயமரியாதைக்காரர் நமது முதல்வர் கலைஞர்!

காட்சிகள் மிகவும் பிரம்மாண்ட மானதாகவும், விறுவிறுப்பும் வேகமாக வும் ஓடுகின்றன. இடைவேளைக்குப் பின் மேலும் விரைவாகச் செல்கின்றன.

நகைச்சுவைக் காட்சிகள்

நகைச்சுவைக் காட்சிகள் வடிவேலு, முத்திரையுடன் உள்ளன. குறிப்பாக அவர் கனவுக் காட்சியில் வர்ணிக்கும் முறை நினைத்தாலே சிரிப்பு பொங்கு கின்றது. கருணாஸ், மற்றும் மணி வண்ணன், சரத்பாபு, தியாகு, டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன் , வில்லன் ராஜேந்திரன் முதல் நடிகைகள் மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன்,நமீதா ஆகியவர்களின் நடிப்பு வரை படத்திற்கு சிறப்பூட்டுகிறது.

வித்தகக் கவிஞர் என்று கலைஞர் அவர்களால் பட்டம் சூட்டப்பட்ட வீரவசனம் பேசி துடிப்புடன் கலை ஞரின் வசனங்களை முழங்கி இளைஞனாக ஆக்கிக் காட்டியுள்ள - பா. விஜய் ஆற்றல் பளிச்சிடுகின்றது. நடிப்பாலும் வெற்றி பெற்றுள்ளார்!

இளைஞர்கள் இப்படத்தைப் பார்த்தால் நல்லதொரு லட்சிய உணர் வினைப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

கலை மக்களுக்கே!

கலை கலைக்காக என்பதை மாற்றியவர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர். கலை மக்களுக்காக, சமுதாயத்தின் எழுச்சிக்காக, ஏற்றத்திற்காக, மாற்றத்திற்காக என்ற மகத்தான செய்தி (Message இளைஞன் படத்தின் மூலம் இந்த 87 வயது இளை ஞரால் விசை ஒடிந்த தேகத்தில் வன்மை ஏற்படுத்தி, வீழ்ச்சியுள்ள தமிழகத்தை எழுச்சி பெறச் செய்யும் அற்புதமான கலைப் படைப்பு -அருமையான சாதனை!

மார்ட்டின் பிச்சர்ஸின் இந்தப் படத்தை குடும்பத்துடன் கண்டு மகிழலாம். ஆபாசமோ, அருவருப்போ, முகம் சுளிக்கும் காட்சிகளோ இடம் பெறாத ஒரு நல்ல திரைப்படம். இளைஞர்கள் நல்ல செய்தியோடு திரும்புவர் என்பது உறுதி.

- கி. வீரமணி - "விடுதலை" 20-1-2011


  • பெண் சாமியார் சாத்வி பிராச்சியின் கொலைவெறி பேச்சு
  • முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்
  • கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?
  • இன்னும் எத்தனை இளவரசன்கள் தேவை?
  • அறிவோம் சட்டம் (1) : தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்
  • தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?
  • யோகா - மூச்சுப் பயிற்சி - கி. வீரமணி
  • சூத்திரர் வரிப் பணம் பிராமண மொழிக்கா?
  • விடுதலைப்புலிகள்மீது தொடர்ந்து பழி சுமத்தி வருபவர் செல்வி ஜெ. ஜெயலலிதா
  • Saturday, January 8, 2011

    மணலியாரின்-மனந்திறந்த-அறிக்கை

    02.07.1973 இல் கரூர் மாவட்டத்தில் மாலை 7 மணி அளவில் கரூர் சின்னத் தெருவில் ஆச்சிக்காற்று என்றழைக்கப்படும் ஆ.பழனிமுத்து அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் கார் நிதி வழங்கும் கூட்டம் நடைபெற்றது. நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக என்னை அழைத்திருந்தார்கள்.

    கரூர் வட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.550 வழங்கினார்கள். இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    04.07.1973 - இல் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர். பண்டரிநாதன் அவர்களின் பேத்தி ஜீவா என்கிற ஆண்டாளுக்கும், நாகை எஸ்.கே.டி. சௌந்தர்ராஜுலு அவர்களின் மகன் இராதா கிருட்டிணனுக்கும், சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவிற்கு, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தலைமை தாங்கினார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    விழாவில் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த மாண்புமிகு ராசாராம், எம்.எல்.சி., சென்னைப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி. நடராசன், தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.வி.சிட்டிபாபு ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள், விழாவிற்கு ஏராளமான தி.மு.க. தொண்டர்களும், தி.க. தொண்டர்களும், பொதுமக்களும் வந்திருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவின் நிறைவில் திரு. பண்டரிநாதன் அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்கள்.

    தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது. அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம். கல்யாண சுந்தரத்துக்கும், தமிழக சட்டமன்ற உறுப்-பினராக இருந்த ஏ.கே. சுப்பையா அவர்-களுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்கள். திரு. சுப்பையா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக கோட்டூரிலிருந்து தேர்ந்-தெடுக்கப்--பட்டவர் ஆவார். இது குறித்த நன்றியினை 06.07.1973 அன்று விடுதலையில் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. மணலி கந்தசாமி அவர்களின் பெயரால் மணலியாரின் மனந்திறந்த அறிக்கை என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினேன், அதை அப்படியே தருகிறேன்.

    (விடுதலை 06.07.1973.)

    தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கியத் தூண்களில் முதல்வரான திரு. மணலி கந்தசாமியும், சட்டமன்றத்தில் பல தடவை உறுப்பினராக இருந்த திரு.ஏ.கே. சுப்பையாவும் சேர்ந்து விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்-நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகள் எப்படி-யெல்லாம் திசைமாறி, கொள்கையைக் காற்றில்-விட்ட நிர்வாணமான சுய நல அடிப்படையில் செயலாற்றி வருகின்றன என்பதை வெகு-தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளனர்!

    வேதனைக் குரலான அவ்வறிக்கையில், தங்களது கொள்கை உணர்வையும், இன்றைய அக்கட்சியின் போக்கையும், அதனைச் சுவாதீனப்படுத்திக்கொண்ட கல்யாணசுந்தரங்களின் காட்டுதர்பார்களையும், அரிதாரம் தடவுவோரிடம் அரசியல் விளக்கம் பெறும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள பரிதாபம்பற்றியும் மிகவும் நன்றாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

    அவ்விருவரது அறிக்கையில் அவர்களுக்-குள்ள லட்சிய நோக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நாணயமானவர்களுக்கு - நல்லவர்களுக்கு அதில் இடமில்லை என்பதை வெகு நாசூக்காக அவர்கள் எக்ஸ்ரே படத்தில் எடுத்துக்காட்டுவது போல் எடுத்துக்-காட்டியுள்ளனர்! குருட்டுத்தனமான வகையில் தி.மு.க. எதிர்ப்பையே தமது உடனடிக் குறிக்கோளாகக் கொண்டுள்ள, கல்யாண-சுந்தரங்களின் இன்றைய போக்குக்கு என்ன உள்ளாந்திரமான காரணம் என்பதைப் புட்டு புட்டு வைத்துவிட்டது அவ்விருவரது அறிக்கை.

    அண்ணாவுக்குப்பின் கருணாநிதி முதலமைச்சர் ஆனவுடன் தோழர் எம். கல்யாண சுந்தரம் தம் மணிவிழாவைக் கொண்டாடி, கருணாநிதி கையாலேயே கார் சாவியையும், பண முடிப்பையும் பெற்றார். அதற்குப் பின்பும் அவரோடு கல்யாணசுந்தரம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு, தனக்கு முதல் அமைச்சரிடம் பெரும் சொல்வாக்கு இருப்பதாகக் காட்சி அளித்துக் கொண்டு இருந்தார். இது, அரசியல் கண்ணோட்டமில்லாத சுயநலம் மேலோங்கி நிற்கும் பாதையாகும். இந்த முயற்சியில் கல்யாணசுந்தரத்தால் வெற்றிபெற முடிய-வில்லை. அவரது விளையாட்டுக்கு முதல் அமைச்சர் கருவியாக மறுத்துவிட்டார்.

    இதன் விளைவாக கல்யாணசுந்தரம், தி.மு.க. எதிர்ப்பு அணி உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியது பலருக்குத் தெரியும். இதன் காரண-மாக, அவர் குருட்டுத்தனமாக தி.மு.க.எதிர்ப்பு இயக்கத்துக்குக் கட்சியைப் பலியாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை தி.மு.க.வை ஒழிப்பதே கட்சியின் பிரதானக் கொள்கை என்று கட்சியைத் திருப்பிவிட்டார்.

    எம்.ஜி.ஆர்

    கல்யாண சுந்தரம்

    மணலி கந்தசாமி

    காம்ரேட் திரு. கல்யாண சுந்தரம் ஏன் திசை திருப்பினார் என்ற ரகசியம் நாட்டு மக்களுக்கு - அக்கட்சியிலுள்ள அடிமட்ட அப்பாவித் தொண்டர்களுக்கு இப்போதாவது விளங்கும் என்று நினைக்கிறோம். திரு. மணலியார் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மேலும் சில முக்கியமான குறிப்புகள் தமிழ்-நாட்டில் எப்படிப்பட்ட அரசியல் சூன்யங்கள் மிகப் பெரிய தலைவர்களாக்கப்பட்டுள்ளனர் என்பதை மிக நன்றாக மக்களுக்கு விளக்குகின்றன.

    1. தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது, அதன் தன்மையை நிதானிக்காமல் கொள்கையற்ற பின்னணிப் படையாக அவர்களது கட்சி திருப்பிவிடப்பட்டது.

    2. கொள்கையற்ற எம்.ஜி.ஆரின் சினிமா செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பின்பற்றும் கூட்டமாகக் கட்சி செயல்படும் நிலை உள்ளது.

    3. தமிழ்நாட்டு அரசியலில் இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளும், புரட்சித் தலைவர் பின்னால் கொடிபிடித்துக் கொண்டு நிற்பது வேடிக்கையானதும், பாட்டாளி வர்க்க அரசியல் கட்சி எந்த அளவுக்குச் சீரழிவுப் பாதையில் செல்கிறது என்பதற்கு எடுத்துக்-காட்டுமாகும்.

    4. தி.மு.க. விலிருந்து வெளியேறியவர்களை எல்லாம் ஜனநாயகத்துக்குப் போராடும் சக்திகளாக நாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது. இந்தக் கூட்டம், எம்.ஜி. ஆரின் சினிமா செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க. எதிர்ப்பு எழுச்சியை உள்ளடக்கமாக்கிக் கொண்டு செயல்பட நினைக்கிறது. இது வெற்றி பெறுவது தமிழக அரசியலில் பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

    5. தோழர் கல்யாண சுந்தரம் சினிமா நடிகர் கட்சியை ஆதரிப்பதன் நோக்கம், தேர்தலில் அ.தி.மு.க. மந்திரிசபை அமைக்கும், அதில் தானும் ஒரு மந்திரியாகலாம் என்ற நினைப்பே!

    இவர் குறிப்பிட்டுள்ள அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மையான சங்கதிகள் என்பதைக் கூர்ந்து நோக்கி வரும் தமிழகத்து அரசியல் பார்வையாளர்களும், நோக்கர்களும் மிகவும் தெளிவாக அறிவார்கள்!

    மார்க்சை, ஏஞ்செல்சை, லெனினை, டிராட்ஸ்கியை, ஸ்டாலினை, மாசே துங்கை, புரட்சித் தலைவர் என்று சொன்ன இந்நாட்டுக் கம்யூனிஸ்டுகள், ஒரு எக்ஸ்ட்ரா சினிமா நடிகையை அழைத்துக் கொண்டு கலாச்சாரத் தூது என்று ரஷ்யாவுக்குப்போகும் பவுடர் பூசும் ஒருவரை புரட்சித் தலைவர் என்று கூறுவதற்கு உண்மையில் வெட்கப்பட வேண்டாமா? இதற்கு அடிப்படை, அசல் ஒன்னாம் நம்பர் வடிகட்டிய சுயநலம், பதவி ஆசை என்பதைத் தவிர வேறு என்ன? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தி.மு.க. அரசு பாதுகாவலனாக இருப்பது உயர் ஜாதிக்கு அடுத்த ஜாதியாகத் தன்னைக் கருதிக் கொண்டுள்ள கூட்டத்தைச் சார்ந்தவர்களில் ஒருவரான திரு. கல்யாண சுந்தரத்தால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பகிரங்கமாக இதனை ஒப்புக்-கொள்வார்களோ என்னவோ, குறைந்தபட்சம் தனித்த உரையாடலின் போதாவது மறுக்க-மாட்டார்கள்!

    பட்டக்காரர்களையும், பெரும் நிலப் பிரபுக்களையும் விவசாயிகளாக்கப் பார்த்து அவர்களை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் கல்யாணசுந்தரங்களுக்கு ஏழை, எளிய, பாட்டாளி மக்களுக்கு லாபத்தில் பங்கு, நிருவாகத்தில் உரிமை தந்து மனைப்-பட்டாக்கள், நிலப்பட்டாக்களைத் தி.மு.க. அரசு தந்தால் அதை ஏற்று, அதை முற்போக்கு அரசு என்று கூற மனம் வருமா? கம்யூனிஸ்டுக் கட்சியில் நீண்ட காலம் குமுறிக் கொண்டிருந்த எரிமலை இன்று வெடித்துவிட்டது!

    புதுவை ஆட்சியில் ஊழல் இல்லை; அங்கு பேரணி, அர்த்தால் தேவையில்லை என்று இரட்டை அளவுகோல் தூக்கிய கல்யாண-சுந்தரங்கள், தாம் மந்திரியாக இல்லாமல், சுப்பையாக்கள் மட்டும் மந்திரிகளாகப் பவனி வருவதா என்ற நினைப்பில் காழ்ப்புணர்ச்சியின் எல்லைக்குச் சென்று தனக்குள்ள மெஜாரிட்டிக் கொடுவாள் மூலம், அவரது பதவியைக் காலி செய்து மாஜியாக்கி விட்டுத்தான் அமர்ந்தார்கள்.

    பிரிந்தவர்கள் எத்தனைபேர் என்பது முக்கியம் அல்ல! கொள்கை உணர்வுக்கும் இந்நாட்டுக் கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கும் வெகுதூரம். ஜாதி நலம், பதவி ஆசை, சுயநலம் இவைதான் அவர்களது லட்சியக்குறியாக இருந்து வருகிறது என்று நாம் கூறி வந்ததற்கு, அக்கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து உண்மையாகவே பலவிதக் கஷ்டங்-களை ஏற்று, அவரது தலைக்குப் பல ஆயிரம் என்று காங்கிரஸ் அரசால் விலை வைக்கப்-பட்ட முக்கியஸ்தர் ஒருவரும், மற்ற சக எம்.எல்.-ஏக்களும் இப்படி அறிக்கை விடுத்திருப்பது, கம்யூனிஸ்டுக் கட்சிகள் எவ்வளவு சோரம்-போனவைகளாகி விட்டன என்பதையே, நாட்டுக்குத் தெளிவாய் உணர்த்துகிறது!

    - நினைவுகள் நீளும்..

    Thursday, January 6, 2011

    அண்ணாவை பழைய துணிக்கடைக்கு அழைத்துச் சென்றார் பெரியார் அண்ணா நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

    சென்னை, ஜன.1- பழைய துணிக்கடைக்கு கோட் வாங்க அண்ணாவை அழைத்துச்சென்றார் பெரியார் என்ற வரலாற்று நிகழ்வைக் கூறி விளக்கமளித்து உரையாற்றினார் தமிழர் தலைவர்.

    அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத் தில் 25.12.2010 அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய முன்தின தொடர்ச்சி வருமாறு:

    அய்யாவுக்கு உதவியாளராக அண்ணா

    அய்யா அவர்கள் அண்ணா அவர்களை காசி ஹரித்துவார், உத்தரப்பிரதேசம் போன்ற பகுதி களுக்கு அழைத்துச் செல்லுகின்றார். அய்யா அவர்களுக்கு அண்ணாதான் உதவியாளர், மொழி பெயர்ப்பாளர். அந்த மாதிரியான காலகட்டம். அண்ணா அவர்களை அய்யா அவர்கள் அழைத்துக்கொண்டு போகின்றார். அண்ணா முதன்முறையாக அய்யா அவர்களுடன் வட மாநிலங்களுக்குப் போகின்றார். உங்களுக்குத் தெரியாது; அங்கு குளிராக இருக்கும்-அங்கு போய் கோட்டெல்லாம் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லுகின்றார்.
    வட மாநிலத்தில் காசி பகுதியில் பெரியார்-அண்ணாவை கடைக்கு அழைத்துச் செல்லு கின்றார். ஏதோ புதிதாக ஜவுளிக்கடைக்கு அய்யா அழைத்துச் செல்லுகிறார் என்று அண்ணா நினைத்துக்கொண்டிருந்தார்.

    பழைய துணிகள் விற்கிற கடை

    அய்யா அவர்கள் இவரை அழைத்துக்கொண்டு நேராக பழைய துணிகள் விற்கிற கடைக்கு அழைத்துப் போய்விட்டார். (கைதட்டல்-சிரிப்பு).
    இராணுவத்தில் மற்ற இடங்களில் போட்ட துணிகளை இரண்டாவது கட்ட விற்பனைக்கு விற்பார்கள். அந்த மாதிரி கடைகள் இருக்கிற பகுதிக்கு அய்யா அழைத்துச் சென்றுவிட்டார். (சிரிப்பு).
    அண்ணா அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அய்யா அவர்களிடம் கட்டுப்பாடு மிகுந்த தொண்டர் அண்ணா அவர்கள். அண்ணா முதலமைச்சரான பிற்பாடும் கடைசிவரைக்கும் காப்பாற்றிய பெருமை அண்ணாவின் தனித் தன்மைக்கு என்றென்றைக்கும் தலைசிறந்த உதாரணமாகும் (கைதட்டல்).
    ஒரு தந்தை மகனுக்குச் சொல்லுகிறமாதிரி அதை எடு, இதை எடு என்று சொல்லிக்கொண்டி ருக்கின்றார். இதெல்லாம் பழைய காலத்து மிலிட்டரி கோட்டு. குறைந்த விலைக்கு விற்கக் கூடியது. அண்ணா அவர்களுக்கோ கூச்சம்
    அண்ணா அவர்கள் குட்டையானவர் என்பது உங்களுக்குத் தெரியும். (சிரிப்பு). எடுத்துபோட்டுப் பார்க்கின்ற கோட்டுகள் முட்டி வரையிலே தொங்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு கோட்டு கூட அண்ணா அவர்களுக்குச் சரியாக இல்லை (சிரிப்பு). பல கடைகளில் ஏறி இறங்கிப் பார்த்தார்கள்.
    கடைசியாக ஒரு கோட்டு கொஞ்சம் தொங்குகிற மாதிரி இருந்தது. உடனே அய்யா அதைப் பார்த்து அதற்கென்ன கொஞ்சம் கத்தரித்துக்கொண்டால் சரியாகப் போய்விடும். அது என்ன, அண்ணாதுரை உயரத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டார் (கைதட்டல்).

    அண்ணா அவர்களுக்கோ கூச்சம்.

    அண்ணா அவர்களுக்கு சங்கடம். சொல்லவும் முடியவில்லை. அய்யா கடைசியாக இந்தக் கோட்டு என்ன விலை என்று கேட்டார். கடைக்காரர் சொன்ன விலைக்கும், பெரியார் கேட்ட விலைக்கும் ஒத்தே வரவில்லை. (சிரிப்பு-கைதட்டல்). அண்ணா பார்த்தார். வாயே திறக்கவில்லை. (சிரிப்பு).

    எனக்கு கோட்டே வேண்டாம்

    உடனே அண்ணா, அய்யா எனக்கு கோட்டே வேண்டாம். எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார், அய்யா அவர்களை எதிர்த்தும் சொல்ல முடியவில்லை. அண்ணாதுரை, அப்படி நினைக்காதீங்க. இன்னும் இரண்டு கடைக்குப் போனால் கிடைத்துவிடும் என்று சொன்னார்.
    அய்யா அவர்கள் எப்படிச் சொல்லுவார் என்று அவருடன் பழகினவர்களுக்குத்தான் தெரியும். அது என்.வி.நடராசனாக இருந்தாலும் அல்லது எங்களைப் போன்றவர்களாக இருந்தாலும் இட்டலியை வாங்கி வரச்சொல்லுவார்.

    தெருவில் சுடுகின்ற இட்டலி

    ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வண்டியை நிறுத்தி இட்டலி வாங்கலாம் என்று சொல்லுவார். பெரிய ஓட்டலுக்கு முன்னால்-பெரிய லாட்ஜ்க்கு முன்னால் தான் போய் வண்டி நிற்கும் என்று யாரும் கற்பனை பண்ணி பார்க்கத் தேவையில்லை. வேனில் வரும்பொழுது அய்யா அவர்கள் சொல்லிக் கொண்டே வருவார். செங்கல்பட்டில் இந்த மூலையில் அங்கே ஒரு அம்மா இட்டலி சுட்டு விற்றுக்கொண்டிருப்பார்கள். அது நல்ல இட்டலியாக இருக்கும்; நல்ல சட்னி கொடுப்பார்கள்.
    ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு அடுக்கு நிறைய வாங்கிக்கொள்ளலாம். அதை வாங்கிக்கொண்டு வந்தால் நாம் எல்லோரும் சாப்பிடலாம் என்று சொல்லுவார்.
    நாங்களாக இருந்தாலும், என்.வி.நடராசனாக இருந்தாலும் கூச்சம் இல்லாமல் வாங்கிக்கொண்டு வந்து கொடுப்போம். அண்ணா பார்த்தார். கோட்டு வேண்டாம்ங்க அய்யா என்று தவிர்த்துவிட்டு, சால்வையே போதும் என்று சொல்லிவிட்டார்.

    புத்தரின் புன்னகை

    காசிக்குப் பக்கத்திலே உள்ள ஹரித்துவார். அங்குதான் புத்தசாமியார்கள் மற்ற சாமியார்கள் எல்லாம் அதிகம் இருக்கின்ற இடம்.
    அண்ணா அவர்கள் புத்தரின் புன்னகை என்று ஒரு நூலை எழுதியிருக்கின்றார். இது ரொம்ப அற்புதமான ஒரு கட்டுரை. திராவிட நாடு ஏட்டிலே வந்த கட்டுரை.

    கற்பனைக் கட்டுரை

    பெரியாரைப் பார்த்துவிட்டு புத்தர் எவ்வளவு அற்புதமாகச் சொல்லுகிறார் என்று ஒரு கற்பனைக் கட்டுரை. ஆரியம் மிரட்டிற்று. ஆனால் அதை நீங்கள் வெற்றி கொண்டீர்கள் என்ற பாணியில் எழுதியிருப்பார் அண்ணா. அண்ணா அவர்கள் எழுதிய தலைசிறந்த கட்டுரைகளிலே ஒன்று. அந்தக் கட்டுரை புத்தகமாகக் கூட வந்திருக்கிறது.
    அண்ணா அவர்கள் பேசும்பொழுது ஒரு கூட்டத்தில் சொன்னார். அய்யா அவர்கள் போய்க்கொண்டிருக்கின்றார். காற்றடிக்கிறது. தந்தை பெரியார் பொன்னிற மேனியில் வெண்தாடி அசைந்தாடுகிறது. அய்யா அவர்கள் சால்வையை இரண்டாக மடித்துப் போட்டுக் கொண்டார். அவருக்கு குளிர் ஒன்றும் செய்யவில்லை. நல்ல உடல்வாகு. நான் பின்னால் போகிறேன். எனக்கு கோட்டு கிடையாது. எனக்கோ குளிர் அதிகம்.

    பொதுக்கூட்டத்தில் நினைவுகூர்ந்தார் அண்ணா

    அண்ணா இதை கூட்டத்திலேயே சொன்னார். தருமபுரி மாவட்ட நிகழ்ச்சிக்கு முதலமைச்சரான அண்ணா அவர்களை நாங்கள் அழைத்துச் சென்ற பொழுது இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அய்யா அவர்களை வைத்துக்கொண்டே அண்ணா பேசினார்.
    அய்யா அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து சிரித்தார். அது மகிழ்ச்சியான தருணம். அந்தப் பகுதியோ பல சாமியார்கள் இருக்கின்ற பகுதி.

    இவர் புது சாமியார் போல இருக்கு

    அய்யா அவர்களைப் பார்த்தவுடன் இவர் ஒரு புது சாமியார் போல இருக்கிறது. ரொம்ப பெருமையாக இருக்கிறார் என்று நினைத்தார்கள். அய்யா அவர்கள் நடந்து செல்வதையும், அவரது வெண்தாடி அசைவதையும் அண்ணா அவர்கள் மிக அழகாக வர்ணித்தார்.
    அண்ணா, அய்யாவுக்குப் பின்னாலே போகிறார். அண்ணா அவர்களுடைய உயரம் நமக்குத் தெரியும். அண்ணா அவர்களுக்கோ கோட்டு இல்லை. காற்றடிக்கிறது; குளிர் அதிகமாக இருக்கிறது.
    அண்ணா அவர்கள் தன்னுடைய குளிரைப் போக்குவதற்காக இறுக்கமாகக் கையை கட்டிக்கொண்டு பின்னாலே சென்று கொண்டிருக்கின்றார். அய்யா அவர்கள் நடந்து செல்லும்பொழுது எதிரே வருகிறவர்கள் பொத்துப் பொத்தென்று அய்யா அவர்களுடைய காலிலே கீழே விழுகின்றார்கள். காரணம் என்ன வென்றால், இவர் பெரிய சாமியார் போல இருக்கிறது என்று நினைத்தார்கள். (சிரிப்பு- கைதட்டல்).

    அவரிடம் காலில் விழுந்தது மட்டும் முக்கியமல்ல. என்னுடைய காலிலும் விழுந்தார்கள். அதுதான் முக்கியம். அவர் பெரிய சாமியார். இவர் குட்டிச் சாமியார் என்று நினைத்துவிட்டார்கள் என்று அண்ணா சொன்னார்.

    அண்ணா அவர்களின் நகைச்சுவை

    இவர் எவ்வளவு பெரிய சாமியாராக இருந்தால் இவ்வளவு பெரிய பயபக்தியோடு சிஷ்யன் போவான் என்று நினைத்து காலில் விழுந்தார்கள். எனக்குக் குளிர் தாங்க முடியாததனால் கையை இறுக்கிக் கட்டிக் கொண்டு போனேன். என்னையும் சிறிய சாமியார் என்று நினைத்து அங்குள்ளவர்கள் காலில் விழுந்த சம்பவத்தை அவருக்கே உரிய முறையில் பொதுக்கூட்டத்தில் சொன்னார். (சிரிப்பு-கைதட்டல்). அண்ணா அவர் களுடைய நகைச்சுவை-ஆழமான செய்திகள். அவர் தனது வாழ்க்கையில் சுவைத்து சுவைத்துக் கடைசி வரையிலே சொல்லுவார்.
    போராட்டக் களத்திலே இருந்த ஒரு தளபதி மிகப்பெரிய அரசியல் சூழ்நிலைகளை எல்லாம் சந்தித்த ஒரு நிலையில் எவ்வளவு பெரிய நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதுதான் மற்றவர்களை வாழவைப்பதற்கு அவரிடமிருந்த அடித்தளம்.
    இந்த மாதிரி ஓர் உணர்ச்சியை எங்குமே பார்க்க முடியாது
    அண்ணா அவர்கள் எல்லோரையும் வைத்துக் கொண்டு இன்னொரு சுவையான சம்பவத்தைச் சொல்லுவார்.

    விருந்தில் அய்யா, அண்ணா


    பம்பாய்க்கு அய்யா அவர்களுடன் அண்ணா அவர்களும் செல்லுகின்றார். பெரியாரையே தன்னுடைய குரு என்று வர்ணித்தவர் எம்.என்.ராய், சுயனஉயட ழரஅயளைவ ஹளளடிஉயைவடி- Radical Humanist Association- Radical Democratic Party

    அதன் நிறுவனர் எம்.என்.ராய். மிகப்பெரிய கொள்கை கர்த்தா எம்.என்.ராய் எல்லோருக்கும் விருந்து கொடுத்தார். அண்ணா அவர்கள் அய்யா அவர்களுக்கு உதவியாளர். செயலாளர் எல்லோரும் அந்த விருந்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். விருந்தில் நன்றாகப் பரிமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
    அண்ணா அவர்கள் எப்பொழுதுமே அய்யா அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி உட்காருவார். அய்யா அவர்களிடம் காட்டிய அந்த மரியாதை. அதனால் அய்யா அருகில் வந்து உட்கார மாட்டார். தள்ளியே உட்காருவார்.
    அய்யா அவர்களுடைய பழக்கம்-அவர் மட்டும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பமாட்டார். கூட வந்தவர்கள் எல்லாரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று எல்லாவற்றையும் பார்ப்பார்.

    நீ எம்.ஏ. படித்தவர் உனக்கு ஏதாவது கூச்சமா?

    யாராவது உணவில் கொஞ்சம் மிச்சம், மீதியை வைத்துவிட்டு எழுந்திருந்தால் உடனே கண்டிப்பார். முதலிலேயே வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? வேண்டாம், உங்களால் சாப்பிட முடியவில்லை என்றால் என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் எடுத்து சாப்பிடுகிறேன் என்று சொல்லுவார். அல்லது பிறகு பசி எடுத்தவுடனே சாப்பிடுகிறேன் என்று சொல்லுவார். என்.வி.என். அந்த மாதிரி எடுத்திருக்கின்றார். நாங்கள் எடுத்திருக்கின்றோம். ஏம்பா! நீ எம்.ஏ., படித்தவர். உனக்கு ஏதாவது இதில் கூச்சம் இருக்கிறதா? என்று கேட்பார். அண்ணா அவர்கள் எப்படி அந்த எளிமைக்குத் தயாரானார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    நன்றாகச் சாப்பிட்டார்கள். கடைசியில் தயிர்சாதம் வைத்தார்கள். எம்.என்.ராய் பெரியாரிடம் வந்து கேட்டார், உணவு எப்படி இருந்தது? நன்றாகச் சாப்பிட்டீர்களா? என்று கேட்டார், அய்யா "very good" என்று சொன்னார். அய்யா, "Spoken English" நன்றாகப் பேசுவார்.

    அய்யா திடீரென்று கேட்டார்

    அய்யா அவர்கள் திடீரென்று கேட்டார். கூடப்போனவர்களுக்குத்தான் தெரியும். இந்தத் தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை என்று கேட்பார். (சிரிப்பு-கைதட்டல்).

    தைரியமாகக் கேட்பார். உடனே அந்தப் பதிலை பளிச்சென்று சொல்லுவார். அய்யாவுக்கு மொழி பெரிய பிரச்சினை என்று நினைத்ததில்லை. அது அவருடைய துணிவு.

    அய்யா அவர்களுக்கு ஊறுகாய் வேண்டும். முதலில் வைத்த ஊறுகாயைச் சாப்பிட்டுவிட்டார். இரண்டாவது தடவையாக ஊறுகாயைக் கேட்கின்றார். இந்த ஊறுகாய்க்கு என்ன இங்கிலீஷ் வார்த்தை என்று ஞாபகம் வரவில்லை. (சிரிப்பு-கைதட்டல்).

    ஊறுகாய், ஊறுகாய் என்று அய்யா சொல்லு கின்றார். எம்.என்.ராய், "what,what? என்று கேட்கின்றார். நாயக்கரே, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கின்றார். ஊறுகாய், ஊறுகாய் என்றார்.

    அண்ணா அவர்களின் சிறு குறும்பு

    அண்ணா அவர்களுக்கு (Pickels) பிக்கிள்ஸ் என்று சொல்ல எண்ணமாம். அண்ணா பார்த்தார். அவருக்கு இந்த மாதிரி லேசான குறும்பெல்லாம் உண்டு.

    அண்ணா பார்த்தார். பெரியார் என்ன பண்ணுகிறார். இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம் என்கிற எண்ணம். (சிரிப்பு- கைதட்டல்). உடனே அய்யா சமாளித்தார். பிக்கிள்ஸ் என்று சொன்னால் உடனே கொண்டுவந்து விடப் போகிறார்கள். அது முக்கியமல்ல என்று அண்ணா நினைத்தார்.

    உடனே அய்யா, அண்ணாதுரை எங்கே இருக்கிறார்? என்று கேட்டார். அண்ணா அவர்கள் இவர் கூப்பிடுவது காதில் விழாத மாதிரி அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்தார். (சிரிப்பு-கைதட்டல்). அவர் குனிந்துகொண்டு மும்முரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்.

    நாக்கை வெளியே காட்டி....

    எம்.என்.ராய் விருந்து கொடுக்கின்றவர். அய்யா நாக்கை வெளியே தள்ளி, இலையில் தொட்டுச் சாப்பிடுவதை காட்டினார் (சிரிப்பு-கைதட்டல்). (தமிழர் தலைவர் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் எப்படி நாக்கை வெளியே தள்ளிக் காட்டினார் என்பதை அப்படியே நாக்கை வெளியே தள்ளிச் செய்து காட்டியபோது, அரங்கமே சிரிப்பலையாலும், கைதட்டலாலும் அதிர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது) உடனே அண்ணா, பிக்கிள்ஸ் என்று சொன்னார். உடனே எம்.என்.ராய்,oh Do you want pickle? என்று சொல்லி ஊறுகாயைக் கொண்டு வரச்சொல்லி, அய்யா இலையில் வைத்துச் சாப்பிட வைத்தார். (சிரிப்பு-கைதட்டல்).

    அய்யா, பிக்கிள்ஸ், வெரிகுட் வெரிகுட் என்று அதற்குப் பிறகு சொல்லுகிறார். எவ்வளவு சங்கடமான சூழ்நிலையாக இருந்தாலும் அவர்கள் புன்னகையோடு சுவைப்பார்கள்.

    எதற்கு ஏ.சி.?

    அண்ணா அவர்கள் அவருடைய வாழ்க்கையில் எத்தனை சங்கடங்களை, எத்தனை சோதனைகளையும் எவ்வளவு சிக்கலான நேரத்திலும் இதுமாதிரி நினைத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

    அண்ணா அவர்களுக்கும், அய்யா அவர்களுக்கும் இயல்பாகவே இருந்த சிக்கனம். இங்கே ஏ.சி. பற்றிச் சொன்னார். கடைசி நேரத்தில் உடம்புக்கு முடியாத நேரத்தில்கூட ஏ.சி.எதற்கு என்று கேட்டவர் அண்ணா. அதே மாதிரி தந்தை பெரியார். இரண்டு பேருக்கும் அந்த ஒற்றுமை உண்டு.

    அய்யா அவர்கள் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்தபொழுது-டாக்டர்கள் சொல்லி ஏ.சி.யை வைத்தோம், திருச்சி பெரியார் மாளிகையில். எனக்கு ஏ.சி.வேண்டாம். எதற்கு இவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள்; தேவையில்லை. எனக்கு காற்று இருந்தால் போதும் என்று அந்த மாதிரி சூழ்நிலைகளில் இயல்பாகவே சொல்லக் கூடியவர்கள்.

    அய்யா-அண்ணா உறவு

    அதுமட்டுமல்ல; அய்யா-அண்ணா உறவு இருக்கிறது பாருங்கள், அது சாதாரணமானதல்ல. அய்யாவுக்கு அவர் ஒரு கட்டுப்பாடு மிகுந்த தொண்டன். ஈரோட்டிலே அண்ணா அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர். அவருக்கு அந்தக் காலகட்டத்தில் குறைவான சம்பளம். ராணி அண்ணா அவர்களுக்கும், வீடு கொடுத்திருக்கிறார்கள். எளிமையாகச் சமைத்து சாப்பிடுகிறார்கள். பெரியாருடைய தங்கை கண்ணம்மாள் அவர்களுடைய மகன் சந்தானம், அதே போல சண்முக வேலாயுதம் என்ற நண்பர், அண்ணா இவர்கள் எல்லாம் மாலை நேரத்தில் உலவுவதற்காகப் போவார்கள்.

    மாலை நேரத்தில் ஈரோடு ரயில் நிலைய ஜங்சன்தான் அவர்களுக்குப் பீச் ஸ்டேஷன் மாதிரி. கடற்கரை மாதிரி. அங்கே போனால் ஹிக்கின் பாதமஸ் புத்தகம் இருக்கும்.

    -(தொடரும்)

    குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...