Monday, July 28, 2014

எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர்




கேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப் படுகிறதே?

பதில்:- கடந்த 17-7-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகிய மூன்று முக்கிய மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மூன்று முக்கியத் துறைகளும் பேரவையிலே ஒரே நாளில் அவசர அவசரமாக விவாதிக்கப்பட்டுள்ளது என்பதில் இருந்தே, இந்தத் துறைகளின்பால் இந்த ஆட்சியினருக்கு உள்ள ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

கழக ஆட்சியில் மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டு, இந்த மூன்று துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டதற்கு மாறாக தற்போது ஒரே நாளில் மூன்று துறைகளுக்கான மானியங்கள் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானிய விவாதத்தின் போது பல முக்கிய அறிவிப்புகளை ஆசிரியர் சமுதாயம் மிகுந்த ஆவலுடன்
எதிர்பார்த்திருந்தது. 

குறிப்பாகப் பள்ளிகளில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் மாணவர் நலன் - முன்னேற்றம் கருதி நிறைவு செய்யப்படும் என்றும்; முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான,  மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத் திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறிவிப்பார்கள் என்றும் ; அ.தி.மு.க. அரசு ஏற்கனவே அறிவித்தவாறு 61 மாணவர்களுக்கே 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் ; மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டு 1,268 பள்ளிகளை மூடும் திட்டம் கைவிடப்படும் என்றும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இணையாக 4 உயர்த்தப்படும் என்றும்; இவை அனைத்தையும் நிறைவு செய்திடும் வண்ணம் தேவையான  அறிவிப்புகள் எல்லாம் அணி அணியாக வரப் போகிறதென்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இதில் எந்த அறிவிப்பும் வரவில்லை.பள்ளிக் கல்வி அமைச்சர், இடை நிலை ஆசிரியர்கள் அல்லாத 3,459 புது ஆசிரியர்கள்  மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. 

அ.தி.மு.க. அரசு அமைந்து மூன்றாண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் இந்தப் பள்ளிக் கல்வித் துறை ஆறு அமைச்சர்களைக் கண்டிருக்கிறது என்ற ஒன்றே இந்தத் துறையின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டும்.
 
 பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக முதலில் பொறுப்பேற்ற சி.வி. சண்முகம், அவர் அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படு வார்கள் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.

 சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து இந்தத் துறையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு வார காலமே அந்தத் துறையின் அமைச்சராக இருந்தார். அவர் 55 ஆயிரம் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுவிட்டார்கள் என்று, திடீரென்று ஒரு போடு போட்டார்; 

அ.தி.மு.க. ஆட்சியில் புதிய தாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை பற்றி, அவரிடம் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே, அவரிடமிருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டு, அமைச்சரவையிலிருந்து கழற்றி விடப்பட்டார். 

அவரைத் தொடர்ந்து என்.ஆர். சிவபதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரானார். அவரோ முன்னர் செய்யப்பட்ட அறிவிப்புகளை ஆராய்ந்து பார்க்காமல், 26 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப் போகிறோம் என்றார். சில நாட்களுக்குப் பிறகு விழிப்புணர்வு பெற்றவரைப் போல,
 
 அவரே 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். சிவபதியைத் தொடர்ந்து நான்காவது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக வைகைச் செல்வனும், ஐந்தாவது அமைச்சராக என்.எஸ். பழனியப்பனும் பொறுப்பிலே இருந்த போது "நமக்கேன் வம்பு"என்று ஆசிரியர் நியமனம் பற்றியே எதுவும் கூற வில்லை. ஆனால் அப்போது ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. அரசு 64 ஆயிரம் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நியமித்துள்ளது என்றார். இன்று அவர் இருக்குமிடம் தெரியவில்லை.

 இன்றைய பள்ளிக் கல்வி அமைச்சர் 12-7-2014 அன்று ஒரு விழாவில் பேசும் போது, கடந்த மூன்றாண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரை வில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார். ஆம் 10ஆம் தேதி பேரவை தொடங்கிய பிறகு அமைச்சர் செய்த அறிவிப்பு இது!

ஆனால் இதே அமைச்சர் கல்வி மானியக் கோரிக்கையின் விவாதத்தின் போது 3,459 ஆசிரியர்கள் மற்றும் 415 ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்திருக்கிறார். எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும்
 
 இறக்கியும் கூறிட முடிகிறதோ அ.தி.மு.க. அமைச்சர்களால்!உண்மையில் எத்தனை ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் சங்கத்தாரைக் கேட்டால் மிகக் குறைவாகக் கூறுகிறார்கள். 

கல்வி மானியத்திற்குப் பதிலளித்த அமைச்சர், இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக எதுவும் கூறாததால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கும் இடை நிலை
ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

Thursday, July 24, 2014

கோபமும், உப்பும்! ஓர் ஒப்பீடு!


 பொதுவாக கோபப்படுதல் உடலுக் கும் நல்லதல்ல; நம் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும்கூட விரும்பத் தக்கதல்ல. சில பிள்ளைகளைத் தொட் டால் சிணுங்கிகளாக எதற்கெடுத்தா லும் கோபப்படுவது மாதிரி, குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்து விடு கிறார்கள்.

அதற்காக கோபமே வராதவர் களாகவே மனிதர்கள் எல்லாம் மாற வேண்டும் என்று கூறுவது வாழ்வியல் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை நாம் எவரும் மறந்துவிடக் கூடாது.

சினம் (கோபம்) என்பது சேர்ந் தாரைக் கொல்லிதான் - உண்மைதான்.

அடக்கமாக எதிர்கொள்ளவேண் டிய பலவற்றை, உரத்து ஓங்கிய குரலில் பேசி இருப்பதையும், இனி வர வேண் டிய பல உயர்வுகளையும் கூட இழந்த வர்கள் பல ஆயிரக்கணக்கில் உண்டு.

நமது உளப்பாங்கு, உடல்நிலை எல்லாவற்றையுமே அதிக கோபம் பெரிதும் கெடுத்துவிடுகிறது!

ரத்தக் கொதிப்பு (பிளட் பிரஷர்) பலருக்கு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், அடிக்கடி சிலர் எல்லை மீறிய கோபத்தை அவர்கள் வெடித்த எரிமலை போல் கொட்டித் தீர்ப்பதேயாகும் என்பது மருத்துவர்களின் கணிப்புகளில் ஒன்று.

அதோடு, ரத்தக் கொதிப்பு (பிளட் பிரஷர்) உடைய பலருக்கு, திடீர் திடீ ரென்று கோபம் கொப்பளித்துக் கொண்டு வருவதும் தவிர்க்க இயலா தவை என்பது விசித்திரமான ஒன்றுதான்!

எல்லை மீறிய கோபம் வரும்போது அதை அடக்குவதைவிட, உடலுக்கு, உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து, கேடு வேறில்லை. வெடித்து வெளியே கொட் டப்பட்டு, கோபம் தாங்காமல் வெளி யேறி விடுவதனால், இயல்பு நிலைக்கு மனிதர்கள் திரும்பும் வாய்ப்புள்ளது.

அதிகக் கோபம் வரும்போது உடன் அந்த இடத்தை விட்டு எழுந்து, வேறு பகுதிக்குச் சென்று அமர்ந்தோ, நடந்தோ இருப்பது நாம் அதிலிருந்து விடுபட உதவி செய்வதாகும்!
எப்போதும் கோபமே வராதவர் இவர் என்று யாரையாவது நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்தால், அவரை எளிதில் நம்பி விடாதீர்கள்!

மனிதர்கள் அழவேண்டிய நேரத்தில் அழவேண்டும்; சிரிக்கவேண்டிய நேரத் தில் சிரிக்கவேண்டும் - கலகலப்பாக. வெட்கப்படவேண்டிய நேரத்தில் வெட்கப்படவேண்டும். அதுதான் இயல்பு நிலை. அதை விடுத்து, கோபம் வர வேண்டிய நேரத்தில்கூட அவர்கள் கொஞ்சுவதுபோலவோ அல்லது மிக சாந்தமாக அதனை சகித்துக் கொள் வதோ, சமாளித்துக் கொண்டதாகக் காட்டுவதோ, அவர் உண்மை மனிதர் அல்ல; ஒப்பனை மனிதர் என்பதற்கான அடையாளம் ஆகும். அவர் நம்மிட மிருந்தோ அல்லது அவரது தலைமை - எஜமானர் - மேலாளர் இவர்களில் எவரிடமிருந்தோ, எதையோ பெற, திட்டமிட்டு நாடகமாடுகிறார், நடிக்கிறார் என்று புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய அம்சமாகும்.

உடம்புக்கு உப்புச் சேர்க்கை போன் றதே, வாழ்க்கையில் கோபம் வருவதும், கொள்வதும்!
உணவில் உப்பு தேவைதான். அது கொஞ்சம் கூடி விட்டால், நன்கு சமைத்த உணவு உண்ணுவதற்கு ஏற்ற தாகாமல், குப்பையில் எறியவேண்டிய தாகி விடுகிறதல்லவா, அதுபோல!

ஆனால், அதேநேரத்தில் போதிய அடிப்படை உப்பு சத்து உடல்நலம் கெடாமல் இருப்பதற்கு மிகவும் இன்றி யமையாததல்லவா?

உடம்பில் உப்புச் சத்து கூடுதலில் சிறுநீரகம் கெடுகிறது; மிகவும் குறைந் தால் மற்ற முக்கிய உறுப்புகள் செயல் இழக்கும் அபாயம் - உயிர்க்கொல்லி யாகவும் ஆகிவிடுகிறது!

கூடினாலோ, இருதயம் திடீரென்று நின்று விடுகிறது - மாரடைப்புமூலம். எனவே, அளவான கோபம், நியாயமான கோபம் - அளவான உப்பு போன்றே தேவை! தேவை!!

அக்கிரமம், அநீதி இவற்றை சகிக் காத கோபம் தேவையல்லவா?

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்



பிஞ்சு உள்ளத்தின் கொஞ்சும் புரட்சி!


ஆப்ரிக்க குழந்தைக் கவிஞர் ஒருவரது கவிதையை, 2005ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை (Best Poem of 2005) என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நிறம் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கவிதையின் தமிழாக்கம் இதோ:

நான் பிறந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் வளர்ந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் வெயிலில் நடந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் நோயில் வதிந்தபோதும் நான் கறுப்புதான்;
நான் இறக்கும்போதும் நான் இன்னமும் கறுப்புதான்;
ஆனால் வெள்ளை ஆட்களான நீங்களோ நீங்கள் பிறந்த போது நீங்கள் பழுப்பு நிறத்தவர்
நீங்கள் வளர்ந்தபோது நீங்கள் வெள்ளை நிறத்தவர்
நீங்கள் வெயிலில் நடந்தபோது நீங்கள் சிவப்பு நிறத்தவர்
நீங்கள் குளிரில் நனைந்தபோது நீங்கள் நீல நிறத்தவர்
நீங்கள் பயத்தால் நடுங்கியபோது நீங்கள் மஞ்சள் நிறத்தவர்
நீங்கள் நோயில் வாடியபோது நீங்கள் பச்சை நிறத்தவர்
நீங்கள் மரணம் அடையும்போது நீங்கள் சாம்பல் நிறத்தவர்
இருந்தபோதிலும் எங்களைப் பார்த்து நிறத்து மக்கள் (“Coloured”)
என்று அழைக்கிறீர்களே - இதுதான் அந்தக் கவிதை.

இணையதளத்தில் எத்தனையோ சிறந்த தகவல்களும், காட்சிகளும் வரத்தான் செய்கின்றன! (சில நேரங்களில் அதே தளம் குற்றவாளிகளின் வாளாகவும், கேடயமாகவும் கூடப் பயன்படுகிறது என்பது உண்மையானாலும்கூட!)

இரண்டு நாள்களுக்கு முன் என் மின் அஞ்சலில் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் நம் நண்பர்களுக்குக் கிடைத்த ஓர் அற்புதமான கவிதை, போற்றற்கரிய இலக்கியப் புதையல் ஆகும்!

பிஞ்சுகளின் நெஞ்சுகளிலும் எரிமலை வெடிக்கத் துவங்கி விட்டது!

எத்தனைக் காலம்தான் இத்தனை அவமானங்களைச் சுமந்து, சுமந்து  வேதனைத் தீயில் அவர்கள் வெந்து கருகுவது? அந்தக் குமுறல்கள் - கொஞ்சும் மொழியாக இல்லாமல், புரட்சியின் பூபாளங்களாக இசைக்கத் தோன்றி விட்டன!
 
விடியலை நோக்கி விரைகின்றனர் புதிய தலைமுறையினர் -

மனிதம் மறுமலர்ச்சி பெறத் துவங்கி விட்டது!

(மொழி பெயர்ப்பு என்றால் அந்த மொழி யில் கேட்கும் சுவையை அப்படியே கொடுத்து விட முடியாதல்லவா அதனால் ஆங்கிலக் கவிதையையும் அப்படியே கீழே தந்துள்ளேன் - வாசகர்கள் சுவைக்காக).
(This poem, written by an African child was nominated for the best poem 2005).
Colour
When I born, I Black;
When I grow up, I Black;
When I go in Sun, I Black;
When I scared, I Black;
When I sick, I Black;
And when I die, I still black;
And U White fellows;
When U born, U Pink;
When U grow up, U White;
When U go in Sun, U Red;
When U cold, U Blue;
When U scared, U Yellow;
When U sick, U Green;
When U die, U Gray;
And you call me Coloured

- கி.வீரமணி -
- வாழ்வியல் சிந்தனைகள்

தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை?


கோடை விடுமுறைகளுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்துவிட்டன. பொதுத் தேர்வு முடிவுகளைப் பார்த்தவர்களுக்கு வியப்போ வியப்பு! நகரங்களின் அனைத்து வசதிகளையும் பெற்றுப் படிப்பவர்களுக்கு இணையாக, கிராமப்புறப் பள்ளிகளின் பிள்ளைகளும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். ஏழைப் பள்ளி, அரசுப் பள்ளி, கார்ப்பரேசன் பள்ளி என்று இளக்காரமாகப்  பார்த்தவர்கள், தனியார் பள்ளி பற்றிப் பெருமையாகப் பேசியவர்கள் எல்லாம் இன்று வியப்போடு பார்க்கிறார்கள். இந்த வேறுபாடுகள் நீங்கியதற்குக் காரணம் சமச்சீர் கல்வியே என்பதை இப்போதுதான் தமிழகம் உணரத் தொடங்கியிருக்கிறது.

ஆனால் எப்போதும் வேற்றுமைகளைத் தோற்றுவிப்பதிலேயே குறியாக இருப்பவர்களும், ஏற்றத் தாழ்வுகளில் இன்பங் காணுகிறவர்களும் சும்மா கிடப்பார்களா? போதாக்குறைக்கு கல்வித் துறை இன்று பணம் கொழிக்கும் துறை! அதிலும், ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி சேர்க்கவே லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு, விண்ணப்பம் வாங்குவதற்கே பெரும் அதிகாரிகளும், பணக்காரர்களும் இரவெல்லாம் சாலையில் படுத்திருந்து இடம்பிடிக்கும் போது, அரசுப் பள்ளியிடமிருந்து எதை வேறுபடுத்திக் காட்டிப் பணம் பிடுங்க முடியும்? மேலும், மற்ற பிள்ளைகளைவிட என் பிள்ளை மேல் என்று பெருமை பேசுவதற்கு பள்ளிகளின் பெயர்களும், அவர்களும் கட்டியிருக்கும் தொகையும் தேவையாயிருக்கிறதென்று பெற்றோர்களும் நினைக்கிறார்களாமே! இதுதான் சாக்கென்று, இத்தனை நாள் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வந்தவர்கள் அதனினும் சிறப்பான சமச்சீர் கல்வி வந்தபிறகு, இரண்டும் இல்லாமல் சி.பி.எஸ்.இ-க்குப் போகிறார்கள் என்று ஆங்காங்கிருந்து தகவல்கள் வரத் தொடங்கின.

அது குறித்த தகவல்களை விசாரித்த போது தான், நடப்பது சிறிய அளவில் அல்ல என்பது புரிந்தது. மாநில அரசின் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் இருந்த மெட்ரிக்குலேசன் பள்ளிகள் கொத்துக் கொத்தாக சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதை அறிய முடிந்தது. சி.பி.எஸ்.இ (மத்திய பள்ளிக்கல்வி வாரியம்) பாடத்திட்டத்திற்கு மாறுவது என்பது வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்ல. மாறாக, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருந்தே விலகிச் செல்லுதல் ஆகும். இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பள்ளிகள் தவிர எதன் மீதும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்குக் கட்டுப்பாடு இருக்காது. அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு? தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு நடக்க இருக்கும் ஆபத்தின் பரிமாணம் விளங்கும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மாநில அரசின் கையில் இருக்கும் தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி உள்ளிட்டவை சத்தமில்லாமல் மத்திய அரசின் கைக்குப் போய்விடும்.

இந்திய அரசியலமைப்பின் தொடக்க காலத்தில் கல்வித்துறை மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. பின்னர் அவசர கால நிலையின் போது மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பொதுப்பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அடக்குமுறைக் காலத்தில் பெரிதாக எழ முடியாத எதிர்ப்பு, பின்னாளில் கிளம்பியபோதும், பொதுப் பட்டியலிலிருந்து அதை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அதிகார வர்க்கம் தயாராக இல்லை. மேலும், தன்னுடைய கரங்களை கல்வித் துறையை நோக்கி நீட்டி, அதனை கபளீகரம் செய்யவே முயன்றது. இதன் மூலம் மாநில உரிமைகளை நசுக்குவதுடன், இந்தித் திணிப்பிலும் எதிர்ப்பின்றி வெற்றி கண்டுவிடலாம். பாடத்திட்டத்தில் மாநிலங்களின் பண்பாடு, இனம், மொழி குறித்தவையெல்லாம் கிஞ்சிற்றும் இடம்பெறாது. இப்போது பொறுப்பேற்றுள்ள பி.ஜே.பி. அரசு ஒரு பாடத்திட்டத்தில் திருத்தம் செய்தாலே போதுமானது, வெகு எளிதில் நாடுமுழுக்க காவி விதைகளை பிஞ்சு மனதில் தூவி விடலாம்.

இத்தகைய ஆபத்தான போக்கை முளையிலேயே கெல்லி எறியாவிட்டால், மாநில சுயாட்சிக்கு அல்ல; மாநிலங்களின் அடிப்படை உரிமைகளுக்கே மீண்டும் சுழியத்திலிருந்து தான் போராட்டங்கள் தொடங்கப்பட வேண்டியிருக்கும். மாநில அரசுகள் என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும்; பல்வேறு பண்பாடுகள் என்ற அடையாளங்களை அழித்துவிட்டு ஒரே அகன்ற பாரதம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள மோடியின் அரசுக்கு இத்தகைய வாய்ப்புகளெல்லாம் தானாகக் கனிந்த மரங்கள் போல! மறைமுகமாக நடைபெறும் இந்தப் பிரச்சினையில் போதுமான அளவு இன்னும் சமூக அமைப்புகள் கவனம் செலுத்தாமல் இருக்க,  09.05.2014 அன்று கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இப்பிரச்சினை குறித்த தொடக்க அடியினை எடுத்து வைத்துள்ளது.


மேல்நிலைப் பள்ளி வரை தமிழைக் கட்டாயம் படித்திட வேண்டும் என்ற இன்றைய கல்வித் திட்ட முறையைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி முறையிலிருந்து தவிர்க்கவும் சி.பி.எஸ்.இ கல்வி முறைக்கு மாறும் போக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் துணையோடு இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த ஆவன செய்யுமாறு இச் செயற்குழுக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்ற இந்தத் தீர்மானம் திராவிடர் கழகம் இப்பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது என்பதற்கான நம்பிக்கைக் கீற்றாகும். இந்நிலையில் இந்தப் பிரச்சினையின்  முழுப் பரிமாணத்தையும் விளக்க கல்வியாளர்களை அணுகினோம். சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த பேராசிரியர் அ.கருணானந்தம் அவர்கள் கூறும் போது, சமச்சீர் கல்வியை நோக்கிய முதல் அடியாக விளங்குவது இந்தப் பொதுப்பாடத்திட்டம். இது தமிழ்நாட்டில் அதுவரை இருந்து வந்த நான்கு வகையான பாடத்திட்டங்களை (எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல்) ஒன்றிணைத்து உருவாக்கிய பாடத்திட்டமாகும். இது தரமற்றதாக உள்ளது என்னும் குற்றச்சாட்டு தவறானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். சமச்சீர் கல்வி என்பது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்தியுள்ளது. சில பள்ளிகள் தற்போது சி.பி.எஸ்.இ.க்கு மாறக் காரணம் சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் அல்ல. அப்பள்ளிகளின் வணிக நோக்கமே என்று குற்றம் சாட்டினார்.

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்திற்காக சட்ட ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் போராடியதோடு மட்டுமல்லாமல், பொதுப் பள்ளிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, அவர் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட வரலாற்றிலிருந்து தொடங்கினார்.

தமிழ்நாட்டில் அரசினுடைய பாடத் திட்டமாக எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. இருந்த காலகட்டத்தில், பல்கலைக் கழகப் பாடத் திட்டமாக மெட்ரிகுலேசனும், ஆங்கிலோ இண்டியனும் பாடத்திட்டமாக இருந்தது. இவையிரண்டும் எஸ்.எஸ்.எல்.சி.யைவிட உயர்ந்தவை; இதனைப் படித்தால், பல்கலைக் கழத்திற்குச் செல்ல முடியும் என்ற ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது. இது திட்டமிட்டு காலனி ஆதிக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடாகும்.

இந்தியா விடுதலை பெற்று ஒரு குடியரசாக ஆன பிறகு, தன்னுடைய பாடத் திட்டங்களை உருவாக்கி, எல்லோருக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டது.

அதனுடைய விளைவாக, 1970களில் மால்கம் ஆதிசேஷய்யா அவர்கள் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், இனி நாங்கள் பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் உயர்கல்வியைத் துறையை எடுத்துக் கொள்கிறோம்; பள்ளிக் கல்வியை அரசு பார்த்துக் கொள்ளட்டும் என்றது. இதற்குமுன்  மெட்ரிக் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆனால், அன்றைய அரசு இவர்களை மாநிலப் பாடத்திட்டத்தோடு இணைப்பதற்குப் பதிலாக,-  மெட்ரிக்குலேசன் வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் எல்லா மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர்களையும் உறுப்பினர்களாக்கி, அதற்கு ஒரு தனி அந்தஸ்தைக் கொடுத்து மெட்ரிக் பள்ளிகள் சுயநிதி ஆங்கில வழிப் பிரிவுகளாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்கள். ஆங்கிலோ இண்டியன் பள்ளிகளைப் பொறுத்தவரையில், அதில் படிப்பதற்கும் ஆங்கிலோ இண்டியன்கள் இல்லை. அவற்றுக்கென்று தனித்த சிறப்பான பாடத்திட்டமும் எதுவும் இல்லை.

அரசு உருவாக்கிய முத்துக்குமரன் குழு மேற்கொண்ட ஆய்வில், நான்கு பாடத்திட்டங்களின் உள்ளடக்கம் ஒன்றாகவே இருப்பதும், தனித்தனியான இந்தப் பெயர்களால் மாணவர்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது. எல்லோருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம் என்பது சரியானதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் புதுப் பாடத்திட்டமான சமச்சீர் கல்வி என்று நாம் கூறும் பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்று விளக்கினார்.

சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தைவிட சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் சிறந்ததா?

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் எனபது மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள் வசதிக்காக உருவாக்கப்பட்ட பள்ளிகள் ஆகும். அவை இந்தியா முழுவதும் உள்ள பொதுக்கல்விக்கான பாடத்திட்டம் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தால் வளமான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் கொட்டிக்கிடக்கின்றன என்னும் மக்களின் அறியாமை இவர்களுக்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது. எனவே, ஏழை மக்களை ஈர்க்கவே இந்தப் பள்ளிகள் தற்போது இந்த மாற்றத்தை விரும்புகின்றன. பொதுப் பாடத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ள சூழலில் அவர்கள் தங்களது வணிகத்தைப் பெருக்குவதற்கு ஒரு புதிய பாடத்திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது என்ற பேராசிரியர் கருணானந்தத்தின் குற்றச்சாட்டைத் தான் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வழிமொழிகிறார்.


பள்ளி நிர்வாகத்தினுடைய பார்வையைப் பொறுத்தவரைக்கும், எஸ்.எஸ்.எல்.சி. என்ற ஒரு பாடப்பிரிவு இருந்த காலகட்டத்தில், மெட்ரிக் பள்ளிப் படிப்பு உயர்ந்தது என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடிந்தது; இப்பொழுது இரண்டிற்கும் ஒரே பாடத் திட்டம் என்றால், நாங்கள் ஏன் கூடுதலாகப் பணம் செலுத்தவேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி வந்து, இரண்டு, மூன்று தேர்வுகள் நடைபெற்றதும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகள், மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவிகளைவிட அதிக மதிப்பெண் பெற்றதைப் பார்த்தனர்.

பிறகு, ஏன் தங்களுடைய பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில்  படிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்தது. மெட்ரிக் பள்ளிகளுக்கு ஏற்பட்ட பயத்தின் காரணமாக, தங்களுடைய சந்தை போய்விடுமோ என்கிற காரணத்தினால், சி.பி.எஸ்.இ.க்கு மாறிவிடுகிறார்களே தவிர, இவர்கள் பாடத் திட்டத்தை ஆய்வு செய்து, சி.பி.எஸ்.இ. தான் சிறந்த பாடத் திட்டம் என்று நிரூபித்து அதற்கு மாறவில்லை.

சி.பி.எஸ்.இ.-க்கு மாறவேண்டும் என்றால், 2005 ஆம் ஆண்டு என்.சி.ஆர்.டி. புதிய கல்வித் திட்டத்தைக் கொடுத்தவுடன், அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, அப்பொழுதே சி.பி.எஸ்.இ.க்குச் சென்றிருக்கலாமே! என்றும் கேள்வியெழுப்புகிறார்.

பெற்றோர் விரும்புவதால்தான் இப்படி பாடத்திட்டங்களை மாற்றுவதாக சில பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்துக் கேட்டபோது, இல்லை என்று ஆதாரத்தோடு மறுக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமானால், சென்னை வேப்பேரியில்  ஒரு மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளி உள்ளது. 175ஆண்டுகள் பாரம்பரியமான ஒரு பள்ளி அது. அந்தப் பள்ளி மெட்ரிக் பள்ளியாக இருந்தது. கடந்த ஆண்டு அந்தப் பள்ளி அய்.சி.அய்.சி. பள்ளியாக மாறுவதற்காக முயற்சி செய்து, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. உடனே பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சங்கமாக உருவாக்கி, அந்தச் சங்கத்தின் சார்பாக நிர்வாகத்திற்கு ஒரு நோட்டீசைக் கொடுத்தார்கள்.

அந்த நோட்டீசில், நீங்கள் எந்த வகையில் இந்தப் பாடத்திட்டம் என்பது சி.பி.எஸ்.இ., அய்.சி.அய்.சி. பாடத்திட்டத்தைவிட குறைந்தது என்று சொல்ல வருகிறீர்கள். உங்களிடம் அதற்கான ஒப்பாய்வு ஏதாவது இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்த ஒப்பாய்வினை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படி தெரியப்படுத்தாமல், நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.

இந்த நோட்டீஸ் கிடைத்த இரண்டு வாரத்தில், பள்ளி நிர்வாகம் ஏற்கெனவே கொடுத்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுகிறோம் என்று இன்னொரு சுற்றறிக்கையை அனுப்பினார்கள்.

அப்படிச் செய்த பிறகு, மறைமுகமாகப் பெற்றோர்களை அழைத்து, கட்டாயப்படுத்தி அய்.சி.அய்.சி.யில் சேர வைத்திருக்கிறார்கள்.

உடனே, நடந்தவற்றை விளக்கி அந்தப் பெற்றோர் சங்கம், பள்ளிக் கல்வி இயக்குநருக்கு ஒரு மனு கொடுத்தது. ஒரே பள்ளி வளாகத்தில் இன்னொரு சி.பி.எஸ்.இ. பள்ளி தொடங்குவதோ, அல்லது அய்.சி.அய்.சி.  பள்ளி தொடங்குவதோ அல்லது இருக்கிற பள்ளியை அய்.சி.அய்.சி.யாக மாற்றுவதோ எங்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. எனவே, அரசு இதற்கு என்.ஓ.சி. கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார்கள்.

இதிலிருந்து இரண்டு செய்திகள் தெரியவருகின்றன.
 
ஒன்று, பெற்றோர்கள் விரும்பி மாறுகிறார்கள் என்பது தவறு என்பதற்கு இது ஒரு சான்று.

இரண்டாவது, நிர்வாகத்திடம் எந்தவிதமான ஒப்பாய்வு அறிக்கையும் கிடையாது. இவர்கள் பாடத் திட்டத்தையெல்லாம் ஆய்வு செய்யவில்லை. ஒரு வணிக நோக்கத்திற்காகத்தான் மாறுகிறார்கள் என்பதற்கும் இதுவே சான்று என்றும் போட்டுடைத்தார்.

வணிகம் என்பதைத் தாண்டி இதனால் பள்ளி நிர்வாகங்களுக்கு வேறு ஏதேனும் ஆதாயம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் நமக்கு இல்லாமலில்லை.

மக்கள்தொகை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில் அரசு ஏராளமான பொதுப் பள்ளிகளை உருவாக்க வேண்டும். ஆனால், அரசு உருவாக்கவில்லை. அந்தப் பணிகளை தனியார் பள்ளிகளிடம் தாரை வார்க்கின்றனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகங்களோ தமிழ்நாட்டிற்குள் உள்ள பொதுப் பாடத்திட்டத்திலிருந்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபடவே இவ்வாறு செய்கின்றனர் என்கிறார் பேராசிரியர் அ.கருணானந்தம். இந்தக் கருத்து உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துகிறது பிரின்ஸ் கஜேந்திரபாபு தரும் தகவல்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைப் பொறுத்தவரையில், ஒரே ஒரு தென்மண்டல அலுவலர்தான் இருக்கிறார். தென் மண்டலம் என்று சொன்னால், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் இவை அனைத்தும் சேர்ந்தது தென்மண்டலம். இதற்கு ஒரு மண்டல அலுவலர்தான். இவருடைய அலுவலகம் சென்னை அண்ணா நகரில் உள்ளது.

இவருடைய பணி என்னவென்றால், பாடத்திட்டத்தை பின்பற்றுகிறார்களா என பார்ப்பது, சுற்றிக்கைகளைக் கொடுப்பது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது போன்றவைதான். அவருடைய பணியாகும். நாள்தோறும் நடைபெறும் நிர்வாக நடவடிக்கையில் அவர் தலையிடமாட்டார். மாநில அரசுதான் தலையிட வேண்டும். ஆனால், மாநில அரசும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தில் தலையிடவில்லை. தங்களுடைய கட்டுப்பாட்டில் அதனை வைத்துக்கொள்ளவில்லை.

எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறிவிட்டால், யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது ஒரு காரணமாகும்.

இரண்டாவதாக, தமிழ் மொழி இல்லாமல் படித்து முடித்துவிடலாம்; இதனைத் தாண்டி மாநில அளவில் கல்விக் கட்டணத்திற்கென்று அளவுகோல் உண்டு. கண்காணிக்க அதிகாரிகள் உண்டு. கட்டமைப்பு உண்டு. இவை எதுவும் அங்கு கிடையாது. யாரும் அதற்காக முறையிடவுமில்லை; மாநில அரசும் தலையிடவில்லை. இதெல்லாம் பள்ளி நிர்வாகங்களுக்குக் கிடைக்கும் வசதிகள்.

இப்படி தனது கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.எஸ்.இ முறைக்கு மாறுவதைத் தடுத்து பள்ளிக் கல்வித் துறையை மாநில அரசு காக்க முடியாதா? தமிழ்நாடு அரசு ஆங்கிலவழியில் கல்வி கொண்டுவருவதாக சொன்னதுகூட மெட்ரிக் பள்ளிகளின் மாற்றத்துக்குக்  காரணமாக இருக்குமா?

இல்லை. ஏனென்றால், அரசு ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவருவதாக அறிவிக்கும் முன்பும் பின்பும் கூட தடையின்மை சான்று கோரி பல பள்ளிகளின் சார்பில் மனு கொடுத்திருந்தார்கள்.

 பல பள்ளிகளுக்குத் தடையின்மை சான்றும் வழங்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு சி.பி.எஸ்.இ. சார்பில் தடையின்மை சான்று தேவை இல்லை என்று திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள். எனினும் திருத்தப்பட்ட விதிகளின்படி மாநில அரசு அல்லது யாராவது ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்களானால், அப்போதுதான் தடையின்மை சான்று வாங்க வேண்டும் என்று உள்ளது. எனவே, மாநில அரசு இந்தப் பள்ளிகளின் வணிக நோக்கத்தையோ, ஒரே பள்ளி வளாகத்தில் இரண்டு பாடத்திட்டங்கள் கூடாது என்பதையோ எடுத்துக்காட்டி அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்று எதிர்ப்புக் காட்டினால்,  திருத்தப்பட்ட விதிகளுக்குப்பிறகுகூட சி.பி.எஸ்.இ.யால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் பிரின்ஸ். இது குறித்து பேரா.கருணானந்தம் குறிப்பிடும் போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றால் முன்பு இருந்ததைப் போல் ஆறாம் வகுப்பு முதல்தான் தொடங்க முடியும். அதுவும் மாநில அரசின் அனுமதி பெற்றுத்தான் தொடங்கப்பட முடியும் என்ற விதிமுறைகளை மீண்டும் கொண்டு வர மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இதையெல்லாம் தடுக்க முயற்சிகள் எதையும் எடுப்பதாகத் தெரியவில்லை. அரசு தனியார் கல்வி நிர்வாகங்களுக்குத் துணைபோகவே விரும்புகிறது என்று உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு, மாநில அரசு இரண்டுபேருக்குமே உரிமை இருக்கிறது. பொறுப்பும் இருக்கிறது. ஒரே பொருளில் இரண்டு பேரும் சட்டம் கொண்டுவந்தால், மத்திய அரசு கொண்டுவரும் சட்டம்தான் செல்லும். அதே நேரம் பொதுப்பட்டியலில் இருந்தால் மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லமுடியாது. மேலும், கல்வி என்பது பண்பாட்டின் ஒரு கூறு. எனவே, ஒரு மொழிவாரி மாநிலம் என்கிற அடிப்படையில் ஒரு இனத்தினுடைய பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. அந்த வகையில் கல்வியை பண்பாட்டுடைய ஒரு கூறாகப் பார்த்து  அவர்கள்  தங்களுடைய உரிமைகளையும், தாங்கள் கல்வித்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசுக்குத் தெரிவிக்க முடியும்.

73 நாடுகளைக் கொண்ட பிசா அறிக்கையில், எந்தெந்த நாட்டிலெல்லாம் அரசினுடைய பொறுப்பிலும், செலவிலும் கல்வி கொடுக்கப்படுகிறதோ, அந்த நாட்டில் எல்லாம் குழந்தைகளினுடைய கற்றல் திறமை அதிகமாக இருக்கிறது; எந்த நாட்டிலெல்லாம் தனியார் பள்ளிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கே குழந்தைகளின் கற்றல் திறமை குறைவாக இருக்கிறது  என்று சொல்கிறார்கள்.

உலகெங்கும் கல்வியாளர்கள் சொல்லும் இந்தக் கருத்து நம் மக்கள் காதில் விழாத வண்ணம் தடுத்துநிற்கும் போலி கவுரவப் போக்குகளும் மாற வேண்டும் என்பதும் உண்மையே!

இந்தப் பிரச்சினையைப் பொறுத்தளவில், பந்து இப்போது தமிழக அரசின் கையில் இருக்கிறது. தன்னிடம் இருந்து பள்ளிக்கல்வித் துறை பறிபோய்விடும் என்ற உண்மையாவது தமிழக அரசுக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து, பொதுப் பள்ளிகளையும், அருகமைப் பள்ளிகளையும் அதிகப்படுத்துவதும், பாடத்திட்டத்தைச் செழுமையாக்குவதில் மேலும் கவனம் செலுத்துவதும், மக்களிடம் தனியார் பள்ளிகள் மேல் உள்ள மோகத்தைச் சரி செய்து, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை விரிவாக்கி, ஆங்கில வழிப் பாடம் என்பதை விட மொழியாக இங்கிலீசிற்கு தனியிடம் தந்து பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழிக் கல்வி மூலமே உலக அரங்கை நோக்கிப் பயணிக்கலாம் என்ற நம்பிக்கை ஊட்டுவதிலும்தான் சரியான கல்விக்கான பாதை இருக்கிறது.

- சமா.இளவரசன்

உதவி : வை.கலையரசன், ச.பாஸ்கர்

நன்றி : http://www.unmaionline.com/new/2057-tn-education-department.html 



Tuesday, July 22, 2014

ஆசிரியர் நியமனங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை


மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
கல்வி மானியக் கோரிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் அல்லாத 3459 புது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

தொடக்கத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதைத்தொடர்ந்து வந்த 5 அமைச்சர்கள், ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு குழப்பமான புள்ளி விவரங்களை அறிவித்தனர். 

இப்போது 6 ஆவதாக வந்துள்ள அமைச்சர் வீரமணி, கடந்த 3 ஆண்டில் 51 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் அறிவித்தார். 

ஆனால் பேரவையில் அறி வித்தது வேறு. எனவே ஆசிரியர் நியமனங்கள், நிலை வாரியாக, நிர்வாக வாரியாக மாவட்ட வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். 

 இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு - குறும்படம்

Friday, July 18, 2014

பிரதமரும்-கட்சித் தலைவரும்!

 

பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல மோடிக்கேற்ற ஜோடியாக இவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

உண்மையைச் சொல்லப்போனால், எல்லா வகைகளிலும் எல்லாமுமாக நரேந்திர மோடிக்கு இருக்கக் கூடியவர் தான் இந்த அமித்ஷா.

அசல் ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணி ஏடே கூட நேற்று (16.7.2014) தீட்டிய தலையங்கத்தில் அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராக அமைத்துக் கொண்டது மோடிக்கு மரியாதை சேர்க்காது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டதே!

தினமணி எழுதுகிறது:

அமித்ஷாவின் அரசியல் திறமைகள்பற்றி யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேநேரத்தில் கட்சித் தலைவராக, அதிலும் குறிப்பாக, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவராக அமித்ஷாவைப் பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்து நியமித்திருப்பது  - தார்மீக ரீதியில் சரியானதுதானா என்ற கேள்விக்கு மன சாட்சியுடைய யாரும் ஆம் என்று பதிலளித்து விடவும் முடியாது! என்கிறது தினமணி

பி.ஜே.பி. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மூச்சு முட்ட எழுதி வந்த - செய்திகளை அந்தக் கோணத்தில் சித்தரித்த தினமணியே, அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராகக் கொண்டு வந்தது மனச்சாட்சியற்ற செயல் என்று காலை வாரிவிட்டதே!

குஜராத் மாநிலத்தில் காவல்துறை டி..அய்.ஜி.யாக இருந்த வன்சாரா, வெளியிட்ட அறிக்கை மிக முக்கியமானது.

போலி என்கவுன்டர்களுக்கு குஜராத் முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பு. அவர்கள் வழிகாட்டியபடிதான் போலி என்கவுன்டர்கள் நடந்தன.

நாங்கள் குற்றவாளிகள் என்றால், எங்களுக்கு ஆணையிட்ட, வழிநடத்திய முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குற்றவாளிகள்தான் என்று சொன்னாரே!

இந்தியாவிலேயே மோடி ஆண்ட குஜராத்தில்தான், காவல்துறை அதிகாரிகள் 32 பேர் அதிக எண்ணிக்கை யில் கைது செய்யப்பட்டனர். மோடி அரசாட்சி எத்தகையது என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா?

என்கவுன்டரில் அமித்ஷாவின் பங்குபற்றி தினமணி தனது தலையங்கத்திலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சொராபுதீன் போலி துப்பாக்கிச் சூடு (என்கவுன்டர்) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முக்கியமான குற்றவாளியும், சூத்திரதாரியும், அப்போது குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா 2010 இல் அந்த வழக்கின் பின்னணியில், பதவி விலகியவர், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக் கப்பட்டவர். அந்த வழக்குகள் இன்னும் முடியவில்லை என்று தினமணி தலையங்கத்திலேயே அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளதே, என்ன பதில்?  இதுதான் பி.ஜே.பி.யின் தார்மீகப் பண்பாட்டின் தலைசிறந்த அரசியல் ஒழுக்கமா?

உத்தரப்பிரதேசத்திலும், மோடியின் பிரதிநிதியாக இருந்து தேர்தலில் மொத்தம் 80 இடங்களில் 73 இடங் களில் பி.ஜே.பி. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா என்று மகுடம் சூட்டுகிறார்கள்; இருக்கட்டும், அந்த வெற்றியை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறை என்ன? மதக் கலவரத்தைத் தூண்டியதுதானே? படுகொலைகள் எத்தனை? இலட் சக்கணக்கான சிறுபான்மையினர் முகாம்களில் தஞ்ச மடைய நேர்ந்த அவல நிலைக்கு இவர்தானே பொறுப்பு?

மதக்கலவரத்தை நடத்தி இந்து வாக்கு வங்கி, முஸ்லிம் வாக்கு வங்கி என்று கூறு போட்டு, வாக்குகளை அள்ளியதுதானே அவர் மேற்கொண்ட யுக்தி.

தேர்தல் நேரத்தில் அவர் என்ன பேசினார்? மக்களை எப்படித் தூண்டினார்?

உத்தரப்பிரதேச மக்களுக்கு இந்த மக்களவைத் தேர்தல் ஒரு கவுரவப் பிரச்சினை. முசாபர் நகர் கல வரத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்கு வதற்காக இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். கலவரத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தத் தேர்தல் மூலம் பாடம் புகட்டவேண்டும்.

உணவு, தூக்கம் இல்லாமல்கூட மனிதன் உயிர் வாழலாம். பசி, தாகம் ஏற்பட்டாலும் அதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாம். ஆனால், அவமதிக்கப் பட்டால், அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது; இங்கு நாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம். நமக்கு நீதி கிடைக்கவில்லை. முன்பெல்லாம் அம்புகளையும், வாளையும் வைத்து, பழிவாங்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது அதற்கான அவசியம் இல்லை. ஓட்டுப் பதிவு இயந்தி ரத்தில், பட்டனை அழுத்தினாலே பழிவாங்க முடியும் என்று பேசியவர் தான் பி.ஜே.பி.யின் இன்றைய அகில இந்தியத் தலைவர்.

குஜராத்தில் மதக் கலவரத்தை ஊக்குவித்தவர் பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் அதையே செய்தவர் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்.

நாடு எங்கே போகிறது? எதிர்காலம் அமைதியைக் கேள்விக் குறியாக்கும் காலமாக மாறிவிடுமோ என்கிற அச்சம், வெகுமக்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு, வெகுமக்களா தண்டனையை அனுபவிக்கவேண்டும்?

விழிப்புணர்வு தேவை! தேவை!!

Wednesday, July 9, 2014

இஸ்லாம் இந்து மத ஒற்றுமை வேற்றுமை

இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை

இஸ்லாம் மத ஒழுக்கம்
1. மதுபானம் கூடாது.

2. சூதாடுதல் கூடாது.

3. விபசாரம் கூடாது.

4. வட்டி வாங்குதல் கூடாது.

5. போர் செய்தல் கூடாது.

இந்து மத ஒழுக்கம்

1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்)

2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்)

3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை)

4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்)

5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்)

மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இஸ்லாம் மதம், கிருஸ்தவ மதம் ஆகிய மதங்கள் எல்லாம் ஒன்றே.

கடவுள்

இந்து மதத்தில் பல கடவுள்கள் உண்டு.

இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஒவ்வொரு கடவுள் தான் உண்டு.

கடவுள் சாயல்

இந்துமதம் கடவுளை மனிதனாகவே மனித ரூபகமாகவே பாவிக்கிறது. இஸ்லாம்மதம் கடவுளை மனிதனாகக் கூறுகிறது. அதாவது கடவுளை ஆண்டவன் அவன் இவன் என்று சொல்லுகிறது.

உலக சிருஷ்டி

இந்து மதம் கடவுளால் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்று கூறுகிறது.

இஸ்லாம் மதமும் உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதென்றே கூறுகிறது.

பாவ புண்ணியக் கணக்கு

இந்து மதத்தில் மனிதனுடைய செய்கையை குறித்து வைத்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். சித்திரபுத்திரன் எழுதி வைப்பார்.

இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைகளைக் குறித்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். இரண்டு தூதர்கள் எழுதி வைப்பார்கள்.

சொர்க்க நரகம்

இந்து மதத்தில் மனிதனுடைய பாவத்துக்கு நரகமும் புண்ணியத்துக்கு சொர்க்கமும் உண்டு.

இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைக்கு பாவத்துக்கு நரகம், புண்ணியத்துக்கு சுவர்க்கமும் உண்டு.

ஏழு நரகம்

இந்துக்களுக்கு 7 நரகம் உண்டு.

இஸ்லாம்களுக்கு 7 நரகம் உண்டு.

தூதர் பிசாசு

இந்துக்களுக்கு தேவ தூதர்களும் பிசாசும் உண்டு.

இஸ்லாம் மதத்துக்கும் தேவ தூதர்களும் பிசாசுகளும் உண்டு.

நான்கு வேதம்

இந்துக்கள் வேதங்களுக்கு ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு பெயர்கள்.

இஸ்லாம் வேதத்துக்கு தைரத்து, ஜபூரு, இஞ்சிலு, குர்ஆன் என நான்கு பெயர்கள்.

அவதார புருஷர்

இந்துக்களுக்கு அவதார புருஷர்கள் தெய்வாம்ச புருஷர்கள் ஆகிய லக்ஷக்கணக்கான ஆழ்வார்கள், நாயன்மார்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் லக்ஷக்கணக்கான தேவதூதர்கள், நபி மார்கள் ஆகியவர்கள் உண்டு.

புண்ணிய ஸ்தலங்கள்

இந்துக்கு புண்ணிய ஸ்தலங்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் புண்ணிய ஸ்தலமுண்டு.

பண்டிகை

இந்துக்களுக்கும் பண்டிகை விரதாதிகள் உண்டு.

முஸ்லீம் மார்க்கத்துக்கும் பண்டிகை விரதங்கள் உண்டு.

தொழுகை

இந்துக்களுக்கும் தொழுகை, பிரார்த்தனை இவற்றிற்கு முறைகள், கணக்குகள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொழுகை பிரார்த்தனை கணக்குகள் முறைகள் உண்டு.

தான தர்மம்

இந்துக்களுக்கும் தான தர்மங்கள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்திலும் தான தர்மங்கள் உண்டு.

விசேஷ நாள்

இந்துக்களுக்கு விசேஷ நாள், ஓய்வு நாள் உண்டு.

இஸ்லாம் மார்க்கத்திலும் விசேஷ நாள் ஓய்வு நாள் உண்டு.

மற்றவர்கள் மட்டமானவர்கள்

இந்துக்கள், இந்து அல்லாதவர்களை மிலேச்சர்கள் என்கிறார்கள்.

இஸ்லாம் மதத்தில் இஸ்லாம் அல்லாதவர்களை காபர்கள் என்கிறார்கள்.

உள் பிரிவு

இந்து மதத்திலும் உள் பிரிவுகள் உண்டு.

இஸ்லாம் மதத்தில் உள் பிரிவினர்கள் உண்டு.

யுத்தம்

இந்து மதத்தில் மத யுத்தம் நடந்திருக்கிறது.

இஸ்லாம் மதத்திலும் மத யுத்தம் நடந்திருக்கிறது.

சடங்கு

இந்து மதத்திலும் சடங்குகளும் மந்திரங்களும் உண்டு.

இஸ்லாம் மதத்திலும் சடங்குகள் மந்திரங்கள் உண்டு.

செத்தவர் சரீரம்

இந்து மதத்திலும் செத்தவர்களுக்கு சரீரம் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கும்.

இஸ்லாம் மதத்திலும் செத்தவர்கள் எழுப்பப்பட்டு விசாரணை நடக்கும்.

சமாதுக்கு கிரிகை

இந்து மதத்திலும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு.

இஸ்லாம் மதத்துக்கும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு.

சமாது வணக்கம்

இந்துக்களுக்கும் சமாது வணக்கம் உண்டு.

இஸ்லாம்களுக்கும் சமாது வணக்கம் உண்டு.

புனித ஸ்தலங்கள்

இந்துக்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்கு (அடக்கமானதற்கு) ஆக விசேஷ ஸ்தலங்கள் உண்டு.

இஸ்லாம்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்காக விசேஷ ஸ்தலங்கள் உண்டு.

மேல்கண்ட அனேக விஷயங்களில் கிறிஸ்தவ மதமும் இதை அனுசரித்தேதான் இருக்கின்றது.

ஆகவே பொதுவாக மதம் என்றால் கடவுள், நல்வினை, தீவினை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இறந்த பிறகு இவைகளை அனுபவித்தல் சடங்கு மந்திரங்கள் என்பவை இல்லாமல் எந்த மதமும் இருக்க முடிவதில்லை.

ஒருமனிதன் கடவுள் என்பதை ஒப்புக்கொண்டு சொர்க்க நரகம், நல்வினை, தீவினை, பாவம் புண்ணியம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளா விட்டால் நாஸ்திகனாய் விடுகிறான்.

நல்வினை தீவினை என்பவைகளோ மதத்துக்கு ஒரு விதமாய் இருக்கிறது. இந்துவுக்கு கள் குடிப்பது பாவமல்ல. முஸ்லீம்களுக்கு கள் குடிப்பது பாவம். முஸ்லீமுக்கு மாட்டைக் கொல்வது தின்பது பாவமல்ல. இந்துவுக்கு மாட்டைக் கொல்வது தின்பது பாவமாகும். இதுபோல் இன்னும் அனேக விஷயம் உண்டு. ஆதலால் மதம் என்பது எல்லோருக்கும் ஒன்று போலவே இருந்தாலும் மத சம்பிரதாயம் வேறு வேறாய் இருந்து வருகிறது.

மத சம்பிரதாயங்களைப் பார்க்கும் போது சொர்க்க நரக விஷயத்தில் எல்லா மதங்களும் ஒன்றுபோல்தான் என்றும், நல்வினை தீவினை என்பதும், பாவ புண்ணியம் என்பதும் எல்லா மதத்திலும் கட்டுப்பாடுகள் என்றும், ஆனால் அந்த அந்த மதக்காரர்களின் காலதேசத்துக்கு தக்கபடி சௌகரியத்துக்கு தக்கபடி ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டவைகள் என்றும் விளங்கும்.

--------------- தந்தைபெரியார் - “குடி அரசு” கட்டுரை 03.05.1936

தாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணர்ந்திருக்கிறார்களா?

பெண்ணின் அணிமணி, அலங்காரத்திற்கு வரம்பு தேவை 
 
வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியானது இதுவரை நடைபெற்று வந்த நிகழ்ச்சிக்கு மாறுதலாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி சமீப காலத்தில் 40, 50 ஆண்டுகளுக்கு முன் மனித சமுதாய முறைகளில் சில மாற்றங்கள் செய்த போது இந்நிகழ்ச்சியும் மாற்றியமைக்கப்பட்டது என்பதோடு பழைய முறையில் பெண்ணடிமையை நிலைநிறுத்தும் படியாகவும் மனிதனின் மூட நம்பிக்கையை வளர்ப்பதாகவும், ஜாதி அமைப்பைக் காப்பாற்றுவதாகவும் இருந்ததால் இவற்றை ஒழித்து புது முறையைக் காண வேண்டியதாயிற்று. தமிழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது கிடையாது. ஆணும் பெண்ணும் கூடி வாழ்கிற இந்த முறையானது ஆரியனுக்குத்தான் உண்டு. தமிழனுக்குக் கிடையாது. பார்ப்பானுக்காக பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இக்கூட்டு வாழ்க்கை முறையாகும்.

பார்ப்பனர்களிடையே ஒழுக்கக்கேடுகள் ஏற்பட்டபின் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவைதான் சடங்குகள், முறைகள் யாவுமாகும். இதைத் தொல்காப்பியன் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளான்.

 சூத்திரர்கள் என்பவர்களுக்கு நாலாம் ஜாதி மக்களுக்கு சதி, பதி முறை இல்லை. சூத்திரர்கள் என்பவர்கள் பார்ப்பானுக்கு தாசி புத்திரர்கள். தாசி புத்திரர்களுக்குத் திருமண உரிமை கிடையாது. இது மனுதர்ம சாஸ்திரம் மட்டுமல்ல, இந்துச் சட்டமுமாகும்.

இதை மாற்ற வேண்டுமென்று, மனித சமுதாயத் தொண்டு செய்த எவருமே முற்படவில்லை. நான் ஒருவன்தான் இதற்காகப் பாடுபட்டு வருகின்றேன். எனது இயக்கம் பாடுபட்டு வருகிறது.

நம் நாட்டில் தோன்றிய எந்த மனிதச் சமுதாயத் தொண்டு செய்தவர்களும், புலவர்களும், நீதி சொன்னவர்களும் பெண்கள் என்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று சொன்னார்களே தவிர, பெண்கள் ஆண்களைப் போல் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று எவருமே சொல்லவில்லை. திருத்தப்பட்ட இம்முறையிலும் பெரும்பாலோர் நம் கருத்துப்படி நடந்து கொள்வது கிடையாது. இதன் மூலம் பாப்பானையும், சடங்குகளையும் தவிர்த்திருக்கிறார்களே ஒழிய, மற்ற செலவுகளில் எதையும் குறைத்ததாகத் தெரியவில்லை. தாலி கட்டுவதில் உள்ள இழிவைப் பெண்கள் உணராதிருக்கிறார்கள். தாலி என்பது பெண்கள் அடிமைகள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய விளம்பரச் சின்னமாகும். இதை உணராது பெண்களே தாலி கட்டிக் கொள்ள முன் வருவதற்குக் காரணம் அவர்களுக்குப் போதிய கல்வி அறிவு இல்லாததாலேயே ஆகும்.

எனது கருத்து கணவன் - மனைவி என்கின்ற இம்முறையையே சட்டவிரோத மாக்க வேண்டும். பகுத்தறிவுள்ள மனிதன், சுதந்திரமாக வாழ வேண்டிய மனிதன், இல்லறம் என்கின்ற பெயரால் தன் சுதந்திரத்தை இழப்பதோடு தொல்லைகளுக்கும் ஆளாகின்றான். குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தனது சுயமரியாதையை மனிதன் இழக்கின்றான். பெண்கள் தங்களின் அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அவர்களுக்கு அணிமணிகள் வாங்கிக் கொடுத்து அணியச் செய்கின்றனர். நம்நாட்டுப் பெண்களைப் போன்று வேறு எந்த நாட்டுப் பெண்களும் நகை அணிவது கிடையாது. சிங்காரித்துக் கொள்வது கிடையாது. ஆண்களைப் போன்று சாதாரண வாழ்வே வாழ்கின்றனர்.

நல்ல அரசாங்கமாக இருந்தால் நான்கு முழத்திற்கு மேல் பெண்கள் சேலை கட்டக் கூடாது, தலை முடியை கிராப் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் போடும். எதற்காக ஒரு பெண்ணுக்கு 18 முழம் புடவை? இதைப் பெண்களும் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் உலகத்திலுள்ள பகுத்தறிவில் கால் பகுதி கூட பெறவில்லை. மற்ற நாட்டு மக்கள் சந்திரனுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கிற காலத்தில் நம் மக்கள் கோயிலையும், குழவிக் கற்களையும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலை மாறி பெண்கள் நல்ல வண்ணம் கல்வி கற்க வேண்டும். நம் சமுதாயத்தைத் திருத்தி அமைக்கும்படியான நல்ல அரசாங்கம் அமைய வேண்டும்.

சமுதாய அமைப்பைப் பற்றி நல்ல திட்டம் போட வேண்டும். எப்படி சொத்திற்கு உச்சவரம்பு போட்டிருக்கிறார்களோ, அதுபோன்று பெண்களின் அலங்காரத்தைக் குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்கள் கிராப் செய்து கொள்ள வேண்டும். முடியை அலங்கரிப்பதில் அதிக நேரத்தை பெண்கள் வீணாக்குகின்றனர். நாலு பேர் போற்றும்படியான பெண்கள் நம் நாட்டில் எவருமில்லையே! பெண்களுக்கு மூட நம்பிக்கை, முட்டாள்தனத்தில் உள்ள சுதந்திரத்தைக் குறைக்க வேண்டும். தமிழர் சமுதாயம் உலகத்தின் தலைசிறந்த சமுதாயமாக வாழ வேண்டுமானால் பெண்கள் கல்வி பெற வேண்டும். பகுத்தறிவு பெற வேண்டும். பொதுவாக பெண்கள் 20 வயது வரை படிக்க வேண்டும். படித்து ஒரு தொழிலில் ஈடுபட்ட பின்பே பெண்கள் திருமணத்திற்கு முன்வர வேண்டும். மணமக்கள் குடும்பம் நடத்துவதோடு சமுதாயத்திற்குத் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்.

-------------------தந்தை பெரியார்--"விடுதலை" 30.11.1970

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிந்தனைகள்...!



பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சாரம் காரணமாகத்தான், பார்ப்பனர்களால் இழித்துக் கூறப்பட்ட ஜாதியில் பிறந்த காமராசர் தமிழக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் வர முடிந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசர் ஆட்சியைப்பற்றி இன்று நடப்பது காந்தி காங்கிரஸ் அல்ல; சுயமரியாதை காங்கிரஸ் என ஆச்சாரியாரே கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்பட்டது காமராசரால்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட காமராசர் பெரியாரை தம் வழிகாட்டியாகக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கதர்ச் சட்டைக்குள் ஒரு கருப்புச் சட்டை ஆட்சி நடத்துகிறது என்று காமராசர் ஆட்சியை விமர்சித்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எந்த இந்துமதப் பண்டிகையும் கொண்டாடாதவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954-1963 காமராசரின் ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என அறிவாசான் தந்தை பெரியாரால் போற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954 தேர்தலில் காமராசரை பச்சைத் தமிழர் என வர்ணித்து தேர்தலில் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அண்ணாவின் திராவிட ஏடு பத்திரிகையில் புகழ் பெற்ற குலக்கொழுந்தே, குணாளனே என பாராட்டி, காமராசரைப்பற்றி அறிஞர் அண்ணா தலையங்கம் எழுதினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1939 இல் 2500 ஆரம்பப் பள்ளிகளையும், 1953 இல் 6000 ஆரம்பப் பள்ளிகளையும் கிராமங்களில் இழுத்து மூடி, எஞ்சியுள்ள பள்ளிகளில் ஜாதித் தொழில் பயிற்சி (குலக்கல்வி) என்ற கொடுமையான கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டுவர, பெரியாரின் கடும் போராட்டம் (கத்தி, பெட்ரோல், தீப்பந்தம்) காரணமாக ஆச்சாரியார் பதவியை விட்டு விலகினார். தந்தை பெரியாரே காமராசரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1954 இல் 16,000 தொடக்கப் பள்ளிகளை, காமராசர் ஆட்சியில் 30,000 தொடக்கப் பள்ளிகளாக உயர்த்தி, 16 லட்சம் மாணவர்கள் படித்த நிலையை மாற்றி, 48 இலட்சம் மாணவர்கள் படிக்க வழிவகை செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அதேபோல், 1954-இல் 450 உயர்நிலைப் பள்ளிகள் 2200 உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தி 3.86 இலட்சம் மாணவர் எண்ணிக்கையை 13 இலட்சம் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து படிக்கக் காரணமானவர் காமராசர்; அதற்குக் காரியம் ஆனவர் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?


பள்ளிக் கூடங்களையும், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைகளையும் உயர்த்தியதோடு, மதிய உணவு திட்டமான பகல் உணவு மய்யங்களையும் காமராசர்தான் திறந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசரை கல்விக் கண் திறந்த இரட்சகர் எனப் பேராசான் தந்தை பெரியார் பாராட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு, காமராசர் வாழ்த்து பாடலாம் என காமராசருக்குப் புகழ் சேர்த்தவர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பலரது பார்வையில் காமராசர் படிக்காதவர்; ஆனால், அவரால்தான் மக்கள் படித்தனர். அவருக்குக் குடும்பம் எல்லாம் மக்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசரின் நிர்வாகத் திறன் காரணமாக, மக்கள் நல அணுகுமுறைகள், கிராமங்களிலெல்லாம் கல்வி நீரோடை வாய்ப்பற்ற மக்களுக்கு வாய்ப்பு தந்தவர்; பிரதமர் பதவிக்கு அவரை அழைத்தும்கூட, ஏற்காத தியாக உள்ளத்திற்குச் சொந்தக்காரர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பதை மாற்றி, பள்ளி இல்லாத ஊரில் யாரையும் குடியிருக்கவிட மாட்டேன் என்று ஆட்சி புரிந்தவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உழைக்கவேண்டியதே, ஏழையாய் இருப்பதே தலையெழுத்து என்றால், அந்தத் தலையெழுத்தை மாற்றி எழுதுவேன் என்றவர் தான் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதற்காக அயோக்கியனாய், திருடனாய், சோம்பேறியாய் இருந்தாலும் உத்தமன் ஆகிவிடுகிறான். தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவன் நாணயப் பொறுப்புள்ளவனாக இருந்தாலும், இனப் பாகுபாடு அவனை முன்னுக்கு வராமல் தடுக்கிறது. இப்பிளவை நீக்கி அனைவரும் சமம் என்ற ரீதியில் மக்களை நடத்துவதுதான் சமதர்மம் என்றவர்தான் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தகுதி - திறமை பேசும் மோசடிப் பார்ப்பனர்களைப் பார்த்து,
எந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து இன்ஜினியராகி பாலம் கட்டி இடிந்தது; எந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து டாக்டராகி ஊசி போட்டு நோயாளி செத்தார் எனச் சாட்டையடியாகக் கேள்வி கேட்டு இடித்துரைத்தவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?


1954-1957 அவரது அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறையில் பரமேஸ்வரன் என்ற ஆதிதிராவிடரை அமைச்சராக்கி, சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1961 இல் சென்னையில், தந்தை பெரியாருக்குப்பின் காமராசருக்குத்தான் உயிரோடு இருக்கும்போதே சிலை வைத்து, பிரதமர் நேருவால் திறக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காமராசர் ஆட்சியில்தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

1966 இல் டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராசர் வீட்டிற்கு, பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரால், திரிசூலங்களுடன் நிர்வாணச் சாமியார்கள், தீ வைத்து காமராசரை உயிரோடு கொளுத்திட முயற்சி செய்த கூட்டம்தான் இன்றைய பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். (அன்றைய ஜனசங்கம்) என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் இன்னும் 10 ஆண்டுகாலம் காமராசரை பதவியிலிருக்கும்படி பார்த்துக்கொண்டால், பார்ப்பான் கைக்கு மண் வெட்டியும், பாப்பாத்தி கைக்கு களைக்கொத்தும் வந்துவிடும் எனத் தந்தை பெரியார் கூறினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

------------------ தொகுப்பு: த. செயக்குமார் எம்.எஸ்ஸி., "விடுதலை" 15-7-2008

திராவிடர் கழகம் கட்சியல்ல- இயக்கம்!

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, இந்த மயிலாப்பூர் திராவிட இளைஞர் கழகத்தின் சார்பாக பேசும்படி எனக்கு வாய்ப்பு அளித்த செயலாளர்களுக்கு எனது நன்றி. வரவேற்றுப் பத்திரம் வாசித்தளித்து புகழ்மாலை கூறியதற்காகவும் எனது நன்றி. அதிலே கூறியிருக்கிற புகழுக்குத் தகுதியற்றவன் ஆனாலும் உங்களுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடக்க முயற்சிக்கிறேன்.

 இவ்வளவு ஆடம்பரமாக பணம் செலவு செய்து பூமாலைகள் போடுவதைவிட கருப்புத் துணியாவது போடலாம். முதன் முதலிலே இந்த இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். இளைஞர்களாகிய நீங்கள் கட்டுப்பாடாக இருந்து ஒழுங்காய், மற்றவர்கள் நம்மைப் பார்த்து மதிக்கும்படி நடந்து கொள்ளுங்கள். 

வெற்றி ஒலி முழங்குகிற காலங்களிலும், கழகக் கொள்கை ஒலி முழங்குகிற காலங்களிலும், கேட்கிறவர்கள் இதற்கு வசப்படும்படியாக இணங்கும்படியாக இருக்க வேண்டும் மற்றவர்கள் மன வருத்தம் அடையும்படியாகவோ வெறுப்பு அடையும் படியாகவோ ஆத்திரப்படக் கூடியதாகவோ இருக்கக் கூடாது. வேண்டுமானால் அறியாமை ஒழிய வேண்டும், மூட நம்பிக்கை ஒழியவேண்டும் என்பது போன்ற சொல்லைச் சொல்லுங்கள். எப்பொழுதும் 'வாழ்க' என்றே முழக்கம் செய்யுங்கள்.

ஏன்? இப்பொழுது நாம் நல்ல வெற்றியடைந்து வருகிறோம். யாரையும் நாம் வைது வெற்றியடைய வேண்டியதில்லை. நம்முடைய குறைபாடுகளைச் சொல்வதன் மூலமே, நம்மை நொந்து கொள்வதன் மூலமே இனி நாம் வெற்றியடையப் போகிறோம். சிறிது காலமாக நம் மக்களுக்குச் சிறிதாவது மான உணர்ச்சி உண்டாகும்படி செய்து வந்திருக்கிறோம். இது வளர்ச்சியடைய வேண்டும். எதிரிகளும் திருந்தும்படிச் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும். இதில் நம்பிக்கை வைத்து ஒழுங்காய் நடக்க வேண்டும். நமது கழகக் கொள்கையைப் பற்றிய போராட்டம் நமக்குள்ளேயே நடக்கக்கூடாது. இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு எப்பொழுது
கழகத்தில் சேர்ந்து விட்டோமோ அதற்குமேல் அந்தக் கொள்கையைப் பற்றிச் சந்தேகப்படக் கூடாது. தலைவர்களை உண்மையாய் பின்பற்ற வேண்டும். சுயநலத்துக்காக வஞ்சகக் கருத்தோடு கட்சிப் போர்வையில் இருக்கக் கூடாது. தலைவரைக் குறைகூறிக் கொண்டு வைது கொண்டு கட்சிக்குள்ளேயே கலகம் செய்யக்கூடாது. இது எல்லாக் கட்சிக்கும் உள்ள பொதுவான விதி.

தோழர்களே சிந்தித்துப் பாருங்கள். கட்சிக்குள்ளேயே கலக உணர்ச்சியும் கட்டுப்பாடற்ற தன்மையும் ஏற்பட்டால், கட்சி கலகலத்து விடாதா? தோழர்களே! நம்முடைய நிலைமை இன்றைய தினம் மிக மிக பரிதாபகரமான தன்மையிலேயே இருக்கிறது. நாம் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறோம். நமக்கு ஏற்படும் தொல்லைகள் ஏராளம். நமது கட்டுப்பாட்டைத் தடுக்கும் சூழ்ச்சிகள் ஏராளம் நம்முடைய திட்ட நடப்பைத் தடுக்கும் காரியங்கள் ஏராளமாய் நடைபெறுகின்றன. வெள்ளையாகப் பேசுகின்றேன். நமக்கு யாருடைய ஆதரவு இருக்கிறது? ஒரு சர்.ராமசாமி முதலியார், சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் போன்ற அறிவாளிகளுடைய செல்வான்களுடைய ஆதரவு உண்டா? எந்தப் பிரபுக்கள் மிராசுதார்கள் நம்மை ஆதரிக்கிறார்கள்? எந்தப் பத்திரிகை நம்மை ஆதரிக்கிறது? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். யாரையும் குறை சொல்வதற்காகச் சொல்லவில்லை.

கார்ப்பரேஷனில் உள்ள ஒரு பார்ப்பனன் ஆயிர ரூபாயைத் திருடிவிட்டால், திருவாங்கூரிலுள்ள திவான் கவர்னருக்குச் சிபாரிசு செய்ய வருகிறார், நமக்கு என்ன ஆபத்து வந்தாலும் கேட்க நாதியில்லை. நமது கொட்டகையைக் கொளுத்தினார்கள். நம் தோழர்களை அடித்தார்கள். கண்களைக் குத்தினார்கள். சட்ட சபையிலே இதைப்பற்றி யாராவது கேட்டார்களா? சட்ட சபையிலே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகள் இல்லையா? யாராவது ஒரு வார்த்தை கேட்டார்களா? நமது நிலைமை அவ்வளவு நாதியற்றதாக, கதியற்றதாக இருக்கிறது.

 பத்திரிகை வசதி யாராவது உண்டா? நமது செய்தியை ஒரு பத்திரிகைக் கூட போடுவதில்லை. இல்லை பத்திரிகை ரிப்போர்ட்டர்களாவது நம்மைப் பற்றிச் சரியாக எழுதுகிறார்களா? அவர்கள் இங்கே எதற்காக வருகிறார்கள் என்றால், நமது கூட்டத்தில் கல், செருப்பு விழுந்ததா? கலகம் நடந்ததா என்பவைகளைக் காணவும், எழுதவும் தான் வருகிறார்கள். 

இந்த ஊரில் எப்படி இருந்தாலும் வெளியூர்களிலேயுள்ள ரிப்போர்ட்டர்கள் அப்படித்தான், நம் இயக்கப் பத்திரிகைகள் என்பவைகளால் நமக்குத் தொல்லை தான் அதிகம். எனவே நமக்கு நாதியுண்டா? நமக்குள்ள குறைபாடுகள் அவ்வளவு இருக்கின்றன. இவைகளுக்கிடையே தான் நாம் வளரவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்கத்தில் தொண்டாற்றி வருகிறோம். இயக்கமும் வளர்ந்து வருகிறது.

தோழர்களே, நமது திராவிட கழகம் என்பது கட்சியல்ல. காங்கிரசைப் போல் நமது கழகம் கட்சியல்ல; இயக்கமாகும். கட்சி என்பது தோல்விக்கும், வெற்றிக்கும் கட்டுப்பட்டது. இயக்கம் என்பது இவைகளுக்கெல்லாம் கட்டுப் பட்டதேயல்ல. ஒரு தனி மனிதனுடைய உள்ளத்தில் உணர்ச்சி யிருக்கும் வரையில் அது இருந்துதான் தீரும்.

ஜஸ்டிஸ் கட்சி ஒரு கட்சியாயிருந்தால் தோல்வி நிலைக்கு வந்தது. அதேபோல காங்கிரஸ் இப்போது வெற்றியடைந்து பதவியேற்கும் நிலைமைக்கு வந்துங்கூட அது சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றே சாகவேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. வைசியராய், முதன் மந்திரி, கவர்னர் போன்ற பதவிகளும் பட்டங்களும் காங்கிரஸ்காரர்கள் காலடியிலே வந்து விழுகின்றன என்றாலும் அவர்கள் தலைவர்களே சொல்கிறார்கள் "இனி காங்கிரஸ் இருக்க வேண்டியதில்லை. கலைத்துவிடலாம்" என்று, அந்த நிலைக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் கட்சி என்பது அழியவேண்டியது தான். ஆனால் நாம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இயக்கம் ஒழிய வேண்டியதில்லை. ஒரு மனித சமுதாயம் உள்ள வரையில் அது பணியாற்றியே தீரும்.

நமது இயக்க வேலைகளை, நாம் மந்திரிப் பதவியடைவதன் மூலமே அடையமுடியும் என்று கருதுவதும் பிசகு. ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தோல்வியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளானார்கள். அதுபோல காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வெற்றியடைந்த பிறகு நெல்லிக்காய் மூட்டைகளாகி வருகிறார்கள். இப்பொழுது பார்க்கிறோமே தினம் தினம் வேடிக்கையை, ஹோம் ரூல் கட்சி என்ன ஆனது? ஆங்காங்கே கிளை ஸ்தாபனங்களை ஏற்படுத்தி நல்ல அமைப்பு அமைந்ததிலே அன்னிபெசன்ட் அம்மையார் பேர் எடுத்தார்கள். ஸ்தாபன ரீதியாக வேலை செய்தார்கள். சி.பி. ராமசாமி அய்யர் போன்ற பார்ப்பனர் எல்லாம் பெரும் பெரும் பதவிகளை அடைந்தார்கள். இப்பொழுது அந்தக் கட்சி எங்கே இருக்கிறது? அழிந்துவிட வில்லையா? ஆனால், இயக்கம் அப்படியல்ல. அது தன்னுடைய காரியத்தை பதவியின் மூலம் தான் செய்ய முடியும் என்பதில்லை. மக்களுடைய உள்ளத்தில் கருத்துக்களைப் புகுத்தி வைப்பதன் மூலம் தான் அது வெற்றி அடைவது.

மற்றும் எதைச் சொன்னால் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள், எதைச் சொன்னால் மக்களுடைய ஆதரவு கிடைக்கும். எதைச் சொன்னால், மக்களுடைய ஆதரவு கிடைக்காது என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து கட்சி என்பது பணியாற்றும். ஆனால், நாம் இயக்கத்தவர்களாகிய நம் மக்களைத் திருத்த வேண்டும். அவர்களுடைய மனதை மாற்ற வேண்டும். அவர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். அவர்களுடைய புத்தி திருந்த வேண்டும். அவர்கள் உள்ளத்தில் மாறுதல் அடைய வேண்டும் என்று வேலை செய்பவர்கள் அப்பொழுதுதான் நமது லட்சியம் வெற்றி அடையும்.

மக்களுடைய ஆதரவுக்காக நாம் கவலைப்பட மாட்டோம். மக்கள் ஏற்றாலும் வைதாலும் கவலைப்படாமல் இருப்போம். நம்மைப் பொறுத்தவரையில் நம் பின்னாலே மக்கள் வரவேண்டுமே தவிர, பாமர மக்கள் பின்னாலே ஓடுவது இல்லை. கல்லடி பட்டாலும் சரி, வெற்றியடைந்தாலும் சரி, நமக்குப் பட்டதைச் சொல்லியே தீருவோம். அப்படி நாங்கள் எங்களுடைய பின்னாலேயே மக்கள் பின் தொடரவேண்டும் என்று வேலை செய்தனாலேயே தான், இப்பொழுது எங்களுக்கு ஓரளவு வெற்றி கிடைத்து வருகிறது.

எங்களைக் கல்லால் அடித்தவர்கள் எல்லாம், "அப்போது உங்கள் மீது கல் போட்டது ஒரு கை; இப்போது உங்களைக் கூப்பிடுவது இரு கையால்", என்று கூப்பிட்டு அழைக்கிறார்கள். ஓடி ஓடிக் காங்கிரஸ்காரர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு ஆதரவு வளர்ந்து கொண்டே இருக்கிறது. மக்கள் உள்ளத்தில் உள்ள பல தவறுதல்களை, மக்களுடைய மனதில் படிந்துள்ள மாசுகளை, மக்களுடைய அறியாமையைத் திருத்தி அவர்களுடைய உள்ளத்தையே திருப்பும் புரட்சிகரமான வேலையையே நாம் லட்சியமாகக் கொண்டிருக்கிறோம். நாம் திராவிடர்கள் என்பதையும், நமக்கு இருந்ததை நம் எதிரிகள் மறைத்து விட்டதை ஞாபகப்படுத்தி நாம் யாவரும் திராவிடர் உணர்த்துவதும் நமது திராவிடர் கழக வேலை திராவிடர்கள் என்றால், சில உரிமைகளுக்குத் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள். இழிவுகளைத் தாங்குபவர்கள் என்பது கூடவே ஞாபகத்துக்கு வருகிறது. திராவிடர்கள் என்றால், திராவிடர்கள் எப்படி இருந்தார்கள்? திராவிடனுடைய உரிமை என்ன? திராவிடனுடைய தனிப் பண்புகள் என்ன? திராவிடனுடைய நாகரிகம் எப்படி இருந்தது? என்பவைகளையும் உணரும் தன்மை கூடவே வருகிறது.

திராவிடன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட்டால், வேறு மாறு பெயர் சூத்திரன் என்று கூறிக் கொள்ளத்தான் வேண்டும். சூத்திரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுவதாலேயே திராவிடன் என்று கூறிக்கொள்கிறோம். திராவிடர் கழகம் என்றால் இன்று சூத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் கழகம் என்றுதான் அர்த்தம். ஏன் சூத்திரர்களுக்கும் கழகம் என்று கேட்டால், அந்த இழிவு நீங்குவதற்காகக் கழகம் வைத்துக் கொண்டிருக்கிறோம். சூத்திரர்கள் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறோம். அதனால் ஏற்படும் இழிவை ஒழிக்க விரும்புகிறோம் என்பதற்காகவே திராவிடர் கழகம் இருக்கிறது.

பிராமணர்கள் என்று கூறிக் கொள்ள பிராமணர்கள் பெருமைப்படுகிறார்கள். ஆகையால், அவர்கள் பிராமணர்கள் சங்கம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆகவே, இந்தக் குறைபாடுகள் ஒழியவேண்டும். சூத்திரன், பஞ்சமன், பார்ப்பனன் என்ற தன்மைகள் ஒழிக்கப்பட வேண்டும்.

நமது முன்னேற்றத்துக்கு இருந்து வருகிற தடைகள் எல்லாம் நீங்க நமக்கு மனிதத் தன்மை ஏற்பட வேண்டும். நமது அறியாமை ஒழிய வேண்டும்; இதற்குப் பாடுபடவே நாம் இருக்கிறோம். நம்மைத் தவிர வேறு யாரும் இன்று இவ்வேலையை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் சூத்திரராய் இருப்பதற்குக் காரணம் ஹிந்து மதம். ஆகையால் அது ஒழிய வேண்டும் என்கிறோம். வேறு மார்க்கம் இருந்தால் சொல்லுங்கள். நம்மைச் சூத்திரனாக்கியது இந்த இந்து மதமும், இந்து மதக் கடவுள்களுமாதலின் அவை ஒழிய வேண்டும் என்கிறோம். இதில் என்ன பிசகு. சூத்திரர்கள் இருப்பதற்கு இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்து குழவிக் கற்கள் சாமிகள் தான் காரணம். இவைகளை ஒழிக்காமல் இருப்பது மானமுள்ள ஒருவன் செயலாகுமா? எண்ணிப் பாருங்கள். இவை ஒழிந்து ஒழுக்கமுள்ள கடவுள், எல்லோரையும் ஒன்றாகவே பாவிக்கும் கடவுள் இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.

வேறு யார் இவைகளையெல்லாம் சொன்னார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், விவேகானந்தர்கள், மகாத்மாக்கள் என்பவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வார்த்தை இந்தப் பேதங்கள் எல்லாம் ஒழியவேண்டும், என்று சொன்னார்களா? இவைகளைச் சொல்லாததற்காக இவர்கள் எல்லாம் "சாமிகள்" ஆனார்கள்; இவைகளைச் சொன்னதற்காக நாங்கள் "பாவிகள்" ஆனோம். வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன் தோழர்களே, எல்லாருடைய இழிவைப் போக்கத்தான் நாங்கள் போராடுகிறோம்.

(தந்தை பெரியார் - "குடிஅரசு" 30.05.1947)

Tuesday, July 8, 2014

பார்வையிழந்தோர் வாக்களிக்க இயந்திரம்: கண்டுபிடித்த மாணவிகள்






பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் யாருடைய உதவியுமின்றி வாக்களிக்கும் வகையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கோவில் பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கணினித் துறை சார்பில், மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகளின் செயல்முறை விளக்க நிகழ்ச்சி  நடைபெற்றது.

கல்லூரியில் கணினித் துறையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அதில், பார்வையற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் மின்னணுவியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம், ரயில் பாதையை மூடும் தானியங்கிக் கருவி மற்றும் பயணத்தின்போது வைத்திருக்கும் பெட்டிகளை கண்காணிக்கும் கருவி ஆகியவை சிறந்த மாதிரியாக தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டது.

பார்வையிழந்த மாற்றுத் திறனாளிகள் வாக்களிப் பதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கணினித் துறை இறுதி ஆண்டு மாணவிகள் ருக்மணி, டஃபினி ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:

இந்த வாக்களிக்கும் இயந்திரத்தில் ஒரு விசைப்பொறி, தொடுதிரை மற்றும் வேட்பாளர்கள், கட்சியின் பெயர்கள், அவர்களின் சின்னங்களைச் சொல்லும் ஒரு பதிவு செய்தல் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் பார்வையற்றவர்கள் செவி, ஒலிபெருக் கியை காதில் அணிந்து அதன்மூலம் வேட்பாளர்களின் விவரங்களைக் கேட்டறிந்து, அவர்கள் விரும்பும் வேட் பாளருக்கு தொடுதிரை மூலம் வாக்களிக்கலாம். இதில் உள்ள விசைப்பொறி பொத்தான், எத்தனை வாக்காளர்கள் வாக்களித்தனர் என்ற எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு உதவியாக உள்ளது.

பார்வையிழந்தோர் செவி ஒலி பெருக்கியை காதில் அணியும்போது, ஒரு வேட்பாளர், கட்சியின் பெயர்களை 5 முறை சொல்லும். வாக்களிப்போர் இயந்திரத்தைப் பயன்படுத்தியவுடன் நன்றி என்று சொல்லும். இதனால் பார்வையிழந்தோர் வாக்களித்தது உறுதி செய்யவும் ஏதுவாக உள்ளது என்றார்.

சுருக்கேள்விகள்..... மனிதன் கேட்கிறான்

காசிக்கும், கயிலைக்கும் செல்வதன் மூலம் சொர்க்கத்தை அடைய முடியும் எனில் - காசில்லாதவன் சொர்க்கத்தை எவ்வாறு அடைவது?

அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனில், சோமாலியா மக்கள் யாருடைய குழந்தைகள்?

ஈரேழு உலகிற்கும் படைப்பின் கடவுள் பிரமன் எனில் - வேறு மதம் சார்ந்தவர்கள் யாரால் படைக்கப்பட்டார்கள்?
மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் - கோயில்களும் - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?

முற்றும் துறந்தவன் முனிவன், முனிவர்க் கெல்லாம் முனிவன் கடவுள் எனில் - பல கோடீஸ்வரக் கடவுள்கள் இருப்பது எப்படி?

தூணிலும் இருப்பான், துரும்பிலும், இருப்பான் கடவுள் எனில், தனிப்பட்ட முறையில் கோடீஸ்வரர்கள் எதற்கு?

அநீதியை அழிப்பவன் கடவுள் எனில், பாவங்கள் நிறைந்த கலியுகம் எப்படிக் கடவுளின் விதியால் நிகழ்ந்து கொண்டிருக்கும்?

பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்வதன் மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும் எனில், வழி அற்ற வறியவனுக்கு கடவுளின் ஆசி எப்படிக் கிடைக்கும்?

கோயில் திருவிழாக்கள், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் கலவரங்களை ஏற்படுத்துமாயின் கலவரங்களை ஏற்படுத்தும் கடவுளும், மதங்களும் தேவையா?
கருணை உள்ளவன் கடவுள் என்றால்  உயிர்ப் பலி கேட்டது யார்?

எல்லாம் விதியின் செயல் எனில், தண்டனை ஏன் நமக்கு?

ஒழுக்கத்தில் பிறந்த கடவுளைக் கவர, திருவிழாக்களில் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டங்களை ஆடச் சொன்னது யார்?

எல்லாம் அவன் செயல் எனில், குற்றங்களுக்குப் பின்னாலும் கடவுள் நிற்கிறாரா?
தெய்வம் நின்று கொல்லும் அதுவரை, பாதிக்கப்பட்டவன் உயிரோடு இருப்பானா?

எல்லாவற்றையும் காக்கும் கடவுளைக் காக்க, கதவும் பூட்டும் எதற்கு?

நல்லவர் மனதெங்கும் கடவுள் உள்ளார் எனில், கடவுளை மலையேறித் தரிசிக்க வேண்டிய அவசியம் என்ன?

கடவுள் முன் அனைவரும் சமம் எனில், சிறப்புக் கட்டண நுழைவுவாயில் எதற்கு?

அவனன்றி ஓர் அணுவும் அசையாது அணுவின்றி அவனாலும் அசைய முடியாது

பாவத்தின் சம்பளம் மரணம் எனில், பிறந்த குழந்தைகளும் இறப்பது ஏன்?

சமஸ்கிருதம் கடவுளின் மொழி எனில், சமஸ்கிருதம் தெரியாதவர்கள் கடவுளை எவ்வாறு தொடர்பு கொள்வது? கற்களில் செய்யப்பட்டு, கதவுகளில் அடைக்கப் பட்டவர் கடவுள் எனில், கதவுகளுக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு கடவுள் எப்படி உதவுவார்?
ரா.கேசவன்,
புதுக்கோட்டை


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...