Thursday, October 6, 2016

அரசியலா - அரசமைப்புச் சட்டமா?

காவிரி நதி நீர்ப் பிரச்சினை என்பது பல்வேறு நெருக் கடியான நிலையைத் தோற்றுவித்துவிட்டது. சட்டம், நியாயம், மரபு, நீதிமன்றத் தீர்ப்பு இவை அனைத்தையும் கருநாடக மாநில அரசு தூக்கி எறிந்ததால் ஏற்பட்ட வினைதான் இந்த நெருக்கடிக்குக் காரணம்.

இங்கு ஒரு சட்ட ஆட்சி என்பது உண்மை என்றால், சட்டப்படி நடந்திட கருநாடக அரசு கடமைப் பட்டிருக்கவில்லையா?

கருநாடக மாநில அரசு என்ன செய்து வருகிறது என்றால், ‘தனக்கு விஞ்சிதான் தானதர்மம்‘ என்று பாமரத்தனமாக பொதுவாக சொல்லுவார்களே - அந்த நிலைப்பாட்டைத்தான் எடுத்துக் கொண்டுள்ளது.

இப்பொழுது ஆளுகிற காங்கிரஸ் ஆட்சிதான் இந்தத் தவறினைச் செய்து இருக்கிறது என்று சொல்ல முடியாது. கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைப்பாட்டைத்தான் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வருகின்றன.

அதிக மழை பொழிந்தால், கருநாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அதற்குமேல் தாங்காது என்றால், உபரி நீரைத் திறந்துவிடும் ஒரு வேலையைச் செய்கிறது; எளிதாகப் புரியும் படிச் சொல்லவேண்டுமானால், தமிழ்நாட்டை வடிகால் பகுதியாகக் கருநாடகம் கருதுகிறது. இது ஓர் ஏமாற்றும், நயவஞ்சக நிலைப்பாடு அல்லவா!

கருநாடகத்தைப் பொருத்தவரையில் அரசியல் கட்சிகள் எத்தகைய அரசியல் உணர்வை வளர்த்து வருகின்றன என்பதுதான் முக்கியம்!

தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைக் கொடுக்கக் கூடாது என்பதில் எந்தக் கட்சி ஆக்ரோசமாக குதியாட்டம் போடுகிறதோ, அந்தக் கட்சிதான் கருநாடக மக்களைக் காப்பாற்றும் கட்சி என்று கருநாடக மக்களுக்கு வெறியை ஊட்டி வளர்ப்பதில் கட்சிகளிடையே வரிந்து கட்டி நிற்கும் போட்டி இருந்து வருகிறது. அதனுடைய தீய விளைவுதான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

கருநாடக மாநில அரசியல் கட்சிகள் மட்டுமல்ல - மத்தி யில் ஆட்சியில் உள்ள கட்சியும் அதே பாணியில்தான் நடந்துகொண்டு வருகிறது என்பதுதான் வெட்கக்கேடு!
மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள காங்கிரசுக்கோ, பி.ஜே.பி.,க்கோ தமிழ்நாட்டில் போதுமான பலம் இல்லை; அதேநேரத்தில், கருநாடகத்தில் அந்த வாய்ப்பு உள்ளது. அதனால் மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் கருநாடகத்திற்கான ஒலிபெருக்கிகளாக செயல்படுகின்றன.

மத்திய அமைச்சர்களாக உள்ள கருநாடகத்தைச்  சேர்ந் தவர்களே ஒரு சார்பாக செயல்படுவது அப்பட்டமான சட்ட மீறல்தானே!

அதுவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட மத்திய அமைச்சர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது என்பது கண்டிப்பாக அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடியதுதானே!

இந்த நிலையில், தனது அமைச்சரவை சகாக்கள் சட்டத்தை தம் கையில் எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும்போது பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் மேற்கொள்ள வேண்டிய, செயல் படவேண்டிய கடமைப்படி நடந்துகொண்டாரா என்பது மிக முக்கியமான கேள்வி!

மத்திய அரசே, பிரதமரே எந்த அளவுக்கு எல்லை தாண்டிய தன்மையில் நடந்துகொண்டுள்ளனர்!

நடுவர் மன்ற தீர்ப்பு வழங்கி - அந்தத் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டு மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும், சட்டப்படி அமைக்கவேண்டிய காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை என்பது அதிமுக்கியமான அரசமைப்புச் சட்ட ரீதியான கேள்வியல்லவா!

காங்கிரஸ் ஏன் அந்தக் கடமையைச் செய்யவில்லை என்ற கேள்வியோடு, தனது ஆட்சி செய்யத் தவறிய கடமையை பட்டுத் துணிபோட்டு மறைத்துவிட முடியுமா? யார் செய்யத் தவறினாலும் குற்றம் குற்றமே!

அதுவும் உச்சநீதிமன்றம் தெளிவாக, திட்டவட்டமாக நான்கு நாள்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று கூறிய நிலையில், அதனை மத்திய அரசு சார்பில் வழக்காடிய தலைமை வழக்குரைஞர் ஏற்றுக்கொண்ட பிறகு, உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்த மாட்டோம் என்று அடங்காப்பிடாரித்தனமாக ஒரு மத்திய அரசு சொல்லுகிறது என்றால், இது ஒரு அடாவடித்தனமான மத்திய அரசு என்றுதானே முடிவு செய்யவேண்டும்.

அரசியல் சாசனத்தையே ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கும், அவிழ்க்கவே முடியாத பெருஞ்சிக்கலை மத்திய அரசே ஏற்படுத்தலாமா?

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறாரே - அவர் அதிகாரபலம் அற்ற வராக இருக்கலாம். பிரதமரை அழைத்து இதுகுறித்து விளக்க கேட்கவேண்டாமா? இந்தியாவில் நடக்கும் இந்த அரசியல் சாசனச் சிக்கலை மற்ற நாட்டவர்கள் கூர்மையாகக் கவனிக்கமாட்டார்களா? அதுவும் எல்லைப் புறங்களில் சில நெருக்கடிகள் நிலவும் ஒரு காலகட்டத்தில் அரசியல் சட்ட நெருக்கடியை மத்திய அரசு தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருப்பது நல்லாட்சிக்கான இலக்கணம் அல்லவே!

அரசியல் லாபம் முக்கியமா? அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு முக்கியமா?

முடிவு செய்யட்டும் பிரதமர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...