Monday, May 9, 2016

‘அட்சய திருதியை’

நாளை (மே 9) அட்சய திருதியையாம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒரு நாளுக்கு “அட்சய திருதியை” என்று இந்துப் புராணம் கூறுகிறது.
சயம் என்றால் தேய்தல், அட்சய என்றால் அதற்கு எதிர்பதம் வளருதல் என்று பொருளாம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் என்று ‘மணிமேகலை’ காவியத்தில் வரும் அல்லவா!
இந்த நாளுக்காக சொல்லப்படும் ‘மகாத்மி யங்கள்’ ஒன்றா இரண்டா? உண்மையாக இருந்தால் ஒரே ஒரு கதை தானே இருக்கும்.
ஊருக்கு ஊர் ஊத்தை வாயர்கள்  உளறுவதற்குப் பெயர்தானே புராணப் புழுதி யும், மதச் சமாச்சாரங்களும்.
பூலோகத்தைப் பிரம்மன் படைத்த நாள்தான் இந்நாள், ராமன் வாழ்ந்த திரேதாயுகம். இந்த நாளில்தான் பிரம்மாவால் படைக்கப்பட்டதாம்.
வறுமையில் வாடியவன் குசேலன். அவனுக்கு 27 பிள்ளைகள். வறுமையைப் போக்கிக் கொள்ள அவன் நண்பன் கண்ணனை நாடிச் சென்றான். கண்ணனுக்கு மிகவும் விருப்பமான அவலைக் கொண்டு சென்று கொடுத்தான். அந்த அவலை அவன் தின்று முடித்தபோது குலேசன் வீடு குபீர் மாளிகையாக காட்சி அளித்தது, அவனின் மனைவி நகைக் காய்ச்சி மரமாகக் காட்சி அளித்தாள், செல்வம் கொழித்த அந்த நாள் தான்  அட்சய திருதியையாம். 27 பிள்ளைகளைப் பெற்ற குசேலனுக்கு 20 வயதுக்கு மேற்பட்ட ஏழு தடியன்கள் இருக்க மாட்டார்களா? இந்த ஏழு தடிப் பசங்களை வீட்டில் வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சைக்குப் போயிருந்தால் அந்த நாட்டில் மற்றவர்களும் இது போலிருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்தநாடு எப்படி உருப்படி ஆகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்கு கடவுள் செல்வம் கொடுக்கலாமா? என்று அறிவார்ந்த கேள்வியைக் கேட்டவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (பொன்னி பொங்கல் மலர் 1948).
அஷ்டலட்சுமி, தான்ய லட்சுமி அவதாரம் எடுத்த நாள் தான் இந்த அட்சய திருதியையாம் இப்படி பற்பல அண்டப் புளுகு மூட்டைகள். இவையெல்லாம் சொன்னவர்கள் யார்? கடவுளே சொன்னாரா, அவரே எழுதி  வைத்தாரா? என்று யாரும் கேள்வி கேட்டு விடாதீர்கள் அப்படிக் கேட்டால் அவர்கள் நாத்திகர்கள், நாக்கில் புற்று வந்து சாவார்கள் என்று ‘சபி’ப்பார்கள்..

இதில் அய்தீகம் என்ன என்றால் இந்த நாளில் குன்றி மணி அளவாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் அந்த வீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்குமாம்.
கடன் வாங்கியாவது தங்கம் வாங்குகிறார்கள்; அன்று வாங்கிய தங்கத்தை அடகு வைத்துதான் தங்கம் வாங்குவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் கொடுமைதான் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.
வியாபாரிகள் அட்சய திருதியைப் பற்றி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்வதால் மக்கள் நகைக்கடைகளில் குவிய ஆரம்பிக்கிறார்கள் - இந்தக் கூத்து கடந்த 10 ஆண்டு களாகத்தான், களைகட்டி நிற்கிறது. 2011ஆம் ஆண்டில் 700 கிலோ, 2012இல் 720 கிலோ, 2013இல் 1100 கிலோ, 2014இல் 1500 கிலோ, 2015இல் 2500 கிலோ என நகைக்கடைகளில் விற்பனையானது. 2016இல் 3000 கிலோ தங்கம் விற்பனை  ஆகும். எதிர்பார்க்கப் படுகிறதாம்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கியவர்கள் வீட்டில் தங்கம் குவிந்தது என்பதற்கு ஆதாரம் உண்டா, புள்ளி விவரம் தான் உண்டா?
மத நம்பிக்கைகள் சுரண்டலின் கூடாரம் தான் என்பதற்கு இந்த அட்சய திருதியை ‘திருக்கூத்து’ ஒன்று போதாதா?
- மயிலாடன்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...