Saturday, January 8, 2011

மணலியாரின்-மனந்திறந்த-அறிக்கை

02.07.1973 இல் கரூர் மாவட்டத்தில் மாலை 7 மணி அளவில் கரூர் சின்னத் தெருவில் ஆச்சிக்காற்று என்றழைக்கப்படும் ஆ.பழனிமுத்து அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் கார் நிதி வழங்கும் கூட்டம் நடைபெற்றது. நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக என்னை அழைத்திருந்தார்கள்.

கரூர் வட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.550 வழங்கினார்கள். இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

04.07.1973 - இல் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர். பண்டரிநாதன் அவர்களின் பேத்தி ஜீவா என்கிற ஆண்டாளுக்கும், நாகை எஸ்.கே.டி. சௌந்தர்ராஜுலு அவர்களின் மகன் இராதா கிருட்டிணனுக்கும், சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவிற்கு, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் தலைமை தாங்கினார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

விழாவில் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த மாண்புமிகு ராசாராம், எம்.எல்.சி., சென்னைப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி. நடராசன், தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.வி.சிட்டிபாபு ஆகியோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள், விழாவிற்கு ஏராளமான தி.மு.க. தொண்டர்களும், தி.க. தொண்டர்களும், பொதுமக்களும் வந்திருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவின் நிறைவில் திரு. பண்டரிநாதன் அவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்கள்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது. அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம். கல்யாண சுந்தரத்துக்கும், தமிழக சட்டமன்ற உறுப்-பினராக இருந்த ஏ.கே. சுப்பையா அவர்-களுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்கள். திரு. சுப்பையா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக கோட்டூரிலிருந்து தேர்ந்-தெடுக்கப்--பட்டவர் ஆவார். இது குறித்த நன்றியினை 06.07.1973 அன்று விடுதலையில் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. மணலி கந்தசாமி அவர்களின் பெயரால் மணலியாரின் மனந்திறந்த அறிக்கை என்ற தலைப்பில் தலையங்கம் எழுதினேன், அதை அப்படியே தருகிறேன்.

(விடுதலை 06.07.1973.)

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கியத் தூண்களில் முதல்வரான திரு. மணலி கந்தசாமியும், சட்டமன்றத்தில் பல தடவை உறுப்பினராக இருந்த திரு.ஏ.கே. சுப்பையாவும் சேர்ந்து விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்-நாட்டில் கம்யூனிஸ்டு கட்சிகள் எப்படி-யெல்லாம் திசைமாறி, கொள்கையைக் காற்றில்-விட்ட நிர்வாணமான சுய நல அடிப்படையில் செயலாற்றி வருகின்றன என்பதை வெகு-தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளனர்!

வேதனைக் குரலான அவ்வறிக்கையில், தங்களது கொள்கை உணர்வையும், இன்றைய அக்கட்சியின் போக்கையும், அதனைச் சுவாதீனப்படுத்திக்கொண்ட கல்யாணசுந்தரங்களின் காட்டுதர்பார்களையும், அரிதாரம் தடவுவோரிடம் அரசியல் விளக்கம் பெறும் அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள பரிதாபம்பற்றியும் மிகவும் நன்றாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

அவ்விருவரது அறிக்கையில் அவர்களுக்-குள்ள லட்சிய நோக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நாணயமானவர்களுக்கு - நல்லவர்களுக்கு அதில் இடமில்லை என்பதை வெகு நாசூக்காக அவர்கள் எக்ஸ்ரே படத்தில் எடுத்துக்காட்டுவது போல் எடுத்துக்-காட்டியுள்ளனர்! குருட்டுத்தனமான வகையில் தி.மு.க. எதிர்ப்பையே தமது உடனடிக் குறிக்கோளாகக் கொண்டுள்ள, கல்யாண-சுந்தரங்களின் இன்றைய போக்குக்கு என்ன உள்ளாந்திரமான காரணம் என்பதைப் புட்டு புட்டு வைத்துவிட்டது அவ்விருவரது அறிக்கை.

அண்ணாவுக்குப்பின் கருணாநிதி முதலமைச்சர் ஆனவுடன் தோழர் எம். கல்யாண சுந்தரம் தம் மணிவிழாவைக் கொண்டாடி, கருணாநிதி கையாலேயே கார் சாவியையும், பண முடிப்பையும் பெற்றார். அதற்குப் பின்பும் அவரோடு கல்யாணசுந்தரம் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு, தனக்கு முதல் அமைச்சரிடம் பெரும் சொல்வாக்கு இருப்பதாகக் காட்சி அளித்துக் கொண்டு இருந்தார். இது, அரசியல் கண்ணோட்டமில்லாத சுயநலம் மேலோங்கி நிற்கும் பாதையாகும். இந்த முயற்சியில் கல்யாணசுந்தரத்தால் வெற்றிபெற முடிய-வில்லை. அவரது விளையாட்டுக்கு முதல் அமைச்சர் கருவியாக மறுத்துவிட்டார்.

இதன் விளைவாக கல்யாணசுந்தரம், தி.மு.க. எதிர்ப்பு அணி உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியது பலருக்குத் தெரியும். இதன் காரண-மாக, அவர் குருட்டுத்தனமாக தி.மு.க.எதிர்ப்பு இயக்கத்துக்குக் கட்சியைப் பலியாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை தி.மு.க.வை ஒழிப்பதே கட்சியின் பிரதானக் கொள்கை என்று கட்சியைத் திருப்பிவிட்டார்.

எம்.ஜி.ஆர்

கல்யாண சுந்தரம்

மணலி கந்தசாமி

காம்ரேட் திரு. கல்யாண சுந்தரம் ஏன் திசை திருப்பினார் என்ற ரகசியம் நாட்டு மக்களுக்கு - அக்கட்சியிலுள்ள அடிமட்ட அப்பாவித் தொண்டர்களுக்கு இப்போதாவது விளங்கும் என்று நினைக்கிறோம். திரு. மணலியார் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மேலும் சில முக்கியமான குறிப்புகள் தமிழ்-நாட்டில் எப்படிப்பட்ட அரசியல் சூன்யங்கள் மிகப் பெரிய தலைவர்களாக்கப்பட்டுள்ளனர் என்பதை மிக நன்றாக மக்களுக்கு விளக்குகின்றன.

1. தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபோது, அதன் தன்மையை நிதானிக்காமல் கொள்கையற்ற பின்னணிப் படையாக அவர்களது கட்சி திருப்பிவிடப்பட்டது.

2. கொள்கையற்ற எம்.ஜி.ஆரின் சினிமா செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பின்பற்றும் கூட்டமாகக் கட்சி செயல்படும் நிலை உள்ளது.

3. தமிழ்நாட்டு அரசியலில் இரு கம்யூனிஸ்டுக் கட்சிகளும், புரட்சித் தலைவர் பின்னால் கொடிபிடித்துக் கொண்டு நிற்பது வேடிக்கையானதும், பாட்டாளி வர்க்க அரசியல் கட்சி எந்த அளவுக்குச் சீரழிவுப் பாதையில் செல்கிறது என்பதற்கு எடுத்துக்-காட்டுமாகும்.

4. தி.மு.க. விலிருந்து வெளியேறியவர்களை எல்லாம் ஜனநாயகத்துக்குப் போராடும் சக்திகளாக நாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது. இந்தக் கூட்டம், எம்.ஜி. ஆரின் சினிமா செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு தி.மு.க. எதிர்ப்பு எழுச்சியை உள்ளடக்கமாக்கிக் கொண்டு செயல்பட நினைக்கிறது. இது வெற்றி பெறுவது தமிழக அரசியலில் பெரும் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

5. தோழர் கல்யாண சுந்தரம் சினிமா நடிகர் கட்சியை ஆதரிப்பதன் நோக்கம், தேர்தலில் அ.தி.மு.க. மந்திரிசபை அமைக்கும், அதில் தானும் ஒரு மந்திரியாகலாம் என்ற நினைப்பே!

இவர் குறிப்பிட்டுள்ள அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மையான சங்கதிகள் என்பதைக் கூர்ந்து நோக்கி வரும் தமிழகத்து அரசியல் பார்வையாளர்களும், நோக்கர்களும் மிகவும் தெளிவாக அறிவார்கள்!

மார்க்சை, ஏஞ்செல்சை, லெனினை, டிராட்ஸ்கியை, ஸ்டாலினை, மாசே துங்கை, புரட்சித் தலைவர் என்று சொன்ன இந்நாட்டுக் கம்யூனிஸ்டுகள், ஒரு எக்ஸ்ட்ரா சினிமா நடிகையை அழைத்துக் கொண்டு கலாச்சாரத் தூது என்று ரஷ்யாவுக்குப்போகும் பவுடர் பூசும் ஒருவரை புரட்சித் தலைவர் என்று கூறுவதற்கு உண்மையில் வெட்கப்பட வேண்டாமா? இதற்கு அடிப்படை, அசல் ஒன்னாம் நம்பர் வடிகட்டிய சுயநலம், பதவி ஆசை என்பதைத் தவிர வேறு என்ன? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தி.மு.க. அரசு பாதுகாவலனாக இருப்பது உயர் ஜாதிக்கு அடுத்த ஜாதியாகத் தன்னைக் கருதிக் கொண்டுள்ள கூட்டத்தைச் சார்ந்தவர்களில் ஒருவரான திரு. கல்யாண சுந்தரத்தால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்? கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பகிரங்கமாக இதனை ஒப்புக்-கொள்வார்களோ என்னவோ, குறைந்தபட்சம் தனித்த உரையாடலின் போதாவது மறுக்க-மாட்டார்கள்!

பட்டக்காரர்களையும், பெரும் நிலப் பிரபுக்களையும் விவசாயிகளாக்கப் பார்த்து அவர்களை வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் கல்யாணசுந்தரங்களுக்கு ஏழை, எளிய, பாட்டாளி மக்களுக்கு லாபத்தில் பங்கு, நிருவாகத்தில் உரிமை தந்து மனைப்-பட்டாக்கள், நிலப்பட்டாக்களைத் தி.மு.க. அரசு தந்தால் அதை ஏற்று, அதை முற்போக்கு அரசு என்று கூற மனம் வருமா? கம்யூனிஸ்டுக் கட்சியில் நீண்ட காலம் குமுறிக் கொண்டிருந்த எரிமலை இன்று வெடித்துவிட்டது!

புதுவை ஆட்சியில் ஊழல் இல்லை; அங்கு பேரணி, அர்த்தால் தேவையில்லை என்று இரட்டை அளவுகோல் தூக்கிய கல்யாண-சுந்தரங்கள், தாம் மந்திரியாக இல்லாமல், சுப்பையாக்கள் மட்டும் மந்திரிகளாகப் பவனி வருவதா என்ற நினைப்பில் காழ்ப்புணர்ச்சியின் எல்லைக்குச் சென்று தனக்குள்ள மெஜாரிட்டிக் கொடுவாள் மூலம், அவரது பதவியைக் காலி செய்து மாஜியாக்கி விட்டுத்தான் அமர்ந்தார்கள்.

பிரிந்தவர்கள் எத்தனைபேர் என்பது முக்கியம் அல்ல! கொள்கை உணர்வுக்கும் இந்நாட்டுக் கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கும் வெகுதூரம். ஜாதி நலம், பதவி ஆசை, சுயநலம் இவைதான் அவர்களது லட்சியக்குறியாக இருந்து வருகிறது என்று நாம் கூறி வந்ததற்கு, அக்கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து உண்மையாகவே பலவிதக் கஷ்டங்-களை ஏற்று, அவரது தலைக்குப் பல ஆயிரம் என்று காங்கிரஸ் அரசால் விலை வைக்கப்-பட்ட முக்கியஸ்தர் ஒருவரும், மற்ற சக எம்.எல்.-ஏக்களும் இப்படி அறிக்கை விடுத்திருப்பது, கம்யூனிஸ்டுக் கட்சிகள் எவ்வளவு சோரம்-போனவைகளாகி விட்டன என்பதையே, நாட்டுக்குத் தெளிவாய் உணர்த்துகிறது!

- நினைவுகள் நீளும்..

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...