Thursday, January 6, 2011

அண்ணாவை பழைய துணிக்கடைக்கு அழைத்துச் சென்றார் பெரியார் அண்ணா நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, ஜன.1- பழைய துணிக்கடைக்கு கோட் வாங்க அண்ணாவை அழைத்துச்சென்றார் பெரியார் என்ற வரலாற்று நிகழ்வைக் கூறி விளக்கமளித்து உரையாற்றினார் தமிழர் தலைவர்.

அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத் தில் 25.12.2010 அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய முன்தின தொடர்ச்சி வருமாறு:

அய்யாவுக்கு உதவியாளராக அண்ணா

அய்யா அவர்கள் அண்ணா அவர்களை காசி ஹரித்துவார், உத்தரப்பிரதேசம் போன்ற பகுதி களுக்கு அழைத்துச் செல்லுகின்றார். அய்யா அவர்களுக்கு அண்ணாதான் உதவியாளர், மொழி பெயர்ப்பாளர். அந்த மாதிரியான காலகட்டம். அண்ணா அவர்களை அய்யா அவர்கள் அழைத்துக்கொண்டு போகின்றார். அண்ணா முதன்முறையாக அய்யா அவர்களுடன் வட மாநிலங்களுக்குப் போகின்றார். உங்களுக்குத் தெரியாது; அங்கு குளிராக இருக்கும்-அங்கு போய் கோட்டெல்லாம் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லுகின்றார்.
வட மாநிலத்தில் காசி பகுதியில் பெரியார்-அண்ணாவை கடைக்கு அழைத்துச் செல்லு கின்றார். ஏதோ புதிதாக ஜவுளிக்கடைக்கு அய்யா அழைத்துச் செல்லுகிறார் என்று அண்ணா நினைத்துக்கொண்டிருந்தார்.

பழைய துணிகள் விற்கிற கடை

அய்யா அவர்கள் இவரை அழைத்துக்கொண்டு நேராக பழைய துணிகள் விற்கிற கடைக்கு அழைத்துப் போய்விட்டார். (கைதட்டல்-சிரிப்பு).
இராணுவத்தில் மற்ற இடங்களில் போட்ட துணிகளை இரண்டாவது கட்ட விற்பனைக்கு விற்பார்கள். அந்த மாதிரி கடைகள் இருக்கிற பகுதிக்கு அய்யா அழைத்துச் சென்றுவிட்டார். (சிரிப்பு).
அண்ணா அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அய்யா அவர்களிடம் கட்டுப்பாடு மிகுந்த தொண்டர் அண்ணா அவர்கள். அண்ணா முதலமைச்சரான பிற்பாடும் கடைசிவரைக்கும் காப்பாற்றிய பெருமை அண்ணாவின் தனித் தன்மைக்கு என்றென்றைக்கும் தலைசிறந்த உதாரணமாகும் (கைதட்டல்).
ஒரு தந்தை மகனுக்குச் சொல்லுகிறமாதிரி அதை எடு, இதை எடு என்று சொல்லிக்கொண்டி ருக்கின்றார். இதெல்லாம் பழைய காலத்து மிலிட்டரி கோட்டு. குறைந்த விலைக்கு விற்கக் கூடியது. அண்ணா அவர்களுக்கோ கூச்சம்
அண்ணா அவர்கள் குட்டையானவர் என்பது உங்களுக்குத் தெரியும். (சிரிப்பு). எடுத்துபோட்டுப் பார்க்கின்ற கோட்டுகள் முட்டி வரையிலே தொங்கக் கூடியதாக இருக்கின்றது. ஒரு கோட்டு கூட அண்ணா அவர்களுக்குச் சரியாக இல்லை (சிரிப்பு). பல கடைகளில் ஏறி இறங்கிப் பார்த்தார்கள்.
கடைசியாக ஒரு கோட்டு கொஞ்சம் தொங்குகிற மாதிரி இருந்தது. உடனே அய்யா அதைப் பார்த்து அதற்கென்ன கொஞ்சம் கத்தரித்துக்கொண்டால் சரியாகப் போய்விடும். அது என்ன, அண்ணாதுரை உயரத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டார் (கைதட்டல்).

அண்ணா அவர்களுக்கோ கூச்சம்.

அண்ணா அவர்களுக்கு சங்கடம். சொல்லவும் முடியவில்லை. அய்யா கடைசியாக இந்தக் கோட்டு என்ன விலை என்று கேட்டார். கடைக்காரர் சொன்ன விலைக்கும், பெரியார் கேட்ட விலைக்கும் ஒத்தே வரவில்லை. (சிரிப்பு-கைதட்டல்). அண்ணா பார்த்தார். வாயே திறக்கவில்லை. (சிரிப்பு).

எனக்கு கோட்டே வேண்டாம்

உடனே அண்ணா, அய்யா எனக்கு கோட்டே வேண்டாம். எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார், அய்யா அவர்களை எதிர்த்தும் சொல்ல முடியவில்லை. அண்ணாதுரை, அப்படி நினைக்காதீங்க. இன்னும் இரண்டு கடைக்குப் போனால் கிடைத்துவிடும் என்று சொன்னார்.
அய்யா அவர்கள் எப்படிச் சொல்லுவார் என்று அவருடன் பழகினவர்களுக்குத்தான் தெரியும். அது என்.வி.நடராசனாக இருந்தாலும் அல்லது எங்களைப் போன்றவர்களாக இருந்தாலும் இட்டலியை வாங்கி வரச்சொல்லுவார்.

தெருவில் சுடுகின்ற இட்டலி

ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வண்டியை நிறுத்தி இட்டலி வாங்கலாம் என்று சொல்லுவார். பெரிய ஓட்டலுக்கு முன்னால்-பெரிய லாட்ஜ்க்கு முன்னால் தான் போய் வண்டி நிற்கும் என்று யாரும் கற்பனை பண்ணி பார்க்கத் தேவையில்லை. வேனில் வரும்பொழுது அய்யா அவர்கள் சொல்லிக் கொண்டே வருவார். செங்கல்பட்டில் இந்த மூலையில் அங்கே ஒரு அம்மா இட்டலி சுட்டு விற்றுக்கொண்டிருப்பார்கள். அது நல்ல இட்டலியாக இருக்கும்; நல்ல சட்னி கொடுப்பார்கள்.
ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு அடுக்கு நிறைய வாங்கிக்கொள்ளலாம். அதை வாங்கிக்கொண்டு வந்தால் நாம் எல்லோரும் சாப்பிடலாம் என்று சொல்லுவார்.
நாங்களாக இருந்தாலும், என்.வி.நடராசனாக இருந்தாலும் கூச்சம் இல்லாமல் வாங்கிக்கொண்டு வந்து கொடுப்போம். அண்ணா பார்த்தார். கோட்டு வேண்டாம்ங்க அய்யா என்று தவிர்த்துவிட்டு, சால்வையே போதும் என்று சொல்லிவிட்டார்.

புத்தரின் புன்னகை

காசிக்குப் பக்கத்திலே உள்ள ஹரித்துவார். அங்குதான் புத்தசாமியார்கள் மற்ற சாமியார்கள் எல்லாம் அதிகம் இருக்கின்ற இடம்.
அண்ணா அவர்கள் புத்தரின் புன்னகை என்று ஒரு நூலை எழுதியிருக்கின்றார். இது ரொம்ப அற்புதமான ஒரு கட்டுரை. திராவிட நாடு ஏட்டிலே வந்த கட்டுரை.

கற்பனைக் கட்டுரை

பெரியாரைப் பார்த்துவிட்டு புத்தர் எவ்வளவு அற்புதமாகச் சொல்லுகிறார் என்று ஒரு கற்பனைக் கட்டுரை. ஆரியம் மிரட்டிற்று. ஆனால் அதை நீங்கள் வெற்றி கொண்டீர்கள் என்ற பாணியில் எழுதியிருப்பார் அண்ணா. அண்ணா அவர்கள் எழுதிய தலைசிறந்த கட்டுரைகளிலே ஒன்று. அந்தக் கட்டுரை புத்தகமாகக் கூட வந்திருக்கிறது.
அண்ணா அவர்கள் பேசும்பொழுது ஒரு கூட்டத்தில் சொன்னார். அய்யா அவர்கள் போய்க்கொண்டிருக்கின்றார். காற்றடிக்கிறது. தந்தை பெரியார் பொன்னிற மேனியில் வெண்தாடி அசைந்தாடுகிறது. அய்யா அவர்கள் சால்வையை இரண்டாக மடித்துப் போட்டுக் கொண்டார். அவருக்கு குளிர் ஒன்றும் செய்யவில்லை. நல்ல உடல்வாகு. நான் பின்னால் போகிறேன். எனக்கு கோட்டு கிடையாது. எனக்கோ குளிர் அதிகம்.

பொதுக்கூட்டத்தில் நினைவுகூர்ந்தார் அண்ணா

அண்ணா இதை கூட்டத்திலேயே சொன்னார். தருமபுரி மாவட்ட நிகழ்ச்சிக்கு முதலமைச்சரான அண்ணா அவர்களை நாங்கள் அழைத்துச் சென்ற பொழுது இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அய்யா அவர்களை வைத்துக்கொண்டே அண்ணா பேசினார்.
அய்யா அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து சிரித்தார். அது மகிழ்ச்சியான தருணம். அந்தப் பகுதியோ பல சாமியார்கள் இருக்கின்ற பகுதி.

இவர் புது சாமியார் போல இருக்கு

அய்யா அவர்களைப் பார்த்தவுடன் இவர் ஒரு புது சாமியார் போல இருக்கிறது. ரொம்ப பெருமையாக இருக்கிறார் என்று நினைத்தார்கள். அய்யா அவர்கள் நடந்து செல்வதையும், அவரது வெண்தாடி அசைவதையும் அண்ணா அவர்கள் மிக அழகாக வர்ணித்தார்.
அண்ணா, அய்யாவுக்குப் பின்னாலே போகிறார். அண்ணா அவர்களுடைய உயரம் நமக்குத் தெரியும். அண்ணா அவர்களுக்கோ கோட்டு இல்லை. காற்றடிக்கிறது; குளிர் அதிகமாக இருக்கிறது.
அண்ணா அவர்கள் தன்னுடைய குளிரைப் போக்குவதற்காக இறுக்கமாகக் கையை கட்டிக்கொண்டு பின்னாலே சென்று கொண்டிருக்கின்றார். அய்யா அவர்கள் நடந்து செல்லும்பொழுது எதிரே வருகிறவர்கள் பொத்துப் பொத்தென்று அய்யா அவர்களுடைய காலிலே கீழே விழுகின்றார்கள். காரணம் என்ன வென்றால், இவர் பெரிய சாமியார் போல இருக்கிறது என்று நினைத்தார்கள். (சிரிப்பு- கைதட்டல்).

அவரிடம் காலில் விழுந்தது மட்டும் முக்கியமல்ல. என்னுடைய காலிலும் விழுந்தார்கள். அதுதான் முக்கியம். அவர் பெரிய சாமியார். இவர் குட்டிச் சாமியார் என்று நினைத்துவிட்டார்கள் என்று அண்ணா சொன்னார்.

அண்ணா அவர்களின் நகைச்சுவை

இவர் எவ்வளவு பெரிய சாமியாராக இருந்தால் இவ்வளவு பெரிய பயபக்தியோடு சிஷ்யன் போவான் என்று நினைத்து காலில் விழுந்தார்கள். எனக்குக் குளிர் தாங்க முடியாததனால் கையை இறுக்கிக் கட்டிக் கொண்டு போனேன். என்னையும் சிறிய சாமியார் என்று நினைத்து அங்குள்ளவர்கள் காலில் விழுந்த சம்பவத்தை அவருக்கே உரிய முறையில் பொதுக்கூட்டத்தில் சொன்னார். (சிரிப்பு-கைதட்டல்). அண்ணா அவர் களுடைய நகைச்சுவை-ஆழமான செய்திகள். அவர் தனது வாழ்க்கையில் சுவைத்து சுவைத்துக் கடைசி வரையிலே சொல்லுவார்.
போராட்டக் களத்திலே இருந்த ஒரு தளபதி மிகப்பெரிய அரசியல் சூழ்நிலைகளை எல்லாம் சந்தித்த ஒரு நிலையில் எவ்வளவு பெரிய நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அதுதான் மற்றவர்களை வாழவைப்பதற்கு அவரிடமிருந்த அடித்தளம்.
இந்த மாதிரி ஓர் உணர்ச்சியை எங்குமே பார்க்க முடியாது
அண்ணா அவர்கள் எல்லோரையும் வைத்துக் கொண்டு இன்னொரு சுவையான சம்பவத்தைச் சொல்லுவார்.

விருந்தில் அய்யா, அண்ணா


பம்பாய்க்கு அய்யா அவர்களுடன் அண்ணா அவர்களும் செல்லுகின்றார். பெரியாரையே தன்னுடைய குரு என்று வர்ணித்தவர் எம்.என்.ராய், சுயனஉயட ழரஅயளைவ ஹளளடிஉயைவடி- Radical Humanist Association- Radical Democratic Party

அதன் நிறுவனர் எம்.என்.ராய். மிகப்பெரிய கொள்கை கர்த்தா எம்.என்.ராய் எல்லோருக்கும் விருந்து கொடுத்தார். அண்ணா அவர்கள் அய்யா அவர்களுக்கு உதவியாளர். செயலாளர் எல்லோரும் அந்த விருந்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். விருந்தில் நன்றாகப் பரிமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
அண்ணா அவர்கள் எப்பொழுதுமே அய்யா அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி உட்காருவார். அய்யா அவர்களிடம் காட்டிய அந்த மரியாதை. அதனால் அய்யா அருகில் வந்து உட்கார மாட்டார். தள்ளியே உட்காருவார்.
அய்யா அவர்களுடைய பழக்கம்-அவர் மட்டும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பமாட்டார். கூட வந்தவர்கள் எல்லாரும் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று எல்லாவற்றையும் பார்ப்பார்.

நீ எம்.ஏ. படித்தவர் உனக்கு ஏதாவது கூச்சமா?

யாராவது உணவில் கொஞ்சம் மிச்சம், மீதியை வைத்துவிட்டு எழுந்திருந்தால் உடனே கண்டிப்பார். முதலிலேயே வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? வேண்டாம், உங்களால் சாப்பிட முடியவில்லை என்றால் என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் எடுத்து சாப்பிடுகிறேன் என்று சொல்லுவார். அல்லது பிறகு பசி எடுத்தவுடனே சாப்பிடுகிறேன் என்று சொல்லுவார். என்.வி.என். அந்த மாதிரி எடுத்திருக்கின்றார். நாங்கள் எடுத்திருக்கின்றோம். ஏம்பா! நீ எம்.ஏ., படித்தவர். உனக்கு ஏதாவது இதில் கூச்சம் இருக்கிறதா? என்று கேட்பார். அண்ணா அவர்கள் எப்படி அந்த எளிமைக்குத் தயாரானார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நன்றாகச் சாப்பிட்டார்கள். கடைசியில் தயிர்சாதம் வைத்தார்கள். எம்.என்.ராய் பெரியாரிடம் வந்து கேட்டார், உணவு எப்படி இருந்தது? நன்றாகச் சாப்பிட்டீர்களா? என்று கேட்டார், அய்யா "very good" என்று சொன்னார். அய்யா, "Spoken English" நன்றாகப் பேசுவார்.

அய்யா திடீரென்று கேட்டார்

அய்யா அவர்கள் திடீரென்று கேட்டார். கூடப்போனவர்களுக்குத்தான் தெரியும். இந்தத் தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை என்று கேட்பார். (சிரிப்பு-கைதட்டல்).

தைரியமாகக் கேட்பார். உடனே அந்தப் பதிலை பளிச்சென்று சொல்லுவார். அய்யாவுக்கு மொழி பெரிய பிரச்சினை என்று நினைத்ததில்லை. அது அவருடைய துணிவு.

அய்யா அவர்களுக்கு ஊறுகாய் வேண்டும். முதலில் வைத்த ஊறுகாயைச் சாப்பிட்டுவிட்டார். இரண்டாவது தடவையாக ஊறுகாயைக் கேட்கின்றார். இந்த ஊறுகாய்க்கு என்ன இங்கிலீஷ் வார்த்தை என்று ஞாபகம் வரவில்லை. (சிரிப்பு-கைதட்டல்).

ஊறுகாய், ஊறுகாய் என்று அய்யா சொல்லு கின்றார். எம்.என்.ராய், "what,what? என்று கேட்கின்றார். நாயக்கரே, உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கின்றார். ஊறுகாய், ஊறுகாய் என்றார்.

அண்ணா அவர்களின் சிறு குறும்பு

அண்ணா அவர்களுக்கு (Pickels) பிக்கிள்ஸ் என்று சொல்ல எண்ணமாம். அண்ணா பார்த்தார். அவருக்கு இந்த மாதிரி லேசான குறும்பெல்லாம் உண்டு.

அண்ணா பார்த்தார். பெரியார் என்ன பண்ணுகிறார். இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம் என்கிற எண்ணம். (சிரிப்பு- கைதட்டல்). உடனே அய்யா சமாளித்தார். பிக்கிள்ஸ் என்று சொன்னால் உடனே கொண்டுவந்து விடப் போகிறார்கள். அது முக்கியமல்ல என்று அண்ணா நினைத்தார்.

உடனே அய்யா, அண்ணாதுரை எங்கே இருக்கிறார்? என்று கேட்டார். அண்ணா அவர்கள் இவர் கூப்பிடுவது காதில் விழாத மாதிரி அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்தார். (சிரிப்பு-கைதட்டல்). அவர் குனிந்துகொண்டு மும்முரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்.

நாக்கை வெளியே காட்டி....

எம்.என்.ராய் விருந்து கொடுக்கின்றவர். அய்யா நாக்கை வெளியே தள்ளி, இலையில் தொட்டுச் சாப்பிடுவதை காட்டினார் (சிரிப்பு-கைதட்டல்). (தமிழர் தலைவர் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் எப்படி நாக்கை வெளியே தள்ளிக் காட்டினார் என்பதை அப்படியே நாக்கை வெளியே தள்ளிச் செய்து காட்டியபோது, அரங்கமே சிரிப்பலையாலும், கைதட்டலாலும் அதிர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது) உடனே அண்ணா, பிக்கிள்ஸ் என்று சொன்னார். உடனே எம்.என்.ராய்,oh Do you want pickle? என்று சொல்லி ஊறுகாயைக் கொண்டு வரச்சொல்லி, அய்யா இலையில் வைத்துச் சாப்பிட வைத்தார். (சிரிப்பு-கைதட்டல்).

அய்யா, பிக்கிள்ஸ், வெரிகுட் வெரிகுட் என்று அதற்குப் பிறகு சொல்லுகிறார். எவ்வளவு சங்கடமான சூழ்நிலையாக இருந்தாலும் அவர்கள் புன்னகையோடு சுவைப்பார்கள்.

எதற்கு ஏ.சி.?

அண்ணா அவர்கள் அவருடைய வாழ்க்கையில் எத்தனை சங்கடங்களை, எத்தனை சோதனைகளையும் எவ்வளவு சிக்கலான நேரத்திலும் இதுமாதிரி நினைத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.

அண்ணா அவர்களுக்கும், அய்யா அவர்களுக்கும் இயல்பாகவே இருந்த சிக்கனம். இங்கே ஏ.சி. பற்றிச் சொன்னார். கடைசி நேரத்தில் உடம்புக்கு முடியாத நேரத்தில்கூட ஏ.சி.எதற்கு என்று கேட்டவர் அண்ணா. அதே மாதிரி தந்தை பெரியார். இரண்டு பேருக்கும் அந்த ஒற்றுமை உண்டு.

அய்யா அவர்கள் உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்தபொழுது-டாக்டர்கள் சொல்லி ஏ.சி.யை வைத்தோம், திருச்சி பெரியார் மாளிகையில். எனக்கு ஏ.சி.வேண்டாம். எதற்கு இவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள்; தேவையில்லை. எனக்கு காற்று இருந்தால் போதும் என்று அந்த மாதிரி சூழ்நிலைகளில் இயல்பாகவே சொல்லக் கூடியவர்கள்.

அய்யா-அண்ணா உறவு

அதுமட்டுமல்ல; அய்யா-அண்ணா உறவு இருக்கிறது பாருங்கள், அது சாதாரணமானதல்ல. அய்யாவுக்கு அவர் ஒரு கட்டுப்பாடு மிகுந்த தொண்டன். ஈரோட்டிலே அண்ணா அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர். அவருக்கு அந்தக் காலகட்டத்தில் குறைவான சம்பளம். ராணி அண்ணா அவர்களுக்கும், வீடு கொடுத்திருக்கிறார்கள். எளிமையாகச் சமைத்து சாப்பிடுகிறார்கள். பெரியாருடைய தங்கை கண்ணம்மாள் அவர்களுடைய மகன் சந்தானம், அதே போல சண்முக வேலாயுதம் என்ற நண்பர், அண்ணா இவர்கள் எல்லாம் மாலை நேரத்தில் உலவுவதற்காகப் போவார்கள்.

மாலை நேரத்தில் ஈரோடு ரயில் நிலைய ஜங்சன்தான் அவர்களுக்குப் பீச் ஸ்டேஷன் மாதிரி. கடற்கரை மாதிரி. அங்கே போனால் ஹிக்கின் பாதமஸ் புத்தகம் இருக்கும்.

-(தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...