Thursday, June 13, 2019

இந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்.....

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை

இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!

நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். புதிய கல்விக் கொள்கையின் பெயரால் நூறு வருடங்களுக்கு முந்தைய அபிலாஷைகளையும் சிந்தனைகளையும் சாத்தியப்படுத்த திரும்பத் திரும்ப டில்லிக்காரர்கள் முற்பட்டுக்கொண்டேயிருப்பதைப் பார்க்கும்போது, இந்நாட்டுக் குழந்தைகளுக்கு எப்போதுதான் விமோசனமோ என்று தோன்றுகிறது. இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத் தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த முயற்சியை டில்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டு களாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ் வளவோ மாறிவிட்டிருக்கிறது. டில்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.
ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?
புதிய கல்விக் கொள்கையின் வரைவானது முன்மொழியும் மும்மொழிக் கொள்கை - தாய் மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டில்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண் டாக்கியிருக்கும் சமுக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலை நோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள் கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.
உலகம் எந்த மொழியில் படிக்கிறது?
உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களு டைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.
பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்சு, இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்தி ருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழி களைக் கற்பது ஆர் வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமுகவியலோ படிப்ப வர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக அய்ந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.
புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய் மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத் துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக் கின்றன. சமுக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப் பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேக மானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமுகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப் பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.
சிங்கப்பூர் முன்னுதாரணம்
இன்று உலக அளவில் விமரிசையாகப் பேசப்படும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கான முக்கியக் கருவியாக அதன் இருமொழிக் கொள் கையையே குறிப்பிட்டார் லீ. தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதற்கு இரு ஆண்டுகளுக்கு முன் -  1965இல் சிங்கப்பூர் முழுச் சுதந்திரம் அடைந்தது. பிறப்பால் ஒரு சீனர் என்றாலும், மேட்டுக்குடியான லீயின் வீட்டில் பேசப்படும் மொழியாக ஆங்கிலமே இருந்தது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் வழி வளர்ந்தவர் என்பதோடு, பிற்பாடு பிரிட்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதால், சர்வதேசத்துடனான போட்டியில் ஈடுபட அன்றைக்கு மிகவும் பின்தங்கிய சமுகமாக இருந்த சிங்கப்பூரர்களுக்கு ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்பதை லீ உணர்ந்திருந்தார்.
முக்கியமாக, பல கலாச்சாரச் சமுகமான சிங்கப்பூரின் எழுச்சிக்கு, அங்குள்ள ஒவ்வொரு சமுகக் குழுவும் தன்னை அந்நாட்டின் இணை யான சமுகமாகக் கருதும் நிலையை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை லீ புரிந்து கொண்டிருந்தார். நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்ந் தெடுக்கும்போது, அந்த மொழி எல்லா சமுகங்களுக்கும் இணையான தொலைவில் இருப்பதன் வாயிலாகவே இணையான போட்டியையும் வாய்ப்புகளையும் உண்டாக்க முடியும் என்று அவர் கருதினார். இந்தப் பின்ன ணியில்தான் சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளாக மாண்டரீன், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும், நாட்டின் பொது தேசிய அடையாள மொழியாக ஆங்கிலமும் அறிவிக்கப்பட்டன.
இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அதன் தேசிய மொழிகள் அத்தனையையும் அறிவிக்க வேண்டும்; உலகோடு உறவாடும் மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணா, தன்னுடைய வாதத்தில் சுட்டிக்காட்டிய மிக முக்கியமான அம்சமாக, “இந்தியாவின் ஆட்சிமொழி எல்லா சமுகங் களுக்கும் சம தொலைவு உடையதாக இருக்க வேண்டும்” என்பதையே குறிப்பிட்டார் என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டியதாகும். நாம் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கையில், ஆங் கிலத்தில் ஒரு தேர்வை நடத்துகையில், ஒரு இந்தி மாணவருக்கும் தமிழ் மாணவருக்கும் சம தொலைவில் உள்ள மொழியாக அது இருக்கும்; ஆனால், இந்தியை ஆட்சிமொழியாக்கி அதில் ஒரு தேர்வை நடத்துகையில், இந்தி மாணவருக்கு அது நெருக்கமானதாகவும் தமிழ் மாணவருக்கு அது அந்நியமானதாகவும் மாறிவிடும்; விளை வாக, சமுகங்கள் இடையே பாரபட்சம் நிலவும் என்று கருதினார் அண்ணா.
இதைத்தான் நாடாளுமன்றத்தில், “இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி பேசும் மக்களுக்கு அதுவே தாய்மொழி, அதுவே அரசுமொழி, அதுவே பயிற்றுமொழி; கூடவே, அதுவே மத்திய அரசின் மொழி. இந்தி பேசும் மக்களுக்குத்தான் எத்தனை சலுகைகள், வாய்ப்புகள், உரிமைகள்? இந்தி பேசாத மக்களுக்கு மறுபுறம் இவை எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கும்?” என்று அவர் கேட்டார்.
ஆட்சிமொழி விவாதத்தின்போது அண்ணா சுட்டிக்காட்டிய அமெரிக்க உதாரணத்தை இங்கே நினைவுகூரலாம். “ஆங்கிலம் என்ற சாளரத்தின் வழி ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் காண முடியும்” என்று குறிப்பிட்ட அண்ணா சொன்னார், “அமெரிக்கா என்ற நாடு உருவானபோது அங்கே குடியேறியவர்களில் 20% பேர் மட்டுமே பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து சென்றவர்கள். 80% பேர் ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி என்று அய்ரோப்பிய நாடுகளிலிருந்து சென்றவர்கள். இருந்தும் ஆங்கிலத்தையே ஆட்சிமொழியாகத் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” சிங்கப்பூரில் லீ இதைத்தான் செய்துகாட்டினார்.
இந்தியை மட்டும் இந்தியா ஆட்சிமொழியாக வரித்துக் கொள்வதற்கான நியாயத்தைக் காட்டி லும் பல மடங்கு நியாயம் மாண்டரீனை மட்டும் சிங்கப்பூர் ஆட்சிமொழியாக வரித்துக் கொள் வதற்கு அதற்கு இருந்தது. இந்தியாவில் இன்றைக்கும் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 50%-அய்த் தாண்டவில்லை. சிங்கப்பூர் மக்கள் தொகையில் மாண்டரீனைத் தாய்மொழியாகக் கொண்ட சீனர்கள் 76.8%, மலாய்கள் 13.9%, இந்தி யர்கள் 7.9%, மற்றவர்கள் 1.4%. லீ நினைத்திருந்தால், மாண்டரீனை மட்டும் ஆட்சிமொழியாக அறிவித்து, பெரும்பான்மையினரான சீனர் களைத் திருப்திப்படுத்தி, அரசியல்ரீதியாகக் காலத்துக்கும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதையே ஒரு தேசியவாதக் கருவியாக மாற்றிக் கொண்டிருக்கவும் முடியும். லீ அப்படி நடந்து கொள்ளவில்லை.
ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்ததுடன் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு சமுகத்தின் தாய்மொழி யையும் லீ அங்கீகரித்தார். ஒவ்வொரு சிங்கப் பூரரும் ஆங்கிலத்துடன் அவரவர் தாய் மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும்; தாய் மொழியில் ஒருவர் கொண்டிருக்கும் வேர்களே பிற்பாடு அவருடைய எதிர்கால ஆளுமையைத் தீர்மானிப்பதாக அமையும் என்றார். “தாய் மொழியை மட்டுமே கற்றுத் தேர்ந்தால் நாம் வெறும் ‘ஒருமொழிப் பிள்ளை’களாக இருப்போம்; உலகோடு போட்டியிட்டு வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள முடியாது.
அதே சமயம், ஆங்கிலத்தை மட்டுமே அறிந் திருந்தாலும் பின்னடைவுதான்; ஏனென்றால், தாய்மொழியில் ஆழமற்ற நாம் நம்முடைய கலாச்சார அடையாளத்தை இழந்திருப்போம், உலகில் நமக்குரிய இடம் எது, நாம் யார் என்ற தன்னம்பிக்கையையும் இழந்திருப்போம்” என்று குறிப்பிட்டார் லீ.
சிங்கப்பூரைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிடலாமா?
ஒரு மூன்றாம் உலக நாட்டின் சாத்தியங் களையும் சவால்களையும் புரிந்துகொண்டு லீ எடுத்த முடிவு உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்தில் சிங்கப்பூரின் முக்கியமான உடைமையாக சிங்கப்பூரர்களின் மொழித்திறனே திகழ்கிறது. உலகமயமாதலுக்கு சிங்கப்பூரர்களை முன் கூட்டித் தயார்படுத்தியவர் என்று லீயின் இருமொழிக் கொள்கையைப் புகழ்கிறார்கள்.
குஜராத், மகாராட்டிரம் போன்ற பெரிய மூலதன செல்வம், வணிகக் கலாச்சாரம் அற்ற, கேரளம் -  பஞ்சாப் போன்ற நீர் நில வளமும் கொண்டிராத, உத்தர பிரதேசம் போல ஜன நாயகத்தில் பெரிய பேரம் பேசத்தக்க மக்கள் தொகை பலமும் இல்லாத தமிழ்நாடு இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக இன்று நிற்பதன் பின்னணியில், உலகமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுத்ததில் அது முதல் வரிசையில் நின்றதன் பின்னணியில் அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கையின் பங்களிப்பை என்றேனும் இங்குள்ள நிபுணர்கள் பேசியது உண்டா? சுதந்திரத்துக்கு எழுபதாண்டுகளுக்குப் பின்னரும் சமுகங்களுக்கு இடையே ஒரு சமநிலை இன்னும் இந்நாட்டில் உருவாக்கப் படாததன் பின்னணியில் இந்திய அரசின் மொழிக் கொள்கையின் தோல்விகளை என் றைக்கு இந்நாட்டின் நிபுணர்கள் விவாதிக்கப் போகிறார்கள்?
அனுபவங்கள் வாயிலான படிப்பினை
தொலைநோக்கில் சிங்கப்பூருடன் ஒப்பிடத் தக்கது என்றாலும் - இந்திய அளவில் முன் வரிசையில் நின்றாலும் - விளைவுகளில் தமிழ் நாட்டின் கல்வியை சிங்கப்பூருடன் ஒப்பிடத்தக்க சூழல் இன்று இல்லை. முக்கியமாக மொழி சார்ந்து  தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்  மோசமான சிக்கலை எதிர் கொள்கிறார்கள் நம்முடைய மாணவர்கள். ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் பலருக்கு ஆளுமை இல்லை. ஆனால், இது இருமொழிக் கொள்கையின் தோல்வி அல்ல; அம லாக்கத்தின் தோல்வி. இந்தியக் கல்விச் சூழலின் கூட்டு விளைவு என்றும் சொல்லலாம்.
கிட்டத்தட்ட அய்ம்பதாண்டுகள் நாட்டின் சர்வ அதிகாரங்களையும் தன் கையில் வைத் திருந்த லீக்கு அவருடைய கனவுக்கேற்பப் பள்ளிக்கூடங்களை உருமாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் சிங்கப்பூர் அவருக்கு வழங்கியது. லீயின் கனவை சிங்கப்பூர் சமுகம் தனதாக்கிக்கொண்டு கூடவே உழைத்தது. தமிழ்நாட்டிலோ ஆட்சிக்கு வந்த ஓராண்டில் அகால மரணத்தால் விடைபெற்றுக்கொண்டார் அண்ணா. கல்வியில் முடிவெடுக்கும் அதி காரத்தை மாநிலங்களிடமிருந்து படிப்படியாகத் தன் வசம் நோக்கி இழுத்துக்கொண்டது டில்லி. போதாக்குறைக்கு கல்வியை வணிகமாக்கித் தங்கள் அரசியலுக்கான எரிசக்தியாக்கும் கலாச் சாரத்தை அரசியல் வாதிகள் இங்கே உரு வாக்கினர்; தமிழை அடுத்தடுத்த தளங்களுக்கு வளர்த்தெடுக்கும் பணியிலும் வீழ்ச்சி ஏற்படவும் அவர்களே காரணமாயினர். மேலும், உலகெங்கும் இருமொழிக் கொள்கையை வரித்துக்கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தமிழ்நாட்டை அழுத்துகின்றன.
பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது “பிரிட்டிஷ் குழந்தைகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய சவால் ஆங்கிலம். தாய்மொழியில் மோசமாகச் சறுக்குகிறார்கள்” என்று அங்குள்ள கல்வி யாளர்கள் சொல்லக் கேட்டு அதிர்ந்தேன். அமெ ரிக்காவில் பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தும் ஆப்பிரிக்க, அய்ரோப்பிய இன மாணவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தையே காரண மாகச் சொல்கிறார்கள். இருமொழிக் கொள் கையை வரித்துக்கொண்டிருக்கும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய கல்விச் சிக்கலும் ஆங்கிலம்தான்; தரமான ஆங்கில ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாதது அங்கே தேசியப் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். அரேபிய நாடுகளும் சீனாவும்கூட இதே சிக்கலை எதிர் கொள்கின்றன. உலகளாவிய மொழியான ஆங் கிலத்தின் தேவை உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகம் உணரப்படுகிறது; அதேசமயம், தாய் மொழி -  ஆங்கிலம் இரண்டையும் வெற்றிகர மாகக் கற்பிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. எங்கெல்லாம் கல்வியை அர்ப்பணிப்புமிக்க கவனத்தோடு அரசுகள் அணுகுகின்றனவோ அங்கெல்லாம் இந்தச் சவால் வெற்றிகரமாக எதிர்கொள்ளவும்படுகிறது.
புதிய தலைமுறைகளை உருவாக்க உண்மை யாகவே ஒரு புதிய கல்விக் கொள்கையைத்தான் இந்தியா விரும்புகிறது என்றால், உலகெங்கும் உள்ள கல்விச் சூழலோடு தமிழ்நாட்டின் கடந்த கால பலங்கள் - பலவீனங்களை ஒப்பிட்டு தீவிரமாகப் பரிசீலிப்பதன் வாயிலாகவே டில்லி அந்தப் பார்வையைப் பெற முடியும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருமொழிக் கொள்கையை வெற்றிகரமாக அமலாக்க முற்படுவதற்கான சாத்தியங்களை யோசிப்பதன் வாயிலாக இந்தியாவின் கல்விக் கொள்கை மட்டும் அல்ல; இந்தியாவின் ஆட்சிமொழிக் கொள்கையும் புதிய வெளிச்சத்தைப் பெறும்.
- சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
நன்றி: இந்து தமிழ் திசை - 11.6.2019

(குறிப்பு: மேற்கண்ட படத்தில் அண்ணாவுடன் லீக் குவான் யூ படத்திற்கு பதிலாக தற்போதைய பிரதமர் படம் தவறாக இணைக்கப்பட்டுள்ளது.)
பிறஇதழிலிருந்து....

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...