Friday, October 20, 2017

தலைமைச் செயற்குழுத் தீர்மானப்படி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாக்களை அய்யா பிறந்த ஈரோட்டில் வழங்கிட உழைப்பீர்!

* பொதுவாக பிறந்த நாள் விழாவில் பங்கேற்க விரும்பாதவன் நான்!

* விடுதலை’ சந்தா வழங்குவது என்ற பொறியில் சிக்குண்டேன்!!

தந்தை பெரியார் வைத்த நம்பிக்கை வீண் போகாமல் உழைத்து வருகிறேன்

விடுதலை’யால் பல திருப்பங்கள் நிகழவேண்டிய காலகட்டம் இது!


‘விடுதலை’ ஏட்டால் பல திருப்பங்கள் நிகழ வேண்டிய காலகட்டத்தில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ‘விடுதலை’ சந்தாக்களை தந்தை பெரியார் பிறந்த ஊரான ஈரோட்டில் அளித்திட உழையுங்கள் என்று கழகத் தோழர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ‘விடுதலை’ ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

எனது பாசம் மாறா கழகக் குடும்பத்தவர்களே,

தமிழ் இன உணர்வாளர்களே,

பகுத்தறிவாளர்களான தோழர்களே,

பெரியார் பற்றாளர்களே,

அனைவருக்கும் எனது அன்பும், நன்றியும் கலந்த வணக்கம்.
திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு சென்ற முறை (6.9.2017) கூடியதில், வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி (2017) எனது 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை ‘சுயமரியாதை நாளாக’ நடத்துவது என்பதாகவும், அதில் ‘விடுதலை’ நாளிதழ் சந்தாக்கள் 15 ஆயிரத்தை ஈரோட்டில் நடைபெறும் கொள்கைப் பிரச்சார விழாவில் என்னிடம் அளிப்பது என்றும் முடிவு செய்து எனக்கு அறிவித்தார்கள் நம் தலைமைச் செயற்குழு பொறுப்பாளர்களும், தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும்.
பொதுவாகப் பிறந்த நாள் விழாக்களைத் தவிர்ப்பவன் நான்!
பொதுவாக எனது பிறந்த நாள் விழாக்களைத் தோழர்கள் நடத்தி, புத்தகங்களை அல்லது மலர்களை வெளியிடும்போதுகூட நான் அவற்றில் கலந்துகொள்வதில்லை; காரணம், தந்தை பெரியார் என்ற நமது மாபெரும் அறிவாசானின் பிறந்த நாளை வெகுச்சிறப்புடன் நாம் கொண்டாடுவதிலேயே நம் அனைவரின் பிறந்த நாள், மகிழ்ச்சி நாள், சாதனை நாள் எல்லாம் உள்ளடக்கமாகி நிற்கின்றன. பிறகு ஏன் தனித் தனி பிறந்த நாள் விழாக்கள் என்று எண்ணியதால்.
70 ஆண்டு கொள்கை உறவுடைய

மானமிகு கலைஞரின் அன்பு சிறையில் சிக்குண்டேன்!
எனது 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், இனமானத் தலைவர் மானமிகு சுயமரியாதைக்காரரும், இன்றுவரையில் 70 ஆண்டு கால கொள்கை நட்புறவு கொண்டவருமான நமது கலைஞர் அவர்கள் உரிமையுடன் எனக்கு ஆணையிட்டு அன்புச் சிறைக்குள் தள்ளி கலந்துகொள்ள கூறியதால், நடந்தது வள்ளுவர்கோட்டத்தில் - சென்னையில்!
அதுபோலவே, எனது 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்று தஞ்சையில் கழகக் குடும்பத்தவரின் ‘சந்தா தருதல்’ என்ற தூண்டிலை வைத்துப் பிடித்தனர்! தி.மு.க. பொருளாளராகவும், இன் றைய செயல் தலைவராகவும் உள்ள சகோதரர் மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்து கலந்துகொண்டு (கொட்டும் மழையிலும்) சிறப்பித்தார்.
‘விடுதலை’ சந்தாக்கள் எனும் பொறியில் சிக்குண்டேன்!
இவ்வாண்டு, 5 ஆண்டுகள் கூடிய நிலையில், சந்தாக்களை அளித்தல் என்ற ‘பொறி’ வைத்து என்னைத் தோழர்கள் சிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார்கள் - மகிழ்ச்சியே!
நம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1962 இல் என்னை அழைத்து நேரில் கேட்டபோது, நான் தயங்கியபடிக் கூறியது, ஊதியம் வாங்காமல் ‘விடுதலை’யில் பணி செய்கிறேன்; அதற்குத் தாங்கள் இசைவு தரவேண்டும் என்று கூறினேன்; காரணம், அவர் எனது வாழ்விணையரைக் கண்டறிந்து திருமணம் நடத்தியது - இந்த ‘‘நிபந்தனைக்கு’’ வாய்ப்பாக அமைந்துவிட்டது. இவ்வேற்பாட்டின் காரணமாக எங்கள் இருவருக்கும் ‘‘சொற்ப சுயமரியாதை சேதாரமே’’ ஏற்பட்டது.
இத்தனை ஆண்டுகளும் நான் ஒரு ஊதியம் வாங்கா ஊழியனாகவே தொடர்ந்துள்ள நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாராட்டுவதும், உற்சாகப்படுத்துவதும்கூட மதிப்பூதியம்தானே!
ஊதியம் என்பது பொருள் என்ற பொருளில்தான் பொது வாகக் கூறப்படுகிறது.  மற்றபடி பாராட்டுவதும், பணி செய்ய உற்சாகப்படுத்துவதும்கூட ‘மதிப்பூதியம்‘தானே! தவிர்க்க முடியாத அவைகளைப் பெற்ற பிறகு ‘ஊதியம் வாங்காதவன்’ என்ற கித்தாப்புக்கு ஏது இடம்?
ஆனால், அப்படிப்பட்ட எனக்கு, கொள்கை குடும் பத்தவர்களும், ‘விடுதலை’யின் அன்பார்ந்த வாசகப் பெரு மக்களாகிய நீங்களும் ‘‘மடக்கி விட்டீர்கள்’’ - சந்தாக்களைத் திரட்டி வழங்கியதன்மூலம் ‘ஊதியம்‘ தந்துள்ளீர்கள்! தர விருக்கிறீர்கள் தொடர்ச்சியாக!

‘விடுதலை’ வெறும் காகிதமல்ல - ஆயுதம்!
இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் ஏற்பட்டுள்ள பல்வேறு அறைகூவல்களுக்கு ‘விடுதலை’ ஏட்டினை வெறும் காகிதமாகப் பார்க்காமல், அறிவுப் போருக்கான ஆயுதமாக - வாளும் கேடயமாகவே திராவிடத் தமிழ்ச் சமுதாயம் பார்க்கவேண்டும்.
‘விடுதலை’க்குச் சந்தா சேர்க்கும் பணி திசையெட்டிலும் தீவிரமாகக் கழகப் பொறுப்பாளர்களை - ‘உழைப்புத் தேனீக் களாகி’ - அவர்கள் சுழன்று சுழன்று பறந்து பறந்து பணிபுரிவதால் என்னை  - எனது 85 வயது ஆண்டில் முதுமை தாக்காமல் - என்றும் சீரிளமையும் செயல்திறனும் குன்றா உழைப்பினைத் தொடர்பவனாகவே வைத்திருக்கும் என்பது உண்மைதான்!
‘விடுதலை’ சந்தா என்னும் உற்சாக டானிக்!
‘விடுதலை’ சந்தாக்கள் என்ற ஊக்க மாத்திரையால், உற்சாக ‘டானிக்கால்’, ஒப்பரிய நன்கொடையாலே எனது ஆயுளை நீட்டிடச் செய்கிறீர்கள் என்பதும் உண்மைதான்!
அது எனக்கு மட்டுமா?
இந்த சமுதாயத்திற்கும், நம் ஒடுக்கப்பட்ட இனத்து மக் களுக்கும் அல்லவா போய்ச் சேரும் - சேரவேண்டும்!
‘விடுதலை’ இன்றேல்?
‘விடுதலை’ இன்றேல் நம் சமூகம் - இனம் - அதன் லட்சிய வளர்ச்சிப் பயணம் எப்படி அமையும்? கதிரவன் ஒளியில்லா காரிருள் தானே! கலங்கரை விளக்கற்ற கடற்பயணக் கப்பல்கள் என்பதுபோலத்தானே!
எனது இறுதி மூச்சுள்ளவரை - ஏன் எனக்கு ‘விடுதலை’ இந்த உலகிலிருந்து கிடைக்கும்வரை - ‘விடுதலை’க்கு என் பணி ஓயாத உண்மைப் பணியாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
‘விடுதலை’க்கு உதவியர்கள், என் அருந்தோழர்கள் பலர் என்னை விட்டு - உலகத்தைவிட்டுப் பிரிந்த நிலையில், எனது உள்ளம் - போர்க்களத்தில் பல முக்கிய படைத் தளபதிகளை இழந்திட்ட உணர்வுகளைத் தந்து, தேள் கொட்டுவதுபோல் என்னைத் தாக்கும். ஆனால், அதை நான் எப்படி எதிர் கொள்வது வழமை தெரியுமா?
தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் என்மீது வைத்த நம்பிக்கை
முன்பு நமக்கு உதவிக்கு இருந்தவர்கள் இல்லாத நிலையில், அவர்களது உழைப்பையும் ஈடுகட்ட நாம் மேலும் கூடுதலாகப் பணியாற்றி தொய்வின்றித் தொடர் பணியாக நடத்தி, வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தை நிறுத்தாமல் - நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், எனது அன்னையிலும் அன்னையாம் அம்மாவும் வைத்த நம்பிக்கை பழுதடைந்துவிடக் கூடாதே என்பதால், இந்த விழுதின் பணி வீரியம் குறையாது வேகத்துடன் நடத்தப்படவேண்டும் என்ற உறுதியுடன் தொடர்ந்து கொண்டுள்ளேன் -
உங்கள் அனைவரின் கூட்டுத் துணையோடு!
எனவே,தோழர்களே!நீங்கள்அழைக்கும்ஊதியம்வழங் கிடும் பணிக்கு நான் எப்படி மறுப்புச் சொல்ல உரிமை யில்லையோ, அப்படியே உங்கள் அன்பையும், பேராதர வினையும் எமக்களிக்கும் உங்களுக்கும் உரிமையும், கடமையும் உண்டே!
‘விடுதலை’யால் பல திருப்பங்கள்  நிகழ்ந்து தீரும் காலகட்டம்!
‘விடுதலை’யால் பல திருப்பங்கள் நிகழ்ந்து தீரவேண்டிய அரிய தருணம் இது!
எனவே, போர் ஆயுத - அறிவாயுதக் கிடங்கினைப் பாதுகாக்கும் அரணாவீர் தோழர்களே!

அறிவித்ததைவிட, அதிகம் தந்தார்கள் - பெரியாருக்குப் பிறகு - அதுவும் அவருடைய ஊரான ஈரோட்டில் என்று மூக்கில் விரலை வைத்து இன எதிரிகள் மூலையில் முடங்கிட, முனைந்து உழையுங்கள்!

அனைவருக்கும் எனது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

சென்னை                                                  தலைவர்
19.10.2017                                             திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...