Thursday, September 7, 2017

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

டிசம்பர் 2 - தமிழர் தலைவர் பிறந்தநாளில் 15,000 விடுதலை சந்தாக்கள் வழங்குவோம்


2018 ஜனவரி - திருச்சி உலக நாத்திகர் மாநாட்டுக்குப் பேராதரவு
விடுதலை வாசகர் வட்டம், புத்தகச்சந்தை,

துண்டறிக்கை விநியோகம், பகுத்தறிவு தகவல் பலகை அமைத்து இயக்கப் பணியில் தீவிரம்

தந்தை பெரியார் பிறந்தநாளை

ஊர்தோறும் ஊர்வலத்துடன் கொண்டாடுவோம்!

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்



சென்னை, செப்.6 தந்தை பெரியார் 139ஆம் ஆண்டு பிறந்தநாளை ஊர்தோறும் ஊர்வலத்துடன் நடத்துவது என்றும், விடுதலைக்கு 15000 சந்தாக்கள் சேர்ப்பது உட்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் - 6.9.2017 தீர்மானங்கள்
இன்று (6.9.2017) அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1.            இரங்கல் தீர்மானம்
தீர்மானம் 2 ஊர்தோறும் தந்தை பெரியார்

பிறந்த நாள் பெருவிழா!
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அன்று தந்தை பெரியார் படத்தினை அலங்கரித்து அனைத்துக் கட்சியினரையும் பொதுமக்களையும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் கலந்துகொள்ளும் ஊர்வலத்தினைச் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. ஆங் காங்கே தந்தை பெரியார் உருவப்படத்தினை அலங்கரித்து வைத்து பிரச்சாரம் செய்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
காவல்துறை அனுமதி உள்ளிட்ட அனைத்துப் பணி களையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று புத்தாடை அணிதல், இனிப்புகளை வழங்குதல், நண்பர்களை, உறவினர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட வகையில் தேசியத் திருவிழாவாக தந்தை பெரியார் பிறந்த விழாவைக் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3 (அ) 15,000 விடுதலை சந்தாக்கள்

அளிக்க முடிவு
தமிழர்களின் உரிமைப் போர்வாளான ‘விடுதலை’ ஏட்டுக்கு 15 ஆயிரம்  ஆண்டுச் சந்தாக்களைச் சேர்ப்பது எனவும், அதனை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2ஆம் தேதியன்று ஈரோட்டில் மிகப் பெரிய விழா நடத்தி அவ்விழாவில் அளிப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது. கழகப் பொறுப்பாளர்கள் கிளைக்கழகம் முதல் அனைவரும் விடுதலைச் சந்தாதாரராக இருக்க வேண்டும் என்று கட் டளைத் தீர்மானமாக இச்செயற்குழு நிறைவேற்றுகிறது.
(ஆ) விடுதலை சந்தா சேர்ப்பதற்காக “வீடுதோறும் விடுதலை - வீதிதோறும் பிரச்சாரம்” எனும் தலைப்பில் ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை அச்சிட்டு, பொது மக்கள் மத்தியில் வழங்கி, ‘விடுதலை’யின் தேவையை மக்கள் மத்தியில், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில்அறியும்படி செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. “ஜாதி இல்லா நாடு; சாமியார்கள் இல்லா நாடு” என்ற பொருளில் தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தை வரும் அக்டோபரில் குமரி தொடங்கி, திருத்தணி வழியே சென்னை வரை, 7 நாள்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(இ) செப்டம்பர் 22 முதல் ஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மாவட்டக் கழகமே பொறுப்பாளர்களைச் சந்தித்து ‘விடுதலை’ சந்தா சேர்ப்புக்கான வழிமுறைகள் பற்றிக் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
(ஈ) வரும் அக்டோபர் 7ஆம்  தேதியன்று கடலூரில் திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்  4


பெரியார் படிப்பகம், நூலகங்களைச் 
சரிவரப் பராமரிப்பது
நாட்டின் பல பகுதிகளிலும் துவக்கப்பட்ட பெரியார் படிப்பகங்கள், நூலகங்கள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவை செயல்படா நிலையில் இருக்கக் கூடாது என்றும், பகுதி நேரப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு, செவ்வனே நடத்துவது என்றும், பெரியார் படிப்பகங்கள் கழகத் தோழர்களின் சந்திப்புக் களமாகவும் முக்கியமாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கான பொறுப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருக்கும் மாநில, மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5

(அ) துண்டறிக்கைப் பிரச்சாரம்
நமது கழகப் பிரச்சாரத்தில் துண்டறிக்கைகளை மக்க ளுக்கு வழங்குவது என்பது நீண்டகாலமாக இருந்துவரக்கூடிய - பயன் அளிக்கக்கூடிய எளிய திட்டமாகும். மூடப் பழக்கவழக்கங்களை, தோலுரித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தலைமைக் கழகம் வெளியிடும் துண்டறிக் கைகளைக் கழகத் தோழர்கள் கழக் கொடியுடன் கடை கடை யாக, வீடு வீடாகச் சென்று, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியை மேற்கொள்வது என்றும், அதுபோலவே பகுத் தறிவுத் தகவல் பலகையைக் கிளைக் கழகம் தோறும் வைத்து, நாள்தோறும் புதுப்புது கருத்துகளை எழுதி விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கழகத் தோழர்களையும், பகுத்தறிவா ளர்களையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
(ஆ) விடுதலை வாசகர் வட்டத்தை நகர்ப்புறங்களிலும், ஒன்றிய தலைநகரங்களிலும், குறிப்பாக பெரியார் படிப்ப கங்கள் உள்ள இடங்களிலும் கண்டிப்பாக நடத்திடத் தீர்மானிக்கப்படுகிறது.
(இ) புத்தகச் சந்தையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 6


மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் தலைமைக் 
கழகத்திற்கு 15 நாள்களுக்கு ஒருமுறை வருதல் மாநிலக் கழகப் பொறுப்பாளர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக சென்னைத் தலைமைக் கழகத்தில் இரு நாள்கள் தங்கி தலைமையுடன் கலந்துரையாடி, அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கழகப் பணிகள், திட்டங்கள் கள நிலைமை குறித்து முடிவு செய்து செயல் படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்  7

திருச்சியில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்திற்குப் பேராதரவு
தி.மு.க செயல் தலைவரும் தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 4.9.2017 மாலை சென்னை அண்ணா அறிவால யத்தில் கூட்டிய பல்வேறு கட்சிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இச்செயற் குழு தனது முழுஆதரவினையும் தந்து வரவேற்கிறது. அதன்படி 8.9.2017 அன்று திருச்சியில் மத்திய - மாநில அரசின் சமூகநீதிக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழினப் பொதுமக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல் போன்ற இந்தக் கண்டனக் கூட்டத்தின் வெற்றிக்கு எல்லா வகைகளிலும் ஒத்துழைப்பது என்றும் இச்செயற்குழு முடிவு செய்கிறது. கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக திரளுமாறும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 8

உலகநாத்திகர் மாநாட்டுக்கு ஆதரவும் - ஒத்துழைப்பும் தருதல்
திருச்சியில் 2018 ஜனவரியில் நடக்கவிருக்கும் உலக நாத்திகர் மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்துவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அளித்து மகத்தான அளவில் வெற்றிப்பெறச் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 9

பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனம்
கருநாடக மாநிலம் பெங்களூரில் முற்போக்கு எழுத்தாளர், ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் அவர்கள் காவிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு இச்செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இதற்குமுன் மகாராட்டிர மாநிலத்தில் தபோல்கர், கோவிந்த்பன்சாரே, கருநாடாகாவில் கல்புர்கி ஆகிய பகுத்தறிவாளர்களும் தொடர்ந்து காவிகளால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மத்தியில் பிஜேபி ஆட்சி வந்த தற்குப் பிறகு பகுத்தறிவாளர்களுக்கும், முற்போக்காளர் களுக்கும் கடும் அச்சுறுத்தல், உயிருக்கு ஆபத்தும் நிகழ்ந்து வருகிறது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளும் இது வரை வழங்கப்படவில்லை. பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதற்கு  இது ஊக்கத்தையும், துணிச் சலையும் கொடுக்கிறது என்று இச்செயற்குழு குற்றஞ்சாட்டுகிறது.
எனவே -குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனையைப் பெற்றுத் தருமாறு மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...