Friday, June 3, 2016

அநீதிக்கு இடம் தரும் கடவுள்


20.11.1932 - குடிஅரசிலிருந்து...
உலக உற்பத்திக்கும் இயற்கை தோற்றங்களுக்கும், நடப்புக்கும் ஏதாவது ஒரு காரணப் பொருள் இருக்க வேண்டாமா என்று கேட்பதின் மூலம் எப்படியாவது ஒரு சக்தி உண்டு என்பதை ஒப்புக் கொள்ளச் செய்து அதிலிருந்தே ஒரு கடவுளைக் கற்பிக்க முயற்சிகள் செய்யப்படுவதையும் அத்தோடேயே  சர்வசக்தி, சர்வ வியாபக கடவுள் நம்பிக்கைக் காரர்கள் திருப்தி அடைந்து விடுவதையும் பிறகு அதை அஸ்திவாரமாக வைத்து பெரிய ஆகாய கோட்டைகள் கட்டு வதையும் பார்த்திருக்கிறேன்.
உலக உற்பத்திக்கும் அதில் காணப்படும் தோற்றங் களுக்கும் நடப்புகளுக்கும் விஞ்ஞானம் என்னும் சைன்சைத் தொடர்ந்து கொண்டே போனால் என்றும் சமாதானம் கிடைக்கலாமானாலும் பிறகு சைன்சுக்கு யார்கர்த்தா என்கின்ற கேள்வியும் பிறக்கும். அதை இதுவரை எந்த அறிவாளியும் கண்டு பிடிக்கவில்லை என்று பதில் சொன்னால் அதுதான் கடவுள் என்று சொல்லி திருப்தி அடைவார்கள்.
அப்படியானால் அந்த கடவுளுக்கு யார் அவர் எப்படி உண்டானார், அவரின் நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்பதான கேள்விகளை  முன்னைய விஷயங்களுக்குப் போடப்பட்ட கேள்விகளை போலவே, போட்டோமானால் அப்படிபட்ட கேள்வி கேட்க கூடாது என்றும், கடவுளும், சக்தியும் தானாக உண்டான தென்றும் அதற்குக் கால வரை இல்லையென்றும் சொல்லுவார்கள்.
அச்சமாதானத்தால் நாம் திருப்தியடையாவிட்டால் அல்லது இது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று கேட்டால் (அல்லது கடவுள் தானாக உண்டாகும் போது இயற்கை தானாக உண்டாகாதா என்று கேட்டால்) உடனே நம்மை நாஸ்திகன் என்று சொல்லி விடுவார்கள். இந்த மாதிரி நிலையில் தான் ஏதோ யூகத்தின் மீது அதுவும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டாமா என்கிற யூகத்தின் மீது இது வாயிருக்கலாம் அல்லது அதுவாயிருக்கலாம் என்கின்ற பொறுப்பற்ற நிலையில் கற்பிக்கப்பட்ட ஒரு கடவுள் என்பதைப் பற்றி நாம் சிறிதும் கவலைப்படுவதில்லை.
பொறுப்பு ஏற்றுவது ஆனால் அப்படிப் பட்டதின் மீது மனித வாழ்க்கையின் பொறுப்புகளைச் சுமத்துவதும், அதை வணங்குவதும், தொழுவதும், பிரார்த்தனை செய்வது என்பதும், அதை வணங்கினால் பிரார்த்தித்தால், தொழுதால் அதற்காக நேரத்தையும் அறிவையும் பணத்தையும் செலவு செய்தால் பயன் பெறலாம் என்பதும் பிரதிபலன் உண்டென்பதும் பாவங்கள் மன்னிக்கப்படுமென்பதும், மற்றும் மனிதனால் தன் சுய நலத்திற்காகவும் சோம்பேறி வாழ்க்கை பிரியத்திற் காகவும் பிறர்க்குச் செய்யப்படும் சூழ்ச்சிக்கும் அக்கிரமத் திற்கும் கடவுள் செயலே காரணம் எனச் சொல்லி ஏமாற்று வதைப் பார்த்தால் பிறகு எப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சி யானாலும் அது எங்கிருந்த போதிலும் அதை அழித்தே தீர வேண்டியிருக்கிறது.
திருடனுக்கும் கடவுள்
அன்றியும் திருடப் போகிற ஒரு திருடன்தான் திருடப் புறப்படு முன் தனக்கு நல்ல திருட்டுக் கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்து விட்டு புறப்படுகிறான். நல்ல திருட்டு கிடைத்தவுடன் அதில் ஒரு சிறு பாகத்தைக் கடவுளுக்கும் அதன் திருப்பணிகளுக்கும் செலவு செய்து கடவுள் உணர்ச்சியை அனுபவிக்கிறான். இது போலவே ஒரு கொலைகாரனும் தான்.
விடுதலை அடையக் கடவுளைத் துதித்து விடுதலை யடைந்த உடன் கடவுளுக்குப் பூசை அபிஷேக முதலியன செய்து நன்றி செலுத்துகிறான். இதுபோலவே சொத்துக்களை வைத்திருக்கும் உடமையாளனும் தனது சொத்துக்களை திருடர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்தித்து நன்றி செலுத்துகிறான்.
இது போலவே கடவுள் நம்பிக்கை உள்ள சில சோம்பேறிகளும் செல்வவான்களும்  கடவுள் பிரார்த்தனையின் மீதே தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள். ஆகவே கடவுள் செயலும் கடவுள் கருணையும் எவ்வளவு ஒழுக்க குறைவுக்கும் அநீதிக்கும் இடம் தருகின்றது என்று பாருங்கள். அவை இதைத் தவிர வேறு எதற்காவது பயன்படுகிறதா என்று பாருங்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...