Saturday, June 25, 2016

யோகாவுக்கு அடிக்கும் 'யோகம்!'


ஷாகாவை நடத்தி வந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் இப்பொழுது யோகாவைக் கையில் தூக்கிக் கொண்டு அலைய ஆரம்பித்துள்ளது. திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் கும்பல் இப்பொழுது இதனைத் தூக்கிக் கொண்டு அலைகிறது.
சாதாரணமாக உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி என்று சொல்லியிருந்தால் இந்த யோகாவுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டு இருக்கும். இதனை ஆர்.எஸ்.எஸ். அதன் வழி வந்த பிஜேபி அதன் பிரதமர் கையில் எடுத்துக் கொண்டதால்தான் சந்தேகப் படும்படியாகி விட்டது.
இந்த சந்தேகத்திற்கு நியாயம் இருக்கவே செய்கிறது. எதிலும் இந்துத்துவா பார்வையோடு பிரச்சினையை அணுகுபவர்கள் ஆயிற்றே. ஆதாயமில்லாமல் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்களே! அந்த சந்தேகம் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல -பீகார் முதல் அமைச்சர் நீதிஷ்குமாருக்கே வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
'தனிப்பட்ட முறையில் நான்கூட உடற்பயிற்சி செய்து கொண்டு தானிருக்கிறேன். அரசு சார்பில் செய்ய வேண்டும் என்று சொல்லும் பொழுது அதனை ஏற்க மறுக்கிறேன்' என்று மண்டையில் அடிப்பது போல சொல்லி விட்டார். முதுகெலும்புள்ள முதல் அமைச்சராக அவர் இருப்பது பாராட்டுக்குரியது.
கேரள மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் சார்பில் திருவனந்தபுரம் சென்ட்ரல் விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியில் அம்மாநில சுகாதாரம் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த செய்தியும், கருத்தும் மிகவும் முக்கியமானது.
"யோகா என்பது ஒரு கலை. எந்த மதத்திற்கும் குறிப்பிட்ட எந்த ஜாதிக்கும் சொந்தமானதல்ல. ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு சொந்தமான கலையாக யோகாவை முன்னிறுத்துகிறது. யோகா பயிற்சியின் போது சமஸ்கிருத சுலோகங்களை சொல்லுமாறு கட்டாயப்படுத்துகிறது. யோகா நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இணைக்கப்பட்டுள்ளது. நம் நாடு மத சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதமும் கடவுள் குறித்த தனித்து நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் கொண்டுள்ளது. ஆனால் இதில் சமஸ்கிருத சுலோகங்களைத் திணித்து இந்து மதக் கடவுள்கள்மீதான பிரார்த்தனைகளையும் கட்டாயப்படுத்துவது கண்டனத்திற்குரியது" என்று கூறியுள்ளார்.
இந்த யோகாவில் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றை வைத்துள்ளனர். முசுலிம்களைப் பொறுத்தவரையில் இத்தகு வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள்; ஒரு பக்கத்தில் மதச் சார்பற்றது யோகா என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் சூரிய நமஸ்காரம் செய்யச் சொல்லுவதும், அதனை ஏற்க மறுப்பவர்கள் கடலில் போய் குதியுங்கள் என்று கூறுவதெல்லாம் பச்சையான பாசிசம் அல்லவா!
மத்திய அரசின் இணையதளமான 'ஆயுஷ்' என்பதில் இந்த யோகா பற்றி என்ன சொல்லப்படுகிறது?
சிவபெருமானிடமிருந்து உற்பத்தியானது என்றும் பதஞ்சலி போன்ற முனிவரின் பாரம்பரியத்தில் வந்தது என்றும் இதற்கொரு போலி வரலாற்றை எழுதுகிறது.
வரலாறு என்று சொல்ல வேண்டும் என்றால் வேத காலத்துக்கு முந்தைய சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தில் இந்த யோகா இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் மேரி ஸ்டூவர்ட் எழுதியுள்ள ஒரு நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"யோகா எனும் முறை, நாகரிகம் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமையானது. இப்பொழுது பாகிஸ்தான் எனப்படும் நாட்டில் உள்ள சிந்துச் சமவெளியில் வரலாற்றுக்கு முந்தைய இடிபாடுகள் (புதை பொருள்கள்) இருக்கின்றன. அவற்றிடையே யோகாவைப் பற்றிய முதல் அடையாளங்கள் காணப்பட்டன. உருவங்கள் பதியப்பட்ட முத்திரைகள் இங்கே கண்டு எடுக்கப்பட்டுள்ளன. இன்றும் வழக்கத்தில் உள்ள யோகா நிலையில் அமர்ந்திருப்பது போன்ற ஓர் உருவத்தை அந்த முத்திரைகள் சில காட்டுகின்றன" என்று மேரி ஸ்டூவர்ட் என்ற அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
ஆரியப் பார்ப்பனர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு உரித்தானவற்றை தங்களது என்று திரித்துப் பிரித்துக் காட்டும் சூழ்ச்சியில் கரை கண்டவர்கள்.
இது குறித்து பார்ப்பனரான கோ. சூரிய நாராயண சாஸ்திரி (பரிதி மாற்கலைஞர்) யாரே கூறுவது காணத்தக்கதே!
"தமிழரிடத்திலிருந்த பல அரிய விஷயங்களையும், மொழிபெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே 'தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்" என்று கூறுகிறார் (தமிழ்மொழியின் வரலாறு பக்கம் 27).
அந்தத் திருட்டில் யோகாவும் ஒன்றே!
இந்த யோகாவை நடத்துவதற்குத் தேர்வு செய்யப்பட்ட தேதியும்கூட ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான கேசவ்பலிராம் ஹேட்கேவரின் மறைவு நாளாக ஜூன் 21 ஆகும் (1940) என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...