Saturday, March 26, 2016

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி மறியல் போராட்டம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி மறியல் போராட்டம்- ஏராளமானோர் சிறைபுக தயாராவீர்!

திராவிடர் கழக ஜாதி ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு
திருச்சி, மார்ச் 25- அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகலாம் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்.
திருச்சி பெரியார் உலகம் சிறுகனூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  அவரது உரை வருமாறு:
அறிவிப்பது - தெரிவிப்பது என்னுடைய கடமை!
சிறப்பான இந்த மாநாட்டில் - திராவிடர் கழகத்தினு டைய மாநில மாநாடு - ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு ஆகியவைகளை மய்யப்படுத்தி நடத்தப்படுகிற இந்த மாநாடு - ஒரு வரலாற்றுத் திருப்பமாக இருக்கக்கூடிய ஒரு மாநாடு என்பது - வெறும் உரைகளோடு, கருத்துக் களோடு நின்றுவிடக்கூடாது. இந்த மாநாடு பெரியார் உலகத்தில் கூடி நாம் எடுக்கின்ற முடிவுகள் - அடுத்த படியாக களத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிற ஒரு பாசறை மாநாடு என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே வந்திருக்கின்ற பல்லாயிரக்கணக்கான கழகக் கருஞ்சட்டை வீரர்கள் - அது போல ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஆகியவர்களுடைய மத்தியில் தெரிவிப்பது என்னுடைய கடமையாகும்.
பெரியார் நாட்டிலிருந்து, காந்தி நாட்டிற்கு...
எனக்கு முன்பாக உரையாற்றிய 88 அகவை நிறைந்த - குஜராத் மாநிலத்தில் வரலாறு படைத்த தமிழ்நாட்டின் அந்தக் காலத்தில் தலைசிறந்த திராவிடர் இயக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகி யோரின் மிகுந்த மதிப்பையும், மரியாதையும் பெற்ற நம்முடைய அய்யா நீதியரசர் - குஜராத் உயர்நீதிமன்றத்தி னுடைய தலைமை மேனாள் நீதிபதி அவர்கள் மிக சிறப்பான இந்த இயக்கம் - இவ்வியக்கம் ஆற்றக்கூடிய பணிகள் - இரட் டைக் குழலின் சிறப்புகள்பற்றியெல்லாம் சொன்னார்கள். பெரியார் நாட்டிலிருந்து, காந்தி நாட்டிற்குச் சென்று, அதையே மாற்றியவர் நம்முடைய அருமை அய்யா நீதியரசர் அவர்களாவார்கள்.
சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டினுடைய தொடர்ச்சி இந்த மாநாடு
அந்த வகையில், தந்தை பெரியார் - காந்தி இருவரும் நடத்திய  போராட்டங்கள் அமைதி வழிப் போராட்டங்கள். அறவழிப் போராட்டங்கள். அன்றைக்கு சத்தியாகிரகம் என்கிற பெயரால் - வைக்கம் சத்தியாகிரகத்திலிருந்து தொடங்கி பல்வேறு வகையான போராட்டங்கள்- தந்தை பெரியார் அவர்கள்  43 ஆண்டுகளுக்கு முன்பாக அறிவித்த சமூக இழிவு ஒழிப்பு மாநாட்டினுடைய தொடர்ச்சி இந்த மாநாடு. இதற்கிடையில், அவர்கள் சொன்னதைப் போல, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொன்னதனுடைய அடிப்படை - யாரோ சிலருக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதல்ல.
காலம் காலமாக இருக்கின்ற நம்முடைய சமூக இழிவு துடைத்து வழித்து எறியப்படவேண்டும். எங்கள் சகோதரர்கள், யார் இல்லை என்றால், இந்த சமுதாயம் இயங்க முடியாதோ - அப்படிப்பட்ட சகோதரர்கள் - சகோதரர் அதியமான் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, நீதியரசர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, மிகத் தெளிவாக ஜாதியை ஒழிக்க, பேதங்களை ஒழிக்க என்று மாத்திரமல்லாமல், வாய்ப்பைக் கொடுக்கவேண்டும்.
இன்றைக்கு திராவிடர் இயக்கத்தினுடைய பெருமை களைச் சொன்னார்கள். இந்த இயக்கம் இருக்கின்ற காரணத்தினால்தான், ஆதிதிராவிடர் சமுதாய, மீதி திராவிடர் சமுதாயமும் இன்றைக்கு அய்.ஏ.எஸ்., அதிகாரி களாக, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக - இன்னும் பல்வேறு பெரிய பெரிய பொறுப்புகளில் எல்லாம் வருகிறார்கள் என்றால், 100 ஆண்டு கால திராவிடர் இயக்கம் - 90 ஆண்டுகால சமுதாய புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கம் - இவைகள் எல்லாம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியி ருப்பதனுடைய விளைவுதான் அது.
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவேன் என்று கலைஞர் சொன்னார்
எனவே, அப்படிப்பட்ட மாற்றம் - இவைபற்றியெல்லாம் விரிவான உரை  பின்னால் என்னுடைய தலைமை உரையில் ஆதாரபூர்வமாக திட்டங்களோடு பல செய்திகளை மாலையில் சொல்லவிருக்கிறேன். ஆனால், இந்த மாநாடு - போராட்ட மாநாடு. இந்த மாநாட்டில் ஒரு மிக முக்கியமான திட்டம் என்ன அறிவிக்கப்பட்டது என்பதோடு செல்லவேண்டும். உலகம் முழுவதும் இந்தக் கருத்துகள் போய் சேரவேண்டும். ஆகவேதான், இந்தத் தீர்மானம் - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவேன் என்று கலைஞர் சொன்னார் - அதேபோன்றுதான் உச்சநீதிமன்றமும் அந்த சட்டங்கள் செல்லாது என்று சொல்லவில்லை. சில சந்தேங்களைச் சொன்னார்கள். அவைகளையும் சென்ற முறை அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, அதனை நிவர்த்தி செய்தார்கள். ஆகமங்களைப் படிக்கிறவர்களுக்கு தனிப் பயிற்சி கொடுக்கிறோம் என்று சொன்னார்கள்.
என்னுடைய உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்!
அப்பயிற்சியைப் பெற்று இன்றைக்கு 206 பேர் தயாராக இருக்கிறார்கள். தீர்ப்பும் - சட்டம் செல்லும் என்று வந்துவிட்டது இப்பொழுது. எனவே, இது செயல் படவேண்டிய நேரமாகும். எனவேதான், இப்பொழுது இருக்கும் அரசுக்கு அதனை சொன்னோம். ஆனால், அவர்கள் கேளாக்காதினராக இருந்து கொண்டிருக் கிறார்கள். செயல்படாத அரசாக இருக்கக்கூடிய இந்த அரசை செயல்பட வைக்கவேண்டும். எந்த அரசாக இருந்தாலும் அது செயல்படவேண்டும். சென்ற தேர்தலுக்கு முன்பாக நாங்கள் அதனைத்தான் எடுத்து வைத்தோம்.
அந்த வகையில், இந்த மாநாட்டில் மற்ற தீர்மானங்கள் எல்லாம் மாலையில் நிறைவேற்றப்படும். இது மிக முக்கியமான தீர்மானம் என்ற காரணத்தினால், கழகத் தினுடைய தொண்டர்களுக்குத் தொண்டன் - தோழர் களுக்குத் தோழன் - கழகத்தினுடைய முதல் பணியாள் என்பதற்காக இந்தத் தீர்மானத்தை முன்மொழிய, செயல்படுத்த வாய்ப்புக் கொடுத்த வரவேற்பு குழுவி னருக்கும், இயக்கத்தினருக்கும் என்னுடைய உளங் கனிந்த நன்றியைத் தெரிவித்து, இந்தத் தீர்மானத்தை - இது அறிவார்ந்த அரங்கம் - நேரில் இருக்கின்றவர்கள் - அல்லது கண்டுகொண்டிருக்கின்றவர்கள் எல்லோ ருக்கும் தெளிவாகக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை அறிவிக்கக்கூடிய இந்தத் தீர் மானம் என்னால் இப்பொழுது முன்மொழியப் படுகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்
ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புக்கு வழிவகுக்கும் மனித உரிமைப் போராட்டமாகிய - தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்தும் வகை யில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1970 ஆம் ஆண்டிலும், 2006 ஆம் ஆண்டிலும் ஆணைகளும், சட்டங்களும் பிறப்பிக்கப்பட்டன.
நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்ட மூன்று ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அவ்வாணையங்கள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில்  பயிற்சி கொடுக்கப்பட்டு, தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தீட்சையும் வழங்கப்பட்டு, பணி நியமனம் செய்யப் படவிருந்த ஒரு காலகட்டத்தில், அதனை எதிர்த்து சிவாச்சாரியார்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அதன் தீர்ப்பு (16.12.2015) வழங்கப்பட்டு விட்டது.
தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டம் செல்லும் என்று கூறியதோடு, மனுதாரர்களால் வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி யும் செய்துவிட்டது.
எந்தவித சட்டத் தடையும், நீதிமன்றத்தின் விரோத மான தீர்ப்பும் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு ஆகமத்துக்கு உட்பட்ட கோவில்கள், ஆகமங்களுக்கு உட்படாத கோவில்களில் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சியும், தீட்சையும் பெற்ற தகுதியுள்ள 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் எழுதிய 21.12.2015 நாளிட்ட கடிதத்துக்கு எந்தவிதமான பதிலோ, மேல்நடவடிக்கையோ இல்லாத நிலையில், இவ்வாட்சிக்கு இப்பிரச்சினையில் போதிய அக்கறையும், ஆர்வமும் இல்லாமையால், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த 206 பேரையும் இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவில் களில் நியமனம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற் கும் அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
போராட்டம் எப்பொழுது? போராட்டம் எப்பொழுது? என்று ஆர்ப்பரிக்கும் இளைஞர்கள்!
இந்தப் போராட்டம் நடைபெறும் தேதி என்னவென் றும், தேர்தல் நேரமாக இருக்கிறதே என்றும் சிலர் நினைக்கக்கூடும்.
அதை அவர்கள் என்னிடத்தில் விட்டார்கள். மற்றவர் கள் தேர்தலைப்பற்றியும், கோட்டைக்குப் போவதைப் பற்றியும் நினைக்கிறார்கள். நாம் சமூகப் பணியாளர்கள், சமூகப் பெரியார் தொண்டர்கள் - நம்மோடு இருக்கக் கூடிய ஒத்தக் கருத்துள்ள போராளிகள் - இவர்கள் எல்லாம் நம்மோடு வருவார்கள்.  சிறையை நிரப்புவது பற்றி நினைக்கிறார்கள். நிறைய பேர் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். நாங்கள் சுற்றுப்பயணம் செய்கின்ற பொழுது, எப்பொழுது போராட்டம், போராட்டம், போராட் டத்தை அறிவியுங்கள் என்று சொன்னார்கள் இளைஞர்கள்.
ஆகவே, இந்தப் போராட்டத்திற்கு நீண்ட இடைவெளி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு நாம் ஒன்றும் இடையூறாக இருக்கப் போவதில்லை. அந்தப் போராட்டத்தினுடைய முதல் கட்டம்தான் இது. பல கட்டங்களாக அப்போராட்டம் நடைபெறும். அந்த முதல்கட்டப் போராட்டம் என்பது மறியல் போராட்டமாக, எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், தாலுகா தலை நகரங்களிலும் தமிழ்நாடு முழுக்க நடைபெறும். அதில் குறிப்பாக முன்மொழிகின்ற நான் தெளிவாகச் சொல்கி றேன், ஏப்ரல் 18 ஆம் தேதி திங்கள்கிழமை காலை இந்தப் போராட்டம் நடைபெறும்.
சென்னையில் நடைபெறும் மறியலுக்கு நான் தலைமை தாங்குகிறேன்!
எனவே, இந்த இடைவெளியை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு, பிரச்சாரம், பட்டியல்களைத் தரவேண்டும். தமிழ்நாட்டில் இப்பொழுது தேர்தலில் நிற்கக்கூடிய அரசியல் கட்சி நண்பர்கள், தலைவர்கள் எல்லாம் ஒன்றைச் சொல்கிறார்கள் - நாங்கள் போடுகிற முதல் கையெழுத்து, நாங்கள் போடுகிற முதல் கையெழுத்து என்று சொல்கிறார்கள், நீங்களும் அறிவீர்கள். அதையே நானும் சொல்கிறேன், இந்தப் பட்டியலில் போடுகின்ற முதல் கையெழுத்து - என்னுடைய கையெழுத்து! சிறைச்சாலைக்குப் போவதற்கு - மறியலில் பங்கேற்பதற்கு - சென்னையில் நடைபெறும் அந்த மறியலுக்கு நான் தலைமை தாங்குவேன்.
சென்னையிலுள்ள இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு முன்பாக என் தலைமையில் போராட்டம் தொடங்கும். தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் அல்லது தாலுகா அலுவலகங்கள் - எங்கெங்கே மக்களுக்குத் தொடர்பு இருக்கக்கூடிய பகுதிகள் இருக்கிறதோ - அங்கு காவல் துறைக்குத் தகவல் கொடுத்துவிட்டு (ஏனென்றால், மறியல் செய்வதற்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்கமாட்டார்கள்) ஆகவே, அவர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, ஒரு சிறு சொத்துக்கு, பொதுச் சொத் துக்கு நாசம் இல்லாமல், பொது அமைதிக்குப் பங்க மில்லாமல் - இதுவரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் போராட்டங்கள் எவ்வளவு வெற்றிகரமாக நடந்து வந்ததோ, அதுபோல், பல்லாயிரக்கணக்கான இளை ஞர்கள் முன்வரவேண்டும்.
எந்தக் கட்சியினராக இருந்தாலும், இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வந்தால்...
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அவர்கள் எந்தக் கட்சியினராக இருந் தாலும், இந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வந்தால், அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்று சொல்லி, நீங்கள் அனைவரும் இத்தீர்மானத்தை ஏற்கிறீர் கள் என்பதற்கு எழுந்து நின்று, கையொலி எழுப்பி - மிகத் தெளிவாக நீங்கள் இத்தீர்மானத்தை வரவேற்க வேண்டும் என்று இந்த மாநாட்டின் சார்பாக, முன்மொழிந்து இதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டத்தின் - முதல் கட்டப் போராட்டம்
வழிமொழிகின்ற வகையில், பட்டியலை அவர்கள் கொடுப்பார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு உங்களுக் குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு மாநாடு முடிந்து சென்றவுடன், நீங்கள் செய்யவேண்டிய பணி - அடுத்த பணி என்னவென்றால், ஏப்ரல் 18 ஆம் தேதி - திங்கள்கிழமை அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் போராட்டத்தின் - முதல் கட்டப் போராட்டத்தில் பங் கேற்பதுதான்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...