Saturday, March 26, 2016

வெள்ளைக்காரன் கசப்பு - அவன் கொண்டு வந்த சட்டம் மட்டும் இனிப்போ!



- மின்சாரம்
"124(பி) பிரிவில்தான் மகாத்மா காந்தி உள்ளிட்ட ஏராளமான சுதந்திரப் போராட் டத் தலைவர்களை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அதே பிரிவில்தான் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். தூக்குக் கயிற்றை முத்தமிட்டு இந்தியாவிற்காக பகத்சிங் உயிர்த்தியாகம் செய்ததும் இதே சட்டத்தால் தான்.
அதே சட்டப்பிரிவில் என்மீதும் வழக்குப் பதிவு செய்திருப் பதால், காந்தி மற்றும் பகத்சிங் உள்ளிட்டோரின் வரிசை யில் என்னையும் சேர்த்ததற்கு நான் பெரு மைப்படத்தானே செய்வேன். அவர் களுக்கு இணையான அதே மரியாதையை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியி ருக்கிறது."
- தேசத்துரோக வழக்கு பாய்ந்தது குறித்து
சீத்தாராம் யெச்சூரி
டில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தேச விரோதமாக முழக்கம் போட்டார்கள் என்று கூறி கன்னையாகுமார் உள்ளிட்ட ஆறு மாணவர்களை 124 தேச விரோத சட்டத் தின்கீழ் சிறையில் அடைத்தனர். தேச விரோதமாக எந்த முழக்கத்தையும் போட வில்லை என்று மாணவர்கள் தரப்பில் மறுக்கப்பட்டது.
மாணவர்கள் முழக்கமிட்டதாகச் சொல் லப்பட்ட அந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்தது ‘ஜி’ டி.வி.யாகும். அந்தப் பதிவில் இல்லாததை - பிறகு மோசடியாக இடை யில் புகுத்தி கன்னையாகுமார் உள்ளிட்ட மாணவர்கள் தேச விரோதக் குரலைக் கொடுத்தனர் என்று ஜோடிக்கப்பட்டது. ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோவைப் பார்த்து தலைமை செய்தியாளரான விஸ்வ தீபக் அதிர்ச்சி அடைந்து தன் வேலையி லிருந்து ராஜினாமா செய்தேன் என்றார். இதன் பின்னணியை எளிதிற் தெரிந்து கொள்ளலாமே.
அடேயப்பா எவ்வளவுப் பெரிய  மோசடிக் குரூரர்கள்! இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் மாணவர் தலைவர் கன்னையாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் கொண்டு வந்த போது பிஜேபி சட்டமன்ற உறுப்பினரே முன்னின்று தாக்கியுள்ளார்; காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது.
ஜெ.என்.யு. பல்கலைக் கழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை அறிந்து அந்த இடத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) அகில இந்திய செயலாளர் து. ராஜா, டில்லி முதல் அமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், பேரா சிரியர் கிலானி உட்பட  பலர்மீதும் அதே தேச துரோக வழக்கு 124 பதிவு செய்யப்பட்டுள்ளது.
124-கி: இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமுலுக்கு வந்தது, அதை குடியரசு தினமாகவும் கொண்டாடிவருகிறோம். அதே 1950ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப், ஹரி யானா உயர்நீதி மன்றத்தில் மாஸ்டர் தாரா சிங் கோபி மீதான தேசத்துரோக குற்ற வழக்கின் 124-கின் கீழ் இரண்டு நீதி பதிகள்அமர்வின் தீர்ப்பில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வாட்சன்சொன்னது என்னவென்றால்.
“இந்தியா இப்பொழுது ஒரு குடியரசு நாடாகும், இதில் வெளிநாட்டினர் ஆதிக் கத்தின் கீழாக கொண்டு வரப்பட்ட சட்ட மான தேசத் துரோக குற்ற சட்டம் 124-கி மிகவும் இயற்கையாக தேவையில்லாத ஒரு சட்டமாக ஆகிவிட்டது” என்று குறிப் பிட்டார்.
1950 ஆண்டு இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து இந்திய குடிமக் களின் உரிமைகள் என்னஎன்று வரையறுக் கப்பட்ட பிறகு, காலனிய ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டிருப்பது தேவையா என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருந்துவருகிறது. தேசத் துரோகச் சட்டம் 124கி யின் கீழ் வழக்குகள் பதியப்படுவதும், அந்த வழக்கின் பொழுது இந்திய அரசமைப்பு சட்டம் 19இன் கீழ் ஒரு இந்திய குடி மகனின் உரிமைகள் விவாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 19 என்ன சொல்கிறது என்றால்
பேச்சு சுதந்திரம் போன்ற சுதந்திரங் களை பாதுகாப்பது
Aஅனைத்து குடிமக்களுக்குமான உரிமை
B தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் பேச உரிமை உள்ளது.
C ஓரிடத்தில் அமைதியாக ஆயு தங்கள் இல்லாமல் ஒன்று கூடலாம்.
D இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் அமைக்க உரிமை உள்ளது.
E இந்தியா முழுவதிலும் எங்கு வேண் டுமென்றாலும் சென்று வரலாம்.
F இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தங்குவதற்கும் வாழ்வதற்கும் முழு உரிமை உள்ளது.
இதற்கு நேர் எதிரானதுதான் இந்தத் தேசத் துரோகக் குற்ற வழக்கு 124கி சீத்தாராம் யெச்சூரி சொன்னதுபோல வெள்ளைக்காரன் அன்னியன், வெளி நாட்டுக்காரன் இந்நாட்டை சுரண்ட வந்தவன், இந்திய மக்களை ஒடுக்கியவன் - கொண்டு வந்த - பிரயோகித்த அதே தேசத் துரோக சட்டத்தை சுதந்திர இந்திய நாட்டில் பயன்படுத்துகிறார்கள் என்றால் இவர்கள் எந்தவகையில் அந்நியன் வெள்ளைக்காரனைவிட உயர்ந்தவர்கள் - மாறுபட்டவர்கள்?
இந்த ஆட்சி (ஆங்கிலேயர் ஆட்சி) ஏன் ஒழிய வேண்டும்; என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ இதழில் (29.10.1933) தந்தை பெரியார் எழு திய தலையங்கத்துக்காக இதே இபிகோ 124 கி பிரிவின்படிதான் தந்தை பெரியார் மீதும், ‘குடிஅரசு’ ஏட்டின் வெளியீட்டாள ரும் - தந்தை பெரியாரின் தங்கையுமான எஸ்.ஆர். கண்ணம்மாள் ஆகியோர் மீதும் ஆங்கிலேய ஆட்சி வழக்கு  ஒன்றைத் தொடர்ந்தது.
வழக்கினை விசாரித்த வெள்ளைக்கார நீதிபதி (கோவை ஜில்லா மாஜிஸ்திரேட்) டபுள்யூ வெல்ஸ் அய்.சி.எஸ். தந்தை பெரியார் அவர்களுக்கு 6 மாத வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மீண்டும் ஒரு மாத சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களுக்கு 3 மாத வெறுங்காவல் தண் டனையும், 300 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் ஒரு மாத வெறுங்காவல் தண்ட னையும் அளித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சென்னை மந்தைவெளியிலே கதர் பிரச்சாரக் காலத்தில் பெரியார் பேசிய பேச்சு ராஜநிந்தனைக் குற்றம் (124ஏ) குற்றஞ் சாட்டப்பட்டதுண்டு.
1938ஆம் ஆண்டில் சென்னை மாநில பிரதமராக இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்கள்மீதும் இதே குற்றப் பிரிவின்கீழ்தான் தண்டனை பெற்றுக் கொடுத்தார்.
வெள்ளைக்காரன் - கொள்ளைக்காரன் - அந்நியர் கொண்டு வந்த அதே சட்டத்தை ‘சுதந்திர’ இந்தியாவிலும் முனை மழுங்காமல் பயன்படுத்துகிறார்கள் என்றால் இது  என்ன சுதந்திர நாடாம்? இதனைக் கண்டிக்கும் வகையில்தான் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் நடைபெற்ற சமூகநீதி மாநாட் டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாதுகாப்பு  சட்டம் - நீதிமன்ற அவமதிப்பு சட்டம் -
அவதூறு சட்டத்தில் மாற்றம் தேவை!
வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டு, சுயராஜ்யம் பெற்றுவிட்டோம் என்ற நிலைமை மாறி 69 ஆண்டுகளான பிறகும், அன்றைக்கு நம் நாட்டவரின் போராட்ட முறைகளை அடக்கி ஒடுக்கிட, பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த அதே பழைய அடக்குமுறை, அவதூறு, மதப் பாதுகாப்பு என்று கூறி, அவற்றைப் பாதுகாக்கும் குற்ற வியல் சட்டங்களை அப்படியே வைத்து,
இன்றும் தங்களது ஆட்சிக்கு வசதியாக இருக்கிறது என்கிற காரணத்தினால் - காலத்திற்கேற்ப, நவீன ஜனநாயக ஆட்சியின் கூறுகளான பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, கூடித் தெரிவிக்கும் உரிமை, அறவழியில் போராடும் உரிமைகளைப் பறிக்கும்  தேசத் துரோகச் சட்டம் (Sedition, Blasphemy Law) போன்ற மதங்கள் பாதுகாப்புச் சட்டம், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்,
அவதூறு சட்டம் போன்றவைகளை நீக்கவும், திருத்தவும், மாற்றமும் செய்ய வேண்டியது 21 ஆம் நூற்றாண்டில் இந்திய ஜனநாயகத்தில் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானதாகும். அவசர அவசிய மானதும் ஆகும். இதுபற்றி இந்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஆழ்ந்து மத்திய அரசு பரிசீலிக்க முன்வரவேண்டும்.
திராவிடர் கழக சட்டத்துறையின் சார்பில் மாண்பமை மேனாள் நீதிபதிகள் ஜஸ்டிஸ் டாக்டர் ஏ.கே.ராஜன், ஜஸ்டிஸ் து.ஹரிபரந் தாமன், மூத்த வழக்குரைஞரும், சட்டப் பேராசிரியருமான ஏ.தியாகராஜன் ஆகியோர் கொண்ட மூவர் குழுவை நியமித்து, அவர் களது ஆய்வுப் பரிந்துரைகளைப் பெற்று, நாடு தழுவிய அளவில் (டில்லி உள்பட) கருத்தரங்கு களை நடத்துவது என்று இம்மாநாடு தெரிவித் துக் கொள்கிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்.   நாடு எங்கே போய்க் கொண்டிருக் கிறது? வெள்ளைக்காரன் காலத்துக்கு அல்லவா போய்க் கொண்டிருக்கிறது.
1860இல் வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்னும் நம்மை அடக்கும்  அங்குசமாக இருக்கிறது.
இதுதான் சுதந்திர இந்தியாவா? அன்றே சொன்னார் தொலைநோக்காளர் தந்தை பெரியார்: வெள்ளைக்காரன் கையிலிருந்து இந்தப் பார்ப்பன கொள்ளைக்காரன் கையில் ‘மேடோவர்’ செய்யப்பட்டுள்ளது என்று கூறினாரே - பெரியார் சொன்னது எதுதான் பிழையானது?
--------------------

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...