Wednesday, November 18, 2015

இலங்கைச் சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்க!


இலங்கை வடக்கு மாநில முதல் அமைச்சர் விக்னேசுவரன் இலங்கை அரசுக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.  இலங்கைச் சிறையில் வாடும் தமிழர்களை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை அவர் முன் வைத்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009- ஆம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றனவாம்.
இதைக்கண்டித்து, தமிழ் கைதிகளில் 200-க்கும் மேற் பட்டோர் தங்களுக்கு நீதி வேண்டி சிறையில் பட்டினிப் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் சிறி சேனா உறுதி அளித்தார். இதையடுத்து, பட்டினிப் போராட் டத்தை கைதிகள் திரும்பப் பெற்றனர்.
இருப்பினும், இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளாக உள்ள 200-க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று அந்நாட்டு அரசு சில நாள்களுக்குப்பின் தெரிவித்தது. அதேவேளையில், வழக்கு நிலுவையில் உள்ளவர்களும், காவல்துறையினரின் நடவடிக்கையின்கீழ் உள்ளவர்களும் பிணை பெறலாம்.
இதற்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் இலங்கை அரசு கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து 32 கைதிகள் கடந்த வாரம் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், பிணையில் விடுதலை செய்ய  கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதனிடையே, இலங்கை அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக கூறி மீண்டும் சிறையில் உள்ள கைதிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பட்டினிப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் தங்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்யவில்லை என்றால் சாகும்வரை போராட்டத்தைத் தொடருவோம் என்று அவர்கள் கூறி யுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் முன் னெடுக்கப்படும் இந்தத் தொடர் பட்டினிப் போராட்டத்தால் கைதிகள் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இது வரை 35-க்கும் மேற்பட்ட கைதிகள் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பட்டினிப் போராட்டம் இருந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படு கிறது. இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்களது கோரிக்கைகளை ஏற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பட்டினிப் போராட்டம் இருந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதால், தமிழர்களின் நல்லெண்ணத்தை இலங்கை அரசு இழந்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக் கைகளை நிறைவேற்ற தவறிவிட்டதால், தொடர் பட்டினிப் போராட்டம் இருக்கும் கைதிகள் தங்களது போராட்டத்தை நிறுத்த மாட்டார்கள் என்றார்.

இதனிடையே, இலங்கையில் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய் யக்கோரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) உள்ளிட்ட தமிழர் அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சிறீசேனா அரசு எப்படி நடந்து கொண்டு வருகிறது?
அய்.நா. அமைப்பு வல்லுநர் குழு அளித்த அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றக்கள்மீது பன்னாட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று முக்கியமான பரிந்துரையைச் செய்தது.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை பன்னாட்டு நீதிமன்றம் வைத்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையர் சையது அல் உசேன் அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில் போர்க் குற்றம் செய்தவர்கள்மீது விசாரணையோ நீதிமன்றமோ அமைக்கப்படவில்லை. மாறாக பாதிப்புக்கு ஆளான உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களைக் கால வரையறை யின்றி இலங்கை சிங்கள அரசு கைதிகளாகச் சிறையில் அடைத்து வைத்துள்ளது. பொது மன்னிப்பு அடிப்படையி லாவது அவர்களை விடுதலை செய்ய வேண்டாமா? கைதிகள் சிறையில் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
இலங்கை வடக்கு மாநில முதல் அமைச்சர் அதிபருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். தி.மு.க. தலைவரும், டெசோ; தலைவருமான கலைஞர் அவர்களும் இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் சம்பந்தனும், வடக்கு மாநில முதல் அமைச்சர் விக்னேஸ்வரனும் இலங்கை அதிபர் சிறீசேனாவும் நடத்திய பேச்சு வார்த்தையில் நவம்பர் 7ஆம் தேதி விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டதை நிறைவேற்றவில்லை. நவம்பர் 9ஆம் தேதி வெறும் 31 பேர்களை மட்டும் மிகக் கடுமையான நிபந்தனைகளின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கண்கட்டு வித்தையை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் சிறைச் சாலைக்கு சென்றுள்ளனர். தமிழ்க் கைதிகளின் பட்டினிப் போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
பிரிட்டினின் ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சர் (திக்ஷீமீமீபீஷீனீ திக்ஷீஷீனீ ஜிஷீக்ஷீக்ஷீமீ) என்ற அமைப்பு கடந்த ஆகஸ்டு மாதத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நூறு விழுக்காட்டினரும் கடுமையான அடி உதை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். 78 விழுக்காட்டினர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
71 விழுக்காட்டினர் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். 70 விழுக்காட்டினர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
மனித உரிமைகள் உணர்வு வளர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கால கட்டத்தில் இத்தகு கொடுமைகள் அரசுப் பயங்கரவாதமாக நடைபெற்றது மன்னிக்கத்தக்கதல்ல.
ஒரு பக்கத்தில் போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டும், இன்னொரு பக்கத்தில் காலவரையற்ற முறையில் பாதிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த தமிழர்களை சிறையில் வைத்திருப்பதும் நேர்மையானதல்ல - மனித உரிமைக்கு எதிரானது. சிறீசேனா அரசு இந்த விடயத்தில் ராஜபக்சே மேலானவர் என்று கருதும்படி நடந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...