Saturday, June 20, 2015

நாட்டு நடப்புகள்

நாடாளுமன்றம், நீதிமன்றம், நிருவாகம், பத்திரிகை கள் இவை நான்கும் நாட்டின் தூண்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை நான்கும் நாணயமான முறையில் நடந்துகொள்ளுமேயானால், நாடும் ஒழுங் காக நாளும் பயணிக்கும் என்பதில் அய்யமில்லை.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த நான்கும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்பது நன்கு தெரிந்ததுதான்.

எல்லா அமைப்புகளையும்விட கூடுதலான அதிகாரம் படைத்த நீதிமன்றங்களே - ஏன் உச்சநீதி மன்றமே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நடக்கவில்லை என்கிறபோது, மற்றவற்றைப்பற்றிக் கேட்பானேன்?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிமீதே வழக்குத் தொடுக்கப்பட்ட நிலை எல்லாம் உண்டே! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரே (ஜஸ்டிஸ் இராமச்சந்திர அய்யர்) தன் வயதை தன் பதிவேட்டில் (சர்வீஸ் ரிஜிஸ்டர்) திருத்தி மோசடி செய்து பதவியில் நீடிக்கவில்லையா?

தலைமை நீதிபதியே தவறு செய்யும்போது கடுமை யான அதிகபட்சத் தண்டனையை அல்லவா அளித்திருக்கவேண்டும்? வேலியே பயிரை மேய்வது எவ்வளவுப் பெரிய ஆபத்தானது!

ஆனால், என்ன நடந்தது? குடியரசுத் தலைவராக வும் ஒரு பார்ப்பனர் இருந்ததால், பூணூல் பாலங்கள், நீதிபதிக்கு ஒரு சொட்டு வேர்வைக்குக்கூட சேதாரம் இல்லாமல் வெளியில் அனுப்பிய பவித்திரம் சாதாரணமானதுதானா?
நீதித்துறை இப்படி என்றால், ஆட்சித்துறை எப்படி இருக்கிறது என்பதற்கு இப்பொழுது நடந்துகொண்டு இருக்கும் லலித் மோடி பிரச்சினை ஒன்றே ஒன்று போதாதா? அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் காதும் காதும் வைத்தாற் போல உதவி செய்வது எந்த வகையில் சரியானது?

நிருவாகத் துறையின் இலட்சணத்திற்கு ஓர் உதாரணம் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு. கேள்வி - பதில்கள் குறுஞ்செய்திகளாக உலா வருகின்றன என்றால், மேலே என்ன சொல்லவேண்டும்?

பத்திரிகைகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம்; அய்.பி.எல்.லில் பெரும் பணம் புழக்கத்தில் இருப்பதால், அதில் தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே என்று தினமணி இன்று தலையங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதே.
நடுநிலையில் நின்று பேனா பிடிப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் துக்ளக் ஆசிரியர், சம்பந்தப்பட்டவர் பார்ப்பனர் என்றால், அவர் பேனா எப்படியெல்லாம் நாட்டியம் ஆடும்; கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையிலும் இருந்து வந்தவர்தானே அவாளுக்கு லோகக் குரு;  வழக்கு நடந்துகொண் டிருந்தபோது, சங்கராச்சாரியார் விஷயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது! என்று எழுதினாரா இல்லையா?

பக்தி, தாத்பர்யம், தார்மீகம்பற்றியெல்லாம் எச்சில் ஒழுகப் பேசுகிறார்களே - அந்தப் பக்தி லோகம் எப்படி இருக்கிறது? இன்றைய ஏடுகளில்கூட ஒரு சேதி வெளிவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருநின்ற வூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் அர்ச்சகர் மணிவண்ணன் - புதிய தேர் செய்வதாகக் கூறி, ரூ.60 லட்சம் கையாடல் என்று, தினமலரே செய்தி வெளியிடுகிறதே!

சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி, தங்கும் இடத்தில் மதுபாட்டில்கள், விபச்சாரி வீட்டில் கைது என்றெல்லாம் செய்திகள் வெளிவரவில்லையா?

குஜராத் மாநில சவுமிய நாராயணசாமி கோவில் குருக்கள் குடியிருப்பில் விபச்சாரிகளுடன் குருக்கள் சல்லாபம் என்ற செய்தி பலான படங்களுடன் வெளிவரவில்லையா?

வெகுதூரம் போவானேன்? காஞ்சிபுரம் மச்சேந்திர நாதர் கோவில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன், கோவிலுக்குச் சாமி கும்பிட வந்த பெண்களைப் பாலியல் வெறிக்குப் பயன்படுத்தினான் என்ற தகவல் கள் பக்கம் பக்கமாக வெளிவரவில்லையா? இதுகுறித்து எந்தப் பார்ப்பன ஏடுகளாவது மூக்குச் சிந்தியது உண்டா?
பக்தி பெருகினால் ஒழுக்கம் பரவும் என்று சொல்லு வதெல்லாம் யாரை ஏமாற்ற? இன்னும் சொல்லப் போனால், பக்தி பெருகப் பெருகத்தான் ஒழுக்கக்கேடும் வால் முளைத்து, இறக்கைகள் முளைத்து வீறுகொண்டு விண்ணில் பறக்கின்றன.

12 ஆண்டுகள் பாவம் செய்து விட்டு 12 ஆவது ஆண்டு வரும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்துவிட்டால், பாவங்கள் பஞ்சாகப் பறந்து போய் விடும் என்றால், நாட்டில் ஒழுக்கக்கேடாக நடக்காதவன் பைத்தியக்காரனாகப் பார்க்கப்படமாட்டானா?

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்றால், பலகீனமான மனிதன், அந்தப் பக்கம்தானே தாவுவான்!

இந்து மதமும், பார்ப்பன தர்பாரும் நாட்டில் நீடிக் கும்வரை நேர்மை, நடுநிலைமை, ஒழுக்கம் என்பதெல் லாம் குதிரைக் கொம்பே! ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் கோணல் புத்திதான் நடமாடும்.

இதைத் தந்தை பெரியார் உரைக்கல்லில் உரைத்துப் பார்த்து, பகுத்தறிவைக் கூர்தீட்டிப் பார்த்தால், உண்மைகளின் தன்மை வெளிச்சமாகவே தெரியும்!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...