Saturday, June 20, 2015

தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு....

தோழர் ஆனைமுத்து அவர்களுக்கு....


2017 இல் பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் நாம் எல்லோரும் சந்திப்போம் - வே. ஆனைமுத்து என்று தேதி போடாத அறிக்கை ஒன்று கிடைக்கப் பெற்றது.

டாக்டர் ஜான்சனின் வரலாற்றை எழுதிய பாஸ்வெல் போல பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

தாராளமாக எழுதுங்கள்; வரவேற்கலாம். பலரும் ஏற்கெனவே எழுதியும் இருக்கின்றனர். (உலகத் தலைவர் பெரியார் வரலாற்று நூலின் தொடர்ச்சியாக இறுதிப் பகுதிகள் இன்னும் சில மாதங்களில் திராவிடர் கழக வெளியீடாக வெளிவரவும் உள்ளது).

அதேநேரத்தில், சில முக்கிய கருத்துகளை இங்கு இதில் பதிவு செய்யவேண்டியிருக்கிறது.

இதற்குமுன் இவர் எழுதிய, வெளியிட்ட தகவல்களை வைத்துக்கொண்டு இதுபற்றிய கருத்தினை வெளியிட வேண்டிய அவசியமும் நமக்கு ஏற்பட்டுள்ளது.

1. தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்பது திராவிடர் கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்குமே தெரிந்த செய்தியாகும்.

ஆனாலும், டிசம்பர் 24 (1973) அன்று தந்தை பெரியார் மறைந்தார் என்றால், 1974 ஜனவரி 6 ஆம் தேதி திருச்சி பெரியார் மாளிகையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அன்னையார் முறைப்படி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது வரலாறு.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங் களுக்கும் ஆளாகாமல் சென்று முடிப்போம் என்று கழகத் தோழர்கள் அன்னை மணியம்மையார் தலைமை யில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

அந்தப் பொதுக்குழுவில் தோழர் வே.ஆனைமுத்து அவர்களும் இருந்தவர்தான்.


தந்தை பெரியார் என்ற மேரு மலை சாய்ந்த நிலையில், தமிழ் மக்களின் மிகப்பெரிய வழிகாட்டி, பாதுகாவலர் கண்மூடிய சூழ்நிலையில், 
தந்தை பெரியார் அறிவுறுத்திய புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி

என்ற முறையில் பணியாற்றவேண்டிய தோழர் ஆனை முத்து அவர்கள், (முன்கூட்டியே திட்டமிட்டு) கழகத் தலைமையின்மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தார்.

12.11.1975 நாளிட்டு மணியம்மையாருக்குக் கடிதம் என்று எழுதி, அதன் நகலைக் கழகத் தோழர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

எத்தனையோ தோழர்கள் அதனை அவருக்கே திருப்பி அனுப்பி, தங்களின் கடும் அதிருப்தியினை வெளிப்படுத்திக் கொண்டார்கள். கடைசிக் கருஞ்சட்டைத் தோழன்வரை கட்டுப்பாடு என்னும் கவசம் அணிந்து அணிவகுத்து நின்ற நிலையில்,

பிரமுகரான தோழர் ஆனைமுத்து அவர்களோ அதற்கு எதிர்நிலையில் நின்றார் - கலகக் கொடி உயர்த்திப் பார்த்துத் தோல்வி அடைந்தார் என்பது இவ்விடத்தில் அழுத்தமாகக் குறிப் பிடத்தக்கதாகும். மிகுந்த தாராள மனப்பான்மையுடன் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டுதான், தோழர் ஆனைமுத்து அவர்கள்மீது கழகப் பொதுக்குழுவே ஒருமனதாக நடவடிக்கை எடுத்தது.

அவருக்காக ஒருவர்கூட பரிதாபப்பட்டுக்கூட வக்காலத்து வாங்கவில்லை (26.11.1975).

தந்தை பெரியார் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தமைக்கு அன்னை மணியம்மையார்தான் காரணம் என்பது எல்லோருக்குமே தெரியும். பெரியார் திருமணத்தைக் காரணம் காட்டி விலகிச் சென்ற அண்ணா அவர் களேகூட, பிற்காலத்தில் இதனை ஏற்றுக்கொண்டும் உள்ளார். ஏன் தந்தை பெரியார் அவர்களே வெளிப் படையாக எழுதியும் இருக்கிறார்கள்.

எனது நோய் சற்றுக் கடினமானதுதான்; எளிதில் குணமாகாது; மூத்திர வழியில் கற்கள் இருக் கின்றன. அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும். ஆபரேஷன் (அறுவைச் சிகிச்சை) தேவை இருந்தாலும், இருக்கலாம். ஆனாலும், நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற் கரியது என்று தந்தை பெரியார் கைப்பட எழுதி இருப்பதற்குமேல் வேறு எவருடைய அத்தாட்சியும் தேவைப்படாது.

தோழர் ஆனைமுத்து அவர்கள் எழுதிய அந்தக் கடிதத்தில் தந்தை பெரியார் வைத்தியம் இல்லாமல் விடப்பட்டார் என்று அபாண்டமாக, எதிரிகளேகூட சொல்லத் துணியாத அபவாதத்தினை விஷமாகக் கக்கினார். தன்னுடைய இளமையையே தூக்கி எறிந்து, அய்யா வாழ்நாள் நீட்சிக்கே தன் வாழ்நாளை ஒப்படைத்த அன்னையார்மீது இப்படி ஓர் அபாண்டம் சுமத்தும் மனிதர்களும் இருந்தார்களே - என்ன சொல்ல! என்ன செய்ய!!

இத்தகைய மனப்பான்மை கொண்டவர் தந்தை பெரியார் முழு வரலாற்றை உள்ளபடியே எழுதுவாரா என்ற வினா எழுவது நியாயமே!

2. 2015 சிந்தனையாளன் பொங்கல் மலரில் நோபிள் கு.கோவிந்தராசனுடன் வே.ஆனைமுத்து முதன் முதலாகப் பதிவு செய்யப்படும் உண்மைகள் என்ற தலைப்பில் (பக்கங்கள் 206, 207, 208) வெளியிட்டுள்ள செய்திகள் - அபாண்டமாக பழி சுமத்துதல் - பொய்ப் பேசுதல், புனை சுருட்டு செய்தல் என்றால் எந்த எல்லைக் கும் செல்லக்கூடியவர் தோழர் ஆனைமுத்து என்பதற் கான எடுத்துக்காட்டாகும்.

செத்துப் போனவர்களைச் சாட்சியாக்கிப் பேசுவது கீழ்த்தரமான குணமாகும். அந்த வகையில், தனது போக் குக்கு அல்லது ஆசைக்கு பச்சைத் தமிழர் காமராசரையும் நோபிள் கு.கோவிந்தராசு அவர்களையும் தன் பொய்களுக்குத் துணையாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்.

காமராசர் 2.10.1975 நண்பகல் மறைந்தார்.

நோபிளும், நானும் 30.9.1975 மாலையில் காமராசரை அவருடைய வீட்டில் நேர்காணல் செய்தோம். அவர் தலையில் ஒரு குட்டையைக் கட்டிக்கொண்டு, கால்களை பிரம்பு முக்காலி மேல் நீட்டிக்கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார். அந்த ஈன நிலையிலும் அரைமணிநேரம் உரையாடினார்.

காமராசர்: ஏம்பா? அய்யா டிரஸ்டு ஏற்படுத்தினாரே, அது என்ன?

வே.ஆனைமுத்து: என்னங்கய்யா வேணும்?

காமராசர்: யார், யாரு டிரஸ்டி?

வே.ஆனைமுத்து: மணியம்மா, வீரமணி, சம்பந்தம்...
காமராசர்: அப்புறம்...?

நான் எல்லாப் பெயர்களையும் சொல்லுகிற வரையில், அப்படிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

காமராசர்: அப்போ, அந்த அம்மாவும், அந்தப் பையனும் வச்சதுதான் சட்டம்ணு சொல்லு. அய்யா தப்புப் பண்ணிட்டாருப்பா... தப்புப் பண்ணிட்டாருப்பா... தப்புப் பண்ணிட்டாருப்பா என, மூன்று தடவை சொன்னார்.

அந்த மாமேதை அடுத்த 40 மணிநேரத்தில் மறைந்தார்.

அன்று என்னுடன் இருந்த நோபிள், அடுத்து 20 ஆண்டுகள் இருந்தார் என்று சிந்தனையாளனில் கிறுக்கித் தள்ளியுள்ளார்.

அன்னை மணியம்மையார்மீதும், ஆசிரியர்மீதும் சேற்றைவாரி இறைக்கவேண்டும் என்பதற்காக உயிரோடு இல்லாத காமராசரைப் பயன்படுத்தித் தந்தை பெரியார் அவர்களைக் குறைகூறுவதைக் கவனிக்கவேண்டும்.

பெரியார் தப்புப் பண்ணிவிட்டார் என்று காமராசர் சொன்னதாக எழுதுவதன் பொருள் என்ன?

இன்னொரு வகையில் பார்த்தாலும் தந்தை பெரியார் மீது காமராசர் கொண்டிருந்த பற்றையும் மரியாதை யையும் அறிந்தவர்கள், காமராசர், பெரியாரைப்பற்றிக் குறைகூறினார் என்று காமராசர் மறைவுக்குப் பிறகு எழுதியிருப்பதைப் படிக்கும்பொழுது முகம் சுளிக்கத்தான் செய்வார்கள்.

காமராசர் எப்பொழுதுமே நிதானமாக வார்த்தைகளை எண்ணிப் பேசக்கூடியவர். ஓட்டை வாயரல்லர் - தோழர் ஆனைமுத்துவைப் போல.

தனது வக்கிரத்துக்காக மறைந்துபோன இருபெரும் தலைவர்களைப் பயன்படுத்தி எழுதுவது எந்த வகையில் சரி? எந்த வகையைச் சேர்ந்த பண்பாடு?

இதில் செத்துச் சுண்ணாம்பாகிப் போன, இன்னொரு வரையும் (நோபிள் கோவிந்தராசுலு) சாட்சிக்கு அழைத்து எழுதுகிறார். (தந்தை பெரியாரையும், காமராசரையும் கொச்சைப்படுத்துவதற்கு நம் இன எதிரிகள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அம்பாகப் பயன் பட்டுள்ளார் தோழர் ஆனைமுத்து).


தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர்களுக்கும், காமராசர் அவர்களுக்குமிடையே இருந்த நெருக்கமும், ஆனை முத்து அவர்களிடத்தில் காமராசருக்கு இருந்த நெருக் கமும் ஒன்றா? அதிக அறிமுகமில்லாத ஒருவரிடத்தில் காமராசர் போன்ற முதிர்ச்சி பெற்ற பெருந்தலைவர்கள்,

அதுவும் தந்தை பெரியார் அவர்களால் பச்சைத் தமிழர் என்று அடையாளம் காட்டிய, மக்கள் மத்தியிலே உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த தந்தை பெரியாரை, நீங்கள் காட்டிய பாதையில்தான் என் பயணம் என்று வெளிப்படையாகச் சொன்ன காமராசர், தந்தை பெரியார் தப்புப் பண்ணிவிட்டார் என்று கூறி இருப்பாரா? நிதானத்தில் உள்ளவர்களுக்கு விடை தெரியும்.

ஆனால், தோழர் ஆனைமுத்துக்கு?

இப்படிப்பட்ட குணமும், இயல்பும் கொண்ட ஒருவர், பெரியார் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதினால், அது உண்மையான வரலாறாக இருக்குமா?
செத்துப் போனவர்களை சாட்சிக்கு அழைப்பது என்று ஆரம்பித்தால், யாரைப்பற்றியும், யார் வேண்டுமானாலும் எந்த அளவுக்கும் தாறுமாறாக, மோசடியாக கொச்சைப் படுத்தி எப்படியும் எழுத முடியுமே! இது ஒரு தரம் தாழ்ந்த புத்தியாகும், யுக்தியுமாகும்.

3. தந்தை பெரியாரின் அறிவு நாணயம், தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம், சட்டத்திற்குக் கட்டுப்படும் தன்மை, நேர்மை இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைக் கும் வகையில் மற்றொரு தவறான தகவலையும் பெரியாரின் அயல்நாட்டுக் குறிப்புகள் எனும் நூலில் XXIII ஆம் பக்கத்தில் பதிப்பாசிரியரின் முன்னுரையில் கீழ்க் கண்டவாறு (பதிப்பாசிரியர் வே.ஆனைமுத்து) எழுதி யுள்ளார்.

ஈ.வெ.ரா.வும், அவருடன் சென்ற எஸ்.இராமநாதன், இராமு என்கிற ஆர்.இராமசாமி ஆகியோரும் சோவியத் இரஷ்யாவுக்குப் போவதற்கான பயண அனுமதி (Passport) இன்றி இரகசியமாகவே 1932 இல் சோவியத்து இரஷ்யாவை அடைந்தனர் என்று தோழர் வே.ஆனைமுத்து குறிப்பிட்டுள்ளார்.
இது உண்மையா என்றால், பவானி ஜமக்காளத்தில் வடிகட்டி எடுக்கப்பட்ட பெரிய பொய்யும், புரட்டும், அபாண்டமும் ஆகும்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில், தமிழக மக்களால் தந்தை பெரியார் என்று போற்றப்படும் ஒரு மாபெரும் யுகப் புரட்சியாளரைப்பற்றி எழுதுகிறோம் என்ற மதிப்பின்றி எடுத்தேன் - கவிழ்த்தேன் - எல்லாம் எனக்குத் தெரியும்! என்ற ஆணவத்தில் இப்படி எல்லாம் எழுதலாமா?

இதன் பொருள் என்ன? திருட்டுத்தனமாக பெரியார் பயணித்தார் என்பதுதானே!
உண்மை என்னவென்றால், தந்தை பெரியாரின் பாஸ்போர்ட், ரஷ்ய அரசு முத்திரையோடு ஆசிரியரிடம் இன்னும் இருக்கிறது என்பதுதான். சென்னையில் உள்ள சோவியத்து மய்யத்தில் நடைபெற்ற ரஷ்ய கலாச்சார மய்யத்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ரஷ்ய கான்சலேட் ஜெனரல், இந்து ராம் ஆகியோர் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் அந்தப் பாஸ்போர்ட்டைக் காட்டி சிறப்புரையாற்றினாரே!

இரும்புத் திரைநாடு என்று ஒரு காலத்தில் சொல் லப்பட்ட ருசியாவுக்கு பாஸ்போர்ட்டு இல்லாமல் செல்ல முடியுமா? என்பதை சாதாரணமாக - பொது அறிவு உள்ள வர்கள் அறிவார்கள். ஆனால், தோழர் ஆனைமுத்து?

போதிய கவனமும், கவலையும், பொறுப்பும் எடுத்துக்கொண்டு குறிப்பிடவேண்டிய தகவலை, மக்கள் மத்தியில் மாபெரும் தலைவர்பற்றிக் கேவலமாக எடை போடும் வகையில் எழுதியவர்கள் எல்லாம் தந்தை பெரியார் வரலாற்றை எழுதப் போகிறார்களே என்று எண்ணும்போது துணுக்குற வேண்டியுள்ளது.

காரணம் - அண்ணா மொழியில் சொல்லவேண்டும் என்றால், தந்தை பெரியார் ஒரு சகாப்தம் - காலகட்டம் - திருப்பம்!

4. மற்றொரு பொய் மூட்டையையும் அவிழ்த்துக் கொட்டியுள்ளார்.

பெரியாரின் வரலாற்றை பல தொகுதிகளாக எழுதி வெளியிட விரும்புகிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் 1971-1972 இல் என்னிடம் ஒப்படைத்த எல்லா  அச்சிட்ட தரவுகளையும், 1975 இல் மணியம் மையாரிடம் திருப்பித் தந்துவிட்டேன் என்றும் எழுதியுள்ளார்!

பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை, எழுதுவதில்லை என்ற ஒரு முடிந்த முடிவுக்கு வந்து விட்டாற்போல தெரிகிறது.

இதுவும் உண்மையானதல்ல; எந்தத் தரவையும் அன்னை மணியம்மையார் அவர்களிடத்தில் திருப்பித் தரவில்லை என்பதை கழகத் தலைவரிடம் உறுதிப் படுத்திக் கொண்டே இதனை எழுதுகிறோம்.

தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு பல தரம் தாழ்ந்த அறிக்கைகளையும், நூலையும் எழுதி அவற்றின்மூலம் சுகம் காணும் மனிதராகவே முதியவர் ஆனைமுத்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தோழர் திருவாரூர் திரு. கே.தங்கராசு அவர்கள் மறைந்தபோது முதலாவதாக கழகத் தோழர்களுடன் அவர் இல்லம் சென்று அவருடைய உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு இரங்கல் சொன்னவர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

மறுநாள் நடைபெற்ற (6.1.2014) இரங்கல் கூட்டத்தில் உண்மை தெரியாமல், உண்மையைத் தெரிந்துகொள்ளவும் ஆசைப்படாமல், அதற்கான பொறுப்புணர்ச்சியுமின்றி தோழர் தங்கராசு மறைவுக்குக்கூட வீரமணி வராதது நாகரிகமா?

சாவில்கூட குரோத உணர்ச்சியா? என்ற பாணியில் திராவிடர் கழகத் தலைவர்மீது அதீதமான வகையில் காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்பையும் வளர்த்துக்கொண்ட காரணத்தால், சகட்டுமேனிக்குப் பே(ஏ)சினாரே! அங்கிருந்த தோழர்கள் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக உண்மையைச் சொன்ன பிறகு, தலைகுனிந்து மனுஷன் உட்கார்ந்துவிட்டார்.

தந்தை பெரியார் சிந்தனை வேரில் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் கணித்துச் சூட்டப்பட்ட திராவிட என்ற இலட்சிய இனப் பண்பாட்டு வரலாற்றுச் சொல் லையும் தூக்கியெறிந்துவிட்டு, மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி என்று தந்தை பெரியாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கருப்புச் சட்டை அணிவதையும் தவிர்த்துவிட்டு,

பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறேன் என்று ஒருவர் சொல்கிறார் என்றால், முன்வருகிறார் என்றால், அந்த வரலாற்றில் உண்மை தன்மை, முழுமைத்தன்மை, கொள்கை மணம் எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழுமா - எழாதா?

விருப்பு வெறுப்பு அற்ற முறையில் மிகுந்த பொறுப் புணர்ச்சியோடு எழுதப்படவேண்டிய ஒரு சகாப்தத் தலைவரின் வரலாற்றை -

இவர் போன்றவர்கள் எழுதினால் என்னவாக இருக்கும் என்ற பொறுப்புணர்வும், தந்தை பெரியார்மீது கொண்ட மிகப்பெரிய மரியாதை உணர்வும்தான் இந்த மறுப்புக் கட்டுரைக்கான நோக்கமாகும்.

காரணம் தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படி!


- கலி.பூங்குன்றன்
சென்னை    துணைத் தலைவர்,
19.6.2015    திராவிடர் கழகம்

பாஸ்போர்ட் இல்லாமல் பெரியார் ருசியா சென்றாரா?
பச்சையான பொய் - இதோ உண்மை ஆதாரங்கள்

தந்தை பெரியாருக்கு தாசில்தார் எழுதிய கடிதம்


வெளிநாடு செல்ல மாவட்ட ஆட்சியருக்கு முறைப்படி தந்தை பெரியார் விண்ணப்பித்தார். அதனை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) வட்டாட்சியருக்கு (தாசில்தாருக்கு) அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து தந்தை பெரியார் அவர்களுக்கு வட்டாட்சியர் எழுதிய கடிதம் (8.9.1931) இதோ:
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். தங்களுடன் அழைத்துச் செல்லப்படும் திரு.ஆர்.ராமசாமி அவர்களுக்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதற்கான பதிலை கூடிய விரைவில் அனுப்பி வைத்தால், மிகவும் நன்றியுடையேன் என்று தாசில்தார் எஸ்.சுப்பராம அய்யர், தந்தை பெரியார் அவர்களுக்கு மிகுந்த மரியாதையுடன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதம் இதோ:

தந்தை பெரியார் அவர்களின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சோவியத் ருஷ்யாவின் விசா அனுமதி பகுதி (ரஷ்ய மொழியில்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...