Sunday, February 3, 2013

ஆளுநர் உரை


ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரை என்பது சம்பிரதாயமான ஒன்றே.
உரை ஆளுநரால் படிக்கப்படுகிறதே தவிர, உள்ளபடியே அரசு தயாரிக்கும் உரையைத்தான் அட்சரம் பிறழாமல் படிக்கிறார் என்பதுதான் உண்மை.
ஆளுநர் உரை - அடுத்து நிதி அமைச்சர் அளிக்கும் நிதி நிலை அறிக்கையின் முன்னோட் டம்தான்.
2013-2014ஆம் ஆண்டுக்கான திட்ட  ஒதுக்கீடு ரூ.28 ஆயிரம் கோடியிலிருந்து 37  ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்கத் தக்கதாகும்.
அதே நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புக்காகச் சொல்லப்பட்டுள்ள காரணங் கள் அலட்சியப்படுத்தக் கூடியவையல்ல.
கடந்தாண்டு தருமபுரியில் நடைபெற்றுள்ள - தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக் கைகள் குறித்து இவ்வரசின் அணுகுமுறை பற்றியோ, நிவாரண உதவி பற்றியோ - திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை.
நீர் இல்லாமையால் விவசாயத் தொழில் அறவே பாதிக்கப்பட்டு 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது சாதாரணமானதல்ல; அதுபற்றி கண்டு கொள்ளப்படவில்லை. விவசாயி களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் எந்த விதமான குறிப்பும் கிடையாது. அதன் காரணமாக டெல்டா பகுதி விவசாயிகள் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு மிக தேவைப்படும் சேது சமுத்திரத் திட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசின் கருத்து ஏற்கெனவே தெரிந்த ஒன்றே. அதன் காரணமாகவே ஆளுநர் உரையில் அது இடம் பெறவில்லை. ஆனாலும் எதிர்க்கட்சி என்ற முறையில் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமை இருக்கிற காரணத்தால் தங்கள் வெளி நடப்புக்கு அதனை ஒரு காரணமாக கூறியுள்ளனர்.
எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர்களின் சேர்க்கை மே மாதத்திற்கு முன்பு நடைபெறக் கூடாது என்ற உத்தரவு பெரிதும் வரவேற்கத் தக்கதே!
வருந்தத் தக்கது - பண்பாட்டு மறுமலர்ச்சியின் கண்ணோட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் குறைகூறி இருக்கும் போக்கை என்னென்று சொல்லுவது! புராண ஆபாசக் கதை கொண்டதுதான் தமிழ் வருடங்களா? மகா மகா வெட்கக்கேடு!
1921ஆம் ஆண்டிலேயே தமிழ்  அறிஞர்கள் தெரிவித்த கருத்து - அதன்பின் திருச்சியில் நாவலர் சோம சுந்தரபாரதியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் போன்றவர்கள் பங்கேற்று முடிவு செய்த ஒன்று;
உலகளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்காகவே கூட்டப்பட்ட மாநாட்டின் முடிவு - இவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்திருப்பது அசல் பார்ப்பனத்தனம் அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?
இன்னொரு அறிவிப்பை எண்ணிப் பார்த்தால் இந்த ஆட்சி அண்ணா பெயரையும் திராவிட என்ற இனச்சுட்டுப் பெயரையும் எப்படிக் கொச்சைப்படுத்துகிறது என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.
புதிதாக இந்த ஆண்டிலிருந்து கம்ப ராமாய ணத்தில் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்குக் கம்பர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட அண்ணா அவர்களை அவமதிக்க முடியாது.
கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று இரா.பி. சேதுப்பிள்ளை,  நாவலர் சோமசுந்தரபாரதியார் ஆகியோரோடு வாதிட்டு வென்றவர் அண்ணா.
அத்தகைய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பொறித்துக் கொண்டுள்ள கட்சி - அதற்கு நேர் எதிராகச் செயல்படுவது அண்ணா பெயரை மோசடியாகப் பயன்படுத்திக் கொள்வதல்லாமல் வேறு என்ன வாம்?
அ.இ.அ.தி.மு.க.வில் அண்ணாமீதும், திராவிட இயக்க உணர்வின்மீதும் மதிப்பு வைத் துள்ள ஒரே ஒருவர் இருந்தால் அவர் மட்டுமாவது சிந்திக்கட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...