Saturday, February 2, 2013

வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கும் நவீன விபீஷனர்கள்


பார்ப்பனர்களுக்குத் துதி பாடும் விபீஷணர்கள் எப்போதுமே இருந்து வருபவர்கள்தான் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.  ஆனால் இப்போது புறப்பட்டு இருக்கும் நவீன விபீடணர்கள் அனைவருக்கும் ஒரு படி மேலே போய் பார்ப்பனர்களுக்கு வால் பிடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் ஜாதி அமைப்பு முறையை புகுத்தியவர்கள் ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள்தான் என்பது அனைவரும் நன்கு அறிந்த, அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட  உண்மையாகும். இதற்கு ஆதாரமாக மனுதர்ம சாஸ்திரம் உள்ளது.  நான்கு வர்ணத்தவர்களாக மக்கள் முறையே பிரம்மாவின் நெற்றி, மார்பு, தொடை மற்றும்  பாதத்தில் இருந்து எவ்வாறு பிறந்தார்கள் என்று மனுதர்ம சாஸ்திரம் விரிவாகக் கூறுகிறது. இது அன்றி,  வர்ணமற்ற அவர்ணஸ்தவர்கள் என தாழ்த்தப்பட்ட பிரிவினரான பஞ்சமர், சண்டாளர்கள் பாகுபடுத்திக் காட்டப் பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது ஜாதிய அமைப்பு முறை ஆரியர்களால் புகுத்தப்பட்டதல்ல; பண்டைய இந்தியாவின் பழங்குடி மக்களிடையே நிலவி வந்ததுதான் என்று இந்த நவீன விபீடணர்கள் கூறுவதற்கு ஆதாரமாகத் தாங்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே 10,000 - 30,000 ஆண்டு களுக்கு முன்பு நம் நாட்டு பூர்வகுடி மக்களிடையே ஏற்றத் தாழ்வு கொண்ட ஜாதிய அமைப்பு நடைமுறை இருந்தது என்று இவர்கள் கூறுகின்றனர். இதற்காக அவர்கள் காட்டும் இரண்டு ஆதாரங்கள்.
1. தந்தையிடமிருந்து  மரபணு மூலம் ஆண் பாரம்பரிய வழியில்  ஜாதிய அமைப்பு முறை அவரது ஆண் சந்ததியினரிடையே தொடர்ந்து நிலை பெற்று வருவதாக அவர்கள் கூறுவது.
2. தந்தையிடமிருந்து மகன்களுக்கு மட்டுமே சீ குரோமோசோம்கள் செலுத்தப்படுகின்றன என்ற அறிவியல் உண்மை.
குழந்தைகளின் பாலியல் தன்மையை முடிவு செய்வது ஆண்களின் சீ  குரோமோசோம்கள் என்பதும்,  ஆண்களின் மரபணு மூலம் அவர்களின் உடற்கூறுகள், பண்புகள், குண நலன்கள், ஆற்றல்கள், திறமைகள் ஆகியவை அவர்களின் ஆண் சந்ததியினருக்கு செல்கிறது என்பதும் அறிவியல் உண்மைகள். ஆனால் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு தென்னிந்திய பூர்வகுடி மக்களிடையே ஆரியர் வருவதற்கு முன்பு ஜாதிய அமைப்பு நடைமுறை நிலவி வந்தது என்று எப்படி கூறமுடியும் என்பது புரியவில்லை.
சீ குரோமோசோம்களும், மரபணுக்களும் ஆண்களின் மூலம் ஆண் வாரிசுகளுக்கு செல்கின்றன என்பது உலகில் உள்ள அனைத்து மாந்தருக்கும் பொதுவானது. தென்னிந்திய பழங்குடிமக்களுக்கு மட்டுமே உண்டானது அல்ல. ஜாதிய நடைமுறை உருவாகி, தொடர்வதில் இந்த சீ  குரோமோசோம் களுக்கும், மரபணுக்களுக்கும் ஏதேனும் பங்கு இருக்குமானால், அது உலகில் உள்ள அனைத்து மாந்தர்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டியவை அல்லவா? ஆனால் இந்தியாவில் அதுவும் ஆரியர்களின் வருகைக்குப் பின் மட்டுமே நிலவி வரும் ஜாதிய அமைப்பு நடைமுறை மற்ற நாடுகளில் ஏன் இல்லை என்பதை இந்த ஆய்வாளர்கள் விளக்க முன்வருவார்களா?
பழங்குடி மக்களின் சீ  குரோமோசோம்களையும், அவர் களது சமூக பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே அவர்களிடையே ஜாதிய அமைப்பு நடைமுறை நிலவியது என்று எவ்வாறு கூறமுடியும்?
இந்தியாவில் ஜாதிய அமைப்பு நடைமுறையையப் புகுத்தியது ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்து குடியேறிய ஆரியர்கள்தான் என்ற மெய்ப்பிக்கப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையை மறுத்துக் கூறுவதற்கு  இந்த ஆய்வாளர்கள் கூறும் காரணங்கள் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பாருக்கு மதியில்லையா? என்பது போன்ற சங்கதிதான்.
இவர்கள் மேற்கொண்டது மனித இனப் பெருக்கத்தில் குரோமோசோம்களின் செயல்பாட்டைப் பற்றிய அறிவியல் ஆய்வும் அல்ல; மக்களிடையே நிலவும் சமூக மரபியல் ( சமூக பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றிய ஆய்வு இயல்) ஆய்வும் அல்ல. இவர்கள் மேற்கொண்டது, ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் ஜாதிய அமைப்பு நடைமுறை இருந்தது என்பதை மெய்ப்பிப்பதற்கான வீண் முயற்சியே ஆகும்.
இவர் எனது உறவினர், இவர் அன்னியர் என்று கீழ் நிலை மக்கள் மட்டுமே கருதுவர்; பெருந்தன்மை கொண்ட மக்கள் உலக மக்கள் அனைவரையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகப் பார்ப்பவர்கள் ஆவர் என்று  தோழர் பாலசுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை உட்கார்ந்து பாடியதால் தியாகபிரம்ம விழாக் கூடமே தீட்டாகிவிட்டது என்று கூறி, அந்த இடத்தைக் கழுவி,  தீட்டைக் கழித்த பிறகே அங்கு உட்கார்ந்து பாடுவோம் என்று சொன்னவர்கள் யார்? பார்ப்பன சங்கீத வித்வான்கள் அல்லவா?
தமிழில் பாடி வழிபட்டதாலேயே கோயில் தீட்டாகிவிட்டது என்று  காஞ்சி பெரியவர் கூறவில்லையா?
வ.வே.சு. அய்யர் நடத்திய குருகுலத்தில் மற்ற ஜாதி மாணவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தமாட்டோம் என்று  பார்ப்பன மாணவர்கள் கூறவில்லையா?
கும்பாபிஷேக செலவு முழுவதையும் கொடுத்த சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் கும்பாபிஷேக மேடைக்கு வருவதைத் தடுத்த பார்ப்பனப் பூசாரிகள் செயலை எதில் சேர்ப்பது?
- த.க.பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...