Tuesday, December 11, 2012

தருமபுரி ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் வழிகாட்டும் தீர்மானங்கள்!


  • ஜாதி என்ற அளவுகோல் இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே! அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்யப்பட வேண்டும்
  • தாழ்த்தப்பட்டவர்களுக்கான வீடுகளை ஊருக்குள் கட்டுக!
சமூக நீதிக் களத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இணைந்து
தங்கள் உரிமைகளுக்காகப் போராட முன் வர வேண்டும்
காதல் திருமணங்களை ஊக்குவிப்போம்!
தருமபுரி ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் வழிகாட்டும் தீர்மானங்கள்!
தருமபுரி ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தகடூர் தமிழ்ச்செல்வி பயனாடை அணிவித்து வரவேற்றார். (தருமபுரி, 9.12.2012)
தருமபுரி ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த  எஸ்.கே.சின்னப்பன்  அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்  திறந்து வைத்தார். (தருமபுரி, 9.12.2012)
தருமபுரி டிச.10- சமூக நீதிக் களத்தில் தாழ்த்தப்பட் டோர் பிற்படுத்தப்பட்டோர் இணைந்து போராட முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று  (9.12.2012) தருமபுரி யில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1 :
(அ). தருமபுரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஜாதி வெறியின் காரணமாக தாழ்த்தப்பட்டோர் வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டதற்கு இம்மாநாடு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
(ஆ). சி.பி.அய். விசாரணை மேற்கொண்டு இதற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்து, தண் டனையை விரைந்து அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
(இ). ஜாதி, மத வெறிகளைத் தூண்டுவதோடு வன்முறைக்குத் தூபம் போடும் வகையில் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள், நடந்து கொள்பவர்கள் மீது காலந் தாழ்த்தாது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் வலியுறுத்துகிறது.
அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தாதீர்!
(ஈ). அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தும் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. குறிப்பாக தலித் - தலித் அல்லாதார் என்று ஒரு புதிய முறையில் பிளவுபடுத் திட மேற்கொள்ளப்படும் சிந்தனை - அணுகு முறை - செயல்பாடுகள் அபாயகரமான திசைநோக்கி சமூகத்தை இழுத்துச் செல்லும் என்பதை எடுத்துக்காட்டி, சமூக எழுச்சி வரலாறு அத்தகையோரை மன்னிக்காது - மறக்காது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இம் மாநாடு சுட்டிக்காட்ட விழைகிறது.
தீர்மானம் 2 :
ஜாதி என்பதும் - அதன் விளைவான தீண்டாமை என் பதும் பகுத்தறிவுக்கும்,  அறிவியலுக்கும், மனிதத் தன் மைக்கும் விரோதமானதால் அந்தப் பிறவி பேதங் களை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக வாழ வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப்பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3 :
ஜாதி வெறியர்களால் கடும் பாதிப்பிற்கு ஆளான தருமபுரி மாவட்டம், கடலூர் மாவட்டப் பகுதிகளில் முழு நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
எரிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட வேண்டும்; இழப்பீட்டுத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டு, முழு அளவிலான இழப்பீடு அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.

தீர்மானம் 4 :
தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமைச் சட்டத்தை துல்லியமாகச் செயல்படுத்துக!
தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5 :
சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய மிகவும் முக்கியமான இவ்விரு சக்திகளும் இணைந்து போராடி பல உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, இருகரங்களாக, தோள்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
நம்மில் ஒற்றுமை நீங்கின் ஆதிக்க சக்திகள் தலைஎடுக்க ஏதுவாகும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.
இச்சமூகங்களை வழிநடத்தும் தலைவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிளவு மனப்பான்மையை, பகைமை உணர்ச்சியை மறந்தும் கூட ஏற்படுத்தாது, சமூகப் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 :
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று இம்மாநாடு அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7 :
இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8 :
ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை!
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY) ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த வகையில் மாநில அரசுகளும், முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களும் வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 9 :
(அ) ஜாதியைப் பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண, இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(ஆ) ஜாதி - தீண்டாமை என்பவை குற்றமானவை. மனிதநேயத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரா னவை என்ற உணர்வை தொடக்க நிலையிலேயே மாணவர்களுக்குப் போதிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுக்குமாறு மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இடஒதுக்கீடுக்கு மட்டுமே ஜாதி!
(இ) ஜாதி என்ற அளவுகோல் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும், மருந்தில் நோய்க்கொல்லியாக விஷம் சேர்க்கும் அளவு பயன்படுத்தப்படவேண்டும் என்றும், வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஜாதி முன்னிறுத்தப்படக்கூடாது என்றும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. இதுவும் கால வரை யற்றதல்ல; ஒரு சமனியம் பெறும் வகையில் மட்டுமே!
(ஈ) பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைக் கண்டிப்பாகப் போடக்கூடாது.
(உ) ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக்கூடாது.
ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப்பது தடை செய்யப்பட வேண்டும்.
(ஊ) தெருக்கள், ஊர்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும் வகையில் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை!
(எ) கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஏ) ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் களாக அறிவித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர் களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA) அளிக்கப்பட வேண்டும்.
இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாசாரம் குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்ததத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(அய்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டும்போது, தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள் பலரும் கலந்து வாழும் வகையில் கட்டித் தருவதே சமத்துவம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு நிரந்தர வழிவகுக்கும் என்பதை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொள்ள இம்மாநாடு வற்புறுத்துகிறது.
தீர்மானம் 10 :
ஒத்த கருத்துள்ளோர் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்
மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒத்த கருத்துள்ளவர்களை, அமைப்புகளை இணைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 11 :
காதல் திருமணங்களை ஊக்குவிப்போம்!
ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும், காதல் திருமணங்களையும் - துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது, மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது என்ற ஆக்க ரீதியான செயல்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
தீர்மானம் 12 :
சிலை திருட்டுப் போன்றவற்றிற்குக் காவல் துறையில் தனி உளவுத்துறை இருப்பது போல ஜாதி, மத மோதல்களைத் தொடக்க நிலையிலே தடுக்கும் வகையில், காவல்துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
(அ) இன்னும் தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை, சுடுகாடு மற்றும் சுடு காட்டுக்குச் செல்லும் பாதைப் பிரச்சினைகள், கோயில் திருவிழாக்களில் ஜாதியச் சிக்கல்கள் அவற்றின் காரணமாக கலவரங்கள் - இவற்றிற்கு இடம் இல்லாத அளவுக்கு இராணுவத் தீர்வு போல செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளுக்குத் திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
டாக்டர் துரை. சந்திரசேகரன்
தீர்மானங்களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்மொழிந்தார். மக்கள் கடல் அலை ஓசைபோல கைதட்டி வரவேற்க, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...