Monday, October 8, 2012

கிருஷ்ணாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குக!:பிரதமருக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!


மத்திய அமைச்சராக இருந்து கொண்டு உச்சநீதிமன்ற ஆணை, பிரதமரின் ஆணைகளுக்கு விரோதமாகக் கருத்துச் சொல்லும் கிருஷ்ணாவை
அமைச்சர் பதவியிலிருந்து நீக்குக!


காவேரிப்பட்டணம், அக்.8- மத்திய அமைச்சர் என்பதை மறந்தும், உச்சநீதி மன்ற தீர்ப்பு, பிரதமரின் ஆணைகளுக்கு விரோதமாகவும் காவிரி நீர் பிரச்சினையில் கருத்துச் சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். நேற்று (7.10.2012) காவேரிப்பட்டணத்தில் நடந்த பெரியார் சிலை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:
மத்திய அமைச்சராக வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா அய்.நா.வுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கருநாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூடக் கொடுக்கக் கூடாது என்று எழுதியிருக்கிறார்.மத்திய அமைச்சராக ஒருவர் இருப்பது - இந்தியா முழுமைக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துத்தானே?
ஏதோ கருநாடக மாநிலத்துக்கு மட்டுமே உரிய மத்திய அமைச்சராகப் பேசலாமா? எழுதலாமா? கருத்துக் கூறலாமா?
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 9000 கன அடி நீரை விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக ஒரு மத்திய அமைச்சர் கருத்துத் தெரிவிக்க லாமா? அப்படி கருத்துத் தெரிவிப்பது - நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவ ராக இருக்கக் கூடியவர் பிரதமர். பிரதமரும் வினாடிக்கு 9000 கனஅடி நீரை கருநாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கூறியுள்ளார். எஸ்.எம். கிருஷ்ணா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் பிரதமரின் உத்தரவுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.
இப்படி ஒரு மத்திய அமைச்சர் நீதிமன்ற அவதூறுக்கு ஆளாகலாமா? பிரதமரின் கருத்துக்கு விரோதமாகவும் நடந்து கொள்ளலாமா? அப்படி நடந்து கொண்டும் ஒருவர் மத்திய அமைச்சராக சட்டப்படி நீடிக்கலாமா? நீடிக்கத்தான் முடியுமா?
இதனைப் பிரதமர் தான் அனுமதிக்க லாமா? இப்படி ஒவ்வொரு மத்திய அமைச் சரும் பிரதமருக்கும் நீதிமன்றத்திற்கும் விரோதமாக நடந்துகொண்டால் மத்திய அரசு என்பதற்கான பொருள் தான் என்ன?
எனவே பிரதமர் அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து உடனே  நீக்க வேண்டும். (பலத்த கைதட்டல்) இல்லையெனில் ஒவ்வொரு மத்திய அமைச்சரும் நீதிமன்ற அவமதிப்பைத் தான் செய்வார்கள். பிரதமரின் கருத்துக்கு மாறாகவும் நடந்து கொள்வார்களே!

மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவரே தான் ஒரு மத்திய அமைச்சர் இந்தியா முழுமைக்கும் பொதுவான அமைச்சர் என்பதை மறந்து, கருநாடக மாநில உணர்வோடு நடந்து கொள்கிறார்.
நம் தமிழ்நாட்டின் நிலை என்ன? காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்ற ஒட்டு மொத்தமான தமிழர்களின் பொதுப் பிரச்சினையில் கட்சிகளைக் கடந்து ஓரணியில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறோமா?
மற்ற மற்ற மாநிலங்களில் சட்ட விரோத மான, நியாய விரோதமான பிரச்சினை களில்கூட கட்சிகளை மறந்து ஒன்று சேர் கிறார்கள். நம் தமிழ்நாட்டிலோ நமக்குள்ள நியாயமான, சட்ட ரீதியான பொதுப் பிரச் சினையில் தனித் தனியாக நிற்கிறோமே - முரண்பாடாகப் பேசுகிறாமே அண்டை மாநிலங்களவைப் பார்த்த பிறகாவது திருந்த வேண்டாமா? மன மாற்றம் அடைய வேண்டாமா? - என்று பேசினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.


.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...