Wednesday, September 5, 2012

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!



- கி.வீரமணி
கி.வீரமணி

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150ஆம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.
1975ஆம் ஆண்டில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்திருந்த அணியினர் சார்பில் சென்னையில் நடை பெற்ற ஒரு விழாவில் சிறப்புரை ஆற்றிய உச்சநீதி மன்றத்தின் மூத்த நீதியரசர் ஜஸ்டீஸ் பி. சதாசிவம் அவர்கள் மிக அருமையானதோர், வரலாற்றுச் சுவடு களைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் எப்படி சமூக உரிமைகளைக் காக்க அடிகோலின என்பதை மிகவும் ஆதார பூர்வமாக எடுத்துரைத்தார்கள்.
அவ்வுரையில் சுட்டிக்காட்டப் பெற்ற இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளும், அவை ஏற்படுத்திய தாக்கமும் அதன் விளைவாக ஏற்பட்ட சட்ட ரீதியான அமைதிப் புரட்சியையும் அசை போட்டுச் சிந்திக்கும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார்கள்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு
1. 1950இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் முழு அமர்வு(Full Bench) தலைமை நீதிபதி டாக்டர் ஜஸ்டீஸ் பி.வி. இராஜமன்னார் அவர்களது தலைமையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு -
செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண் 1928ஆம் ஆண்டு, முத்தய்யா (முதலியார்) அவர்கள் அமைச்சராக இருந்து நிறைவேற்றி செயல்படுத்திய கம்யூனல் ஜி.ஓ. (Communal G.O.) என்ற வகுப்புவாரி உரிமை ஆணையை  1950 முதல் அமுலுக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள சட்டப் பிரிவை 15(1)க் காட்டி இந்த ஆணை, அந்த  அரசியல் சட்ட பிரிவுக்கு  முற்றிலும் விரோதமானது என்று மனு போட்டார்.
வழக்கின் சுருக்க வரலாறு எம்.பி.பி.எஸ். படிக்க ஏற்கெனவே பட்டதாரியாகிவிட்ட பார்ப்பன அம்மையார், நான் மனு போட்டுள்ளேன். வகுப்புவாரி இட ஒதுக்கீடு இருப்பதால் என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவருக்கு அந்த இடம் கொடுக்கப்படும் என்பதால் எனது அடிப்படை உரிமையைப் பறிக்கிறது அந்த வகுப்புரிமை ஆணை ஆகவே அரசியல் சட்ட விரோதம் என்று கூறினார்.
வாதாடியோர் யார்?
இவருக்காக பிரபல மேனாள் அட்வகேட் - ஜெனரல் அம்புஜம்மாள் தந்தையான வி.வி. சீனுவாச அய்யங்கார் (காங்கிரஸ்காரரும்கூட) -  அரசியல் சட்ட வரைவு கர்த்தாக்களின் இறுதி ஆறு பேர் குழுவின் ஓர் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்றவர்களே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் வந்து ஆஜராகி வாதாடினர். பொதுவாக, பெரும் நிலைக்குப் போன பிறகு பிரபல வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களுக்கு வந்து வாதிடுவதைத் தவிர்ப்பார்கள்; ஆனால் அவர்களின் இனமானம் முன்பு அவாளின் தன்மானம் மிகச்  சாதாரணமாக விடைபெற்றுக் கொள் ளும் என்ற வழமைக்கேற்ப அவரே சட்டத்தைச் செய்து சூட்டோடு சூடாக அதையே சுட்டிக்காட்டி வாதாடினார்.
கல்வியில் இப்படி இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைப் பகுதியில் இல்லை என்றனர்.
மெஜாரிட்டி தீர்ப்பும் - தந்தை பெரியார் போராட்டமும்
மூன்று நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வில், பெரும்பான்மையான இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித் தனர்.
Minority Judgement என்ற முறையில் ஜஸ்டீஸ் திரு. என். சோமசுந்தரம் அவர்கள் தனித் தீர்ப்பு - அரசியல் சட்டத்தின் வேறு சில பிரிவுகள் Directive Principles the State Policy நெறிமுறைகளுக்கும் சட்ட வலிமை உண்டு என்ற தொலை நோக்குப் பார்வையோடு, விரிந்த விளக்கமாக (Liberal Interpretation) தந்து எழுதினர். (பின்னால் பஞ்சாப் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் Om Prakash vs State என்ற வழக்கில் இந்த மெஜாரிட்டி நீதிபதிகள் தீர்ப்பை ஏற்காமல், மைனாரிட்டி (சோமசுந்தரம் தீர்ப்பையே சரியென்று ஏற்று எழுதினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்)
இந்திய அரசியல் சட்டத்தின் இடஒதுக்கீடு கல்வியில் செய்ய வற்புறுத்தி, தந்தை பெரியார் அவர்கள் செய்த திராவிடர் இயக்க பெரும் மக்கள் கிளர்ச்சி அறப்போர் - இந்திய நாட்டின் - மத்திய அரசின் கவனத்தை ஏற்றது;
முதல் திருத்தம்
அன்று பண்டிதநேரு அன்றைய பிரதமர், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர்.
இருவரும் யோசித்து, நாடாளுமன்றத்தில்  1951இல்  முதலாம்  அரசியல் சட்டத் திருத்தம் (First  Ammendment to the Constitution of India) கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
அப்போது பிரதமர் நேரு மிகவும் தொலைநோக்குடன், இந்தக் கிளர்ச்சி இப்போது சென்னையில் தமிழ்நாட்டில் - தான் தொடங்கியுள்ளது என்றும் இந்தியா முழுவதிலும் இக்கோரிக்கை பரவும் நிலை இனி வரும் என்பதால் இத்திருத்தம் தேவைப்படுகிறது என்று நாடாளுமன்றத் தில் குறிப்பிட்டார்!
15(4) என்ற புதிய பிரிவு -   சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வழி வகுத்து, வகுப்புவாரி உரிமை, சமூகநீதி நிலை நாட்டப்பட்டது.
இதில் ஒரு முக்கிய தகவலும் வெளியே அதிகம் பரவாத ஒரு செய்தி - பதிவு செய்யப்பட வேண்டும்.
விண்ணப்பமே போடாத பார்ப்பனப் பெண்
கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று ரிட் மனு போட்டு - எவரது சார்பில் வி.வி. சீனுவாசய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யங்கார் வாதாடினார்களோ - அந்த செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண்மணி, மருத்துவக் கல்லூரிக்கு மனு போடாமலேயே, போட்டதாக உண்மைக்கு மாறான ஒரு தகவலை பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) கையொப்பமிட்டு கூறியுள்ளது, எடுத்த எடுப்பிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டியதொரு வாய்ப்பாகும்.
ஏனெனில் சட்டப்படி, ரிட் மனுவின் சட்ட உரிமை என்பது. (Principle of  Writ) “Where there is a legal right, there is a legal remedy’’ என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும்.
இவருக்கு வழக்குப் போட உரிமை  எப்போது கிடைக் கிறது என்றால் மருத்துவக் கல்லூரிக்கு மனு போட்டிருந் தால் மட்டுமே. ஆனால் மனு போட்டதாக பொய்ப் பிரமாணம் கொடுத்ததே சட்டப்படி குற்றமாகும்.
அதைப் பற்றி கவலைப்படாமல் அந்த இரண்டு படே மூத்த சட்ட நிபுணர்கள் வாதாடியது அதைவிட நேர்மையற்ற செயல்.
குமாரசாமி ராஜா முதலமைச்சராகவும், மாதவமேனன் கல்வி அமைச்சராகவும்  குட்டிக் கிருஷ்ணமேனன் அட்வ கேட் ஜெனரலாகவும் இருந்தனர். நன்றாக வாதாடினார் குட்டிக் கிருஷ்ணமேனன். அப்போது  தொடக்கத்திலேயே இதனை எடுத்துக் கூறிடத் தவறிவிட்டனர்.   உச்சநீதிமன் றத்தில் - இவ்வழக்கு வந்தபோதுதான், சென்னை மாகாண அரசு சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சுட்டிக் காட்டினர்.
இந்த அலட்சியத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் செய்தார்கள் வாய்மொழி மூலம். ஆனால் இது too late now to interfere என்று கூறி ஆட்சேபத்தை தள்ளுபடி செய்தனர்.
தந்தை பெரியார் இல்லாமல் இருந்திருந்தால்...
இவ்வழக்கின்மூலம் பார்ப்பனர்களின் மனுதர்ம வாதிகளின் நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறனுமின்றி குலதர்மப் பாதுகாப்பு மனப்பான்மை அகில உலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட....
இன்று அதனால் அல்லவோ சமூக நீதிக் கொடி இந்தியா முழுவதும் பறந்து ஒளி  வீசித் தொடங்கியுள்ளது. தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் இல்லாமல் இருந்திருந்தால்...? யோசியுங்கள் தோழர்களே!
அடுத்து நீதியரசர் கூறியது 76ஆவது சட்டத் திருத்தம் (அதுபற்றி அடுத்த கட்டுரையில்).

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...