Monday, September 3, 2012

கி.பி. 2030களில் தமிழன் பெயர் எப்படி இருக்கும்?

கலையரசு, முகிலன், இனியன், கலைமணி இப்படி தேன்போல இனிக்கும் நல்ல தமிழ்ப் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு வைத்து அகமகிழ்ந்தார் மாரிமுத்து.
நல்ல பெயர்களைக் கொண்டு வளர்ந்து ஆளான பிள்ளைகளிடம் தந்தையிடமிருந்த அந்த மொழிப் பற்று ஓரளவு இருந்தாலும் அவர் களின் பிள்ளைகளுக்கும் ஸ்தேவா, பிரியா, பவனியா சந்தோஷன் என் றெல்லாம் பெயர் வைத்தனர். பிள்ளைகளுக்கு வாய்த்த மனைவி மார்கள் சோதிடத்திலும் எண் கணிதத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததே இதற்கான காரணமாக இருந்தது.
தமிழுணர்வோடு நல்ல தமிழ்ப் பெயர்களை, பிள்ளைகளுக்கு வைக்க விரும்புகிறவர்கள் எண் கணிதம் ஜோதிடம் என்று போகக் கூடாது. காரணம் அவற்றால் தமிழப் பெயர் களை அமைத்துத் தர முடியாது.
சோதிடம், எண் கணிதம் ஒரு நம்பிக்கையே. இவர்கள் பரிந்துரைக் கும் பெயர்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அண்மையில்  ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியைக் குறிப்பிடலாம். மலேசிய சிறைச்சாலைகளில் இருப்போரில் 49 விழுக்காட்டினர் தமிழர்களாம். சிறைச் சாலைகளில் அடைபட்டுக் கிடக்கும் இவர்கள் அனைவருமே சோதிடம் பார்த்து பெயர் சூட்டப் பட்டவர்கள்தானே. பிறகு ஏன் இப்படி?
ஒருவருக்கு ஏன்பெயர் வைக்கி றோம்? அவரை அழைக்க கூப்பிட பெயர் உதவுகிறது. மேலும் எந்த இனத்தவர் என்பதைத் தெரிந்து கொள்ளவும் பெயர் பெரிதும் உதவு கிறது.
லிம் வா சோங் இப்பெயருக்குரிய வர் ஒரு சீனர். முஸ்தபா பின் அலி இப்பெயருக்குரியவர் ஒரு மலாய்க் காரர். வில்லியம், டேவிட், மேரி என்று பெயர் கொண்டவர்கள் ஆங்கிலேயர்கள். மாணிக்கம், நாகம்மாள், முனியாண்டி இவர்கள் தமிழர்கள். இவ்வாறு ஒருவரின் பெயரைக் கொண்டு அவரின் இனத்தை எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.
சுவர்த்தி, பிராவெய்தா, சாகன்யா விஜிட்ரி இவர்கள் எல்லாம் யார்? எந்த இனத்தவர்கள்? இவர்களின் தாய்மொழி எது? குழப்பமாக இருக்கும். உண்மையில் இவர்கள் எல்லாம் பச்சைத் தமிழர்கள்தான். புதுமை, இனிமை என்னும் மயக்கத்தில், நாம் தமிழர்கள் என்கின்ற உணர்வு அறவே இல் லாமல், பொருள் புரியாத பெயர் களை அவர்களாகவே கண்டு பிடித்து உருவாக்கி தங்கள் பிள்ளை களுக்கு வைக்கப்போய் அப்பிள் ளைகள் தமிழர்கள் என்னும் அடை யாளத்தை முற்றிலும் இழந்து விட்டனர்.
தமிழர்களின் பெயர்கள் 95 விழுக் காடு வடமொழியில் இருப்பதை அறிந்து - வியந்து இதில் ஒரு மாற்றங் காண விரும்பி, நல்ல தமிழ்ப் பெயர்களைத் தேடியும் நானே உருவாக்கியும், ஓர் ஆயிரம் பெண், ஆண் குழந்தைகளுக்குரிய பெயர் களைத் தொகுத்து தமிழில் பெயரிடு வோம் என்னும் பெயரில் ஒரு நூல் வெளியிட்டேன்.
மலேசியாவில் திருவிடச்செல்வன் எழுதியுள்ள தமிழில் பெயரிடுவோம் என்ற இந்த நூல் என் உள்ளம் கவர்ந்தது என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் பாராட்டப் பட்டவை, இன, மொழி உணர்வு மிக்க அருமை நண்பர்களின் பேருத வியால் ஐந்து பதிப்புகள் வெளி யாகியும் இந்நூலின் குறிக்கோள் வெற்றிபெறவில்லை என் நண்பர் ஒரு வருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. தமிழில் பெயரிடுவோம் நூலிலிருந்து தேன்மலர், பனிமலர் என இரு இனிய தமிழ்ப் பெயர் களைத் தேர்ந்தெடுத்து ஒரு சோதி டரைப் போய் பார்த்திருக்கிறார். பிள்ளைகளின் பிறந்த நேரம், நாள் முதலியவற்றை ஆராய்ந்து சோதிடர், நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர்கள் சரிப்பட்டு வராது, சீயில் ஞியில் முதல் எழுத்தைக் கொண்ட பெயர்களாக வையுங்கள், பிள்ளைகளின் வாழ்வு சீராகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று கூற நண்பரும் யுகேந்திரன், திவ்யாஷினி என்று பெயர் வைத்துள்ளார். பெயர் வைப்பதில் சோதிடத்தின் குறுக்கீடு இருப்பதால், நல்ல தமிழ்ப் பெயர்கள் தமிழ்க் குடும்பங்களில் ஊடுருவ முடியாமல் உள்ளது.
பிள்ளைகளுக்கு தெய்வங்களின் பெயரை வைப்பதிலோ, தாத்தா பாட்டியின் நினைவாக அவர்கள்  பெயர்களை பிள்ளைகளுக்கு வைப்பதிலோ இன்றைய பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக இதுவரை யாரும் வைக்காத பெயராக இருக்க வேண்டும். கேட்பதற்கு புதுமையாக இனிமையாக இருக்க வேண்டும். காலத்திற்கேற்ற பெயராக மார்டன் பெயராக இருக்க வேண்டும் என்று சிந்திக்கும் இன்றைய பெற்றோர் வைக்கும் பெயர்கள் அடியில் கண்டபடி பிள்ளைகளின் பிறப்பாவணத்தில் பதிவாகின்றன.
பிரமீரா த/பெ. இராமலிங்கம்
ஷஹ ஸ்ரா த/ பெ. கணேசன்
சுவானிஷ் த/பெ சண்முகம்
லிஸ்மா த/பெ. நடராஜன்
பிரிதோஷ் த/ பெ. சுந்தரம்
பரிசீலன் த/பெ சண்முகம்
விஷ்ஷா த/பெ. சரவணன்
இவ்வாறான பெயர்கள், தமிழில் இல்லாத, பொருள் விளங்காத, முன்பின் கேட்டறியாத பெயர்களாக இருந்தாலும் குழந்தையின் பெயரை தந்தையின் பெயரோடு இணைத்துப் பார்க்கும்போது, குழந்தை தமிழ்க் குழந்தைதான் என்பதை அறிய முடியும். இராமலிங்கம், சுப்பிரமணி யம், கணேசன் நடராசன், சுந்தரம் இவை யாவும் வடமொழிப் பெயர் சொற்களாக இருந்தாலும் நெடுங் காலமாகத் தமிழ் வழக்கில் இருந்து வருவதால் லிஸ்மா த/பெ நடராஜன் என்னும் பெயரில் வரும் நடராஜன் குழந்தையை தமிழ்க் குழந்தை என்று அடையாளங்காட்டும்.
இது இன்றைய (2010) நிலை. ஆனால் இன்னும் 20,30 ஆண்டுகளில் அதாவது கி.பி.2030 களில் தமிழ்க் குழந்தைகளின் பெயர்களில் தந்தை யின் பெயர், சுப்பிரமணியம், கணே சன், இராமமூர்த்தி, நடராஜன் என் றெல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை.
எதிர்காலத்தில் குழந்தையின் பெயரும் தந்தையின் பெயரும் யாருக்குமேவிளங்காத பெயராகத் தான் இருக்கப் போகிறது. கி.பி. 2030களில் தமிழர்களின் பெயர்கள் அடியில் கண்டவாறு தான் இருக்கப் போகிறது. இதில் யாருக்கும் ஐயம் வேண்டாம். இது மறுக்க முடியாத உண்மை.
பிரமிதன் த/பெ. சுப்ரித்
புஸ்லஹனி த/பெ சவர்ந்தன்
வனிசந்தி த/பெ ஹரித்தீஸ்
அஸ்வத்தா த/பெ நிசாகுலன்
அவீனசியா த/பெ அசோதின்
வசந்தியா த/பெ ஹனிஷான், அஸ்வத்தன் த/பெ னிஷான்
முஸ்கன் த/பெ ஷகுந்
மேற்காணும் பெயர்களை எங்கா வது பார்க்கும்போதோ எதிலாவது படிக்கும் போதோ அப்பெயருக் குரியவர் ஒரு தமிழினத்தவர் என அடையாளம் காட்டுமா?
தொன்மையான இலக்கியங்களை யும், உலகின் மூத்த மொழி செம்மொழி என அழைக்கப்படும் செந்தமிழ் மொழிக்குரியவர்களின் பெயர்கள் அஜஷந்தன், சுவாங்நிலி, சிஸ்வித்தியன், சர்லிங்கன் என் றெல்லாம் இருக்கப் போவதை நினைக்கும்போதுமனம் வலிக்கிறதே!
இம்மட்டோ! நெஞ்சைப் பிழியும் மற்றொன்றையும் இங்கு குறிப் பிடத்தான் வேண்டும். இன்றுபல குடும்பங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் ஆங்கிலத்திலேயே உரையாடுவதால், பிள்ளைகள், தமிழறிவு இல்லாமலேயே வளர் கின்றனர்.
ஒரு பச்சைத் தமிழச்சியின் மார்பில் வடியும் பாலை உண்டு வளரும் தமிழ்க் குழந்தை அது பேச தொடங்கும்போது, அதே பச்சைத் தமிழச்சி பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பாலை ஊட்டி வளர்ப்பது கொடு மையிலும் கொடுமையல்லவா?
மொழிப்பற்றும், இனப் பற்றும், ஒற்றுமை உணர்வும் இல்லாத ஓர் இனம் தமிழினம், இந்நாட்டில் நம்மைப் போன்று குடியேறிய சீனர்களிடம் இருக்கும் மொழி, இனப்பற்றையும் மெச்சத்தக்க ஒற்று மையையும் அன்றாடம் கண்கூடாகப் பார்த்தும் அவர்கள் போல் நாமும் இருக்க வேண்டும் என்கின்ற உணர்வு தமிழர்களிடம் எழவில்லையே ஏன்?
தடுக்கி விழும் பக்கமெல்லாம் தமிழின் பெயரால் இயக்கங்களை அமைத்துக் கொண்டு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிடும் தமிழவாணர்களே, நீங்கள் ஆற்றிவரும் தமிழ்த் தொண்டில், நல்ல தமிழ்ப் பெயர்களைப் பரப்பும் பணியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே என் அன்பான வேண்டுகோள்.
நாரண. திருவிடச்செல்வன்
மக்கள் ஓசை 13.6.2010 மலேசியா


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


செப்டம்பர் 01-15-2012

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...